Thursday, September 7, 2017

பிஎஸ்என்எல் அதிரடி சலுகை: ரூ.143 கட்டணத்தில் தினமும் 1 ஜிபி இணையசேவை, இலவச அழைப்பு


By PTI  |   Published on : 06th September 2017 02:54 PM  |    

பொதுத்துறை நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனம் மாதம் 143 ரூபாய் கட்டணத்தில் தினந்தோறும் ஒரு ஜி.பி. இணைய சேவை மற்றும் அளவில்லா இலவச அழைப்பு சலுகைகளை ப்ரீபெய்ட் மொபைல் வாடிக்கையாளர்களுக்கு அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது.
மேலும், 429 ரூபாய் கட்டணமாகச் செலுத்தி 90 நாட்களுக்கு (3 மாதம்) தினந்தோறும் ஒரு ஜி.பி. இணைய சேவை மற்றும் இலவச அழைப்ப்புகளையும் பெறலாம்.
இந்த இரு திட்டங்களிலும் (கேரள வட்டம் தவிர) எந்த வரையறையும் இன்றி இலவசமாக உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு பேசிக்கொள்ளலாம். இலவச அழைப்பானது பிஎஸ்என்எல் மட்டுமின்றி மற்ற தொலைத்தொடர்பு நிறுவன எண்களுக்கும் பொருந்தும் என்று தெரிவித்துள்ளது.
அதிரடி இணைய சேவை மற்றும் அளவில்லா அழைப்புகளை ரிலையன்ஸ் ஜியோ இலவசமாக வழங்கியதை அடுத்து ஏற்பட்ட தொழில் போட்டியால், இதர தொலைத்தொடர்பு நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து அதிரடி சலுகைகளுக்கான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன.

    நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு எம்.பி.பி.எஸ். சேர்க்கை: சிஎம்சி நிர்வாகம் முடிவு


    By DIN  |   Published on : 07th September 2017 02:27 AM  |
    உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வரும் வரை எம்.பி.பி.எஸ். படிப்பில் மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைக்க வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி (சிஎம்சி) நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
    நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலான மாணவர் சேர்க்கை முறை காரணமாக தொடர்ந்து பல ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் தங்களது சேர்க்கை நடைமுறை பாதிக்கப்படுவதாகக் கூறி இந்த முடிவை சிஎம்சி நிர்வாகம் எடுத்துள்ளது. வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் (சிஎம்சி) மொத்தம் 100 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்க நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு நடத்தப்பட்டு, முதலாம் ஆண்டு வகுப்புகளும் தொடங்கி விட்டன.
    சிஎம்சி நிர்வாகம் இதுவரை கடைப்பிடித்து வந்த சேர்க்கை முறையை, அனுமதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் சிஎம்சி நிர்வாகம் வழக்கு தொடர்ந்துள்ளது. அதாவது, மத்திய அரசின் நீட் தேர்வை ஏற்பதாகவும், சிஎம்சி-இல் எம்.பி.பி.எஸ். படிக்கும் மாணவர்கள் இந்தியாவில் மட்டுமே பணியாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட சில தகுதிகளை முன்வைத்து நடத்தப்படும் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களைத் தான் சேர்க்கைக்கு அனுமதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என சிஎம்சி நிர்வாகிகள் விளக்கம் அளித்தனர்.
    இந்த வழக்கு அடுத்த மாதம் (அக்டோபர்) விசாரணைக்கு வர உள்ளது. அதுவரை எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைக்க சிஎம்சி நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

