Monday, November 6, 2017

இப்போதே இப்படி என்றால்...

By ஆசிரியர்  |   Published on : 06th November 2017 01:22 AM
மழை வந்துவிட்டால், சென்னை மாநகரம் ஒரு மாநரகமாக மாறுவது என்பது ஆண்டுதோறும் தொடரும் அவலம். அமெரிக்கா உள்ளிட்ட வளர்ச்சி அடைந்த நாடுகளில் கூட இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கும் நிலையில், ஆழிப்பேரலை, தானே புயல், வார்தா புயல் உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்களை எதிர்கொள்ள முடியாமல் தவித்தால், அதில் நியாயமிருக்கிறது. ஆனால், ஆண்டுதோறும் சந்திக்கும் பருவமழையைக்கூட நம்மால் எதிர்கொள்ள முடியாமல் போவது என்பதை என்னவென்று சொல்வது?
சென்னை ஒரு கடலோர நகரம். இயற்கையாகவே வெள்ளம் வடிந்தோடும்படியான நகரமைப்பு, வங்கக் கடலை ஒட்டியுள்ள சென்னைக்கு உண்டு. போதாக்குறைக்கு சென்னை மாநகரம் வழியாக இரண்டு ஆறுகளும், பக்கிங்ஹாம் கால்வாயும் பாய்ந்தோடி கடலில் கலக்கின்றன. மழைநீர் உடனடியாக வெளியேறாமல் சாலைகளில் தேங்கி நிற்க வேண்டிய அவசியமே இல்லை. பிறகும் மழை வந்துவிட்டால், சென்னை மாநகரம் வெள்ளத்தில் மிதக்கிறதே, ஏன்? 
முன்பே கூறியதுபோல, கூவம், அடையாறு என இரண்டு ஆறுகள் சென்னை மாநகரின் வழியாகப் பாய்ந்து கடலில் கலக்கின்றன. போதாக்குறைக்கு பக்கிங்ஹாம் கால்வாயும் வேறு இருக்கிறது. பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் 16 கால்வாய்களும் சென்னை பெருநகர மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் 30 கால்வாய்களும் இருக்கின்றன. இது போதாதென்று பல கழிவு நீர் ஓடைகளும், திட்டமிட்டு நிறுவப்பட்டிக்கும் மழைநீர், கழிவு நீர் கால்வாய்களும் இருக்கின்றன. 
மழைக்காலம் எப்போது வரும் என்பதும், பருவமழை எப்போது தொடங்கும் என்பதும் திடீர் நிகழ்வுகள் அல்ல. பருவமழைக்கு முன்னால், கால்வாய்களையும், கழிவுநீர் ஓடைகளையும் மழை நீர், கழிவு நீர் வடிகால்களைச் சுத்தம் செய்து அடைப்புகளை அகற்றித் தயார் நிலையில் வைத்திருப்பது என்பது நிர்வாகம் செய்திருக்க வேண்டிய முன்னேற்பாடு.
அடையாறும், கூவம் ஆறும் கடலில் கலக்கும் முகத்துவாரத்தில் தினம்தோறும் மண் சேர்ந்து விடுகிறது. ஒவ்வொரு நாளும் முகத்துவாரத்திலிருந்து மணலை அகற்றி, கழிவு நீர் கடலில் கலப்பதை உறுதி செய்ய வேண்டும். ஒப்பந்தம் எடுப்பதில் மணல் ஒப்பந்ததாரர்களின் போட்டா போட்டியும், அவர்கள் முறையாக தினந்தோறும் மணலை அகற்றுகிறார்களா என்பதைப் பொறுப்புடன் உறுதிப்படுத்தாத அதிகாரவர்க்கத்தின் மெத்தனமும் கூவமும் அடையாறும் கடலில் கலப்பதை தடுத்து விடுகின்றன.
சென்னை பெருநகர மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கும் 30 கால்வாய்களிலும், பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் 16 கால்வாய்களிலும், அன்றாடம் தெருக்களில் சேரும் குப்பையை அகற்றுவதுபோல, தூர்வாரி சுத்தமாக பராமரித்திருந்தால், இப்படி தண்ணீர் தேங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது. தெருவோர குப்பைகளை அகற்றுவதையேகூட முறையாகச் செய்யாத நிலையில், சாக்கடைக் கால்வாய்களை மாநகராட்சி ஊழியர்களும், அதிகாரிகளும் மூக்கைப் பொத்திக்கொண்டு செய்துவிடவா போகிறார்கள்?
