Wednesday, September 6, 2017

அக்யூட் டிராமா..! - அனிதா தற்கொலைக்கு உளவியல் விளக்கம்

VIKATAN

"என் அம்மா நோயுற்றுத் தவித்தபோது சரியான மருத்துவம் கிடைக்கவில்லை. அதனால், சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். என் கிராமத்தில் போதிய மருத்துவ வசதி இருந்திருந்தால் என் அம்மாவைக் காப்பாற்றி இருக்கலாம். இனி எங்கள் கிராமத்தில் எந்தப் பிள்ளையும் மருத்துவ வசதி கிடைக்காமல் அம்மாவை இழக்கக்கூடாது. அதற்காகவே, நான் மருத்துவம் படிக்கப்போகிறேன்...' ஏன் நீங்கள் மருத்துவத்தைத் தேர்வு செய்தீர்கள் என்று கேட்ட நிருபருக்கு அனிதா சொன்ன பதில் இது.



எந்தப் பின்புலமும் இல்லாத அடித்தட்டுக் குடும்பத்தில் பிறந்தவர் அனிதா. சிறுவயதிலேயே அம்மா இறந்துவிட்டார். அம்மாவின் மரணம் தான், அனிதாவின் மனதில் மருத்துவக் கனவை விதைத்தது.

அப்பாவும், 4 சகோதரர்களும் அனிதாவை மருத்துவராக்குவதற்காக உழைத்துத் தேய்ந்தார்கள். அனிதா, எந்தச் சூழலிலும் தன் இலக்கில் இருந்து திசை திரும்பவில்லை. ப்ளஸ் டூ பொதுத்தேர்வில் 1176 மதிப்பெண்கள் குவித்தார். மெடிக்கல் கட் ஆப் 196.75.

இரவு பகல் பார்க்காத படிப்பு, கவனச்சிதறல் இல்லாத உழைப்பால் தான் இலக்கு வைத்த மருத்துவப் படிப்பை எட்டிப்பிடிக்கும் விளிம்பில் நின்றபோதுதான் 'நீட்' தடையாக வந்து மறித்தது.

அனிதா மட்டுமல்ல... அவரது குடும்பமே நிலைகுலைந்தது. வாழ்நாள் உழைப்பைக் கொட்டி மகளை மருத்துவராக்கிப் பார்க்க நினைத்த அனிதாவின் தந்தை சண்முகமும், சகோதரர்களும் செய்வதறியாது திகைத்து நின்றார்கள்.

குழப்பம் நீக்கி, மாணவர்கள் பக்கம் நிற்க வேண்டிய தமிழக அரசு, தன்னைத் தற்காத்துக் கொள்ளவே போராடிக் கொண்டிருந்தது. ஒரு பக்கம், நீட் தேர்வுக்கு விலக்கு பெற்று விடுவோம் என்று மாணவர்கள் மத்தியில் நம்பிக்கையை விதைத்துக்கொண்டு, மறுபக்கம். மத்திய அரசுக்கு அதற்கான அழுத்தத்தைத் தர எந்த முயற்சியும் எடுக்காமல் சமரசம் செய்துகொண்டு விட்டார்கள். மத்திய அமைச்சர்கள் தமிழகம் வரும்போது, நீட் தேர்வுக்கு விலக்கு பெற்றுத்தருவோம் என்று பேசுவதும், டெல்லி சென்றபிறகு, மற்ற மாநிலங்களுக்கு ஒரு சட்டம், தமிழகத்துக்கு ஒரு சட்டமெல்லாம் உருவாக்க முடியாது என்று வேறு முகம் காட்டினார்கள்.

கடந்த ஆறுமாத காலமாக மாணவர்களை உச்சபட்சமான குழப்பத்திலேயே வைத்திருந்த மத்திய, மாநில அரசுகள், இறுதியில் கைவிரித்து விட்டார்கள். ஜல்லிக்கட்டுப் போராட்டம் நடந்தபோது, 'மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை ஒத்தி வையுங்கள்' என்று உச்ச நீதிமன்றத்திடம் சொல்லி, தீர்ப்பை நிறுத்திய மத்திய அரசு, 'நீட் தேர்வு கட்டாயம் என்று கோர்ட் சொல்லிவிட்டது, எங்களால் ஒன்றும் செய்ய முடியாது' என்று கை விரித்துவிட்டது.



கண்டிப்பாக விலக்கு கிடைத்துவிடும் என்று நம்பிக்கையோடு இருந்த அனிதாவுக்கு, அதற்கு வாய்ப்பில்லை என்று தெரியவந்தபோது வேறு வாய்ப்பிருக்கவில்லை. லட்சங்களில் கொட்டிக்கொடுத்து, தனிப்பயிற்சி எடுக்கவும் சாத்தியமிருக்கவில்லை.

