Tuesday, February 6, 2018


தெரிந்த பெயர் தெரியாத விவரம்: எழும்பூர் ரயில் நிலையம்

Published on : 30th January 2018 03:49 PM |


சென்னை மாகாண ஆளுநராக இருந்த எலிஹூ யேல் என்பவரால், மொகலாய வைஸ்ராய் நவாப் சுல்ஃபிகர் அலி கானிடமிருந்து 1720-ஆம் ஆண்டு விலைக்கு வாங்கப்பட்ட இடம்தான் எழும்பூர்.

சென்னை எழும்பூர் ரயில் நிலையம் இந்தியாவின் முக்கியமான மற்றும் பெரிய தொடர்வண்டி (ரயில்) நிலையங்களில் ஒன்றாகும். தெற்கு ரயில்வேயின் கட்டுப்பாட்டிற்குள் வருகின்றது.

இந்த ரயில் நிலையம் ஒரு கோட்டையாக இருந்தது. இதற்கு பெயர் "எழும்பூர் ரெடோ'.

ஆரம்பத்தில் வெடிபொருட்கள் சேமிக்க பயன்படுத்தப்பட்டது.

இந்தக் கட்டடம் 2.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதில் 1.7 ஏக்கர் டாக்டர் பால் ஆண்டி என்பவரிடமிருந்து பெறப்பட்டது. பின்னர் செளத் இந்தியா ரெயில்வே நிறுவனம் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கியது.

இந்தோ-சாராசனிக் மற்றும் கோதிக் பாணியில் இக்கட்டடம் கட்டப்பட்டதாகும். ராபர்ட் சிஸ்ஹோம் என்ற ஆங்கிலேயர் கட்டடத்திற்கான வரைபடத்தை வடிவமைத்தார்.

பெங்களூரைச் சேர்ந்த டி. சாமிநாத பிள்ளையால் 1905-இல் செப்டம்பர் மாதம் கட்டுமானம் தொடங்கப்பட்டது. கட்டுமானத்திற்காக சுமார் 1.7 மில்லியன் செலவிடப்பட்டது. இதற்கான செங்கல் பூந்தமல்லியில் இருந்த சாமிநாத பிள்ளையின் சூளையில் தயாரானது.

இந்த ரயில் நிலையம் 1908 ஜூன் 11 ம் தேதி திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிலையத்திற்கு ராபர்ட் கிளைவ் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. மக்கள் எதிர்ப்பின் காரணமாக, எழும்பூர் ரயில் நிலையம் என பெயர் வைக்கப்பட்டது. முதலில் மின்சாரம் இல்லாததால் ஜெனரேட்டர் பயன்படுத்தப்பட்டது.

1951-ஆம் ஆண்டு தெற்கு ரயில்வே உருவான பிறகு சென்னையின் முக்கிய மீட்டர்கேஜ் முனையமாக எழும்பூர் நிலையம் மாறியது.

தொடக்கத்தில் எழும்பூரில் இருந்து இலங்கையின் கொழும்பு நகர் வரை ரயில்கள் இயக்கப்பட்டன. கொழும்பு செல்லும் பயணிகள் எழும்பூர் - தனுஷ்கோடி போட் மெயிலில் பயணம் செய்வர். பின்னர் அவர்கள் தனுஷ்கோடியில் இறங்கி, படகு மூலம் இலங்கையின் தலைமன்னாருக்குச் செல்வர். தலைமன்னாரில் இருந்து கொழும்பு செல்ல ஒரு ரயில் தயாராக காத்திருக்கும்.

சிகாகோவில் உரையாற்றிய பின் விவேகானந்தர் இலங்கை வழியாக தனுஷ்கோடி வந்து, சென்னை எழும்பூர் வந்திறங்கினார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

1964ஆம் ஆண்டு வீசிய புயலில் தனுஷ்கோடி இருப்புப் பாதை முற்றிலுமாக அழிந்துபோனது. அத்துடன் இந்த ரயில் சேவை நிறுத்தப்பட்டது.

