Monday, November 6, 2017

மழைக்கு தேசிய நெடுஞ்சாலைகள், 'அவுட்'  சென்னைக்கு வரும் வாகனங்கள் திணறல்
மழையால், தேசிய நெடுஞ்சாலைகள் சேதம் அடைந்துள்ளதால், சென்னைக்கு வரும் வாகனங்கள் திணறி வருகின்றன.




சென்னையை, பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுடன் இணைக்கும் வகையில், 4,994 கி.மீ.,க்கு தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப் பட்டு உள்ளன. இதில், சென்னை - திருச்சி, சென்னை - திருப்பதி, சென்னை - பெங்களூரு, சென்னை - கோல்கட்டா, தேசிய நெடுஞ் சாலைகள் முக்கியமானவை.

இச்சாலைகள் வழியாக, நாள் தோறும்ஏராளமான சரக்கு வாகனங்கள் சென்னை வந்து செல்கின்றன. பயணியர் போக்குவரத்திற்கான அரசு மற்றும் ஆம்னி பஸ்களும் வருகின்றன.இச் சாலைகளில் பயணிக்கும் வாகனங்களிடம் கட்டணம் வசூலிப்பதற்காக, பல்வேறுஇடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

சாலை பராமரிப்பு பணிகளை செய்து, சுங்க கட்டணம் வசூலிப்பதற்கு, தனியார் நிறுவனங் களுக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. ஆனால், இந்நிறுவனங்கள் சாலைகளை முறையாக பராமரிப்பதில்லை. ஏற்கனவே, முறையான பராமரிப்பின்றி கிடந்த சாலைகள், மழையால் மேலும் சேதம் அடைந்துள்ளன.

பல இடங்களில், அபாய பள்ளங்கள் ஏற்பட்டு மழைநீர்தேங்கி உள்ளது. சென்னை - திருச்சி, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைகளில், காஞ்சிபுரம் மாவட்டத்திலும், சென்னை - கோல் கட்டா தேசிய நெடுஞ்சாலையில், திருவள்ளூர் மாவட்டத்திலும், அதிகம் சேதம் ஏற்பட்டுள்ளது. இவற்றில், வாகனங்கள் தள்ளாடியபடியே
பயணிக்கின்றன; ஆங்காங்கே, வாகனங்கள் பழுதாகியும் நிற்கின்றன.

எனவே, இச்சாலைகளில் பயணிக்கும், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின் றனர். போக்குவரத்துக்கு ஏற்ற வகையில், சாலைகளை சீரமைக்க, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.

- நமது நிருபர் -

5 தலைமுறை கண்ட மூதாட்டிக்கு 102வது பிறந்த நாள் கோலாகலம்

 5 தலைமுறை கண்ட மூதாட்டிக்கு 102வது பிறந்த நாள் கோலாகலம்
கோபி:கோபி அருகே, ஐந்து தலைமுறை கண்ட மூதாட்டி, 102வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார்.

ஈரோடு மாவட்டம், கோபி தாலுகா, புதுவள்ளியாம்பாளையத்தை சேர்ந்தவர் பெரமாயாள், 102; இவரது கணவர், 40 ஆண்டுகளுக்கு முன் இறந்தார். தம்பதிக்கு, மூன்று மகன்கள்; நான்கு மகள்கள். இவர்களில், ஒரு மகன், இரண்டு மகள்கள் இறந்து விட்டனர். மற்றவர்கள் உள்ளூரில், குடும்பத்துடன் வசிக்கின்றனர்.

கடந்த, 1915ல் பிறந்த பெரமாயாளுக்கு, நேற்று, 102வது பிறந்த நாள். இரண்டு மகன், இரண்டு மகள், ஏழு பேரன்கள், ஆறு பேத்திகள், ஏழு கொள்ளு பேரன்கள், ஒன்பது கொள்ளு பேத்திகள் ஆகியோர், பாட்டி வீட்டுக்கு நேற்று சென்றனர். 5 கிலோ கேக் வேட்டி, பெரமாயாளின் பிறந்த நாளை கொண்டாடினர். அனைவரும், பெரமாயாளிடம் ஆசி பெற்றனர்.

