Wednesday, April 12, 2017


மருந்து நீர், நைவேத்தியம், குலதெய்வ வழிபாடு... தமிழ்ப் புத்தாண்டை எப்படிக் கொண்டாடுவது? 
 
இரா.செந்தில் குமார்

தமிழ்ப் புத்தாண்டு வரப்போகிறது, தமிழ் மாதங்கள் பன்னிரெண்டில் முதலாவதாக வரும் சித்திரை மாதம் முதல் நாளை, தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடுகிறோம். இந்தப் புத்தாண்டு பங்குனி 31-ம் தேதி இரவு (13-4-17) 12.43 மணிக்குப் பிறக்கிறது. வரப்போகும் வசந்தத்துக்கு முன்னோட்டமாகத் திகழும் சித்திரை முதல் நாளை நாம் எப்படியெல்லாம் கொண்டாடவேண்டும், அன்றைக்கு நாம் என்னென்ன செய்யவேண்டும் என்பது பற்றியெல்லாம் தெரிந்துகொள்ளலாமே...



புத்தாண்டு அன்று வீட்டை சுத்தம் செய்து,வாயில்களில் அழகாகக் கோலமிட வேண்டும்.மேலும் செம்மண் பூசியும் அழகு செய்யலாம்.

கதவுகளில், மஞ்சள் குங்குமம் இட்டு அலங்கரிக்கவேண்டும்.

புத்தாண்டு அன்று காலையில் மருத்துநீரில் நீராடவேண்டும். இந்த மருத்து நீரானது தாழம்பூ, தாமரைப்பூ, மாதுளம்பூ, துளசி, விஷ்ணுகிராந்தி, சீதேவியார் செங்கழுநீர், வில்வம், அறுகு, பீர்க்கு, பால், கோசலம், கோமயம், கோரோசனை, மஞ்சள், திப்பிலி, சுக்கு போன்றவற்றைச் சேர்த்து காய்ச்சப்படும்.மருத்துநீரை தலையில் தேய்த்து நீராடினால் நல்ல பலன்களைப் பெறலாம் என்பது நம்பிக்கை.புத்தாண்டிற்கு முதல் நாள் அருகில் இருக்கும் கோயில்களில் மருத்து நீரானது கிடைக்கும். இது மருந்து நீர் என்றும் அழைக்கப்படுகிறது.

நீராடிய பின்பு புதிய ஆடைகளை அணிய வேண்டும்.

காலையில் பூஜை அறையில் சுவாமி படங்களைச் சுத்தம் செய்து,பொட்டு வைக்க வேண்டும். மேலும் பூக்களால் அலங்கரித்து விளக்கேற்றி வணங்க வேண்டும்.

காலையில் இல்லத்தில் சர்க்கரைப் பொங்கல் வைத்து நைவேத்தியம் செய்து தீபாராதனை செய்ய வேண்டும். நைவேத்தியம் செய்யப்பட்ட சர்க்கரைப் பொங்கலை அனைவருக்கும் பரிமாற வேண்டும்.

பாசிப்பருப்பு பாயசம்,வெல்ல அவல் போன்ற இனிப்பு வகைகளும் செய்யலாம்.



மதிய உணவில் அறுசுவையும் சேர்த்துகொள்ள வேண்டும். இனிப்பு, புளிப்பு, கசப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, கார்ப்பு ஆகிய அறுசுவைகளைக் குறிக்கும் சர்க்கரை பொங்கல், மாங்காய் பச்சடி, வேப்பம்பூ ரசம், நீர்மோர், வாழைப்பூ வடை, காரக் குழம்பு ஆகியவற்றைச் செய்து உண்ணவேண்டும்.

இன்பம், துன்பம், மகிழ்ச்சி, கவலை, வியப்பு என்று பலதரப்பட்ட அனுபவங்கள் கொண்டதுதான் வாழ்க்கை என்பதை உணர்த்துவதுபோல் அன்று நாம் உண்ணும் உணவு பல சுவைகளில் இருக்கும்.

கண்டிப்பாக அன்று அசைவ உணவுகளைத் தவிர்த்துவிடவேண்டும்.

தமிழ்ப் புத்தாண்டு அன்று கை விசேடம், கை நீட்டம் என்று ஒரு வழக்கம் பின்பற்றப்படுகிறது. பெரியவர்கள் குழந்தைகளுக்கு அன்பளிப்பாகப் பணம் தருவதே இப்படிச் சொல்லப்படுகிறது. அதற்கென்று ஒரு நேரம் பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த நேரத்தில் தாத்தா, அப்பா என்று வீட்டுப் பெரியவர்களின் காலில் அனைவரும் விழுந்து ஆசி பெற்று, அவர் தரும் பணத்தைப் பெற்றுக்கொள்வார்கள். இதனால், ஆண்டு முழுவதும் பணவரவுடன் பல நன்மைகளும் ஏற்படும் என்பது நம்பிக்கை. இப்படிப் பெரியவர்கள் கொடுக்கும் பணத்தைப் பத்திரமாக வைத்துக்கொள்ளவேண்டும்.அடுத்த புத்தாண்டு வரை கூட சிலர் வைத்திருப்பர்.

உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் பரிமாறி, மகிழலாம்.

மாலையில் அருகில் இருக்கும் ஆலயங்களுக்குச் சென்று வழிபடலாம். தமிழ்ப் புத்தாண்டு அன்று குலதெய்வ கோயிலுக்குச் சென்று வழிபடுதல் அதிக நன்மைகளைத் தரும்.



இந்த ஆண்டிற்கு உரிய ராஜா புதன், எனவே சொக்கநாதருக்கு பூஜை செய்வது நல்லது. மேலும், சூரியனை வழிபட்டால் மேன்மைகள் பெருகும்.நன்மைகள் விளையும்.

திருப்பதி லட்டு மகா பிரசாதம்... எவ்வளவு ருசிக்கலாம்? 


பாலு சத்யா


பிரசாதங்களில் பிரத்யேகச் சுவைகொண்டது; உலகம் முழுக்கப் பிரபலமானது; `இன்னொன்று கிடைக்காதா?’ என பக்தர்களை ஏங்கச் செய்வது... திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தயாராகும் லட்டு! நாள் ஒன்றுக்கு சுமார் ஒன்றரை லட்சம் லட்டுகள் தயாரிக்கப்பட்டு, பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்படுகின்றன. என்னதான் நெய்யின் அளவைக் கூட்டி, ஏலக்காயும் முந்திரியும் சேர்த்து, பல வாசனைப் பொருட்களைப் போட்டாலும், இது தரும் சுவை எப்பேர்ப்பட்ட கைதேர்ந்த சமையல் கலைஞருக்கும் கைகூடுவதில்லை. இது மந்திரஜாலமா... ஏழுமலையானின் மகிமையா? இப்படிக் கேட்டால் பக்தர்கள் அடித்துச் சொல்வார்கள்... அது ஏழுமலையானின் மகிமைதான் என்று!