சுமார் 750 மீ நீளம் கொண்ட இந்த ரயில் நிலையத்தில் 11 நடைமேடைகள் உள்ளன. நடைமேடைகள் 1,2,3 குறைந்த நீளம் கொண்டவை. இவை சிறிய ரக ரயில்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.

முக்கியமான 4ஆம் நடைமேடை எழும்பூர் ரயில் நிலையத்தின் மையப்பகுதியில் நீண்டுள்ளது. 5,6,7 ஆம் நடைமேடைகள் நீள ரக ரயில்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. ஆரம்பத்தில், இங்குள்ள நடைமேடை அருகே, கார்கள் வந்து செல்ல அனுமதிக்கப்பட்டது.

பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இரண்டாவது நுழைவுவாயில் ரூ. 115.3 மில்லியன் செலவில் கட்டப்பட்டு, 2006 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்த வாயில் திறக்கப்பட்டது.

தினமும் சுமார் 35 முக்கிய வழித்தடங்களுக்கு ரயில்கள் மற்றும் 118 புறநகர் ரயில்கள் இயக்கப்படுகின்றன. தினமும் ஒன்றரை லட்சம் பயணிகள் பயணிக்கிறார்கள்.

உணவகங்கள், கட்டணக் கழிப்பிடங்கள், உதவி மையங்கள், "ப்ரௌசிங்' மையம், தங்கும் விடுதி, புத்தகக் கடைகள் என பல வசதிகள் இங்கு உண்டு.
புகைப்பிடித்தலை விடவும் மோசமான பழக்கம் இது: புள்ளி விவரம் சொல்லும் ஷாக் ரிப்போர்ட்

By DIN | Published on : 05th February 2018 12:53 PM |



ஹைதராபாத்: திரையரங்குகளில் சினிமா தொடங்கும் முன்பு போதைப் பொருட்கள் தொடர்பான எச்சரிக்கை வாசகங்களை பலரும் அலட்சியம் செய்யலாம். ஆனால் அதை உறுதி செய்யும் இந்த செய்தியை அலட்சியப்படுத்த முடியாது.

ஹைதராபாத்தில் செயல்படும் ஆன்காலஜி மற்றும் மாவட்ட புற்றுநோய் மையமான எம்என்ஜே மையம் நடத்திய ஆய்வில் தெரிய வந்திருக்கும் சம்பவம் போதைப் பொருட்களை பயன்படுத்துவது தொடர்பான செய்தி உண்மையின் ஆழத்தை உணர்த்துவதாக அமைந்துள்ளது.

அதாவது, கடந்த ஒரு ஆண்டில் வாய்ப்புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 258 பேரில், 97 சதவீத நோயாளிகளுக்கு புகைப்பிடித்தல் அல்லது குடிப்பழக்கம் அல்லது போதைப் பாக்குகளைப் பயன்படுத்தும் பழக்கம் இருந்தது என்பதுதான்.

இந்த 258 நோயாளிகளில் 205 பேருக்கு போதைப் பாக்குகளைப் பயன்படுத்தும் பழக்கம் இருந்துள்ளது. இதில், குடிப்பழக்கம் இருப்பவர்களுக்கும், புகைப்பழக்கம் இருப்பவர்களுக்கும் இடையே அவ்வளவு பெரிய வித்தியாசம் ஒன்றும் இருந்துவிடவில்லை என்றாலும், வாயில் போதைப் பொருட்களை போட்டு மெல்லும் பழக்கம் இருப்பவர்களை புற்றுநோய் அதிகம் பாதித்துள்ளது.