சென்னையில் குடிநீர் வடிகால் வாரியத்தின் பங்களிப்பாக ஏறத்தாழ இரண்டு லட்சத்துக்கும் அதிமான கழிவு நீர் இணைப்புகள் உள்ளன. இவற்றிலிருந்து வெளியேறும் கழிவு நீர், மழைநீர் வடிகால் குழாய்களில் விடப்படுகின்றன. கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டு அதன் மீது கட்டடங்கள் எழுப்பப்பட்டிருக்கின்றன. மழை பெய்தால் தண்ணீர் தேங்கி நிற்பதற்கு இவையெல்லாம்கூடக் காரணம்.
சென்னை பெருநகர மாநகராட்சியின் பதவிக்காலம் முடிந்துவிட்டது. மாநகராட்சியின் மாமன்ற உறுப்பினர்கள் இருக்கும்போது, அவர்கள் நல்லவர்களோ - கெட்டவர்களோ, மக்களால் அவர்களைச் சந்தித்து முறையிட முடிந்தது. மண்டலக் குழுக்களுக்கு ஒதுக்கப்படும் நிதியிலிருந்து, குறைந்தபட்சப் பணியையாவது அவர்கள் செய்து கொண்டிருந்தார்கள். 
இப்போது சென்னை பெருநகர மாநகராட்சி 15 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, ஐந்து மண்டலங்களுக்கு ஒருவர் என மூன்று துணை ஆணையர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆணையர் பதவியும், சிறப்பு அதிகாரி பதவியும் ஒரே நபரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. சென்னைப் பெருநகர மாநகராட்சியின் எல்லை அதிகரிக்கப்பட்டிருக்கும் நிலையில், மூன்று அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் செயல்படும்போது, நிர்வாகம் பருவமழையை எதிர்கொள்ள முன்னேற்பாடு நடவடிக்கைகளை செய்யாமல் இருந்ததில் வியப்பே இல்லை.
1,200 கி.மீ. மழை நீர் வடிகால் குழாய்கள் நிறுவப்பட்டிருக்கின்றன. இவை முறையாகக் கால்வாய்களுடன் இணைக்கப்பட்டிருக்கின்றனவா என்பதில் ஐயப்பாடு இருக்கிறது. மழை நீர் வடிகால் குழாய்களை அமைப்பது ஒரு துறை. அதை பராமரிப்பது இன்னொரு துறை. மழை நீர் வடிகால் குழாய்களைக் கழிவு நீர் குழாய்களை பராமரிப்பதுபோல, பராமரிக்க நிரந்தர ஊழியர்கள் கிடையாது. இதுபற்றி எல்லாம் முறையான, தெளிவான திட்டமிடல் இல்லாமல் போனதும்கூட, மழை வந்தால் சென்னை பெருநகர மாநகராட்சி மழையில் மிதப்பதற்கு முக்கியமான காரணம்.
சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு பெருமழை வந்தபோது, அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் ஆட்சியில், அதற்கு முன்னால் 30 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்த 16 கால்வாய்கள் தூர்வாரப்பட்டன. அதற்குப் பிறகு கால்வாய்களை முறையாகத் தூர்வாரி சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்பதற்கான எந்த முனைப்பும், எந்த ஆட்சியிலும் எடுக்கப்படாததன் விளைவுதான், மழை வந்தால் சென்னை வெள்ளத்தில் மிதக்கும் அவலம். இப்போதுதான் பருவமழையே தொடங்கியிருக்கிறது...
 


