Monday, March 27, 2017

‘நீட்’ தேர்வுக்கான பயிற்சியை தொடங்குங்கள்

தமிழ்நாட்டில் தற்போது நடந்துவரும் பிளஸ்–2 தேர்வு 31–ந் தேதி முடிகிறது. 8 லட்சத்து 98 ஆயிரத்து 763 மாணவர்கள் தேர்வை எழுதிக்கொண்டிருக்கிறார்கள். இதில், 3 லட்சத்து 90 ஆயிரம் மாணவர்கள் ‘பயாலஜி’ என்ற உயிரியல் பாடத்தின் அடிப்படையில் படித்தவர்கள்.

தமிழ்நாட்டில் தற்போது நடந்துவரும் பிளஸ்–2 தேர்வு 31–ந் தேதி முடிகிறது. 8 லட்சத்து 98 ஆயிரத்து 763 மாணவர்கள் தேர்வை எழுதிக்கொண்டிருக்கிறார்கள். இதில், 3 லட்சத்து 90 ஆயிரம் மாணவர்கள் ‘பயாலஜி’ என்ற உயிரியல் பாடத்தின் அடிப்படையில் படித்தவர்கள். உயிரியல் பாடத்தை விருப்பப்பாடமாக எடுத்து படித்து தேர்வு எழுதியவர்களின் கனவுப்படிப்பு எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்பும், பல் மருத்துவ படிப்பும் ஆகும். இந்த ஆண்டு ‘நீட்’ மூலம்தான் மாணவர் சேர்க்கை நடத்தப்படுமா?, அல்லது வழக்கம்போல பிளஸ்–2 மார்க்குகளின் அடிப்படையில்தான் நடக்குமா? என்று தெளிவான முடிவு தெரியாமல் இன்றளவும் மாணவர்கள் குழம்பிப்போய் இருக்கிறார்கள். ‘நீட்’ தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ். படிப்புக்கும், எம்.டி., எம்.எஸ். போன்ற பட்டமேற்படிப்புக்கும் விலக்குபெற தமிழக சட்டசபையில் இரு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு, கவர்னரின் ஒப்புதலும் பெறப்பட்டு, ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக மத்திய அரசாங்கத்துக்கு அனுப்பப்பட்டு, அப்படியே நிலுவையில் இருக்கிறது.

கடந்தவாரம் வெள்ளிக்கிழமைகூட மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணனும், மத்திய சுகாதார மந்திரி நட்டா, சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் ஆகியோரை டெல்லியில் சந்தித்து விரைவில் இந்த ஒப்புதல்களையெல்லாம் அளித்து, ஜனாதிபதி ஒப்புதலையும் பெற்றுத்தர வழக்கம்போல கோரினார்கள். அதே நேரத்தில் மத்திய அரசாங்கம் தமிழ்நாட்டில் இப்போது ‘நீட்’ தேர்வுக்காக சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சி ஆகிய இடங்களில் நிர்ணயிக்கப்பட்ட மையங்களுடன் கூடுதலாக நாமக்கல், திருநெல்வேலி, வேலூர் ஆகிய இடங்களிலும் மையங்கள் அமைக்கப்படும் என்று அறிவித்துவிட்டது. ஆக, ‘நீட்’ தேர்விலிருந்து விலக்கு கிடைப்பது முழுக்க முழுக்க சந்தேகத்திற்குரியதுதான் என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது. எம்.டி., எம்.எஸ். போன்ற பட்டமேற்படிப்புகளுக்கு ‘நீட்’ தேர்விலிருந்து விலக்கு அளிக்கமுடியாது என்று பட்டவர்த்தனமாக மத்திய அரசாங்கம் தெரிவித்துவிட்டது. கிராமப்புறங்களில் பணியாற்றிய டாக்டர்களுக்கு அளிக்கப்படும் ஊக்கமதிப்பெண், இந்த தேர்வில் குறைக்கப்படமாட்டாது என்று மத்திய மந்திரிகள் தெரிவித்துவிட்டனர். ஆக, எந்த நேரத்திலும் எம்.டி., எம்.எஸ். பட்ட மேற்படிப்புக்கான ‘நீட்’ தேர்வு தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட இருக்கிறது.

இதற்கிடையில், டெல்லியில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், ‘நீட்’ தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கான நடவடிக்கையை தமிழக அரசு எடுத்துவருகிறது. மத்திய அரசும் பரிசீலித்து வருகிறது. இருந்தாலும், மாணவர்கள் அதையே நம்பி தேர்வுக்கு தயாராவதை கைவிடக்கூடாது’ என்று வெளிப்படையாக சொல்லிவிட்டார். ‘நீட்’ தேர்வு மே 7–ந் தேதி நடக்க இருக்கிறது. இந்த ஆண்டு தமிழிலும் ‘நீட்’ தேர்வை எழுதலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சி.பி.எஸ்.இ. கல்வி திட்டத்தில் 11–வது, 12–வது வகுப்பு பாடங்களின் அடிப்படையில் தேர்வு இருக்கும் என்பதால் மாணவர்களுக்கு தேர்வு கஷ்டமாகத்தான் இருக்கும். வழக்கமாக தமிழக அரசு நடத்தும் மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்குக்கு ஏறத்தாழ 40 ஆயிரம் மாணவர்கள்தான் விண்ணப்பிப்பார்கள். இப்போது ‘நீட்’ தேர்வுக்கு 80 ஆயிரத்துக்கும் மேல் விண்ணப்பித்துவிட்டார்கள் என்றால் மாணவர்கள் தயாராகத்தான் இருக்கிறார்கள். பல தனியார் பயிற்சி நிலையங்கள் ‘நீட்’ தேர்வு பயிற்சி வகுப்புகளை தொடங்கிவிட்டன. கிராமப்புற ஏழை, எளிய மாணவர்கள், நடுத்தர வகுப்பு மாணவர்களால் இத்தகைய பயிற்சி மையங்களில் பணம்கட்டி படிக்கமுடியாது என்றநிலையில், தமிழக அரசு இனிமேலும் இலைமறைவு காய்மறைவாக கருத்துகளை சொல்லாமல் வெளிப்படையாக தெரிவித்து, ஏப்ரல் 1–ந் தேதி முதல் மாணவர்களுக்கான ‘நீட்’ பயிற்சி வகுப்புகளை தொடங்கிவிடுவது சாலச்சிறந்ததாகும். ‘நீட்’ தேர்வில் வெற்றி பெற்றால் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், இந்தியா முழுவதிலும் உள்ள கல்லூரிகளில் படிக்க வாய்ப்பு கிடைக்கும்.

Saturday, March 25, 2017

சேலத்தில் இடபற்றாக்குறை : நெரிசலில் சிக்கி தவிக்கும் பழைய பஸ் ஸ்டாண்ட்

 ஆங்கிலேயர் காலத்தில் இருந்து செயல்பட்டு வந்த சேலம் டவுன் பஸ் ஸ்டாண்டில் இருந்து பிற மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. தொடர்ந்து காந்தி சிலை அருகே வெளியூருக்கு செல்லும் பஸ்கள் வந்து செல்லும் வகையில், திருவள் ளூர் பஸ் ஸ்டாண்ட் உருவாக்கப்பட்டது. இடநெருக்கடி காரணமாக கடந்த 1994ம் ஆண்டு, இங்கிருந்த பஸ் ஸ்டாண்ட், இடமாற்றம் செய்யப்பட்டு தற்போதுள்ள புதிய பஸ் ஸ்டாண்டாக உருவானது.அப்போது முதல், மாவட்டத்திற்குள் செல்லும் டவுன் பஸ்கள் வந்து செல்லும் இடமாக, சேலம் பழைய பஸ் ஸ்டாண்ட் மாறியது. மாவட்ட கலெக்டர் அலுவலகம், அரசு மருத்துவமனை, பள்ளி, கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு செல்வோர் என, நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் சேலம் பழைய பஸ் ஸ்டாண்டிற்கு வந்து செல்கின்றனர்.