இந்த 205 பேரில் 126 பேர் புற்றுநோயின் அபாய நிலையில் இருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக பார்த்தால், 55.8 சதவீதம் பேர் புற்றுநோயை ஆரம்ப கட்டத்தில் அலட்சியம் செய்துவிட்டு அபாய நிலையில் இருப்பவர்கள்தான். அதாவது புற்றுநோய் பாதிப்பு அல்லது புற்றுநோய் கட்டி உடலின் மற்ற பாகங்களுக்கும் பரவியிருக்கும் நிலையில் உள்ளனர். வெறும் 12 சதவீதத்தினர் மட்டுமே புற்றுநோயின் ஆரம்பக் கட்டத்தில் கண்டறியப்பட்டுள்ளனர்.மருத்துவர் ஏவிஎஸ் சுரேஷ் இது பற்றி கூறுகையில், புகைப்பிடித்தலை விடவும், வாயில் வைத்து சுவைக்கும் போதை வஸ்துக்களால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகம் இருப்பது இந்த புள்ளி விவரங்களின் மூலம் உறுதியாகியுள்ளது. இது குறித்து பொதுமக்களிடையே மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நேரம் இது. அதே சமயம், புகைப்பிடித்தலும் நோயை உருவாக்கும் என்பதையும் மறுத்துவிட முடியாது. சுமார் 5 முதல் 15 ஆண்டுகள் வரை இதுபோன்ற போதை வஸ்துக்களைப் பயன்படுத்துவோருக்கு புற்றுநோய் ஏற்படுவது அதிகரித்துள்ளது என்றும், வாயில் மெல்லும் போதை வஸ்து பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என்றும், அப்படி ஏற்படுத்திக் கொண்டால் கைவிடுவது மிகவும் கடினமானது என்றும் மருத்துவர் விளக்கியுள்ளார்.
மாணவர் சேர்க்கையை நிறுத்த 13 பொறியியல் கல்லூரிகள் முடிவு: சேர்க்கையை பாதியாகக் குறைக்க 163 கல்லூரிகள் தீர்மானம்

By DIN | Published on : 06th February 2018 01:23 AM |

மாணவர் சேர்க்கை குறைந்து வருவதால், வரும் ஆண்டில் சேர்க்கையை முழுவதுமாக நிறுத்த 13 பொறியியல் கல்லூரிகள் முடிவு செய்துள்ளன. மேலும், சேர்க்கை இல்லாத படிப்புகளைக் கைவிடவும், மாணவர் சேர்க்கை எண்ணிக்கையைப் பாதியாகக் குறைக்கவும் 163 பொறியியல் கல்லூரிகள் முடிவு செய்துள்ளன.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆள்குறைப்பு, ஊதியக் குறைப்பு நடவடிக்கைகள் காரணமாக கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் பொறியியல் படிப்புகளில் குறிப்பாக பி.டெக். தகவல் தொழில்நுட்பம் (ஐடி), பி.இ. கணினி அறிவியல், மின்னணுவியல் தொடர்புப் பொறியியல் (இசிஇ) போன்ற பிரிவுகளின் மீது மாணவர் ஆர்வம் படிப்படியாகக் குறையத் தொடங்கியது.
இதன் காரணமாக, பொறியியல் கல்லூரிகளில் படிப்படியாக மாணவர் சேர்க்கை குறைந்து, கலை-அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது.

படிப்படியாகக் குறைந்த பி.இ. சேர்க்கை: அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் ஒற்றைச் சாளர கலந்தாய்வு மூலம் பொறியியல் படிப்புகளில் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 2013-இல் ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 838 ஆக இருந்தது. இது 2014-இல் ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 79 ஆகக் குறைந்தது.
பின்னர் 2015-இல் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 969 மாணவர்கள் என்ற அளவில் இருந்த சேர்க்கை, 2016-இல் வெகுவாகக் குறைந்தது. இந்த ஆண்டில் 94 ஆயிரத்து 352 மாணவ, மாணவிகள் மட்டுமே பி.இ., பி.டெக். படிப்புகளில் ஒற்றைச் சாளர கலந்தாய்வு மூலம் சேர்ந்தனர்
.
இந்நிலையில், கடந்த 2017-ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை மேலும் குறைந்தது. ஒற்றைச் சாளர கலந்தாய்வு மூலம் 83 ஆயிரத்து 600 மாணவ, மாணவிகள் மட்டுமே பொறியியல் படிப்புகளில் சேர்ந்தனர். மொத்தமிருந்த ஒரு லட்சத்து 73 ஆயிரத்து 643 இடங்களில் 90 ஆயிரம் இடங்கள் மாணவர் சேர்க்கை இன்றி காலியாக இருந்தன.

13 கல்லூரிகள் சேர்க்கையை நிறுத்த முடிவு: மாணவர் சேர்க்கை இவ்வாறு ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வரும் காரணத்தால், ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டு வருகின்றன.

