Sunday, November 19, 2017

வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகைகள்: பி.எஸ்.என்.எல். அறிவிப்பு

By சென்னை,  |   Published on : 19th November 2017 01:45 AM  

போஸ்ட் பெய்டு வாடிக்கையாளர்களுக்கு மிகப்பெரிய சலுகைகளை பி.எஸ்.என்.எல். நிறுவனம் அறிவித்துள்ளது.

"லூட் லோ' என்ற பெயரில் பி.எஸ்.என்.எல். போஸ்ட் பெய்டு மொபைல் வாடிக்கையாளர்களுக்கு 60 சதவீத கட்டணச்சலுகை மற்றும் 500 சதவீத டேட்டா சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. போஸ்ட் பெய்டு மொபைல் வாடிக்கையாளர்களுக்கு மொபைல் சேவைகளின் கீழ், 60 சதவீதம் வரை சலுகை கொடுக்கப்படுகிறது. இதில், ரூ.225, ரூ.325, ரூ.525, ரூ.725, ரூ.799, ரூ.1125 ஆகிய 7 போஸ்ட் பெய்டு திட்டங்களில் இணைப்பு பெற்றவர்களுக்கு 60 சதவீத கட்டணச் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. 


இது தவிர நிரந்தர மாதாந்திரக் கட்டணம் இருக்கும் திட்டங்களுக்கு 500 சதவீதம் கூடுதல் டேட்டா சலுகை வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, ரூ.99, ரூ.149, ரூ.225, ரூ.325, ரூ.525, ரூ.725, ரூ.799, ரூ.1,125 ஆகிய மாதாந்திரக் கட்டணங்களுக்கு இந்தச் சலுகை அளிக்கப்படுகிறது. 500 எம்பி, 3 ஜிபி, 7ஜிபி, 15 ஜிபி, 60 ஜிபி மற்றும் 90 ஜிபிஆகியவற்றுக்கு இலவச டேட்டா வசதியை பயன்படுத்த முடியும். இந்த சலுகைகள் நவம்பர் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.


இது தொடர்பாக கூடுதல் தகவல்களை www.bsnl.co.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம் என பிஎஸ்என்எல் சென்னை நிலைய தலைமை பொதுமேலாளர் எஸ்.எம்.கலாவதி தெரிவித்தார்

மரணமடைந்த பெண்ணின் தாய், சகோதரிக்கு இலவச மருத்துவ சிகிச்சை கோரி வழக்கு

Added : நவ 19, 2017 01:15

சென்னை:பெண்களை பின் தொடர்வது, கேலி செய்வது போன்ற வழக்குகளை விசாரிக்க, ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும், பயிற்சி பெற்ற பெண் இன்ஸ்பெக்டர்களை நியமிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விசாரணையை, ஜன., ௫க்கு, உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.

சென்னையைச் சேர்ந்த, வழக்கறிஞர் சூரியபிரகாசம் தாக்கல் செய்த மனு:காதலை நிராகரிப்பதாலும், திருமணம் செய்ய மறுப்பதாலும், அப்பாவி இளம் பெண்கள், சிறுமியர் மீது, வெறி பிடித்த மனித மிருகங்கள், பெட்ரோல், மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைக்கின்றனர். ஒரு பெண்ணுக்கு, கணவனை தேர்ந்தெடுக்கும் உரிமை உள்ளது; அதேநேரம், நிராகரிக்கும் உரிமையும் உள்ளது.

தங்கள் விருப்பத்துக்கு எதிராக பெண்கள் செயல்பட்டால், அவர்கள் மீது பெட்ரோல், மண்ணெண்ணெய் ஊற்றி, கொலை செய்கின்றனர் அல்லது முகத்தை அலங்கோலப்படுத்துகின்றனர்.இதனால், பாதிப்புக்கு ஆளாகும் பெண்களின் நிலை கொடுமையானது. அவர்கள் படும் வேதனை, நிரந்தரமாகி விடுகிறது. கல்லுாரி, பள்ளி மாணவி யரின் பின் சென்று,காதலிக்கும்படி வற்புறுத்துவது, தாக்குவது என்ற மனப்போக்கு தற்போது வளர்ந்து வருகிறது.

