Tuesday, February 6, 2018

தன்யஸ்ரீ நலம் பெற பிரார்த்தனையோடு, பணமும் குவிகிறது: வாட்ஸ்அப் குரூப் மூலம் சேர்ந்த ரூ.15 லட்சம் நிதி

தன்யஸ்ரீ (பழைய படம்), சிகிச்சை நிலையில். 


சென்னை தண்டையார்பேட்டையில் குடிபோதையில் மாடியில் இருந்து கீழே விழுந்த ஒருவர் சாலையில் நடந்து சென்ற சிறுமி தன்யஸ்ரீ மீது விழுந்தார்.
படுகாயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தன்யஸ்ரீக்கு பண உதவி கிடைத்து வருகிறது. அவர் நலம் பெற பல்வேறு இடங்களில் பிரார்த்தனையிலும் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர் அருணகிரி. இவர் தனது பேத்தி தன்யஸ்ரீயை (வயது 4) அழைத்துக் கொண்டு கடந்த ஞாயிறு வீட்டருகே இருக்கும் பல்பொருள் அங்காடிக்குச் சென்றார்.

அப்போது, ஒரு வீட்டின் 2-வது மாடியில் இருந்து ஒருவர் குடிபோதையில் தவறி தன்யஸ்ரீயின் மீது விழுந்தார். இதில் குழந்தை தன்யஸ்ரீவுக்கு படுகாயம் ஏற்பட்டது. அவர் உடனடியாக தண்டையார்பேட்டை அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், காயம் அதிகமாக இருந்ததால் அங்கிருந்து அவர் க்ரீம்ஸ் ரோடு அப்பல்லோ மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தன்யஸ்ரீயின் நிலைமை குறித்து அறிந்த நல்ல உள்ளம் கொண்ட ஏராளமான மக்கள் அவரின் தந்தையைச் சந்தித்து சிகிச்சைக்காக பணஉதவி செய்து வருகின்றனர்.

தன்யஸ்ரீயின் உடல் நலம் குறித்து மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகையில், ''தன்யஸ்ரீக்கு மூளையில் சிறிய வீக்கமும், முதுகு தண்டுவடத்திலும், காலிலும் சிறிய அளவிலான எலும்பு முறிவு ஏற்பட்டு இருக்கிறது. கடந்த புதன்கிழமை தன்யஸ்ரீக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இப்போது செயற்கை சுவாசத்தின் உதவியுடன் இருக்கிறார். இப்போது உடல்நலம் தேறிவரும் வரும் தன்யஸ்ரீ தனது பெற்றோருடன் பேசுகிறார்'' எனத் தெரிவித்தனர்.

இதற்கிடையே தன்யஸ்ரீ அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து அவரின் உடல்நிலை குறித்தும், சிகிச்சைக்கான பணம் திரட்டுவது குறித்தும் நினைத்து அவரின் தந்தை ஸ்ரீதரும், தாய் யமுனாதேவியும் மிகுந்த கலக்கத்திலும் வேதனையிலும் இருந்தனர். இவர்களின் கவலையையும், வேதனைகளையும் பல உதவும் உள்ளங்கள் போக்கி வருகிறார்கள்.

தன்யஸ்ரீயின் நிலை குறித்து அறிந்து ஏராளமானோர் பணஉதவி செய்து வருகிறார்கள். இது குறித்து தன்யஸ்ரீயின் மாமா சங்கர் கூறியதாவது:
தன்யஸ்ரீக்காக ஏராளமானோர் முகம் தெரியா நபர்கள் கூட பணம் அளித்து உதவுகிறார்கள். சிலர் தன்யஸ்ரீயின் தந்தையின் வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்பியும், நேரில் வந்தும் கொடுத்து தங்களது அன்பையும், அக்கறையையும் வெளிப்படுத்தி வருகின்றனர். வழக்கமாக வாட்ஸ்அப்பில் வரும் இதுபோன்ற செய்திகளை போலி என்று மக்கள் நினைப்பார்கள். ஆனால், தன்யஸ்ரீ விஷயத்தில் மனிதநேயம் கொண்ட பலர் உதவிவருவது நெகிழ்ச்சி அளிக்கிறது'' என்றார்.

