Monday, April 3, 2017

காஷ்மீரில் 9 கி.மீ. நீளமுள்ள, ஆசியாவிலேயே மிக நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்துவைத்தார். 
 
ஜம்மு,

காஷ்மீரில் 9 கி.மீ. நீளமுள்ள, ஆசியாவிலேயே மிக நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்துவைத்தார்.

ரூ.3,720 கோடி காஷ்மீரின் இரு தலைநகரங்களான ஸ்ரீநகரையும், ஜம்முவையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் செனானி–நஷ்ரி இடையே 9.2 கி.மீ. தூரத்துக்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த 2011–ம் ஆண்டு தொடங்கியது. இமயமலை அடிவாரத்தில் 1200 மீட்டர் உயரத்தில் ரூ.3,720 கோடி செலவில் அமைக்கப்பட்ட இந்த சுரங்கப்பாதை ஆசியாவிலேயே மிக நீளமானது ஆகும்.
சுரங்கப்பாதை பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து அதன் திறப்பு விழா நேற்று நடந்தது. இதற்காக உதம்பூர் மாவட்டத்தில் நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு, இந்த சுரங்கப்பாதையை திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். பின்னர் அவர் சிறப்பு வாகனம் மூலம் அந்த சுரங்கப்பாதையில் சிறிது தூரம் சென்று வந்தார்.

விழாவில் மத்திய நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்காரி, பிரதமர் அலுவலக இணை மந்திரி ஜிதேந்திர சிங், காஷ்மீர் முதல்–மந்திரி மெகபூபா முப்தி, துணை முதல்–மந்திரி நிர்மல்குமார் சிங், கவர்னர் என்.என்.வோரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

உலகத்தரம் வாய்ந்தது நாட்டிலேயே முதல் முறையாக உலகத்தரம் மிகுந்த பாதுகாப்பு அம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த சுரங்கப்பாதையில் ஒருங்கிணைந்த சுரங்க கட்டுப்பாட்டு அமைப்பு, கண்காணிப்பு, சிக்னல்கள், காற்றோட்ட வசதிகள், மின்னணு தொழில்நுட்பம், தீயணைப்பு வசதிகள் உள்ளிட்ட அனைத்து விதமான பாதுகாப்பு அம்சங்களும் அடங்கி உள்ளன. இவை அனைத்தும் தானியங்கி முறையில் இணைக்கப்பட்டு உள்ளன.
9.2 கி.மீ. நீளமுள்ள இருவழி பிரதான சுரங்கப்பாதையுடன், அதே அளவு நீளமுள்ள மற்றொரு சுரங்கப்பாதை (அவசர காலங்களில் வெளியேற), ஒவ்வொரு 300 மீட்டரிலும் குறுக்குப்பாதையும் அமைத்திருப்பது இதன் சிறப்பம்சமாகும். மேலும் அனைத்து விதமான இயற்கை இடர்பாடுகளை தாங்கும் சக்தி கொண்டதாகவும் இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு உள்ளது.

பயண நேரம் குறையும் செனானி–நஷ்ரி இடையே சாலை வழியான தொலைவு 41 கிலோ மீட்டர் ஆகும். ஆனால் இந்த தொலைவை வெறும் 10.9 கிலோ மீட்டராக இந்த சுரங்கப்பாதை குறைத்து உள்ளது. இதன் மூலம் இரு தலைநகர்களுக்கு இடையிலான பயண நேரம் சுமார் 2½ மணி நேரம் வரை குறையும். பனிச்சரிவு, நிலச்சரிவு போன்ற இடர்பாடுகளால் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சூழலில், இந்த சுரங்கப்பாதையின் மூலம் சுமுக போக்குவரத்துக்கு வழி ஏற்பட்டு உள்ளது.

சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பும் இன்றி அமைக்கப்பட்டு உள்ள இந்த சுரங்கப்பாதை மூலம் நாள்தோறும் சுமார் ரூ.27 லட்சம் அளவிலான எரிபொருள் மிச்சமாவதுடன், சுற்றுலா வசதியும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சுரங்கப்பாதை மூலம் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதி, நாட்டின் மற்ற பகுதிகளுடன் இணைக்கப்படும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.