இருந்தும் தேர்வு எழுதினார். தேர்ச்சி பெறும் அளவுக்கு மதிப்பெண்கள் கிடைக்கவில்லை. தும்பை விட்டு வாலைப் பிடித்த கதையாக, மொத்தமுள்ள மருத்துவ இடங்களில் தமிழக மாணவர்களுக்கு 85 சதவிகிதம், சிபிஎஸ்சி மாணவர்களுக்கு 15 சதவிகிதம் என்று அரசாணை போட்டது தமிழக அரசு. அந்த ஆணை வெளிவந்தபோதே, வலுவற்ற இந்த ஆணை நீதிமன்றத்தில் நிற்கப்போவதில்லை என்று கல்வியாளர்கள் சொன்னார்கள். அதுதான் நடந்தது.

இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றத்தின் கவனத்துக்கு எடுத்துச் சென்றார் வழக்கறிஞர் நளினி சிதம்பரம். இந்த வழக்கில் எதிர்வாதியாக அனிதா தன்னை இணைத்துக்கொண்டார். ஆனால், நீதிமன்றத்தின் காதுகளில் அனிதாவின் அவலக்குரல் விழவில்லை. 'தமிழக அரசின் உத்தரவால், சிபிஎஸ்சி மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றார் நளினி சிதம்பரம்.

அத்தனை கதவுகளும் மூடப்பட்டப் பின்னர், அனிதா மிகுந்த குழப்பத்துக்கும், மன அழுத்தத்துக்கும் ஆளாகியிருந்தார். ஒரு கட்டத்தில், 'இனி தான் கண்ட கனவு பழிக்கப்போவதில்லை... தன் தந்தையும், சகோதரர்களும் உழைத்த உழைப்பு வீணாகிவிட்டது என்பதைப் புரிந்துகொண்ட அனிதா தற்கொலை முடிவை எடுத்துவிட்டார்.

வறுமை, ஏற்றத்தாழ்வுகள், சிறு வயதிலேயே தாயை இழந்த சோகம் என எல்லாத் தடைகளையும் விடாமுயற்சியால் உடைத்தெறிந்து ப்ளஸ் டூ-வில் 1176 மதிப்பெண்கள் வரை பெற்று முன்மாதிரியாக உயர்ந்து நின்ற அனிதாவைத் தற்கொலை நோக்கித் தள்ளியது எது?



தமிழகத்தில் கடந்தாண்டு 8 லட்சம் மாணவர்கள் பிளஸ் டூ தேர்வு எழுதினார்கள். அதில் அறிவியல் பிரிவை எடுத்துப் படித்தவர்களின் எண்ணிக்கை சுமார் 3 லட்சம். அதில் 1 லட்சம் மாணவர்கள் மருத்துவப் படிப்பை இலக்கு வைத்துப் படித்திருப்பார்கள். அவர்களின் முழுக்கவனமும் பிளஸ் டூ-வில் அதிக மதிப்பெண் பெறுவதாக மட்டுமே இருந்திருக்கும். ஏராளமான மாணவர்கள் 1000-த்துக்கு மேல் மதிப்பெண் பெற்றிருப்பார்கள். தமிழக அரசின் உண்மை முகம் அறிந்து, முன்கூட்டியே நீட் தேர்வுக்குத் தயாரான கொஞ்சம் மாணவர்கள் மட்டுமே முட்டிமோதி எம்பிபிஎஸ் சீட்டைப் பெற்றிருக்கிறார்கள். தமிழக அரசின் வார்த்தைகளை நம்பி நீட் தேர்வுக்குத் தயாராகாத எல்லா மாணவர்களுமே செய்வதறியாது நிற்கிறார்கள். அவர்களை எப்படி மீட்கப்போகிறோம்?