ஆந்திராவில் உள்ள திருப்பதி கோயிலில் வெங்கடாஜலபதிக்கு நைவேத்தியப் பிரசாதமாகப் படைக்கப்படும் லட்டு, பெருமாளுக்குப் பிரியமான ஒன்று. இதை `ஸ்ரீவாரி லட்டு’ என்றும் சொல்வார்கள். திருமலை திருப்பதி தேவஸ்தான போர்டுதான் இதைத் தயாரித்து பக்தர்களுக்கு விநியோகம் செய்கிறது. திருமலையில், கோயில் வளாகத்துக்குள்ளேயே இருக்கும் பெருமாளின் `லட்டு பொட்டு’ என்கிற சமையற்கூடத்தில்தான் இதைத் தயாரிக்கிறார்கள். இன்றைக்கும் திருப்பதிக்குப் போகும் எந்த பக்தரானாலும், இந்த லட்டைக் கையில் வாங்கி, ஒரு விள்ளலாவது சுவைக்காமல் அவருக்கு அந்தப் புனிதப் பயணம் திருப்தியாக நிறைவு பெறுவதில்லை. அதேபோல திருப்பதிக்குச் சென்று திரும்பியவர் என்று தெரிந்தால், தெரிந்தவர்கள் யாராக இருந்தாலும், `லட்டு பிரசாதம் எங்கே?’ என்று கேட்காமலும் இருப்பதில்லை. இதன் அற்புதச் சுவை அலாதியானது!

முதன்முதலில் லட்டு பிரசாதமாக சீனிவாச பெருமாளுக்குப் படைக்கப்பட்டது, ஆகஸ்ட் 2, 1715-ம் ஆண்டில் என்கிறார்கள். 300 ஆண்டுகளாகியும் இதன் சுவை, மணம் குறையாமல் இருப்பது ஆச்சர்யம். அதாவது, இதற்கான பிரத்யேக சமையற்காரர்கள் கையால் உருட்டி உருட்டி லட்டைப் பிடித்த காலம் தொடங்கி, இயந்திரங்களின் உதவியோடு தயாரிக்கும் இந்தக் காலத்திலும் லட்டின் தரத்திலோ, சுவையிலோ இம்மிகூட மாற்றமில்லை என்பது உலகையே வியக்கவைக்கும் செய்தி. ஒரு நாளைக்கு ஒன்றரை லட்சம் லட்டுக்கு மேல் தயாரிக்கப்படுகின்றன. தரிசனம் செய்பவர்களுக்கு இலவசமாக ஒரு சிறிய லட்டு தரப்படும். மேற்கொண்டு வாங்கும் (ஒருவருக்கு இரண்டு - சீசனுக்கு ஏற்ப இந்த எண்ணிக்கை மாறுபடும்) லட்டுகளுக்கு பணம் செலுத்தி, டோக்கன் வாங்கி, வரிசையில் நின்று வாங்க வேண்டும். 2016-ம் ஆண்டு மட்டும் திருப்பதியில் 10 கோடியே 34 லட்சம் லட்டுகள் விற்பனையாகியிருக்கின்றன.



உண்மையில் இதில் ஒன்றைத் தயாரிக்க ஆகும் செலவு 25 ரூபாய் என்றால், திருப்பதியில் 10 ரூபாய்க்குதான் (டோக்கன் விலையில்) விற்கிறார்கள். அளவிலும் சற்று பெரியது; ஒன்று சுமார் 175 கிராம் எடை கொண்டது. கிட்டத்தட்ட 600-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் லட்டைத் தயாரிப்பதில் ஈடுபட்டிருக்கிறார்கள். இவர்களில் 270 பேர் சமையல்காரர்கள். இவற்றைத் தயாரிக்கும் இடம் புனிதமான பிரசாதம் தயாரிக்கும் இடம் என்பதால், வெளியாட்கள் உள்ளே அனுமதிக்கப்படுவதில்லை. லட்டின் சுத்தம், சுகாதாரத்தை அறிய தனியாக லேப், தரக்கட்டுப்பாடு, அதற்கான சோதனை எல்லாம் இருக்கின்றன. 300 ஆண்டுகளுக்கு முன்னரே இது திருப்பதி பாலாஜிக்கு நைவேத்தியம் செய்யப்பட்டிருந்தாலும், இதற்கான காப்புரிமையை திருமலை திருப்பதி தேவஸ்தானம் பெற்றது 2009-ம் ஆண்டில்தான். ஆக, `திருப்பதி லட்டு’ என்கிற பெயரில் வெளியாட்கள் யாரும் இதை விற்பனை செய்ய முடியாது.

`பெருமாள், அலங்காரப் பிரியர்’ என்று சொல்வார்கள். மலர் மாலைகளைச் சூடி, தங்க, வைர, வைடூரிய ஆபரணங்கள் ஜொலிக்க காட்சி தருவார் ஏழுமலையான். அப்பேர்ப்பட்ட அலங்காரப் பிரியரான பாலாஜிக்கு, வேறெங்கும் கிடைக்காத லட்டு பிரசாதம் உகந்ததாக இருப்பதில் ஆச்சர்யமில்லை. ஆனால், 300 ஆண்டுகளில் மிகப் பெரியதாக இருந்த இதன் அளவு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துவிட்டது என்பதையும் மறுப்பதற்கில்லை. திருப்பதியில் பெருமாளை தரிசித்துவிட்டு, லட்டுப் பிரசாதத்தை கிள்ளி, வாயில் போட்டு அது கரையும்போது, பெருமாளைப் பார்க்க ஏழு மலை ஏறி வந்த களைப்பெல்லாம் கரைந்துபோகும். மனநிறைவோடு இல்லம் திரும்புவார்கள்.



திருப்பதி லட்டை வடிவமைத்தவர் `லட்டு அரசர்’ என்று அழைக்கப்படும் கல்யாணம் அய்யங்கார். அவர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான் லட்டு பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டார்கள். இதற்காக தனித் தொழில்நுட்பம் உருவானது; 2001-ம் ஆண்டு வரை, இவர்கள் 51 லட்டுகளைத் தயாரித்தால், அதில் பதினொன்றை இவர்களின் குடும்பத்துக்குப் பங்காகக் கொடுக்கும் வழக்கம் இருந்தது. இதற்கு எதிராக திருப்பதி தேவஸ்தானம் வழக்குத் தொடுத்தது. உச்ச நீதிமன்றம் இந்த வாரிசுரிமையை 2001-ம் ஆண்டு முடிவுக்குக் கொண்டு வந்தது.

திருப்பதியில் `அஸ்தானம்’, `கல்யாணோத்சவம்’, `புரோக்தம்’ என மூன்று வகையான லட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. அஸ்தானம் வகை விசேஷ நாட்களில் தயாரிக்கப்படுவது, இதன் எடை சுமார் 750 கிராம். இது நம் குடியரசுத் தலைவர், பிரதமர், வெளிநாடுகளில் இருந்து வரும் தலைவர்களுக்கு வழங்கப்படுகிறது. திருப்பதியில் நிகழும் பெருமாளுக்கான பிரத்யேக கொண்டாட்டங்களான கல்யாணோத்சவம், ஆர்ஜித சேவா ஆகியவற்றின் ஒரு பகுதிதான் கல்யாணோத்சவ லட்டு. சற்று பெரிய அளவிலான இதற்கு எப்போதும் பக்தர்களிடையே டிமாண்ட் உண்டு. `புரோக்தம்’ பக்தர்களுக்கு வழங்கப்படுவது. 175 கிராம் எடை கொண்டது.



