Friday, January 26, 2018

ஏர்டெல் நிறுவனத்திற்கு போட்டியாக களமிறங்கியது ஜியோ: குடியரசு தின சலுகை அறிவிப்பு

Published : 24 Jan 2018 14:11 IST



ஏர்டெல் நிறுவனம் சமீபத்தி்ல் புதிய சலுகைகளை அறிவித்த நிலையில் அதற்கு போட்டியாக, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் களமிறங்கியுள்ளது.

வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக கடும் போட்டியில் இறங்கியுள்ள மொபைல் போன் நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை வாரி வழங்கி வருகின்றன. குறிப்பாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் வருகைக்கு பிறகு மொபைல் போன் நிறுவனங்களிடையே போட்டி அதிகரித்துள்ளது.

ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கிய இலவச வாய்ப்புகளுக்கு மற்ற நிறுவனங்களான ஏர்டெல், ஐடியா ஈடுகொடுக்க முடியாமல் திணறின. இதைத் தொடர்ந்து அந்த நிறுவனங்களும் கட்டணத்தை பெருமளவு குறைத்ததுடன், பல்வேறு சலுகைகளையும் அளித்தன.

இந்நிலையில் ஏர்டெல் நிறுவனம் சமீபத்தில் மொபைல் போன் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கியது. இதற்கு போட்டியாக, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகையை அறிவித்துள்ளது.


அதன்படி, 28 நாட்களுக்கு ரூ. 149, 70 நாட்களுக்கு ரூ. 349, 84 நாட்களுக்கு ரூ. 399, 91 நாட்களுக்கு ரூ. 449 திட்டத்தின் கீழ் தற்போது ஒரு ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இது, 1.5 ஜிபி டேட்டவாக அதிகரிக்கப்படுகிறது.

அதுபோலேவே, , 28 நாட்களுக்கு ரூ. 198, 70 நாட்களுக்கு ரூ. 398, 84 நாட்களுக்கு ரூ. 348, 91 நாட்களுக்கு ரூ. 498 திட்டத்தின் கீழ் தற்பாது ஒரு வழங்கப்படுகிறது. 1.5 ஜிபி டேட்டாவுக்கு பதில், 2ஜி டேட்டா இனி வழங்கப்படும்.

குடியரசு தினமான ஜனவரி 26ம் தேதி முதல் புதிய சலுகை அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.98 விலையில் கிடைக்கும் புதிய சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு 2 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

மற்ற திட்டங்களில் தினமும் 1 ஜிபி டேட்டா வழங்கப்பட்ட நிலையில் தற்சமயம் 1.5 ஜிபி டேட்டாவும், தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்கிய திட்டங்களில் தற்சமயம் தினமும் 2 ஜிபி டேட்டாவும் வழங்கப்படுகிறது.

உச்ச நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ உறுதி இந்தாண்டு நீட் தேர்வு வினாத்தாளில் மாநில மொழிப்பாடம் இடம் பெறும்

2018-01-26@ 02:09:40

புதுடெல்லி : ‘இந்தாண்டு நீட் தேர்வு வினாத்தாளில் மாநில பாடத்திட்ட பாடங்களும் இடம்பெறும்’ என உச்ச நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ நிர்வாகம் உறுதி அளித்துள்ளது. கடந்தாண்டு நடந்த நீட் தேர்வு வினாத்தாளில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டன. மேலும், சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் இருந்து மட்டுமே கேள்விகள் கேட்கப்பட்டதால், மாநில பாடத்திட்டங்களில் படித்த மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறமுடியாமல் போனது. ஏராளானோர் தோல்வியை தழுவினர். பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றும், மருத்துவ இடம் கிடைக்காமல்போனது. இந்நிலையில், இந்தாண்டு நீட் தேர்வு வினாத்தாளில் மாநில பாடத்திட்டங்களில் இருந்தும் கேள்விகள் கேட்கப்படும் என மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது.

ஆனால், சிபிஎஸ்இ இதை மறுத்தது. கடந்தாண்டு நடைமுறையே பின்பற்றப்படும் என அறிவித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மாணவர்கள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு பதில் அளிக்கும்படி சிபிஎஸ்இ நிர்வாகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஎஸ்இ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ‘நாடு முழுவதும் இந்தாண்டும் நீட் தேர்வு ஒரே மாதிரியாக நடத்தப்படும். இந்தாண்டு வினாத்தாளில் மாநில பாடத்திட்டங்களும் கண்டிப்பாக இடம் பெறும். வினாத்தாளில் மாநில மொழியும், ஆங்கிலமும் கண்டிப்பாக இருக்கும்’ என உறுதியளித்தது. இதை ஏற்று வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
பவர்பேங்கால் வந்த பிரச்னை: தில்லி விமான நிலையத்தில் வெடிகுண்டு பீதி!