ஆனால் அவர்களுக்கான எந்தவித அடிப்படை வசதிகளும் பஸ் ஸ்டாண்டில் செய்து தரப்படவில்லை. டவுன் பஸ்களுக்கு என தனியாக பிரிக்கப்பட்டதில் இருந்து இதுவரை, ஒருமுறை கூட பழைய பஸ் ஸ்டாண்ட் நவீனப்படுத்தப்படவில்லை. பஸ்களை நிறுத்த போதிய இடமில்லை, பயணிகள் காத்திருக்க வசதியில்லை, நெரிசலால் ஏற்படும் போக்குவரத்து பிரச்னைகள், பஸ் ஸ்டாண்டில் இருந்து வெளியே வருவதில் டிரைவர்களுக்குள் அடிக்கடி ஏற்படும் தகராறு என பழைய பஸ் ஸ்டாண்டின் பிரச்னை பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இதனிடையே கடந்த 2011ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலின் போது, சேலம் பழைய பஸ் ஸ்டாண்ட் குறித்த பல்வேறு வாக்குறுதிகளை, அதிமுக சார்பில் போட்டியிட்ட சவுண்டப்பன் தெரிவித்தார். பழைய பஸ் ஸ்டாண்ட் நவீனமயமாக்கப்படும், ஆட்கொல்லி பாலம் அருகே திருமணிமுத்தாற்றிற்கு மேற்கூரை அமைத்து அங்கு வாகன நிறுத்தும் இடம் உருவாக்கப்படும் என உறுதியளித்தார்.

தொடர்ந்து தேர்தலில் வெற்றி பெற்று மேயராக பொறுப்பேற்ற சவுண்டப்பன், தனது முதல் பட்ஜெட்டிலேயே, இதற்கான தீர்மானத்தையும் நிறைவேற்றினார். ஆனால் அதன்பின்னர் பழைய பஸ் ஸ்டாண்ட் ஆய்வு, திட்ட மதிப்பீடு, திட்ட வரைவு அனுப்புதல் என எந்தவித ஆயத்த பணிகளிலும் ஈடுபடவில்லை. பஸ் ஸ்டாண்ட் நவீனமாக்கப்படும் என்ற உறுதி, வெறும் தீர்மான அளவிலேயே நின்றுவிட்டது. 5 ஆண்டுகள் முழுமையாக பதவியில் இருந்தும், பழைய பஸ் ஸ்டாண்டை சீரமைக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், மேயர் மீது பொதுமக்களும், வியாபாரிகளும் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: சேலம் பழைய பஸ் ஸ்டாண்டிற்கு அரசு, தனியார் மற்றும் மினிபஸ் என 500க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. இதில், மகுடஞ் சாவடி, ஆட்டையாம்பட்டி, புது பஸ் ஸ்டாண்ட், ஜங்சன், அஸ்தம்பட்டி, கோரிமேடு போன்ற பகுதிகளுக்கு செல்லும் பஸ்களுக்கு மட்டும், பஸ் ஸ்டாண்டின் உள்புறத்தில் நிறுத்த இடம் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் மற்ற பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள், வெளிப்புறமாக உள்ள குறுகலான இடங்களில் மட்டுமே நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும். குறிப்பாக வாழப்பாடிக்கு செல்லும் பஸ்கள் வணிக வளாகத்திற்கு எதிரிலும், மல்லூர், ராசிபுரம் செல்ல வேண்டிய பஸ்கள் மணிக்கூட்டிற்கு முன்பாகவும் பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும். இந்த பஸ்களுக்கு வழியிலேயே இடம் ஒதுக்கப்பட்டுள்ளதால், நீண்ட நேரம் அங்கு நின்று செல்ல முடியாது. இதேநிலை தான் மினி பஸ்களுக்கும் ஏற்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மேயர் கொடுத்த வாக்குறுதி, கிணற்றில் போட்ட கற்களை போன்று அப்படியே உள்ளது. பஸ் ஸ்டாண்டை விரிவுபடுத்தி நவீனப்படுத்தும் வரை இந்த பிரச்னை இருந்து கொண்டே தான் இருக்கும். எனவே ஒவ்வொரு பகுதிக்கும் செல்லும் பஸ்கள் அனைத்திற்கும் தனித்தனியாக நிரந்தர இடம் வழங்க வேண்டும். பயணிகள் காத்திருக்கவும், அவர்களுக்கான சுகாதார மற்றும் குடிநீர் வசதிகளும் ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு பொதுமக்கள் கூறினர்.

சுகாதாரமிக்க நாடாக சிங்கப்பூர் தேர்வு

ஆசிய நாடுகளில் சிங்கப்பூரே சுகாதாரமிக்க நாடு எனவும் உலக நாடுகளில் நான்காம் இடத்தைப் பிடித்துள்ளதாகவும் புளூம்பெர்க் நடத்திய ஆய்வின் முடிவுகள் கூறுகின்றன. வளர்ந்த நாடுகளைச் சுகாதா ரத் தில் சிங்கப்பூர் மிஞ்சியுள்ளது இந்த ஆய்வில் தெரிய வந்துள் ளது. ஆஸ்திரேலியா ஐந்தாவது இடத் திலும் ஜப்பான் ஏழாவது இடத்திலும் நியூசிலாந்து 19ஆம் இடத்திலும், அமெரிக்கா 34ஆம் இடத்திலும் உள்ளதாக அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின் றன. உலக சுகாதார நிறுவனம், ஐக்கிய நாடுகள் மன்றம், உலக வங்கி ஆகியவற்றிடம் இருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் 163 நாடுகள் வரிசைப்படுத்தப்பட்டன.

 

உலகிலேயே வாழ்க்கைச் செலவு ஆக அதிக நகரம் சிங்கப்பூர்

 வாழ்க்கைச் செலவைப் பார்க்கை யில் உலகிலேயே முதலிடத்தில் சிங்கப்பூர் இருக்கிறது. சிங்கப்பூர் இந்த இடத்தில் தொடர்ந்து நான் காவது ஆண்டாக இருந்து வரு கிறது. உலகிலேயே வாழ்க்கைச் செலவு ஆக அதிக உள்ள நகராக சிங்கப்பூரை பிரிட்டனின் பன் னாட்டு ஊடக நிறுவனமான தி எக்கனாமிஸ்ட் குரூப் அமைப்பின் வருடாந்திர உலகளாவிய வாழ்க் கைச் செலவு ஆய்வு முடிவுகள் வரிசைப்படுத்தி இருக்கின்றன. இந்த ஆண்டு பட்டியலில் ஆசிய நாடுகளே ஆதிக்கம் செலுத்துகின்றன. முதல் 10 நகர் களில் பாதி நகர்கள் ஆசிய நகர் களாகவே இருக்கின்றன. சூரிக், பாரிஸ், ஜெனிவா போன்ற பணக் கார ஐரோப்பிய நகர்கள் முதல் 10 இடங்களில் எஞ்சிய நகர்களாக உள்ளன.
Last updated : 12:40 (24/03/2017)

‘எக்காலத்துக்குமான கலைஞன்’ டி.எம்.எஸ் பிறந்த நாள் சிறப்புப் பகிர்வு!



அரை நுாற்றாண்டுகடந்தும் தமிழர்களின் செவிகளின் இன்றும் இசைராஜாங்கம் நடத்திக்கொண்டிருக்கும் டி.எம்.சௌந்தரராஜனுக்கு இன்று பிறந்தநாள்...