திருப்பதி லட்டு மருத்துவரீதியாக பலன் தருவதுதானா? பதில் சொல்கிறார் டயட்டீஷியன் சௌமியா... `` இது, கலோரி, புரோட்டீன், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், கொழுப்பு என அனைத்தும் நிறைந்தது. இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின் சி ஆகியவை குறைந்த அளவில் உள்ளன. இதை கடலை மாவு, சர்க்கரை, முந்திரி, நெய், ஏலக்காய், எண்ணெய், கற்கண்டு, பாதாம் பருப்பு, உலர் திராட்சை எல்லாம் கலந்து தயாரிக்கிறார்கள். அதிக அளவில் இனிப்பு சாப்பிடுவது உடலுக்கு நல்லதில்லை. சோம்பல் ஏற்படும்; அதிகப் பசி உண்டாகும், இதன் காரணமாகவே அதிகம் சாப்பிடத் தோன்றும்; எடை அதிகரிக்கும்; கொழுப்பு கூடும்.

ஆனால், திருப்பதி லட்டில் சேர்க்கக்கூடிய முந்திரி, பாதாம் பருப்பு, உலர் திராட்சை, ஏலக்காய் போன்றவை அருமையான மருத்துவப் பலன்களை அளிக்கக்கூடியவை. அதோடு தனியாக இதற்காக தரக்கட்டுப்பாடு, அதற்கான பரிசோதனை எல்லாம் உண்டு. எனவே, ஆரோக்கியமான முறையில் இது தயாரிக்கப்படுகிறது. எப்போதாவது, பிரசாதமாகத்தான் இதை நாம் சாப்பிடுகிறோம்; அதிலும் அதிக அளவில் சாப்பிடுவதில்லை என்பதால் தாராளமாகச் சாப்பிடலாம். சர்க்கரைநோய் உள்ளவர்கள் சின்னஞ்சிறு விள்ளல் சாப்பிடவும். மற்றவர்களும், `இது பிரசாதம்’ என்ற உணர்வோடு குறைவாகச் சாப்பிடுவது நல்லது’’ என்கிறார் டயட்டீஷியன் சௌமியா.

மலைக்கவைக்கும் சுவை, மகா பிரசாதம்... மனமார ருசிக்கலாம் அளவோடு!

பச்சை... மஞ்சள்... சிவப்பு நிற கோழிகளை வளர்த்திருக்கிறீர்களா? #VillageNostalgia
பொன்.விமலா


“கோழி குஞ்சு தேடி வந்த கோபாலா... அதை கூடைக்குள்ள வச்சிருக்கேன் கோபாலா..”

90-களில் பஞ்சாயத்து டிவி பெட்டிகளில் ’ஒளியும் ஒலியும்’ நிகழ்ச்சியில் காதலன் படத்தில் வரும் இந்த பாடலைப் பார்க்கும் போதெல்லாம், கலர் கோழிக்குஞ்சுகள் மீது அத்தனை ஈர்ப்பு எனக்கு. கோழிகளை கவிழ்த்து வைக்கும் கூடைகளுக்குள் ஒளிந்து கொண்டு கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடுவதென்றால் அவ்வளவு பிடிக்கும். 90-களின் ஆரம்பங்களில் தான் பிராய்லர் கோழிகளைப் பற்றி முதல் முறையாக தெரிந்து கொண்டிருந்தேன்.



‘கீச்..கீச் ..கீச்..கீச்...’ என தட்டையான கூடைக்குள் செல்லமாய் கொஞ்சிக் கொண்டிருக்கும் கோழிக்குஞ்சுகளை தெருவில் தலையில் சுமந்து கொண்டு விற்றுச் செல்வார்கள். நாட்டுக் கோழிகளில் மஞ்சள், சிவப்பு, பழுப்பு,கறுப்பு நிறங்கள் தாண்டி வேறு நிறங்களில் கோழிகள் இருந்தததாய் நான் அறியவில்லை. ஆனால் பச்சை,மஞ்சள், இளஞ்சிவப்பு, மஞ்சள், ஊதா என நாம் நினைக்கும் நிறங்களில் கிடைக்கும் பிராய்லர் கோழிக்குஞ்சுகளைப் பஞ்சு உருண்டை போல கையில் எடுத்து அப்படியே கன்னத்தில் ஒட்டிக் கொண்டால் ஆஹா.. அத்தனை சுகம்.

பிராய்லர் குஞ்சுகள் மீதான மோகத்தில் அம்மா கொடுக்கும் சில்லறைகளை எல்லாம் சேகரித்து ரூபாய்க்கு இரண்டு கலர் கோழிக் குஞ்சுகளை வாங்கி அதைகூடைக்குள் வைத்து வளர்த்துக் கொண்டிருப்போம். ’எல்லாமே மேஜிக் தான்’ என்பது போலவே எண்ணி நான்காவது நாளே கலர் குஞ்சுகள் சாயம் வெளுத்துப் போய் புழுதியில் புரண்டு பார்க்கவே பரிதாபமாக இருக்கும். அதோடு விட்டிருக்கலாம். கோழிக்குஞ்சுகளை குளிப்பாட்டுகிறேன் என அவைகளை கையில் பிடித்து சோப்பு போட்டுக் குளிக்க வைத்து நாங்கள் செய்கிற சேட்டையில் சில குஞ்சுகள் மூச்சு திணறி சிறகுகள் அடித்துக் கொள்வதைப் பார்க்கையில் அம்மாவின் ஊதாங்கோல் வாசலில் பறக்கும். சாயம் வெளுத்து, காகமும், கீரியும் தூக்கிக் கொண்டு போனது போக, கடைசியாக வளர்ந்து நிற்கும் ஒற்றைக் கோழிக்குஞ்சும் தெரு நாய்க்கு இரையாகிப் போயிருக்கும். நாட்டுக் கோழிகளுக்கு இருக்கும் வீரியமும் நோய் எதிர்ப்பு சக்தியும் பிராய்லர் கோழிகளுக்கு இருப்பதில்லை.

பொசுக்கு பொசுக்கென்று கலர் காட்டிவிட்டு செத்துப் போய்விடும் பிராய்லர் கோழிகளை விட நாட்டுக் கோழிகள் மீது தான் அராஜகப் பிரியம் இருக்கும். அதென்ன அராஜகப் பிரியம் என்கிறீர்களா? ’கூரை ஏறி கோழிப் பிடிக்கத் தெரியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போனானாம்’ என தெருநடையில் உட்கார்ந்து கொண்டு பழமொழி பேசித் தீர்க்கும் கிழவிக்குப் போட்டியாக முட்டையிட வேண்டிய கோழியை தத்தி தத்திப் பாய்ந்து போய் பிடித்து வந்து கூண்டுக்குள் போடுவதே பெருஞ்சவால் தான்.

கோழிகள் வளர்ப்பதொன்றும் அத்தனை சாதாரணமானது அல்ல. சந்தைக்குப் போய் புதிதாய் பெட்டைக் கோழி ஒன்றையும் சேவைலையும் பிடித்து வந்தால், அவற்றின் கால்களை கட்டி அடுப்புக்கு முன்பாக காட்டி ‘இனிமே இதுதான் உன் வீடு’ என சொல்லி மூன்று முறை அந்த அடுப்பைக் காட்டி சுத்திவிட்டு வாசலில் விடவேண்டும். கோழிக்கு நம் வீடு இரண்டொரு நாளில் தெரிந்துவிட்டப் பிறகு, அடுத்ததாக அதை கூண்டில் அடைத்துப் பழக்கப் பழக்கப்படுத்துவது முக்கியம்.