வெளியாகும் தீர்ப்புகள்: தமிழக கட்சிகள் கிலி
சென்னை: இரட்டை இலை சின்னம் மற்றும், '2ஜி' ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்குகளில், தீர்ப்பு குறித்த முக்கிய அறிவிப்புகள், இன்றும், நாளையும் வெளியாகலாம் என்பதால், தமிழக அரசியல் கட்சிகள் கலக்கம் அடைந்துள்ளன.



ஜெயலலிதா மறைவுக்கு பின், அ.தி.மு.க., கட்சி, பன்னீர் அணி, சசிகலா அணி என, இரண்டாக பிளவுபட்டது.

இரட்டை இலை

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது, இரட்டை இலை சின்னத்தை யாருக்கு ஒதுக்குவது என்பதில் குழப்பம் ஏற்பட்டது. உடனே, முடிவு எடுக்க முடியாததால், கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை, தேர்தல் கமிஷன் முடக்கியது.

பணப்பட்டுவாடா புகாரில், இடைத்தேர்தல்

ரத்தானது. இதையடுத்து, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் அணிகள் இணைந்தன. இணைப்புக்கு பின், கட்சி பொதுக்குழு கூடியது. பின், புதிய பிரமாண பத்திரங்களை, முதல்வர் பழனிசாமி அணியினர் தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்தனர்.

'முதல்வர் பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்யப் பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்து, போலியானது' என, தினகரன் தரப்பினர், தேர்தல் கமிஷனில் புகார் தெரிவித்தனர். இதற்கிடையே, 'நவ., 10க்குள், இரட்டை இலை சின்னம் குறித்த இறுதி முடிவை தேர்தல் கமிஷன் அறிவிக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன் படி, இரட்டை இலை சின்னம் குறித்த விசாரணை, அக்., 6, 16, 23, 30, நவ., 1ம் தேதிகளில், டில்லியில், தலைமை தேர்தல் கமிஷன் அலுவலகத்தில் நடந்தது.ஆறாம் கட்ட விசாரணை, இன்று மாலை, 3:00 மணிக்கு துவங்குகிறது. இதில் பங்கேற்க, பழனிசாமி, தினகரன் தரப்பினர் டில்லியில் முகாமிட்டுள்ளனர்.விசாரணை முடிந்து, இன்று தீர்ப்பு வெளியாகலாம் அல்லது தீர்ப்பு வழங்கப்படும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

'2ஜி' வழக்கு

அது போல, தி.மு.க., முன்னாள் மத்திய அமைச்சர்

ராஜா உள்ளிட்டோர் தொடர்பான, '2ஜி' ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கு, டில்லியில் உள்ள, சி.பி.ஐ., சிறப்பு நீதி மன்றத்தில், ௧௦ ஆண்டு களாக நடந்து வந்தது. இதில், விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. தீர்ப்பு எந்தத் தேதியில் வெளியிடப் படும் என்பது, நாளை அறிவிக்கப் பட உள்ளது. சிறப்பு நீதிமன்ற நீதிபதி தேதியை அறிவிக்க உள்ளார்.

தமிழகத்தின் முக்கியமான இரு அரசியல் கட்சிகளான, அ.தி.மு.க., மற்றும் தி.மு.க.,வின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கக்கூடிய, முக்கியமான அறிவிப்புகள் இன்றும், நாளையும் வெளியாக உள்ளதால், அந்தக் கட்சிகள் மட்டுமின்றி, மற்ற ஆதரவு கட்சிகளும் கலக்கம் அடைந்துள்ளன.

நீதிமன்றத்தை விமர்சித்ததாக சம்மன்: ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் விளக்கம்