தமிழ்த்திரையுலகின் இருபெரும் ஆளுமைகளாக விளங்கிய எம்.ஜி.ஆர், சிவாஜி இருவரும் பின்னாளில் தங்கள் திரையுலக வெற்றியை அரசியலுக்கும் முதலீடாக்கிக்கொண்டு மக்களை சந்தித்தனர். இதில் எம்.ஜி.ஆர் பெற்ற வெற்றி அபாரமானது. அந்த வெற்றியில் அவரது திரையுலக சகாவான டி.எம்.சௌந்தரராஜனுக்கு குறிப்பிடத்தக்க பங்குண்டு. உண்மையில் திராவிட இயக்கத்தின் நீட்சியாக கருதப்படும் அதிமுக என்ற கட்சி மக்களிடம் கொண்டுசேர்க்கப் பயன்பட்ட, வெளியுலகம் தெரியாத ஆளுமை என்றும் சௌந்தரராஜனை குறிப்பிடலாம்.

மதுரையில் இசைப்பின்னணி அல்லாத ஒரு எளிய குடும்பத்தில் 1923 ம் ஆண்டு பிறந்த சௌந்தரராஜன் பிரபல வித்வான் காரைக்குடி ராஜாமணி ஐயங்காரிடம் இசைப்பயிற்சி பெற்றவர். இளம்வயதில் கோவில் பஜனைகள், சிறுசிறு கச்சேரிகள் என தம் இசைஞானத்தை இன்னும் பெருக்கிக்கொண்டார்.

மதுரையில் கச்சேரி ஒன்றில் கலந்துகொள்ள வந்திருந்தார் தமிழ்த்திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டாரான தியாகராஜ பாகவதர். அரங்கின் வெளியே அவரது புகழ்பெற்ற பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது. அது தனது பாடலின் ஒலிப்பேழை என நினைத்தபடி அரங்கில் நுழைந்தவருக்கு இன்ப அதிர்ச்சி. கூட்டத்தில் அந்த பாடலை பாடிக்கொண்டிருந்தது ஒடிசலான ஒரு சிறுவன். கச்சேரி முடிந்ததும் “அப்படியே என்னைப் போலவே பாடுறியே... சென்னைக்கு வா தம்பி உனக்கு எதிர்காலம் இருக்கு” என வாஞ்சையோடு சிறுவனை வாழ்த்திவிட்டு சென்றார் பாகவதர்.

வசிஷ்டரின் வாழ்த்து பெற்ற பின் சிறுவனால் சும்மா இருக்கமுடியுமா.... பகீரத முயற்சிகளுக்குப்பின் கிருஷ்ண விஜயத்தில் முதல் வாய்ப்பு. சுந்தரராவ் நட்கர்னி இயக்கத்தில் 1950 ம் ஆண்டு வெளியான கிருஷ்ண விஜயம் திரைப்படத்தில் "ராதே நீ என்னை விட்டுப் போகாதேடி" என்ற பாடல்தான் சினிமாவில் அவர் குரலில் ஒலித்த முதல்பாடல். (ஆனால் பாடல் பதிவுவானது 1946ம் ஆண்டு. நான்கு ஆண்டு இடைவெளிக்குப்பின்னரே படம் வெளியானது). அன்றுமுதல் அரை நுாற்றாண்டுக்காலம் தமிழர்கள் அவரது குரலை ஒருநாளும் கேட்காமல் உறங்கிப்போயிருக்கமாட்டார்கள்; இனி உறங்கவும் முடியாது.

தொடர்ந்து மாடர்ன் தியேட்டர்ஸின் மந்திரி குமாரி, தேவகி, சர்வாதிகாரி என மளமளவென வாய்ப்புகள். மலைக்கள்ளனில் எம்.ஜி.ஆருக்காக முதன்முதலாக பாடிய 'எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே' என்ற பாடல் பட்டிதொட்டியெங்கும் டி.எம்.எஸ்ஸை கொண்டுசேர்த்தது. அதுமுதல் திரையுலகில் டி.எம்.எஸ் ராஜ்ஜியம்தான். திரையுலகில் 10 ஆயிரம் பாடல்கள், சில நுாறு மேடைகள், மூவாயிரம் பக்திப்பாடல்கள் என தன் சாதனையை பதிவுசெய்தார்.

மந்திரிகுமாரி படத்தில் அன்னமிட்ட வீட்டிலே கன்னக்கோல் சாத்தவே என்ற பாடலுக்கு சிங்காரம் என்ற துணைநடிகருக்கு பாடிய சௌந்தரராஜன், எம்.ஜி.ஆர், சிவாஜி என்ற இருபெரும் ஆளுமைகளின் திரையுலக வாழ்வில் தவிர்க்கவியலாதவராக ஆனபின்னாலும் பந்தா இல்லாமல்தான் திரையுலகில் பவனிவந்தார். “இவருக்குதான் பாடுவேன்... இவருக்கு பாட முடியாது” என சொன்னதில்லை. யாருக்கு பாடினாலும் ஒரு ஒருவிஷயத்தில் மட்டுமே பிடிவாதம் பிடிப்பார். அது, பாடலின் சுவைக்காக ஸ்ருதி விலகி பாடமுடியாது என்பதே!

லட்சம் ரூபாய் தருவதாகச் சொன்னாலும் ஸ்ருதி விலகி பாடச்சொன்னால் பாடமாட்டார் அதுதான் டி.எம்.எஸ்! - இது மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வியின் பாராட்டு.

எம்.ஜி.ஆர் சிவாஜி என்ற இருபெரும் ஆளுமைகளின் திரையுலக வரலாற்றில் டி.எம்.எஸ் தவிர்க்கவியலாதவர். எம்.ஜி.ஆர் பாட்டு சிவாஜி பாட்டு என இவர்களை அடையாளப்படுத்தும் அனைத்து பாடல்களும் டி.எம்.எஸ் பாடியவை. திரையுலகின் அன்றைய இருபெரும் ஆளுமைகளுக்கும் இருவேறுவிதமாக பாடும் திறமை பெற்றிருந்த இவரது பாடல்களை கண்ணை மூடியபடிக் கேட்டால் பாடலை உச்சரிக்கும் கதாநாயகன் யார் என கண்டறிந்துகொள்வர் அந்நாளைய ரசிகர்கள். இது வேறு எந்த பாடகருக்கும் கிடைக்காத பேறு. ஆனால் இது டி.எம்.எஸ் எளிதில் சாதித்தது அல்ல... அதன்பின் இருந்த அவரது உழைப்பு அளப்பரியது.

குரல் வளம் இசைஞானம் இவற்றுக்கிடையில் எல்லை தாண்டாத பாடகர்களில் தனித்துவமாக பாடல்களை பாடியவர் என்பதே திரையிசை வரலாற்றில் டி.எம்.எஸ் விட்டுச்சென்ற தடம்.

உரத்த குரலும் அழுத்தமான பேச்சு வன்மையும் கொண்ட சிவாஜி பாடல்களுக்கு அடிவயிற்றிலிருந்து குரலை எழுப்புவார். எம்.ஜி.ஆரின் சன்னமான குரலுக்கு கண்டமும் நாசியும் இணையும் இடத்திலிருந்து பாடுவார்... ஜெய்சங்கர், ரவிச்சந்திரன்,முத்துராமன் சிவகுமார், நாகேஷ் என இன்னபிற நாயகர்களுக்கு கண்டத்திலிருந்து சில ஃபார்முலாவில் பாடி அசரடிப்பார். இப்படி தனித்துவம் மிக்கவர் டி.எம்.எஸ். பாடலின் வரிகளை இசையமைப்பாளர் நோட்ஸ்க்கு தக்கபடி பாடிவிட்டு சென்றுவிடுவதுமட்டுமல்ல ஒரு பாடகரின் பணி என்பதற்கு உதாரணம் டி.எம்.எஸ்.



