Tuesday, February 7, 2017

சசிகலா பதவிப் பிரமாணத்தை ஆளுநர் தவிர்க்க முடியுமா? சட்ட வல்லுநர் கருத்து

VIKATAN

தமிழக சட்டப்பேரவையின் அ.தி.மு.க. தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகும் ஆளுநரின் அழைப்பு இல்லாததால் அவர் முதல்வராகுவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. இதற்கு சட்டம் என்ன சொல்கிறது என்று வழக்கறிஞர் டி.ஏ.சி. ஜெனிதா விளக்கம் அளித்தார். அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

ஆளுநர் வருகை தொடர்ந்து தாமதமானால் அதற்கு சட்டரீதியாக என்ன தீர்வு இருக்கிறது?

தமிழக சட்டப்பேரவை அ.தி.மு.க. தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதற்கான கடிதத்தை ஆளுநரிடம் கொடுத்து ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு சசிகலா பரிந்துரைக்க வேண்டும். ஆனால் இன்றைய சூழ்நிலையில் தமிழகத்துக்கு ஆளுநர் (பொறுப்பு) நியமிக்கப்பட்டு இருப்பதால் அவர் இங்கு இல்லை. இதனால் முதல்வர் பதவி ஏற்பு விழாவுக்கான நடைமுறைகளில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் ஆளுநர், குறிப்பிட்ட நாளுக்குள் சட்டம், முதல்வர் தேர்வு உள்ளிட்டவைகளுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்படவில்லை.

கடந்த 1983ல் சர்க்காரியா கமிஷன் அமைக்கப்பட்டு அதன்பரிந்துரையில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் ஆளுநருக்கு முதல்வரை தேர்வு செய்வது, சட்டங்களை இயற்றுவது தொடர்பான அதிகாரங்கள் வழங்கப்படவில்லை. எனவே, ஆளுநருக்கு இதுபோன்ற அதிகாரங்கள் அளிக்கப்பட வேண்டும் என்று அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டதோடு அதை அமல்படுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை அதற்கு நடவடிக்கை இல்லை.

ஆளுநர் மீதான புகார் மற்றும் நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரம் யாரிடம் இருக்கிறது?

இந்திய குடியரசுத் தலைவருக்கு உள்ளது. சில விதிமுறைகளுக்குட்பட்டு நீதிமன்றங்களுக்கும் இருக்கிறது. மாநில அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டால் இந்திய குடியரசுத் தலைவர் தலையிடலாம். ஆளுநரை நீக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு மட்டுமே இருக்கிறது.

இருமாநிலங்களுக்கு ஒரே ஆளுநர் நியமிக்கப்படலாமா?

இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் பிரிவு 153ல் குறிப்பிட்டுள்ளபடி இருமாநிலங்களுக்கு ஒரே ஆளுநரை நியமிக்கலாம்.

முதல்வராக தேர்ந்தெடுக்கப்படும் ஒருவரை நிராகரிக்க ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறதா?

கவுன்சில் ஆப் மினிஸ்டர்ஸ் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் முதல்வர் குறித்து ஆராய்ந்த பிறகு ஆட்சி அமைக்க சம்மதம் தெரிவிக்கப்படும். முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுவோர் மீது ஆதாரத்துடன் ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவரை நிராகரித்து குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைக்க ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறது.

எப்போது இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 356ஐ ஆளுநர் பயன்படுத்துவார்?

கடந்த 1994-ல் எஸ்.ஆர்.பொம்மை Vs யூனியன் ஆப் இந்தியா என்ற வழக்கில் எந்தமாதிரியான அசாதாரண சூழ்நிலை உருவாகினால் இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 356ஐ பிரகடனப்படுத்த வேண்டும் என்பதை ஒன்பது நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு அளித்தத் தீர்ப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. மாநில ஆட்சியில் அசாதாரண சூழ்நிலை உருவாகினால் அதற்கான ஆதாரத்துடன் 356ஐ (ஆட்சி கலைப்பு) பிரகடனப்படுத்த குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைக்க வேண்டும். அவரது ஒப்புதலின் பேரில் ஆட்சி கலைக்கப்படும்.

-எஸ்.மகேஷ்



மீனவர்களுக்கு எமனாகும் எண்ணெய்! - கப்பலைக் காப்பாற்ற கொட்டப்பட்டதா கச்சா?




மெரினாவில் அமைதியாகப் போராடியவர்கள் மீது போலீஸ் நிகழ்த்திய கொடூரத் தாக்குதல், மெரினா கடற்கரைக்கு அழியாத கறையை ஏற்படுத்தியது. அதே மெரினா இப்போது நிஜமாகவே கறையாகிக் கிடக்கிறது.

கடந்த ஜனவரி 28-ம் தேதி அதிகாலை, சென்னையை அடுத்த எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் ஒரு விபத்து... மும்பையிலிருந்து வந்த `டான் காஞ்சிபுரம்’ என்ற சரக்குக் கப்பலும் எரிவாயு எடுத்துச் சென்ற மேப்பிள் என்ற கப்பலும் எதிர்பாராத விதமாக மோதிக்கொண்டன.

