Tuesday, April 11, 2017

டாஸ்மாக் கடையை மூடக்கோரி குடந்தையில் கடையடைப்பு

தஞ்சாவூர்: கும்பகோணத்தில், பொதுமக்கள் எதிர்ப்பை மீறி, திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூடக்கோரி வர்த்தகர்கள் நேற்று கடையடைப்பு நடத்தினர்.

சுப்ரீம் கோர்ட் உத்தரவை அடுத்து, கும்பகோணத்தில், 23 டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. இதையடுத்து, டாஸ்மாக் இல்லாத நகரமாக கும்பகோணம் விளங்கியது. இந்நிலையில், சக்கரபாணி கோவில் தெற்கு வீதியில், கடந்த, 8ம் தேதி டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது.இதனால், கும்பகோணத்தின் வர்த்தக பகுதியாக விளங்கும் பெரிய தெரு பகுதியில், அமைதி பாதிக்கப்படும் என கருதிய வர்த்தகர்கள் மற்றும் சுமை துாக்கும் தொழிலாளர்கள் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். அதன்படி, நேற்று பெரிய தெருவில் உள்ள, 200 கடைகளும் முழுமையாக நாள் முழுவதும் அடைக்கப்பட்டு இருந்தன. பின், வர்த்தகர்கள், சுமை துாக்கும் பணியாளர்கள், பெரிய தெருவிலிருந்து ஊர்லமாக, சப் - -கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று முறையிட்டனர். இதைத் தொடர்ந்து, திறக்கப்பட்ட டாஸ்மாக் கடை நேற்று மூடப்பட்டது

இதே போல், சுந்தரபெருமாள் கோவில் பகுதி யில் சுடுகாடு அருகே, புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதை கண்டித்து, அப்பகுதி மக்கள் கும்பகோணம் - - தஞ்சாவூர் சாலையில் மறியலில் நேற்று ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து, சாலை மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.
பல கோடி பணம் எப்படி?   அமைச்சரிடம் கிடுக்கிப்பிடி 

DINAMALAR

பல கோடி பணம் பட்டுவாடா மற்றும் தேர்தல் பேரம் தொடர்பாக, வருமான வரித்துறை அலுவலகத்தில், நேற்று, அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் நடிகர் சரத்குமாரிடம், அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.





அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடுகள், எம்.எல்.ஏ., விடுதி உள்ளிட்ட, 38 இடங்களில், சமீபத்தில், வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. அதில், அவரது கணக்காளர் சீனிவாசன் வீட்டில் இருந்து, வாக்காளர்களுக்கு தலா, 4,000 ரூபாய் தரப்பட்ட பட்டியல் கிடைத்தது. அதன் மூலம், அமைச்சர்கள் ஜெயகுமார், செங்கோட்டையன் மற்றும் முதல்வர் பழனிசாமி மூலமாக, 89 கோடி ரூபாய் பட்டுவாடா செய்ததது தெரிய வந்துள்ளது.

8 மணி நேரம்

இந்நிலையில், வருமான வரித்துறை அனுப்பிய சம்மனை ஏற்று, சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள, வருமான வரி புலானாய்வு அலுவலகத்தில், விஜயபாஸ்கர், நேற்று காலை, 11:15 மணிக்கு ஆஜரானார்.அவரைத் தொடர்ந்து, தினகரனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய நடந்த, ஏழு கோடி ரூபாய் பேரம் தொடர்பாக விளக்கம் அளிக்க, 11:30 மணிக்கு சரத்குமார் ஆஜரானார்.
அவர்களுக்கு முன், முன்னாள் எம்.பி., சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆஜராகியிருந்தார்.இதில், விஜயபாஸ்கரிடம், 89 கோடி ரூபாய் பணம் எங்கிருந்து வந்தது என்பது தொடர்பாக, நான்கு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடந்தது; விசாரணை முடிந்து, அவர் மாலை, 3:45 மணிக்கு வெளியேறினார்.