உயர்ந்த மனிதன் படத்தில் நடுத்தர வயதை கடந்த கதாநாயகன் தன் பால்ய வயது நினைவுகளை பின்னோக்கி பார்த்தபடி பாடும் அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே பாடல் காட்சியில் கதாநாயகன் சிவாஜி மூச்சிரைக்கப்பாடுவதாக இயக்குனர் காட்சியை சித்தரித்திருந்தார். காட்சிக்கு உயிரூட்ட ரிக்கார்டிங் அறையில் குறிப்பிட்ட வரிகளை பாடும் முன் பின்னாளில் சிறிது துாரம் ஓடிவந்து திரும்ப மைக் முன் வந்து பாடுவார். காட்சி தத்ரூபமாக பொருந்தி பாராட்டுக்களை பெற்றுத்தந்தது. அந்த அர்ப்பணிப்புக்கு பெயர்தான் டி.எம்.எஸ்.

கண் புருவத்திலும் தன் நடிப்பை வெளிக்காட்டும் சிவாஜியையே கூட சமயங்களில் புருவம் உயர்த்த வைத்திருக்கிறார் டி.எம்.எஸ். சாந்தி திரைப்படத்தில் இடம்பெற்ற “யார் அந்த நிலவு“ பாடல் ரெக்கார்டிங் முடிந்து படப்பிடிப்புக்காக சிவாஜிக்கு தகவல் போனது. நடிக்க வந்த சிவாஜி பாடலைக் கேட்டுவிட்டு சற்று மெனமாகிவிட்டார். அருகிலிருந்து இயக்குனர். “என்னண்ணா ஏதாவது உடம்பு பிரச்னையா... இன்னொரு நாள் படப்பிடிப்பை தள்ளிவைக்கட்டுமா என்றாராம். “வேண்டாம் கொஞ்சம் டயம் கொடு. அண்ணன் இந்த பாடலில் பிய்ச்சி உதறியிருக்காரு. கிட்டதட்ட எனக்கு சவால் கொடுத்திருக்காரு. அவ்வளவு சாதாரணமான இதுக்கு வாயசைச்சிடமுடியாது” என டேப் ரிக்கார்டரை எடுத்துச்சென்று சிலமுறை ரிகர்சல் பார்த்தபின்னரே நடித்துக்கொடுத்தாராம். அதுதான் டி.எம்.எஸ்.

மேதைகள் குழந்தைத்தன்மை கொண்டவர்கள் என்பதற்கு டி.எம்.எஸ் -ம் விதிவிலக்கல்ல. திரையுலகில் யார்மீதும் அவர் பொறாமை கொண்டவரல்ல அவர். மாறாக திறமைசாலிகளை அவர் அடையாளங்கண்டு வளர்த்திருக்கிறார். 50 களின் பிற்பகுதியில் திருச்சி வானொலி நிலையத்துக்கு பாடல் பாடச் சென்றபோது அங்கு பணிபுரிந்துவந்த கவிஞர் ஒருவரின் திறமையை பாராட்டி 'சென்னைக்கு வாய்யா உனக்கு எதிர்காலம் இருக்கு' என வாஞ்சையோடு வாழ்த்திவிட்டுச் சென்றார். அவர்தான் பின்னாளில் காவியக்கவிஞர் என பெயர்பெற்ற வாலி. பாடகரான டி.எம்.எஸ் தேர்ந்த சமையற்கலைஞர் என்பது பலரும் அறியாதது. தன் குரலின் இனிமைக்காக பல சமையற்குறிப்புகளை அறிந்துவைத்ததோடு ஓய்வு நேரத்தில் தானே சமைத்து குடும்பத்தினருக்கு பரிமாறுவார்.



டி.எம்.எஸ், எம்.ஜி.ஆர், சிவாஜி, நான் உட்பட அரசியலில் பங்கெடுத்த நடிகர்களின் திரையுலக வாழ்க்கைக்கு மட்டும் அல்ல; அரசியல் வாழ்க்கையிலும் டி.எம்.எஸ்க்கு முக்கிய பங்கு உண்டு. ஆம்... தேர்தல் பிரசாரங்களுக்கு நாங்கள் செல்லும் இடங்களில் எத்தனை மணிநேரங்கள் நாங்கள் தாமதமாக சென்றாலும் மக்களை காத்திருக்கச்செய்தது, எங்களுக்காக அவர் குரல் கொடுத்து பாடிய பாடல்கள்தான். இப்படி எங்கள் அரசியல்வாழ்விலும் அவர் பங்கு முக்கியமானது" என வெளிப்படையாக சொன்னார் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன். இது நிதர்சனமும் கூட.

ஆனால் தன்னால் பயனடைந்த கதாநாயகர்கள் பின்னாளில் அதிகாரம் மிக்க பதவிகளில் அமர்ந்தபோதுகூட அவர்களின் சிறு பரிந்துரைக்கு கூட சென்று பல் இளிக்காத பண்பாளராக இறுதிவரை திகழ்ந்தார் டி.எம்.எஸ்.

கதாநாயகர்களுக்காக குரல் கொடுத்த டி.எம்.எஸ் 1962-ம் ஆண்டு 'பட்டினத்தார்' என்ற படத்தில் தானே க(தை)தாநாயகனாக நடித்தார். அருணகிரிநாதர் என்ற திரைப்படத்திலும் கதாநாயகனாக நடித்த டி.எம்.எஸ். அதில் முருகனை புகழ்ந்து “முத்தைத் திருபத்தித் திருநகை” எனும் பாடலை பாடியிருந்தார். தான் பாடும் பாடலின் பொருளை அறிந்தபின்னரே பாடும் வழக்கமுடைய டி.எம்.எஸ் இந்த பாடலை பாடும் முன் கிருபானந்தவாரியாரிடம் நேரில் சென்று அதற்கான பொருளைக் கேட்டறிந்த பின்னரே பாடினார். புகழ்பெற்ற அந்த பாடலைக் கேட்ட அவரது பையன்களில் ஒருவர், “அப்பா, உனக்கு சிவாஜி குரல் கொடுத்தாரா” என கேட்க விழுந்து விழுந்து சிரித்தாராம் டி.எம்.எஸ்.
“வடநாட்டுக்கு ஒரு முகமது ரஃபி என்றால் தென்னாட்டுக்கு டி.எம்.சவுந்தரராஜன் என ஒரு முறை டி.எம்.எஸ் குறித்து சிலாகித்த வாலி, கர்நாடக பாடகர்களே கூட சமயங்களில் சுருதி விலக்கக்கூடும். டி.எம்.எஸ் எப்போதும் அதை செய்யமாட்டார். அத்தனை இசைஞானம்” என புகழ்ந்தார்.

தெலுங்கு படம் ஒன்றின் பாடல் பதிவின்போது 'கிருஷ்ணா மனமிரங்கி வந்து என்னை காப்பாற்று' என்ற பொருள்படும் தெலுங்கு வரிகளை பாடினார். அந்த வரிகளை பாடுகிறபோடு உச்சஸ்தாயில் அதிகாரமாய் தெரிந்தது. “உதவி கேட்கிற ஒருவனின் குரல் இறைஞ்சுவதுபோல்தான் இருக்கவேண்டும். அதிகாரக்குரலில் இருப்பது முரண்” என பாட மறுத்தார் டி.எம்.எஸ். இத்தனைக்கும் இசையமைப்பாளர் அன்று பிரபலம். இசையமைப்பாளர் தயவு இல்லையென்றால் தொழிலில் நீடிக்கமுடியாது என்றாலும் அத்தனை துணிச்சலாக பாட மறுத்தவர் டி.எம்.எஸ்.