இப்படியே பழகினால் கோழிகள் மேய்ந்து விட்டு சாயங்காலம் ஆனதும் தவறாமல் கூண்டுக்குள் உறங்கப் போய்விடும். கோழிகளில் ஆண்பால் பெண்பால் பேதம் நிச்சயமாக இருக்கும். சேவல்கள் தலையில் பெரிய கொண்டைகளோடு தன் றெக்கையை அடித்துக் கொண்டு கோழிகளை மிரட்டி துரத்துவதைப் பார்க்கும் போது, அந்த காட்சி நமக்கு வேண்டுமானால் கோழியை சேவல் விரட்டுவது காதலின் வெளிப்பாடாக இருக்கலாம். அதில் நிச்சயம் காதல் இருக்கும். அதே நேரத்தில், ஆண் கோழி குப்பையைக் கிளற வந்துவிட்டால் பெண் கோழி அந்த இடத்தில் இருந்து ஒதுங்கிக் கொண்டு தூரமாய் இருந்து வேடிக்கைப் பார்க்கும்.

கோழிக்கு தீவனம் போட அழைத்தால் கூட சேவலே முந்திக் கொண்டு ஓடிவரும். தவறி பெட்டைக்கோழி தீவனத்தில் தன் அலகை வைத்துவிட்டால் கூட சேவல் தன் கூரிய அலகால் பெட்டையை கொத்தி தூரத் துரத்திவிடும். இதில் கவனிக்க இன்னொன்றும் இருக்கிறது. கோழிகள் தன் குஞ்சுகளோடு தீவனத்தைக் கொத்தி சாப்பிட்டுக் கொண்டிருந்தால் சேவல்களுக்கு வழிவிட்டு தூரமாய் வேடிக்கைப் பார்க்கும். அல்லது உடன் இணைந்து தானும் தீவனம் உட்கொள்ளும். என்னதான் ‘கொக்கரக்கோ’ என சேவல் கூவினாலும் மொத்தமாய் கோழிகளை தீவனத்துக்கு அழைக்க ’பொபொபொபொ’ என்று பெண்பாலை தான் அழைத்துக் கொண்டிருக்கிறோம். அதே நேரத்தில் சேவல்களுக்கு ஒருபடி கீழாக தான் பெட்டைக் கோழிகளின் வாழ்க்கைமுறை அமைந்திருப்பதை மறுப்பதற்கில்லை.



கோழிகளுக்கு கூடு கட்டுவது கூட ஒரு அழகான கலைதான். கிடைக்கும் செங்கல் கருங்கல் எல்லாவற்றையும் மண்பூசி சாணம் பூசி மெழுகுவது தான் கோழிக் கூண்டுக்கு அழகு. மூன்றுக்கு மூன்றடி கூண்டு என்றாலும் அதில் 10 கோழிகள் கூட அடங்கிவிடும். கோழிகள் மாதத்தில் குறைந்தது 7 நாட்களாவது முட்டையிடும். கோழிகளின் முட்டைகளை சேகரித்து மணல் கூடையில் அவற்றை அடுக்கி வைத்து அதன் மேல் கோழியை வைத்து 22 நாட்கள் வரை அடைக்காக்க வைக்க வேண்டும். அடைக்காத்தலின் போது கோழிகளுக்கு பேன் பிடிக்கும். சீதாப்பழ இலைகளை அடைகாக்கும் இடத்தில் வைப்பதுதான் இதற்கான முதல் தீர்வு. கோழிக்குஞ்சுகள் கோழியின் கதகதப்பில் 22 வது நாட்களில் தன் முட்டையின் ஓட்டை உடைத்துக் கொண்டு வெளியேறும். குஞ்சுகள் வெளிவந்த பிறகு கோழியையும் கோழிக்குஞ்சுகளையும் காகத்திடம் இருந்து பாதுகாப்பது அவசியமானது. கோழிக்குஞ்சுகள் நம் கன்முன்னே வளரவளர ஒரு தலைமுறை நம் கண்முன்னே வளரும் சந்தோஷம் நமக்கு கிடைத்துவிடும்.

இதில் நாம் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயமும் இருக்கிறது. கோழிக் கூண்டைப் பராமரிப்பது சவாலான விஷயம். கூண்டுக்குள் இருக்கும் கோழிக் கழிவைத் தினமும் பெருக்கித் துடைக்காவிட்டால் பாம்புகள் உள்ளே நுழையலாம். இப்படி எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்து செய்து ஆசையாய் வளர்த்த கோழிகளை அறுப்பது கொஞ்சம் கஷ்டம் தான் என்றாலும் கோழிகள் எப்போதும் நம்மிடம் இருந்து தூரமாய் தொலைந்துப் போய்விடுவதில்லை. ஊருக்குப் போனால் கோழிகள் குப்பையை சாவகாசமாய்க் கிளறிக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போதெல்லாம் ’கோழிக்கிறுக்கல் மாதிரி இருக்கு உன் கையெழுத்து’ என்று பலரும் சொன்னது ஞாபகத்துக்கு வந்தாலும், நகர வாழ்க்கை மறந்து கோழியின் கால்தடங்களின் அந்த கிறுக்கல்களைப் பார்த்த போது அதெல்லாம் கிராமத்து அத்தியாயத்தின் அழிக்க முடியாத கவிதைகளாகவே என் கண்களுக்குப் பட்டன!

இப்போது விஜயபாஸ்கர்... அடுத்த குறி எடப்பாடி, 29 அமைச்சர்கள்!

2016-ம் ஆண்டு, கரூர் அன்புநாதன் வீட்டில் தொடங்கிய ரெய்டு சூறாவளி, தமிழகத்தை விட்டு இன்னும் நகரவில்லை. நத்தம் விசுவநாதன், சேகர் ரெட்டி, ராம மோகன ராவ், மணல் ராமச்சந்திரன் என்று பெரிய தலைகளை வாரிச்சுருட்டிய அந்தச் சூறாவளி, தற்போது தமிழ்நாடு சுகாதாரத் துறையை அதகளம் செய்துள்ளது. இந்த ரெய்டுகளுக்குப் பின்னணியில் அரசியல் காரணம், அலுவல் காரணம் என்று இரண்டு காரணங்கள் உள்ளன.

அரசியல் காரணங்கள்...

அ.தி.மு.க என்ற கட்சியைவிட்டு சசிகலா குடும்பத்தினர் மொத்தமாக ஒதுங்கிவிட வேண்டும் என்பதுதான் மத்தியில் உள்ள பி.ஜே.பி அரசின் ஒரே நோக்கம். இதற்கு ஒப்புக்கொள்ளாதவரை, சசிகலா குடும்பத்தையும் அந்தக் குடும்பத்தை ஆதரிப்பவர்களையும் ரெய்டுகள், வழக்குகள், சிறைச்சாலைகள் துரத்திக்கொண்டே இருக்கும்.

