Saturday, September 16, 2017

அநீதிக்கு துணை போகலாமா?


By டாக்டர் ஜி.ஆர். இரவீந்திரநாத்  |   Published on : 15th September 2017 01:21 AM 
இந்தியா முழுவதும் உள்ள மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கு நீட் நுழைவுத்தேர்வு மூலம்தான் மாணவர் சேர்க்கையை நடத்திட வேண்டும் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இளநிலை படிப்புகளுக்கு மட்டுமல்லாது முதுநிலை மற்றும் உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கும் நீட் தேர்வு கட்டாயமாகி உள்ளது.
நீட் தேர்வை ஒட்டுமொத்தமாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை சில கட்சியினர் மத்தியில் ஓங்கி ஒலிக்கிறது. தனியார் கல்லூரிகளை அதிக அளவில் நடத்தும் தலைவர்களின் கோரிக்கை இதில் அடங்கியுள்ளது. நீட்டை அடியோடு ரத்து செய்ய வேண்டும் என்பது, தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கொள்ளைக்கு துணைபோவதாகும்.
தமிழக அரசின் இளநிலை, முதுநிலை, உயர்சிறப்பு மருத்துவ இடங்களுக்கு நீட்டிலிருந்து நிரந்தர விலக்கு வேண்டும். தமிழக அரசின் உயர்கல்வி இடங்கள் எதற்கும் மத்திய அரசு தனது நுழைவுத் தேர்வை திணிக்கக் கூடாது. மாநில அரசின் உயர் கல்வி நிறுவனங்களுக்கான மாணவர் சேர்க்கையை மாநில அரசுதான் நடத்த வேண்டும்.இதில் மத்திய அரசு தலையிடக்கூடாது என்பதுதான் சரியான கோரிக்கையாகும்.
ஆனால், இதைவிடுத்து நீட்டை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்படுகிறது. ஏதும் அறியாத மாணவர்களும், இளைஞர்களும் இக்கோரிக்கைக்கு இரையாகின்றனர். இது வருத்தமளிக்கிறது.
மாநில உரிமைகளுக்கும், கூட்டாட்சி கோட்பாட்டிற்கும் எதிரான நீட்டிலிருந்து தமிழக அரசின் ஒதுக்கீட்டு மருத்துவ இடங்களுக்கு நிரந்தர விலக்கு வேண்டும்.அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், நீட்டே வேண்டாம் என்பது சரியல்ல.
ஏனெனில், இந்தியாவில் 63,000-த்திற்கும் மேற்பட்ட மருத்துவ இடங்கள் உள்ளன. 462 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.இவற்றில் சரிபாதிக்கும் மேல், தனியாரிடம் உள்ளன. இவை, மாணவர் சேர்க்கையில் மிகப் பெரும் முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றன. கட்டணக் கொள்ளையில் ஈடுபடுகின்றன. இந்நிறுவனங்கள் தனித்தனியாக நுழைவுத் தேர்வுகளையும் நடத்தி வந்தன. இதனால் மாணவர்கள் பாதிப்படைந்தனர்.
நீட் தேர்வு அடிப்படையிலான மாணவர் சேர்க்கையை சரியான முறையில் நடைமுறைப்படுத்தினால் இம் முறைகேடுகளுக்கு முடிவு கட்ட முடியும்.
நாடு முழுவதும் உள்ள அரசு சாரா மருத்துவக் கல்வி நிறுவனங்களும், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களும் தனித்தனி நுழைவுத் தேர்வுகளை நடத்தின. அகில இந்தியத் தொகுப்பிற்கும், ராணுவ மருத்துவக் கல்லூரிக்கும் தனித்தனி நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட்டன.
இதனால், மருத்துவப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், 50-க்கும் மேற்பட்ட நுழைவுத்தேர்வுகளை எழுத வேண்டிய கட்டாயநிலை இருந்தது. நீட் இதற்கு முடிவு கட்டியுள்ளது. இது வரவேற்புக்குரியது.
நீட், தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும், நிகர்நிலை மருத்துவக் கல்லூரிகளிலும் நிலவி வந்த பேக்கேஜ் முறையை ஒழித்துள்ளது. அதாவது, ரூ.2 கோடி முதல் 4 கோடி வரை முன் கட்டணமாக செலுத்தி இளநிலை முதல் உயர் சிறப்பு மருத்துவம் வரை படித்துவிட்டு வெளியில் வரும் முறை ஒழிக்கப்பட்டுள்ளது. இதுவும் வரவேற்புக்குரியது.
மத்திய அரசின் நிறுவனங்கள், அகில இந்தியத் தொகுப்பு இடங்கள், தனியார் நிகர் நிலை மருத்துவப் பல்கலைக் கழகங்கள்,தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு , நுழைவுத் தேர்வு இன்றி மாணவர் சேர்க்கையை நடத்திட முடியாது.
ஏனெனில் மேற்கண்ட நிறுவனங்களில் அனைத்து மாநிலத்தவரும், வெவ்வேறு கல்வி வாரியங்களில் படித்தவரும் சேர முடியும். மத்திய அரசு இந்த இடங்களுக்காக, ஒரு நுழைவுத் தேர்வை நடத்தியே தீரவேண்டும்.
இந்த நீட் தேர்வில் பல குறைபாடுகள் உள்ளன.அவை களையப்பட வேண்டும்.
நீட் நுழைவுத் தேர்வு இப்பொழுது ஒரு தகுதி காண் தேர்வாகவும் (N​a‌t‌i‌o‌n​a‌l E‌l‌i‌g‌i​b‌i‌l‌i‌t‌y c‌u‌m E‌n‌t‌r​a‌n​c‌e T‌e‌s‌t) உள்ளது. இது மாற்றப்பட வேண்டும். குறைந்த பட்ச தகுதி மதிப்பெண் நிர்ணயம் செய்வதை ரத்து செய்ய வேண்டும். அதை ஒரு பொது நுழைவுத் தேர்வாக (C‌o‌m‌m‌o‌n E‌n‌t‌r​a‌n​c‌e T‌e‌s‌t) மட்டுமே நடத்த வேண்டும்.
எய்ம்ஸ், ஜிப்மர் போன்ற மத்திய அரசின் நிறுவனங்களையும் நீட்டின் கீழ் கொண்டுவர வேண்டும்.
இத்தேர்வை மத்திய தேர்வாணையம் மூலம் நடத்த வேண்டும். தனியார் நிறுவனங்கள் இத்தேர்வுகளை நடத்த அனுமதிக்கக்கூடாது.