அப்போது அளித்த பேட்டியில், ''கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் விளக்கம் அளித்துள்ளேன்; விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தந்துள்ளேன்,'' என்றார்.

சில நிமிடங்களுக்குப் பின் வெளியேறிய, சிட்லபாக்கம் ராஜேந்திரன், கோபமாக காணப்பட்டார்.

விஜயபாஸ்கரை விட சரத்குமாரிடம், நான்கு மணி நேரம் கூடுதலாக விசாரணை நடந்தது. அவர்,எட்டு மணி நேர விசாரணைக்குப் பின், இரவு, 7:30 மணி அளவில் சோர்வாக வெளியேறினார். அதன்பின், உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

விஜயபாஸ்கர் ஒப்புதல்!

விஜயபாஸ்கரிடம் நடந்த விசாரணையின் போது, குட்கா வியாபாரிகள் மாமூல், பணி நியமனம் மற்றும் மருந்து பொருட்கள் வாங்கியதில் நடந்த முறைகேடுகள்; எந்தெந்த அமைச்சர்களுக்கு எப்படி பணம் வழங்கப்பட்டது என்பது உள்ளிட்ட, பல கேள்விகள் கேட்கப்பட்டு உள்ளன.
'முதலில், பட்டுவாடாவை மறுத்த விஜயபாஸ்கர், பின், ஓரளவிற்கு, உண்மைகளை கூறினார். அதனால், பணம் பட்டுவாடா உறுதியாகியுள்ளது. எனினும், நினைத்த அளவிற்கு அவர் முழு ஒத்துழைப்பு தரவில்லை என்பதால், மீண்டும் விசாரணைக்கு வரச் சொல்லி இருக்கிறோம்' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

கீதாலட்சுமி 'டிமிக்கி'

வருமான வரி அதிகாரிகள் கூறியதாவது: தமிழ்நாடு எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை துணை வேந்தர் கீதாலட்சுமி, சில பணியிடங்களை நிரப்புவதில், இடைத்தரகர் போல செயல்பட்டதற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக,அதிகாரிகள் தெரிவித்தனர். அவரது சொத்துக் கணக்கு மற்றும் வருமான வரி கணக்குகளை ஆய்வு செய்து வருகிறோம்.
'சம்மன்' அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. அவர் குடும்பத்தில் முக்கிய நிகழ்ச்சி இருப்பதாகக் கூறி விட்டார். அவருக்காக, ஓரிரு நாள் காத்திருக்க உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஹவாலா பணமா?

வருமான வரி விசாரணையில், பணம் பெற்றதை, சரத்குமார் ஒப்புக் கொள்ளவில்லை. அதனால், அவரது மனைவி ராதிகாவிடம் பணம் சேர்க்கப்பட்டதா அல்லது ஹவாலா முறையில் பரிமாற்றம் நடந்ததா என்றும், அவரிடம் அதிகாரிகள் கேள்விகளை அடுக்கினர். பதிலளிக்க, சரத்குமார் அடம் பிடித்ததால், அவருக்கு ஓய்வு கொடுத்து, மீண்டும் விசாரிக்க முடிவு எடுத்துள்ளனர்.

முதல்வரிடம் விசாரணையா?

வருமான வரி அதிகாரிகள் கூறியதாவது: தினகரனிடமிருந்து, விஜயபாஸ்கருக்கு பணம் தரப்பட்டு, அவர் மூலமாக முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர்களுக்கு சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்து வருகிறோம். ஆனால், விஜயபாஸ்கர், அத்தகைய கேள்விகளுக்கு பிடிகொடுக்காமல் நழுவுகிறார். அதனால், தினகரன் மற்றும் முதல்வரை காட்டிக் கொடுக்காமல், அனைத்தும் தன் பணம் என, அவர் ஒப்புக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது. அதற்கு, அவர் வரி கட்டினால் விட்டு விடுவோம்.
மேல் நடவடிக்கையை, தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் தான் மேற்கொள்ள வேண்டும். எனினும், விஜயபாஸ்கரின் பினாமி நிறுவனங்களின் வருமானங்களை தோண்ட உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது சிறப்பு நிருபர் -


