Wednesday, September 6, 2017

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்துக்கு தடை கோரி வழக்கு: அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

Published : 06 Sep 2017 11:16 IST


கி.மகாராஜன்

மதுரை




தமிழகத்தில் செப். 7 முதல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு தடை விதிக்கக்கோரிய மனு தொடர்பாக அரசு பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மதுரையைச் சேர்ந்த டி.சேகரன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த பொதுநலன் மனு:

தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சங்கங்கள் கூட்டு செயல் குழு மாநிலம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 7.9.2017 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவர் என அறிவித்துள்ளது. அன்று அரசு பள்ளிகள், அரசு கல்லூரிகள் இயங்காது என்றும், இந்த வேலை நிறுத்தத்தில் 12 லட்சம் அரசு ஊழியர்கள் பங்கேற்பார்கள் என்றும் அறிவித்துள்ளனர். மேலும் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சாலை மறியில் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

இந்த வேலை நிறுத்தப் போராட்டம், சாலை மறியல் உள்ளிட்ட அனைத்து போராட்டங்களையும் நிறுத்தி அரசு பள்ளிகள், கல்லூரிகள் சமூகமாக செயல்பட தேவையான நடவடிக்கைகள் எடுக்குமாறு தலைமைச் செயலர், உள்துறை செயலருக்கு 24.8.2017-ல் மனு அனுப்பினேன். என் மனு மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதில் இடையூறு ஏற்படும்.

அரசு ஊழியர்களுக்கு அரசு ஏற்கெனவே போதுமான அளவு ஊதியம் வழங்கி வருகிறது. அரசின் மொத்த வருவாயையும் சம்பளம் வழங்குவதற்கு மட்டும் பயன்படுத்த முடியாது. மாநிலத்தில் நடைபெற்று வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றவும் தேவைப்படுகிறது. கூடுதல் ஊதியம் பெறுவதற்காக வேலை நிறுத்தம் என்ற மிரட்டல் ஆயுதத்தை கையில் எடுப்பது தவறு.

கோரிக்கைகளை நிறைவேற்ற பல்வேறு வழிகள் உள்ளன. அரசிடம் மனு அளிக்கலாம். அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடலாம். இதை செய்யாமல் பொதுமக்களையும், அரசு நிர்வாகத்தையும் ஸ்தம்பிக்க செய்யும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது சட்டப்படி தவறு. வேலை நிறுத்தம் அடிப்படை உரிமை அல்ல. மேலும் வேலை நிறுத்தம் செய்வது அரசு ஊழியர்களின் நன்னடத்தை விதிகளுக்கு எதிரானது.

வேலை நிறுத்தத்தை அனுமதித்தால் அரசு பள்ளிகளில் 10, 11, 12 பயிலும் மாணவர்களின் எதிர்காலம் பாதிப்புக்குள்ளாகும். பொதுமக்களும் பாதிக்கப்படுவர். அரசு அலுவலங்களில் பணிகள் பாதிக்கப்படும். எனவே அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 7.9.2017 முதல் மேற்கொள்ள உள்ள வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு இன்று (புதன்கிழமை) காலை விசாரணைக்கு வந்தது. அப்போது மனு தொடர்பாக அரசிடம் தகவல் பெற்று நீதிமன்றத்துக்கு தெரிவிக்க அரசு வழக்கறிஞரை நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர். விசாரணையை பிற்பகலுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தும் கட்டாயத்தில் தமிழக அரசு: நீட் விவகாரம் குறித்து எடப்பாடி பழனிசாமி பேட்டி

Published : 06 Sep 2017 11:59 IST

சென்னை



உச்ச நீதிமன்ற உத்தரவால் தமிழகத்தில் நீட் நுழைவுத்தேர்வை அமல்படுத்தும் கட்டாயத்திற்கு தமிழக அரசு தள்ளப்பட்டுள்ளது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:

தமிழக அரசு பெரும்பான்மையுடன் உள்ளது. இந்த ஆட்சி பதவி விலக வேண்டும் என்று நாங்கள் எப்போது பதவி ஏற்றோமோ அப்போது முதல் ஸ்டாலின் கூறி வருகிறார். அதிமுகவுக்கு சபாநாயகருடன் சேர்த்து 135 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். அதிமுக அறுதி பெரும்பான்மையோடு உள்ளது.

அனைவரும் அதிமுக ஆட்சிக்கு ஆதரவை அளித்து வருகின்றனர். நேற்றைய கூட்டத்துக்கு பல்வேறு காரணங்களினால் சிலர் வரவில்லை.