இப்போது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் குறிவைக்கப்பட்டு இருப்பதற்கும் அதுதான் காரணம். சசிகலாவுக்கு ஆதரவாக கூவத்தூரில் எம்.எல்.ஏ-க்களை அடைத்துவைத்து அ.தி.மு.க அரசாங்கத்தைக் காப்பாற்றியதில் தினகரனுக்குத் துணையாக இருந்தவர் விஜயபாஸ்கர். கூவத்தூரில் அடைத்து வைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ-க்களை மீட்கிறோம் என்று போலீஸ் படை அங்கு போனபோது, உடனடியாக சபாநாயகருக்குக் கடிதம் எழுதி ‘உரிமை மீறல் பிரச்னையைக் கொண்டுவருவோம்’ என ரகளைசெய்து, போலீஸ் படையை வந்த வழியே திருப்பி அனுப்பியது விஜயபாஸ்கரின் அதிரடிதான். அதன்பிறகு, எடப்பாடி பழனிசாமி தலைமையில் அரசாங்கம் அமைந்தாலும்கூட, அந்த அரசாங்கத்தின் ஆல்-இன்-ஆல் ஆக வலம்வருபவர் விஜயபாஸ்கர். அவரை வளைப்பதற்குக் கையில் எடுக்கப்பட்ட விஷயம்தான் இந்த வருமானவரிச் சோதனை.  ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரனை முடக்குவதற்கு இந்த ரெய்டுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. சுகாதாரத் துறை சம்பந்தமான ஆட்களின் வீடுகளில் ரெய்டு நடக்கும் நேரத்தில், நடிகர் சரத்குமாரும் இந்த வில்லங்கத்தில் சிக்கிக்கொண்டதற்கு ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்தான் காரணம். தினகரனை ஆதரித்துப் பிரசாரம் செய்யப்போவதாக சரத்குமார் அறிவித்தார். அப்போதே அவர் பெயரும் ரெய்டு பட்டியலில் சேர்ந்துவிட்டது.

இந்தச் சுற்றிவளைப்புகள் இதோடு ஓயப்போவதில்லை. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி உள்பட 29 பேர் ரெய்டு பட்டியலில் இருக்கின்றனர். அதோடு போயஸ் கார்டனுக்குள் விரைவில் வருமானவரித் துறை, மத்திய போலீஸ் பாதுகாப்புப் படையோடு நுழையப்போகிறது. தினகரன், திவாகரன், நடராஜன், விவேக் வீடுகளும் தப்பாது.
அலுவல் காரணங்கள்...

சுகாதாரத் துறையால் அரசுக்கு ஏற்பட்ட இழப்புகள்தான் ரெய்டுக்கான முதல் பிள்ளையார்சுழி. அதை வைத்து சுகாதாரத் துறையில் நடக்கும் குளறுபடிகள் அலசப்பட்டன. அரசு மருத்துவமனைகளுக்கு மாத்திரைகள் மற்றும் உபகரணங்கள் வாங்குவது, கட்டடங்கள் கட்டுவது, பணியிடங்களை நிரப்புவது, டிரான்ஸ்ஃபர் என்று அத்தனையிலும் அமைச்சருக்கு கமிஷன் போவதாகச் சொல்லப்படுகிறது. இதுபற்றி அரசு டாக்டர்கள் சங்கமும், சுகாதாரத் துறை பணியாளர்கள் சங்கமும் பல புகார்களை தொடர்ந்து சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பிக்கொண்டே இருந்தன. குறிப்பாக, அரசு மருத்துவமனைகளுக்கு ஒரு ரூபாய்க்கு வாங்கப்படும் மாத்திரையில் 30 பைசா கமிஷன் போகிறது என்று பகீர் புகார் கிளப்பப்பட்டது. அதுபோல, பதவியிடங்கள் நியாயமான முறையில் நிரப்பப்படுவதில்லை. முறையாக வரவேண்டிய பதவி உயர்வுக்கும் பணம் கொடுக்க வேண்டிய நிலை. இதெல்லாமே இந்த ரெய்டுகளுக்கு மிக முக்கியக் காரணம்.

உதாரணமாக, எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக கீதா லெட்சுமி நியமிக்கப்பட்டார். இதற்கு அவர் நிறையவே செலவுசெய்தார் என்று பல்கலைக்கழக ஊழியர்கள் புலம்பினார்கள். கிராமப்புற சுகாதார மேம்பாட்டுத் திட்டத்தில் 100 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்துள்ளதாகக் கிளம்பிய குற்றச்சாட்டுகள், தமிழ்நாடு மருத்துவப் பொருள்கள் கழகத்தில் நடைபெற்ற முறைகேடுகள், நீட் தேர்வை காரணம் காட்டி என்.ஆர்.ஐ மாணவர்கள் 169 பேரிடம் வசூல் செய்யப்பட்ட பணம் போன்றவை இந்த ரெய்டுக்கு அலுவல் ரீதியான காரணங்கள் என்கிறார்கள்.
இடைத்தேர்தல்...

ஆர்.கே. நகரில் பணப் பட்டுவாடா நடந்ததற்கு ஆதாரங்கள், டோக்கன்கள், கட்டுக்கட்டாகப் பணம் என ரெய்டில் சிக்கிய ஆதாரங்கள் அனைத்தும், இடைத்தேர்தலைக் கேள்விக்குறி ஆக்கியிருக்கின்றன.

ரெய்டு நடந்த வெள்ளிக்கிழமை மதியம், டெல்லியில் டெலிமெடிசன் சொசைட்டி விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கையால் விஜயபாஸ்கர் விருது பெறுவதாக இருந்தது. விருதுக்கு முன்பாக ரெய்டு வந்துவிட்டது.

- ஜோ.ஸ்டாலின்

கழிவறை கழுவி 1,200 மாணவர்களைப் படிக்க வைத்த தமிழக தம்பதி! #Inspiration

எம்.குமரேசன்


கக்கன் போலீஸ் மந்திரியாக இருந்த சமயம். அவரது மகனுக்கு போலீஸ் வேலை கிடைக்கிறது. முழுத் தகுதி இருந்ததால் பணி வழங்கப்படுகிறது. தந்தையிடம் வந்து அப்பாயின்ட்மென்ட் ஆர்டரைக் காட்டுகிறார் அதனை வாங்கிப் பார்த்த கக்கன், கிழித்துப் போட்டு விட்டு, மகனைப் பார்த்து இவ்வாறு கூறுகிறார்,,' நான் போலீஸ் துறை மந்திரி... எனது மகனுக்கு போலீஸ் துறையில் வேலை கிடைத்தால் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்?. அதனால் இந்த உனக்கு வேலை வேண்டாம்' என கோபமாகிறார். அப்படிப்பட்ட நேர்மையாளர்கள் வாழ்ந்த மண் இது. கடைசிக் காலத்தில் மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற வழியின்றி, இறந்து போனார் கக்கன்.



நல்ல தலைவர்கள் நாட்டுக்குத் தேவை என வீதிக்கு வீதி கூப்பாடு போடுகிறோம்.... வாய் கிழியப் பேசுகிறோம். தமிழகம் இப்போதுள்ள நிலையில் ‘தலைவர்கள்’ பற்றிச் சொல்லவே தேவையில்லை. காமராஜர், கக்கன் போன்றவர்கள் மீண்டும் பதவிக்கு வர வேண்டுமென விரும்புகிறோம். அத்தகையை தலைவர்களை உருவாக்க நாம் விரும்புகிறோமா... முயற்சிக்கிறோமா என்றால் கேள்விக்குறிதான். நல்ல தலைவர்களாக வருவதற்கு தகுதியும் திறமையும் கொண்டிருப்பவர்களை நாம் அடையாளம் கண்டு கொண்டிருக்கிறோமா என்றாலும் நிச்சயம் இல்லை.