நீட் நுழைவுத்தேர்வுக்கான கட்டணங்களை குறைக்க வேண்டும். தேர்வு மையங்களை அதிகப்படுத்த வேண்டும். ஏழை மாணவர்களுக்கான போக்குவரத்து, தங்கும் வசதிகளுக்கு அரசே உதவி செய்ய வேண்டும்.
= அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள், ராணுவ மருத்துவக் கல்லூரி, வெளிநாடு வாழ் இந்தியர்கள், தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள், தனியார் நிகர் நிலை மருத்துவப் பல்கலைக் கழகங்களின் மருத்துவ இடங்களுக்கு மத்திய அரசே நுழைவுத் தேர்வை நடத்துவதோடு, ஒற்றைச் சாளர முறையில் மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும்.
= அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கான இடங்கள் நிரம்பிய பிறகே அரசு சாரா மருத்துவக் கல்லூரிகளுக்கு மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும்.
= அரசு சாரா மருத்துவக் கல்லூரிகள் , எந்தக் காரணம் கொண்டும் மாணவர் சேர்க்கையை நேரடியாக நடத்திட அனுமதிக்கக் கூடாது.
= நிகர் நிலை மருத்துவ இடங்களுக்கான கல்விக் கட்டணத்தை மத்திய அரசே நிர்ணயிக்க வேண்டும்.
= ஆண்டு குடும்ப வருமானம் ரூ.12 லட்சத்திற்கு கீழ் உள்ள மாணவர்கள் அரசு சாரா கல்லூரிகளில் பயின்றால் ,அவர்களது கட்டணம் முழுவதையும் மத்திய அரசே ஏற்க வேண்டும்.
= நிகர்நிலை மருத்துவப் பல்கலைக்கழகங்களும், மாநில அரசின் ஒதுக்கீட்டிற்கு 50 விழுக்காடு இடங்களை வழங்கிட வேண்டும்.
= டிப்ளமோ மருத்துவப் படிப்புகளில் தொலைதூர மற்றும் கடினமான (R‌e‌m‌o‌t‌e a‌n‌d D‌i‌f‌f‌i​c‌u‌l‌t)) பகுதிகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கிட இந்திய மருத்துவக் கழக விதிமுறைகளில் திருத்தங்கள் செய்யப்பட்டன. அதுபோல் கிராமப்புற, அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், உள்ளாட்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும், அகில இந்திய தொகுப்பு இடங்களிலும் 50 விழுக்காட்டு இடங்களை ஒதுக்கீடு செய்ய திருத்தங்களைச் செய்ய வேண்டும்.
= தொலைதூர மற்றும் கடினமான (R‌e‌m‌o‌t‌e a‌n‌d D‌i‌f‌f‌i​c‌u‌l‌t) பகுதிகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு, நீட் நுழைவுத் தேர்வு மதிப்பெண்ணுடன் கூடுதலாக 30 விழுக்காடு வரை மதிப்பெண்கள் வழங்கிட, இந்திய மருத்துவக் கழகத்தின் விதிமுறைகளில் திருத்தம் செய்யப்பட்டது.
அதுபோல், கிராமப்புற, அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு நீட் மதிப்பெண்ணுடன் கூடுதல் மதிப்பெண் வழங்க திருத்தங்களைச் செய்ய வேண்டும். இதன் மூலம் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் போன்றவற்றில் இம்மாணவர்கள் அதிக இடங்களைப் பெற முடியும்.
= முதுநிலை மருத்துவக் கல்வியிலும், உயர் சிறப்பு மருத்துவக் கல்வியிலும் அரசு மருத்துவர்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீட்டை வழங்கிட , இந்திய மருத்துவக் கழக விதிமுறைகளில் திருத்தங்களைக் கொண்டுவரவேண்டும்.
இவற்றை மத்திய அரசு செய்தால், மாணவர் சேர்க்கையில் மாபெரும் மாற்றம் ஏற்படும். ஏழை எளிய மாணவர்களுக்கும் அரசு மற்றும் அரசுசாரா மருத்துவக் கல்லூரிகளின் கதவுகள் திறக்கும்.
கல்வித்தரத்தையும், பாடத்திட்டத்தையும் மாநில அரசு மேம்படுத்த வேண்டும். வட்டாரந்தோறும் தங்கும் வசதியுடன் கூடிய இலவச பயிற்சி மையங்களை உருவாக்க வேண்டும். அனைத்து அரசுப்பள்ளிகளிலும் போட்டித்தேர்வுக்கு இலவச பயிற்சியை வழங்க வேண்டும்.
பயிற்சி முறைகளில் மாற்றம் கொண்டுவருதல், ஆசிரியர்கள் பற்றாக்குறையை போக்குதல் வேண்டும். இவற்றை செய்வதின் மூலம் தமிழக மாணவர்கள், அகில இந்தியத் தொகுப்பு இடங்கள்,மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் அதிக அளவில் சேர முடியும். வேலை வாய்ப்புகளுக்கான போட்டித் தேர்வுகளிலும் வெற்றிக் கொடி நாட்ட முடியும்.
பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலான மருத்துவ மாணவர் சேர்க்கை, ஓரிரு மதிப்பெண்கள் கட் ஆஃப்பில் குறைந்தால் கூட, அடுத்த ஒரு வாய்ப்பையே மறுத்துவிடுகிறது. இது பிளஸ் 2 தேர்வின் போது மாணவர்களுக்குக் கூடுதல் மன அழுத்தத்தை உருவாக்குகிறது. இம்முறை கை
விடப்படவேண்டும். மாநில அரசே மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் நுழைவுத் தேர்வை நடத்திட வேண்டும்.
மத்திய - மாநில அரசுகள், மருத்துவக் கல்லூரிகள் உட்பட, பல்வேறு படிப்புகளுக்கான ,உயர் கல்வி நிறுவனங்களை அதிக அளவில் உருவாக்கிட வேண்டும்.
இவற்றை எல்லாம் முன்னிறுத்திப் போராடாமல், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டுமென முழங்குவது, தனியார் தொழிற்கல்வி நிறுவனங்களின் அநீதிக்கு துணைபோவதாகாதா?