தமிழகத்தில் நீட் மருத்துவ நுழைவுத்தேர்வுக்கு விலக்கு வேண்டும் என்பது தான் எங்கள் எண்ணமும். அதற்காகத்தான் போராடினோம், டெல்லிச்சென்று முயற்சி எடுத்தோம். ஆனால் உச்ச நீதிமன்ற தீர்ப்பினால் நீட்டை அமல்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு தமிழக அரசு தள்ளப்பட்டு விட்டதை அனைவரும் அறிவீர்கள்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.
6 வகையான விதிமீறலில் ஈடுபட்டால் மட்டுமே அசல் ஓட்டுநர் உரிம சோதனை: காவல்துறை விளக்கம்

Published : 06 Sep 2017 14:30 IST

சென்னை



6 விதிமுறை மீறலில் ஈடுபட்டால் மட்டுமே அசல் ஓட்டுநர் உரிமம் கேட்கப்படும் என சென்னை காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

அசல் வாகன ஓட்டுநர் வாகன உரிமம் புதன்கிழமை முதல் கேட்கப்படும் என சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது, இது பற்றிய விவரம் வருமாறு:

வாகன ஓட்டிகள் தங்களது அசல் வாகன ஓட்டுநர் உரிமத்தைக் கட்டாயமாக வைத்திருக்க வேண்டும் காவல்துறையினரோ அல்லது போக்குவரத்துத் துறை அதிகாரிகளோ கேட்கும்போது அதைக் காட்ட வேண்டும் என தமிழக அரசு அண்மையில் உத்தரவிட்டது.

அசல் வாகன ஓட்டுநர் உரிம கட்டாயத்துக்கான தடையை நீட்டிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டதைத் தொடர்ந்து, வாகன ஓட்டிகள் இன்று முதல் அசல் உரிமத்தை கட்டாயம் வைத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

வாகன ஓட்டிகள் அசல் உரிமத்தை கையில் வைத்திருந்தால் தொலைந்துவிடும் வாய்ப்பும், பாதுகாப்பு இல்லாதா சூழ்நிலையும் இருப்பதாக சுட்டிக்காட்டினர். ஆனால் வாகன ஓட்டிகள் அனைவரிடமும் அசல் ஓட்டுநர் உரிமத்தை கேட்பதோ, இதற்காக தனி சோதனையோ நடத்தப்போவதில்லை என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6 விதிமுறை மீறல்களில் ஈடுபடுபவர்களிடம் மட்டுமே அசல் வாகன ஓட்டுநர் உரிமத்தை கேட்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதல் குழு தெரிவித்துள்ளது.

அத்தகைய 6 விதிமீறல்களில் ஈடுபட்டு போலீஸாரிடம் சிக்குபவர்களிடம் மட்டுமே அசல் ஓட்டுநர் உரிமம் கேட்கப்பட உள்ளதால் வாகன ஓட்டிகள் பயமின்றி பயணிக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

6 விதிமீறல்கள் என்னென்ன என்பது குறித்த உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்:

1. மொபைல் போனில் பேசியபடி வாகனம் ஓட்டுதல்

2. அதி வேகமாக வாகனம் ஓட்டுதல்

3. மதுபோதையில் வாகனம் ஓட்டுதல்

4. வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகளவு பாரம் ஏற்றுதல்

5. போக்குவரத்து சிக்னலை மதிக்காமல் செல்லுதல்

6. சரக்கு வாகனங்களில் மக்களை ஏற்றுதல்

மேற்கூறிய 6 விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும். அசல் ஓட்டுநர் உரிமத்தை சோதனை செய்வதற்காக தனியாக வாகன சோதனை நடைபெறப் போவதில்லை. வழக்கமான சோதனையே நடைபெறும்.

இந்தச் சோதனை மூலம் பறிமுதல் செய்யப்படும் வாகன ஓட்டுநர் உரிமம், மோட்டார் வாகனச் சட்டப்படி வட்டார போக்குவரத்து அலுவலர் மூலம் குறைந்தது 3 மாதங்களாவது தற்காலிக நீக்கம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியின் கட்டணத்தை குறைக்க வேண்டும்: அன்புமணி
Published : 06 Sep 2017 15:19 IST

சென்னை





அரசு மருத்துவக் கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தையே ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, பல்மருத்துவக் கல்லூரி ஆகியவற்றிலும் வசூலிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ராஜாமுத்தையா மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றை தமிழக அரசே நேரடியாக நடத்த வேண்டும்; கல்விக் கட்டணங்களைக் குறைக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அக்கல்லூரிகளின் மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டிய அரசு, அதற்கு மாறாக மாணவர்கள் போராட்டத்தை அடுக்க நினைப்பது கண்டிக்கத்தக்கது.