கடந்த 2017-இல் மாணவர் சேர்க்கையை முழுமையாக நிறுத்த அண்ணா பல்கலைக்கழகத்திடம் 10 பொறியியல் கல்லூரிகள் விண்ணப்பித்திருந்தன. சேர்க்கை குறைவான படிப்புகளைக் கைவிடவும், மாணவர் சேர்க்கையைப் பாதியாகக் குறைக்கவும் நூற்றுக்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகள் விண்ணப்பித்திருந்தன.

அதேபோன்று, இந்த முறை பொறியியல் கல்லூரிகளிடமிருந்து அனுமதி நீட்டிப்புக்கான விண்ணப்பங்கள் கடந்த வியாழக்கிழமை (பிப்.1) வரை அண்ணா பல்கலைக்கழகத்தால் பெறப்பட்டன.

2018-19 கல்வியாண்டில் மாணவர் சேர்க்கையை முழுமையாக நிறுத்த 13 பொறியியல் கல்லூரிகள் முடிவு செய்திருக்கின்றன. இவற்றில் 9 கல்லூரிகள் மட்டுமே கல்லூரியை மூடுவதற்கான விண்ணப்பத்தை பல்கலைக்கழகத்திடம் முறையாக சமர்ப்பித்திருக்கின்றன. நான்கு கல்லூரிகள் விண்ணப்பத்தையே சமர்ப்பிக்கவில்லை.

சேர்க்கை இல்லாத படிப்புகளைக் கைவிடவும், மாணவர் சேர்க்கையைப் பாதியாகக் குறைக்கவும் 163 பொறியியல் கல்லூரிகள் இம்முறை விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எப்படி இருக்கப் போகிறது ஏப்ரல், மே மாதங்கள்? நிபுணர்கள் சொல்வதைக் கேளுங்கள்

By DIN | Published on : 05th February 2018 04:18 PM



மழைக்காலம் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப் போன நிலையில், குளிர்காலம் விடைகொடுக்க இன்னும் சில நாட்களே இருக்கிறது, இதனால் பகலில் வெயில் படிப்படியாக அதிகரிக்கிறது.

மாலை 6 மணியளவில் கடுங்குளிர் வாட்டினாலும், காலை வழக்கம் போல படுஜரூராக பணிக்கு வந்து 10 மணிக்கே சூரியன் நம்மை வறுத்தெடுக்க தொடங்கி விடுகிறார்.

பிப்ரவரி மாதத்திலேயே இப்படி இருப்பதால், வரும் ஏப்ரல், மே மாதங்கள் எப்படி இருக்கப் போகிறதோ என்ற கவலை சென்னை வாசிகளை ஆட்கொள்ளத் தொடங்கிவிட்டது.

இதற்கு பதிலாகக் கிடைத்திருப்பது அவ்வளவு ஒன்றும் ஆறுதல் தருவதாக இல்லை.

அதாவது, சென்னையில் ஒட்டுமொத்தமாகவே பசுமையான மரங்கள் நிறைந்த பகுதிகள் என்று எடுத்துக் கொண்டால் வெறும் 15 சதவீத அளவுதான் இருக்கிறது என்கிறது புள்ளி விவரம். இதனால், கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் வரும் கோடை காலத்தில் கடும் வெப்பம் தாக்கும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.

கேர் எர்த் டிரஸ்ட் என்ற அரசு சாரா அமைப்பு நடத்திய ஆய்வில், சென்னையில் வெறும் 15%ப் பகுதிகளை மட்டுமே மரங்கள் சூழ்ந்துள்ளன. அதாவது சென்னை மாநகராட்சியின் ஒட்டுமொத்த பரப்பளவான 426 சதுர கிலோ மீட்டரில், வெறும் 64.06 சதுர கிலோ மீட்டர் பகுதிகளே மரங்கள் நிறைந்துள்ளன.