டான் காஞ்சிபுரம் கப்பலுக்கு இதில் பலத்த சேதம். கப்பலின் நடுப்பகுதி உடைந்ததில், கச்சா எண்ணெய் கொட்டி கடல் நீரில் கலந்தது. ‘அதிகம் சிந்தவில்லை’ எனப் பலரும் மாறி மாறி மறுத்தாலும், சுமார் 20 டன் அளவுக்கு கடலில் எண்ணெய் கொட்டி இருக்கலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.

கடல்நீரே அங்கு கறுப்பாக மாறியிருக்க, காற்றின் வேகத்தில் அது அங்கிருந்து தெற்காகப் பரவத் தொடங்கியது. இரண்டே நாட்களில் மெரினாவைத் தாண்டி போக ஆரம்பித்தது. உயிரிழப்பு எதுவும் இல்லை என்றபோதும், கண்ணுக்கெட்டிய தூரம் வரை மணல் பரப்பு கறுப்புப் போர்வை போல கச்சா எண்ணெயை போர்த்திக்கொண்டது. உலகின் பல நாடுகளில் ஏற்பட்ட மிகப் பெரிய எண்ணெய் விபத்துகளுடன் ஒப்பிடுகையில் எண்ணூர் விபத்து மிகச் சிறியதுதான். ஆனால், அவர்களிடம் இருந்த தொழில்நுட்ப வசதிகள் நம்மிடம் இல்லை என்பதுதான் ஆபத்தின் வீரியத்தை அதிகரிக்கச் செய்திருக்கிறது.

முதலில் ‘எண்ணெயே கசியவில்லை’ எனப் பூசி மெழுகப் பார்த்தது துறைமுக நிர்வாகம். அதன்பின் கடலோரக் காவல் படையின் இரண்டு நீர்மூழ்கி பம்புகள் வரவழைக்கப்பட்டு, எண்ணெயை அகற்றும் முயற்சி நடந்தது. இரண்டுமே சொல்லி வைத்தது போல ரிப்பேர் ஆகிவிட, மெட்ரோ வாட்டரின் நீர் உறிஞ்சும் டிரக்குகள் வரவழைக்கப்பட்டு எண்ணெய் கலந்த கடல்நீரை அள்ளினார்கள். அதற்குள் இது மேலும் பல இடங்களில் பரவிவிட, இப்போது தீயணைப்பு ஊழியர்கள், மீனவர்கள், தொண்டு நிறுவனத்தினர் என பலரும் சேர்ந்து வாளிகளால் அள்ளி டேங்கர்களில் ஊற்றுகிறார்கள். டிஜிட்டல் இந்தியாவின் உயர்ந்தபட்ச தொழில்நுட்பம் இதுதான் போலிருக்கிறது! ‘எண்ணெய் கலந்த கடல்நீரைத் தொட்டாலே ஆபத்து’ என ஐ.ஐ.டி நிபுணர்கள் எச்சரித்துக்கொண்டிருக்க, இங்கு பலரும் இதைக் கைகளிலும் முகத்திலும் பூசிக்கொண்டு அள்ளுகிறார்கள்.



எண்ணூரை அடுத்த எர்ணாவூர் பகுதியில், எண்ணெய்க் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தவர்களைச் சந்தித்தோம். மீனவர் தேசராஜ், ‘‘இரண்டு நாட்களாக அள்ளிக் கொண்டிருக்கிறோம். ஆனால், அளவு மட்டும் குறையவே இல்லை. இதை அள்ளிக் கொட்டினாத் தான் எங்களோட மக்கள் கடலுக்குப் போகமுடியும், பொழப்பை பார்க்கமுடியும். அதனாலதான் நானே முன்வந்து கடலில் இறங்கிட்டேன்’’ என்கிறார். தேசராஜின் அதே மனநிலைதான் அங்கிருந்த அத்தனை மீனவர்களுக்கும்.

கடலோரக் காவல்படை கமாண்டோ மண்டல், “தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், எண்ணெய் சுத்திகரிப்பில் உதவும் அளவுக்குத் தொழில்நுட்பத்தில் மேம்படவில்லை. அதனால் மீனவர்கள், துப்புரவாளர்கள் மற்றும் தன்னார்வ நிறுவனம் ஒன்றின் உதவியுடன் கழிவை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளோம். முடிந்தவரை மீனவர்களை கையுறை, காலுறை அணிந்துகொண்டு அப்புறப் படுத்துமாறு அறிவுறுத்தியிருக்கிறோம். முழுவதுமாக எண்ணெயை அகற்ற ஒரு வார காலத்துக்கு மேல் ஆகும்” என்கிறார்.

ஆனால், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லியோ, ‘‘இரண்டு நாட்களுக்குள் முழுவதுமாக எண்ணெய் கழிவுகள் அகற்றப்பட்டு விடும்’’ என்று முரண்பட்ட கருத்தை சொன்னார்.