இதுதவிர வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த சதீஸ்குமார் மோகன் என்பவர் மில்ஆப் மூலம் தன்யஸ்ரீக்காக ஒரு பிரச்சார இயக்கமே நடத்தி ரூ.15 லட்சம் நிதி திரட்டியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ''நாங்கள் அந்தர்பாய்ஸ் எனும் வாட்ஸ் அப் குரூப் நடத்துகிறோம். அதில் 15க்கும் மேற்பட்ட நண்பர்கள் இருக்கிறோம். இந்த குரூப்பில் இருந்து தன்யஸ்ரீ குறித்த தகவல்களைப் பகிர்ந்து உதவி கோரி, பல்வேறு நண்பர்களிடம் இருந்து உதவியைப் பெற்றோம்.

இதற்கு முன் சென்னையில் வெள்ளம் சூழ்ந்தபோதும், எங்கள் வாட்ஸ் அப் குரூப் மூலம் பணம் திரட்டி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவினோம். ஆனால், தன்யஸ்ரீ விஷயத்தில் இன்னும் ஏராளமாக பணத்தை திரட்டி அவர் உயிர் பிழைக்க உதவ வேண்டும் என நினைக்கிறோம்'' எனத் தெரிவித்தார்.
இதுதவிர தன்யஸ்ரீ உடல்நலம் பெற தண்டையார்பேட்டையைச் சேர்ந்த பலர் சிறப்பு பூஜைகளும், அன்னதானமும் செய்து தங்களின் மனித நேயத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். தன்யஸ்ரீ உடல்நலம் தேறி, இயல்பு நிலைக்குத் திரும்பி மகிழ்ச்சியுடன் இருக்க நாமும் பிரார்த்திப்போம்.

தன்யஸ்ரீக்கு உதவ விரும்பும் மனங்கள் தன்யஸ்ரீயின் தந்தை ஸ்ரீதரின் வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்பி உதவலாம்.

வங்கிக் கணக்கு தாரர் பெயர்: C.SRIDHAR
தன்யஸ்ரீயின் தந்தை ஸ்ரீதர் தொலைபேசி எண்: 70923 80119
வங்கிக் கணக்கு எண்- 6021553833
IFSC CODE NO: IDIB000W009
லஞ்சப்புகாரில் கைதான துணைவேந்தர் கணபதி பணி இடைநீக்கம்: ஆளுநர் உத்தரவு

Published : 06 Feb 2018 21:45 IST

சென்னை

ரூ.30 லட்சம் லஞ்சம் பெற்று கைதான துணைவேந்தரை இடைநீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்த நிலையில் ஆளுநர் புரோஹித், துணைவேந்தர் கணபதியை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ரூ.30 லட்சம் லஞ்சப் புகாரில் சிக்கி கைதாகியுள்ளார். 24 மணி நேரம் கடந்தால் அவரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்ற விதியிருந்தும் இதுவரை பணியிடை நீக்கம் செய்யாததால் பல்கலைக்கழகப் பணிகள் முடங்கியுள்ளன. பதிவாளர் உள்ளிட்டோர் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

'துணை வேந்தர் மீதான கைது நடவடிக்கை, லஞ்ச ஒழிப்பு போலீஸார் ஆய்வு உள்ளிட்ட எதுவுமே பல்கலைக்கழகத்துக்கு அதிகாரபூர்வமாக எந்தத் தகவலையும் தெரிவிக்கவில்லை. உயர் கல்வித் துறையில் இருந்தும் எந்த அறிவிப்பும் வரவில்லை. எல்லோரையும் போல நாங்களும் காத்திருக்கிறோம் என்று பல்கலைக்கழக பதிவாளர் அனிதா தெரிவித்திருந்தார்.