டி.எம்.சௌந்தரராஜனுக்கு மத்திய அரசின் கவுரவம்போன்றெ நிரந்தர புகழ்தருகிறது இன்னொரு முயற்சி. ஆம் அவரது வாழ்க்கை வரலாற்றுத்தொடர் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. இமயத்துடன் என்ற தலைப்பில் உருவாகியுள்ள இத்தொடர் ஓர் வழக்கமான முயற்சி அல்ல; அவரது வாழும்காலத்திலேயே அவரையே கொண்டு அவர் வாழ்வின் முக்கிய நிகழ்ச்சிகள், இடங்கள், அவரது திரையுல சாதனைகள், மற்றும் 3 தலைமுறை சினிமா உலக ஆளுமைகளுடன் அவரை உரையாட வைத்தும் கிட்டதட்ட 12 ஆண்டுகள் உழைப்பின் பலனாய் குறிஞ்சி மலராய் மலர்ந்திருக்கிறது.

அடையாறு திரைப்படக்கல்லுாரியின் முன்னாள் மாணவர் டி.விஜயராஜ் இதனை இயக்கியுள்ளார். இவர் ஏ.சி திருலோக்சந்தரின் முத்துக்கள் தொலைக்காட்சித்தொடரில் பணியாற்றியவர்.

“ஆபாவாணனின் தாய்நாடு படத்திற்கு பாட வந்தபோது டி.எம்.எஸ் அவருடன் நெருங்கிப்பழகும் வாய்ப்பு கிடைத்தது. அப்போதுதான் அவரைப்பற்றி பல விஷயங்களை தெரிந்துகொண்டேன். எப்பேர்ப்பட்ட சாதனையாளரை நாம் கொண்டாடாமல் இருக்கிறொம் என உணர்ந்தேன். அதுவரை வெறும் ரசிகராக இருந்த நான் அவரது வாழ்க்கை வரலாற்றை ஆவணமாக்கவேண்டும் என முடிவெடுத்தேன். ஒருநாள் அவரை வீட்டில் சந்தித்து இதுபற்றி சொன்னபோது, சத்தமாக சிரித்தவர், “நான் அப்படி ஒன்றும் சாதனை செய்யலையேப்பா” என மறுத்துவிட்டார். பலநாட்கள் தொடர்ந்து வற்புறுத்தலுக்குப்பின்னர்தான் ஒப்புக்கொண்டார். மிகப்பெரிய ஆளுமையின் வாழ்க்கையை பதிவுசெய்கிறோம் என்பதால் சிறப்பானதொரு தொடராக இருக்கவேண்டும என ஆரம்பத்திலேயே திட்டமிட்டுக்கொண்டேன்.

கடந்த 2001 ம் ஆண்டு மதுரையில் அவரது பிறந்த வீட்டில் முதற்காட்சி எடுக்கப்பட்டது. அவரது கச்சேரிகள், மற்ற பொதுநிகழ்ச்சிகளுக்கு இடையுறு இன்றி படப்பிடிப்பை வைத்துக்கொண்டேன். டி.எம்.எஸ் பிறந்த வீடு முதல் அவர் இளம்வயதில் கச்சேரிகள் செய்த இடங்கள் முதல் பாடல் பதிவான கோவை சென்ட்ரல் ஸ்டுடியோ, சேலம் மாடர்ன் தியெட்டர்ஸ், பட்ஷிராஜா ஸ்டுடியோ, சென்னையில் அவர்கள் வாழ்ந்த இடங்கள், முத்தாய்ப்பாக கேரளாவில் உள்ள எம்.ஜி.ஆரின் துணைவியார் சதானந்தவதியின் குழல்மன்னம் வீடு, திரையுலக வாழ்வில் அவருக்கு திருப்புமுனை ஏற்படுத்திய இடங்கள் என அத்தனை இடங்களுக்கும் அவரை அழைத்துச்சென்று அவரை பேட்டி எடுத்து பதிவு செய்திருக்கிறோம். மும்பையில் லதா மங்கேஷ்கர், ஆந்திராவில் நாகேஷ்வரராவ், தமிழகத்தில் சிவாஜி குடும்பத்தினர், எஸ்.எஸ்.ஆர் , ரவிச்சந்திரன்,ரஜினி, துவங்கி 3 தலைமுறை கலைஞர்கள் என திரையுலகின் அத்தனை ஆளுமைகளுடனும் அவரை சந்தித்து உரையாட வைத்து பதிவு செய்திருக்கிறோம்.

டி.எம்.எஸ் உடன் முரண்படும் திராவிடர் கழகத் தலைவர் வீரமணியுடனும் இதில் காரசார விவாதம் செய்திருக்கிறார் டி.எம்.எஸ். கல்லுாரி மாணவர்களுடன் அவர் தன் வாழ்க்கையை பகிர்ந்துகொள்கிறார். இந்த வகையில் இந்த தொடர் டி.எம்.எஸ்ஸின் வாழ்க்கை வரலாறாக மட்டுமல்லாமல் திரையுலக வரலாற்று ஆவணமாகவும் இருக்கும். டி.எம்.எஸ் பாடி தற்போது கிடைக்காத பல அரிய பாடல்களை மலேஷியாவில் உள்ள கொலம்பியா நிறுவனத்திடம் இருந்து சேகரித்து இணைத்துள்ளோம். 150 வாரங்களுக்கு ஒளிபரப்பும் வகையில் தயாரிக்கப்பட்டிருக்கிறது. 2001ம் ஆண்டு எடுக்கத்துவங்கி 2013 ம் ஆண்டுவரை சுமார் 12 ஆண்டுகள் இதற்கென உழைத்திருக்கிறோம். சுமார் 60 லட்ச ரூபாய் வரை செலவானது.



சமயங்களில் கடும் பொருளாதார நெருக்கடியை சந்திக்கநேர்ந்தபோது இந்த திட்டத்தை கைவிடும்படி பலர் யோசனை சொன்னார்கள். ஆனால் தளராமல் போராடி எடுத்து முடித்திருக்கிறேன். பணம், பொருள் இத்தனை வருட உழைப்பும் அதனால் ஏற்பட்ட களைப்பையும் தொடரைப்பார்த்து மக்கள் அளிக்கும் பாராட்டு போக்கிவிடும். படைப்பாளி வேறு என்ன எதிர்பார்ப்பான்” - இறைவனுக்கு படையல் வைத்த தொண்டனாய் முகம் மலர சொல்கிறார் டி.விஜயராஜ்.

“கோவை பட்ஷிராஜா ஸ்டுடியோவில் படப்பிடிப்பு நடத்த சென்றபோது அதன் இப்போதைய உரிமையாளர் அனுமதி தரவில்லை. வற்புறுத்தலுக்குப்பின்னர் அனுமதி கிடைத்தது. அப்போது அங்கிருந்த ஸ்டுடியோ சின்னமான கழகுசிலை உடைபட்டு கிடந்ததை கண்டு டி.எம்.எஸ் அழுதுவிட்டார். அதை உரிமையாளர் கண்டுகொண்டார். மறுதினம் நாங்கள் படப்பிடிப்புக்கு சென்றபோது உடைந்த சிலையையும் காணவில்லை. காட்சி உயிரோட்டமாக இருக்கும் என நினைத்து சென்ற எங்களுக்கு அதிர்ச்சி. கொஞ்சநேரத்தில் உரிமையாளர் வந்தார். அங்கிருந்த புல்கட்டுகளை விலக்கி காண்பித்தார். ஆம் பல ஆயிரங்கள் செலவில் ஒரே இரவில் அதை பழையபடி புதிததாக செய்து அங்கு வைத்திருக்கிறார். டி.எம்.எஸ் ஆனந்த கண்ணீர் விட்டார்.