வழக்கமாக, இப்படி எண்ணெய்க்கசிவு ஏற்பட்டால், அதன்மீது ஒரு பவுடரைக் கொட்டுவார்கள். Biodegradable Oil Spill Dispersant எனப்படும் இது, எண்ணெய்க் கசிவைக் கட்டிகளாக மாற்றி கரையில் அடித்து ஒதுங்கச் செய்யும். அதன்பின் அதை அகற்றுவது சுலபம். மிகத் தாமதமாக இப்படிச் செய்ய முடிவெடுத்து, கடலோரக் காவல்படை கப்பல்கள் மூலம் நான்கு டன் பவுடரைத் தூவினார்கள். ஆனால், அது எதிர்பார்த்த விளைவைத் தரவில்லை.

ஏன் இவ்வளவு எண்ணெய் கசிந்தது? கப்பல் மோதி உடைந்த நிலையில், அது மூழ்கிவிடாமல் இருக்க, அதன் எடையைக் குறைக்கும் வகையில் அதிகாரிகளே கச்சா எண்ணெயைக் குழாய்கள் வழியாகத் திறந்து விட்டதாக மீனவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். ஏற்கெனவே எண்ணெய் பிரித்தெடுக்கும் நிறுவனத்தின் குழாய் ஒன்று அந்தப் பகுதியில்தான் கழிவுகளைக் கடல்புறமாக வெளியேற்றிக் கொண்டிருக்கிறது. இப்போது கப்பலைக் காப்பாற்ற... குப்பைத் தொட்டியாக கடல் மாற்றப்பட்டுவிட்டது.

பெட்ரோல், டீசல், வெள்ளை பெட்ரோல் உள்ளிட்ட பல எண்ணெய்களின் கலவைதான் கச்சா. கச்சாவில் இருந்துதான் இவை அத்தனையும் பிரித்தெடுக்கப்படுகின்றன. சாலை போட பயன்படுத்தப்படும் தார்கூட கச்சாவிலிருந்தே எடுக்கப்படுகிறது. ‘‘கச்சா எண்ணெயில் பென்சின், பென்டேன், ஹெக்சேன் உள்ளிட்ட வாயுக்களும் இருக்கின்றன. இவை அத்தனையும் ஹைட்ரோ கார்பனின் வெவ்வேறு பரிமாணங்கள். இதை சுவாசிப்பதாலோ அல்லது தொடுவதாலோ வாந்தி, மயக்கம், குமட்டல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். சிலசமயங்களில் மூச்சுவிடுவதுகூட சிக்கலாகும். சிறுநீரகம், கல்லீரல் போன்றவற்றைப் பாதிக்கும். இதன் நச்சுத்தன்மை உடனடியாக உணரக்கூடியது அல்ல’’ எனச் சூழலியலாளர்கள் எச்சரிக்கிறார்கள்.

கப்பலுக்கு இருக்கும் மரியாதைக்கூட மீனவனுக்கு இல்லை.

- ஐஷ்வர்யா
படங்கள்: தி.குமரகுருபரன்

மீன் சாப்பிட்டால் ஆபத்தா?

‘எண்ணெய்க் கசிவால் மீன்கள் விஷமாகிவிட்டன. மீன் சாப்பிடுவதை நிறுத்துங்கள்’ என வாட்ஸ்அப்பில் தகவல்கள் பரவிக்கொண்டிருக்கின்றன. தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் எண்ணூருக்கு வந்து, அங்கேயே பிடித்து வறுத்த மீனை சாப்பிட்டு ‘‘அபாயம் ஏதுமில்லை’’ எனச் சொன்னார். ஆனால், இதனால் சென்னை முழுக்க மீன் விலை பாதியாகக் குறைந்திருப்பது நிஜம். மீனவர் ராசேந்திரன், ‘‘நாங்க நடுக்கடல்லதான் மீன் பிடிச்சுட்டு வர்றோம். அதுக்கு எந்த பாதிப்பும் இல்லை. மக்கள் இதைப் புரிஞ்சுக்காம இப்போ மீன் வாங்குறதை நிறுத்திட்டாங்க. எண்ணெய்க் கசிவு இருக்கறதால நாங்களும் நாலஞ்சு நாளா மீன் பிடிக்கப் போக முடியாம திண்டாடுறோம்” என்கிறார்.

ஆலிவ் ரிட்லி எனப்படும் அரிய வகை ஆமைகள், சென்னை கடற்கரைக்கு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை வந்து முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும். இந்த சீஸனில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டதால், ஆமைகள் பெரும் பாதிப்பு அடைந்துள்ளன.

அப்போலோ பத்திரிகையாளர் சந்திப்புகளில் இடம் பிடித்திருந்த டாக்டர் சிவக்குமார் நேற்று எங்கே..?

பிரஸ் மீட்
கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி அன்று, உடல் நலம் பாதிக்கப்பட்டு அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் ஜெயலலிதா. போயஸ்கார்டனில் அவர் இருந்தவரை உடன் இருந்து சிகிச்சை செய்தவர் டாக்டர் சிவக்குமார். சசிகலாவின் அண்ணன் மருமகன். பிளாஸ்டிக் சர்ஜனான இவர், அப்போலோ மருத்துவமனையில் பணிபுரிகிறார்.

