Thursday, December 22, 2016



* தமிழக தலைமைச் செயலாளர் பி.ராமமோகன ராவ் வீடு, தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறை உட்பட 14 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் புதன்கிழமை திடீரென சோதனை நடத்தினர். இது, அதிகாரிகளிடமும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முதல்கட்ட சோதனையில் ரூ.30 லட்சம் பணமும், 5 கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். | விரிவான செய்திக்கு > தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் வீட்டில் வருமான வரித்துறை சோதனை - துணை ராணுவப் படை பாதுகாப்புடன் தலைமைச் செயலகம் உட்பட 14 இடங்களில் நடந்தது |

* சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள தலைமைச் செயலாளர் அறையில் வருமான வரித்துறையினர் புதன்கிழமை 5 மணி நேரம் சோதனை நடத்தினர். 76 ஆண்டு வரலாற்றில் நாட்டிலேயே முதல்முறையாக ஒரு மாநில தலைமைச் செயலாளரின் அறையில் வருமான வரித்துறையினர் புகுந்து சோதனை நடத்தியுள்ளது இப்போதுதான். | விரிவாக அறிய > தலைமைச் செயலகத்தில் 5 மணி நேரம் சோதனை: அதிகாரிகள் வேதனை |

* ஆந்திராவில் உள்ள ராமமோகன ராவ் உறவினர் வீடுகள், அலுவலகங்கள் உள்பட பல்வேறு இடங்களில் வருமான வரித் துறையினர் புதன்கிழமை ஒரே நேரத்தில் அதிரடியாக சோதனை நடத்தினர். | அதன் விவரம் > சித்தூர், குண்டூர், விஜயவாடாவில் உள்ள ராமமோகன ராவ் உறவினர் வீடுகள், அலுவலகங்களிலும் அதிரடி சோதனை |

* மத்திய போலீஸ் படையினர் ஒரு மாநிலத்தில் வந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவதற்கு அந்த மாநில டிஜிபி அலுவலகம் அனுமதி கொடுக்க வேண்டும். ஆனால், தமிழக போலீஸாரிடம் எந்த அனுமதியும் கேட்காமல் மத்திய ஆயுதப்படை போலீஸார் தமிழகத்தில் பாது காப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். | முழு விவரம் > வருமான வரித்துறை சோதனைக்கு மத்திய போலீஸ் பாதுகாப்பு: தமிழக போலீஸாரிடம் அனுமதி பெறவில்லை |

* புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை முறைகேடாக பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் தொழிலதிபர் சேகர் ரெட்டியும், அவரது நண்பரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். | விரிவான செய்திக்கு > ரூ.147 கோடி பணம், 178 கிலோ தங்கம் சிக்கிய விவகாரம்: சேகர் ரெட்டி, உறவினர் கைது: வங்கி அதிகாரிகளும் சிக்குகின்றனர் |

வருமான வரித்துறை சோதனை முதல் ராமமோகன ராவ் சஸ்பெண்ட் வரை: தெரிந்திட 10 தகவல்கள்

இணையதள செய்திப் பிரிவு

* சேகர் ரெட்டி, ராமமோகன ராவ் ஆகியோர் வருமான வரித்துறையிடம் சிக்கியதையடுத்து, இவர்களுக்கு உடந்தையாக இருந்த 8 அமைச்சர்களும், சில வங்கி அதிகாரிகளும் சிக்க உள்ளனர். எனவே, இருவருடனும் தொடர்பில் இருந்த அமைச்சர்களும், வங்கி அதிகாரிகளும் தற்போது கலக்கத்தில் உள்ளனர். ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளிடம் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தும்போது மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்திடம் முன்அனுமதி பெற வேண்டும். தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் இருக்கும் ஒருவரிடம் சோதனை நடத்தும்போது அந்த மாநில ஆளுநருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். எனவே, தலைமைச் செயலாளர் ராமமோகன ராவின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துவது தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவுக்கு தெரியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