அண்ணாமலைப் பல்கலைக்கழகம் நிர்வாக சீர்கேடுகளில் சிக்கி சீரழிந்து கொண்டிருந்த நேரத்தில் அப்பல்கலைக்கழகத்தை அரசே கையகப்படுத்தி நடத்த வேண்டும் என்ற யோசனையை முதன்முதலில் முன்வைத்தது பாமகதான். அதன்படியே அண்ணாமலைப் பல்கலைக்கழகமும், அதனுடன் இணைந்த ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி ஆகியவையும் அரசுடைமை ஆக்கப்பட்டன. ஆனால், அதன் பயன்கள் இன்று வரை மக்களுக்கும், மாணவர்களுக்கும் கிடைக்கவில்லை. இந்நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காகத் தான் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, மற்றும் பல் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராடி வருகின்றனர். அவர்களின் கோரிக்கை நியாயமானதாகும்.

தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகளை நிர்வகிப்பதற்காகவே தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகம் அமைக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றை எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகத்துடன் இணைப்பதுதான் முறையாகும். ஆனால், தமிழக அரசோ அதை செய்யாமல் அந்த இரு கல்லூரிகளையும் அண்ணாமலைப் பல்கலையின் அங்கமாகவே நிர்வகித்து வருகிறது. இந்த இரு கல்லூரிகளும் தனியாரின் கட்டுப்பாட்டில் இருந்த போது அவற்றில் மருத்துவப் படிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. அண்ணாமலை பல்கலை அரசுடைமையாக்கப்பட்ட பிறகும் அதே கட்டணத்தை தமிழக அரசு வசூலிப்பது ஏற்க முடியாததாகும்.

தமிழக அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியிலும் நீட் தேர்வின் அடிப்படையில் ஒற்றைச் சாளர கலந்தாய்வு மூலம் தான் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. ஆனால், இளநிலை மருத்துவப் படிப்புக்கு ஆண்டுக் கட்டணமாக அரசு கல்லூரிகளில் 13,600 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படும் நிலையில், ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் ரூ 5 லட்சத்து 54 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது. அதேபோல், இளநிலை பல் மருத்துவம், முதுநிலை மருத்துவப் பட்டப் படிப்பு, முதுநிலை மருத்துவப் பட்டயப் படிப்பு ஆகியவற்றுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் முறையே ரூ.11,600, ரூ. 42,025, ரூ.31,325 மட்டுமே வசூலிக்கப்படும் நிலையில், ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் இப்படிப்புகளுக்கு முறையே ரூ.3.40 லட்சம், ரூ.9.80 லட்சம், ரூ.8.00 லட்சம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

தமிழகத்திலுள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.4 லட்சத்துக்கும் குறைவாகவே கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், அதைவிட அதிகமாக கட்டணம் வசூலிப்பது அரசே நடத்தும் கட்டணக் கொள்ளையாக அமையாதா?

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அரசு நிதியில் தான் இயங்குகிறது. மாணவர் சேர்க்கை மற்றும் கல்வித் தகுதியில் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கும், அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. அவ்வாறு இருக்கும் போது, ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் மட்டும் மிக அதிகமாக கட்டணம் வசூலிப்பது எந்த வகையில் சரியாகும்? இந்த நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி முதல் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். ஒன்பதாவது நாளாக போராட்டம் நீடிக்கும் நிலையில், மாணவர்களை அழைத்துப் பேசி பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு காண்பது தான் சரியான அணுகுமுறை.

மாறாக, மருத்துவம் மற்றும் பல்மருத்துவக் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்துள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழக நிர்வாகம், விடுதிகளையும் மூடி மாணவர்களை கட்டாயமாக வெளியேற்றியிருக்கிறது. அதுமட்டுமின்றி, போராட்டத்தைக் கைவிடவில்லை என்றால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மிரட்டல் விடுத்திருக்கிறது.

மாணவர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு அன்பும், பேச்சும் தான் சிறந்த ஆயுதங்கள் ஆகும். மாறாக, அடக்குமுறையை ஏவ நினைத்தால் அது எரியும் தீயில் ஊற்றப்பட்ட பெட்ரோலாக போராட்டத்தை மேலும் பரவச்செய்து விடும் என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகச் சட்டத்தில் உரிய திருத்தங்களைச் செய்து, அரசு மருத்துவக் கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தையே ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, பல்மருத்துவக் கல்லூரி ஆகியவற்றிலும் வசூலிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
நில அபகரிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் பொன்முடி விடுவிக்கப்பட்ட உத்தரவு ரத்து- உயர் நீதிமன்றம்