அப்போலோவில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற 75 நாட்களும் உடன் இருந்து கவனித்துக்கொண்டவர் டாக்டர் சிவக்குமார். அவரது மகன் டாக்டர் கார்த்திகேயனும் அப்போலோவில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் குழுவில் இடம்பெற்றிருந்தார். ஜெயலலிதா உடல்நிலை குறித்து அப்போலோவில் 'பிரஸ் மீட்' நடந்தபோதெல்லாம் டாக்டர் சிவக்குமார் தவறாமல் இடம்பெற்றிருப்பார்.

இந்த நிலையில், ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை மற்றும் அவரது உடல்நிலை ஏன் மோசம் அடைந்தது என்பது பற்றியெல்லாம் லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பெய்ல், பிப்ரவரி 6-ம் தேதி சென்னையில் நடந்த பிரஸ் மீட்டில் விளக்கம் அளித்தார். இந்த பிரஸ்மீட்டில் டாக்டர் சிவக்குமார் மிஸ்ஸிங். அவர் எங்கே போனார் என்று நிருபர்கள் கேட்டபோது, மருத்துவக்குழுவினரிடம் இருந்து சரியான பதில் இல்லை. ஜெயலலிதாவின் உடல் பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்காக ராஜாஜி மண்டபத்தில் வைக்கப்பட்டடிருந்தபோது தான், டாக்டர் சிவக்குமாரை கடைசியாகப் பார்க்க முடிந்தது. அதன் பிறகு, அவர் எங்கும் வருவதில்லை.

இதுபற்றி அ.தி.மு.க பிரமுகர் ஒருவர் கூறும்போது, "ஜெயலலிதா அப்போலோவில் இருந்தபோது, சிவக்குமாரிடம் நன்றாகப் பேசினார். ஒரு கட்டத்தில், நினைவு திரும்பியபோது, 'இத்தனை நாள் இங்கே இருந்து விட்டேனே?.. நான் நன்றாக இருக்கிறேன் என்று மக்களுக்குத் தெரிய வேண்டாமா? என்னுடைய புகைப்படத்தையும் என் அறிக்கையையும் வெளியிட ஏற்பாடு செய்யுங்கள்' என்று சிவக்குமாரிடம் ஜெயலலிதா சொன்னாராம். இதை சிவக்குமார், சசிகலாவிடம் தெரிவித்தபோது, ஜெயலலிதாவின் புகைப்படத்தை வெளியிட அவர் மறுத்து விட்டாராம். அதிலிருந்தே சிவக்குமார் படிப்படியாக விலக்கி வைக்கப்பட்டார். போயஸ்கார்டனுக்கு போவதையும் குறைத்துக் கொண்டார். அதனால்தான், டாக்டர் ரிச்சர்ட் பெய்ல் அளித்த பிரஸ் மீட்-க்கு சிவக்குமார் அழைக்கப்படவில்லை" என்றார். ஜெயலலிதா உடல்நிலை பற்றிய முழு விவரம் தெரிந்த டாக்டர் சிவக்குமாரை ஏன் சசிகலா ஓரம்கட்டி வைத்திருக்கிறார்? என்பது புரியாத புதிராகவே உள்ளது.

- ஆர்.பி.


vikatan.com

'' 'என்னைக் கொன்று விடுவார்களோ' எனப் பயந்தார் ஜெயலலிதா!'' - பகீர் புகார்


சசிகலா சதி செய்து வருவதாகவும், இந்த கும்பல் என்னை கொன்றுவிடுமோ என்று ஜெயலலிதா என்னிடம் கூறி கலங்கினார் என அதிமுக முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியன் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.

சென்னை அண்ணாநகரில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியனும், அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியனும் இன்று கூட்டாக செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தனர். அப்போது, பி.எச். பாண்டியன் கூறுகையில், "ஜெயலலிதா நினைவிழந்த நிலையில் அனுமதிக்கப்பட்டபோது மருத்துவமனைக்குச் சென்றேன். அங்கு ஜெயலலிதாவுக்கு பல்வேறு வகையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர். அரவக்குறிச்சி தேர்தல் பிரசாரத்துக்கு ஜெயலலிதா போகப்போவதாகவும் அ.தி.மு.க நிர்வாகிகள் தெரிவித்தனர். ஜெயலலிதாவின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்து வந்த நிலையில், திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னர் என்ன நடந்தது, என்பதை ஊடகங்களில் பார்த்துத் தெரிந்துகொண்டேன். மருத்துவமனையில் அனுமதிப்பதற்கு முன்பு, ஜெயலலிதா வீட்டில் வாக்குவாதமும் கைகலப்பும் ஏற்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து, ஜெயலலிதா கீழே விழுந்ததாகவும் அவரைத் தாங்கிப்பிடிக்கக்கூட யாரும் இல்லை என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில்தான் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நான் 15 நாள் மருத்துவமனையில் இருந்தேன். அப்போது, சசிகலா மற்றும் அவர் குடும்பத்தினர் முகத்தில் கொஞ்சம்கூட வருத்தம் இல்லை.