பெரமாயாளின் வாரிசுகள் கூறியதாவது:

எங்கள் பாட்டி பெரமாயாள் வழியில், இது ஐந்தாவது தலைமுறையாகும். 102 வயதை தொட்ட பாட்டிக்கு இதுவரை பிறந்தநாள் கொண்டாடியதில்லை. அவரின் வயது முதிர்வை கணக்கில் கொண்டு, பிறந்தநாள் விழா கொண்டாடினோம்.பாட்டி இதுவரை, உடல்நிலை சரியில்லாமல், மருத்துவமனை சென்றதில்லை. சர்க்கரை, ரத்த அழுத்தம், கண் பார்வை, காது கேட்கும் திறன் என எந்த குறையுமின்றி உள்ளார்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

பெரமாயாள் கூறுகையில், ''எனக்கு, 102வது பிறந்த நாள் கொண்டாடிய, மகன், மகள், பேரன் மற்றும் பேத்திகளுக்கு வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன்; மகிழ்ச்சியாக இருக்கிறது,'' என்றார்.



கரையை கடந்தது, 'டாம்ரே' புயல்  இயல்புக்கு திரும்பியது வங்க கடல்

வங்கக்கடலை ஒட்டிய பகுதியில் மையம் கொண்டிருந்த, 'டாம்ரே' புயல், வியட்நாம் அருகே, பெரும் சீற்றத்துடன் கரையை கடந்தது. அதனால், வங்கக் கடலின் சூழல் இயல்பு நிலைக்கு மாறியுள்ளதால், விடாது கொட்டிய அடைமழை விலகியுள்ளது.




தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை, அக்., ௨௭ல் துவங்கி, ௨௯ல் தீவிரம் அடைந்தது. சென்னை முதல் நாகை வரை, கனமழை கொட்டியது. மழைக்கு காரணமான, காற்றழுத்த தாழ்வு பகுதி, நவம்பர், ௧ல், டெல்டா மற்றும் தென் மாவட்டங்களுக்கு நகரும் என, கணக்கிடப்பட்டது. ஆனால், நகராமல், நவ., 2ல் மிககன மழை கொட்டியது.

ஒரே நாள் இரவில், ஐந்து மணி நேரம் பெய்த தால், சென்னை மெரினாவில், அதிகபட்சமாக 30செ.மீ., மழை பதிவானது. பின், நேற்று முன் தினம் இரவு வரை மிதமாகவும், சில நேரங் களில் கனமழையும் தொடர்ந்தது. இந்த தொடர் மழைக்கும், அடைமழைக்கும், வங்கக் கடலின்

சூழல் மாறியதே காரணம் என, வானிலை மற்றும் கடலியல் நிபுணர்கள் கூறினர். அதாவது, வங்கக் கடலை ஒட்டிய, தென் சீன கடலில் சுழன்று வந்த, டாம்ரே புயலால், வங்கக் கடலில் இருந்து மேக கூட்டங்கள் நகர முடியவில்லை;

அவை, தமிழககடற்பகுதியை சுற்றி வந்ததே, அதிக மழை பெய்யகாரணம் என்றனர்.'டாம்ரே புயல், நவ., 4ல் கரையை கடக்கும் வரை, சென்னை உள்ளிட்ட வடக்கு கடலோர மாவட்டங்களில் இடைவிடாமல் பெய்யும் கன மழை தொடரும்.'புயல் கரையை கடந்தால், ஞாயிறு முதல் நிலைமை சீராகும்' என்றும் கூறினர்.அதன்படி,நேற்று முன்தினம் இரவு, டாம்ரே புயல், வியட்நாமில் பெரும் சீற்றத்துடன் கரையை கடந்தது.

இதையடுத்து,தென் சீன கடலிலும், அதையொட்டிய வங்கக் கடலிலும், கொஞ்சம் கொஞ்சமாக கடல் சூழல் மாறியுள்ளது. இதனால், மீண்டும் காற்றின் சுழற்சி இயல்பு நிலைக்கு மாறி, மேக கூட்டங்கள் நகர்ந்து வருகின்றன.