* அதிகாரிகளிடமும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், வருமான வரித்துறை அதிகாரிகளின் திடீர் சோதனையில் சிக்கிய தமிழக தலைமைச் செயலாளராக இருந்த பி.ராமமோகன ராவ் கடந்து வந்த பாதை இதுதான் > ராமமோகன ராவ்: உதவி ஆட்சியர் முதல் தலைமைச் செயலாளர் வரை.. |

* வருமான வரித்துறை சோதனை யைத் தொடர்ந்து தலைமைச் செயலாளர் பி. ராமமோகன ராவை பதவி நீக்கம் செய்யவேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். | முழு விவரம் > தலைமைச் செயலர் வீட்டில் வருமான வரி சோதனை: தலைவர்கள் கருத்து |

* ஊழல், முறைகேட்டில் ஈடுபட்டதாக ஐஏஎஸ் அதிகாரி ஒருவருக்கு எதிராக போதிய ஆவணங்கள் கிடைக்கும் நிலையில் அவரை கைது செய்ய முடியுமா என்பது குறித்து சட்டவல்லுநர்கள் சிலர் கூறிய தகவல்கள் | முழுமையாக வாசிக்க > ஐஏஎஸ் அதிகாரியை கைது செய்ய யாருடைய அனுமதியும் தேவையில்லை: சட்ட வல்லுநர்கள் கருத்து |

* தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் வியாழக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார். கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் இருந்த அவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் தமிழக தலைமைச் செயலாளர் பி.ராமமோகன ராவ் இடைநீக்கம் செய்யப்பட்டார். | விவரம் > தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமனம்

சென்னை: தமிழக தலைமை செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சோதனை:

தமிழக அரசின் தலைமை செயலர் ராமமோகன ராவ், 58, வருமான வரித்துறை பிடியில் வசமாக மாட்டிக் கொண்டார். அவரது வீடு மற்றும் கோட்டையில் உள்ள, அவரது அலுவலகம் உட்பட, 12 இடங்களில், நேற்று வருமான வரி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அரசியல்வாதிகளின் கலெக்ஷன் ஏஜன்டாக, ராவ் செயல்படுவதாக வந்த புகாரின் அடிப்படையில் நடந்த, இந்த சோதனையின் போது, பாதுகாப்பு பணியில், துணை ராணுவம் ஈடுபட்டது, அரசு வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நியமனம்:

இதனையடுத்து தலைமை செயலாளர் பதவியில் இருந்து ராம மோகன ராவ் நீக்கப்பட்டார். புதிய தலைமை செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கூடுதல் தலைமை செயலாளர் அந்தஸ்தில் உள்ள கிரிஜா வைத்தியநாதன், தற்போது நில நிர்வாகத்துறை ஆணையராக உள்ளார். 

கிரிஜா வைத்தியநாதன், கடந்த 1981ம் ஆண்டு பேட்ஜ் ஐ.ஏ.எஸ்., அதிகாரி. சென்னை ஐஐடியில் படித்து, பட்டம் பெற்றவர். இவரது தந்தை வெங்கிட்டரமணன், ரிசர்வ் வங்கி கவர்னராக 1990 முதல் 1992 வரை இருந்தார். கடந்த 01.07.59ம் ஆண்டு பிறந்த கிரிஜா, நல வாழ்வு பொருளாதாரம் என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர் ஆவார்.
தலைமைச் செயலர் பதவியிலிருந்து ராம மோகன ராவ் ‛கல்தா'

சென்னை: வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையை தொடர்ந்து தலைமை செயலர் பதவியில் இருந்து ராம மோகன ராவ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக தலைமை செயலாளராக இருந்த ராம மோகன ராவ் வீடு, தலைமை செயலகத்தில் உள்ள அவரது அலுவலகம், மகன், உறவினர் வீடு என 12 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதனையடுத்து ராம மோகன ராவ் தலைமை செயலர் பதவியில் இருந்து நீக்கப்படுவார் என்ற தகவல் வெளியானது.

தபால் மூலம்:

இந்நிலையில், இன்று தலைமை செயலர் பதவியில் இருந்து ராம மோகன ராவ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. இதனை அவரது உதவியாளர் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து, ராமமோகன ராவ் காரில் இருந்த சிவப்பு சுழல் விளக்கும் அகற்றப்பட்டது.