கடந்த 2 நாட்களில் நடந்த நிகழ்வுகள் எனது மவுனத்தைக் கலைத்துவிட்டன. ஜெயலலிதா இறந்தபோது சசிகலா மற்றும் அவரின் குடும்பத்தினர் முகத்தில் கொஞ்சம்கூட வருத்தம் இல்லை. சசிகலா ஒரு சொட்டு கண்ணீர்கூட விடவில்லை" என்று கூறினார்.

அ.தி.மு.க முன்னாள் எம்.பி மனோஜ் பாண்டியன் கூறுகையில், "கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்படுபவர் அதிமுக தொண்டர்களை மட்டும்தான் கட்டுப்படுத்தும் என்றுதான் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கட்சியின் சட்டத்தை பயன்படுத்தி பொதுக்குழுவால் இரண்டாயிரத்து ஐநூறு பேரால் இன்று அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. அதுமட்டுமல்ல சட்டவிதி 20 (2) என்ற விதி இருக்கின்றது. அதில், பொதுச் செயலாளர் என்பவர் அ.தி.மு.க தொண்டர்களால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட முடியும் என குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

அ.தி.மு.க சட்டவிதிகளில் தற்காலிக பொதுச் செயலாளராக நியமிக்கக்கூடியவர், ஒருவரை தேர்ந்தெடுக்கவோ, நியமிக்கக்கவோ எந்த அதிகாரமும் இதுவரை வழங்கப்படவில்லை. அதுமட்டுமல்ல, சட்டவிதிகளின் படி 20 (5) என்ற விதி இருக்கின்றது. அதில், பொதுச் செயலாளர் பதவி காலியாக இருந்தால், இதற்கு முன்னாள் இருந்த பொதுச் செயலாளர், யார் யாரை நியமித்தாரோ அவர்களின் நியமனம், புதிய பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்படும்வரை அது தொடரும் என்பதுதான் அந்த சட்டவிதி. இப்படி தற்காலிக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சசிகலாவை இன்று தமிழகத்தின் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட உள்ள சூழ்நிலையில், அவருக்கு அ.தி.மு.க.வின் ஒன்றரைக்கோடி தொண்டர்களின் ஏகோபித்த ஆதரவு இல்லை என்பதைக் காட்டுகின்றது. காரணம், இரண்டாயிரத்து ஐநூறு பேர் மட்டும்தான் வாக்களித்துள்ளனர். ஆகவே சசிகலாவுக்கு யாரையும் நியமிக்கவோ, நீக்கவோ அதிகாரம் கிடையாது. இரட்டை இலைச் சின்னம் பதித்த உறுப்பினர் அட்டையை ஒருவருக்கு கொடுக்கக்கூடிய உரிமை கூட அவருக்கு கிடையாது.




2011ல் ஜெயலலிதா என்னிடம் பேசினார். சசிகலா சதி செய்து வருவதாக குறிப்பிட்டார். இந்த கும்பல் என்னை கொன்றுவிடுமோ என்று ஜெயலலிதா கலங்கினார். சில நாட்களில் சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கியதோடு, போயஸ் இல்லத்தில் இருந்து வெளியேற்றினார் ஜெயலலிதா. ஆனால் மன்னிப்பு கடிதம் கொடுத்து சசிகலா மீண்டும் ஜெயலலிதாவுடன் இணைந்தார். அப்போது, "அவர்களுக்கும் (மன்னார்குடி) எனக்கும் சம்பந்தமில்லை. அவர்களோடு இனிநான் தொடர்பு வைக்க மாட்டேன் என்று அவர் சொல்லி சாதாரண உறுப்பினராக அனுப்பப்படுகிறார். அப்படி சாதாரண உறுப்பினராக அனுமதிக்கபட்ட சசிகலா, ஜெயலலிதா மறைந்து இருபது நாளில் பொதுச் செயலாளராகிறார்.

அதுமட்டுமல்ல, ஒருபோதும் சசிகலாவை கவுன்சிலராகக் கூட ஆக்க வேண்டும் என்ற எண்ணம் ஜெயலலிதாவுக்கு இருந்தது கிடையாது. ஜெயலலிதாவின் போயஸ் இல்லம் அ.தி.மு.க தொண்டர்களுக்கு கோயில் போன்றது. அந்த கோயிலை ஒரு நினைவு இடமாக மாற்றியிருக்க வேண்டும் என்பதுதான் தொண்டர்களின் எண்ணம். ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம், அவர் பயன்படுத்திய கார், அவர் பெற்ற பரிசு பொருள்கள், அவர் பெற்ற விருதுகள், இவை அனைத்தும் போயஸ் கார்டனில் ஜெயலலிதாவின் நினைவாக இருக்கின்றன. தமிழக மக்கள், அ.தி.மு.க. தொண்டர்கள் அனைவரும் சென்று ஜெயலலிதாவை வணங்குவதற்கு அது நினைவிடமாக்க வேண்டும் என்பதுதான் என்போன்றவர்களின் எண்ணம்.