சென்னை உள்ளிட்ட கடலோர பகுதிகளில் நிலவிய, காற்றழுத்த தாழ்வு பகுதியும், தாழ்வு நிலையாக வலு குறைந்து, தமிழகத்தின் தெற்கு கடலோர மாவட்டங்களுக்கு நகர்ந்துள்ளது. எனவே, சென்னை உள்ளிட்ட வட கிழக்கு கடலோர மாவட்டங்களை அச்சுறுத்தி வந்த, அடைமழை விலகி உள்ளது. இனி, வழக்கமான பருவமழை, டிசம்பர் முதல் வாரம் வரை நீடிக்கும் என, வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மிதமான மழைக்கு வாய்ப்பு:

'தமிழகம்,புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு அடைமழை இருக்காது; மிதமான மழை பெய்யும்' என, வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையத்தின், மண்டல துணை பொது இயக்குனர், பாகுலேயன் தம்பி நேற்று கூறியதாவது:வங்கக் கடலின், வட கிழக்கு பகுதி யில் நிலவிய காற்றழுத்த தாழ்வு நிலை, மன்னார் வளைகுடா மற்றும் ராமநாதபுரம், துாத்துக்குடி மாவட்டங்கள் அருகே, தென் கிழக்கு கடலோர பகுதிக்கு இடையே, தற்போது மையம் கொண்டுள்ளது. தமிழகம், புதுச்சேரியில் இரு நாட்களுக்கு மிதமான மழை பெய்யும்.தெற்கு மற்றும் டெல்டா மாவட்டங்களில், சில இடங்களில் கன மழை பெய்யும். சென்னையில், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மழை வதந்தியை பரப்பாதீர்!: பாலச்சந்திரன் வேண்டுகோள்

மழை,வதந்தி,பரப்பாதீர்,பாலச்சந்திரன்,வேண்டுகோள்
பொள்ளாச்சி: ''மழை குறித்து, மக்களிடம் பீதியை ஏற்படுத்தும் தகவல்களை பரப்ப வேண்டாம்,'' என, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில், அவர் அளித்த பேட்டி: வட கிழக்கு பருவமழை, தமிழகத்தின் முக்கிய காலமாகும். 27ம் தேதி முதல், கடலோர மாவட்டங்களில், வட கிழக்கு பருவமழை பெய்து வருகிறது. வளி மண்டலத்தில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, சென்னையில் தொடர்ந்து மழை பெய்தது. கடலோர மாவட்டங்களில், இரு நாட்களுக்குள், மழை குறைய வாய்ப்புள்ளது. 

கடலில் நில நடுக்கம் ஏற்பட்டால், சுனாமி போன்ற பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதா என கணிக்க முடியும். தற்போது, கணிக்க முடியாது. வானிலை மையம், தொடர்ந்து மழை குறித்து கணித்து, சரியான தகவல்களை தெரிவித்து வருகிறது. சமூக வலைதளங்களில் ஒரு சிலர், 100 செ.மீ., வரை மழை பொழியும் என்பது போன்ற ஆதாரபூர்வமற்ற தகவல்களை பரப்புகின்றனர். இது போன்ற தகவல்களால், மக்கள் பீதியடைகின்றனர். பேரிடர் காலங்களில், மக்களுக்கு உதவும் வகையில், தகவல்களை பரப்பலாம். இதுபோன்று பீதியை ஏற்படுத்தும் தகவல்களை பரப்ப வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்ட செய்திகள்

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயை உயிரோடு எரித்து கொல்ல முயன்ற பெண் கைது
காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயை தீவைத்து உயிரோடு கொல்ல முயன்ற இளம்பெண் கைது செய்யப்பட்டார்.