சிவகங்கை:நீதிமன்றத்தை விமர்சித்ததாக போலீசார் சம்மன் அனுப்பியதை அடுத்து, சிவகங்கை, நெற்குப்பை போலீஸ் ஸ்டேஷன்களில் ஆஜராகி சிவகங்கை மாவட்ட ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் விளக்கமளித்தனர்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்; தொகுப்பூதியத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்கோ-ஜியோ சார்பில் செப்., 7 முதல் வேலைநிறுத்த போராட்டம் நடந்தது. உயர்நீதிமன்றம் உத்தரவையடுத்து போராட்டத்தை கைவிட்டு, செப்., 15 ல் மீண்டும் பணிக்கு திரும்பினர். அதே சமயத்தில் நீதிபதிகளை சிலர் சமூக வலைதளங்களில் விமர்சித்ததாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.நீதிபதிகளை விமர்ச்சித்தோர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கையாக தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து சிவகங்கை மாவட்ட ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் இளங்கோ, தமிழரசன், முத்துப்பாண்டியன் ஆகியோருக்கு போலீசார் சம்மன் அனுப்பினர். அவர்கள் சிவகங்கை, நெற்குப்பை போலீஸ் ஸ்டேஷன்களில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
நிர்வாகிகள் கூறியதாவது: எட்டாவது ஊதியக்குழு மாற்றத்தை செயல்படுத்தாமல் அரசு தாமதப்படுத்தியது. அதேபோல் எங்களது மற்ற கோரிக்கைகளையும் ஏற்கவில்லை. இதனால் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டோம். இதற்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. அதன் பின்பும் போராட்டம் செய்ததால் எங்கள் மீது அவதுாறு வழக்கு தொடரப்பட்டது.
இதில் எங்களது நிர்வாகிகள் ஆஜராகி, போராட்டத்திற்கான நியாயங்களை தெரிவித்தனர். இதை ஏற்று கொண்ட நீதிபதிகள் ஊதிய மாற்றத்தை உடனடியாக செயல்படுத்த அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும் போராட்டத்தின் போது எங்களது அமைப்பினர் நீதிமன்றம் குறித்து அவதுாறாக பேசவில்லை. அதேபோல் சமூக வலைதளங்களிலும் எந்தவித அவதுாறும் பரவில்லை. இதுபோன்ற நடவடிக்கைகளில் எப்போதும் ஈடுபட மாட்டோம், என விளக்கமளித்தனர்.

மயிலாடுதுறையில் மழை நீடிப்பு : இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு


மயிலாடுதுறை: மயிலாடுதுறையில், ஏழாவது நாளாக கனமழை பெய்து வருவதால், மீனவர்கள், விவசாயிகள் என, அனைத்து தரப்பினரின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்டம், மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி மற்றும் குத்தாலம் பகுதியில், ஏழாவது நாளாக நேற்றும் கனமழை கொட்டித் தீர்த்தது. 

பாய், போர்வை : வெள்ளம் சூழ்ந்த பகுதி களில் உள்ள மக்களை மீட்டு, 13 முகாம்களில் தங்க வைத்து, மாவட்ட நிர்வாகம் சார்பில், உணவு, வேட்டி, சேலை, பாய், போர்வை வழங்கப்பட்டது.
தலைச்சங்காடு, கருவேலி, எருமல் உள்ளிட்ட பல இடங்களில், வரத்து வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டு, விளை நிலங்களில் தண்ணீர் புகுந்ததால், 1 லட்சம் ஏக்கர் சம்பா நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. சீர்காழி அடுத்த எடமணல் கிராமத்தில், 3,000 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி, அழுகும் நிலையில் உள்ளன. தண்ணீரை வெளியேற்ற உதவுமாறு, பொதுப்பணி துறைக்கு தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால், கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர். 
வருவாய் துறை அதிகாரிகள், சமாதானப்படுத்தினர். மறியலால், சீர்காழி-- திருமுல்லைவாசல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., பவுன்ராஜ், பூம்புகாரில் நேற்று, மழை பாதிப்பை பார்வையிட வந்தார். அவரை மீனவர்கள் சூழ்ந்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 
தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றுமாறு பொதுப்பணி துறையினரை, எம்.எல்.ஏ., கேட்டுக் கொண்டார்.
கனமழை மற்றும் கடல் சீற்றத்தால், சந்திரபாடி துவங்கி கொடியம்பாளையம் வரை, 26 கிராம மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. 1,000 விசைப்படகுகள், 5,000த்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகள், துறைமுகம் மற்றும் துாண்டில் வளைவுகளில், பாதுகாப்பாக நிறுத்தப் பட்டுள்ளன.
பழநியில் கொட்டியது
பழநியில் கொட்டிய மழையால், நேற்று இரவு, தங்க ரத புறப்பாடு நிறுத்தப்பட்டது; 'ரோப் கார்' சேவையும் பாதிக்கப்பட்டது.
பழநியில், நேற்று மாலை 4:45 மணி முதல், மழை பெய்தது. இதனால், ஒரு மணிநேரம் மின் தடை ஏற்பட்டது. பஸ் ஸ்டாண்ட் அருகே, குளம்போல தேங்கிய தண்ணீரால் இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், கார்கள் மிதந்து சென்றன.
மழையால், 'ரோப் கார்' சேவை நிறுத்தப்பட்டு, 'வின்ச்' படிப்பாதையில் பக்தர்கள் செல்ல அறிவுறுத்தப்பட்டனர். 
இரவு 7:00 மணிக்கும் மழை தொடர்ந்ததால், தங்கரதம் நிறுத்தப்பட்டு, தேர்நிலையில் பூஜைசெய்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தங்கரதம் இழுக்க கட்டணம் செலுத்திய, 160 பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
பழநியில், 66.5 அடி உயரம் உள்ள வரதமாநதி அணை, 65 அடியை எட்டியுள்ளது. வினாடிக்கு, 200 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. 
'இன்று காலையில் அணை இரண்டாவது முறையாக நிரம்பும்' என, பொதுபணித்துறையினர் தெரிவித்தனர்.