சென்னை உட்பட தமிழகத்தின் பல மாவட்டங்களை வர்தா புயல் பாதித்த பிறகு எடுக்கப்பட்ட ஆய்வில் இந்த தகவல் தெரிய வந்துள்ளது. அதாவது சென்னையில் இருந்த 4.5 லட்சம் மரங்களில் சுமார் 1 லட்சம் மரங்களை வர்தா புயல் வேறோடு சாய்த்து விட்டுச் சென்றது தெரிய வந்துள்ளது.

இதில், சாலையோரங்கள், பூங்காக்கள், சாலைத் தடுப்புகள், குடியிருப்புகள், சில மையங்கள் போன்றவற்றில் இருந்த 9000 மரங்களும் அடங்கும்.

இது தொடர்பான ஆய்வு 6 மாதங்களாக நடத்தப்பட்டு 600 பக்கங்களைக் கொண்ட அறிக்கை சென்னை பெருமாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது.

இது குறித்து நிபுணர்கள் கூறுகையில், சுற்றுச்சூழலைக் கட்டுப்படுத்துவதில் மரங்களின் பங்கு மிக அதிகம். அதுவும் சென்னை போன்ற அதிக வெப்பம் நிறைந்த நகரங்களில் வெப்பத்தைக் கட்டுப்படுத்த மரங்களுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. கடந்த 2000ஆவது ஆண்டில் 79 சதுர கிலோ மீட்டர் அளவுக்கு இருந்த பசுமை பரப்பு 2005ல் 69 சதுர கிலோ மீட்டராகக் குறைந்து தற்போது 64 சதுர கிலோ மீட்டராக சுருங்கியுள்ளது.

இதற்கு வர்தா புயல் மட்டுமே காரணமா என்றால், நிச்சயம் இல்லை என்கிறார்கள் நிபுணர்கள், சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சித் திட்டங்களே பசுமைப் பரப்புகளுக்கு முக்கிய எதிரி. மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கவும், நெடுஞ்சாலைகளை விரிவாக்கம் செய்யவும், இதர திட்டங்களுக்காகவும் ஏராளமான மரங்கள் வெட்டப்பட்டன. என்ன நடந்ததோ அது நடந்துவிட்டது. ஆனால் அடுத்து நாம் என்ன செய்யப் போகிறோம், பசுமை பரப்பை அதிகரிக்க எந்த விதமான நடவடிக்கை மேற்கொள்ளப் போகிறோம் என்பதே விஷயம் என்கிறார்கள்.

வெப்பத்தை உள்வாங்குவதில் மரங்களின் பங்கு அதிகம். அதே சமயம், காங்கிரீட் தரைகளும் அதிகரித்துள்ளன. காங்கிரீட் தரைகள் அதிகரித்திருப்பதால், வெப்பத்தை பூமி உள்வாங்க விடாமல் காங்கிரீட் தரைகளே வெப்பத்தை பிரதிபலித்து விடுவதால் வெப்பம் அதிகமாக தெரியும். இதனால் கடந்த ஆண்டை விட வெப்பம் அதிகமாகவே இருக்கும்.

எனவே, அடுத்த 5 ஆண்டுக்குள் பசுமைப் பரப்புகளை அதிகரிக்க வேண்டும் என்று திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சென்னையில் ஒரு நாள், மாதாந்திர பஸ் பாஸ் கட்டணம் உயர்வு

By DIN | Published on : 06th February 2018 08:28 AM


சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் அளிக்கப்பட்டு வரும் ஒரு நாள் பயண அட்டை கட்டணம் 50 ரூபாயில் இருந்து 80 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளன. இந்த கட்டண உயர்வு வரும் 8-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு கடந்த 20ம் தேதி பேருந்து கட்டணத்தை மாற்றியமைத்த பிறகு, ஒரு நாள் பயணச்சீட்டு பாஸ் கட்டணம் நிர்ணயிக்கப்படாமல் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.

ஏற்கனவே பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக போராடி வருகின்றன. பொதுமக்களும் பேருந்து கட்டண உயர்வை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஒரு நாள் பயண அட்டை கட்டணமும் உயர்த்தப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் மாதாந்திர பஸ் பாஸ் ரூ.1,000ல் இருந்து ரூ.1,300 ஆக உயருகிறது.
பெண்களைக் குறி வைக்கும் கொள்ளையர்கள்!