எல்லாரும் விளையாடுவோம்


By அருணன் கபிலன்  |   Published on : 15th September 2017 01:22 AM  | 
உலகத்தில் ஓட்டம் என்பதே இயக்கத்தைக் குறிப்பதாகும். இரத்தநடை என்று யாரும் குறிப்பிடுவதில்லை. இரத்த ஓட்டம் என்பதுதான் வழக்கு. அதுபோலவே நீரோட்டம் தொடங்கி எண்ணவோட்டம் வரை நீள்கிறது ஓட்டம்.
கிராமப்புறங்களில் ஏதோ வண்டி ஓடுது என்று கூறுவது வாழ்வின் இயக்கத்தைப் பற்றித்தான் என்பதை எல்லாரும் அறிவார். கையில் ஓட்டம் இல்லை என்பது பொருளாதாரத்தைக் குறிக்கும் அதே வழக்குத்தான். ஆக மொத்தம் வாழ்வியலின் இயக்கமே ஓட்டம்தான்.
இன்றைய ஓட்டம் பெரும்பாலும் உட்கார்ந்த படியேதான் இருக்கிறது. விளையாட்டுக்குக் கூட யாரும் ஓடி விளையாடுவதைக் காணோம். ஓட்டத்தின் ஊற்றுக்கண்ணே விளையாட்டுத்தான். அது இன்றைக்கு முடங்கிப் போய்க் கிடக்கிறது.
மைதானங்களிலும், வயல் வரப்புகளிலும் ஓடி விளையாடுகிற சிறுவர்களைக் கூடக் காண முடிவதில்லை.
அதனால் கைகளில் செல்லிடப் பேசியை வைத்துக் கொண்டோ அல்லது மடியில் மடிக்கணியைச் சுமந்து கொண்டோ ஏதோ ஓர் உருவத்தை ஓட வைத்துக் கொண்டிருக்கிற வேடிக்கையை எல்லா இடங்களிலும் காண முடிகிறது.
ஓடுதலும் குதித்தலும் தாண்டுதலும் மரமேறுதலும் நீந்துதலும் ஆகிய பல விளையாட்டுகள் மெல்ல மெல்ல மறக்கப்பட்டு வருகின்றன.
அவை வெறும் விளையாட்டல்ல, அவற்றுக்குப் பின்னால் கதைகளும் பாடல்களும் உடற்கூற்று நுட்பங்களும் இயற்கையியலோடு பின்னிப் பிணைந்திருக்கின்றன.
நாந்தான் வீரன்டா நல்லமுத்து பேரன்டா வெள்ளிச் சிலம்பெடுத்து விளையாட வாரன்டா தங்கச் சிலம்பெடுத்துத் தாலிகட்ட வாரன்டா சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு என்ற பாடலோடு குறிப்பிட்ட கோடுகளுக்குள் எதிராளியைத் தொட்டு விட்டு வருவதும் தன்னைத் தொட வருகிற எதிராளியை மடக்கிச் சாமர்த்தியமாய்த் தரை சாய்ப்பதும் உடல் மற்றும் உளத்திற்கு உவகை ஊட்டும் அற்புதமான விளையாட்டல்லவா?
ஒத்தையா ரெட்டையா என்னும் விளையாட்டு- பருவ காலங்களில் எங்கும் பரவிக் கிடக்கும் புளிய முத்து(விதை)களை ஒன்று சேர்த்து ஆடும் ஆட்டம். கணக்கீட்டிற்கு உகந்த அருமையான விளையாட்டு.
கைப்பிடிக்குள் இருக்கின்ற முத்துகள் ஒற்றை இலக்கமா, இரட்டை இலக்கமா என்று அனுமானித்துச் சொல்லுகிற விளையாட்டு.
"ஒத்தையா ரெட்டையான்னச் சொல்லு முத்தையா தப்பா இருந்தா தரணும் ரெட்டிப்பு சரியா இருந்தா நாந்தாரேன் ரெட்டிப்பு' என்று சொல்லிக் கொண்டே மூடிய கைகளுக்குள் இருக்கிற முத்தைக் காட்டுவோரிடம் ஒத்தை என்றோ ரெட்டை என்றோ சொன்னால் விடை பின்னால் கணக்கிடப்பட்டு முத்துகள் வெற்றி பெற்றவருக்கு இரட்டிப்பாய் வந்து சேரும்.
கணக்கு விளையாட்டு இது. ஆழ்மனப் பயிற்சிக்கு வித்திடுகிற விளையாட்டு.