"எந்தப் பிரச்னைக்கும் தற்கொலை தீர்வில்லை என்று சில 'நடுநிலை வாதிகளும், 'சமூகப் போராளிகளும்' இப்போது பேசுகிறார்கள். நீட் தேர்வுக்கு சமூக நீதிக்கு எதிரானது; அனிதா போன்று அடித்தட்டில் இருந்து தடையுடைத்து மேலெழுந்து வரும் மாணவர்களுக்கு விரோதமானது; பணத்தைக் கொட்டி தனிப்பயிற்சிக்குச் செல்ல முடியாத ஏழைக்குடும்பத்துப் பிள்ளைகளுக்கு விரோதமானது என்று தொடக்கத்தில் இருந்தே சமூக ஆர்வலர்கள் எதிர்த்து வருகிறார்கள். ஆனால், மத்திய அரசு செவிசாய்க்கவில்லை. மாநில அரசும் பிரச்னையின் உண்மையான மையத்தைப் புரிந்துகொள்ளவில்லை. அதற்கு விலையாகத்தான் அனிதா என்ற மகளை அள்ளிக் கொடுத்திருக்கிறோம். அனிதா தமிழகத்தின் மகள். அவர் தற்கொலையை தமிழகத்தில், உரிய தகுதிகள் இருந்தும் நீட் தேர்வால் தகுதியிழந்து நிற்கும் பல ஆயிரம் மாணவர்களின் மனநிலையை உணர்த்தும் பிம்பமாகப் பார்க்க வேண்டும். இது சமூகத்தின் மிகப்பெரிய தோல்வி. அனிதாவின் மரணத்துக்கு இந்த அரசுகள் மட்டும் காரணம் அல்ல. சிறிதும் உணர்வின்றி வாழும் நீங்களும் நானும் கூட காரணம்தான்.

மாணவர்கள் இந்தச் சூழலை எதிர்கொள்ள வேண்டும். அவர்களுக்கு இந்த சமூகம் துணை நிற்க வேண்டும்..." என்கிறார் மருத்துவர் புகழேந்தி.

" அனிதாவின் தற்கொலை என்னை மிகவும் பாதித்திருக்கிறது. மனம் நொறுங்கும் அளவுக்கு ஓர் மோசமான சம்பவம் நடக்கும்போது தற்கொலையைத் தீர்வாக நினைப்பது சராசரியான ஒரு மனிதச் செயல்பாடு. அதைக் கடந்து நிற்கப் பழக வேண்டும்." என்கிறார் மனநல மருத்துவர் ஷாலினி.

"அனிதா மருத்துவப் படிப்பைக் கனவாகக் கொண்டிருந்தார். அது வாய்க்காது என்றபோது பெரும் ஏமாற்றம் அவரைச் சூழ்ந்து விட்டது. இதுபோன்ற ஏமாற்றங்கள் மனதளவில் மிகக் கொடூரமான காயங்களை உண்டாக்கிவிடும். இந்த நிலைக்கு 'அக்யூட் டிராமா' (acute trauma) என்று பெயர். ' இனி நமக்கு எதிர்காலமே இல்லை' என்று எண்ணத் தோன்றும்.

இந்த நிலை உருவானபிறகு, மனம் நிலையிழந்து வாழ்க்கையையே முடித்துக்கொள்ளலாம் என்ற அளவுக்கு யோசிப்பார்கள். இதுதான் அனிதா விஷயத்திலும் நடந்திருக்கிறது. அனிதாவுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது. இனி என்ன செய்தாலும் அவரின் இழப்புக்கு ஈடாக இருக்காது.

இனியொரு சம்பவம் நிகழாமல் இருக்க, மத்திய மாநில அரசுகள் எவ்வித தயக்கமும் நிபந்தனையும் இன்றி நீட் தேர்வை ரத்துசெய்ய வேண்டும். சுகாதாரத்தில் பிற மாநிலங்களை விட தமிழகம் மிகச் சிறப்பாக முன்னேறியிருக்கிறது. அதற்கு இங்கிருந்த தலைவர்களே காரணம். தமிழக மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டுதான் இந்த கல்வி நிறுவனங்களை அவர்கள் உருவாக்கினார்கள். அந்த வாய்ப்பை, உரிமையை மத்திய அரசு பறிப்பது மிகப்பெரும் அநீதி.." என்கிறார் ஷாலினி.



மத்திய மாநில அரசுகள் அனிதாவின் மரணத்துக்குப் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும்!
நீட் தேர்வு மூலமே மாணவர் சேர்க்கை - வேலூர் சி.எம்.சி நிர்வாகம் தகவல்!
கா.முரளி

நீட் தேர்வு முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, வேலூர் கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி (சி.எம்.சி), மருத்துவ மாணவர் சேர்க்கையைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக சமூக வலைதளத்தில் படுவேகமாகச் செய்திகள் பரவி வருகின்றன. இது தவறான தகவல் என்று கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.