ஐஏஎஸ் அதிகாரியை கைது செய்ய யாருடைய அனுமதியும் தேவையில்லை: சட்ட வல்லுநர்கள் கருத்து

டி. செல்வகுமார்

ஊழல், முறைகேட்டில் ஈடுபட்டதாக ஐஏஎஸ் அதிகாரி ஒருவருக்கு எதிராக போதிய ஆவணங்கள் கிடைக்கும் நிலையில் அவரை கைது செய்ய முடியுமா என்பது குறித்து சட்டவல்லுநர்கள் சிலரிடம் விசாரித்தபோது அவர்கள் கூறியதாவது:

பி.வில்சன் (மத்திய முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்)

ஐஏஎஸ் அதிகாரி மீது லஞ்ச ஒழிப்பு சட்டம் அல்லது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்குப் பதிவு செய்யும்போதோ அல்லது கைது செய்யும்போதோ யாரிடமும் முன் அனுமதி பெறத் தேவையில்லை. ஆனால், சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் முன்பு குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 197-ன்படி மத்திய பணியாளர் நலத் துறையிடம் அனுமதி பெற வேண்டும்.

ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்திருப்பது உறுதி செய்யப்பட்டால் அதுகுறித்து வருமான வரித்துறையினர் மாநில அரசுக்கு அதிகாரப்பூர்வமாக தகவல் தெரிவிப்பர். அதன்பிறகு அந்த ஐஏஎஸ் அதிகாரியை மாநில அரசு பணி இடைநீக்கம் செய்யும். அந்த நடவடிக்கை எடுக்காமல்கூட இருக்கலாம். அதேநேரத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்திருப்பதாக மாநில லஞ்ச ஒழிப்புப் போலீஸுக்கு வருமான வரித்துறையினர் அதிகாரப்பூர்வமாக தகவல் தெரிவித்தால், அதனடிப்படையில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் வழக்குப் பதிவு செய்வார்கள். பிறகு சம்பந்தப்பட்ட அதிகாரியை கைது செய்யலாம். அதற்கு யாரிடமும் அனுமதி பெறத் தேவையில்லை.

கே.எம்.விஜயன் (சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்)

வருமான வரித்துறையினருக்கு சோதனை நடத்தவும், பணத்தைப் பறிமுதல் செய்யவும் மட்டுமே அதிகாரம் உள்ளது. வருமான வரித்துறை சோதனை நடத்தியபிறகு, சம்பந்தப்பட்டவர் குற்றம் செய்திருப்பதாகக் கருதினால் அதன் தன்மையைக் கருத்தில் கொண்டு அமலாக்கத் துறை அல்லது சிபிஐ-யிடம் தெரிவிக்கப்படும். பின்னர் சிபிஐ வழக்குப் பதிவு செய்து சம்பந்தப்பட்ட அதிகாரியைக் கைது செய்யும்போது மத்திய அரசிடம் தகவல் தெரிவிப்பார்கள்.

வீ.கண்ணதாசன் (சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்)

கைது செய்ய அதிகாரம் பெற்ற எந்த போலீஸாரும் ஒருவரைக் கைது செய்யலாம். அவர்கள் யாரிடமும் முன் அனுமதி பெறத் தேவையில்லை. ஆனால், ஐஏஎஸ் அதிகாரியைக் கைது செய்யும் முன்பு அந்தந்த மாநில ஆளுநர், மத்திய உள்துறை அமைச்சகத்திடம் தகவல் தெரிவிக்கும் நடைமுறை உள்ளது.