இன்று தமிழகத்தின் முதலமைச்சராக சசிகலா வரப்போகிறார். 25 நாள்களில் பொதுச் செயலாளர், 60 நாள்களில் முதலமைச்சர். இப்படிப்பட்ட எண்ணங்கள் ஒருவருக்கு இருக்கிறது என்று சொன்னால், ஜெயலலிதாவோடு அவரால் எப்படி அன்பாக இருந்திருக்க முடியும். எதிர்பார்ப்பு இல்லாமல் எப்படி இருந்திருக்க முடியும். அவரோடு இருக்கின்றபோது பதவி மீது ஆசையில்லாமல் எப்படி இருந்திருக்க முடியும். அப்படி ஒருவர் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென்று சொன்னால் 33 ஆண்டுகள் சசிகலா இருக்கிறார் என்று சொல்கிறார்களே, 50 ஆண்டுகள் ஜெயலலிதாவின் இல்லத்தில் அவருக்கு பாதுகாவலராக, தாயாக, எல்லாமுமாக இருந்தவர் ராஜம்.

ஜெயலலிதாவின் 13 வயது முதல் இறக்கும்வரை அவர்களோடும், சசிகலா வெளியேற்றப்பட்டப்போதும் கூட இருந்தவர் ராஜம். ஜெயலலிதாவுக்கு தாயாக இருந்தார். ஆனால், முதலமைச்சர் என்று வரும்போது அ.தி.மு.க தொண்டர்கள், தமிழக மக்கள் அனைவரையும் வஞ்சித்து ஜெயலலிதாவின் விருப்பத்துக்கு மாறாக இன்று பல நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. பொருளாதார குற்றங்கள் புரிந்தவர்கள் தமிழகத்தை ஆண்டால் தமிழகம் எங்கே போகும். நாட்டு மக்களுக்கு இது ஒரு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நாமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஒருபோதும் இதை அனுமதிக்கக்கூடாது. தற்காலிக பொதுச் செயலாளர் தமிழகத்தின் முதலமைச்சராக ஆக முடியுமா" என்று ஆவேசமாக கூறினார்.

- மு.சகாயராஜ்

சசிகலா நடத்தும் அரசியல் கேலிக்கூத்து..’ - ஸ்டாலின் சாடல்

மு.க. ஸ்டாலின்
“கடந்த சில தினங்களாக அதிமுக அரசியலில் தோன்றிய புதுமுக ‘பொதுச் செயலாளர்’ சசிகலா நடத்தும் அரசியல் கேலிக்கூத்துகள் தமிழகத்தின் பெருமையையும், தமிழக மக்களின் புகழையும் அகில இந்திய அளவில் - ஏன் உலக அளவில் கெடுக்கும் விதத்தில் அமைந்திருப்பது வேதனைக்குரியது” என்று மு.க.ஸ்டாலின் தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “முதலமைச்சர் பதவி’யின் கண்ணியத்தையும் சூறையாடி, ‘மாநில சட்டமன்றத்தின்’ மாண்பையும் ‘சின்னம்மா புகழ் பாடி’ கெடுத்து இன்றைக்குத் தமிழகத்தில் மாபெரும் அசிங்கத்தை ‘பிணைக்கைதிகள்’ போல் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களைப் பிடித்து வைத்து நிறைவேற்றியிருக்கிறார் அதிமுகவின் திடீர் பொதுச் செயலாளர் சசிகலா. இந்த அரசியல் அநாகரிக, அரசியல் சட்ட விரோதச் செயலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இத்தகைய சூழலில், ஆளுநர் அவர்கள் இன்றைக்கு ஏற்பட்டிருக்கின்ற அரசியல் சட்ட ‘வெற்றிடம்’ பற்றி தீவிர ஆலோசனை நடத்தி, மாநில நிர்வாகத்தைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அந்த நடவடிக்கையின் பின்னணியில் ‘அடுத்து வரவிருக்கின்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பு’ மற்றும் ‘அமைய வேண்டிய நிலையான ஆட்சி’ ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக்கொண்டு மக்கள் விரும்பும் நல்லதொரு முடிவை ஆளுநர் அவர்கள் எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தள்ளிப்போகும் பதவியேற்பு! சசிகலாவின் அடுத்த வியூகம் என்ன?