இதனிடையே துணைவேந்தரைப் பணியிடை நீக்கம் செய்ய அரசு ஆலோசித்து வருவதாக கூறப்பட்டது. பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் துணைவேந்தரை இடைநீக்கம் செய்யவேண்டும், சிபிஐ விசாரணை வேண்டும் என கேட்டிருந்தனர்.

இந்நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் துணைவேந்தர் கணபதியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். ஆளுநரின் உத்தரவில் கணபதி லஞ்சம் வாங்கியதாக லஞ்ச ஒழிப்பு போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். உயர்கல்வித்துறை ஆளுநருக்கு அறிக்கை அனுப்பியதை அடுத்து கணபதி பிப்.6 முதல் இடைநீக்கம் செய்யப்படுகிறார்.

அடுத்த உத்தரவு வரும் வரை இடைநீக்கம் தொடரும் என அறிவித்துள்ளார்.
நலம் தரும் நான்கெழுத்து 20: கூட்டம் கண்டால் கூச்சம் ஏனோ?

Published : 03 Feb 2018 10:32 IST

டாக்டர் ஜி. ராமானுஜம்



“எந்த ஒரு மனிதனும் தொடர்பே இல்லாத தனித் தீவாக மாட்டான். அவன் என்றுமே நிலத்தின் ஒரு பகுதிதான்”

- ஜான் டான்

என் நண்பர் ஒருவர் அருமையாக வயலின் வாசிப்பார். ‘வான் நிலா நிலா அல்ல’ என்று வயலின் இழைகளால் அவர் இழைத்தால் மனம் உருகிவிடும். முதன்முறையாக ஒரு நிகழ்ச்சியில் வாசிக்க அவரை அழைத்தார்கள். ஒலிபெருக்கி முன் நின்றதும் வயலின் கம்பிகளைவிட அவரது கைகள் அதிகமாக நடுங்கி வயலின் இசை ‘வயலன்ஸ் இசை' ஆகிவிட்டது. அதன்பின் எந்த நிகழ்ச்சிக்கும் அவர் பார்வையாளராகக்கூடச் செல்ல அஞ்சுகிறார்.

தனியாக இருக்கும்போது வராத தயக்கமும் பயமும் கூட்டத்தைக் கண்டதும் வருவது ஏன்?

மனித இனம் ஒரு சமூக உயிரினம். உயிரினங்கள் கூட்டமாக வாழ்வது பாதுகாப்புக்காகவும் பரஸ்பர உதவிக்காகவும் உருவான ஒரு நடவடிக்கை. தனியாக இருக்கும்போது இயலாத பல செயல்களை கூட்டமாகச் சேரும்போது செய்ய வசதியாக அமைந்துள்ளதால்தான், மனித இனம் கூட்டமாக வாழ்வதையே விரும்புகிறது. உயிரினங்களிலேயே பலம் வாய்ந்த யானைகள்கூடக் கூட்டமாக இருப்பதற்கு விரும்புகின்றன என்றால், மனிதர்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். இன்னொருவருடன் தொடர்புகொள்ள வேண்டும் என்ற உந்துதலே மொழி பிறக்கக் காரணமாக அமைந்தது. மொழியும் மொழியைத் தொடர்ந்து சிந்தனை, பண்பாடு, கலை, இலக்கியம் போன்றவை உருவாகக் காரணமாக அமைந்தது, தனிமனிதன் சமூகமயமாக மாறியதால்தான்.