உண்மையை சொல்லப் போனால், 'இவர் நல்ல தலைவர்' எனத் தெரிந்தால் அவரைத் தோற்கடிப்பதை வழக்கமாக கொண்டிருக்கும் விசித்திர குணமும் நமக்கு இருக்கிறது. நாம் வாழும் காலத்தில் உதாரணம் சொல்ல வேண்டுமென்றால் நல்லக்கண்ணுவைச் சொல்லலாம். அவரைப் போலவே நாட்டில் பல நல்லக்கண்ணுக்கள் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் லோகநாதன். இவருக்கும் கக்கன்தான் இன்ஸ்பிரேஷன்.

கோவை, சூலுரைச் சேர்ந்தவர் லோகநாதன். சிறிய லேத் பட்டறை வைத்து நடத்தி வருகிறார். வயிற்றுப்பாட்டுக்காக லேத் பட்டறை. இந்த பணி போக லோகநாதன் நாமெல்லாம் கண்டாலே முகம் சுளிக்கின்ற பணியும் செய்வார். அது வீடு வீடாக சென்று கழிவறைகளை சுத்தம் செய்வது. லேத் பட்டறை வைத்துதான் நடத்துகிறாரே... பின்னர் எதற்கு கழிவறை சுத்தம் செய்து சம்பாதிக்க வேண்டும் என்கிற கேள்வி எழுகிறது அல்லவா?. கழிவறை கழுவி சம்பாதிக்கும் பணத்தில் லோகநாதன் படிக்க வைத்த மாணவ- மாணவிகளின் எண்ணிக்கை மட்டும் 15 வருடங்களில் 1,200 பேர். இவர்களின் படிப்புக்காகத்தான் லோகாதன் 'பார்ட் டைம் ஜாப்' போல வீடு வீடாக சென்று கழிவறை கழுவி வருகிறார். ஒரு வீட்டுக்கு மாதம் 400 ரூபாய் வசூலிக்கிறார். அந்த தொகையை கொண்டு ஏழை மாணவர்கள், படிக்க வசதியில்லாதவர்களை பள்ளியில் சேர்க்க வைத்து படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

லோகநாதனிடம் பேசிய போது, '' பெரியார், கக்கன், அண்ணா, காமராஜர் போன்றத் தலைவர்கள், 'எளிமையாக உயர்ந்த சிந்தனையுடன் வாழுங்கள்' என அறிவுறுத்தினார்கள். நானும் அவர்களின் கொள்கையைத்தான் கடைபிடிக்கிறேன். தொடக்கத்தில் கழிவறை சுத்தம் செய்வது கடினமானதாகத்தான் இருந்தது. போகப் போக பழகி விட்டது. எனது மனைவியும் இதனை செய்கிறார். இருவரும் சேர்ந்து கிடைக்கும் பணத்தில் குழந்தைகளின் படிப்புக்கு உதவுகிறோம். குழந்தைகளை அடையாளம் காண, தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று உதவியாக இருக்கிறது. அத்தனையும் வங்கி வழியாகவே பணம் செலுத்துகிறோம். அதனால்,ஒவ்வொன்றுக்கும் கணக்கு உண்டு. எத்தனை காலமாக ஒரு சமூகத்தினர் மட்டுமே நமக்காக இந்த வேலையை செய்து வருகின்றனர். அந்த சமூகத்தினர் சந்திக்கும் கஷ்டங்களையும் அனுபவபூர்வமாகத் தெரிந்து கொண்டேன்'' என்கிறார்.

கழிவறைக் கட்டுவதில் இருந்து சுடுகாட்டுக் கொட்டகை அமைப்பது வரை ஊழல் புரியும் கில்லாடிகள் நிறைந்த நம் நாட்டில் லோகநாதனும் ஒரு முறை தேர்தலில் போட்டியிட்டார். கடந்த 2014ம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற மேயர் தேர்தலில் லோகநாதன் கோவை மாநகராட்சியில் மேயர் பதவிக்கு போட்டியிட்டார். எந்த கட்சியையும் சாராமல் சுயேட்சையாக களமிறங்கிய அவருக்க கிடைத்தது வெறும் 1,744 ஓட்டுகள்தான். அத்தோடு, அரசியல் ஆசையை மூட்டைக் கட்டி வைத்து விட்டு கழிவறை கழுவ சென்று விட்டார்.

தேர்தலில் போட்டியிட்ட அனுபவம் குறித்து லோகநாதன், ''நான் ஏழைக் குழந்தைகளை படிக்க வைக்க கழிவறையை சுத்தம் செய்கிறேன். அதே போலவே... இளைய சமுதாயத்தினரும் அரசியல் சாக்கடையை சுத்தம் செய்ய களமிறங்க வேண்டும். களமிறங்குவார்கள் என நம்புகிறேன்'' என்கிறார்.

நான் பேசினால் டெல்லிக்கு சிக்கல்; பேசாவிட்டால், தமிழகத்துக்கு சிக்கல்!' சிறையில் சேகர் ரெட்டியின் மனநிலை #VikatanExclusive

சேகர்ரெட்டி

தொழிலதிபர் சேகர் ரெட்டியின் வீடு, அலுவலகங்களில் நடந்த வருமானவரி சோதனைக்குப் பிறகு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர், வாயைத் திறந்தால் டெல்லிக்கும், திறக்கவில்லை என்றால், அ.தி.மு.க-வுக்கும் சிக்கல் என்றும் சேகர் ரெட்டியின் நெருக்கமானவர்கள் சொல்லத் தொடங்கியுள்ளனர்.
சேகர்ரெட்டியை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள். பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற, கால்கடுக்க வங்கிகள், தபால் நிலையங்கள் முன்பு மக்கள் காத்திருந்த சமயத்தில், 2,000 ரூபாய் புதிய நோட்டுகள் தொழிலதிபர் சேகர்ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகள் வீடு, அலுவலகங்களில் கைப்பற்றப்பட்டன. அதோடு, கிலோ கணக்கில் தங்கத்தையும் வருமான வரித்துறையினர் பறிமுதல்செய்தனர். இதையடுத்து, சேகர் ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சென்னை புழல் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள சேகர் ரெட்டிக்கு ஜாமீன் கிடைத்த சில நாட்களிலேயே மீண்டும் அவர் கைது செய்யப்பட்டார். சிறைக்குள் இருக்கும் சேகர் ரெட்டியைச் சந்திக்க பல வி.ஐ.பி-க்கள் வருகின்றனர். இந்தச் சூழ்நிலையில், சேகர்ரெட்டி வீடு, அலுவலகங்களில் நடத்தப்பட்ட வருமானவரி சோதனையே  தமிழகத்தில் நடந்துவரும் ஐ.டி.சோதனைக்குப் பிள்ளையார் சுழியாக உள்ளது.