இது குறித்து சி.எம்.சி கல்லூரியின் மக்கள் தொடர்பு அலுவலர் துரை ஜேஸ்பரிடம் பேசினோம்."தவறான தகவல் இது. நீட் தேர்வில், தேர்வான மாணவர்களை மட்டுமே நாங்கள் அட்மிசனுக்கு அழைக்க உள்ளோம். நீட் தேர்வில் தேர்வான 300 மாணவர்களை நாங்கள் நடத்தும் மூன்று நாள் கலந்தாய்வுக்கு அழைப்போம், அதில் அந்த மாணவர்கள் கிராமப்புறத்தில் பணியாற்றக்கூடிய தன்மையையும், லீடர்ஷிப் தகுதியையும் மருத்துவராகக்கூடிய இயல்பும் உள்ளதா என எங்கள் கல்லூரி தேர்வுசெய்யும். அதில் தேர்வான மாணவர்களுக்கு மட்டுமே எம்.பி.பி.எஸ் மற்றும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகளுக்கு சீட் தருவோம். இந்த முறையைத்தான் நாங்கள் இதுநாள் வரை கடைப்பிடித்தோம். ஆனால், தற்போது தனியார் கல்லூரிகள் தனிப்பட்ட முறையில் மாணவர்களுக்கு கலந்தாய்வு நடத்த மருத்துவக் கவுன்சில் தடை செய்துள்ளது.

இதற்கு எதிராகவே உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். அதற்கான விவாதங்கள் முடிந்து அக்டோபர் 11-ம் தேதி தீர்ப்பு வருகிறது. அதன்பிறகே நாங்கள் 99 எம்.பி.பி.எஸ் மற்றும் 61 சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கையை நடத்தவுள்ளோம். நீட் தேர்வை எதிர்த்து, நாங்கள் அட்மிசனை நிறுத்தி வைத்திருப்பதாக வரும் தகவல்கள் முற்றிலும் தவறானது. நீட் தேர்வில் தேர்வான மாணவர்களை மட்டுமே நாங்கள் கலந்தாய்வுக்கு அழைப்போம். 1918-ம் ஆண்டு தொடங்கியது எங்கள் கல்லூரி, இந்தியாவிலேயே முதல் தனியார் மருத்துவக்கல்லூரி. அடுத்த ஆண்டு 100 வது ஆண்டு விழா கொண்டாட உள்ளோம்" என்றார்.

புளூவேல் விளையாடிய இளைஞரின் திகிலூட்டும் அனுபவம்: இது கேமோ, ஆப்-போ அல்ல!


By DIN  |   Published on : 06th September 2017 05:48 PM  |   
student
புளூவேல் விளையாட்டிலிருந்து மீட்கப்பட்ட இளைஞருடன் காவல்துறை அதிகாரி.

காரைக்கால்: விபரீத விளையாட்டான புளூவேல் விளையாடிய காரைக்காலைச் சேர்ந்த இளைஞர், தனக்கு நேரிட்ட திகிலூட்டும் அனுபவங்களை பகிர்ந்து கொண்டதோடு, யாரும் இந்த விளையாட்டை விளையாட வேண்டாம் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.
காரைக்கால் பகுதியில் புளூவேல் விளையாட்டில் ஈடுபட்ட இளைஞரை போலீஸார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
சென்னையில் பணியாற்றும் அலெக்சாண்டர், விடுமுறையில் ஊருக்குச் சென்ற போது இந்த ப்ளூவேல் விளையாட்டை விளையாடத் தொடங்கியுள்ளார். ஆனால் விளையாட்டின் காரணமாக அவர் விடுமுறை முடிந்தும் சென்னை திரும்பவில்லை.
இதுகுறித்து, புளூவேல் கேம் விளையாடிய அலெக்ஸ்சாண்டர் கூறியதாவது, இது டவுன்லோடு செய்யும் ஆப்-போ அல்லது டவுன்லோடு செய்து ஆடும் விளையாட்டோ அல்ல. வெறும் லிங்க் மட்டுமே இருக்கும். வாட்ஸ் அப்பில் (கட்செவி அஞ்சல் ) லிங்க் கிடைத்தவுடன் இந்த விளையாட்டை எப்படியாவது விளையாட வேண்டும் என்ற ஆர்வம் தோன்றியது. இருப்பினும் இது உயிர் சம்பந்தப்பட்ட விளையாட்டு என்பது போகப்போகத்தான் தெரிந்தது.
 