By Raghavendran | Published on : 25th January 2018 06:49 PM



ஸ்மார்ட்ஃபோன் மற்றும் சார்ஜ் செய்து இயங்கும் மின்னணு சாதனங்களின் இயக்கத்துக்காக பவர்பேங்க் உபயோகிக்கப்படுகிறது. இதில் ஒருமுறை சார்ஜ் செய்து கொண்டால் நாம் பயன்படுத்தும் உபகரணங்களில் சார்ஜ் தீரும் போது இதைக் கொண்டு மீ்ண்டும் சார்ஜ் செய்துகொள்ளலாம்.

இந்நிலையில், இந்த பவர்பேங்கின் விநோத வடிவம் காரணமாக தில்லி விமான நிலையத்தில் சற்று நேரம் பதட்டமான சூழ்நிலை நிலவியது. மேலும் இதை வைத்திருந்த சம்பந்தப்பட்ட பயணி ஒருவர் பாதுகாவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

தில்லியில் இருந்து அகமதாபாத் செல்லும் அந்த பயணியிடம் சந்தேகத்துக்குரிய பொருள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை அங்கிருந்த பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, அவரிடம் கையெறி வெடிகுண்டு இருப்பது தெரிந்தது. இதனால் அங்கிருந்த சக பயணிகள் மற்றும் விமான நிலைய ஊழியர்கள் பீதியடைந்தனர். பின்னர் அதனை சோதித்து போது, அது சார்ஜ் செய்ய பயன்படும் பவர்பேங்க் என்பது தெரியவந்தது.

இதையடுத்து எச்சரிக்கப்பட்ட அப்பயணி சம்பந்தப்பட்ட விமானத்தில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டார். பொதுவாக இதுபோன்ற மின்னணு சாதனங்கள் பல்வேறு வகையான வேடிக்கையான வடிவங்களில் சந்தைப்படுத்தப்படுகிறது.

குடியரசு தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், நாட்டின் தலைநகர் தில்லியின் விமானநிலையத்தில் இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது அங்குள்ளவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.நம் விருப்பத்துக்கு ஏற்றமாதிரி நாம் பொருட்களை வாங்கினாலும், சற்று பொதுநலனை கருத்தில் கொண்டு அதனால் பிறர் பாதிப்படையாமல் இருக்கும் வகையில் செயல்படுவதே சிறந்தது.
திரைப்படம் என்ன செய்யும்?

By உதயை மு. வீரையன் | Published on : 26th January 2018 01:32 AM

அண்மைக் காலமாக கருத்துரிமைக்கு எதிரான வன்முறை இந்தியா முழுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்படுவதும், சிந்தனையாளர்கள் சுட்டுக் கொல்லப்படுவதும் காண முடிகிறது. மாநில அரசுகளும், காவல் துறையும் எடுக்கும் நடவடிக்கைகள் வெற்றிகரமாக அமையவில்லை.

இந்நிலையில் ஒரு திரைப்படம் தொடர்பாக வடமாநிலங்களில் எழுந்த எதிர்ப்பு, வன்முறைப் போராட்டமாக மாறியுள்ளது. படம் வெளியிடப்படும் திரையரங்குகள் மீது தாக்குதல், கார்களுக்குத் தீவைப்பு போன்ற வன்முறைச் சம்பவங்களால் பதற்றம் நிலவுகிறது.

தியேட்டர்களுக்குப் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுவதால் ராஜஸ்தான், குஜராத், மத்தியப் பிரதேசம், கோவா ஆகிய 4 மாநிலங்களில் படத்தைத் திரையிட மாட்டோம் என்று மல்டி பிளெக்ஸ் தியேட்டர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவான 'பத்மாவத்' திரைப்படத்தில் வரலாறு திரித்துக் கூறப்பட்டுள்ளதாக விவாதம் எழுந்தது. 14-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்ததாகக் கூறப்படும் சித்தூர் ராணி பத்மினியின் புகழுக்குக் களங்கம் கற்பிக்கும் வகையில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக வட மாநிலங்களில் எதிர்ப்பு ஏற்பட்டது.

இதையடுத்து இப்படத்தில் சில காட்சிகளை தணிக்கை செய்தும், 'பத்மாவதி' என்ற படத்தின் பெயரை 'பத்மாவத்' என்று மாற்றம் செய்தும், திரைப்படத் தணிக்கை வாரியம் அனுமதி அளித்தது.