சசிகலா முதல்வராகுவதை பா.ஜ.க. தடுப்பதாக அவரது தரப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர். அந்தத் தடைகளைத் தாண்டி சசிகலாவை முதல்வராக்கும் திட்டம் குறித்து கார்டனில் ரகசிய ஆலோசனை நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு அ.தி.மு.க. பொதுச் செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்து, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சசிகலா சட்டப்பேரவை அ.தி.மு.க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து, முதலமைச்சராக பதவி ஏற்பு விழாவிற்கான பணிகள் துரிதமாக நடந்தன. இன்று பதவி ஏற்பு விழா நடைபெறுவதாக முதலில் தகவல் வெளியானது. ஆனால் இரவில் அந்த விழா தள்ளி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு தமிழக ஆளுநரிடமிருந்து 'அழைப்பு' வரவில்லை என்று காரணம் சொல்லப்படுகிறது. இந்த காலதாமதத்துக்கு பா.ஜ.க.வின் தலையீடு இருப்பதாக சசிகலா தரப்பினர் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து சசிகலா தரப்பினர் கூறுகையில், "ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு பா.ஜ.க.வின் தலையீடு தமிழகத்தில் அதிகமாக இருந்து வருகிறது. முதல்வராக சசிகலா தேர்வு செய்யப்பட்டவுடன் சொத்துக்குவிப்பு வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அடுத்து, தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர்ராவ் தமிழகத்தில் இல்லை. அவரது வருகை தாமதமானதால் பதவி ஏற்பு விழா தள்ளிப்போனது. இதற்குப் பின்னணியில் பா.ஜ.க. அரசு உள்ளது தெளிவாகத் தெரிகிறது. முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ராஜினாமா கடிதத்தை மட்டும் உடனடியாக ஏற்றுக் கொண்டார் தமிழக ஆளுநர், புதிய அமைச்சரவை அமையும்வரை பணியில் தொடரும்படி தெரிவித்துள்ளார். ஆனால் முதல்வர் பதவி ஏற்பு விழாவில் மட்டும் காலதாமதப்படுத்துவது பா.ஜ.க.வின் பழிவாங்கும் நடவடிக்கையாகவே நாங்கள் கருதுகிறோம். ஜெயலலிதா உயிரோடு இருந்த காலக்கட்டத்தில் தமிழகத்தைக் கண்டு அஞ்சிய பா.ஜ.க. தற்போது எள்ளி நகையாடுகிறது. ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக இளைஞர்களின் எழுச்சிக்குப் பிறகே பா.ஜ.க. அரசு பின்வாங்கியது. அதுபோல மீண்டும் ஒரு புரட்சி ஏற்படும் சூழ்நிலையை மத்திய அரசு உருவாக்கி உள்ளது. தமிழக ஆளுநர் தரப்பிலிருந்து அழைப்பு வர காலதாமதமாகினால் அதை சட்ட ரீதியாக எதிர்கொள்ள முடிவு செய்துள்ளோம்" என்றனர்.

முதல்வர் பதவி ஏற்பு விழா காலதாமதப்படுத்தப்பட்டதால் நேற்று கார்டனில் சசிகலா தலைமையில் கட்சியின் முன்னணி நிர்வாகிகள், சட்ட ஆலோசகர்களுடன் ஆலோசனை நடத்தினர். அப்போது 'ஆளுநரின் அழைப்பு தாமதமாகி வருவதை இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி எதுவும் செய்ய முடியாது. ஆளுநரின் அழைப்பு மேலும் திட்டமிட்டு காலதாமதமாகினால் குடியரசுத் தலைவரை சந்திக்கலாம்' என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்பிறகு சசிகலா, முதல்வராக பதவி ஏற்பார் என்று கார்டன் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

- எஸ்.மகேஷ்

செப்டம்பர் 22ல் கார்டனில் ஜெயலலிதாவுக்கு என்ன நடந்தது? செங்கோட்டையன் பரபர பேட்டி

செங்கோட்டையன்
செப்டம்பர் 22-ம் தேதி போயஸ் கார்டனில் ஜெயலலிதாவுக்கு விஷம் கொடுத்ததாக பி.ஹெச்.பாண்டியன் கூறிய குற்றச்சாட்டுக்கு அதிமுக அமைப்புச் செயலாளர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.

செப்டம்பர் 22-ம் தேதி ஜெயலலிதா வீட்டில் வாக்குவாதம் நடந்ததாக தகவல் வெளியானது என்றும், அதனால் வீட்டில் நடைபெற்ற நிகழ்வுகள் என்ன என்பது குறித்த சந்தேகம் ஏற்படுகிறது என்றும் அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியன் கூறியிருந்தார். இந்த குற்றச்சாட்டுக்கு அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் செங்கோட்டையன் மற்றும் கொள்கைப் பரபரப்புச் செயலாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர். அவர்கள் கூறுகையில், "ஜெயலலிதாவுக்காக இன்று வக்காலத்து வாங்குகிறார் பி.ஹெச்.பாண்டியன். இவரது குடும்பத்தில் உள்ள ஐந்து பேரும் பதவியில் இருக்கிறார்கள். எந்த இயக்கத்தில் ஒரு குடும்பத்துக்கு ஐந்து பதவி கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு குடும்பத்துக்கு ஐந்து பதவி கொடுத்த இயக்கம் அ.தி.மு.க.தான். இதற்கு நன்றி சொல்ல வேண்டிய கடமை அவருக்கு இருக்கிறது. இந்த இயக்கத்துக்கு குழப்பத்தை ஏற்படுத்துகின்ற கும்பலோடு சேர்ந்திருக்கிறார். அ.தி.மு.க ஒற்றுமையுடன் இயங்கிக் கொண்டிருக்கிறது. நாங்கள் ஒருமித்த கருத்துகளோடு இருக்கிறோம்.