கூட்டத்தில் ஒருத்தன்

சமூகமயமாக்கல் மனிதனுக்குப் பல நன்மைகளைத் தந்தது. தீமைகளும் விளைந்தன. என்னென்ன என்பதைப் பார்க்கலாம். முன்னரே கூறியதுபோல் தனியாக இருக்கும்போது கிடைக்காத பாதுகாப்பு உணர்வும் நிம்மதியும் ‘கூட்டத்தில் ஒருவனாய்' இருக்கும்போது கிடைக்கிறது. இதன் காரணமாகவே சமூகத்தில் ஒருவனாக அங்கீகரிகக்கப்பட வேண்டும் என்கிற உந்துதல் மனிதனுக்கு ஆதி காலம் தொட்டே இருந்து வருகிறது. சமூகத்தில் ஒருவனாக அடையாளப்படுத்திக் கொள்வதற்கான விழைவே சாதி, மதம், இனம், மொழி, தேசம் போன்ற ஏதோ ஒரு குழுவுடன் அவன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறான்.

அக்குழுவின் மற்ற உறுப்பினர்களின் அங்கீகாரத்தைப் பெற பெரிதும் விழைகிறான். இவன் போன்றே அக்குழுவில் இணைந்துள்ள மற்ற உறுப்பினர்களுக்கும் இவனுக்கும் இடையே ஒன்று சரி, மற்றொன்று தவறு எனப் பல விஷயங்களில் ஒரு பொதுப் புரிதலும், கண்ணுக்குத் தெரியாத ஒரு உடன்படிக்கையும் ஏற்படுகின்றன.

சமூக அங்கீகாரம் பெறவேண்டும் என்னும் விழைவு , அது கிடைக்காமல் போய்விடுமோ என்கிற பதற்றத்தை உருவாக்குகிறது. எந்த ஒரு செயலைச் செய்வதற்கு முன்னாலும் அது பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என அளவுக்கு அதிகமாகக் கவலைப்பட வைக்கிறது. நல்ல உடை, கார் போன்றவை வாங்க வேண்டுமென்றால்கூட நமக்குப் பிடித்தபடி வாங்காமல் அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதைக் குறித்தே பெரிதும் கவலைப்படுகிறோம்.

குழந்தைகளின் கல்வி, திருமணம் போன்றவற்றில்கூட அவர்களது திறமை, விருப்பத்தைவிடச் சமூக அங்கீகரிப்பே முக்கியமானதாகக் கருதப்படுகிறது. விளைவு நமக்குப் பிடிக்கவில்லை என்றாலும், மற்றவர்களுக்காகப் பல செயல்களைச் செய்யத் தொடங்குகிறோம்.

ஊர் என்ன சொல்லும்?

ஒரு முறை ஒரு தகப்பனும் மகனும் குதிரை வாங்கிக்கொண்டு வந்தனர். இருவரும் நடந்து வந்துகொண்டிருந்தபோது ஒருவர் ‘குதிரையை வைத்துக்கொண்டு நடந்து செல்கிறார்களே முட்டாள்கள்’ எனச் சொன்னார். உடனே தந்தை குதிரையில் அமர, மகன் நடந்துவந்தான். அப்போது வழியில் பார்த்த இன்னொருவர் ‘மகனை நடக்க வைத்துத் தகப்பன் சுகமாக வருகிறானே’ எனக் கிண்டல் செய்ய, மகனையும் குதிரையில் அமர்த்தி இருவரும் குதிரை மீது வந்தனர். அப்போது இன்னொருவர் ‘பாவம் குதிரை. இப்படியா இரண்டு பேர் அதன்மீது உட்கார்ந்து கொடுமைப்படுத்துவது’ எனக் கூறினார்.

இப்போது கீழே இறங்கிக் குதிரையை இருவருமாகச் சேர்ந்து தூக்கிக்கொண்டு சென்றனர். வழியில் வந்த ஒருவர் ‘இவர்களுக்கென்ன பைத்தியமா பிடித்திருக்கிறது. ஏன் இரண்டு பேரும் குதிரையைத் தூக்கிக்கொண்டு செல்கிறார்கள்’ எனக் கேட்க இருவரும் ‘எங்களுக்குக் குதிரையே வேண்டாம்’ என வெறுத்துக் குதிரையை விட்டுவிட்டு நடந்தே வீடு திரும்பினார்களாம். இந்தக் கதையைப் போலத்தான் நமது செயல்கள் ஒவ்வொன்றைப் பற்றியும் சமூகம் எல்லாவிதமாகவும் பேசும். அதைப் பற்றியே யோசித்துக்கொண்டிருப்பது எந்த ஆக்கப்பூர்வ விளைவையும் தராது.