பளிங்குகளால் ஆன குண்டுகளைக் கொண்டு விரல்களுக்கும் கண்களுக்கும் ஒருசேர விசைதந்து ஆடும் ஆட்டம் கோலி எனப்படும் குண்டு விளையாட்டு.
இடது கைக் கட்டை விரலை நிலத்தில் அழுந்தப் பதித்து, அதே கையின் நடுவிரலின் நுனியில் கோலியைப் பொருத்திக் கொண்டு வலது கையின் நடுவிரலாலும் துணைப்பகுதிகளைக் கொண்டும் குறி வைத்துத் தூரத்தில் இருக்கிற மற்றொரு குண்டை அடிக்கிற விளையாட்டு.
"அடிக்கிற குண்டுல அம்பாரி செதறும் விடுக்கிற விசையில வெம்பாறை நொறுங்கும் என் விரலு வில்லாக கோலி அம்பாக குறி பாத்து அடிப்பேன் உங்கோலி பொடிப்பேன்' என்று பாடிக் கொண்டே ஆடும் ஆட்டம்.
எல்லாருக்கும் பிடித்ததான கண்ணாம்பூச்சி என்னும் கண்பொத்தி விளையாட்டு கண்களுக்கு மட்டுமல்ல உடலில் இருக்கும் காந்தப் புலத்துக்கே நல்ல பலனைத் தரும் விளையாட்டு.
எந்தத் திசையில் நிற்கிறோம் என்பதை மனத்தாலே ஊகித்துக் கொண்டு நகர்ந்து தன்னைப் பழிப்புக் காட்டுகிற எதிராளியைத் துரத்திப் பிடிக்கிற விளையாட்டு.
"கண்ணு ரெண்டும் கட்டிக்கிட்டு, கையை மட்டும் நீட்டிக்கிட்டு காத்துக் குதிரையேறி களவாணியப் பிடிக்கப் போறேன் பாத்து இருந்துக்கோ பதுங்கி இருந்துக்கோ தொட்டாப் போதும் தோட்டாத் தேவையில்லை சுட்ட மாதிரியே சுருண்டு விழுந்திரணும்' என்று சொல்லிக் கொண்டே துரத்தி ஓடி விளையாடுகிற விளையாட்டு இந்த ஆட்டம். ஞான திருஷ்டிக்கு உரிய நல்ல ஆட்டம் இது.
சிறுதேர் உருட்டி விளையாடுவதும் சங்க கால விளையாட்டுத்தான். அது இன்றைக்குக் கிராமப்புறங்களில் நொங்கு வண்டி, டயர் வண்டி என்ற பெயர்களில் மறைந்து கொண்டு வருகிறது. ஓட்டத்துக்கும் நுட்ப ஒழுங்குக்கும் கைவினைக்கும் எடுத்துக்காட்டு இந்த விளையாட்டு.
பன நுங்கினை உறிஞ்சிக் குடித்தபின் அதனை நன்றாகச் செதுக்கி வாகனங்களின் அச்சினைப் போல டயராகச் செய்து இடையில் ஒரு கழியால் இணைப்புக் கொடுத்து கவட்டை என்னும் பெரியகழியால் ஸ்டியரிங் செய்து கொண்டு ஊர்முழுக்க வலம் வருகிற அந்த விளையாட்டு நடையும் ஓட்டமுமாய் இருக்கும்.
மேற்சொன்ன எல்லா விளையாட்டுகளுமே ஓட்டத்தை அடிப்படையாகக் கொண்டவைதான். சிறுவர்களுக்குத் தரப்பட்ட தண்டனை கூட விளையாட்டை அடிப்படையாகக் கொண்டவைதான். தோப்புக்கரணம், முழங்காலிடல், கொக்குப் பிடித்தல், மைதானத்தைச் சுற்றி வருதல் இவையெல்லாம் தண்டனையா? உடற்பயிற்சியல்லவா?
இவை ஏதோ சிறுவர்களுக்கானது என்றில்லை. விளையாட்டுகள் வாழ்க்கையைப் போலவே விதியை அடிப்படையாகக் கொண்டவை. அவை வாழ்க்கையைச் சிறுவயதிலிருந்தே தெளிவாகக் கற்றுத் தருகின்றன. பாரதியார் ஓடி விளையாடு என்று சொன்னது பாப்பாக்களுக்கு மட்டுமில்லை; எல்லா வயதினருமே ஓடி விளையாட வேண்டும்.