பிரிவினைவாதிகள் போராட்டம் இதற்கிடையே பிரதமரின் காஷ்மீர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்த பிரிவினைவாத இயக்கங்கள், பள்ளத்தாக்கு பகுதியில் நேற்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து இருந்தன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

ஸ்ரீநகர் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டு இருந்தன. சாலைகளில் அரசு போக்குவரத்து குறைந்திருந்தது. எனினும் ஸ்ரீநகரில் உள்ள ஞாயிறு சந்தையில் பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டு இருந்தன. மேலும் சாலைகளில் தனியார் வாகனங்களும் வழக்கம் போல இயங்கின.

பிரதமர் வருகை மற்றும் பிரிவினைவாதிகளின் முழு அடைப்பு போராட்டம் காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக உதம்பூரில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
காட்டுப்பாக்கத்தில் மதுக்கடையை மூடக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
 
பூந்தமல்லி,

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள மதுக்கடைகளை மூடும்படி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி தமிழகத்தில் நெடுஞ்சாலையோரம் உள்ள பெரும்பாலான மதுக்கடைகள் மூடப்பட்டு உள்ளன.

சென்னை போரூரை அடுத்த காட்டுப்பாக்கத்தில் மவுண்ட்–பூந்தமல்லி சாலையில் அரசு மதுபானக்கடை மற்றும் பார் உள்ளது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி இந்த மதுக்கடையையும் மூடவேண்டிய சூழல் ஏற்பட்டது.
இதை தடுக்க நெடுஞ்சாலையோரம் உள்ள மதுக்கடையின் முன்பக்க வாசலை அடைத்து விட்டு, பின் பகுதியில் செந்தூர்புரம் மெயின் ரோட்டில் வழி அமைத்து அந்த மதுக்கடை தற்போது செயல்பட்டு வருகிறது.

பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் இதற்கு அந்த பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த மதுக்கடையை மூட வேண்டும் என்று வலியுறுத்தி காட்டுப்பாக்கம், லட்சுமி அவென்யூ பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 100–க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மதுக்கடையின் நுழைவு வாயிலை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:–
இந்த மதுக்கடை மூட வேண்டியது. ஆனால் இங்கு பார் நடத்தவேண்டும் என்று இந்த மதுக்கடையை மூடவிடாதபடி டாஸ்மாக் அதிகாரிகளின் உதவியோடு நெடுஞ்சாலை ஓரம் உள்ள வழியை அடைத்து விட்டு, குடியிருப்புகள் நிறைந்த லட்சுமி அவென்யூ பகுதி வழியாக பாரின் சுற்றுச்சுவரை உடைத்து மதுக்கடைக்கு செல்ல வழி அமைத்தனர்.

குற்ற சம்பவங்கள் ஆனால் இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் தற்போது செந்தூர்புரம் மெயின்ரோடு வழியாக மதுக்கடைக்கு செல்ல வழி அமைத்து உள்ளனர். இந்த பகுதியில் ஏராளமான குடியிருப்புகள், அரசு உயர் நிலைப்பள்ளி, கடைகள் உள்ளன.

சுற்று வட்டார பகுதிகளில் உள்ள மதுக்கடைகள் மூடப்பட்டதால் மதுபிரியர்கள் இந்த கடைக்கு படையெடுத்து வருவார்கள். இதனால் இந்த பகுதியில் பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெற வாய்ப்புகள் உள்ளது. இதனால் இந்த பகுதி பெண்கள், குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள். எனவே இந்த மதுக்கடையை மூட வேண்டும். இல்லாவிட்டால் பல்வேறு போராட்டங்களில் ஈடுபடுவோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