      கோடிக்கணக்கில் லஞ்சம்: முறைகேடுகளுக்கு துணைபோன வருமானவரித் துறை உயரதிகாரிகள்


      By யத்தீஷ் யாதவ்  |   Published on : 07th September 2017 04:46 AM  
      வரி ஏய்ப்பில் ஈடுபடுபவர்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதுடன், அவர்களிடம் வரியுடன் அபராதத்தையும் வசூலித்து அரசுக் கருவூலத்தில் சேர்ப்பதுதான் வருமான வரித் துறையின் முதன்மையான பணியாகும். ஆனால், வேலியே பயிரை மேய்ந்த கதையாக வருமான வரித் துறை மூத்த அதிகாரிகள் சிலர் தனியார் நிறுவனத்திடம் இருந்து கோடிகளில் லஞ்சம் பெற்றுக் கொண்டு, முறைகேடுகளுக்கு துணைபோனது இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
      டைரியில் சிக்கிய அதிகாரிகள்: வருமான வரித் துறையின் மூத்த அதிகாரிகள் எஸ்.கே. ஓஜா, சுபாஷ் சந்திரா, எம்.எஸ்.ராய் உள்ளிட்ட சில அதிகாரிகள் மற்றும் வதோதரா நகரைச் சேர்ந்த ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனத்தின் மீது சிபிஐ கடந்த மாதம் 30-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்தது. அந்த நிறுவனத்திடம் இருந்து பெரும் தொகையை லஞ்சமாகப் பெற்றுக் கொண்டு, அவர்களின் வரி ஏய்ப்பு நடவடிக்கைகளை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருந்தனர் என்பதுதான் இந்த வழக்கின் சாராம்சம்.
      வரி ஏய்ப்புக்கு துணைபோன இந்த அதிகாரிகளால் அரசின் கருவூலத்துக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்காக அந்த அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கில் பணம் கைமாறியுள்ளது.
      கடந்த 2011-ஆம் ஆண்டு ஜூலை மாதம் வதோதராவில் உள்ள ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனத்தில் வருமான வரித் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், தங்கள் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் அந்த நிறுவனத்திடம் இருந்து பணம் பெற்றுள்ளனர் என்பதற்கு ஆதாரமான டைரி, கணினியில் பதிவு செய்யப்பட்டிருந்த தகவல்கள் உள்ளிட்ட ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
      4 ஆண்டுகள் புதைந்த உண்மை: வருமான வரித்துறைக்குள் நடைபெற்ற சில ரகசிய சமரச நடவடிக்கைகளால் 4 ஆண்டுகளாக இந்த உண்மைகள் புதைக்கப்பட்டிருந்தன. அதன் பிறகு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் கவனத்துக்கு இந்த விவகாரம் வந்தபோது முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகளின் முகத்திரை கிழிக்கப்பட்டுள்ளதுடன், அரசு அதிகாரிகள் மீது உரிய விசாரணை நடத்தி அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத்தரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
      சிபிஐ-யின் கைகளில் ஆதாரம்: வருமான வரித்துறையினர் ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனத்திடம் இருந்து லஞ்சம் பெற்றார்கள் என்பதற்கு ஆதாரமான டைரி உள்ளிட்ட ஆவணங்கள், வருமான வரித்துறையிடம் இருந்து சிபிஐ-யின் வசம் சென்றுள்ளது. இந்த முக்கிய ஆவணங்களில் உள்ள தகவல்கள் பல நமது பத்திரிகைக்கு கிடைத்துள்ளன.