நவம்பர் 06, 2017, 05:00 AM

ராஜபாளையம்,காதல் ராஜபாளையம் வேட்டைபெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் பாக்கியலட்சுமி(வயது45). இவரது கணவர் சுந்தரமகாலிங்கம் 15 வருடங்களுக்கு முன்பு மனைவியை பிரிந்து அருப்புக்கோட்டைக்கு சென்று விட்டார். அங்கு வேறு ஒரு பெண்ணுடன் வாழ்ந்து வருகிறார். பாக்கியலட்சுமி தனது மகள் கற்பகஜோதியுடன்(21) வசித்து வருகிறார். டிப்ளமோ படித்து முடித்த கற்பகஜோதி அந்தப்பகுதியில் உள்ள தனியார் நூற்பாலையில் வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் நூற்பாலையில் வேலை செய்யும் ஒருவருடன் கற்பகஜோதிக்கு காதல் மலர்ந்துள்ளது. இது தாயார் பாக்கியலட்சுமிக்கு தெரியவந்ததும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மகளை கண்டித்துள்ளார். ஆனால் காதலை கைவிட கற்பகஜோதி மறுத்து தாயுடன் அடிக்கடி வாக்குவாதம் செய்து வந்துள்ளார்.

நேற்று முன்தினமும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போதும் பாக்கியலட்சுமி காதலுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். ஆனால் காதலில் உறுதியாக இருந்த கற்பகஜோதி அதற்கு இடையூறாக இருக்கும் தாயாரை கொலை செய்ய துணிந்தார்.

வீட்டில் இருந்த மண் எண்ணெய்யை எடுத்து தாயாரின் மீது ஊற்றி தீவைத்து விட்டார். உடல் கருகிய பாக்கியலட்சுமி கூச்சல் எழுப்பினார். அக்கம்பக்கத்தினர் தீயை அணைத்து அவரை ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் அவர் சிவகாசியில் உள்ள தீக்காய தடுப்பு பிரிவு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மாவட்ட செய்திகள்

மழை நீர் வடிவதற்கு ஒரு வாரம் ஆகும் நோய் பரவுவதை தடுக்க ‘பிளச்சிங்’ பவுடர் தூவப்படுகிறது



கோவிலம்பாக்கம், பள்ளிக்கரணை உள்பட சென்னை புறநகர் பகுதிகளில் மழை நீர் வடிவதற்கு ஒரு வாரம் காலம் ஆகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

நவம்பர் 06, 2017, 05:30 AM
சென்னை,

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 31-ந்தேதி முதல் 5 நாட்கள் மழை பெய்தது. சில இடங்களில் கனமழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கியது. தொடர் மழை காரணமாக சென்னையை சுற்றியுள்ள ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

சென்னையில் தேங்கிய மழைநீர் கொஞ்சம் கொஞ்சமாக வடிய தொடங்கியுள்ள நிலையில், புறநகர் பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீர் வடிவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. புறநகர் பகுதிகளான கோவிலம்பாக்கம், பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், வேளச்சேரி, கூடுவாஞ்சேரி போன்ற இடங்களில் சில பகுதிகளில் இன்றளவும் இடுப்பளவு நீர் தேங்கி இருக்கிறது.

கோவிலம்பாக்கத்தில் திரு.வி. நகர், சிண்டிகேட் வங்கி காலனி, கண்ணா அவென்யூ, காதிதபுரம், உம்மைநகர், என்ஜினீயர்ஸ் காலனி, கிருஷ்ணா நகர், பாக்கியலட்சுமி நகர், ராஜேஸ்வரி நகர், எல்.ஐ.சி. நகர், ராஜா நகர் போன்ற இடங்களில் தண்ணீர் அதிகளவில் தேங்கி இருக்கிறது.

இந்த பகுதிகளில் சுமார் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடியிருப்புகள் இருக்கின்றன. அந்த பகுதிகள் முழுவதையும் மழைநீர் சூழ்ந்து உள்ளது. தேங்கி இருக்கும் மழைநீர் வடிவதற்கு எந்த ஒரு வாய்ப்பும் இல்லாத நிலை அங்கு ஏற்பட்டு இருக்கிறது. 80 அடி அகலத்தில் இருந்த மழைநீர் வடிகால் 20 அடி அகலத்துக்கு மாறியுள்ளதும், ஆக்கிரமிப்புகளால் அந்த நீர் செல்வதற்கு ஏதுவான சூழ்நிலை இல்லாததும் தான் காரணம் என்று அந்த பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

கோவிலம்பாக்கம் ஊராட்சி நிர்வாகம் சார்பில் அந்த பகுதிகளில் வசிப்பவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருவதாகவும், பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என்பதும் பலருடைய குற்றச்சாட்டாக இருக்கிறது. கோவிலம்பாக்கத்தில் தேங்கி இருக்கும் மழைநீரால் பலர் அந்த பகுதியை காலி செய்து உறவினர்கள், நண்பர்கள் வீட்டில் தங்கியுள்ளனர்.