By இ. முருகராஜ் | Published on : 05th February 2018 02:57 AM

அண்மையில் முகநூலில் கண்ட வாசகம் மிகவும் கவனத்தை ஈர்க்கும்படியாக இருந்தது. "ஒரு காலத்தில் திருடர்கள் நடந்து வருவார்கள், நகைகளை பறிகொடுப்பவர்கள் இரு சக்கர வாகனங்களிலோ, மற்ற வாகனங்களிலோ வருவார்கள். ஆனால், தற்போது திருட்டில் ஈடுபடுபவர்கள் இரு சக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணிந்தபடி வந்து சர்வ சாதாரணமாக பெண்களிடம் சங்கிலிப் பறிப்பில் ஈடுபடுகின்றனர்' என்பதுதான் அது.
வீட்டில் ஜன்னலோரத்தில் படுத்திருப்பவர்கள், வீட்டுக்கு வெளியே கோலம் போடுபவர்கள், தனியாக நடந்து செல்லும் முதியவர்கள் என பெண்களைக் குறி வைத்தே அதிக அளவில் சங்கிலிப் பறிப்பு சம்பவங்கள் நடைபெறுகின்றன. இதன் உச்சமாக, சென்னையில் பட்டப்பகலில் பட்டாக் கத்தியைக் காட்டி இளைஞர் ஒருவர் பெண்ணை மிரட்டி சங்கிலிப் பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் ஊடகங்களில் வெளியாகி பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.

குறிப்பாக, தமிழகத்துக்குப் பிழைப்புத் தேடி வந்து இங்கு சங்கிலி பறிப்பு, கொலை, கொள்ளை உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் சில வட மாநிலத்தவர்கள் ஈடுபட்டதாகத் தெரிய வந்தது, கவலை அளிக்கும் செய்தி.
சென்னை கொளத்தூர் பகுதியில் உள்ள நகைக் கடையில் துளையிட்டு ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கொள்ளையர்கள் கடந்த மாதம் நகைகளை அபகரித்துச் சென்றனர். இந்த வழக்கில் கொள்ளையரைப் பிடிக்கச் சென்றபோது நடந்த துப்பாக்கிச் சூட்டில் காவல்துறை ஆய்வாளர் உயிரிழந்தது, பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் தில்லியைச் சேர்ந்த 2 பேரை சென்னையில் போலீஸார் கைது செய்தனர். அவர்கள் தில்லியிலிருந்து விமானம், ரயில் மூலம் சென்னைக்கு வந்து வழிப்பறியில் ஈடுபட்டு வந்ததும், வழிப்பறி சம்பவங்கள் மூலம் பறிக்கப்பட்ட 300 பவுன் தங்க நகைகளை தில்லிக்கு அனுப்பி வைத்திருந்ததும் தெரியவந்தது. இந்தக் குழுவில் பத்துக்கும் மேற்பட்டோர் இடம் பெற்றிருந்ததும் தெரியவந்தது.

இதேபோல, வங்கி வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொள்ளும் வட மாநில கும்பல், அவர்களின் பற்று அட்டை எண், ரகசிய எண்களைத் தெரிந்துகொண்டு பணத்தை கொள்ளையடிக்கும் சம்பவங்களும் நிகழ்ந்து வருகின்றன.
குறிப்பாக, இதுபோன்ற குற்றச் செயல்களில் 18 - 32 வயதுக்கு உள்பட்டவர்கள் அதிகமாக ஈடுபடுகின்றனர். அவர்களுக்கு, 15, 16, 17 வயதுடையவர்கள் உதவுகின்றனர். ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு இதுபோன்ற சம்பவங்களில் இளைஞர்கள் அதிகம் ஈடுபட்டு வருவதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

உள்ளூர் கள்வர்கள் தவிர, வெளியூரைச் சேர்ந்த 150 முதல் 200 பேர் வரை சென்னையில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