      போலி நிறுவனங்களும், பினாமிகளும்... ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனம் கருப்புப் பணத்தை பதுக்குவதற்காக பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள், செஷெல்ஸ் உள்ளிட்ட நாடுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட துணை நிறுவனங்கள், அமைப்புகளை ரகசியமாக வைத்திருந்துள்ளது. மேலும், 200-க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களை ஏற்படுத்தி, ஸ்டெர்லிங் பயோடெக், ஸ்டெர்லிங் இண்டர்நேஷனல் என்டர்பிரைசஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் அவற்றிடம் உள்ளன என்று மோசடி செய்துள்ளனர். இரு நிறுவனங்கள் மூலம் கிடைத்த லாபம் பினாமிகள் பெயரில் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் முதலீடு செய்யப்பட்டுள்ளன. ஸ்டெர்லிங் நிறுவனத்தின் கொள்முதல், விற்பனை தொடர்பாகவும் பல போலி ஆவணங்களை தயாரிக்கப்பட்டு முறைகேடு நடைபெற்றுள்ளது.
      இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் பட்டயக் கணக்காளர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரித்தபோது அவர்கள் உண்மையை ஒப்புக் கொண்டுள்ளனர்.
      பொதுவாக இதுபோன்ற முறைகேடுகளில் நிறுவனங்கள் ஈடுபடுவது தெரியவந்தால் வருமான வரித் துறையினர் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பது வழக்கம். ஆனால், ஸ்டெர்லிங் நிறுவன விவகாரத்தில் இந்த முறைகேடுகள் அனைத்தும் தெரிந்திருந்தும் வருமான வரித் துறையின் மூத்த அதிகாரிகள் மூவரும் அதனை கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர்.
      இதற்காக அவர்களுக்கு எவ்வளவு பணம் வழங்கப்பட்டது என்ற விவரமும் அந்த நிறுவனத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட டைரி, கணினி தகவல்கள் மூலம் வெளிப்பட்டுள்ளதுதான் வழக்கின் முக்கிய ஆதாரமாகும்.
      கோடிகளில் லஞ்சம்: அந்த ஆவணங்களில் உள்ள தகவலின்படி வருமான வரித்துறை மூத்த அதிகாரி எஸ்.கே. ஓஜாவுக்கு ரூ. 1 கோடியே 23 லட்சத்து 89 ஆயிரத்து 500 லஞ்சமாக வழங்கப்பட்டுள்ளது. இது, 2007 ஏப்ரல் 13, 2008 ஏப்ரல் 7, 2008 ஏப்ரல் 9, 2009 நவம்பர் 27 ஆகிய தேதிகளில் தவணை முறையில் பணமாகவும், கேட்பு வரைவோலைகளாகவும் (டிமாண்ட் டிராஃப்ட்) வழங்கப்பட்டுள்ளது. இது தவிர ஓஜாவின் பல்வேறு பயணச் செலவுகளையும், நட்சத்திர ஹோட்டல்களில் தங்குவதற்கான செலவையும் அந்த நிறுவனமே மேற்கொண்டுள்ளது.
      ஓஜாவுக்கு கொடுத்த பணத்துக்கான செலவுக் கணக்கை அந்த நிறுவனம் தனது தனிப்பட்ட பதிவேட்டில் 'ஓஜாவுக்கு கொடுத்த வட்டி' என்ற பெயரில் பதிவு செய்து வைத்துள்ளது. ஓஜா குஜராத்தில் 1987 முதல் 1996-ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்திலும், மும்பையில் 1996 முதல் 2005, 2009 முதல் 2015-ஆம் ஆண்டு வரையிலும் பணியாற்றியுள்ளார். ஸ்டெர்லிங் நிறுவனத்துடன்அவர் நீண்டகாலம் தொடர்பில் இருந்துள்ளார். ஓஜாவின் குடும்பத்தினருக்கு பல்வேறு விமானப் போக்குவரத்து செலவுகளையும் அந்த நிறுவனம் செய்து தந்துள்ளது.