ஆனால் கர்னி சேனை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் தொடர் எதிர்ப்பால் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேசம், குஜராத் மாநில அரசுகள் இப்படத்துக்குத் தடை விதித்தன. இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றது.

இதில் இப்படம் ஜனவரி 25 வெளியிட உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இந்த உத்தரவில் மாற்றம் செய்யக் கோரி ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசம் மீண்டும் உச்ச நீதிமன்றத்தை நாடின. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'நீதிமன்றத் தீர்ப்பை அனைவரும் மதித்து நடக்க வேண்டும். மாநிலங்களில் சட்டம், ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டியது மாநில அரசுகளின் கடமை' என்று மனுக்களைத் தள்ளுபடி செய்துவிட்டது.

எனினும் இதனை ஏற்க மறுத்த கர்னி சேனா உள்ளிட்ட அமைப்புகள் இப்படத்தைத் திரையிட அனுமதிக்க மாட்டோம் என அறிவித்துள்ளது. இதனையடுத்து ஹரியாணா, குஜராத், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் மறுபடியும் போராட்டம் தொடங்கியது.
ராஜஸ்தானில் இந்தத் திரைப்பட எதிர்ப்பின் ஒரு பகுதியாக 1900 பெண்கள் தீக்குளிக்கத் தயாராக இருப்பதாக கர்னி சேனை அமைப்பின் செய்தித் தொடர்பாளர் அறிவித்துள்ளார்.

இவ்வாறு வலுத்து வரும் போராட்டம் காரணமாக பல இடங்களில் இப்படத்தைத் திரையிட மாட்டோம் என்று திரையரங்கு உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

ராஜஸ்தானின் சித்தூர் கோட்டையை ஆண்ட ராணியாகக் கருதப்படும் பத்மாவதியின் வரலாறு திரித்துக் கூறப்பட்டுள்ளதாகவும், அவரது புகழுக்கு இழுக்கு ஏற்பட்டுவிட்டதாகவும் எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர்.
பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு மாநிலங்களில் வெவ்வேறு கற்பனைகள் பத்மாவதி கதாபாத்திரத்தை வைத்து புனையப்பட்டு வந்திருக்கின்றன. 20-ஆம் நூற்றாண்டிலும் புதிய கற்பனைகளோடு அந்தக் கதை எடுக்கப்பட்டுள்ளது.

16-ஆம் நூற்றாண்டில் சூஃபி கவிதைகளில் 'பத்மாவதி' என்ற பாத்திரம் புகழ் பெற்றது. அது கற்பனையானது என்றும், அதில் வரும் பெண் பாத்திரம் நல்லியல்புகளின் வடிவமாக உருவாக்கப்பட்டுள்ளது என்றும் ஒருசாரார் கூறுகின்றனர்.

ஆனால் இதனை சில அமைப்புகள் ஏற்றுக் கொள்ளவில்லை. இது முற்றிலும் உண்மைக் கதை என்றும், திரைப்படத்தில் இந்த உண்மை திரிக்கப்பட்டுள்ளதாகவும், தன் கெளரவத்தைக் காத்துக் கொள்ளத் தீக்குளித்த ராணி பத்மாவதியை இழிவுபடுத்துவதாகவும் ராஜ்புத் கர்னி சேனை, அகில பாரத சத்ரிய மகாசபா போன்ற அமைப்புகள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளன.
இதற்காக அதில் நடித்த நடிகைக்கும், இயக்குநருக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். ஒரு சிறந்த நடிகையின் பணி என்பது கொடுத்த பாத்திரத்தை உணர்ந்து நடிப்பதுதான் என்பதும், கொடுத்த கதையை வெற்றிகரமாகக் கொண்டு வருவதே சிறந்த இயக்குநரின் பணி என்பதும் இவர்களுக்கு யார் பாடம் நடத்துவது?

முஸ்லிம் மன்னரிடம் சரணடையாமல் தம் உயிரைத் தீயில் மாய்த்துக் கொண்டு கண்ணியத்தைக் காத்தவர் ராணி பத்மாவதி என்றும், அவரது பெருமைக்கு இழுக்கு தேடும் வகையில் தீபிகா படுகோன் நடந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இராஜபுத்திர மன்னனைத் திருமணம் செய்து கொண்ட சித்தூர் ராணி பத்மாவதி, தில்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜி மீது காதல் வசப்படுவது போல இந்தப் படத்தில் நடித்திருப்பதாகக் குற்றம் கூறப்படுகிறது. இதில் பத்மாவதியாக நடித்துள்ள தீபிகா படுகோனின் கொடும்பாவிகள் வடமாநிலங்களில் எரிக்கப்பட்டன.