தலைமைச் செயலர் வீடு, அலுவலகத்தில் வருமானவரித் துறையினர் அதிரடி சோதனை: ரூ. 5 கோடி தங்கம், ரூ. 30 லட்சம் புதிய நோட்டுகள், 43 ஆவணங்கள் பறிமுதல்

By DIN  |   Published on : 22nd December 2016 05:07 AM

தமிழக அரசின் தலைமைச் செயலர் ராமமோகன ராவ் வீடு உள்பட 14 இடங்களில் வருமான வரித்துறையினர் புதன்கிழமை திடீர் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் ரூ.5 கோடி மதிப்புள்ள தங்கமும், ரூ.30 லட்சம் புதிய ரூபாய் நோட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்த விவரம்:
வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே உள்ள காந்திநகரைச் சேர்ந்தவர் தொழிலதிபர் சேகர் ரெட்டி. தமிழக பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரராகவும், கட்டுமான தொழிலதிபராகவும் இருந்த இவர், முறைகேடான வழியில் பணம் சம்பாதித்ததாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக ஆற்று மணல் குவாரிகளை தனது நிறுவனத்தின் மூலம் நடத்தி,அதில் முறைகேடு செய்து வந்தாராம். இதன் மூலம் அவர் பல நூறு கோடி ரூபாய் ஈட்டியதாகத் தெரிகிறது. இதற்கு தமிழகத்தைச் சேர்ந்த சில அரசியல்வாதிகளும், அரசு உயர் அதிகாரிகளும் உதவி புரிந்ததாகவும், சிலருக்கு சேகர் ரெட்டி பினாமிபோல செயல்பட்டதாகவும் புகார் கூறப்பட்டது.
இந்நிலையில், வருமான வரித்துறையினர் சேகர் ரெட்டியின் வீடு, அலுவலகம், அவர் நண்பர்கள் சீனிவாசலு வீடு, பிரேம் குமார் வீடு ஆகியவற்றில் கடந்த 8-ஆம் தேதி ஒரே நேரத்தில் சோதனை நடத்தி,ரூ.147 கோடி பணமும்,178 கிலோ தங்க கட்டிகளையும்,தங்க நகைகளையும் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணத்தில் ரூ.34 கோடி, புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளாகும்.
இதற்கிடையே சேகர் ரெட்டி தொடர்பான விசாரணையில் சிபிஐயும், மத்திய அமலாக்கத்துறையும் இணைந்தன. இந்த இரு புலனாய்வு அமைப்புகளும் தங்களது விசாரணையைத் தொடர்ந்தன.
இதில் சேகர் ரெட்டி முறைகேடாக பணம் சம்பாதித்தது, முறைகேடான வழியில் பணப் பரிமாற்றம் செய்தது, தவறான வழியில் புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றியது ஆகிய புகார்கள் தொடர்பாக சிபிஐ-யும், அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்தன.