குறிப்பாக, முதலில் நமது பெயர், இமெயில், பாஸ்வேர்டு உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் அட்மின்கள் பெற்றுக்கொள்கிறார்கள். அதன் பிறகு போட்டோ அனுப்ப வேண்டும். பின்னர் நள்ளிரவில் பேய் படம் பார்க்க வேண்டும். அனைத்துமே நள்ளிரவு 2 மணிக்கு மேல்தான். பயமே இந்த கேமில் இருக்கக்கூடாது என்பதுதான் நோக்கம் என்று அட்மின்கள் கூறுகிறார்கள்.
பின்னர் சுடுகாடு அல்லது கடல் பகுதி, ஏரி போன்ற இடங்களுக்கு நள்ளிரவில் தனியாக சென்று செல்ஃபி எடுத்து குரூப் அட்மின்களுக்கு அனுப்ப வேண்டும். 5-ஆவதாக கையில் கத்தி அல்லது பிளேடால் புளூவேல் திமிங்கலம், மீன் போன்றவைகளை வரைய வேண்டும். நான் 5-ஆவது நிலையை நோக்கி போகும்போதுதான், காவல் துறையினர் என்னை மீட்டனர். 
தினமும் பயங்கர காட்சிகள் நிறைந்த சினிமாவை பார்த்துக் கொண்டிருந்தேன். பயத்தைப் போக்குவதே இந்த விளையாட்டின் நோக்கம் என்றாலும் மனதளவில் பாதிக்கப்பட்டேன்.
இந்த விளையாட்டால் நான் என் குடும்பத்தாரிடம் பேசுவதையே நிறுத்திவிட்டேன். எப்போதும் என் அறைக்குள்ளேயே இருப்பேன். இது எனக்கு மிக மோசமான மன அழுத்தத்தை தந்தது. இந்த விளையாட்டில் இருந்து வெளியே வர விரும்பினேன். ஆனால் என்னால் செய்ய முடியவில்லை.
இனி இதுபோன்ற விளையாட்டில் ஈடுபட மாட்டேன். இது இக்கட்டான விஷயங்களை சவாலாக எடுத்து செய்தாலும் கூட, மனதளவில் பெரிய பாதிப்பு ஏற்படுத்துகிறது. யாரும் இதுபோன்ற ஆபத்தான விளையாட்டை விளையாட வேண்டாம் என்று கூறினார்.
பின்னணி: 
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் செல்லிடப்பேசியில் ஆன்லைன் மூலம் புளூவேல் விளையாடும் கல்லூரி, பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை கண்காணிக்கும்படி காவல்துறை டிஜிபி சுனில்குமார் கவுதம் சைபர் கிரைம் போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் சைபர் கிரைம் போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், காரைக்கால் பகுதி நிரவி காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜெரோம்ஜேம்ஸ்பாண்டுக்கு செவ்வாய்க்கிழமை தொலைபேசியில் தொடர்பு கொண்ட நபர், தனது மூத்த சகோதரர் புளூவேல் கேம் விளையாடுவதுபோல் தெரிகிறது. நள்ளிரவில் வெளியே புறப்பட்டுச் சென்றுவிடுகிறார். அவரது நடவடிக்கை சரியில்லை. நாங்கள் ஏதாவது கேட்டால் ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார் என தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, நிரவி போலீஸார் சம்பந்தப்பட்டவரின் வீட்டுக்கு சென்று, அங்கிருந்த அலெக்ஸ்சாண்டர் (23) என்பவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அவரது செல்லிடப் பேசியை பரிசோதித்தபோது, அவர் புளூவேல் விளையாட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. 
இதையடுத்து, அலெக்ஸாண்டரை காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்று, புளூவேல் விளையாட்டால் ஏற்படும் விபரீதம் குறித்து அறிவுரை அளித்தனர்.
பின்னர், மண்டல காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு அழைத்துவரப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

காராகிரக நெரிசல்!