கோலியும் கோழியும்

பிறர் நம் மீது கொண்டிருக்கும் மதிப்பு குறித்து அளவுக்கு அதிகமாகக் கவலைப்படுவது நம்மைக் குறைவாக மதிப்பிட்டுத் தாழ்வுமனப்பான்மைக்கு வழிவகுக்கிறது. அதன் விளைவாகப் பிறர்முன் செயல்படும்போது பதற்றம் ஏற்படுகிறது. அதனால்தான் சாதாரணப் போட்டிகளில் கோலி மாதிரி விளையாடும் பலரும், முக்கியப் போட்டிகளில் கோழி மாதிரி முட்டை ரன் இடுகிறார்கள்.

இந்தப் பதற்றம் அதீதமாகும்போது அது ‘சமூகப் பதற்ற பாதிப்பு’ என அழைக்கப்படுகிறது. பொது இடங்களுக்குச் செல்ல அஞ்சுவது, பொதுக் கூட்டங்களில் பேச அஞ்சுவது, கைகால் தந்தியடிப்பது, இதயம் படபடப்பது, வியர்ப்பது என பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. தனியாக இருக்கும்போது 'மனோகரா' திரைப்படம் போல் பக்கம் பக்கமாகப் பேசுபவர்கள், பொது இடத்தில் மணிரத்னம் வசனம் அளவுக்குக்கூடப் பேச வார்த்தைகள் வராமல் தடுமாறுவது இதனால்தான்.

நம்மைப் பற்றித் தாழ்வாக நினைக்காமல் இருப்பது, பிறருடைய கருத்துக்களுக்கு அளவுக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பது ஆகிய இரண்டும்தான் இதற்கான தீர்வுகள்.

சமூகத்துடன் இணைவது அவசியம்தான். அதேநேரம் அதற்காக அளவுக்கு அதிகமாகச் சமூகத்தைப் பற்றிக் கவலைப்பட்டுக்கொண்டிருப்பது எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும். இரண்டுக்குமான சமநிலையே நலம்தரும் நான்கெழுத்து.

கட்டுரையாளர், மனநலத் துறைப் பேராசிரியர்
தொடர்புக்கு: ramsych2@gmail.com
'நாங்கள் ஒன்றும் குப்பை பொறுக்குபவர்கள் அல்ல'- மத்திய அரசை விளாசிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள்

Published : 06 Feb 2018 15:01 IST

பிடிஐ புதுடெல்லி



கோப்பு படம்

திடக்கழிவு மேலாண்மை தொடர்பாக முழுமையான தகவல்கள் இல்லாத 845 பக்க பிரமாண பத்திரத்தை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், 'நாங்கள் ஒன்றும் குப்பை பொறுக்குபவர்கள் அல்ல' என்று மத்திய அரசை கடுமையாக சாடினர்.

கடந்த 2015-ம் ஆண்டு டெல்லியில் 7 வயது சிறுவன் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தான். இவனுக்கு சிகிச்சை அளிக்க டெல்லியில் 5 பெரிய மருத்துவமனைகள் மறுத்துவிட்டதாகக் கூறி, சிறுவனின் பெற்றோர் தற்கொலை செய்து கொண்டனர்.

இந்த வழக்கை தானாக முன்வந்து எடுத்த உச்ச நீதிமன்றம்,திடக்கழிவு மேலாண்மை விதிகளை முறையாக பின்பற்றாததால், சிக்குன் குன்யா, டெங்கு காய்ச்சல் போன்றவை ஏற்படுகின்றன என்று வருத்தம் தெரிவித்தது.