சமீபத்தில் ரெய்டு நடத்தப்பட்ட அமைச்சர் விஜயபாஸ்கர் வீடுகள், அலுவலகங்களில் நடந்த சோதனையின்போதுகூட சேகர் ரெட்டியின் பெயர் அடிபட்டது. ஏற்கெனவே, முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் வீடு மற்றும் அவரது மகன் வீடு, அலுவலகங்கள் ஆகியவற்றில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். வருமான வரித்துறையினரிடம் சிக்கிய டைரியில் உள்ள உள்விவகாரங்கள் அடிப்படையில், அடுத்தடுத்து சோதனைகள் நடந்துவருகின்றன. அமைச்சர் விஜயபாஸ்கர் வீடுகள், அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனைக்குப் பிறகு, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து, வருமானவரித்துறையினரின் கிடுக்கிப்பிடி தமிழக அமைச்சர்கள், அதிகாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழ்நிலையில், சில நாட்களுக்கு முன்பு சிறைக்குள் இருக்கும் சேகர் ரெட்டியை, அவருக்கு நெருக்கமானவர்கள் சந்தித்துள்ளனர். அவர்களிடம் சேகர் ரெட்டி, ’நான் வாயைத் திறந்தால் மத்திய அரசுக்கு சிக்கல், வாயைத் திறக்கவில்லை என்றால், மாநில அரசுக்கு சிக்கல்’ என்று மனம்விட்டுப் பேசியதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. அவரது இந்தப் பேச்சு, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேகர்ரெட்டி

இதுகுறித்துப் பேசிய சேகர் ரெட்டிக்கு நெருக்கமான ஒருவர், "சேகர் ரெட்டியின் கைதுக்குப் பின்னால் ஒர் அரசியலே ஒளிந்திருக்கிறது. இது, மத்திய, மாநில அரசுகளுக்கு மட்டுமல்ல அவருடன் நெருக்கமாக இருந்தவர்களுக்கும் நன்றாகத் தெரியும். குறிப்பாக, மணல் பிசினஸில் கொடிகட்டிப் பறந்த சேகர் ரெட்டிக்கு, கார்டனில் இருந்த செல்வாக்கு ஊர் அறிந்த ஒன்று. அதுபோல, பா.ஜ.க-வின் டெல்லி முக்கிய பிரமுகர்களுடனும் சேகர்ரெட்டிக்கு பழக்கம் உள்ளது.  சேகர் ரெட்டி வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்த நீண்ட ஆலோசனைக்குப் பிறகே மத்திய அரசு கிரீன் சிக்னல் கொடுத்தது. அவரது வீட்டில் பணம், தங்கம் இருப்பது அவருடன் நெருக்கமானவர்களுக்குத் தெரியும். ஏன், மத்திய, மாநில அரசுகளுக்கு கஜானாவாக இருந்தவர்களில் ஒருவர், சேகர்ரெட்டி. நடந்து முடிந்த சட்டமன்ற, பாராளுமன்றத் தேர்தலின்போது சேகர்ரெட்டி தரப்பிலிருந்தே  'சி'க்கள் அனுப்பிவைக்கப்பட்டன. அந்தளவுக்கு மத்திய, மாநில அரசுகளுக்கு நெருக்கமானவர்களிடம் சேகர்ரெட்டி நெருக்கமாக இருந்தார். தமிழக அரசியலை கையில் எடுக்க, அவரைப் பலிகடா ஆக்கிவிட்டார்கள் என்றே சொல்ல வேண்டும்.

 இருப்பினும், அவர் யாருக்கும் துரோகம் செய்யவில்லை. அவர் மீதுள்ள வழக்குகளை சட்டரீதியாக சந்தித்துவருகிறார். தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலை இன்னும் அடுத்தகட்ட நகர்வை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அதைப் பொறுத்திருந்து பாருங்கள். சிறைக்குள் இருந்தபடி அனைத்தையும் உன்னிப்பாக சேகர்ரெட்டி கவனித்துக் கொண்டிருக்கிறார். சேகர் ரெட்டியுடன் நெருக்கத்தில் இருந்தவர்களில் சிலருக்கு, மத்திய அரசின் கருணைப் பார்வை கிடைத்துள்ளதால், அவர்களது வீடு, அலுவலகங்களுக்கு வருமான வரித்துறையினர் செல்லவில்லை. அதே சமயத்தில், மற்றவர்கள் வீடு, அலுவலகங்களில் சோதனையை வருமான வரித்துறை தீவிரப்படுத்திவருகிறது. " என்றார்.

சிறையிலிருந்து வெளியேற சேகர்ரெட்டி விரும்பினாலும், அதற்கான வாய்ப்புகள் அவருக்கு ஏற்படவில்லை. ஒருமுறை ஜாமீன் கிடைத்ததும் அவர் மகிழ்ச்சியடைந்தார். ஆனால், அடுத்து அவரைக் கைதுசெய்து சிறைக்குத் தள்ளிவிட்டது, அமலாக்கத்துறை. இதனால், சேகர் ரெட்டி சிறைக்குள் இருந்தபடியே தமிழக அரசியல் சூழ்நிலையைக் கவனித்துவருகிறார். சேகர் ரெட்டியை கார்டனுக்கு அழைத்துச் சென்ற அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை என்ற தகவல் அவருக்கும் சென்றுள்ளது. அப்போது, அவர் முகத்தில் எந்தவித ரியாக்ஷனும் இல்லையாம். வழக்கமான பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தாராம். அதை, சிறைக்குள் இருக்கும் உளவுப் பிரிவினர் கண்காணித்து, உயரதிகாரிகளுக்கு 'நோட்' போட்டுள்ளனர்.

சேகர் ரெட்டியை சிறைக்குள்ளேயே வைத்திருக்க சில முயற்சிகள் நடந்துவருவதாகச் சொல்லப்படுகிறது. இதற்கு, சேகர் ரெட்டி வீடு, அலுவலகங்களிலிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அவருக்கு எதிராக இருக்கிறது. அதைவைத்தே, சேகர் ரெட்டிக்கு ஜாமீன் வழங்க அரசுத் தரப்பு எதிர்ப்புத் தெரிவித்துவருகிறது. இந்தச் சூழ்நிலையில், சேகர் ரெட்டியுடன் நெருக்கத்திலிருந்த அமைச்சர்கள் இருவர் மீது வருமான வரித்துறையினரின் சந்தேகப்பார்வை விழுந்துள்ளது. மேலும், சில முன்னாள் அமைச்சர்களும் வருமான வரித்துறையினரின் சந்தேக வளைத்துக்குள் உள்ளனர். அவர்களின் நடவடிக்கைகளை வருமானவரித்துறையினர் கண்காணித்து வருகின்றனர். விரைவில் அவர்களது வீடு, அலுவலகங்களுக்கு அதிரடியாகச் செல்ல உள்ளதாக, வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.


சிறைக்குள் இருக்கும் சேகர் ரெட்டியைச் சந்திக்க வருபவர்களைக் கவனித்துவரும் அமலாக்கத்துறை மற்றும்  உளவுப்பிரிவினர், அது தொடர்பான அறிக்கையை உடனுக்குடன் தெரிவித்துவருகின்றனர். அதன்அடிப்படையில், அ.திமு.க. முக்கிய நிர்வாகிக்கு நெருக்கமான  ஒருவர்,  சில மாதங்களுக்கு முன்பு சேகர் ரெட்டியைச் சந்தித்துப் பேசியுள்ளார். அந்தச் சந்திப்புக்குப் பிறகே, சமீபத்தில் நடந்த வருமான வரி சோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தகவல் தெரியவந்ததும், சசிகலா அணி தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேகர் ரெட்டியுடன் பிசினஸ் ரீதியாக தொடர்பில் இருந்தவர்களை அழைத்து, சசிகலா தரப்பு ஆலோசனை நடத்தியுள்ளது. அந்த ஆலோசனையில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதாவது, சேகர் ரெட்டியுடன் பிசினஸ் ரீதியாக தொடர்பில் இருந்த ஓ.பன்னீர்செல்வம் அணியில் உள்ளவர்களின் வெளிவராத கணக்கு விவரங்களையும் தோண்டி எடுத்து, அதை வருமான வரித்துறையினரிடம் கொடுக்க உள்ளனர்.