By ஆசிரியர்  |   Published on : 06th September 2017 02:16 AM 
நாகரிக சமுதாயத்தில் சிறைச்சாலை என்பது தண்டிக்கப்பட்டவர்களை அடைத்து வைக்கப்படும் இடம் என்பதாக அல்லாமல், தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள் மனம் திருந்தவும் தண்டனைக்குப் பிறகு அவர்கள் மற்றவர்களைப்போல வாழவும் வழிகோலுகிற சீர்திருத்தக்கூடமாக இருக்க வேண்டும். கடந்த அரைநூற்றாண்டு காலமாக உலகளாவிய அளவில் சிறைச்சாலைகளின் வசதிகள் மேம்படுத்தப்படுவது மட்டுமல்லாமல், சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளைக் கையாளும் முறையிலும் மாற்றங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் வருகின்றன. 
இந்தியாவைப் பொருத்தவரை ஒருசில சிறைச்சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டு அல்லது புதிதாகக் கட்டப்பட்டு வசதிகள் மேம்படுத்தப்பட்டிருக்கின்றன என்றாலும்கூட, சிறைக்காவலர்களின் அணுகுமுறையிலும், சிறையில் அடைக்கப்பட்டவர்கள் நடத்தப்படும் விதத்திலும் பெரிய மாற்றம் எதுவும் ஏற்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. தவறிழைத்து தண்டிக்கப்பட்டவர்கள், தண்டனைக்காலம் முடிந்து வெளியேவரும்போது புதிய மனிதர்களாக வெளிவருவது இல்லை என்பது ஒரு புறம், தவறிழைக்காத விசாரணைக் கைதிகள்கூட சிறைக்குச் சென்று வெளியே வரும்போது தவறான வழிக்குத் திரும்புபவர்களாக மாறிவிடுகின்றனர் என்பது இன்னொருபுறம். இதுதான் இன்றைய இந்தியச் சிறைச்சாலைகளின் நிலைமை. உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்கும் ஒவ்வொருவரும் முதலில் வெளியிடும் அறிக்கை, நிலுவையிலுள்ள வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைப்பேன் என்பதுதான். ஆனால், அந்த வழக்குகளின் எண்ணிக்கை குறைவது இல்லை. அதனால் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கும் விசாரணைக் கைதிகளின் எண்ணிக்கையும் குறைந்தபாடில்லை. 
விசாரணைக் கைதி என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருந்தால் சாட்சியங்கள் கலைக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாய் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர். இவர்களில் பலரும் நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு குற்றமற்றவர்கள் என்று நிரூபிக்கப்பட்டு விடுதலை செய்யப்படவும் வாய்ப்புண்டு. அப்படியிருந்தும் தேவையில்லாமல் பலர் நீண்ட நாட்கள் சிறைக்கொட்டடியில் அடைத்து வைக்கப்படுகின்றனர்.
2015-இல் இந்திய சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்ட விசாரணைக் கைதிகளின் எண்ணிக்கை 2.82 லட்சம். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் 30 வயதுக்கும் குறைவான அதிகம் படிப்பறிவில்லாத இளைஞர்கள். ஏறத்தாழ 10 ஆண்டுகளுக்கு முன்பே, தண்டனைக் காலத்தில் பாதிக்கும் மேல் சிறையில் கழித்திருக்கும் விசாரணைக் கைதிகள் சொந்தப் பிணையில் விடுவிக்கப்பட வேண்டும் என்று இந்திய குற்றவியல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. 2014-இல் இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கீழமை நீதிமன்றங்களுக்குக் கடுமையான உத்தரவைப் பிறப்பித்தும்கூட, இதுவரை இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது வேதனைக்குரியது. 
விசாரணைக் கைதிகள் அளவுக்கு அதிகமாக இருப்பதால் சிறைச்சாலைகள் நிரம்பி வழிகின்றன. கைதிகளின் உடல் நலமும், சிறைச்சாலையின் சுகாதார ஏற்பாடுகளும் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றன. சிறைச்சாலைகளின் பாதுகாப்பும்கூட இதனால் கேள்விக்குறியாகி இருக்கிறது. ஆட்டுக்கொட்டடியில் அடைத்து வைத்திருப்பதுபோலக் கைதிகள் அடைத்து வைக்கப்படுவது அவர்களது மனநிலையைக் கடுமையாக பாதித்து, நிரபராதிகள் குற்றவாளிகளாகவும், குற்றவாளிகள் கடும் குற்றவாளிகளாகவும் மாறிவிடும் போக்குக்கு வழிகோலுகிறது. சிறைச்சாலைத் தற்கொலைகளுக்கும், வன்முறைகளுக்கும் இது ஒரு முக்கிய காரணம்.
கடந்த மாதம் மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு, இந்தியாவின் சிறைச்சாலைகள் சிலவற்றில் 200%-க்கும் அதிகமான கைதிகள் இருப்பதாக மத்திய உள்துறை இணையமைச்சர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் அஹிர் குறிப்பிட்டிருந்தார். 'மாதிரி சிறைச்சாலை 2014 கையேட்டின்படி, ஒவ்வொரு சிறைக்கைதிக்கும் குறைந்தது 8.92 சதுர மீட்டர் அளவிலான இடம் தரப்பட வேண்டும். ஆனால், எவ்வளவு இடம் வழங்கப்படுகிறது என்பது குறித்த புள்ளிவிவரம் இல்லை' என்று அமைச்சர் தெரிவித்திருந்தார்.
இந்தியாவில் 1,401 சிறைச்சாலைகள் இருக்கின்றன. சிறைச்சாலை மாநில பட்டியலில் இருந்தாலும் அதனை மேம்படுத்த 2002-இல் மத்திய அரசு ரூ.1,800 கோடி ஒதுக்கியது. அந்தத் திட்டத்தின் அடிப்படையில் தமிழகத்தின் புழல் சிறைச்சாலை உள்பட 125 புதிய சிறைச்சாலைகள் கட்டப்பட்டன. ஏனைய சிறைச்சாலைகளில் 1,579 அறைகள் அதிகரிக்கப்பட்டன. இத்தனைக்குப் பிறகும்கூட சிறைச்சாலைகள் நிரம்பி வழிகின்றன என்றால், அதற்குக் காரணம் விசாரணைக் கைதிகளின் எண்ணிக்கைதான். 
இந்திய சிறைச்சாலை புள்ளிவிவரம் 2015-இன்படி, இந்தியாவிலுள்ள 1,401 சிறைச்சாலைகளில் இருக்கும் 4,19,623 கைதிகளில் 67 சதவீதம் பேர் அதாவது, 2,82,076 பேர் விசாரணைக் கைதிகள். இவர்களில் பலரும் இரண்டு வருடங்களுக்கும் அதிகமாக சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர்கள்.
முன்பே கூறியதுபோல, சிறைச்சாலை என்பது குற்றவாளிகள் மனம் திருந்தி புதிய மனிதர்களாக வெளியில் வருவதற்காக ஏற்படுத்தப்பட்டவையாக இல்லை. விசாரணைக் கைதிகளும் சிறு குற்றம் புரிந்தவர்களும் சிறைச்சாலையிலிருந்து கடும் குற்றவாளிகளாக வெளியேறும் அவலம் தடுக்கப்பட வேண்டுமானால், சிறைச்சாலைகளில் காணப்படும் நெருக்கடி குறைக்கப்பட வேண்டும். தேவையில்லாமல் குற்றவாளிகள் விசாரணைக் கைதிகளாக தொடர்வது தவிர்க்கப்பட வேண்டும். அனைவருக்கும் சட்ட உதவியும், விரைந்த தீர்ப்பும் மட்டுமே இதற்குத் தீர்வாக இருக்கும்.
 