14 இடங்களில் சோதனை: இந்நிலையில் சேகர் ரெட்டியிடமும், அவரது கூட்டாளிகளிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் தமிழக அரசின் தலைமைச் செயலர் ராமமோகன ராவுக்கு இந்த முறைகேட்டில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக சேகர் ரெட்டி, வருமான வரித்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாகத் தெரிகிறது.
இதைத் தொடர்ந்து சென்னை அண்ணாநகர் ஒய் பிளாக் 6ஆவது பிரதான சாலையில் உள்ள மூன்று தளங்களுடன் கூடிய ராம மோகன ராவ் வீட்டில் சோதனை நடத்துவதற்கு,வருமான வரித் துறையினர் சென்னை மண்டல கூடுதல் ஆணையர் ராய் ஜோஸ் தலைமையில் புதன்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் அங்கு சென்றனர். வருமான வரித்துறையினர் ராம மோகன ராவ் வீட்டுக்குள் செல்ல முயன்றபோது, அவரது வீட்டுக் காவலாளி தடுத்துள்ளார்.
அப்போது வருமான வரித் துறை அதிகாரிகளுக்கும், அவருக்கும் இடையே சிறிது வாக்குவாதம் ஏற்பட்டதாம். சப்தம் கேட்டு அங்கு வந்த ராம மோகன ராவ் குடும்பத்தினரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் பேசியுள்ளனர். அதன் பின்னரே வருமான வரித் துறை அதிகாரிகள், ராம மோகன ராவ் வீட்டுக்குள் சென்றனர்.
ராம மோகன ராவிடம் சோதனை செய்வதற்கான உத்தரவைக் காட்டிய பின்னர், வருமான வரித் துறையினர் அங்கு சோதனையைத் தொடங்கினர். சோதனை தொடங்கியதும், ராம மோகன ராவ் வைத்திருந்த செல்லிடப்பேசி உள்ளிட்ட வீட்டில் இருந்த அனைவரது செல்லிடப்பேசிகளையும் வருமான வரித் துறையினர் வாங்கி வைத்துக் கொண்டனர்.
அதோடு தொலைபேசி இணைப்பையும் துண்டித்தனர். வீட்டில் இருந்து யாரும் வெளியேறக் கூடாது என்று வருமான வரித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். சோதனை தொடங்கப்பட்ட வேளையில், ராம மோகன ராவின் மணப்பாக்கம் வீடு, திருவான்மியூர் அப்பாசாமி நகரில் உள்ள அவரது மகன் விவேக் வீடு உள்ளிட்ட 7 இடங்களில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையைத் தொடங்கினர்.
அதேபோல கர்நாடக மாநிலம் பெங்களூரு, ஆந்திர மாநிலம் சித்தூர் ஆகிய இடங்களில் உள்ள ராம மோகன ராவின் உறவினர்கள், நண்பர்கள் வீடுகள் என 14 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். நண்பகலுக்குப் பின்னர், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள ராம மோகன ராவ் அறையிலும் சோதனை நடத்தினர்.
துணை ராணுவம் குவிப்பு: இதற்கிடையே ராம மோகன ராவ் வீட்டில் சோதனை நடைபெறும்போது, அங்கு வந்த ஆம் ஆத்மி தொண்டர் செந்தில்குமார், சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசைக் கண்டித்தும் கோஷமிட்டார். இதைப் பார்த்த அங்கிருந்த சில நபர்கள் அவரைக் கண்டித்தனர். இதில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சிலர், செந்தில்குமாரைத் தாக்கினர்.
இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீஸார், செந்தில்குமாரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இந்தச் சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் அங்கு துணை ராணுவத்தைச் சேர்ந்த 20 வீரர்கள் 4 கார்களில் வந்தனர். அவர்கள் சோதனை நடந்த பகுதி முழுவதையும் தங்களது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டனர். இதைப் பார்த்த சென்னை போலீஸார், ராம மோகன ராவ் வீடு இருக்கும் பகுதியில் இருந்து சிறிது தூரம் தள்ளி நின்றனர்.
பாதுகாப்பு கருதி துணை ராணுவத்தை அழைக்கும் அதிகாரம் வருமான வரித் துறைக்கு இருப்பதால், துணை ராணுவத்தினர் அங்கு பாதுகாப்புக்கு வந்ததாக அத்துறையினர் தெரிவித்தனர். மேலும் சோதனை நடைபெற்ற பெரும்பாலான பகுதிகளில் துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர்.
ரூ. 5 கோடி தங்கம், பணம் பறிமுதல்: இச் சோதனையில் ரூ. 5 கோடி மதிப்புள்ள தங்கமும், பணமும் பறிமுதல் செய்யப்பட்ட வருமான வரித்துறை தரப்பில் கூறப்பட்டது. இதில் புதிய ரூபாய் நோட்டுகளாக ரூ.30 லட்சம் இருந்ததாகவும் வருமான வரித்துறையினர் தெரிவித்தனர். மேலும் 43 ஆவணங்களையும் பறிமுதல் செய்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
சோதனை பல இடங்களில் நடைபெற்றதால், பறிமுதல் செய்யப்பட்ட மொத்த பணம், நகை, ஆவணங்கள் ஆகியவற்றின் விவரத்தை இறுதியிலேயே தெரிவிக்க முடியும் என வருமான வரித்துறையினர் தெரிவித்தனர். தமிழக அரசின் தலைமைச் செயலர் வீடு, அலுவலகம் ஆகியவற்றில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியது அரசு உயர் அதிகாரிகளிடமும், அரசியல்வாதிகளிடமும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இருளில் ஓர் ஒளிக்கீற்று

By டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத் | Published on : 22nd December 2016 01:40 

| மருத்துவப் பணி, சேவை, அர்ப்பணிப்பு, தியாகம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு பணியாகும். மருத்துவர்களுக்கு போதிய ஓய்வு கிட்டுவதில்லை. குடும்பத்தோடு அதிக நேரம் செலவிட முடியாத நிலை.சமூக விழாக்களிலும், பொழுதுபோக்கு நிகழ்வுகளில் பங்கேற்கும் வாய்ப்பு மருத்துவர்களுக்கு அரிதாகவே கிட்டுகிறது. பொதுமக்களும் மருத்துவர்களை கடவுளுக்கு அடுத்த இடத்தில் வைத்து போற்றுகின்றனர்.
எல்லா துறைகளிலும் விழுமங்களின் வீழ்ச்சி ஏற்பட்டது போலவே புனிதமான மருத்துவ துறையிலும் நிகழ்ந்தது. மருத்துவம் வணிகமயமாகியது. எண்பதுகளுக்கு பின் அரசு மருத்துவமனைகளின் முக்கியத்துவம் குறைந்து கார்ப்பரேட் மருத்துவமனைகள் உருவாகிய பின்னர் மருத்துவர்களும் கார்ப்பரேட் சிந்தனைகளுக்கு உள்ளாகிவிட்டனர்.
தேவையற்ற பரிசோதனைகள், அறுவை சிகிச்சைகள், மருந்துகள், ஒரு புறம். எழுதுகின்ற மருந்துகளுக்கும், பரிசோதனைகளுக்கும், மருத்துவமனை அட்மிஷன்களுக்கும் கமிஷன்கள், உயர்ரக பரிசுகள், வெளிநாட்டு சுற்றுப்பயணத்திற்கான ஏற்பாடுகள் என இன்னொரு புறம். இதன் உச்சகட்டமாக உடல் உறுப்பு தான மோசடியும் நடைபெறுகிறது.
புனிதமான மருத்துவத் தொழிலில் புகுந்துவிட்ட இந்த கருப்பு ஆடுகள் குறித்து, மருத்துவர்கள் நீண்டகாலமாக எழும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். பல நல்ல உள்ளங்களை முடக்கிப் போட்டது.
இருள் சூழ்ந்த இந்த நிலையில் ஒரு ஒளிக்கீற்று, கதிர்வீச்சு மருத்துவர்களிடமிருந்து வந்துள்ளது மனதிற்கு இதமாக உள்ளது. இந்திய மருத்துவக் கழகத்தின் (மெடிக்கல் கவுன்சில் ஆப் இந்தியா) கீழ் இயங்கும் இந்திய கதிரியக்க கழகத்தின் (Indi​an Radiologists and Im​aging Asso​ci​ation)​​ இயக்கத்தின் தமிழ்நாட்டுக் கிளை சில நல்ல முடிவுகளை எடுத்துள்ளது.
கதிரியக்க மருத்துவர்கள், ஸ்கேன் மைய உரிமையாளர்கள் என 1,300 பேர் பங்கேற்ற இவ்வமைப்பின் பொதுக்குழு,
பரிசோதனைக் கூடங்களில் நடைபெறும் முறைகேடுகளுக்கு எதிராக சில தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளது. கதிரியக்க பரிசோதனைகளுக்கும், ஸ்கேன்களுக்கும் இனி மருத்துவர்களுக்கும், இடைத்தரகர்களுக்கும் கமிஷன்கள் தரப்பட மாட்டாது.
ஒவ்வொரு பரிசோதனைக்கும் அதிகபட்ச கட்டணத்தையும் முடிவு செய்துள்ளது. கட்டுப்பாடுகளை மீறும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அம் மருத்துவர்களின் பெயர்களை இந்திய மருத்துவ கவுன்சிலுக்கும் வருமான வரி துறைக்கும் அனுப்பவும் முடிவு செய்துள்ளனர்.
ஒவ்வொரு பரிசோதனைக்கும் எவ்வளவு கட்டணம் என்பதை அறிவிப்பு பலகை மூலம் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் முடிவு செய்துள்ளனர். துணிச்சலான இந்த முடிவுகளை எடுத்த கதிரியக்க மருத்துவர்கள் நமது பாராட்டுக்குரியவர்கள்.