சூர்ப்பனகையின் மூக்கை இலக்குவன் அறுத்தது போல தீபிகாவின் மூக்கையும் அறுப்போம் என்று எச்சரிக்கை செய்கின்றனர். தீபிகா படுகோனை உயிரோடு எரிப்பவருக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று சத்ரிய மகாசபா அறிவித்துள்ளது. இந்தப் பரிசுத் தொகை 5 கோடியாகவும், 10 கோடியாக உயர்த்திக் கொண்டே போகின்றனர்.

ஜனநாயகத்தில் வன்முறைக்கும், அச்சுறுத்தல்களுக்கும் இடமில்லை என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார். இதை ஆட்சியாளர்கள் அமல்படுத்த வேண்டாமா?

பல்வேறு மதங்கள், சாதிகள், வேற்றுமைகளைக் கொண்டிருந்தாலும் அனைவரும் ஒருமைப்பாட்டுடன் வாழ்ந்துவரும் பெருமைமிகு நாடாக விளங்கிவரும் இந்தியாவில், அண்மைக் காலமாகச் சில சர்ச்சைகள் கலை உலகையும், படைப்புகளையும் சுற்றி நிகழ்ந்து வருகின்றன.
இந்தச் சமூகத்தில் அனைவருக்கும் போராடுவதற்கும், எதிர்ப்புகளை வெளிப்படுத்துவதற்கும் உரிமை உண்டு. ஆனால் அது ஜனநாயக வழியில்தான் இருக்க வேண்டும். மாறாக, வன்முறையை வெளிப்படுத்தும் அச்சுறுத்தல்களுக்கும், உயிருக்கு வெகுமதி விதிக்கும் நடவடிக்கைகளுக்கும் இங்கு இடமில்லை. இவ்வாறு வெங்கய்ய நாயுடு கூறியுள்ளார்.
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகியுள்ள 'பத்மாவத்' இந்திப் படத்தின் வெளியீடு திசம்பர் முதல் நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் படம் திரையரங்குக்கு வரவிடாமல் தடுக்கப்பட்டது. படத்தின் முன்னோட்டம் திரையிடப்பட்ட ஒரு திரையரங்குக்குத் தீ வைக்கப்பட்டது. தலைநகர் தில்லி உள்பட நாடெங்கும் கலவரம் பரவாக்கப்பட்டது.

இதனால் படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது. இதனைப் படத்தின் தயாரிப்பு நிறுவனமே அறிவித்தது. அதற்குரிய தணிக்கைச் சான்றிதழை அளிக்காமல் இருப்பதற்குரிய தடைகளை ஆட்சியாளர்களே ஏற்படுத்தி வந்தனர்.

பாலிவுட்டின் பிரபல திரைப்பட இயக்குநர் பன்சாலி இயக்கத்தில் சுமார் ரூ.190 கோடி செலவில் பத்மாவத் திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனால் இப்படத்தைத் தயாரித்த வயாகோம்-18 நிறுவனம் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது.

அந்தப் படத்தின் சில காட்சிகளை நீக்க வேண்டும் என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'படத்தில் உள்ள காட்சிகள் என்னவென்று தெரியாமலேயே, சிலவற்றை நீக்க வேண்டும் என்று படம் வெளியாகும் முன்பே கோருவது ஏற்புடையது அல்ல' என்று கூறி தள்ளுபடி செய்தது.

'பொது ஒழுங்கு குலைந்துவிடும் என்று மிரட்டுகிறார்கள் என்பதற்காகக் கருத்து சுதந்திரத்துக்கு தடை விதிக்கக் கூடாது' என்று முன்பே உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. என்றாலும் பல காலமாகக் கருத்துச் சுதந்திரம் குற்றுயிரும், குலையுயிருமாக நாட்டில் நடமாடிக் கொண்டுதான் இருக்கிறது.

'பத்மாவத்' திரைப்படத்தை மட்டுமல்ல, மற்ற எந்த கருத்தோவியத்தையும் விமர்சனம் செய்ய எல்லோருக்கும் உரிமை உண்டு. ஆனால் கருத்துரைக்கும் உரிமையைத் தடுப்பதற்கு யாருக்கும் உரிமை கிடையாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

வன்முறைகளால் அதிகம் பாதிக்கப்படுவது அப்பாவிப் பொதுமக்களே! அவர்களுக்கும், இந்தத் திரைப்படத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
ஒரு திரைப்படத்தை எப்படி பார்க்க வேண்டும் என்பதற்குப் பல படங்களும், பல பாடங்களும் இருக்கின்றன. எப்படிப் பார்க்கக் கூடாது என்பதற்கு இது ஒன்றே போதும்.