    வாழ்ந்திருக்க வேண்டும் அனிதா: வைரமுத்து இரங்கல்

    Published : 02 Sep 2017 15:01 IST

    BHARATHI PARASURAMAN_50119




    உச்ச நீதிமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்த அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி அனிதா, மருத்துவப் படிப்பில் சேர இடம் கிடைக்காத நிலையில் தனது வீட்டில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இந்நிலையில் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ட்வீட்டில், 'அடி பாவி மகளே' என்று நெஞ்சு பதறுகிறது. அனிதாவின் தற்கொலையும் சமூக நீதியின் கொலையும் ஒரே தருணத்தில் நிகழ்ந்திருக்கின்றன.

    ஒட்டுமொத்த நிகழ்காலமும் இந்தத் தற்கொலைக்குப் பொறுப்பேற்க வேண்டும்.

    மொத்தம் மரணம் மூன்று வகை. இயல்பான மரணம் – அது மனிதன் மீது இயற்கை காட்டும் எதிர்ப்பு; இன்னொன்று கொலை – அது மனிதன் மீது மனிதன் காட்டும் எதிர்ப்பு; மூன்றாவது தற்கொலை – அது சமூகத்தின் மீது மனிதன் காட்டும் எதிர்ப்பு.

    அநீதிக்கு எதிரான போர்க்களத்தில் இப்போது ஒரு போராளியை இழந்து நிற்கிறோம். ஆழ்ந்த அனுதாபங்களை யாருக்குச் சொல்வது? தமிழ்ச் சமூகத்துத் தங்கங்களே தற்கொலைக்குக் காட்டும் தைரியத்தை, வாழ்வதற்கு ஏன் காட்டக்கூடாது?

    தற்கொலை தீர்வல்ல; வாழ்வுதான் தீர்வு.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
    வேளாங்கண்ணி திருவிழா: எழும்பூர்-நாகப்பட்டினம் இடையே சிறப்பு ரயில்

    Published : 06 Sep 2017 09:22 IST

    சென்னை

    வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு எழும்பூர்-நாகப்பட்டினம் இடையே வரும் 8-ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

    இதன்படி, இந்த சிறப்பு ரயில் (06097) எழும்பூரில் இருந்து இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.30 மணிக்கு நாகப்பட்டினம் சென்றடையும். இதேபோல், வேளாங்கண்ணி-பன்வேல் இடையே சிறப்புக் கட்டண சிறப்பு ரயில் (06099) 9-ம் தேதி இயக்கப்படுகிறது. இந்த ரயில் வேளாங்கண்ணியில் இருந்து காலை 9.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 7.55 மணிக்கு பன்வேல் சென்றடையும்.