Published : 06 Sep 2017 17:31 IST

சென்னை



அரசு நிலத்தை அபகரித்த வழக்கிலிருந்து திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி விடுவிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

2002-ம் ஆண்டு பொன்முடி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் அந்த வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கு விசாரணையின்போது, 1996-2001 -ம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் 1998ஆம் ஆண்டு போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த க.பொன்முடி, அரசுக்கு சொந்தமாக சைதாப்பேட்டையில் இருந்த 3600 சதுர அடி நிலத்தை மோசடி செய்து தனது மாமியார் சரஸ்வதி பெயரில் பதிவு செய்து வீடு கட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதனடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது. 2007ஆம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்த சென்னை மூன்றாவது அமர்வு நீதிமன்றம் வழக்கிலிருந்து பொன்முடியை விடுவித்தது. நீதிமன்ற உத்தரவில் சொத்துக் குவிப்பு வழக்கில் இந்த சொத்தும் அடங்கி இருப்பதால் ஒரு குற்றத்திற்காக இரு வேறு விசாரணைகள் நடத்தக் கூடாது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழக லஞ்ச ஒழிப்பு துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், அரசு நில அபகரிப்பு வழக்கிலிருந்து பொன்முடி விடுவிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து இன்று உத்தரவிட்டார்.

அவரது தீர்ப்பில், சொத்துக் குவிப்பு வழக்கும், அரசு நில அபகரிப்பு வழக்கும் ஒரே மாதிரியானவையாக இல்லாதபோது, சொத்துக் குவிப்பு வழக்கில் விடுவித்ததற்காக நில அபகரிப்பு வழக்கிலும் விடுவித்தது செல்லாது என குறிப்பிட்டுள்ளார்.

எனவே பொன்முடி தன் மீதான அரசு நில அபகரிப்பு வழக்கை எதிர்கொள்ள வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
நீட் தேர்வு சர்ச்சையால் மருத்துவ படிப்பில் மாணவர் சேர்க்கையை நிறுத்தியது வேலூர் சிஎம்சி

Published : 06 Sep 2017 10:54 IST




நீட் தேர்வு சர்ச்சையால் 2017 - 2018 ஆண்டுக்கான எம்பிபிஎஸ் மற்றும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை வேலூர் சிஎம்சி (கிறிஸ்டியன் மெடிக்கல் காலேஜ்) நிறுத்திவைத்துள்ளது. சிறுபான்மை கல்வி நிறுவனமான சிஎம்சி சார்பில் தனியாக நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. ஆனால், இந்த ஆண்டு மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய அளவில் ஒரே நுழைவுத் தேர்வை (நீட் தேர்வை) நடத்தி அதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது. இந்நிலையில், தேசிய நுழைவுத்தேர்வு சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தாது என ஏற்கெனவே சிஎம்சி உச்ச நீதிமன்றம்வரை வலியுறுத்திவந்தது.

இந்நிலையில் நீட் தேர்வு சர்ச்சையால் 2017 - 2018 ஆண்டுக்கான சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை நிறுத்திவைத்துள்ளது.

இதன் காரணமாக ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் நடப்பாண்டில் எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்பில் மொத்தமுள்ள 100 இடங்களில் ஓரிடமும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி எனப்படும் சிறப்பு மருத்துவப் படிப்பில் உள்ள 62 இடங்களில் ஓரிடமும் மட்டுமே நிரப்பப்படுவதாக சிஎம்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சிஎம்சி இயக்குநர் சுனில் சாண்டி கூறியதாவது:

நீட் தேர்வின் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளதால் நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம். இந்த ஆண்டு சிஎம்சி மருத்துவக் கல்லூரியில் ஒரே ஒரு மாணவர் மட்டும் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்க்கப்படுவார். அவர், போரில் வீர மரணமடைந்த ராணுவ வீரரின் வாரிசு. மத்திய அரசின் பரிந்துரையின் பேரில் அவருக்கு இந்த இடம் ஒதுக்கப்படுகிறது. அதேபோல் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்பில் இதயநோய் நிபுணத்துவம் பிரிவில் ஒருவருக்கு இடம் வழங்கப்படுகிறது. அது உச்ச நீதிமன்ற உத்தரவின்படி வழங்கப்படுகிறது.

மருத்துவ முதுகலை படிப்பிற்கான சேர்க்கை வழக்கமான நடைமுறையை பின்பற்றியே மேற்கொள்ளப்பட்டது. ஏனெனில், அரசு உத்தரவு வருவதற்கு முன்னதாகவே சிஎம்சியில் மருத்துவ முதுகலை படிப்பிற்கான சேர்க்கை நடந்து முடிந்துவிட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

சிஎம்சி கோரிக்கை என்ன?