படப்பிடிப்பின்போது இப்படி பல நெகிழ்வான அனுபவங்கள். இந்த தொடருக்காக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தபோது நாங்கள் செய்யவேண்டிய வேலைகளை நீங்கள் செய்கிறீர்கள் என அவர் என்னைப்பாராட்டியதை மறக்கமுடியாது. அப்போது கோவை பக்ஷிராஜா ஸ்டுடியோவில் அவரது தாயார் முதன்முதலாக மேக்கப் டெஸ்ட்டுக்காக எடுத்த படங்களை சேகரித்து வந்து அவரிடம் காண்பித்தோம். நெகிழ்ந்துபோய் நன்றி சொன்னார் ஜெயலலிதா. டி.எம்.எஸ். அவர்களுடன் தான் பாடிய பாடல்களையும் தன் பரபரப்பான அரசியல் பணிகளுக்கு மத்தியிலும் பகிர்ந்துகொண்டார்” என்கிறார் விஜயராஜ்.

ஓய்வுநாட்களில் தானே சமைத்து தன் குடும்பத்தினருக்கு பரிமாறும் சமையற்கலைஞர் நிபுணர் டி.எம்.எஸ், தான் இசையமைத்த படத்தில் தன் சொந்த மகன்களுக்கு வாய்ப்பு வழங்காமல் பாடலின் சுவைக்காக இன்னொரு பிரபல பாடகரின் பாட வைத்த இசையமைப்பாளர் டி.எம்.எஸ் என ஆச்சர்யமான அவரது பல பரிமாணங்களை இந்த தொடர் தொட்டுச்செல்கிறது.

கடந்த ஜனவரிமாதம் டி.எம்.சௌந்தரராஜனுக்கு மத்திய அரசு தலை வெளியிட்டு சிறப்பு செய்தது. இந்திய அளவில் இசைத்துறையில் சாதனை படைத்த 10 ஆளுமைகளுக்கு தபால் தலை வெளியிட்டு சிறப்புசேர்த்த இந்த பட்டியலில் இடம்பெற்ற ஒரே தென்னிந்திய கலைஞர் டி.எம்.எஸ் மட்டுமே. ஏற்கனவே மத்திய அரசால் பத்மஸ்ரீ விருதுபெற்றவர் டி.எம்.எஸ்.

இசையுலகத்தில் டி.எம்.எஸ் புகழ் என்றும் நிலைக்கும்!

- எஸ்.கிருபாகரன், வெ.நீலகண்டன்


எம்.ஜி.ஆரின் தொப்பியும்... 20 சுவையான சம்பவங்களும்...!


ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் தனது வெற்றிக்கு அடித்தளமான இரட்டை இலைச் சின்னத்தை இழந்து நிற்கிறது. அதிமுக பிளவுபட்டதால் தேர்தல் கமிஷன் கொடுத்த இந்த தண்டனையை இரண்டு அணிகளுமே அனுபவிக்கவேண்டியதாகியிருக்கிறது. ஆனால் ஆச்சர்யம் என்னவென்றால் இப்போது தினகரன் அணிக்கு வழங்கப்பட்டிருக்கும் சின்னமான தொப்பியும் கூட இரட்டை இலைக்கு ஈடாக எம்.ஜி.ஆரின் மனதுக்கு நெருக்கமான ஒரு சின்னம்தான். உண்மையில் இரட்டை இலையை விட கூடுதலாக அவரது வாழ்வில் பயணித்த ஒரு பொருள் தொப்பிதான்.

எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்க்கையில் இரட்டை இலைக்கு உள்ள முக்கியத்துவம் போல் அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் தொப்பிக்கு தனியிடம் உண்டு.

இரண்டு பொருட்களை நீங்கள் சொன்னால் ஒருவருக்கு எளிதாக எம்.ஜி.ஆரை நினைவுட்டிடமுடியும். அவை தொப்பியும் கறுப்பு கண்ணாடியும்! உண்மையில் எம்.ஜி.ஆர் எப்போது தொப்பி அணிய ஆரம்பித்தார் எனத்தெரியுமா...

எம்.ஜி.ஆருக்கு விதவிதமான தொப்பி கண்ணாடிகள் அணிவதில் சிறுவயதிலிருந்தே மிக விருப்பம். சினிமாவில் நடிக்கத்துவங்கிய காலத்தில் பொது இடங்களில் ரசிகர்களின் அன்புப்பிடியில் இருந்து தப்பிக்க தனது பாகவதர் கிராப் தலைமுடியை மறைக்க ஒரு துண்டை தலைப்பாகை போல தலையில் கட்டி லாவகமாக மறைத்துக்கொள்வார்.

திரைப்பட நடிகரானபின் தான் இளமையோடும் அழகோடும் தெரிவதற்கும் கதாபாத்திரத்தை வித்தியாசப்படுத்திக்காட்டவும் பல படங்களில் விதவிதமான தொப்பி அணிந்து நடித்திருக்கிறார். எம்.ஜி.ஆரைப்போல் வேறொரு நடிகருக்கு தொப்பி பொருந்தியிருக்குமா என்பது சந்தேகமே.

காவல்காரன் படத்தின்போதுதான் எம்.ஜி.ஆர் சுடப்பட்டிருந்தார். இதனால் படத்தின் பெரும்பாலான காட்சிகள் எம்.ஜி.ஆர் சுடப்பட்ட பின் எடுக்கப்பட்டவை. இதனால் பல காட்சிகளில் முகம் சோர்ந்தும் குரல்வன்மை கரகரவென கவர்ச்சியில்லாமலும் இருக்கும். படத்தில், “நினைத்தேன் வந்தாய் நுாறு வயது” பாடல் எடுக்கப்பட்ட அன்று எம்.ஜி.ஆர் வித்தியாசமாக தெரிய வெள்ளைத் தொப்பி அணிந்து சில காட்சிகளில் ஆடினார். பாடல்காட்சி முடிந்ததும் எம்.ஜி.ஆரிடம் அங்கிருந்தவர்கள், “அண்ணே, நீங்க தொப்பியில் நீங்க 10 வயசு குறைஞ்சி தெரியறீங்க” எனப் புகழ்ந்து தள்ள, தன் இமேஜ் மீது எப்போதும் பெரிய அக்கறை கொண்ட எம்.ஜி.ஆருக்கு வெட்கமாகப்போய்விட்டது. தன் முகப்பொலிவும் கவர்ச்சியும் குறைந்துபோயிருந்ததாக வருத்ததத்தில் இருந்தவருக்கு இது பெரும் மகிழ்ச்சியை தந்தது. இதன்பின்னர் வந்த படங்களில் எம்.ஜி.ஆர் விதவிதமாக தொப்பிகளை தேடிப்பிடித்து பயன்படுத்தினார்.

திரைப்படங்களில் மட்டும் அதுவரை தொப்பி பயன்படுத்திவந்தவருக்கு அடிமைப்பெண் திரைப்படம், நிரந்தரமாக தொப்பி அணியக் காரணமானது. படப்பிடிப்பிற்காக ஜெய்ப்பூர் சென்றிருந்தபோது பாலைவனத்தில் நடந்த படப்பிடிப்பினால் எம்.ஜி.ஆர் சோர்ந்துபோனார். படப்பிடிப்பை காணவந்த நண்பர் ஒருவர் முதன்முதலாக புஸ்குல்லா எனப்படும் வெள்ளைத்தொப்பியை கொடுத்தார். ஜெய்ப்பூரின் கடும் வெயிலை தொப்பியினால்தான் எம்.ஜி.ஆரால் சமாளிக்கமுடிந்தது. படப்பிடிப்பு முடிந்தபின் எம்.ஜி.ஆர் அதன் பயன்பாட்டைக் கருதி தொடர்ந்து தேர்தல் பிரசாரங்களிலும் வெயிலை சமாளிக்க பயன்படுத்த ஆரம்பித்தார். 'தொப்பி' எம்.ஜி.ஆர் வழக்கமான எம்.ஜி.ஆரை விட இளமையாக இருப்பதாக பாராட்டுக்கள் குவிய தொப்பியை அன்றுமுதல் நிரந்தரமாக்கிக்கொண்டார் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆருக்கு தொப்பி அடையாளமான வரலாறு இதுதான். கண்ணாடியை ஏற்கனவே அணிந்துவந்திருக்கிறார்.