      மேலும் இரு அதிகாரிகள்: இது தவிர சிபிஐ வசமுள்ள டைரியின் 8-ஆவது பக்கத்தில் 2011-ஆம் ஆண்டு ஜனவரியில் மூத்த வருமான வரித் துறை அதிகாரி சுபாஷ் சந்திராவுக்கு ரூ.5 லட்சம் கொடுக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர அந்த டைரியின் 14-ஆவது பக்கத்தில் அவருக்கு மேலும் ரூ.2 லட்சம் வழங்கியதாக குறிப்பு உள்ளது. இது தவிர நிறுவனத்தின் கணினிப் பதிவில் சுபாஷ் சந்திராவுக்கு ரூ.11 லட்சம் வழங்கியதாக கணக்கு எழுதப்பட்டுள்ளது.
      மேலும், சுபாஷ் சந்திரா, வருமான வரித் துறையின் மற்றொரு மூத்த அதிகாரியான ராய் ஆகியோருக்கு 2011-ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் ஏப்ரல் வரையிலான காலக்கட்டத்தில் தலா ரூ.75 லட்சம், ரூ.30 லட்சம் மற்றும் ரூ.1 கோடி அளிக்கப்பட்டதாக அந்த டைரியில் எழுதப்பட்டுள்ளது.
      விரைவில் கைது: இது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் கூறுகையில், 'டைரியில் உள்ள தகவல்கள் மூலம் வருமான வரித் துறையின் மூத்த அதிகாரிகளில் யாரெல்லாம் லஞ்சம் பெற்றார்கள் என்பதை கண்டுபிடிப்பதில் பெரிய சிரமம் ஏதுவும் ஏற்படவில்லை. அவர்களும், இந்த முறைகேட்டில் தொடர்புடைய மற்றவர்களும் உரிய நேரத்தில் கைது செய்யப்படுவார்கள்.
      இப்போது வெளிப்பட்டுள்ள விவரங்கள் மிகப்பெரியதொரு ஊழலின் சிறு பகுதிதான். வருமானத் துறையில் ஊழலின் வேர் அடி வரை பரவியுள்ளது. அந்த நிறுவனத்தின் முறைகேடுகளுக்கு பல்வேறு நிலைகளில் வருமான வரித்துறை துணை போயுள்ளது' என்று தெரிவித்தனர்.
      கடந்த காலங்களில் 2ஜி ஊழல், நிலக்கரிச் சுரங்க ஊழல் உள்ளிட்டவை வெளிப்பட்டபோது பெரும் அதிர்ச்சி அலைகள் நாட்டில் ஏற்பட்டன. அவற்றில் பெரும்பாலும் அரசியல்வாதிகள் மீதுதான் முக்கிய குற்றச்சாட்டுகள் இருந்தன. ஆனால், இப்போது முறைகேடுகளைத் தடுக்க வேண்டிய முக்கியப் பொறுப்பில் உள்ள வருமான வரித்துறையின் உயரதிகாரிகள் மீது லஞ்ச-ஊழலின் கரிய நிழல் படரத் தொடங்கியுள்ளது. 
      அரசு நிர்வாகத்தின் கீழ் மட்டம் முதல் உச்சி வரை லஞ்சமும், ஊழலும் புரையோடித்தான் கிடக்கிறது என்பதற்கு இது மற்றொரு உதாரணம். இந்த முறைகேடு தொடர்பான அடுத்தக் கட்ட விசாரணைகளில் மேலும் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
      சிபிஐ-யிடம் சிக்கிய டைரியில் பரபரப்பு தகவல்
      கடந்த காலங்களில் 2ஜி ஊழல், நிலக்கரிச் சுரங்க ஊழல் உள்ளிட்டவை வெளிப்பட்டபோது பெரும் அதிர்ச்சி அலைகள் நாட்டில் ஏற்பட்டன. அவற்றில் பெரும்பாலும் அரசியல்வாதிகள் மீதுதான் முக்கிய குற்றச்சாட்டுகள் இருந்தன. ஆனால், இப்போது முறைகேடுகளைத் தடுக்க வேண்டிய முக்கியப் பொறுப்பில் உள்ள வருமான வரித்துறையின் உயரதிகாரிகள் மீது லஞ்ச-ஊழலின் கரிய நிழல் படரத் தொடங்கியுள்ளது.
      'ப்ளூ வேல்' மாணவர்கள் 5 பேர் மீட்பு