: ஏப்ரல் 10,2017,22:19 IST

 மூன்று மாதங்களுக்கு தேர்தல் இல்லை:
தேர்தல் அதிகாரிகள் தகவல்


'சென்னை, ஆர்.கே.நகர் சட்டசபைத் தொகுதிக்கு, இன்னும் மூன்று மாதங்களுக்கு, தேர்தல் நடத்த வாய்ப்பில்லை' என, தேர்தல் கமிஷன் வட்டாரத்தில் கூறப்படுகிறது.





இடைத்தேர்தலில், அ.தி.மு.க., - சசிகலா அணி சார்பில், தினகரன் போட்டியிடப் போவதாக தகவல் வெளியானதும், பணப் பட்டுவாடா அதிகம் இருக்கும் என, தகவல் வெளியானது.

வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதைத் தடுக்க, தேர்தல் கமிஷன், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஐந்து தேர்தல் பார்வையாளர்கள், ஒரு சிறப்பு தனி தேர்தல் அதிகாரி நியமிக்கப்பட்டனர்.

சமூக வலைதளங்களில் பரவின

துணை ராணுவ வீரர்கள், 720 பேர், பாதுகாப்பு பணிக்கு வரவழைக்கப்பட்டனர். பறக்கும் படை, கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டது. நுண் பார்வையாளர்கள், மோட்டார் சைக்கிளில்,

ரோந்து வர ஏற்பாடு செய்யப்பட்டது. அனைத்தையும் மீறி, தினகரன் அணி சார்பில், ஓட்டுக்கு, 4,000 ரூபாய் வழங்கப்பட்டது. பட்டுவாடா வீடியோ காட்சிகள், சமூக வலைதளங்களில் பரவின. அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில், வருமான வரித்துறை நடத்திய சோதனையில், பட்டுவாடா ஆவணங்கள் சிக்கின.

ஜைதி ஆலோசனை

அதைத் தொடர்ந்து, தேர்தலை ஒத்திவைக்க வேண்டும். பட்டுவாடா செய்த வேட்பாளர்களை, தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என, அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்தன.இது தொடர்பாக, நேற்று முன்தினம் டில்லியில், தலைமைத் தேர்தல் கமிஷனர் நசீம் ஜைதி தலைமையில், ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், சிறப்பு தேர்தல் அதிகாரி விக்ரம் பத்ரா, தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி ஆகியோர் பங்கேற்றனர்.

தேர்தல் எப்போது?

கூட்டத்தில், தினகரனை தகுதிநீக்கம் செய்வது, தேர்தலை ஒத்திவைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. ஆலோசனை முடிவில், தேர்தலை ஒத்திவைக்க, முடிவு செய்யப்பட்டது. தஞ்சாவூர், அரவக்குறிச்சி தேர்தல்போல,

ஆர்.கே.நகர் தொகுதி தேர்தலும், சில மாதங்களுக்குப் பிறகே நடத்தப்படும் என, தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து, தேர்தல் அதிகாரிகள் கூறியதாவது: இடைத்தேர்தலை, ஆறு மாதங்களுக்குள் நடத்தி முடிக்க வேண்டும். ஆனால், தேர்தல் நடத்த முடியாத நிலை ஏற்படும்போது, எப்போது வேண்டுமானாலும் நடத்த, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில், தேர்தல் கமிஷனுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதற்கான காரணத்தை, மத்திய அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

ஜூலை, 5க்குள் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. எனவே, ஆர்.கே.நகர் தொகுதிக்கு, ஜனாதிபதி தேர்தல் முடிந்த பின்னரே, தேர்தல் நடத்த வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