ஆடம்பரம் தவிர்ப்போம்


By இரா. இராஜாராம்  |   Published on : 16th September 2017 03:22 AM  |     
ஆடம்பரத்திற்கு அளவுகோல் உண்டா என்றால் இல்லை என்று உறுதியாக கூறிவிடலாம். ஆடம்பரத்தின் மூலம் அமைதியும் ஆனந்தமும் பெருகிடுமா, அதுவும் இல்லை. மாறாக, அடங்கா ஆசையும் ஆர்ப்பரிப்பும் தன் முனைப்புமே வளர்ந்திடும்.
"மனநிறைவு என்பது இயற்கையிலேயே நம்மிடம் உள்ள செல்வம். ஆடம்பரம் என்பது நாம் தேடிக்கொள்ளும் வறுமை' என்கிறார் சாக்ரடீஸ்.
நாம் போற்றிப்புகழும் எத்தனையோ அருளாளர்களும் அறிஞர்களும் சிறந்த தலைவர்களும் வசதி வாய்ப்புகள் இருந்தபோதும் எளிமையான வாழ்க்கை முறையே மேற்கொண்டு நிறைவு கண்டனர்.
நம்மில் பலர் வசதி வாய்ப்புகள் வந்த வுடன் தங்களின் செல்வாக்கைப் பறைசாற்றும் விதமாக வீட்டில் தேவைக்கு மிகுதியான ஆடம்பரப் பொருட்கள், விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள், வாகனங்கள் என வாங்கிக் குவிப்பதும், திருமணம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தும்போது உறவினர்களும் நண்பர்களும் பார்த்து வியக்க வேண்டும் என்பதற்காக மிகுந்த பொருட்செலவில் பகட்டாக நடத்துவதும் வகைவகையான உணவுகளைத் தயாரித்துப் பரிமாறுவதும் அதில் ஒரு பகுதி இலையிலேயே உண்ணாமல் வீணாக்கப்படுவதும் அதிகரித்து வரும் ஆடம்பரக் கலாசாரமாகிவிட்டது.
பல்லாயிரம் ரூபாய் பெருமதிப்புள்ள பட்டாசுகளை மண்டபத்திற்கு முன்பாகச் சாலையில் வைத்து வெடிக்கச் செய்வதும் அதனால் அங்கு நச்சுப் புகைமண்டலம் சேர்ந்து நிகழ்ச்சிக்கு வந்திருப்பவர்களுக்கும் சாலையில் செல்வோருக்கும் மூச்சுத்திணறல் ஏற்படுவதும் போக்குவரத்து பாதிப்புக்குள்ளாவதும் சரியா?
நம் வீட்டு நிகழ்ச்சிக்கோ விருந்துக்கோ வரும் விருந்தினர்களைப் பாரபட்சமின்றி மனமுவந்து உபசரித்து உவகை கொள்வதுதானே சிறந்த விருந்தோம்பல் பண்பு.
அதனைவிடுத்து ஆடம்பர உடை உடுத்தி, அளவில்லா ஆபரணங்கள் அணிந்து, சொகுசு காரில் வருபவர்களை ஒருவிதமாகவும் எளிமையான தோற்றத்துடன் வரும் விருந்தினர்களைத் துச்சமாக நினைத்து அவர்களை வேறுவிதமாகவும் நடத்துவதைப் பார்க்கும்போது வெற்றுப் பகட்டுக்கும் புறத்தோற்றத்திற்குமே மதிப்பளிப்பதாக ஆகிவிடாதா?
வசதி படைத்தோர் நடத்திடும் ஆடம்பர நிகழ்ச்சிகளைப் பார்த்து நடுத்தர வர்க்கத்தினரும் கடனை வாங்கியாவது தம் வீட்டுத் திருமண நிகழ்ச்சிகளையும் ஆடம்பரமாக நடத்திட வேண்டும் என்று நடத்திப் பின்னர் கடனைத் திரும்பக் கட்ட முடியாமல் வாழ்நாள் முழுவதும் வருந்தியவர்கள் பலர்.
வீட்டில் குழந்தைகளுக்கு இளம் வயதிலேயே ஆடம்பரம் எது, அவசியம் எது என்பதை நன்கு உணர்த்திட வேண்டும். குழந்தைகள் விரும்பியதெல்லாம் வாங்கிக் கொடுத்து அவர்களைத் திருப்திப்படுத்த முயல்வது அவர்கள் பின்னாளில் பிடிவாதக்காரர்களாகவும், ஊதாரிகளாகவும் உருவாகிட வழிவகுத்துவிடும்.
குடும்ப நிலவரத்தை குழந்தைகள் உணரச் செய்வதும், தாய் - தந்தையர் தாம் பொருள் ஈட்ட படும் பிரயத்தனங்களை அவர்கள் அறியச் செய்திடவும் வேண்டும்.
நற்பண்புகளான எளிமை, இரக்கம், அன்பு, அடக்கம் போன்றவற்றை அவர்கள் மனத்தில் வேர் ஊன்றச் செய்திடல் பெற்றோரின் கடமையாகும். அதுவே பின்னாளில் அவர்கள் வாழ்விலும் ஏற்றம் தரும் நற்பண்புகளாகப் பரிணமிக்கும்.
குடும்பத்தில் ஆடம்பரச் செலவுகளும், அதிகத் தேவைகளையும் வளர்த்துக் கொண்டால் குடும்பத் தலைவன் தகாத முறையில் பொருள் தேடிக்கொண்டு வருவதற்கு வழிகுத்துவிடும்.
முறையற்ற வகையில் தேடும் செல்வம் தகாத நண்பர்களின் சேர்க்கைக்கும் வேண்டாத பழக்கங்களுக்கும் அடிமையாவதற்குக்கூட காரணமாகிவிடும்.
வருவாய் அதிகமாக வருகிறது என்பதற்காகத் தேவைக்கு மிகுதியான ஆடம்பர உடைகள், பொருட்களை வீட்டில் வாங்கிக் குவிப்பது என்பது வீண் செலவு மட்டுமின்றி அதனைக் கையாள்வதும் பாதுகாப்பதுமே பெரும் சுமையாகிவிடும்.
ஆடம்பரச் செலவுகளைத் தவிர்த்தால் பணம் மீதமாகித் தக்க சமயத்தில் அது பயன்படும். பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நல் வழிக்காட்டியாய் இருக்க வேண்டும்.
படிக்கின்றபோதே கைபேசியும், இரு சக்கர வாகனம் மற்றும் ஆடம்பரப் பொருட்களையும் வாங்கிக் கொடுப்பது, அவர்கள் தேவையின்றிச் சுற்றிடவும், கைபேசியே கதி என்று பொன்னான நேரத்தை வீணாக்கிடவும் படிப்பில் கவனமின்றி ஒழுங்கீனம் வளர்வதற்கும் வாய்ப்பாகிவிடும்.
நம் முன்னோர்களால் எளிமையாகக் கொண்டாடப்பட்ட தீபாவளி, பொங்கல், திருமணச் சடங்கு போன்ற நிகழ்ச்சிகளிலும், அமைதியாக நடைபெற வேண்டிய இறுதிச் சடங்குகளிலும் ஆடம்பரச் செலவினங்களும் ஆர்ப்பரிப்புகளும் அதிகரித்துவிட்டனவே, இதனை நாகரிக வளர்ச்சி என ஏற்றுக் கொள்ள முடியுமா?
ஒருவன் எப்படிப் பணம் ஈட்டுகிறான் என்பதைவிட எப்படிச் செலவிடுகிறான் என்பதை வைத்தே அவன் எத்தகையவன் என்பதைத் தீர்மானித்து விடலாம். குறைவான வருவாய் உள்ளோர் அதற்குள் தங்கள் செலவினங்ளைத் திட்டமிடலாம். அதிக வருவாய் பெறுவோர் ஏழை, எளியவர்களுக்காக எத்தனையோ வகையான நலத் திட்டங்களுக்கு உதவிடலாம்.
இலவச மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள் ஏற்படுத்திச் செலவுகள் செய்திடலாம். தொழிற்சாலைகள் ஏற்படுத்தி வேலைவாய்ப்புகளைத் தரலாம். ஊனமுற்றோருக்கு ஏற்ற தொழிற்கூடங்கள் அமைத்து உதவலாம்.
ஆடம்பரப் பகட்டு வாழ்க்கைக்காக அனாவசியமாகச் செலவிடுவதைத் தவிர்த்துத் தனது செல்வத்தால் அறச் செயல்கள் பல செய்து நிறைவு காண்பதே செல்வம் பெற்றதன் பயனாகும்.