பின்னாளில் எம்.ஜி.ஆர் இந்த தொப்பியின்றி வெளியிடங்களுக்கு வருவதையோ, படம் எடுப்பதையோ விரும்பியதில்லை. தொப்பி நிரந்தரமானபின் நெருக்கமான நண்பர்கள் குடும்ப உறவினர்கள் தவிர வேறுயாரிடமும் தொப்பியின்றி காட்சி தரமாட்டார். ஆரம்பத்தில் தொப்பிக் கடைகளில் ரெடிமேட் தொப்பிகளை அணிந்துவந்த எம்.ஜி.ஆர் ரசாக் என்ற தொப்பி தயாரிப்பாளரிடம் தனக்கென பிரத்யேகமாக தொப்பிகளை தயாரித்து தர பணித்தார். இவரே எம்.ஜி.ஆருக்கு இறுதிவரை தொப்பி தயாரித்துக் கொடுத்தார்.



எம்.ஜி.ஆரின் தொப்பி வழக்கத்துக்கு மாறான தன்மையில் தயாரிக்கப்படும். காஷ்மீர் போன்ற குளிர்பிரதேசங்களில் வளரும் வெள்ளை செம்மறி ஆட்டின் முடியை பதப்படுத்தி அதை பலகட்டங்களில் மேம்படுத்தி அவை தயாரிக்கப்பட்டன. இதனுள் 3 அடுக்குகளில் கேன்வாஸ் வைத்து தைக்கப்பட்டிருக்கும். சிறுசிறு வெளியே தெரியாத ஓட்டைகளினால் வெளிக்காற்று எளிதாக உள்ளே சென்றுவரும் என்பதால் தலையில் வியர்வையோ வேறு எந்த சங்கடங்களோ ஏற்படாது. அதிக எடை இல்லாத புஸ்புஸ் குல்லா தலையில் இருப்பதாகவே தெரியாது. அடிக்கடி தொப்பிகளை மாற்றும் இயல்புடைய எம்.ஜி.ஆர், மொத்தமாக அரை டஜன் தொப்பிகளை ஆர்டர் வரவழைத்து அவற்றில் தனக்கு பொருத்தமான 2ஐ மட்டும் எடுத்துக்கொள்வது வழக்கம். ஆனால் அத்தனைக்கும் பணம் கொடுத்துவிடுவார்.

பின்னாளில் அவர் திமுகவிலிருந்து பிரிந்தபின் இந்த தொப்பி பெரும்பிரச்னையானது அவருக்கு. திமுக மேடைகளில் அவரை தொப்பித்தலையா என தரம் தாழ்ந்து கிண்டலடித்தது திமுக. தலை வழுக்கையை மறைக்கவே அவர் தொப்பி அணிவதாக அவர்கள் விமர்சனம் செய்தனர். முதல்வரானபின் இன்னும் நிலைமை மோசம். ஆட்சியின் நிர்வாக விஷயங்களை விட்டுவிட்டு அவரது தொப்பிதான் அதிகம் விமர்சனத்திற்குள்ளானது. திமுக மேடைகளில் எம்.ஜி.ஆரை தொப்பித்தலையா என்று பேசி எம்.ஜி.ஆருக்கு எரிச்சலை தந்தனர்.

பல சமயங்களில் ரசிகர்கள் என்ற போர்வையில் மேடையில் எம்.ஜி.ஆருக்கு மாலை அணிவிப்பதுபோல் அவரது தொப்பியை கழல வைக்க முயன்றனர் திமுகவினர். மதுரையில் ஒருமுறை அவருக்கு மாலையணிவிக்கும் சாக்கில் அவரது தொப்பியை தட்டிவிட்டார் ஒரு திமுக மாணவர். ஆனால் படங்களில் மட்டுமல்ல நிஜமாகவும் தனக்கு ஸ்டண்ட் தெரியும் என்பதை அவரிடம் நிரூபித்தார் எம்.ஜி.ஆர். அதன்பிறகுதான் திமுகவினர் இந்த நேரடி சாகசத்திற்கு முற்றுப்புள்ளிவைத்தனர். ஆனால் மேடைகளில் தங்கள் தொப்பி விமர்சனத்தை கைவிடவில்லை.



இதுபற்றி எம்.ஜி.ஆரிடம் ஒருமுறை கேள்வி கேட்கப்பட்டபோது,“ நான் தொப்பி அணிவதை பலர் கேலியும் கிண்டலுமாக விமர்சனம் செய்றாங்க. அந்தநாள்ல நான் ஜிப்பா போட்டிருந்தேன். பின்னாளில் காலர் வெச்ச முழுக்கைச் சட்டை போட ஆரம்பிச்சேன். ஒருமுறை சினிமா நிகழ்ச்சியில கலந்துக்கிட்டப்ப சட்டையின் கையில கிழிஞ்சிடுச்சி. அதை மறைக்க முழுங்கை வரை மடிச்சிவிட்டேன். உடனே 'எம்.ஜி.ஆர் ரவுடியைப்போல சட்டையை சுருட்டிவிட்டிருக்கார்'னு சொன்னாங்க. இதுக்கு என்ன சொல்றது.

உடலமைப்புக்கு, பாதுகாப்புக்கு எதுதேவையோ அதைத் தேர்ந்தெடுப்பதில் தவறில்லை. சரி நானே ஒரு பேச்சுக்கு கேட்கிறேன். என் தலையில் முடியே இல்லைன்னு வெச்சிக்குவோம். அப்போ என்னை நீங்க எம்.ஜி.ஆர் னு ஏத்துக்கமாட்டீங்களா..? வடநாட்டில் இளமையான நடிகர்கள்கூட தலையில் பொய்முடி(விக்) வெச்சிக்கிட்டுத்தான் வெளியே வர்றாங்க. அதுக்கு என்ன சொல்றீங்க?... இன்னொருத்தருடைய வற்புறுத்தலுக்காக மற்றவங்க என்ன சொல்வாங்களோ, என்ன நினைப்பாங்களோங்கறதுக்காக நம்மை மாத்திக்கக்கூடாது. அத்தியாவசிய தேவைகளை குறைச்சிக்கக்கூடாது. ” என எதிர்கட்சிகளுக்கு பதிலடி தந்தார் எம்.ஜி.ஆர்.
தன் சினிமா கவர்ச்சியினால்தான் எம்.ஜி.ஆர் தேர்தலில் வென்றார் எனக்கருதி அவரது இளமை இமேஜை அடித்துநொறுக்குவது என்பதே எம்.ஜி.ஆர் மீதான இந்த தனிப்பட்ட தாக்குதலுக்கு காரணம்.