சமீபத்தில், ஆதம்பாக்கத்தில், திருமணம் செய்ய மறுத்ததால், இந்துஜா என்ற இளம் பெண் மீது, பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்ட சம்பவம் நடந்தது. இதில், அந்த பெண் மரணமடைந்தார். தடுக்க வந்த தாயார், சகோதரி, படுகாயம் அடைந்துள்ளனர்.மருத்துவக்கல்லுாரி மாணவி அளித்த புகாரில், சட்டக் கல்லுாரி மாணவன் ஒருவன், சமீபத்தில் கைது செய்யப்பட்டான். 'ஆசிட்' வீச்சால் பாதிக்கப்படுபவர்களுக்கு, குறைந்தபட்சம், மூன்று லட்சம் ரூபாய்நஷ்டஈடு, இலவச மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆசிட் வீச்சால் பாதிப்புக்கும், பெட்ரோல் வீச்சால் ஏற்படும் பாதிப்புக்கும், வேறுபாடு ஒன்றும் இல்லை. அதனால், இரண்டையும் இணையாக கருத வேண்டும்.எனவே, ஆதம்பாக்கத்தில், பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில், மரணமடைந்த பெண்ணின் தாயார் ரேணுகா, சகோதரி நிவேதிதா ஆகியோருக்கு, இலவச மருத்துவ சிகிச்சை அளிக்க உத்தரவிட வேண்டும்.

ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும், இன்ஸ்பெக்டர் அந்தஸ்தில், பயிற்சி பெற்ற பெண் இன்ஸ்பெக்டரை நியமித்து, இத்தகைய வழக்குகளை விசாரிக்க உத்தரவிட வேண்டும். பாதிக்கப்படு பவர்களுக்கு, குறைந்தபட்சம், மூன்று லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனு, தலைமை நீதிபதி, இந்திரா பானர்ஜி, நீதிபதி, எம்.சுந்தர் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை, ஜன., ௫க்கு, முதல் பெஞ்ச் தள்ளிவைத்தது.

போலி டாக்டர்கள் மீது கொலை முயற்சி வழக்கு

Added : நவ 18, 2017 21:29

கிருஷ்ணகிரி:''போலி டாக்டர்கள் மீது, கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்படும்,'' என, தமிழக சுகாதாரத் துறை செயலர், ராதாகிருஷ்ணன் கூறினார்.

கிருஷ்ணகிரியில் உள்ள, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், தமிழக சுகாதாரத் துறை செயலர், ராதாகிருஷ்ணன், நேற்று ஆய்வு செய்தார்.பின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:தமிழகம் முழுவதும், அக்., வரை, 17 ஆயிரம் பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டனர். இதில், 52 பேர் மட்டுமே இறந்துள்ளனர். அரசின் துரித நடவடிக்கையாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பாலும், காய்ச்சல் பரவுவது கட்டுக்குள் வந்துள்ளது.

போலி டாக்டர்களை கண்டுபிடித்து கைது செய்யும் போது, அவர்கள், எளிதில் நீதிமன்றத்தில் ஜாமின் பெற்று, மீண்டும் அதே இடத்தில் கிளினிக் வைத்து, நோயாளிகளுக்கு சிகிச்சை செய்கின்றனர். இவ்வாறு, சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் போலி டாக்டர்கள் மீது, கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்படும். இதனால், அவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாது.இவ்வாறு அவர் கூறினர்.

'ஹஜ்' பயணம் செல்ல விண்ணப்பிக்கலாம்

Added : நவ 19, 2017 01:23

சென்னை:அடுத்த ஆண்டு, ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும், தமிழக
முஸ்லிம்களிடம் இருந்து, மும்பை, இந்திய ஹஜ் குழு சார்பாக, தமிழ்நாடு மாநில ஹஜ் குழு, விண்ணப்பங்களை வரவேற்கிறது.சென்னை, நுங்கம்பாக்கத்தில் மாநில ஹஜ் குழு செயலரிடம் இருந்து, விண்ணப்பங்களை பெறலாம். www.hajcommittee.gov.in இணையதளத்திலும், பதிவிறக்கம் செய்யலாம்.விண்ணப்ப படிவங்களை, டிச., 7க்குள் சமர்ப்பிக்க வேண்டும். வங்கி கணக்கு விபரங்களை, ஐ.எப்.எஸ்., குறியீடு எண்ணுடன் மனுதாரர்கள் அளிக்க வேண்டும்.

'கேன்சர்' சிகிச்சைக்கு காப்பீட்டு திட்டம் எல்.ஐ.சி., நிறுவனம் அறிவிப்பு

Added : நவ 18, 2017 20:04

சென்னை:புற்று நோயால் பாதிக்கப்பட்டோர், சிகிச்சை பெறுவதற்காக, எல்.ஐ.சி., எனப்படும், 'லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்,' 'எல்.ஐ.சி., கேன்சர் கவர்' என்ற, சிறப்பு காப்பீட்டு திட்டத்தை துவக்கி உள்ளது.