மாணவர்களுக்கு தண்டனை : தலைமை ஆசிரியை, 'சஸ்பெண்ட்'

திருச்சி: திருச்சியில், தீபாவளி கொண்டாடிய பள்ளி மாணவர்களுக்கு தண்டனை வழங்கிய விவகாரத்தில், பள்ளியின் தலைமை ஆசிரியை மற்றும் உடற்கல்வி ஆசிரியர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர்.

திருச்சி, கீழப்புதுாரில் சர்வைட் என்ற மெட்ரிக் பள்ளி உள்ளது. 10ம் வகுப்பு வரை, 300க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர். அக்., 18ல் தீபாவளி முடிந்து, பள்ளி திறந்த அடுத்த நாள், தீபாவளிக்கு பட்டாசு வெடித்த மாணவர்களையும், மருதாணி வைத்திருந்த மாணவியரையும் தனியே அழைத்து, பட்டாசு வெடித்ததற்கு, தலை குனிந்து, இயேசுவிடம் மன்னிப்பு கேட்க, ஆசிரியர்கள் நிர்ப்பந்தப்படுத்தியதாக தெரிகிறது. மேலும் மருதாணி வைத்திருந்த மாணவியரை, உடற்கல்வி ஆசிரியர் ஆண்ட்ரூ போஸ், பிரம்பால் கையில் அடித்து துன்புறுத்தியுள்ளார். மாணவர்களின் பெற்றோர் மற்றும் ஹிந்து அமைப்புகள், கல்வி அதிகாரிகளிடமும், போலீசிலும் புகார் அளித்தனர். குழந்தைகள் நல வாரியம் மூலமாகவும் விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து, பள்ளியின் தலைமை ஆசிரியை லில்லி, உடற்கல்வி ஆசிரியர் ஆண்ட்ரூ போஸ் ஆகிய இருவரையும், சஸ்பெண்ட் செய்து, மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் விமலா, நேற்று முன்தினம் உத்தரவிட்டார்