 அதற்கும் வருமான வரித்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், நீதிமன்றத்தை நாடவும் முடிவுசெய்துள்ளது சசிகலா தரப்பு. இவ்வாறு தொழிலதிபர் சேகர் ரெட்டி மூலம் நடத்தப்படும் அ.தி.மு.க அரசியல் சதுரங்கத்தில், அடுத்தடுத்து அதிர்ச்சிகள் காத்திருக்கின்றன.

சிறையில் வைகோ என்ன செய்கிறார்?

SYED ABUTHAHIR A
வைகோ
 
“என்னைச் சிறையில் அடையுங்கள்” என்று நீதிபதியிடம் முறையிட்டதோடு, ''பிணையும் எனக்கு வேண்டாம்'' என்று கூறி பதினைந்து நாள்கள் சிறைவாசத்தை விரும்பி ஏற்றுக்கொண்டவர் வைகோ.
“நான் குற்றம் சாட்டுகிறேன்” என்ற புத்தக வெளியிட்டு விழா சென்னையில் 2009-ம் ஆண்டு நடைபெற்றது. இதில் பேசிய வைகோ, “மத்திய, மாநில அரசுகளை விமர்சித்தார்” என்று கூறி அவர் மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. நீண்ட நாட்கள் கிடப்பில் கிடந்த வழக்கில் வைகோவே நீதிமன்றத்தில் மனு செய்து, ''இந்த வழக்கை விரைந்து முடியுங்கள் அல்லது என்னைச் சிறையில் அடையுங்கள்'' என்று நீதிபதியிடம் முறையிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தினார்.

 இந்த வழக்கில் வைகோ மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருப்பதாக கூறிய நீதிபதி, வைகோவை பதினைந்து நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். கடந்த ஏப்ரல் 3-ம் தேதி அன்று சென்னை புழல் சிறைக்கு வைகோ கொண்டு செல்லப்பட்டார். ''கட்சிக்காரர்களோ, தனது நண்பர்களோ சிறையில் வந்து தன்னைச் சந்திக்க கூடாது'' என்று எச்சரிக்கை செய்துவிட்டு சிறைக்குள் சென்றார் வைகோ.
சிறைக்குள் வைகோ என்ன செய்கிறார் என அவருக்கு நெருக்கமான வழக்கறிஞர்களிடம் கேட்டபோது, “சிறைக்கு வருவது தலைவருக்கு ஒன்றும் புதிதல்ல என்பதால், சிறையினுள் உற்சாகமாகத்தான் இருக்கிறார்

. சிறைக்குச் செல்லும்போதே தனக்குத் தேவையான உடைகளை முதலில் எடுத்து வரச்சொன்னார். மறுதினம், அவர் வாக்கிங் செல்லும்போது பயன்படுத்தும் ஸ்போர்ட்ஸ் ஷூ, ட்ராக்ஸ், டீசர்ட் போன்றவற்றை எடுத்துவரச் சொன்னார். சிறையில் காலையில் வாக்கிங் போகிறார்; ஷூ, டிசர்ட் சகிதமாக காலைப்பொழுதைக் கழிக்கிறார். வைகோ சிறைக்குள் வந்ததுமே, சிறையில் உள்ள பலர் அவரைக் காண ஆர்வத்தோடு அவருடைய செல்லுக்கு வருகின்றனர். பகல் நேரத்தில் சிறையில் இருக்கும் சக கைதிகளுடன் அவர் பேசுகிறார். விளையாட்டில் வைகோவுக்கு ஆர்வம் அதிகம். பொடாவில் அடைக்கப்பட்டிருந்தபோது, சிறையில் கைதிகளையே இரண்டு அணிகளாகவைத்து வாலிபால் போட்டிகளை நடத்தியவர். இப்போது வாலிபால் விளையாடுவதைக் குறைத்துக்கொண்டதால், சிறையில் கைதிகள் விளையாடினால் அதை உற்சாகப்படுத்திவருகிறார்.


சிறைக்குச் சென்றதுமே அவரிடமிருந்துவந்த முதல் தகவலே, 'புத்தகங்களை வீட்டில் இருந்து எடுத்துவரச் சொல்லுங்கள்' என்பதுதான். பதினைந்து நாள்கள் சிறைவாசத்தில் ஐம்பது புத்தகங்களையாவது படித்துவிட வேண்டும் என்ற குறியில் அவர் உள்ளார். மல்யுத்த வீரர் 'தாராசிங் வரலாறு', ராம்ஜெத்மலானி எழுதிய புத்தகம், 'நீலம் சிவப்பு மஞ்சள்' போன்ற புத்தகங்களை அவர் படித்துவருகிறார். 'சிறைக்காலத்தைப் புத்தகங்கள் படிப்பதில் செலவிட வேண்டும்' என்று அவரே எங்களிடம் சொல்லியுள்ளார். வெளியில் இருந்து சாப்பாடு கொண்டு சென்றால்கூட வேண்டாம் என்று தவிர்த்துவிடுகிறார். ஏப்ரல்-5ம் தேதி அன்று அவருடைய தந்தையாரின் நினைவுதினம் என்பதால் அன்று ஒரு நாள் முழுவதும் மௌனவிரதம் இருந்தார். கடந்த நாற்பது ஆண்டுகளாக மௌனவிரதத்தை விடாமல் கடைப்பிடித்து வருகின்றார்” என்கிறார்கள்.

''சிறையிலிருந்து அவர் வெளியே வரும்போது... அங்கேயே தமக்கான ஆதரவாளர்களை உருவாக்கிவிடுவார்'' என்கிறார்கள் ம.தி.மு.க-வினர். வரும் ஏப்ரல் 17-ம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளார் வைகோ. அன்றே அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்படவும் உள்ளார்.

818 Medical Colleges in India, Maximum in UP, Maharashtra, Tamil Nadu: Health Ministry tells Parliament Written By : Divyani PaulPublished On 15 Feb 2026 11:00 AM  |  Updated On 15 Feb 2026 11:00 AM New Delhi: The Union Ministry of Health and Family Welfare has informed the Lok Sabha that India currently has a total of 818 medical colleges, including AIIMS and Institutes of National Importance (INIS) across India. The details were shared in response to an Unstarred Question on February 6, 2026. Replying to queries raised by Shri Jagannath Sarkar regarding districts without government medical colleges and plans for prioritising high-population districts, Minister of State for Health and Family Welfare Shri Prataprao Jadhav said that the National Medical Commission (NMC) has reported a total of 818 medical colleges nationwide. Also Read: 18 AIIMS Functional, 4 Under Construction: Health Minister tells Parliament As per the list shared in this regard, Uttar Pradesh has the highest number of medical colleges at 88 (51 government and 37 private), followed by Maharashtra with 85 (43 government and 42 private), and Tamil Nadu with 78 colleges (38 government, 40 private). Karnataka has 72 (24 government and 48 private), Telangana has 66 (37 government, 29 private), and Rajasthan has 49 (34 government, 15 private). However, several smaller States and UTs, such as Andaman & Nicobar Islands, Arunachal Pradesh, Chandigarh, Goa, Mizoram, Nagaland and Sikkim have only one medical college each.

818 Medical Colleges in India, Maximum in UP, Maharashtra, Tamil Nadu: Health Ministry tells Parliament Written By : Divyani PaulPublished O...