இதுகுறித்து, சென்னையில், அந்நிறுவனத்தின் மண்டல மேலாளர் தாமோதரன் கூறியதாவது:


ஏழை மக்கள பலர், புற்று நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு பணம் இன்றி சிரமப்படுகின்றனர். அவர்களின் சிரமத்தை போக்க, 'எல்.ஐ.சி.,யின் கேன்சர் கவர்' என்ற காப்பீட்டு திட்டம் துவக்கப்பட்டு உள்ளது. அதில், 20 வயது முதல், 65 வயது வரை உள்ளவர்கள் சேரலாம். ஆண்டுக்கு, குறைந்தபட்சம், 2,400 ரூபாய், 'பிரீமியம்' செலுத்தி, 10 லட்சம் ரூபாய் முதல், 50 லட்சம் ரூபாய் வரை, காப்பீடு எடுக்கலாம்.

முதல் ஐந்து ஆண்டுகளுக்கு, பிரீமியம் தொகை உயர்த்தப்படாது.இதில், மற்ற காப்பீட்டு திட்டங்களில் இருப்பது போல, இறப்பு அல்லது முதிர்வு காலத்திற்கு பின், காப்பீடு முதிர்வு தொகை வழங்கப்படாது. அதற்கு பதில், புற்று நோய்க்கு சிகிச்சை பெற, நிதி உதவி செய்யப்படும்.
அதன்படி, புற்று நோய் துவக்க நிலையில் கண்டறியப்பட்டால், அதற்கு சிகிச்சை பெற, காப்பீடு தொகையில், 25 சதவீதம் உடனே தரப்படும்.

அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு, பிரீமியம் செலுத்த தேவையில்லை. புற்று நோய் இறுதி  கட்டத்தில் இருந்தால், அப்போது சிகிச்சை பெற, காப்பீடு செய்த மொத்த தொகையும் முழுவதும் வழங்கப்படும். அதில், 1 சதவீத தொகை, மாதம் தோறும், 10 ஆண்டுகளுக்கு தரப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


முக்கிய நகரங்களில் இருந்து பம்பைக்கு சிறப்பு பஸ்கள்


Added : நவ 19, 2017 00:58

சபரிமலை சீசன் துவங்கி உள்ளதால், பக்தர்களின் வசதிக்காக, தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து, தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில், 50 சிறப்பு பஸ்களும், பிற போக்குவரத்து கழகங்கள் சார்பில், 100 சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகின்றன.

சபரிமலை சீசன் துவங்கி உள்ளதை அடுத்து, தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில், சென்னை, மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் இருந்து, பம்பை, குமுளிக்கு சிறப்பு பஸ்களின் இயக்கம், நேற்று முன்தினம் முதல் துவங்கி உள்ளது. முதற்கட்டமாக, சென்னையில் இருந்து, 10 பஸ்களும், திருச்சி, மதுரையில் இருந்து தலா, இரு பஸ்களும் இயக்கப்படுகின்றன.

பக்தர்களின் டிக்கெட் முன்பதிவு, வருகைக்கு ஏற்ப, சிறப்பு பஸ்களின் எண்ணிக்கையை, சென்னையில் இருந்து, 20 ஆகவும், பிற நகரங்களில் இருந்து இயக்கப்படும் பஸ்களின் எண்ணிக்கை, 10 ஆகவும் உயர்த்தி, இரு மார்க்கங்களிலும், 50 பஸ்கள் வரை இயக்க, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இது குறித்து, அதிகாரிகள் கூறியதாவது:

சபரிமலைக்கு யாத்திரை செல்லும் பக்தர்களின் வசதிக்காக, அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில், சிறப்பு பஸ்களின் இயக்கம் துவக்கப்பட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள, 54 முன்பதிவு மைங்கள், www.tnstc.com இணையதளத்திலும் முன்பதிவு செய்து கொள்ளலாம். குழுவாக செல்ல விரும்பும் பக்தர்கள், தாங்கள் பயணிக்கும் நகரத்தில் உள்ள கிளை மேலாளர்களை தொடர்பு கொண்டால், அதற்கான ஏற்பாடுகள் செய்து தரப்படும்.

குழுவாக பயணிப்போருக்கு, டிக்கெட்டில் ஏற்கனவே அரசால் அறிவிக்கப்பட்டுள்ள தள்ளுபடி சலுகை உண்டு. ஐந்து பேர் மொத்தமாக டிக்கெட் முன்பதிவு செய்தாலும், சிறப்பு சலுகையை பெறலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.எஸ்.இ.டி.சி.,யை தவிர, மதுரை, நெல்லை, கோவை, விழுப்புரம் கோட்டங்கள் சார்பில், 100 சிறப்பு பஸ்கள், பம்பை, குமுளிக்கு இயக்கப்படுகின்றன.
அது தவிர, தமிழகத்தின் புனித தலங்களான, கன்னியாகுமரி, ராமேஸ்வரம் ஆகிய நகரங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

- நமது சிறப்பு நிருபர் -


சபரிமலையில் அறைகள் பெறுவது எப்படி?