கதிரியக்க மருத்துவக் கழகத்தினர் எடுத்த இந்த முடிவுகள் முறையாக செயல்படுத்தப்பட்டால் நோயுற்றவர்களின் செலவு கணிசமாக குறையும்.
கமிஷன் தருவது நிறுத்தப்பட்டால் ஸ்கேன்களின் கட்டணம் பாதியாக குறைந்துவிடும். கமிஷனுக்கு ஆசைப்பட்டு தேவையற்ற ஸ்கேன்களுக்கும், பரிசோதனைகளுக்கும் சிபாரிசு செய்யும் நிலை மாறும்.
அதிக கட்டணங்களை வசூலிக்கும் மருத்துவர்களும், மருத்துவமனைகளும், ஸ்கேன் சென்டர்களும் தங்களின் செயலை நியாயப்படுத்த சில காரணங்களை கூறுகின்றனர். பல லட்சங்களை செலவிட்டு உபகரணங்களை வாங்கி தொழில் தொடங்குகிறோம். கதிரியக்க படிப்பில் இடம் கிடைப்பதற்காக சில கோடிகளை நன்கொடையாக கொடுத்துள்ளோம்.
எனவே இவற்றைச் சரிகட்ட அதிக கட்டணம் வசூலிக்கும் நிலையில் உள்ளோம் என்று கூறி தமது தவறுகளுக்கு நியாயம் கற்பிக்க முயலுகின்றனர்.
நேர்மையான முறையில் சம்பாதித்தாலே நல்ல வருவாயை ஈட்ட முடியும் என்றிருக்கும்போது, குறுக்கு வழிகளை கையாள வேண்டிய அவசியம் என்ன?
மக்களுக்கும் இப்போது ஸ்கேன் மோகம் வந்துவிட்டது. சாதாரண நோய்களுக்கும் ஸ்கேன் எடுக்கச் சொல்லி மருத்துவர்களை வற்புறுத்துகின்றனர். ஸ்கேன் எடுக்கும் மருத்துவரே சிறந்த மருத்துவர் என்ற மனப்பான்மை மக்களிடம் உருவாகிவிட்டது. எதற்கெடுத்தாலும் நிபுணர்களை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்துவிட்டது.
இங்கிலாந்தில் எந்த வியாதியானாலும், முதலில் பொது மருத்துவரைப் (Gener​al Pr​a​ctioner)​​ பார்க்க வேண்டும். அவர் சிபாரிசு செய்தால் மட்டுமே நிபுணர்களை பார்க்க முடியும் என்ற நிலை உள்ளது. நமது நாட்டிலும் இந்த நிலை பின்பற்றப்பட்டால் தேவையற்ற பரிசோதனைகளை தவிர்க்க முடியும்.
அரசு மருத்துவமனைகளில் ஸ்கேன் குறைந்த செலவில் செய்யப்படுகிறது. ஆனால் சில குறிப்பிட்ட மருத்துவமனைகளில் மட்டுமே உள்ள இந்த வசதியை பரவலாக்கினால் மக்களுக்கு சுமை குறையும்.
மருத்துவக் கல்வி திட்டத்தில் நன்னெறி (Ethi​cs) சார்ந்த போதனைகளும் சேர்க்கப்பட்டு அக்கறையுடன் மாணவர்களுக்கு கற்பிக்கப்பட வேண்டும்.
மருத்துவர்கள் நடத்தும் மாநாடுகளில் நன்னெறி பற்றிய உரைகளும் தவறாது இடம் பெற வேண்டும். பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை நன்னெறி சார்ந்த வாழ்க்கைக்கு தயார்படுத்த வேண்டும். பணத்தைவிட குணமே முக்கியமானது என்பதை அவர்கள் மனதில் ஆழமாக விதைக்க வேண்டும்.
அரசுத் துறை, நீதித் துறை, ஊடகத் துறை, சேவைத் துறை, ஆன்மிகத் துறை என எல்லா துறைகளிலும் மலிந்துள்ள தவறுகளை அந்த துறைகளைச் சார்ந்தவர்களே வெளிப்படையாக பேசி அவற்றை களையும் முயற்சியில் ஈடுபட்டால் நாடு வளமான எதிர்காலத்தை நோக்கிச் செல்லும்.