- நமது நிருபர் -




நடத்தை விதிகள் விலக்கம் : புறப்பட்டனர் ராணுவ வீரர்கள்

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள், விலக்கிக் கொள்ளப்பட்டன.ஜெ., மறைவு காரணமாக, காலியான, சென்னை, ஆர்.கே.நகர் சட்டசபைத் தொகுதிக்கு, ஏப்., 12ல் தேர்தல் நடைபெறும் என, மார்ச், 9ல், தேர்தல் கமிஷன் அறிவித்தது. அன்று முதல், ஆர்.கே.நகர் தொகுதியை உள்ளடக்கிய, சென்னை மாவட்டம் முழுவதும், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. தேர்தலில் போட்டியிட்ட தினகரன் அணியினர், ஓட்டுக்கு, 4,000 ரூபாய் கொடுத்ததாக, புகார் எழுந்தது. அதற்கான ஆவணங்கள் சிக்கியதால், இடைத்தேர்தலை ரத்து செய்து, நேற்று முன்தினம் இரவு, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. தேர்தல் ரத்தால், நடத்தை விதிகளும் விலக்கிக் கொள்ளப்பட்டன. தேர்தல் பணிக்கு வந்திருந்த, தேர்தல் பார்வையாளர்கள், துணை ராணுவ வீரர்கள், சொந்த ஊருக்குப் புறப்பட்டுச் செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.

- நமது நிருபர் -

தேர்தல் கமிஷன் செலவிட்ட ரூ.1.10 கோடி வீண்

இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதால், தேர்தல் கமிஷன் செலவழித்த, 1.10 கோடி ரூபாய் வீணாகி உள்ளது. ஒரு சட்டசபை தொகுதிக்கு, தேர்தல் நடத்த, 1.50 கோடி ரூபாய் செலவாகும். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தேதி, மார்ச் 9ல், அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும், தேர்தல் கமிஷன் மேற்கொண்டது. தேர்தலுக்காக, 256 ஓட்டுச்சாவடிகள் தயார் செய்யப்பட்டன. அங்கு, அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட்டன.

ஓட்டுச்சாவடி அலுவலர்கள், 1,842 பேர் தேர்வு செய்யப்பட்டு, இரண்டு கட்ட பயிற்சி அளிக்கப்பட்டது.தேர்தல் பாதுகாப்பு பணிக்காக, 720 துணை ராணுவ வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். ஐந்து தேர்தல் பார்வையாளர்களும், ஒரு சிறப்பு தனி அதிகாரியும் நியமிக்கப்பட்டனர். ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், தயார் செய்யப்பட்டன. நாளை, ஓட்டுப்பதிவு நடக்க இருந்தது. இந்நிலையில், தினகரன் அணியினரின், பணம் பட்டுவாடா ஆவணங்கள் சிக்கியதால், தேர்தல் ரத்து செய்யப்படுவதாக, நேற்று முன் தினம் இரவு அறிவிக்கப்பட்டது.

நேற்று முன் தினம் வரை, தேர்தல் பணிகளுக்காக, கமிஷன், 1.10 கோடி ரூபாய் செலவழித்து உள்ளது. தேர்தல் ரத்தால், அந்த செலவு வீணானது. மீண்டும் தேர்தல் நடத்தும் போது, இது போன்றே மறுபடியும் அனைத்து செலவுகளையும் செய்ய வேண்டும்.

- நமது நிருபர் -

அரசு ஊழியர் மருத்துவக் காப்பீடு பணமின்றி சிகிச்சை அளிக்க வழக்கு : உயர்நீதிமன்றம் 'நோட்டீஸ்'

மதுரை: அரசு ஊழியருக்கான புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ், அனைத்து மருத்துவமனைகளிலும் பணமின்றி சிகிச்சை அளிக்க தாக்கலான வழக்கில், தமிழக அரசுக்கு 'நோட்டீஸ்' அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