    கன்னியாகுமரி-சந்திரகச்சி இடையே சிறப்புக் கட்டண சிறப்பு ரயில் (06905) 7-ம் தேதி (நாளை) இரவு 11 மணிக்கு கன்னியா குமரியில் இருந்து புறப்பட்டு 9-ம் தேதி இரவு 9.15 மணிக்கு சந்திரகச்சி சென்றடையும். இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது. தெற்கு ரயில்வே செய்திக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    எம்.பில்., பிஎச்.டி மாணவர்கள் காப்பியடித்து ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தால் படிப்பு பதிவு ரத்து: யுஜிசி விரைவில் புதிய விதிமுறை

    Published : 06 Sep 2017 09:38 IST


    ஜெ.கு.லிஸ்பன் குமார்

    சென்னை




    எம்.பில்., பிஎச்.டி மாணவர்கள் காப்பியடித்து ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்தால் படிப்பின் பதிவை ரத்து செய்யும் வகையில் புதிய விதிமுறைகளைக் கொண்டுவர பல்கலைக்கழக மானியக்குழு முடிவுசெய்துள்ளது.

    ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிப்பதை ஒழுங்குபடுத்தும் வகையில் பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) புதிய விதிமுறைகளைக் கொண்டு வர முடிவு செய்துள்ளது. காப்பியடிக்கப்படும் அளவுக்கு ஏற்ப தண்டனைகளை விதிக்கவும், அப்பட்டமாக காப்பியடித்திருந்தால் சம்பந்தப்பட்ட மாணவர்களை டிஸ்மிஸ் செய்யும் வகையில் வரைவு விதிமுறைகளை உருவாக்கியுள்ளது.

    அதன்படி, ஒவ்வொரு கல்வி நிறுவனமும் மாணவர்கள் சமர்ப்பிக்கும் ஆய்வுக்கட்டுரைகள் அவை காப்பியடிக்கப்பட்டதா என்பதை கண்டுபிடிக்கும் வகையில் உரிய மென்பொருள் சாதனம் வைத்திருக்க வேண்டும். ஆய்வுகட்டுரையானது சொந்தமாக உருவாக்கப்பட்டது என்றும் மற்றவர்களிடமிருந்து காப்பியடிக்கப்பட்டதல்ல என்றும் மாணவர்களிடமிருந்து உறுதிமொழி பெறப்பட வேண்டும்.

    ஆய்வுக்கட்டுரைகளை ஆய்வுசெய்ய ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலும் கல்வி ஒழுங்கீன நடவடிக்கைக்குழுவும் அதற்கு மேலாக, காப்பியடித்தல் ஒழுங்கு நடவடிக்கை ஆணையம் என்ற ஓர் அமைப்பையும் ஏற்படுத்த வேண்டும். ஏற்கெனவே வெளியிடப்பட்ட ஆய்வுக்கட்டுரைகளின் பாதிப்பு 10 முதல் 40 சதவீதம் இருந்தால் சம்பந்தப்பட்ட பகுதிக்கு மதிப்பெண் அளிக்கக் கூடாது.

    அந்த பகுதிக்குரிய திருத்தப்பட்ட கட்டுரையை சமர்ப்பிக்க ஓராண்டு அவகாசம் அளிக்க வேண்டும். பாதிப்பு 40 முதல் 60 சதவீதம் வரை இருப்பின் அதற்கு ஒரு மதிப்பெண் கூட அளிக்கக்கூடாது. புதிய ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிக்க ஓராண்டு அவகாசம் அளிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் ஒன்றரை ஆண்டை தாண்டக்கூடாது. பாதிப்பு 60 சதவீதத்துக்கு மேல் இருந்தால் ஆய்வுக்கட்டுரைக்கு மதிப்பெண் வழங்காததுடன் படிப்புக்கான பதிவு ரத்து செய்துவிட வேண்டும்.

    காப்பியடித்து ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிப்பதை தடுக்க எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் தொடர்பான வரைவு விதிமுறைகள் குறித்த கருத்துகளை செப்டம்பர் மாதம் 30-ம் தேதிக்குள் தெரியப்படுத்துமாறு யுஜிசி செயலர் பி.கே.தாகூர் அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கும் ஓர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    ஆன்லைனில் வெளியிடலாம்

    வழக்கமாக, ஒப்புதல் பெறப்பட்ட எம்பில் ஆய்வுக்கட்டுரையானது சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் இடம்பெறும். அதே நேரத்தில் பிஎச்.டி. ஆய்வுக்கட்டுரை, சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் இடம்பெறுவதோடு யுஜிசி-க்கும் அனுப்பப்படும். இந்த ஆய்வுக்கட்டுரைகள் அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில் ஆன்லைனில் வெளியிடலாம் என கல்வியாளர்கள் யோசனை தெரிவித்தனர்.

    NEWS TODAY 13.07.2026