Wednesday, December 21, 2016

மம்தா போல் வீறுகொண்டு எழுவாரா ஓ.பன்னீர் செல்வம்


சிலநாட்களுக்கு முன்பு மேற்கு வங்காள மாநிலத்தில் முதல்வர் மம்தாவிற்குத் தெரியாமல், கொல்கத்தா மாநில போலீஸின் அனுமதி இல்லாமல் ஏதோ வழக்கமான பயிற்சி என்கிற பெயரில் தலைமைச் செயலகம் அருகில் துணை நிலை ராணுவ வீரர்களை மத்தியஅரசு இறக்கியது.

இந்த தகவல் முதல்வர் மம்தாவுக்கு தெரியவந்ததும், கொதித்து எழுந்துவிட்டார். 34 நாடாளுமன்ற உறுப்பினர்கள், 12 ராஜ்யசபா உறுப்பினர்கள்..என்று 46 பேர்கள் மம்தா கட்சியில் உள்ளனர். இந்த நிலையில், மத்திய அரசு மிரட்டும் பாணியில் மாநில அரசு அதிகாரத்தில் மூக்கை நுழைக்கிறது என்று பிரதமர் மோடிக்கு எதிராக போர்கொடி தூக்கினார். டெல்லியில் உள்ள மேற்கு வங்காள எம்.பி.கள் இதுகுறித்து பாராளுமன்றத்தில் புகார் செய்தனர். அதன்பிறகுதான், மத்திய அரசு பணிந்தது. ஏதேதோ சாக்குப் போக்குகளை சொல்லி சமாளித்தது.





இதேபோல், தமிழகத்திலும் இன்று நடந்துள்ளது. சென்னை அண்ணாநகர் ஏரியாவில் குடியிருக்கும் தலைமைச் செயலாளர் ராமமோகனராவ் வீட்டில் வருமானவரித்துறையினர் ரெய்டு நடத்தி வருகின்றனர். இந்த நேரத்தில், ஆம் ஆத்மி கட்சியினருக்கும் தெருவில் இருப்பவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதை தூரத்தில் இருந்து கவனித்த வருமானவரித்துறை அதிகாரிகள், தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும். தமிழக போலீஸார் சரிவர நடந்துகொள்ளவில்லை. மோதல் சம்பவங்களை வேடிக்கை பார்க்கிறார்கள் என்று டெல்லிக்கு தகவல் சொல்ல...மத்திய ராணுவத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் உடனே துணை நிலை ராணுவப்பிரிவை அண்ணாநகருக்கு அனுப்பிவைத்தார்.

தலைமைச் செயலாளர் வீட்டை அந்தப்படையினர் முற்றுகையிட்டுள்ளனர். இந்த தகவல் கிடைத்ததும், தமிழக முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் மின்னல்வேகத்தில் தலைமைச் செயலகத்துக்கு வந்து உயர் அதிகாரிகள் அளவில் ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் 37, ராஜ்யசபா உறுப்பினர்கள் 13...என்று 50 பேர்கள் அ.தி.மு.க-வில் இருக்கின்றனர். இருந்தும் கூட, மாநில அரசுக்கு தகவல் தெரிவிக்காமல், சென்னை போலீஸ் அனுமதி இல்லாமல் திடீரென துணைநிலை ராணுவப்படையினர் மத்திய அரசு இறக்கியிருப்பது தலைமைச் செயலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த நிலையில், தமிழக நடவடிக்கைக்கு மேற்கு வங்க மம்தாவே கண்டனம் தெரிவித்த நிலையில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் எப்படி ரியாக்ட் பண்ணப்போகிறார் என்பது சஸ்பென்ஸாக இருக்கிறது.

- ஆர்.பி

NEWS TODAY 08.06.2026