    வெட்கித் தலைகுனிவோம்!


    By ஆசிரியர்  |   Published on : 14th September 2017 01:26 AM  |
    ஒருபுறம் உலகக் கோடீஸ்வரர்களின் வரிசையில் இந்தியர்கள் பலர். இன்னொருபுறம் வறுமையின் பிடியில் சிக்கி, இருக்க இடமில்லாமல் தெருவோரங்களில் அகதிகளாய் லட்சக்கணக்கானோர். ஒருபுறம் உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்துவிட்டோம் என்று தம்பட்டம் அடித்துக்கொள்கிறோம். இன்னொருபுறம் விவசாயிகள் உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள். அப்படியானால், இந்தியாவின் வளர்ச்சி என்பது நிஜமா அல்லது தோற்றமா என்கிற கேள்வியை எழுப்பாமல் இருக்க முடியவில்லை.
    எந்தவொரு நாகரிக சமுதாயத்திலும் மனித மலத்தை அகற்றும் பணியில் மனிதர்கள் ஈடுபடுத்தப்படுவது கிடையாது. பொலிவுறு நகரங்கள் குறித்தும், தூய்மை இந்தியா குறித்தும் நாம் திட்டங்கள் தீட்டிக்கொண்டிருக்கும்போது, இந்தியாவின் பல பாகங்களில் மலம் அள்ளும் பணியில் இன்னும் பலர் ஈடுபடுகின்றனர் என்கிற வெட்கத்துக்குரிய செய்தி பலருக்கும் அதிர்ச்சியாகவும் வியப்பாகவும் இருக்கக்கூடும். ஆனால் அதுதான் உண்மை.
    மனித மலம் அள்ளும் தொழிலாளர்களை நாம் இன்னும் முழுமையாக அகற்றிவிடவில்லை. 2011 மக்கள்தொகைக் கணக்கின்படி, குறைந்தது 1,82,505 பேர் மலம் அள்ளும் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். 7,40,078 வீடுகளில் இன்னும்கூட மனிதர்கள் மலம் அள்ளும் விதத்திலான 'உலர் கழிப்பறை' கழிப்பறைகள்தான் காணப்படுகின்றன. 1993-இல் உலர் கழிப்பறைகளில் மலத்தை மனிதர்கள் சுத்தம் செய்யும் வழக்கத்துக்குத் தடைவிதிக்கும் சட்டம் இயற்றப்பட்டும்கூட, இந்த அநாகரிகத்துக்கு இன்னும் முடிவு கட்டப்படவில்லை என்பது வேதனையிலும் வேதனை. 
    1993-இல் இயற்றப்பட்ட சட்டம், 2013-இல் சாக்கடைகளில் மனிதர்களை இறக்கி சுத்தம் செய்யும் பழக்கத்துக்கும் தடை பிறப்பிக்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்டது. அப்படியிருந்தும்கூட பல மாநிலங்கள் இந்தச் சட்டத்தை பின்பற்றுவதில்லை என்பதற்கு வன்மையான கண்டனத்தை மத்திய சமூகநீதித் துறை அமைச்சர் தாவர் சந்த் கெலாட் தெரிவித்திருக்கிறார். 
    இதுகுறித்து திடீர் விழிப்புணர்வு வருவதற்கு, கடந்த மாதம் தில்லியில் சாக்கடையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த 10 பேர் விஷவாயு தாக்கி மரணப்பட்டதுதான் காரணம். ஊராட்சி, நகராட்சி அமைப்புகளின் அக்கறையின்மையும் சமுதாயத்தில் ஆழமாக பதிந்துவிட்டிருக்கும் சமூக வழிமுறைகளும் இதுபோன்ற மரணங்களுக்கு வழிகோலுகின்றன. மனிதாபிமானமற்ற முறையில் சக மனிதனை நடத்துகிறோம் என்கிற குற்ற உணர்வே இல்லாமல் நாம் இருப்பதன் அடையாளம் இது என்றும் கூற வேண்டும்.
    ஊராட்சி, நகராட்சி அமைப்புகள் சாக்கடை துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களை முறையாக அடையாளம் காணவில்லை என்பதும், சாக்கடைத் துப்புரவுப் பணியின்போது இறந்தவர்கள் குறித்த விவரங்களை வெளிப்படுத்துவதில்லை என்பதும், மத்திய - மாநில அரசுகள் இதுகுறித்து முனைப்பு காட்டாமல் இருப்பதால்தான் தவிர்க்கப்படுகிறது. அதுமட்டுமல்ல, 22 மாநிலங்கள் மனித மலம் அள்ளுபவர்கள், சாக்கடையில் இறங்கி பணியாற்றுபவர்கள் குறித்த எல்லா தகவல்களையும் மறைத்துவிட்டிருக்கின்றன. அதனால் அந்தத் தொழிலாளர்களுக்கும் அவர்களது குடும்பத்தாருக்கும் இழப்பீடு உதவி தரவோ, வேறு உதவிகளைச் செய்யவோ முடியாத நிலைமை ஏற்பட்டிருக்கிறது.
    மலக்கழிவை அகற்றும் பணியாளர்களுக்கும் சாக்கடையில் இறங்கி பணியாற்றுபவர்களுக்கும் மறுவாழ்வு அளிப்பதற்கான திட்டமொன்றை மத்திய அரசு அறிவித்தது. மாநில அரசுகளிடம் அழுத்தம் கொடுத்து அவர்களிடமிருந்து இவர்கள் குறித்த தகவல்களை கேட்டு வாங்காதது மட்டுமே மத்திய அரசின் தவறு என்று கருதிவிட வேண்டாம். மனிதகுலத்துக்கே இழிவை ஏற்படுத்தும் இந்த வழிமுறையை அகற்றுவதில் மத்திய அரசும் முனைப்புக் காட்டாமல் இருந்துவருகிறது என்பதுதான் உண்மை.
    இவர்களின் மறுவாழ்வுக்காக 2013-14 நிதியாண்டில் ரூ.557 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த நிதியாண்டில் அது வெறும் ஐந்து கோடியாகக் குறைக்கப்பட்டிருக்கிறதே, அப்படியானால் இந்தியாவில் மனித மலம் அள்ளுபவர்களும், சாக்கடைகளில் இறங்கி பணியாற்றுபவர்களும் இல்லாமல் போய்விட்டார்கள் என்று பொருளா? எந்தளவுக்கு ஆட்சியாளர்கள் இந்த சமுதாய இழிவை அகற்றுவதில் அக்கறை காட்டுகிறார்கள் என்பதைத்தான் துப்புரவுப் பணியாளர்களின் மறுவாழ்வுத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டிருப்பது எடுத்துக்காட்டுகிறது.
    தூய்மை இந்தியா திட்டம், மனித மலம் அள்ளுபவர்கள் குறித்தோ, சாக்கடையில் இறங்கிப் பணியாற்றுபவர்கள் குறித்தோ எந்தவித அக்கறையும் காட்டவில்லை. தூய்மை இந்தியா திட்ட முனைப்பு முழுக்க முழுக்க வெட்டவெளியில் மலம் கழிப்பதற்கு முற்றுப்புள்ளி வைப்பதாகத்தான் இருக்கிறது. எங்கெல்லாம் கழிப்பறைகள் இல்லையோ அங்கெல்லாம் நவீனக் கழிப்பறைகள் கட்டுவது என்பதிலும், மக்கள் கழிப்பறைகளை பயன்படுத்துவதை பழக்கப்படுத்துவது என்பதிலும்தான் முனைப்பு காட்டுகிறது. மனிதர்கள் மூலம் அள்ளப்படும் ஏறத்தாழ 26 லட்சம் உலர் கழிப்பறைகள் குறித்து தூய்மை இந்தியா திட்டம் கவலைப்படவில்லை. முதலில் அந்தக் கழிப்பறைகளை, நவீனக் கழிப்பறைகளாக மாற்றுவதற்கான திட்டத்தை அல்லவா அரசு முன்னெடுத்திருக்க வேண்டும்.
    காலங்காலமாக இருந்துவரும் இந்தக் கொடுமைக்கு சட்டத்தின் மூலம் மட்டுமே முடிவு கட்டிவிட முடியாதுதான். ஆனால், அதுகுறித்த விழிப்புணர்வும் ஒட்டுமொத்த மனித இனத்துக்கே தலைகுனிவை ஏற்படுத்தும் இந்த நடைமுறைக்கு முற்றுப்புள்ளிவைக்க வேண்டும் என்கிற உறுதியும் இருந்தால் மட்டும்தான் இந்தக் கொடுமை தீரும். அது தீராதவரை இந்தியா உலகின் வல்லரசே ஆனாலும் அதில் பெருமையில்லை!

    நெஞ்சு பொறுக்குதில்லையே...