Added : நவ 18, 2017 22:27

சபரிமலை:சபரிமலையில் தங்க விரும்பும் பக்தர்கள், அறைகளை, 'ஆன் - லைன்' மூலமாகவும், நேரடியாகவும் பெற முடியும்.கேரளாவில் உள்ள, சபரிமலை அய்யப்பன் கோவிலில், மதியம், 12:00 மணிக்கு பின், நெய்யபிஷேகம் கிடையாது. இதனால், மதியத்துக்கு பின் வரும் பக்தர்கள், அங்கு தங்க வேண்டிய நிலைஏற்படுகிறது.

இவ்வாறு தங்கும் பக்தர்களுக்கு, ஆன் - லைன் மூலமும், அலுவலகம் மூலம் நேரடியாகவும் அறைகள் வழங்கப்படுகின்றன.


ஆன் - லைன் மூலம் பதிவு செய்ய விரும்புபவர்கள், www.onlinetdb.com என்ற இணையதளம் மூலம் அறைகளை தேர்வு செய்து, பணம் செலுத்தி, அறைகளை முன்பதிவு செய்ய முடியும்.


அல்லாத பட்சத்தில், சன்னிதானத்தில், கோவிலின் இடது பக்கம் பாண்டி தாவளம் செல்லும், 108 படிக்கட்டு அருகே அமைந்துள்ள அலுவலகத்தில், நேரடியாக அறைகள் பெற முடியும்.


எல்லா நாட்களிலும், மாலை, 4:00 மணி முதல், அறைகள் பெற முடியும். இந்த கவுன்டரில், முன்பதிவு வசதி கிடையாது. 12, 16 மணி நேரம் என, இரு பிரிவுகளில் அறைகள் கிடைக்கும்.

திடீர் நெரிசல்: பக்தர் காயம்

சபரிமலை அய்யப்பன் கோவிலில், நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்ட போது, வடக்கு வாசல் வழியாக செல்லும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால், மீடியா சென்டருக்கும், வடக்குவாசல் க்யூ காம்ப்ளக்ஸ் அமைந்துள்ள கட்டடத்துக்கும் இடையே, கடுமையான நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்டத்தில், ஒரு டிராக்டரும் சிக்கியது. பக்தர்கள் எந்த பக்கமும் நகர முடியாத நிலை ஏற்பட்டது.

இதை தொடர்ந்து, கூடுதல் போலீசார், மத்திய அதிவிரைவு படை போலீசாரும் வந்து கூட்டத்தை சரி செய்து, டிராக்டரை விடுவித்தனர். அதன்பின், கூட்டம் சிறிது சிறிதாக குறைந்தது. இந்த நெரிசலில், ஒருவர் காயமடைந்தார்.

பக்தர் படத்துடன், 'ஸ்டாம்ப்'

சபரிமலையில், மாளிகைப்புறம் கோவிலின் கீழ் பகுதியில், சன்னிதானம் போஸ்ட் ஆபீஸ் செயல்படுகிறது. இந்த போஸ்ட் ஆபீஸ், பக்தர்களுக்கும், இங்குள்ள ஊழியர்களுக்கும், மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக இருந்தது. ஆனால், தற்போது மொபைல் போன் பயன்பாடு அதிகரித்து உள்ளதால், போஸ்ட் ஆபீசின் தேவை குறைந்து விட்டது. இதனால், சபரிமலைக்கு வரும் பக்தர்களை கவரும் வகையில், புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

இதன்படி, இங்குள்ள போஸ்ட் ஆபீசில், 300 ரூபாய் செலுத்தினால், சன்னிதான பின்னணி படத்தில், பக்தர் படத்துடன் ஸ்டாம்ப் பிரின்ட் செய்து கொடுக்கப்படுகிறது. இதற்காக, பக்தரின் புகைப்படம் அங்கேயே எடுக்கப்படுகிறது. ஐந்து ரூபாய் மதிப்பில், 12 ஸ்டாம்புகள் பிரின்ட் செய்து கொடுக்கப்படும். இதை, தபால் அனுப்பவும், கண்காட்சியில் வைக்கவும், நினைவாக பாதுகாத்து வைக்கவும் பயன்படுத்தலாம்.

NEWS TODAY 06.07.2026