1990-ம் ஆண்டு ராஜீவ்காந்தி, ஜெயலலிதாவின் இல்லத்துக்கு வந்தபோது சசிகலாவை பக்கத்தில் அழைத்து வைத்து, 'எனக்கு நட்பின் இலக்கணமாக இருப்பவர் இவர்தான்' என்று குறிப்பிட்டுக்காட்டினார் ஜெயலலிதா. 1998ல் வாஜ்பாயை சந்தித்து பேசியபோது, 'எனக்கு தாயாக இருக்கும் ஒருவர் இவர்தான்' என்று சசிகலாவை அறிமுகப்படுத்திக் காட்டினார். இதுவே நமக்கு அடையாளம் காட்டப்பட்டிருக்கிறது. துரோகிகளுடன் சேர்ந்து அறிக்கை விட்டுக் கொண்டு இருப்பவர்களை பார்த்து நான் கேட்கிறேன். "ஜெயலலிதாவுக்கு இந்த துன்பம், இடர்பாடு யாரால் வந்தது என்பதை நாட்டு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் உங்களை (செய்தியாளர்களை) அழைத்து தெரிவித்து இருக்கிறோம். பி.ஹெச்.பாண்டியனை நேரடியாக சந்தித்து பேசவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். துரோகிகளுடன் இணைந்து அ.தி.மு.க.வில் குழப்பம் ஏற்படுத்த யார் முயன்றாலும் அது முடியாது. இந்த இயக்கம் எஃகு கோட்டை. அ.தி.மு.க.வை பற்றிப் பேச பி.ஹெச்.பாண்டியனுக்கு என்ன உரிமை இருக்கிறது. இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டிருந்தபோது மீட்டெடுக்க உதவாதவர் பி.ஹெச்.பாண்டியன். 1996ல் ஜெயலலிதா மீது வழக்கு தொடர காரணமாக இருந்தவர் பி.ஹெச்.பாண்டியன். அ.தி.மு.க.வுக்காக பி.ஹெச்.பாண்டியன் துரும்பைக்கூட கிள்ளிப்போட்டதில்லை. பதவியைவிட கட்சியே பெரிது என்று எண்ணுபவர்கள்தான் உண்மையானவர்கள். சசிகலா மீது பி.ஹெச்.பாண்டியன் வீண்பழி சுமத்துகிறார். சசிகலா முதல்வராக பதவியேற்பது உறுதி.



செப்டம்பர் 22-ம் தேதி ஜெயலலிதாவுக்கு விஷம் கொடுத்ததாக பி.ஹெச்.பாண்டியன் கூறுகிறார். அன்று நான் போயஸ் கார்டனில்தான் இருந்தேன். தேவையில்லாமல் இப்படிப்பட்ட கருத்தைக் கூறக்கூடாது. பதவி இருந்தால்தான் அ.தி.மு.க.வில் இருப்பேன் என்று பி.ஹெச்.பாண்டியன் சொல்லியிருக்கிறார். விஷம் கொடுத்ததாக சொல்கிறார்கள். இதை யார் சொல்லணும், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள்தான் சொல்லணும். அவர்கள் சொல்லவில்லையே. நாம் எதுவேண்டுமானாலும் சொல்லிவிட்டுப் போகலாம். ஒருவர் மீது பழிசுமத்துவது எளிது.

பொதுச் செயலாளரை நியமிக்க பொதுக்குழுவுக்கு அதிகாரம் இல்லை என்கிறார். எம்.ஜி.ஆரை கட்சியில் இருந்து தி.மு.க பொதுக்குழுதான் நீக்கியது. இதனால் எம்.ஜி.ஆர் வேதனைப்பட்டார். இதுபோன்ற நிலைமை யாருக்கும் வரக்கூடாது என்றுதான் எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பித்தபோது, அனைத்து உறுப்பினர்களும் சேர்ந்து பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கட்சியில் சட்டம் கொண்டு வந்தார். அ.தி.மு.க.வில் மட்டும்தான் இந்த தேர்வு முறை இருக்கிறது. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் இந்த இயக்கத்தை நடத்திச் செல்வதற்கு ஒரு பொதுச் செயலாளர் தேவை. எல்லா உறுப்பினர்களையும் ஒன்று சேர்த்து இதற்காக தேர்தல் நடத்த கால அவகாசம் இல்லை. இந்த சூழ்நிலையில் சசிகலாவை பொதுச் செயலாளராக்க பொதுக்குழு பரிந்துரை செய்கிறது. இதில் எந்த தவறும் இல்லை. பொதுக்குழு பரிந்துரை செய்யக்கூடாது என்று கழக சட்டத்திட்ட விதிகளில் இல்லை. அதே நேரத்தில் பொதுக்குழு உறுப்பினர்களின் உரிமை பறிக்கப்படவில்லை. மீண்டும் பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்க வாய்ப்பு வரும்போது இதனை அவர்கள் செய்யலாம். தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டாலும் கூட பொதுச் செயலாளர் பொறுப்பு போட இதில் இடமிருக்கிறது. பொதுக்குழு பரிந்துரை செய்யக்கூடாது என்று கழக சட்டத்தில் எங்கே இருக்கிறது. அது கிடையாது. அதன் அடிப்படையில்தான் சசிகலாவை பொதுச் செயலாளராக பொதுக்குழு நியமனம் செய்துள்ளது" என்று கூறினர்.

- மு.சகாயராஜ்

படங்கள்: கே.ஜெரோம்

Section of Anna University PhD scholars excluded from convocation

Section of Anna University PhD scholars excluded from convocation Scholars who completed their viva after this date will be awarded degrees ...