திருமங்கலம் தாமோதரன் தாக்கல் செய்த பொதுநல மனு: அரசு உதவி பெறும் கல்லுாரியில் ஆய்வக பணியாளராக வேலை செய்கிறேன். மனைவி திருமங்கலம் அரசு ஓமியோபதி மருத்துவக் கல்லுாரியில், தட்டச்சராக பணிபுரிகிறார். அரசு ஊழியர்களுக்கான, மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், மனைவியின் மாத சம்பளத்தில் 180 ரூபாய் பிடித்தம் செய்கின்றனர். இதனால், அத்திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற எனக்கும் தகுதி உள்ளது.எனக்கு 'ரூமாட்டிக்' காய்ச்சல் ஏற்பட்டு இருதயத்தின் இரட்டை வால்வுகள் பாதிக்கப்பட்டன. இதை மாற்றி அமைக்க கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். அங்கு,' 2 லட்ச ரூபாய் செலவாகும். அரசு ஊழியருக்கான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு பணமின்றி சிகிச்சை பெறலாம். மீதி 50 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும்' என்றனர்.

வேறொரு மருத்துவமனையில், 'கூடுதலாக ஒரு லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும்' என்றனர். சிகிச்சைக்கு செலவிட்ட தொகையை வழங்கக்கோரி, தமிழக அரசுக்கு விண்ணப்பித்தோம்; நடவடிக்கை இல்லை. அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து மருத்துவமனைகளிலும், பணமின்றி சிகிச்சை அளிக்க, தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு தாமோதரன் மனு செய்தார்.
தமிழக சுகாதாரத்துறை செயலர், நிதித்துறை செயலருக்கு 'நோட்டீஸ்' அனுப்பிய நீதிபதிகள் ஏ.செல்வம், என்.ஆதிநாதன் கொண்ட அமர்வு, வழக்கை ஏப்.,28 க்கு ஒத்திவைத்தது.

வருமான வரித்துறை 'சம்மன்' தடை கோரி துணை வேந்தர் வழக்கு

சென்னை: வருமான வரி புலனாய்வு துறை அனுப்பிய சம்மனுக்கு, தடை விதிக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை துணை வேந்தர் கீதாலட்சுமி மனு தாக்கல் செய்துள்ளார்.
சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை துணை வேந்தர் டாக்டர் கீதாலட்சுமி, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வீடுகளில், வருமான வரித்துறை, சில நாட்களுக்கு முன் சோதனை நடத்தியது. சோதனை தொடர்பாக, ஏப்., 10ல் ஆஜராகும்படி, சம்மன் அனுப்பியிருந்தது.

 சம்மனுக்கு தடை விதிக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் கீதாலட்சுமி மனுத்தாக்கல் செய்துள்ளார். அவரது மனு விபரம்: கடந்த, 15 ஆண்டுகளாக, வருமான வரி செலுத்தி வருகிறேன். என் வீட்டில், வருமான வரி துறை சோதனை நடத்தியது. ஏப்., 7ல் துவங்கிய சோதனை, 8ல் முடிந்தது. பணம், நகைகள், வெள்ளி பொருட்கள் கைப்பற்றப்பட்டன. சோதனையின் போது, அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு அளித்தேன். ஏப்., 10ம் தேதி காலை, 11:30 மணிக்கு ஆஜராகும்படி, எனக்கு சம்மன் வழங்கப்பட்டது.

ஆனால், வருமான வரி சட்டப்படி, இந்த சம்மன் பிறப்பிக்கப்படவில்லை.சம்மனில், வருமான வரி செலுத்துபவர், சாட்சி என குறிப்பிடப்பட்டுள்ளது. இதில், தேவையில்லாத வார்த்தையை நீக்கி விட்டு, சம்மன் அனுப்பியிருக்க வேண்டும். சரியாக பரிசீலனை செய்யாமல், சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.சோதனை முடியும் முன்னரே, 7ம் தேதி அன்று, சம்மன் பிறப்பிக்கப்பட்டுள்ளது. நிலுவையில் இல்லாத நடவடிக்கைகளுக்காக, சம்மன் அனுப்ப முடியாது. எனவே, சம்மனுக்கு தடை விதிக்க வேண்டும்; அதை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

IOB unveils 444-day term deposit scheme with higher interest rates  Published - February 14, 2026 09:20 pm IST - MUMBAI THE HINDU BUREAU 16...