போலீசார் சமரசம் இதுபற்றி தகவல் அறிந்து வந்த பூந்தமல்லி போலீசார், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை சமரசம் செய்தனர். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.
பொதுமக்கள் ஒரு புறம் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்த போதே, மற்றொருபுறம் மதுக்கடையில் போலீஸ் பாதுகாப்புடன் மதுபானம் விற்பனை நடைபெற்றது.
தலையங்கம்
இனி ‘நீட்’ தேர்வு கட்டாயம்
மிழகம் முழுவதும் பிளஸ்-2 தேர்வு கடந்த 31-ந் தேதி முடிவடைந்துவிட்டது. பிளஸ்-2 தேர்வு எழுதிமுடித்த பெரும்பாலான மாணவர்கள் அடுத்து நாம் என்னசெய்வோம் என்ற ஒரு திட்டவட்டமான முடிவுக்குவந்து அதற்கான முயற்சிகளை தொடங்கிவிட்டநிலையில், ‘பயாலஜி’ பாடம் எடுத்து படித்த மாணவர்கள் மட்டும் தங்கள் கனவுபடிப்பான “எம்.பி.பி.எஸ்.” என்ற மருத்துவப்படிப்பு, பி.டி.எஸ். என்ற பல் மருத்துவப்படிப்புகளில் சேர்வதற்கு ‘நீட்’ என்று கூறப்படும் நுழைவுத்தேர்வு அடிப்படையில்தான் சேரவேண்டுமா?, அல்லது இந்த ஆண்டு ‘நீட்’ தேர்வு இருக்காது என்று அரசியல் தலைவர்கள் கொடுத்த உறுதிமொழிப்படி, பிளஸ்-2 மார்க்குகளின் அடிப்படையில்தான் சேரவேண்டுமா? என்பதில் ஒரு தெளிவான முடிவில்லாமல் குழம்பிபோய்க் இருக்கிறார்கள். கடந்த மார்ச் 1-ந் தேதியே ‘நீட்’ தேர்வுக்காக விண்ணப்பம் அனுப்ப கடைசிநாள் முடிந்துவிட்டது. இன்றுவரை ‘நீட்’ தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்குகிடைக்கும் என்ற நம்பிக்கை நிச்சயமாக இல்லை. இனி மாணவர்களை ‘நீட்’ தேர்வுக்கு தயார்படுத்தவேண்டிய கடமை தமிழக அரசுக்கு இருக்கிறது.

தமிழக மாணவர்கள் மிக புத்திசாலிகள். இதுவரை மருத்துவப்படிப்பு கவுன்சிலிங்குக்கு ஏறத்தாழ 38 ஆயிரம் மாணவர்கள்தான் விண்ணப்பம் அனுப்புவது வழக்கம். ஆனால், ‘நீட்’ தேர்வுக்கு 88 ஆயிரத்து 431 பேர் விண்ணப்பித்துள்ளார்கள். எம்.டி., எம்.எஸ். போன்ற பட்டமேற்படிப்பு வகுப்புகளுக்காக தமிழக அரசு விண்ணப்பங்களை ‘நீட்’ தேர்வின் அடிப்படையில் பெறத்தொடங்கிவிட்டது. இதேபோலத்தான், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கும் ‘நீட்’ தேர்வின் அடிப்படையில் விண்ணப்பப்பாரங்களை விரைவில் கோரப்போகிறது. உடனடியாக இனியும் தாமதம்செய்யாமல் கல்வித்துறை ‘நீட்’ பயிற்சிவகுப்புகளை ஆங்காங்கே பரவலாகத்தொடங்கி, இன்னும் ஒருமாதத்தில் ‘நீட்’ தேர்வு எழுதவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் தமிழக மாணவர்களுக்கு உதவவேண்டும். இந்த ஆண்டு மருத்துவப்படிப்புகளுக்கு ‘நீட்’ தேர்வு இருப்பதுபோல, அடுத்த ஆண்டு முதல் என்ஜினீயரிங் படிப்புகளுக்கும் ‘நீட்’ தேர்வு வர இருக்கிறது. ‘நீட்’ தேர்வை தமிழிலும் எழுதலாம். தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், இந்தியா முழுவதிலும் உள்ள கல்லூரிகளிலும் சேரலாம். மாணவர்களிடம் பிளஸ்-1 வகுப்பில் சேரும்போதே பொறியியல் படிப்புக்கும், மருத்துவப்படிப்புக்கும் ‘நீட்’ தேர்வு உண்டு என்பதை வெளிப்படையாக சொல்லிவிடவேண்டும். பிளஸ்-1, பிளஸ்-2 பாடங்களை அந்தந்த ஆண்டு முழுமையாக கற்றுக்கொடுத்துவிடவேண்டும்.