இதேபோல், பள்ளிக்கரணை, கூடுவாஞ்சேரி, மணிமங்கலம், முடிச்சூர், வரதராஜபுரம், வேளச்சேரி உள்பட சென்னையின் புறநகர் பகுதிகளின் பல இடங்களில் மழைநீர் வடியாமல் இருக்கிறது. இதுபோன்று புறநகர் பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீர் சதுப்பு நிலங்களுக்கு செல்ல வேண்டும். அப்படி சென்றால் மட்டுமே இந்த பகுதிகளில் நீர் வடியும். அவ்வாறு நீர் வடிவதற்கு குறைந்தது ஒரு வாரம் ஆகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மழைநீர் தேங்கியுள்ள சில இடங்களில் லாரிகள் மூலம் நீர் உறிஞ்சப்பட்டு மழைநீர் வடிகாலுக்கு நேரடியாக கொண்டு சென்று அங்கு விடப்படுகிறது. சென்னை புறநகரில் மழைநீர் தேங்கி இருக்கும் பகுதிகளில் நோய் பரவாமல் தடுக்க பொது சுகாதாரத்துறை பிளச்சிங் பவுடர் தூவும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

அதேபோல், தேங்கி நிற்கும் தண்ணீரினால் நோய் தொற்றால் யாரும் பாதிக்கப்படுகிறார்களா? என்பதை கண்காணிக்க சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 106 மருத்துவக்குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
தலையங்கம்

இன்று தினத்தந்தியின் ‘‘பவள விழா’’



நவம்பர் 06 2017, 03:00 AM

17 பதிப்புகளையும், ஒரு கோடிக்கும் மேல் தினசரி வாசகர்களையும் உலகமெங்கும் கொண்ட ‘தினத்தந்தி’யின் பவள விழா இன்று சீரும், சிறப்புமாக கொண்டாடப்படுகிறது. 75 ஆண்டுகளாக தமிழக மக்களின் நாடித்துடிப்பாய், வாழ்க்கையின் ஓர் அங்கமாய், ஒன்றாக கலந்துவிட்ட பத்திரிகை ‘தினத்தந்தி’. ‘தினத்தந்தி’ தொடங்கப்பட்ட 75 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் இருந்த படிப்பறிவு, எழுத்தறிவைவிட, இப்போது பலமடங்கு உயர்ந்து இருக்கிறது என்றால், அதில் ‘தினத்தந்தி’யின் பங்கும் முக்கிய காரணமாகும். இந்த பத்திரிகையை தொடங்கிய, ‘‘தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார்’’ ‘பேச்சுவழக்கில் உள்ள தமிழே உயிர் உள்ள தமிழ். அதை கொச்சை நீக்கி எழுதவேண்டும்’ என்ற பொன்மொழியை ஆழமாக பதித்துவிட்டுச் சென்றார்.

‘தினத்தந்தி’ உள்ளூர்செய்தி முதல் உலகசெய்தி வரை எளிய நடையில் கொடுப்பதால் ஒரேநேரத்தில் படிப்பறிவு இல்லாத சாதாரண பாமர மக்களில் இருந்து, அறிவுசால் பெருமக்கள் வரை அனைவருக்கும் அந்த செய்தி சென்றடைந்துவிடுகிறது. இன்றைக்கும் கிராமப்புறங்களிலுள்ள டீக்கடைகள், முடிதிருத்தும் நிலையங்கள், சலவையகங்கள், ஊர்ச்சாவடிகள் நூலகங்களாக மாறி இருக்கிறது என்றால் அதற்கு காரணம் ‘தினத்தந்தி’ தான். அங்கு போடப்படும் ஒரு ‘தினத்தந்தி’ பிரதியை நூற்றுக்கணக்கானோர் படித்து செய்திகள் குறித்து விவாதங்கள், கருத்து பரிமாற்றங்கள் என்று மேற்கொண்டு திறனாய்வு செய்துவிடுவார்கள்.

வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டில் பணியாற்றுவதற்கு வரும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற இந்திய குடிமைப்பணி அதிகாரிகளுக்கும், தொழில் நிமித்தமாக, படிப்பு நிமித்தமாக தமிழ்நாட்டில் குடியேறும் மக்களுக்கும் ‘‘கைப்பிடித்து தமிழை கற்றுக்கொடுக்கும் ஆசான் தினத்தந்தி’’. அந்தவகையில் தமிழை படிக்கத்தெரியாத பாமரமக்கள் முதல் படித்தவர்கள் வரை தமிழை கற்றுக்கொடுக்க ஒரு தமிழ் ஆசிரியராக ‘தினத்தந்தி’ செயலாற்றுகிறது. அத்தகைய வரலாற்று சிறப்புமிக்க ‘தினத்தந்தி’யை 1942–ம் ஆண்டு ‘தந்தி’ என்ற பெயரில், ‘‘தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார்’’ மதுரையில் தொடங்கினார். அந்தநேரம் பத்திரிகைக் காகிதம் கிடைப்பது குதிரைக்கொம்பாக இருந்தது. ஆனால், ஆதித்தனார் அதற்காக சோர்ந்துவிடவில்லை. வைக்கோலை ஊறவைத்து, கூழாக அரைத்து, கைக்காகிதம் தயாரித்து பத்திரிகை அச்சடித்து வெளியாகும் வகையில் அனைத்தும் அவர் மேற்பார்வையிலேயே நடந்தது. அவர் விதைத்த விதைதான் தொடர்ந்து, அவரது மகன் டாக்டர்.பா.சிவந்தி ஆதித்தனார், இப்போது சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் ஆகியோரால் ஆலமரமாக வளர்ந்து மாலைமலர், டி.டி.நெக்ஸ்ட், ராணி வாரஇதழ், ராணிமுத்து, கோகுலம்கதிர், தந்தி டி.வி., ஹலோ எப்.எம். என்று பல விழுதுகளோடு ஓங்கி உயர்ந்து நிற்கிறது. அத்தகைய ‘தினத்தந்தி’யின் பவள விழா இன்று சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறுகிறது.

விழா மலரை வெளியிடும் அவர் ‘தினத்தந்தி’யின் முக்கிய பணியான இலக்கிய பரிசுகளை வழங்கி சிறப்பிக்கிறார். இன்றைய விழாவில், ‘மூத்த தமிழறிஞர்’ விருதை ஈரோடு தமிழன்பனும், இலக்கியத்தில் மேலாண்மை என்ற தொடரை ராணி இதழில் எழுதி, இப்போது நூலாக வடிவம் பெற்றுள்ள நூலை எழுதிய எழுத்தாளரும், ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான இறையன்பு, 1954–ல் சைக்கிளில் சென்று ‘தினத்தந்தி’ பத்திரிகையை வினியோகம் செய்து, இன்று பெரிய தொழில் அதிபராக உயர்ந்திருக்கும் வி.ஜி.சந்தோ‌ஷம் ஆகியோருக்கு விருதுகளை வழங்குகிறார்.

இந்த நல்லநாளில் ‘தினத்தந்தி’ வெள்ளிவிழாவின்போது பேரறிஞர் அண்ணா சொன்னதுபோல, ‘‘தமிழனுடைய உரிமை பறிக்கப்படும் என்றநிலை ஏற்படுகின்ற ஒவ்வொரு நேரத்திலும், தமிழர்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக்கொண்டு தீரவேண்டும் என்ற கட்டம் வருகிற ஒவ்வொரு நேரத்திலும், ‘‘தினத்தந்தி’’ வெறும் செய்திப் பத்திரிகையாக மட்டும் அல்லாமல், தமிழர்களுக்கு வாளாகவும், கேடயமாகவும், தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்கக்கூடிய போர் வீரனாகவும் விளங்கிக்கொண்டு வருகிறது’’ என்பதற்கேற்ப ‘தினத்தந்தி’ வரும் காலங்களிலும் தமிழக மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்து,தன் நீண்ட புனித பயணத்தை தொடர்ந்து மேற்கொள்ளும்.

NEWS TODAY 03.07.2026