    By ஆசிரியர்  |   Published on : 15th September 2017 01:14 AM  |  
    இலவசமாகவும் கட்டாயமாகவும் கல்வி பெறுவது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குழந்தையின் உரிமை என்று கல்வி பெறும் உரிமைச் சட்டத்தை உருவாக்கிய அரசு, அந்த குழந்தைகளின் பாதுகாப்பை ஏனோ பள்ளி நிர்வாகங்களுக்கே வழங்கிவிட்டிருக்கிறது. பள்ளி நிர்வாகம் தங்கள் கல்விச்சாலையில் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் என்கிற நம்பிக்கையில்தான் பெற்றோர்களும் குழந்தைகளைப் பள்ளிக்கூடங்களுக்கு அனுப்புகிறார்கள். ஆனால், பள்ளிக்கூடங்கள் சட்டத்தின் உணர்வையோ, பெற்றோர்கள் தங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையையோ குறித்துக் கவலைப்படாமல் செயல்படுகின்றன என்பதைத்தான் தில்லியை அடுத்த குருகிராமில் இயங்கும் ரயான் உறைவிடப் பள்ளியில் அரங்கேறியிருக்கும் கோர சம்பவம் உணர்த்துகிறது.
    கடந்த வெள்ளிக்கிழமை ரயான் உறைவிடப் பள்ளியில் பயிலும் பிரத்யுமன் தாக்கூர் என்கிற ஏழு வயதுச் சிறுவன், அந்தப் பள்ளியில் பணிபுரியும் வாகன நடத்துநரான அசோக்குமார் என்பவரால் கொல்லப்பட்டிருக்கும் சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவையே உலுக்கிவிட்டிருக்கிறது. தனது பாலியல் இச்சைக்கு உடன்பட மறுத்த அந்தச் சிறுவன் கழிப்பறையில் பேருந்து நடத்துநரால் கொல்லப்பட்டிருப்பது ரத்தத்தை உறையவைக்கும் கொடூர நிகழ்வு.
    குருகிராமில் செயல்படும் ரயான் உறைவிடப் பள்ளியில் பல பாதுகாப்புக் குறைபாடுகள் காணப்படுகின்றன. கழிப்பறையை பயன்படுத்தும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு அளிக்கக் காவலாளிகள் யாரும் நியமிக்கப்படவில்லை. மாணவர்கள் மட்டுமல்லாமல், ஆசிரியர்கள் அல்லாத ஊழியர்களும் அதே கழிப்பறைகளை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டிருந்தனர். அதனால் குழந்தைகள் பாலியல் இச்சைக்கு உட்படுத்தப்படுவதற்கான சூழல் காணப்பட்டது.
    ஏழு வயது பிரத்யுமன் தாக்கூரின் கொலையாளி எந்தவித சோதனையோ கண்காணிப்போ இல்லாமல் கத்தியுடன் பள்ளிக்கூடத்திற்குள் வளைய வருவது தங்கு தடையில்லாமல் அனுமதிக்கப்பட்டிருந்தது. ரயான் உறைவிடப் பள்ளியில் பணிபுரியும் ஊழியர்களின் பின்னணி குறித்து, காவல்துறையிலிருந்து விவரங்கள் பெறப்படவில்லை. கண்காணிப்பு கேமராக்கள் ஆங்காங்கே பொருத்தப்பட்டிருந்தும்கூட அவை செயல்படுகின்றனவா என்பது கண்காணிக்கப்படவில்லை.
    அசோக்குமார் என்கிற பேருந்து நடத்துநரான அந்தக் கொலையாளி, மாணவர்கள் பயன்படுத்தும் அதே கழிப்பறையை பயன்படுத்தியதும், அதில் நுழைந்ததும் பள்ளி சிறார்களின் பாதுகாப்பு குறித்த குருகிராம் காவல்துறையினரின் வழிகாட்டுதலை மீறிய செயல். காவல்துறையினரின் அறிவுறுத்தலின்படி பள்ளிகளில் வேலைபார்க்கும் அல்லது ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் வாகன ஓட்டுநர்களும், நடத்துநர்களும் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே நுழைய முடியும். அப்படியிருக்கும்போது ரயான் உறைவிடப் பள்ளியில் அசோக்குமார் என்கிற அந்த வாகன நடத்துநர் எப்படி மாணவர்கள் பயன்படுத்தும் கழிப்பறையில் நுழைந்தார் என்பது குறித்தும், கத்தியுடன் அந்தப் பள்ளிக்குள் அவரால் எப்படி வளைய வரமுடிந்தது என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தப்பட்டாக வேண்டும். இதற்கு முன்னால் இதுபோல எத்தனை மாணவர்கள் அசோக்குமார் போன்ற ஊழியர்களால் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிற கேள்வியும் எழுகிறது.
    ரயான் உறைவிடப் பள்ளி என்பது மிகப்பெரிய கல்வி நிறுவனம். இந்தியாவில் மட்டும் 304 பள்ளிக்கூடங்களையும், இந்தியாவுக்கு வெளியில் 43 பள்ளிக்கூடங்களையும் நடத்துகிறது என்பதிலிருந்து அது எவ்வளவு பெரிய நிறுவனம் என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும். சாதாரண தனியார் பள்ளிகளைவிடப் பல மடங்கு அதிகக் கட்டணம் வசூலிக்கும் இந்தக் குழுமத்தின் குருகிராம் பள்ளியில் சுற்றுச்சுவர் இடிந்து கிடப்பதும், தீயணைப்புக் கருவிகள் செயல்படாமல் இருப்பதும், கண்காணிப்பு கேமராக்கள் இருந்தும் அவை கண்காணிக்கப்படாமல் இருப்பதும், ஊழியர்களின் பின்னணி குறித்த விவரங்கள் அறியப்படாமல் இருப்பதும், சிறார்களுக்குப் பாதுகாப்பில்லாத கழிப்பறைகள் காணப்படுவதும், இதுபோன்ற பள்ளிகளில் எந்த அளவுக்கு நிர்வாகம் செயல்படுகிறது என்பதை வெளிப்படுத்துகிறது.
    ரயான் உறைவிடப் பள்ளி போன்ற அதிகக் கட்டணம் பெறும் தனியார் பள்ளிகளிலேயே இதுதான் நிலைமை என்றால், இந்தியாவிலுள்ள லட்சக்கணக்கான அரசுப் பள்ளிகளிலும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் பயிலும் கோடிக்கணக்கான குழந்தைகளின் நிலைமை என்ன என்பது குறித்து சிந்திக்கும்போது அச்சம் மேலிடுகிறது. தனியார் பள்ளிகள் புற்றீசலாய் பெருகிவிட்டிருக்கிறது. அரசுப் பள்ளிகளில் தலைமையாசிரியர்களுக்கேகூட ஊழியர்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் இல்லாத நிலை. கல்வித்துறையும் அரசுப் பள்ளிகளின் செயல்பாடுகள் குறித்து அக்கறை காட்டாத போக்கு - இந்த நிலையில் மாணவர்களின் பாதுகாப்பை எப்படி, யார்தான் உறுதிப்படுத்துவது?
    பள்ளிச் சிறார்களின் பாதுகாப்பு குறித்து மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் சில கேள்விகளை எழுப்பியிருக்கிறது. மகிழ்ச்சி. ஜூலை 16, 2004-இல் கும்பகோணம் ஸ்ரீ கிருஷ்ணா பள்ளி மற்றும் சரஸ்வதி மழலையர் பள்ளியில் நடந்த தீ விபத்தில் பலியான 94 குழந்தைகள் குறித்த வழக்கில், ஜூலை 30, 2014-இல் விசாரணை நீதிமன்றம் பள்ளியின் தாளாளர் உள்ளிட்ட 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. மேல்முறையீட்டில் சென்னை உயர்நீதிமன்றம் கடந்த மாதம் அனைத்துக் குற்றவாளிகளையும் விடுதலை செய்து உத்தரவிட்டிருக்கிறது. ரயான் உறைவிடப் பள்ளி வழக்கிலும் இதுபோல நடக்காது என்பது என்ன நிச்சயம்? பாவம் இந்தியாவில் பிறக்கும் குழந்தைகள்!