      பதிவு செய்த நாள்07செப்
      2017
      00:02

      அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி அருகே, 'ப்ளூ வேல்' விளையாடிய, அரசு பள்ளி மாணவர்கள், ஐந்து பேர் மீட்கப்பட்டனர். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி, எலவனுார் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சிலர், ப்ளூ வேல் விளையாடுவதாக, நேற்று முன்தினம் தகவல் பரவியது. சின்னதாராபுரம் போலீசார் விசாரணையில் இறங்கினர். இதில், பிளஸ் 1 மாணவர்கள், நான்கு பேர், பிளஸ் 2 மாணவர் ஒருவர் என, ஐந்து பேர், ப்ளூ வேல் விளையாடியதாக, பள்ளி ஆசிரியர்கள் கண்டுபிடித்தனர்.
      மாணவர்களின் பெற்றோரை அழைத்து, டாக்டர்கள் உதவியுடன், பள்ளியில் நேற்று முன்தினம் மாலை, அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது.
      ஐந்து மாணவர்களையும், சில நாட்கள், வெளியிடங்களுக்கு அழைத்து செல்லுமாறு, பெற்றோருக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

      13 மாணவியர் மீட்பு : வேலுார் மாவட்டம், ஆம்பூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், 17 வயது மாணவி, பிளஸ் 2 படித்து வருகிறார். சில நாட்களாக, மாணவி சோர்வுடன் காணப்பட்டார். அவரை அழைத்து, ஆசிரியர்கள் விசாரித்தனர்.இதில், அவர், இரண்டு வாரங்களாக, ப்ளூ வேல் விளையாடியது தெரியவந்தது. மேலும், கையில் அந்த சின்னத்தை பச்சை குத்தி இருந்ததும் தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள், மாணவியை, வேலுார் மாவட்ட குழந்தைகள் நல மையத்தில் ஒப்படைத்தனர். மாணவிக்கு, மருத்துவர்களால் கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு வருகிறது. மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் குணசேகரன், பள்ளியில் சென்று விசாரித்தார். இதில், மேலும், 12 மாணவியர், ப்ளூ வேல் விளையாடுவது தெரியவந்தது. அந்த மாணவியரை அழைத்து விசாரித்தார். அவர்கள், இப்போது தான் விளையாட துவங்கியிருப்பது தெரிந்தது. அவர்களை எச்சரித்து, அனுப்பி வைத்தார்.

      மாணவர், 'அட்மிட்' : 'ப்ளூ வேல்' விளையாட்டுக்கு அடிமையான பாலிடெக்னிக் மாணவர், திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

      திருச்சி மாவட்டம், நாகலாபுரம் பகுதியைச் சேர்ந்த, 16 வயது சிறுவன், துறையூரில் உள்ள பாலிடெக்னிக்கில், முதலாண்டு டிப்ளமா படித்து வருகிறார். இவர் கல்லுாரியில் எப்போதும் மொபைல் போனுடன் இருந்துள்ளார். கல்லுாரி நிர்வாகம், மாணவரை கண்டித்துள்ளது. இதனால், கல்லுாரிக்கு செல்வதை தவிர்த்து, வீட்டில் இருந்தபடியே, மொபைல் போனில் விளையாடி கொண்டு இருந்துள்ளார். மேலும், தந்தையிடம் கல்லுாரியில், 'டிசி' வாங்கி வருமாறும் கூறியுள்ளார். அதிர்ச்சி அடைந்த தந்தை, நேற்று காலை மொபைல் போனை பிடுங்கி உடைத்து விட்டார். ஆத்திரமடைந்த மாணவர், தந்தையிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். மகனை ஒரு அறையில் வைத்து பூட்டி, போலீசாருக்கு தெரிவித்தார். துறையூர் போலீசார், மாணவனை மீட்டு, துறையூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். விசாரணையில், அவர், ப்ளூ வேல் விளையாட்டுக்கு அடிமையானது தெரியவந்தது. மாணவரை, நேற்று மதியம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
      'நீட்' போராட்ட பின்னணியில் கல்லூரி நிர்வாகம்? ;

      யு.ஜி.சி. உத்தரவால் விசாரணை துவக்கம்

      'நீட்' தேர்வுக்கு எதிராக, தனியார் கல்லுாரி மாணவர் போராட்டங்களின் பின்னணியில், கல்லுாரி நிர்வாகத்தினர் மற்றும் ஆசிரியர்கள் உள்ளனரா என, விசாரணை துவங்கி உள்ளது.

      'நீட்' தேர்வில் தேர்ச்சி பெறாததால், பிளஸ் ௨ முடித்த மாணவி அனிதா, தற்கொலை செய்து கொண்டார்.







      போராட்டங்கள் :

      அதனால், தமிழகம் முழுவதும் மீண்டும், 'நீட்' தேர்வை எதிர்த்து, சில மாணவர் அமைப்புகள் மற்றும் தமிழ் ஆதரவு அமைப்புகள் சார்பில், போராட்டங்கள் நடந்து வருகின்றன.இதில், இதுவரை இல்லாத அளவுக்கு, மாநிலத்தில்

      உள்ள சில தனியார் கல்லுாரிகள், குறிப்பாக, மருத்துவத்துக்கு தொடர்பில்லாத கலை, அறிவியல் கல்லுாரி மாணவர்கள், போராட்டம் நடத்தி வருகின்றனர். ஜல்லிக்கட்டு போராட்டத்தை போல், இந்த போராட்டங்களிலும், மத்திய அரசுக்கு எதிராக கோஷமிடுகின்றனர். இது குறித்து, கலை, அறிவியல் கல்லுாரிகளை கட்டுப்படுத்தும், பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி.,க்கு, சிலர் புகார் அனுப்பியுள்ளதாக தெரிகிறது.