மழைக்கால விடுமுறை நிறைவு : பள்ளிகள் இன்று மீண்டும் திறப்பு


மழைக்கால தொடர் விடுமுறை முடிந்து, சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், இன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன. தனியார் பள்ளிகளில் இன்று, இடை தேர்வுகள் துவங்குகின்றன. தமிழகம் முழுவதும், வடகிழக்கு பருவ மழை துவங்கும் முன், பாடங்களை விரைந்து முடிக்க, பள்ளிக்கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர். 
சென்ற வாரம் திங்களன்று மட்டுமே, பள்ளிகள் செயல்பட்டன. வடகிழக்கு பருவ மழையின் ஆக்ரோஷத்தால், அக்., ௩௦, செவ்வாய் முதல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலுார், நாகை மற்றும் விழுப்புரம் மாவட்டத்தின் சில பகுதிகளில், தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. தற்போது, கனமழை குறைந்து விட்ட நிலையில், இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. மாணவர்கள் வரமுடியாத அளவுக்கு, வெள்ளப்பெருக்கு உள்ள பகுதி பள்ளிகளும், வளாகத்தில் தண்ணீர் தேங்கிய பள்ளிகள் மட்டுமே இன்று இயங்காது.
இதை, அந்தந்த தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்து கொள்ள, அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். இன்று பள்ளிகள் துவங்கும் போது, பெரும்பாலான தனியார் பள்ளிகளில், இடைத்தேர்வு என்ற, 'மிட் டேம்' தேர்வும் துவங்குகிறது. அதேநேரத்தில், மழை பாதித்த பகுதிகளில், பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ முகாம்கள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 
தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீரை, உள்ளாட்சி ஊழியர்கள் மூலம் அகற்றி, நிலைமையை சீர் செய்யவும், அதிகாரிகள் வலியுறுத்திஉள்ளனர்.

- நமது நிருபர் -


ஆறு டிக்கெட் முன்பதிவு: ஆதார் அவசியமில்லை - ரயில்வே அறிவிப்பு


'மாதத்தில் ஆறு டிக்கெட் வரை, முன்பதிவு செய்யும் பயணியருக்கு, ஆதார் எண் அவசியமில்லை' என, ஐ.ஆர்.சி.டி.சி., தெரிவித்துள்ளது. இந்திய ரயில்வேயும், ஐ.ஆர்.சி.டி.சி., எனப்படும், ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமும் இணைந்து, பாரத தரிசன சுற்றுலா ரயில் திட்டத்தை நடத்தி வருகிறது. நாட்டில் உள்ள பல்வேறு ஆன்மிகம், சுற்றுலா தலங்கள், வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு சிறப்பு ரயில்களில், பயணியர் அழைத்து செல்லப்படுகின்றனர். இதர ரயில்களில் செல்வோர், ஐ.ஆர்.சி.டி.சி., இணைய தளத்திலும், அனுமதி பெற்ற முகவர்கள் மூலமும், 'இ - டிக்கெட்' பெற்று பயணித்து வருகின்றனர். டிஜிட்டல் மயமாக்கம், பயணியர் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக, பயணியர், ஆதார் எண் பதிவு செய்ய, அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சமீபகாலமாக, பணம் சம்பாதிக்கும் நோக்கில், அனுமதியற்ற போலி முகவர்கள் அதிகரிப்பு, டிக்கெட் விற்பனையில் முறைகேடு உள்ளிட்ட புகார்கள் அதிகரித்தன. இவற்றை கட்டுப்படுத்த, ஆறு டிக்கெட்களுக்கு மேல் முன்பதிவுசெய்யும் பயணியருக்கு, ஆதார் எண் அவசியம் என, ஐ.ஆர்.சி.டி.சி., தெரிவித்துள்ளது.

ஐ.ஆர்.சி.டி.சி., அதிகாரி ஒருவர் கூறுகையில், ''சில முகவர்கள், கமிஷன் நோக்கில் அதிகமான டிக்கெட்டு கள் முன்பதிவு செய்து, விற்பனை செய்து வருவதாக புகார்கள் எழுகின்றன. போலி முகவர்களால் பயணியர் ஏமாற்றத்துக்கும் ஆளாகின்றனர். இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே, இணையதளத்தில் ஆதார் பதிவு அவசியமாக்கப்பட்டுள்ளது. மாதத்தில் ஆறு டிக்கெட்கள் பெறுவோருக்கு, ஆதார் அவசியமில்லை; அதற்குமேல், ஆதார் பதிவு அவசியம்,'' என்றார்.

- நமது நிருபர் -

NEWS TODAY 03.07.2026