சிஎம்சி மருத்துவக் கல்லூரியில் மொத்தமுள்ள 100 எம்பிபிஎஸ் இடங்களில் 85 இடங்கள் சிறுபான்மையினருக்கு ஒதுக்கப்பட்டுகிறது. 15 இடங்கள் மற்றவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது. சிஎம்சி மருத்துவக் கல்லூரி சார்பில் தனியாக நுழைத்தேர்வும் நடத்தப்படுகிறது. அத்தேர்வில் மாணவர்களின் தலைமைப் பண்பு, குழுவாக செயல்படும் திறன், கிராமப்புறங்களில் பணியாற்றும் மனப்பாங்கு ஆகியன சோதிக்கப்படுகின்றன. இதன் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். சிறுபான்மையினருக்கான ஒதுக்கீடு பிரிவில் சேர்க்கப்படும் மாணவர்கள் கிறிஸ்துவ மிஷன் மருத்துவமனைகளில் இரண்டாண்டுகள் சேவை புரிவது கட்டாயம். இத்தகைய ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயேன் மருத்துவ இடம் அவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது. அதேவேளையில் மருத்துவக் கல்வி கட்டணமாக வெறும் ரூ.3000 மட்டுமே வசூலிக்கப்படுகிறது.

எனவே சேவை அடிப்படையில் சமூகத்தில் பொருளாதார ரீதியில் பின்தங்கிய சிறுபான்மையினருக்காக நடத்தப்படும் தங்கள் மருத்துவக் கல்லூரியில் தாங்களே நுழைவுத் தேர்வு நடத்த அரசு ஒப்புதல் வழங்க வேண்டும் என நிர்வாகம் கூறுகிறது.

இருப்பினும், நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தங்கள் மருத்துவக் கல்லூரி விதிகளின்படி தனியாக நுழைவுத் தேர்வு நடத்தி மாணவர்கள் சேர்க்கையை நடத்திக் கொள்ள தயாராக இருக்கிறோம் என்பதே அவர்களது தற்போதையை நிலைப்பாடாக உள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் உள்ளதால் மற்ற இடங்களை நிரப்பாமல் ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட இரண்டு சிறப்பு இடங்களை மட்டும் நிரப்புவதாக சிஎம்சி தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 'நீட்' போராட்டத்துக்கு தடை கோரும் மனு: உடனடியாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

Published : 06 Sep 2017 11:23 IST

சென்னை




மாணவி அனிதா மரணத்தை அடுத்து நீட்டுக்கு எதிரான போராட்டம் தமிழகத்தில் வலுத்து வருகிறது இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்ட மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.

நீட் மருத்துவ நுழைவுத்தேர்வை அமல்படுத்துவதில் தமிழகத்துக்கு விதிவிலக்கு வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதில் இந்த ஆண்டு விதிவிலக்கு கட்டாயம் உண்டு என்று நம்பிய நிலையில் திடீரென நீட் மருத்துவ நுழைவுத்தேர்வுக்கு விதிவிலக்கு இல்லை என்று அறிவிக்கப்பட்டது.

நீட் நுழைவுத்தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்ற அரியலூர் மாணவி அனிதாவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் மாணவி அனிதா திடீரென தற்கொலை செய்துக்கொண்டார். இதற்கு நீதி கேட்டும் நீட் நுழைவுத்தேர்வை எதிர்த்தும் தமிழகம் முழுவதும் போராட்டம் வலுத்து வருகிறது.

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் தமிழகத்தை சேர்ந்த ஜி.எஸ்.மணி என்ற வழக்கறிஞர் அனிதாவின் மரணத்தை அடுத்து, நீட் உத்தரவுக்கு எதிராக தமிழகத்தில் போராட்டம் வலுத்து வருகிறது. நீட் விவகாரத்தில் உத்தரவிட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது இது. உத்தரவை மீறுவதாகும்.

அனிதாவின் மரணத்தை அடுத்து நடக்கும் இத்தகைய போராட்டங்கள் நாளுக்கு நாள் வலுத்து வருகின்றன. இதில் உடனடியாக உச்ச நீதிமன்றம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் அவசர வழக்காக இதை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு எடுப்பதற்கு அப்படி என்ன தேவை வந்தது, உடனடியாக வழக்கை விசாரிக்கும் அளவுக்கு என்ன நடந்து விட்டது என்று கூறி அவசர வழக்காக விசாரிக்க நீதிபதி மறுத்துவிட்டார்.

இந்த வழக்கு பின்னர் ஒரு நாளில் விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.

NEWS TODAY 13.07.2026