எனினும், கடந்த 2014, 2015 ஆகிய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 2016-ஆம் ஆண்டில் கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம், பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது.
தொடர்ந்து வரும் சங்கிலிப் பறிப்பு சம்பவங்களைத் தவிர்க்கும் வகையில், அதிக மதிப்பு கொண்ட தங்கச் சங்கிலி உள்ளிட்ட நகைகளை வெளியிடங்களுக்கு, வெளியூர்களுக்குச் செல்லும்போது அணிவதையும், பைகளில் வைத்து எடுத்துச் செல்வதையும் தவிர்க்கலாம். பெரும்பாலும் தனியாக நடந்து செல்லும் பெண்களைக் குறி வைத்தே சங்கிலிப் பறிப்பு நிகழ்த்தப்படுவதால், துணைக்கு யாரையாவது அழைத்துச் செல்லலாம்.
புறநகர்ப் பகுதிகளில், ஊர்களின் ஒதுக்குப்புறமான இடங்களில் உள்ள வசதி படைத்தவர்களின் வீடுகளிலும், வெளியூர் சென்றவர்களின் வீடுகளிலும் அதிகளவில் திருட்டுகள் நடைபெறுகின்றன. இதுபோன்ற வீடுகள் மர்ம நபர்களால் கண்காணிக்கப்பட்டு, முன்கூட்டியே நன்கு திட்டமிடப்பட்டு, திருட்டு நடைபெற வாய்ப்புள்ளது. எனவே, வீடுகளில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது போன்ற பாதுகாப்பு ஏற்படுகள் மூலம் திருட்டுக்களை பெருமளவில் தவிர்க்கலாம்.

வெளியூர் செல்வதாக இருந்தால் நகை, பணத்தை நம்பகமான உறவினர்களிடம் வைத்திருக்கச் சொல்லும் வழக்கம் அந்தக் காலத்தில் உண்டு. இக்காலத்தில் எத்தனை பேர் அப்படி நம்பிச் செய்வார்களோ, தெரியவில்லை. இப்போது வங்கிகளில் பாதுகாப்புப் பெட்டகங்களில் வைப்பதன் மூலம் தங்க நகைகள் களவுபோவதை தடுக்க முடியும்.
தாலியை மஞ்சள் கயிற்றில் அணிவதென்பது தமிழர்களின் பாரம்பரியம். தங்கம் பிற்பாடு வந்தது. வசதிக்கேற்ப அது கனம் கூடத் தொடங்கியது! தற்போது, தங்கத்தில் அதிக எடை கொண்ட தாலியை அணிவதென்பது நாகரிகமாகிவிட்டது! கொள்ளையர்கள் தாலிச் சங்கிலியை பறித்துச் செல்வது வேதனையானது. நம்முடைய கடின உழைப்பின் பலனாய் சேர்த்த பொன் கொள்ளை போவதோடு, தாலிப் பறிப்பு வெளிப்படுத்தும் கலாசார சீரழிவும் வேதனையானதுதான். பெண்கள் தாலியை மஞ்சள் கயிற்றில் அணியும் பாரம்பரியத்துக்கே திரும்பினால், தங்கத் தாலியைப் பறி கொடுப்பது நிற்கும்! ஆனால்...
நீட்' தொடர்பான தமிழக அரசின் கொள்கையில் மாற்றமில்லை: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி!

'நீட்' தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கொள்கையில் மாற்றமில்லை என்று தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திங்களன்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:

'நீட்' தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கொள்கையில் எந்த மாற்றமம் இல்லை. இவ்வாண்டு 'நீட்' தேர்வில் அரசின் பயிற்சி மூலம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்ச்சி பெற நடவடிக்கை எடுக்கப்படும்.மாவட்ட வாரியாக பயிற்சி மையங்களில் தேர்வு செய்யப்படும் 2000 மாணவர்களுக்கு சென்னையில் நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

பயிற்சியின் மூலம் சிறந்த மாணவர்களைத் தேர்வு செய்துஅவர்களின் மதிப்பெண்களை வைத்து மதிப்பீடு செய்கிறோம்; மத்திய அரசின் எந்தத் தேர்வையும் எதிர்கொள்ள மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. அத்துடன் மாணவர்களுக்கு மொபைல் ஆப் மூலம் பயிற்சி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு செங்கோட்டையன் தெரிவித்தார்.

NEWS TODAY 14.02.2026