எதற்கும் கவலைப்படாமல் போராடுவது எனத் தீர்மானித்துவிட்டால் திரைப்படம் என்ன செய்யும்?
எங்கே செல்கிறது இந்தியக் கல்வி முறை?

By பா. ராஜா | Published on : 26th January 2018 01:32 AM

அண்மையில் ஒரு திரைப்படம் வெளியானது. அதில் பணிக்கான நேர்முகத் தேர்வு நடைபெறுவது போன்று ஒரு காட்சி. நேர்முகத் தேர்வில் ஒரு சுருக்க வார்த்தைக்கு, விரிவாக்கம் என்ன என்று கதாநாயகன் கேட்கிறார்.
பங்கேற்றவர்களில் பலரும் தவறான விடையையே கூறுகின்றனர். இந்தக் காட்சியை நாம் சாதாரணமானதாக எடுத்துக் கொண்டாலும், இன்றைய உண்மை நிலையும் அதுதான் என்பது வருத்தத்துக்குரியது.
நடுத்தர வகுப்பினராக இருந்தாலும் சரி, ஏழைகளாக இருந்தாலும் சரி, தம் குழந்தைகளுக்கு எப்பாடுபட்டாவது சிறந்த கல்வியை அளிக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். அடிப்படைக் கல்வி வலுவானதாக இருக்க வேண்டும் என்று எண்ணுகின்றனர். அடிப்படைக் கல்வி வலுவானதாக இருந்தால், பின்னாளில் தமது குழந்தையின் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்பதில் அவர்களுக்கு அதீத நம்பிக்கை. இதனால்தான் தங்களது சக்திக்கும் மீறி, அதிகப் பணம் செலவிட்டு, சிறந்த கல்வி நிறுவனங்களைத் தேடி ஓடுகின்றனர்.

இந்தியாவில் கல்வியானது, அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் மூலம் அளிக்கப்படுகிறது. கிராமப்புறங்களில் அதிக அளவில் இருப்பது அரசுப் பள்ளிகளே. இதற்கான நிதி மத்திய அரசு, மாநில அரசு மற்றும் உள்ளூர் ஊராட்சி நிர்வாகம் மூலம் ஒதுக்கப்படுகிறது. பொருள்கள், சேவைகளைப் பெறும்போது கல்விக்கென தனி வரியையும் செலுத்தி வருகிறோம்.
நகர்ப்புறங்களில் இரண்டரை வயதுக் குழந்தைகளுக்கென குழந்தைகள் காப்பகங்கள், நர்சரி பள்ளிகள் இயங்கி வருகின்றன. 6 வயது முதல் 14 வயது வரையுள்ள அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்வி வழங்க வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இது அவர்களின் அடிப்படை உரிமை என்றும் வலியுறுத்தப்படுகிறது. நாட்டில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் 7:5 என்ற விகிதத்தில் உள்ளன. கல்விக்கு போதிய முக்கியத்துவம் அளிக்கப்படும் நிலையில், உயர்கல்வி நிலையங்களுக்குச் செல்வோர் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்துள்ளது என்று ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
6 முதல் 14 வயது வரையுள்ள குழந்தைகளில் சுமார் 29% பேர் தனியார் கல்வி நிலையங்கள் மூலம் படித்து வருகின்றனர். கிராமப்புறங்களில் வசிப்போரில் 6 முதல் 14 வயது வரையுள்ளோரில் 96.5% குழந்தைகள் பள்ளிகளுக்குச் செல்கின்றனர் அல்லது பள்ளிகளில் பெயர்களைப் பதிவு செய்துள்ளனர். இதே நிலை, கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது. கல்வி கற்க வேண்டும் என்ற விழிப்புணர்வு பெண்களிடையே அதிகரித்து வருவது மற்றொரு மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும். அனைவரும் உயர்கல்வி வரை செல்ல வேண்டும் என்பது அரசுகளின், கல்வியாளர்களின் விருப்பமாகும்.