‘நீட்’ தேர்வு என்பது சி.பி.எஸ்.இ. என்று கூறப்படும் மத்திய கல்வித்திட்டத்தின்கீழ் 11-வது, 12-வது வகுப்பு பாடங்களிலிருந்து கேட்கப்படும் கேள்விகளைக் கொண்டதாகும். தமிழக கல்வித்திட்டத்தில் படிக்கும் மாணவர்களால் நிச்சயமாக இந்தத்தேர்வை எழுதி எளிதில் வெற்றிபெற முடியாது. எனவே, சி.பி.எஸ்.இ. பாடத்திட்டங்களுக்காக என்.சி.இ.ஆர்.டி. என்று கூறப்படும் ‘தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில்’ வெளியிடும் பாடப்புத்தகங்களை தமிழ்நாட்டிலும் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு பயன்படுத்தும் வகையில் உடனடியாக பாடத்திட்டங்களை மாற்றவேண்டும். என்.சி.இ.ஆர்.டி பாடப்புத்தகங்களை தமிழில் மொழிபெயர்க்கும் வேலையை ஏராளமான மொழிபெயர்ப்பாளர்களைக் கொண்டு தொடங்கி, அதன் அடிப்படையில் பிளஸ்-1, பிளஸ்-2 பாடப்புத்தகங்களை அச்சிடத்தொடங்கவேண்டும். 
 
இந்த விஷயத்தில் இந்த ஆண்டும் சரி, வரப்போகும் ஆண்டுகளிலும் சரி, மாணவர்களை ‘நீட்’ தேர்வுக்கு தயாராக்கும் வகையில், கல்வித்தரத்தை உயர்த்தும் முழுப்பொறுப்பு கல்வித்துறைக்குத்தான் இருக்கிறது. 17-ம் நூற்றாண்டில் அமெரிக்காவின் சுதந்திர பிரகடனத்தையும், அரசியல் சட்டத்தை எழுதுவதிலும் பெரும்பணியாற்றிய அறிஞர் பெஞ்சமின் பிராங்க்ளின், “தயார்படுத்திக்கொள்ள தவறினால், தவறுவதற்கு தயார்படுத்திக்கொள்கிறாய்” என்று சொன்னதுபோல, “நீட் தேர்வை எழுத மாணவர்களை கல்வித்துறை தயார்படுத்திக்கொள்ள தவறினால், அவர்கள் இந்த தேர்வில் தவறுவதற்கு தயார்படுத்தினார்கள்” என்றுதான் தமிழகம் சொல்லும்.

ரசிகர்களை புறக்கணித்தார் நடிகர் ரஜினி
 
'நடிகர் ரஜினி அரசியலுக்கு வர வேண்டும்' என, அவரது ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகம் முழுவதிலும் இருந்து, சென்னையில் குவிந்த ரசிகர்கள், அவரை சந்திக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.


நடிகர் ரஜினி, ஒவ்வொரு மாதமும், இரண்டா வது ஞாயிறு அன்று ரசிகர்களை சந்திப்பது வழக்கம். 1998ல், சந்திப்பு முடிந்து திரும்பிய சில ரசிகர்கள், விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். இதனால், ரசிகர்கள் சந்திப்பை நிறுத்தினார். பின், பிறந்த நாளின் போது மட்டும், வீட்டிற்கு வரும் ரசிகர்களை சந்தித்தார். இந்த சந்திப்பு, 2008 வரை நடந்தது.

இந்நிலையில், நடிகர் ரஜினி வரும், 12 முதல், 17 வரை, ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுக்கிறார். இதற்கான ஆலோசனை கூட்டம், கோடம்பாக்கம், ராகவேந்திரா திருமண மண்டபத்தில், ரசிகர் மன்ற பொறுப்பாளர் சத்தியநாராயணா மற்றும் நிர்வாகி சுதாகரன் தலைமையில், நேற்று நடந்தது.
அதில், மாவட்ட வாரியாக, ரசிகர்களை ரஜினி சந்திக்கும் நாட்கள்; சந்திப்பின் போது, ரசிகர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து, விவாதிக்கப்பட்டது.