      மாநில தலைநகரான சென்னையில் உள்ள புதுக்கல்லுாரி மற்றும் லயோலா போன்ற தனியார் கல்லுாரிகளில், மாணவர்கள் போராட்டம் நடத்தி வருவது குறித்து, உயர்கல்வித் துறையினர் விசாரணையை துவங்கியுள்ளனர். யு.ஜி.சி., அறிவுறுத்தல்படி, இந்த விசாரணை துவங்கி
      உள்ளது.

      காரணம் என்ன? :

      அரசு கல்லுாரிகளில், போராட்டங்கள் நடத்தும் அமைப்புகள் எவை; தனியார் கல்லுாரிகளில் போராட்டங்கள் நடக்க காரணம் என்ன; கல்லுாரி நிர்வாகத்தினர் மாணவர்களை துாண்டி விட்டனரா; கல்லுாரிகளில் முறைப்படி மாணவர் பேரவை

      தேர்தல் நடத்தப்பட்டதா;போராட்ட பின்னணியில் ஆசிரியர்கள், ஜாதி, மத ரீதியான அமைப்புகள் உள்ளனவா என்றும் விசாரணை நடத்தப்படுகிறது.

      உயர்கல்வித் துறை அதிகாரிகளும், மத்திய, மாநில உளவுத்துறை போலீசாரும் இணைந்து, விசாரணையை துவக்கி உள்ளனர். போராட்டத்தில், கல்லுாரி நிர்வாகத்தினரின் தொடர்பு இருந்தால், யு.ஜி.சி., மூலம், கல்லுாரிகளுக்கு மானியம் வழங்குவதை நிறுத்தவும், அங்கீகாரத்தை ரத்து செய்யவும் பரிந்துரைக்கப்படும் என, தெரிகிறது.
      மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் ஏமாற்றப்படும் அரசு ஊழியர்கள்
      பதிவு செய்த நாள்06செப்
      2017
      22:21

      அரசு மருத்துவ காப்பீட்டு திட்டத்தில், சிகிச்சை பெறக் கூடிய நோய், மருத்துவமனை விபரங்களை மட்டுமே அரசு அறிவித்துள்ளது. சிகிச்சைக்குரிய செலவு விபரத்தை அறிவிக்காததால், காப்பீட்டு நிறுவனம், முறையாக பணம் கொடுப்பதில்லை என, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர். யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை, தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதற்காக, அவர்கள் சம்பளத்தில் மாதம், 180 ரூபாய் பிடித்தம் செய்யப்படுகிறது.

      சிகிச்சை ; இதில், இதய நோய் உட்பட, 59 வகையான நோய்களுக்கு, 300க்கும் மேற்பட்ட தனியார், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம். இந்த திட்டத்தில், நான்கு ஆண்டுகளில், நான்கு லட்சம் ரூபாய் வரை இழப்பீடு பெற முடியும். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, புற்றுநோய்க்கு, 7.5 லட்சம் ரூபாய் வழங்கப்படும். சிகிச்சைக்குரிய தொகையை கணக்கிட்டு வழங்கும் பணியை, எம்.டி., இந்தியா என்ற தனியார் நிறுவனத்திடம், யுனைடெட் இந்தியா நிறுவனம் ஒப்படைத்து உள்ளது. இந்த திட்டத்தில், சிகிச்சை பெறக் கூடிய நோய், மருத்துவமனை விபரங்களை மட்டுமே அரசு வெளியிட்டுள்ளது. மேலும், கண்புரை அறுவை சிகிச்சைக்கு, 25 ஆயிரம் ரூபாய், கர்ப்பப்பை நீக்கத்திற்கு, 45 ஆயிரம் ரூபாய் என, இரண்டு நோய்களுக்கு மட்டுமே, செலவு விபரம் தெரிவித்துள்ளது. மற்ற நோய்களுக்கு தெரிவிக்கவில்லை. இதனால், மற்ற நோய்களுக்கு சிகிச்சை பெறும் அரசு ஊழியர்களுக்கு, அதற்குரிய பணத்தை, காப்பீட்டு நிறுவனம் முழுமையாக வழங்குவதில்லை.