ஆனால், ஆரம்பக் கல்வி முதலே நாம் அனைத்தையும் கற்றுத் தெளிக்கிறோமா? அதற்கு தேவையான உபகரணங்கள் கல்வி நிலையங்களில் உள்ளனவா? போதிய, தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் உள்ளனரா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. அனைவரும் கல்வி கற்க வேண்டும். சரி. ஆனால், முறையாகக் கற்றோமா, கற்பிக்கப்படுகிறோமா என்ற கேள்வியை கல்வியாளர்கள் நம்முன் எழுப்புகின்றனர். நமது ஆரம்பக் கல்வியின் தரம் எப்படி இருக்கிறது என்பதை சில புள்ளிவிவரங்களுடன் சுட்டிக் காட்டுகின்றனர்.

கிராமங்களே இந்தியாவின் உயர்நாடி என்கிறோம். ஆனால், அத்தகைய கிராமப்புறங்களில் வசிக்கும் 14-18 வரையுள்ளவர்களுக்கு தமது தாய்மொழியில் உள்ள பாடங்களை சரளமாகப் படிக்க முடியவில்லை. 36% மாணவர்களுக்கு நாட்டின் தலைநகரம் எது என்ற கேள்விக்கு பதில் தெரியவில்லை. 24 மாநிலங்களில் உள்ள 28 மாவட்டங்களில் வசிக்கும் சுமார் 3,000 மாணவ, மாணவிகளிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வின் முடிவு, கிராமப்புற மாணவர்களின் உண்மை நிலையை பட்டவர்த்தனப்படுத்தியுள்ளது.

மேலும், ஆய்வில் பங்கேற்ற 57% கிராமப்புற மாணவர்கள் சாதாரண வகுத்தல் கணக்கைப் போடவே திணறினராம். அதுபோல, இந்தியாவின் வரைபடம் குறித்து 14% மாணவர்களுக்கு தெரியவில்லை. 21% மாணவர்களுக்கு அவர்கள் வசிக்கும் மாநிலத்தின் பெயர்கூடத் தெரியவில்லை. மேலும், கற்றல் திறனில் ஆகட்டும், இடைநிற்றலில் ஆகட்டும், மாணவர்களும் மாணவிகளும் சம நிலையிலேயே உள்ளனர் என்று அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
ஆய்வில் பங்கேற்றவர்களில் கால்வாசிப் பேருக்கு பணத்தை எண்ணத் தெரியவில்லை. 44% மாணவர்களுக்கு எடை அளவுகள் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை. 40% பேருக்கு நேரத்தை சரியாகச் சொல்லத் தெரியவில்லை. இவையெல்லாம் ஒவ்வொருவருக்கும் தேவையான அடிப்படை அறிவு. இவை குறித்தே போதிய தெளிவு இல்லையென்றால், பின்னாளில் இவர்களால் எதைச் சாதிக்க முடியும்?

இதுபோன்ற மதிப்பீடு எனப்படும் ஆய்வு கடந்த பத்தாண்டுகளாக மேற்கொள்ளப்படுகிறது என்றும், முடிவில் பெரிய அளவில் மாற்றம் இல்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இத்தகைய நிலையில், அனைவருக்கும் கல்வி என்ற இலக்கை எப்போது எட்டுவது? நடப்பு ஆண்டில் மத்திய அரசு பள்ளிக் கல்விக்கென ரூ.46,356 கோடியை ஒதுக்கியுள்ளது. விரைவில் வரவுள்ள நிதிநிலை அறிக்கையில் கூடுதலாக 15% தொகையை ஒதுக்க மத்திய நிதியமைச்சர் திட்டமிட்டுள்ளார். கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு செய்து என்ன பயன்? பலன் மெச்சத்தக்க வகையில் இல்லையே. ஓட்டை எங்கே உள்ளது? ஆட்சியாளர்கள், கல்வியாளர்கள் சிந்திக்க வேண்டும்.

அடிப்படைக் கல்வியின் நிலை இப்படியென்றால், உயர்நிலைக் கல்வி, மேல்நிலைக் கல்வியின் தரமும் பெரிய அளவில் முன்னேறவில்லை. மேல் வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு போதிய ஆய்வுக்கூட வசதிகள் இல்லை. அரசுப் பள்ளிகளில் சுகாதார வசதி, சுத்தமான குடிநீர் வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்டவை இல்லை. பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு போதிய, தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. எதிர்கால சந்ததியினரை பாதிக்கும் இந்த நிலை மேலும் தொடரக் கூடாது.

நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளையும், அகில இந்திய அளவில் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளவும் அடிப்படைக் கல்வி, பள்ளிக் கல்வி வலுவானதாகவும் தரமானதாகவும் இருக்க வேண்டும். சி.பி.எஸ்.இ. இணையாக பாடத் திட்டத்தை மாற்றினால் மட்டும் பயன் கிடைக்கப் போவதில்லை. அத்தகைய நிலைக்கு நமது கிராமப்புற மாணவர்களை உயர்த்த வேண்டியது ஆட்சியாளர்களின், கல்வியாளர்களின் கடமை.
தியாகியிடம் மன்னிப்பு கேட்ட உயர் நீதிமன்றம்
வீட்டுக்கு சென்று பென்ஷன் வழங்க உத்தரவு


சென்னை:சுதந்திரப் போராட்ட தியாகியின் வீட்டுக்கு சென்று, 'பென்ஷன்' வழங்குவதற் கான உத்தரவை வழங்கும்படி, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தியாகியை அதிகாரிகள் கஷ்டப்பட வைத்ததற்காக, அவரிடம், நீதிமன்றம் மன்னிப்பும் கோரியது.





சென்னை, வியாசர்பாடியைச் சேர்ந்தவர், வி.காந்தி; நேதாஜி தலைமையிலான இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்து, சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

பதில் இல்லை

பர்மா, ரங்கூன் சிறையில், 1945 மே மாதம் முதல், டிசம்பர் வரை அடைக்கப்பட்டார். மாநில அரசின் பென்ஷன் கேட்டு, 1980ல், விண்ணப்பித்தார்; 12 ஆண்டுகள் காத்திருந்தார்; எந்த பதிலும் இல்லை. 1992 நவம்பரில், நினைவூட்டும் கடிதம் அனுப்பினார்; அரசு பரிசீலிக்கவில்லை.ரங்கூன் சிறையில், காந்தியுடன் இருந்த காளிமுத்து என்பவர், சான்றிதழ் வழங்கினார். மத்திய அரசின் பென்ஷன் தொகையை, காளிமுத்து பெற்று வந்தார்.

இந்திய தேசிய ராணுவத்தில், கர்னலாக இருந்த, டாக்டர் லட்சுமி ஷாகலும், சான்றிதழ் வழங்கினார். இந்த சான்றிதழ்களை எல்லாம் அனுப்பியும், பென்ஷன் வழங்கப்படவில்லை.

ஆஜர்

இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், காந்தி மனு தாக்கல் செய்தார். 89 வயதாகும் தனக்கு, கால தாமதம் செய்யாமல், சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான பென்ஷன் வழங்கும்படி கோரியிருந்தார். மனுவை, நீதிபதி,ரவிச்சந்திரபாபு விசாரித்தார். மனுதாரர் சார்பில், வழக்கறிஞர், எம்.புருஷோத்தமன் ஆஜரானார்.நீதிபதி, ரவிச்சந்திரபாபு பிறப்பித்த உத்தரவு:

சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டதற்கான சான்றிதழை, டாக்டர் லட்சுமி ஷாகல் வழங்கி உள்ளார். மனுதாரரின் கோரிக்கை நியாயமானது என்பதற்கு, அகில இந்திய சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுதாரர்கள் அமைப்பின் தலைவர், குருமூர்த்தியும், கடிதம் அனுப்பி உள்ளார்.
மனுதாரர் வறுமையில் இருப்பதாகவும், அவரை காப்பாற்றும்படியும், கடிதத்தில் குறிப்பிட்டு
உள்ளார்.

அவசர தன்மை குறித்து கவனத்துக்கு கொண்டு வந்தும், மனுதாரரின் கோரிக்கையை கனிவுடன் அதிகாரிகள் பரிசீலிக்கவில்லை. சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று, தன்னலம் பாராத பங்களிப்பை ஆற்றியவரின் கோரிக்கையை, அரசு கவனிக்க தவறி விட்டது. மனுதாரரை போன்றவர்களின் பங்களிப்பு இல்லாமல், நாம் இந்த நிலைக்கு வந்திருக்கமுடியாது என்பதை, கவனிக்க தவறி விட்டனர்.

நாட்டின் விடுதலைக்காக போராடியவரை, சுதந்திரம் கிடைத்த பிறகும், பென்ஷனுக்காக போராடத் தள்ளியது வருத்தம் அளிக்கிறது. சுதந்திரத்துக்காக போராடியவர்களை, கண்ணியத்துடன் கவுரவப்படுத்த வேண்டும்.

அவர்களை அழைத்து, மரியாதை செய்ய வேண்டும்; காக்க வைக்கக் கூடாது. அவருடன் இருந்த சிறைவாசி, கர்னல் லட்சுமி ஷாகல் ஆகியோர் சான்றிதழ் அளித்திருக்கும் போது, அதிகாரிகளின் மனதில் சந்தேகம் வரக் கூடாது.