      ஆசிரியர் பணிக்கு தேர்வு பெற்ற 2,373 பேருக்கு செப்.19-இல் கலந்தாய்வு

      By DIN  |   Published on : 16th September 2017 03:44 AM  |    
      தமிழகத்தில் உள்ள ஆசிரியர் பணிக்கு தேர்வு பெற்ற 2,373 பேருக்கு செப்.19-இல் இணையதளம் மூலம் கலந்தாய்வு நடைபெறும் என பள்ளிக் கல்வி இயக்குநர் ரெ.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
      இது தொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை (செப்.15) வெளியிட்டுள்ள அறிவிப்பு:-
      அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு, நியமனம் செய்யும் வகையில் ஆசிரியர் வாரியத்தின் சார்பில் போட்டித் தேர்வு நடத்தப்பட்டது.
      இதன் மூலம் தேர்வு செய்யப்பட்ட 2,315 பேருக்கும், சிறப்புக் கல்வியியல் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 58 பேருக்கும் பணி நியமன ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் இணையதளம் மூலம் செவ்வாய்க்கிழமை (செப்.19) நடத்தப்படவுள்ளது.
      முதுநிலை ஆசிரியர், சிறப்புக் கல்வியியல் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட அனைவரும் தங்களது முகவரியில் தெரிவித்துள்ள மாவட்டங்களில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வழங்கப்பட்ட தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு மற்றும் இதர சான்றிதழ்களுடன் நேரில் சென்று கலந்து கொள்ள வேண்டும்.
      முதுநிலை ஆசிரியர்களைப் பொருத்தவரையில் முதலில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள காலிப் பணியிடங்களுக்கு அந்தந்த மாவட்டங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கான கலந்தாய்வும்,
      பின்னர் வேறு மாவட்டங்களில் பணிபுரிய விருப்பமுள்ளவர்களுக்கான கலந்தாய்வு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி
      அலுவலகங்களில் நடத்தப்படும்.
      முதல்வர் வழங்குவார்: கலந்தாய்வில் கலந்துகொண்டு பணி நியமனம் பெற்றவர்களுக்கான பணிநியமன ஆணையை வியாழக்கிழமையன்று (செப்.21) காலை 9.30 மணிக்கு சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு அரங்கில் நடைபெறும் விழாவில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வழங்குவார் என அதில் கூறப்பட்டுள்ளது.

        துணை மருத்துவப் படிப்புகளுக்கு செப்.19 முதல் கலந்தாய்வு: தகுதிப் பட்டியல் வெளியீடு


        By DIN  |   Published on : 16th September 2017 03:59 AM  | 
        தமிழகத்தில் துணை மருத்துவப் படிப்புகளுக்கு செவ்வாய்க்கிழமை முதல் (செப்.19) கலந்தாய்வு நடைபெற உள்ளது. கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான தகுதிப் பட்டியல் வெள்ளிக்கிழமை இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
        தமிழகத்தில் பி.எஸ்சி. நர்சிங், பி.பார்ம், பிஓடி (இயன்முறை மருத்துவம்), பி.எஸ்சி. கார்டியோ பல்மோனரி பர்ஃபியூஷன் டெக்னாலஜி, பி.எஸ்சி. ரேடியா மற்றும் இமேஜிங் டெக்னாலஜி, பி.எஸ்சி. ரேடியோ தெரபி டெக்னாலஜி, பி.எஸ்சி. ஆப்தோமெட்ரி, இளநிலை ஆக்குபேஷனல் தெரபி, பிஏஎஸ்எல்பி (செவித்திறன், பேச்சு, மொழி நோய்க்குறியியல் படிப்பு) ஆகிய 9 துணை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் ஆகஸ்ட் 7}ஆம் தேதி முதல் 23}ஆம் தேதி வரை நடைபெற்றது.
        இந்தப் படிப்புகளுக்கு அரசு கல்லூரிகளில் 484 இடங்களும், தனியார் கல்லூரிகளில் 5,479 இடங்களும் உள்ளன. மொத்தம் 26,460 பேர் விண்ணப்பித்திருந்தனர். விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு 25,293 பேருக்கான தகுதிப் பட்டியல் www.tnhealth.org, www.tnmedicalselcetion.org ஆகிய இணையதங்களில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.
        தகுதிப் பட்டியலின் அடிப்படையில் முதற்கட்ட கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் செப்டம்பர் 19}ஆம் நாள் தொடங்குகிறது. முதல்நாளில் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் ஆகியோருக்கான கலந்தாய்வு நடைபெறும். பொதுப்பிரிவு கலந்தாய்வு 20}ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. தொடர்ந்து செப்டம்பர் 21 முதல் 23, 25 முதல் 27, அக்டோபர் 4 முதல் 7 என மொத்தம் 12 நாள்கள் கலந்தாய்வு நடைபெற உள்ளது என்று மருத்துவக் கல்வி தேர்வுக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

        NEWS TO DAY 16.07.2026