      வழங்குவதில்லை ; இதனால், பாதித் தொகையை, சிகிச்சை பெறுவோரே மருத்துவ மனைக்கு செலுத்த வேண்டியுள்ளது. மேலும், நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்த சிலருக்கு மட்டும் முழுத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

      இது குறித்து, அரசு ஊழியர்கள் கூறியதாவது: சிகிச்சைக்குரிய பணத்தை, முழுமையாக மருத்துவமனைகளுக்கு, காப்பீட்டு நிறுவனம் வழங்குவதில்லை. பிரச்னை செய்வோருக்கு மட்டுமே பணம் வழங்குகின்றனர். டாக்டர் ஆலோசனை கட்டணம், அறுவை சிகிச்சை கட்டணம், அறை வாடகை, உணவு உள்ளிட்ட அனைத்திற்கும் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பணம் தர வேண்டுமென, அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இதை, இன்சூரன்ஸ் நிறுவனம் செயல்படுத்த மறுக்கிறது. ஒவ்வொரு நோய்க்கும், தனித்தனியாக சிகிச்சைக்கான தொகை விபரத்தை அரசு வெளியிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். இன்சூரன்ஸ் நிறுவனத்தினர், 'அரசு விதிமுறைப்படி, இழப்பீட்டு தொகை வழங்கி வருகிறோம்' என்றனர்.
      மோகனூரை புரட்டிப்போட்ட சூறாவளி : 50 ஆயிரம் வாழை, வெற்றிலை சேதம்

      பதிவு செய்த நாள்06செப்
      2017
      20:06




      நாமக்கல்: மோகனுாரை புரட்டி போட்ட சூறாவளி காற்றால், மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள, 50 ஆயிரம் வாழைகள், 10 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த, வெற்றிலை கொடிக்கால் பயிர்கள் சேதம் அடைந்தன.

      நாமக்கல் மாவட்டம், மோகனுார் பகுதியில், நேற்று முன்தினம் மாலை, 5:30 மணிக்கு, வரலாறு காணாத சூறாவளி காற்று வீசியது. காவிரி கரையோரம் பயிரிடப்பட்டிருந்த, வாழை மரங்கள், வெற்றிலை கொடிக்கால் பயிர்கள் வேரோடு சாய்ந்தன. மோகனுாரில், 25க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன. அப்பகுதியில் இரவு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது; 200க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன. மக்கள், பீதியில் வெளியே வராமல் வீட்டுக்குள் முடங்கினர். அப்பகுதியில் பல நுாறு ஏக்கர் பயிரிடப்பட்டிருந்த, ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் வேரோடு சாய்ந்தும், முறிந்தும், விவசாயிகளுக்கு, பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளன.
      அதேபோல், 10 ஏக்கர் வெற்றிலை கொடிக்கால் பயிரும் மூட்டுவேலியுடன் கீழே விழுந்துள்ளதால், பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

      இது குறித்து, தமிழ்நாடு வாழை உற்பத்தியாளர் கூட்டமைப்பின் நிர்வாகி, கூறியதாவது:

      சூறாவளி காற்றில், 50 ஆயிரம் வாழை மரங்கள், வெற்றிலை கொடிக்கால் ஆகியவை சேதமடைந்துள்ளன. விவசாயிகளுக்கு, மூன்று கோடி ரூபாய்க்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

      இன்ஷூரன்ஸ் திட்டத்துக்கு, இலக்கு நிர்ணயம் செய்து முடிக்க நினைக்கும், வேளாண் துறையினர், இதற்கு எப்படி இழப்பீடு தரப்போகின்றனர் என்பது தெரியவில்லை.

      மாவட்ட நிர்வாகம், நேரில் ஆய்வு செய்து, உரிய இழப்பீடு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கூறினார்.

      NEWS TODAY 13.07.2026