திமுகவின் குடும்ப இதழ் ஒன்றில் தலைமைச் செயலகத்தில் காலையிலும் மாலையிலும் எடுக்கப்பட்ட இருபடங்களை வெளியிட்டு எம்.ஜி.ஆரின் கிருதா வித்தியாசத்தைக் கூறி முதல்வருக்கு மட்டும் எப்படி சில மணிநேரங்களில் இத்தனை நீளமாக தலைமுடி வளர்கிறது என கேள்வி எழுப்பியிருந்தது திமுக. இப்படி எம்.ஜி.ஆரின் மீதான தொப்பி விமர்சனம் எல்லையற்றுப்போனது. இறுதியாக தொப்பி அரசியல் மக்களிடையே எடுபடாததால் கால ஓட்டத்தில் அந்த விமர்சனத்தை நிறுத்திக்கொண்டது திமுக.



ஆனால் திமுகவின் இந்த அஸ்திரத்தை திமுகவுக்கு எதிராகவே செயல்படுத்திய சந்தர்ப்பம் ஒன்று நிகழ்ந்தது. 1983 ம் ஆண்டு மதுரை அரசு விருந்தினர் மாளிகையில் எம்.ஜி.ஆர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அன்றைக்கு பரபரப்பான அரசியல் சூழலில் எதிர்கட்சியான திமுக எம்.ஜி.ஆர் அரசு மீது பெரும் குற்றச்சாட்டு ஒன்றை வைக்கப்போவதாக எம்.ஜி.ஆருக்கு உளவுத்துறையிலிருந்து தகவல் போனது. அதேசமயம் தொப்பி பற்றிய தாக்குதல் உச்சத்தில் இருந்தநேரம் அது. பேட்டியளித்துக்கொண்டிருந்த எம்.ஜி.ஆரிடம் கருணாநிதியின் குற்றச்சாட்டு குறித்து நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார். ஆனால் எம்.ஜி.ஆர் பதிலைக் கூறாமல் ஒரு காரியம் செய்தார். மெல்ல தன் தலையிலிருந்து தொப்பியை கழற்றி மேஜைமீது வைத்தார். அவ்வளவுதான் அடுத்த நொடி புகைப்பட .ஃப்ளாஷ்கள் மின்னத் துவங்கின. மறுநாள் செய்தித்தாள்களில் தலைப்புச்செய்தி எம்.ஜி.ஆர் 'தலைச் செய்தி'தான். எம்.ஜி.ஆரின் தொப்பியற்ற தோற்றத்தை வெளியிட்ட பத்திரிகைகள் கருணாநிதியின் குற்றச்சாட்டை கடைசிப்பக்கத்தில் முக்கியத்துவம் இன்றி வெளியிட்டன. அதுதான் எம்.ஜி.ஆரின் சாதுர்யம்.

1984 ம் ஆண்டு தஞ்சை சென்ற எம்.ஜி.ஆர் ராஜராஜசோழன் அரண்மனைக்கு சென்றபோது மயங்கிவிழுந்தார். அடுத்த சில தினங்களில் அவருக்கு உடல்நிலை பாதித்தது. அப்பல்லோவிலும் பின்பு அமெரிக்காவிலும் சிகிச்சையளிக்கப்பட்டபோது அவரது மூளையில் கட்டி இருந்தது தெரியவந்தது. நீண்டகாலமாக தலையில் தொப்பி அணிந்ததால் இது உருவானதாக சொல்லப்பட்டது. அமெரிக்காவில் சிகிச்சை பெற்ற சமயம் தன் இமேஜை கட்டிக்காப்பதில் பெரும் அக்கறை கொண்ட எம்.ஜி.ஆருக்கு ஒரு சோதனை வந்தது.



எம்.ஜி.ஆர் உயிருடன் இல்லை என்பதாக தமிழகத்தில் பரவிய வதந்தியை முறியடிக்க அதிமுக தலைவர்கள் எம்.ஜி.ஆரின் பேசுவதும் சிரிப்பதுமாக வீடியோ எடுக்க திட்டமிட்டனர். வீடியோ படத்தில் தொப்பி அணியக்கூடாது என்ற மருத்துவர்களின் அறிவுறுத்தலில் வழக்கமான தோற்றத்தில் எம்.ஜி.ஆரை படம்பிடித்தது காமிரா.

அழகும் உடல்கட்டும் கொண்ட எம்.ஜி.ஆர் பரிதாபமாக நம் வீட்டுப்பெரியவர்போல படுக்கையில் படுத்தபடி பேப்பர் படித்த காட்சி தாய்மார்களை இன்னும் கருணைப்படவைத்தது. அந்த தேர்தலில் எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் படுத்தபடியே வென்றார்.
1987 ம்ஆண்டு டிசம்பர் மாதம் 24ந்தேதி அதிகாலை தமிழகத்தை கண்ணீர் கடலில் மூழ்கவைத்தார் எம்.ஜி.ஆர். அரைநுாற்றாண்டு காலம் தமிழகத்தின் தவிர்க்கவியலாத தலைவராக வாழ்ந்து மறைந்த எம்.ஜி.ஆரின் உடலோடு காலம் முழுக்க அவர் நேசித்து அணிந்து மகிழ்ந்த தொப்பியையும் சேர்த்து அடக்கம் செய்தனர்.



தேர்ந்த ஒரு ஓவியரால் எம்.ஜி.ஆரை வரைய ஓரிரு நிமிடங்கள் போதும். ஒரு தொப்பியையும் கண்ணாடியையும் வரைந்தால் அது உங்களுக்கு எம்.ஜி.ஆராகவே தெரியும். ஆனால் இந்த இரு அடையாளங்களுமின்றி எம்.ஜி.ஆரை அடையாளப்படுத்த எக்காலத்திற்குமான ஒர் அடையாளம் உண்டு. அது எம்.ஜி.ஆர் தன் தலைக்கு அணிந்த தொப்பி அல்ல; தன் உள்ளத்தில் அணிந்த மனிதநேயம்!

- எஸ்.கிருபாகரன்

சென்னை தனியார் பள்ளியில் 2021-ல் எல்.கே.ஜி படிக்க, இப்போது அட்மிஷன்


சென்னை அடையாறில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 2021-ம் ஆண்டுக்கான எல்.கே.ஜி அட்மிஷன் துவங்கியுள்ளது. 
Sishya school admission
மார்ச் மாதத்தின் முடிவில் இருக்கிறோம். இதனால் தங்களது குழந்தைகளை பள்ளிகளில் சேர்ப்பதற்காக, பெற்றோர்கள் பள்ளிகளுக்கு படையெடுத்து வருகின்றனர். இந்நிலையில், சென்னை, அடையாறில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 2021-ம் ஆண்டுக்கான எல்.கே.ஜி அட்மிஷன் துவங்கியுள்ளதாக, பள்ளி இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு 2020-ம் ஆண்டு வரை அட்மிஷன் முடிந்து விட்டது. இதையடுத்து, தற்போது பிறக்கும் குழந்தைகளுக்கு இந்த ஆண்டே அட்மிஷன் வாங்கினால்தான் 2021-ம் ஆண்டில் எல்.கே.ஜி படிக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.
இதற்காக அட்மிஷனுக்காக நேர்காணல் (பெற்றோருக்கு) ஒவ்வொரு வாரம் புதன் கிழமையும் காலை 9 மணி முதல் 1 மணி வரை நடக்கும் என்றும், இதற்கான அப்பாயின்மென்ட்டை, இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றும் அந்தப் பள்ளி கூறியுள்ளது.
இந்தப் பள்ளியில் இதுபோன்று முன்பே அட்மிஷன் துவங்குவது இது புதிது அல்ல. ஏற்கேனவே கடந்த ஆண்டு, 2019-ம் ஆண்டுக்கான அட்மிஷன் முடிந்து விட்டது 2020-ம் ஆண்டு எல்.கே.ஜிக்கு விண்ணப்பிக்கலாம் என்று அந்த பள்ளி அறிவித்து இருந்தது.

NEWS TODAY 25.12.2025