ரஜினியை சந்திக்க வருவோருக்காக, நிர்வாகி களிடம், அதற்கான டோக்கன்கள் வழங்கப்பட்டன. ஆலோசனை கூட்டத்திற்கு ரஜினி வருவார் என, கூறப்பட்டிருந்தது. ஆனால், அவர் பங்கேற்காததால், ரஜினியை காண ஆவலோடு வந்த ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

இதுகுறித்து, ரசிகர்கள் கூறியதாவது: தமிழகத்தின் தற்போதைய சூழலில், மக்களின் தேவை அறிந்து செயல்பட, ரஜினியால்மட்டுமே முடியும். இனியும் தாமதிக்காமல், புதுக்கட்சி அறிவிப்பை அவர் வெளியிட வேண்டும். 20 ஆண்டுகளுக்கு பின், ரஜினியை சந்தித்து புகைப்படம் எடுக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

அப்போது, அரசியல் கட்சி துவக்க வேண்டும் என, வலியுறுத்து வோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -
 23 'டாஸ்மாக்' மூடல் : சுத்தமானது கும்பகோணம்

தஞ்சாவூர்: '-கோவில் நகரம்' என அழைக்கப்படும் கும்பகோணத்தில் இருந்த, 23 டாஸ்மாக் மதுக்கடைகளும் மூடப்பட்டுள்ளன. சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலையோரம் உள்ள, 'டாஸ்மாக்' கடைகள் மூடப்பட்டன. இதன்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில், 124 கடைகள் மூடப்பட்டு விட்டன.கோவில்கள் நிறைந்த கும்பகோணத்திற்கு, தமிழகம் மட்டும் இல்லாமல், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும், ஏராளமான பக்தர்கள் தினமும் வந்து செல்கின்றனர். இங்கு வீதிக்கு வீதி டாஸ்மாக் கடைகள் இருந்ததால், 'குடி'மகன்களின் தொந்தரவால், பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன.தற்போது, கும்பகோணம் நகரில் இயங்கி வந்த, 23 மதுக்கடைகளும் மூடப்பட்டன. இதனால், கும்பகோணம், மதுக்கடைகளே இல்லாத நகரம் என்ற சிறப்பை பெற்றுள்ளது.
 'அனைத்து பாடப்பிரிவினரும் சி.ஏ., படிப்பில் சேரலாம்'

பிளஸ் 2வில், எந்த பிரிவு மாணவர்களும், சி.ஏ., மற்றும் கம்பெனி செக்ரட்ரிஷிப் படிப்புகளில் சேரலாம்' என, கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
'தினமலர்' மற்றும் எஸ்.ஆர்.எம்., பல்கலை இணைந்து வழங்கும், வழிகாட்டி நிகழ்ச்சியில், இரண்டாம் நாளான நேற்று, இன்ஜினியரிங், ஆட்டோமேஷன், ஐ.டி., துறை மற்றும் சி.ஏ., என்ற ஆடிட்டர் படிப்பு குறித்தும், 'நீட்' தேர்வுக்கு தயாராகும் முறை குறித்தும், கல்வியாளர்கள் ஆலோசனை அளித்தனர்.