பென்ஷன் கோரிய விண்ணப்பத்தை நிராகரிப் பதற்காக, ஏதோ ஒரு காரணத்தை கண்டு பிடித்துள்ளனர். அவரது வயது குறித்து, சந்தேகம் எழுப்பி உள்ளனர்.

துரதிருஷ்டம்

அதிகாரிகள் கூறிய காரணங்களை ஏற்க முடி யாது. 'நம் அதிகாரிகள், உங்களை கஷ்டப்பட வைத்ததற்காக, மன்னிப்பு கேட்கிறேன். சுதந்திரத்துக்காக போராடிய இந்த நாட்டில், அதிகார வர்க்கத்தின் வறட்டு பிடிவாத செயல் பாடு துரதிருஷ்டவசமானது' என்பதை மட்டுமே, மனுதாரரிடம் கூற முடியும்.சுதந்திரப் போராட்ட வீரரான காந்திக்கு, பென்ஷன் வழங்கு வதற்கான உத்தரவை, அவரது வீட்டுக்கே சென்று, அதிகாரிகள் வழங்க வேண்டும். இரண்டு வாரங்களில், அதை வழங்க வேண்டும். நான்கு வாரங்களில், பென் ஷன் பாக்கியை கணக்கிட்டு தர வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தது உயர்நீதிமன்றம்

Added : ஜன 25, 2018 23:31

மதுரை: மதுரைக் கோட்ட அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குனருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, உயர்நீதிமன்றம்மதுரைக் கிளை உத்தரவிட்டது.

அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு, சம்பளக் கமிஷன் பரிந்துரைப்படி ஊதிய உயர்வு அளிக்கப்பட்டது. இதில் விடுப்புக்கால பலன்கள் வழங்கியதில் குளறுபடிகள் உள்ளதாகக்கூறி, ஓய்வூதியத்தில் நிர்வாகம் பிடித்தம் செய்தது. இதைஎதிர்த்து பலர் உயர்நீதிமன்றத்தில் மனு செய்தனர். பிடித்தம் செய்தது தவறு என தனிநீதிபதி உத்தரவிட்டார்.

இதை எதிர்த்துபோக்குவரத்துக் கழக நிர்வாகம் செய்த மேல்முறையீட்டு மனுவை, 2014 ல் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மதுரைக்கோட்ட அரசு போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குனர், மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்தார்.

நீதிபதிகள்,'ஏற்கனவே தீர்வு கண்டநிலையில், மீண்டும் நீதிமன்றத்தை நாடியதால் மனுதாரருக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்படுகிறது,' என்றனர்.
நீதிபதிகள் என்.
கிருபாகரன், ஆர்.தாரணி அமர்வு நேற்று விசாரித்தது.
மதுரைக் கோட்ட மேலாண்மை இயக்குனர் இளங்கோவன் ஆஜராகி, வருத்தம் தெரிவித்தார்.

நீதிபதி கிருபாகரன்,''நீதிமன்ற உத்தரவுகளை போக்குவரத்துக் கழக அதிகாரிகள் நிறைவேற்றுவதில்லை. தேவையின்றி நீதிமன்றத்தை நாடி மக்களின் பணத்தை வீணடிக்கின்றனர்.

பலர் வேலை செய்யாமல் சம்பளம் பெறுகின்றனர். இதனால் போக்குவரத்துக் கழகத்திற்கு இழப்பு ஏற்படுகிறது.

போக்குவரத்துக் கழக நிர்வாக நிதி நெருக்கடியை சமாளிக்க பஸ் கட்டணத்தை உயர்த்தினால், எதிர்க்கின்றனர்,'' என அதிருப்தியை வெளிப்
படுத்தினார்.

நீதிபதிகள் உத்தரவு

சட்டத்தை தவறாக பயன்படுத்தி தேவையின்றி மேல்முறையீடு செய்த மனுதாரருக்கு 25 ஆயிரம் ரூபாய்அபராதம் விதிக்கிறோம். தொகையை டில்லியில் உள்ள போரினால் பாதிக்கப்பட்ட விதவைகள் சங்கத்திற்கு 2 வாரங்களில்வழங்க வேண்டும்.

பிடித்தம் செய்யப்பட்ட உரிய தொகையை எதிர்மனுதாரர்களுக்குநிர்வாகம் எட்டு வாரங்களில் வழங்க வேண்டும். பிப்.,20 ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்,என்றனர்.

NEWS TODAY 14.06.2026