ஆடிட்டர் சரவண பிரசாத்: ஆடிட்டிங் துறையில் வேலைவாய்ப்புகளை பெற, சி.ஏ., - ஐ.சி.டபிள்யூ.ஏ., மற்றும் கம்பெனி செக்ரட்ரிஷிப் படிப்பில் ஒன்றை, படிக்க வேண்டும். இந்த மூன்று படிப்புகளும், பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்ட சிறப்பு சட்டத்தின்படி நடத்தப்படுகின்றன. இந்த படிப்புகளை, தொலைநிலையில் மட்டுமே படிக்க முடியும். ஆடிட்டிங் துறைக்கு கடினமான பயிற்சி அவசியம். பயிற்சி எடுத்தால், தேர்வில் எளிதாக வெற்றி பெறலாம். முதலில் தகுதி தேர்வும், பின், இடைநிலை தேர்வும், பின், இறுதி நிலை தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும். தேர்ச்சி பெறுவோர், ஓர் ஆண்டு நிறுவன பயிற்சியை மேற்கொள்ள, சி.ஏ., அமைப்பு ஏற்பாடு செய்கிறது. பயிற்சிக்கு பின், கேம்பஸ் மூலம் வேலை வாய்ப்பு அளிக்கப்படும். முதல் வேலைவாய்ப்பிலேயே, மாதம், 50 ஆயிரம் முதல், 75 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் பெறலாம். அதேபோல, பி.காம்., ஹானர்ஸ் உடன், ஒரே ஆண்டில், சி.ஏ., - ஐ.சி.டபிள்யூ.ஏ., மற்றும் கம்பெனி செக்ரட்ரிஷிப் படிப்புகளை படிக்கவும் வாய்ப்பு உள்ளது.

கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி: எந்த கோர்ஸ் படித்தாலும், தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப பாடத்திட்டத்தில் மாற்றம் வர வேண்டும். மாணவர்கள் வெறும் பாட புத்தகத்தை படிக்காமல், தொழிற்சாலை, தொழில் நிறுவனங்களுக்கு என்ன தேவையோ, அதை படித்தால் மட்டுமே வேலை கிடைக்கும். படிக்கும் போதே திறனை வளர்த்து கொள்ள வேண்டும். எதில், வாய்ப்பு, வளர்ச்சி என்பதை தெரிந்து, படிப்புகளை தேர்வு செய்யுங்கள். இன்ஜினியரிங் துறையில் மட்டுமே, ஆண்டுக்கு, மூன்று லட்சம் வேலை வாய்ப்புகள் உறுதியாக கிடைக்கின்றன. படிக்கும் போதும், வேலையில் சேர்ந்த பிறகும் போராட்டங்களில் ஈடுபடாதீர்கள். சமீபத்தில், தமிழகத்தில் போராட்டங்களில் ஈடுபட்ட, 458 பேரை, கார்ப்பரேட் நிறுவனங்கள் வேலையை விட்டு வெளியேற்றி உள்ளன. படிப்புக்கு முக்கியத்துவம் அளிப்பது போல, கல்லுாரியை தேர்வு செய்வதிலும் கவனம் செலுத்த வேண்டும்.இவ்வாறு கல்வியாளர்கள் பேசினர்.
 ஆர்.கே.நகருக்கு 'அள்ளப்பட்ட' வேலூர் பிரியாணி மாஸ்டர்கள்

வேலுார்: ஆர்.கே.நகருக்கு பிரியாணி மாஸ்டர்களை அழைத்து சென்றதால், வேலுார் மாவட்டத்தில், மாஸ்டர்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. எப்போது, எங்கு இடைத்தேர்தல் நடந்தாலும், அங்குள்ள கட்சியினர், தொகுதி மக்களுக்கு பிரியாணி சமைத்து போட, வேலுார் மாவட்டத்தில் இருந்து தான், பிரியாணி மாஸ்டர்களை அழைத்து செல்வது வழக்கம்.இதன்படி, தற்போது, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு, தினகரன் அணி சார்பில், வேலுார் மேற்கு மாவட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள், 102 பிரியாணி மாஸ்டர்களை அழைத்துச் சென்றுள்ளனர். அதேபோல், பன்னீர் அணி சார்பில், 68 பிரியாணி மாஸ்டர்களை அழைத்துச் சென்றுள்ளனர்.

வேலுார் மாவட்ட பிரியாணி மாஸ்டர்கள் நலச்சங்க தலைவர் ஆம்பூர் அபுபக்கர் கூறுகையில், ''இரு அணியினரும் போட்டி போட்டு, பிரியாணி மாஸ்டர்களை அழைத்துச் சென்றதால், வேலுார் மாவட்டத்தில், பிரியாணி மாஸ்டர்களுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது; இருக்கும் ஒரு சிலரும் கூடுதல் சம்பளம் கேட்கின்றனர்,'' என்றார்.

NEWS TODAY 14.02.2026