ஆதலால், திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016 தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுடன், யூனியன் பிரதேசங்களுடன் ஆலோசனை நடத்தி, மாநில அளவில் ஆலோசனை வாரியம் நியமிப்பது தொடர்பாக பிரமாணப் பத்திரத்தை 3 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதி உத்தரவிட்டு இருந்தது.

மேலும், அந்த ஆலோசனை வாரியத்தில் எத்தனை உறுப்பினர்கள் இடம் பெறுவார்கள், மாநில வாரியாக அவர்களின் பெயர் ஆகிய அடங்கிய பட்டியலையும் கேட்டு இருந்தது.

இந்நிலையில், இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மதன் பி லோக்கூர், தீபக் குப்தா ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் 845 பக்க பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் தெரிவிக்கையில், 22 மாநிலங்களில் இருந்து தான் அறிக்கையும், ஆலோசனை வாரியம் அமைப்பது தொடர்பான அறிக்கையும் கிடைத்துள்ளது. மற்ற மாநிலங்களில் இருந்து இன்னும் கிடைக்கவில்லை” எனத் தெரிவித்தனர்.

இதைக் கேட்ட நீதிபதிகள் கடுமையாக கோபப்பட்டு, வருத்தம் தெரிவித்தனர். அவர்கள் கூறுகையில், “ எந்த முழுமையான விவரங்களும் இல்லாத இந்த அறிக்கையை நாங்கள் எப்படி பிரமாணப் பத்திரமாக ஏற்க முடியும். இதை நாங்கள் ஒரு அங்கீகரிக்கப்பட்ட ஆவணமாக ஏற்க முடியாது. இதை நீங்கள் படிக்கவில்லையா?. எங்களை இந்த அறிக்கையை படிக்கக்கூறுகிறீர்களா?.

இந்த நீதிமன்றத்துக்கு மத்திய அரசு என்ன கூற விரும்புகிறது? எங்கள் மனதில் இடம்பிடிக்க, ஈர்ப்பதற்கு ஏதேனும் செய்ய அரசு முயல்கிறதா? நாங்கள் அப்படி எல்லாம் மயங்கிவிடமாட்டோம்.

நீங்கள் குப்பைகளை கொண்டுவந்து எங்களிடம் கொட்டுகிறீர்கள்?. நாங்கள் ஒன்றும் குப்பை பொறுக்குபவர்கள் இல்லை. இந்த பிரமாணப் பத்திரத்தை ஏற்க முடியாது

இவ்வாறு நீதிபதிகள் கடுமையாக பேசினர்.
ரூ.50 தினசரி பஸ் பாஸ் தற்காலிகமாக நிறுத்தம் - வாராந்திர பாஸ் கட்டணம் அதிகரிப்பு

பதிவு: பிப்ரவரி 06, 2018 18:19

சென்னை மாநகர போக்குவரத்து கழகம் வழங்கும் 50 ரூபாய் தினசரி பாஸ் பாஸ் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார். #BusFareHike



சென்னை:

தமிழகத்தில் அரசுப்பேருந்துகளின் டிக்கெட் கட்டணம் கடந்த மாதம் கனிசமாக உயர்த்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் போராட்டத்தில் இறங்க, கட்டண உயர்வை சிறிதளவு குறைத்து அரசு அறிவித்தது.

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் வழங்கப்படும் ஒருநாள் பயண டிக்கெட், மாதாந்திர பஸ் பாஸ் கட்டணம் ஆகியவை உயராது என முன்னதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், 1000 ரூபாய் மாத பஸ் பாஸ் 1300 ரூபாய் ஆக உயர்வதாகவும், 50 ரூபாய் ஒரு நாள் பயண டிக்கெட் 80 ரூபாய் உயர்வதாகவும் இன்று காலை தகவல்கள் வெளியாகின.

ஆனால், பஸ் பாஸ் கட்டண உயர்வு என்று பரவும் செய்தி முற்றிலும் தவறானது என்று போக்குவரத்துத்துறை முதன்மை செயலாளர் விளக்கமளித்தார். இந்நிலையில், போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, “1000 ரூபாய் மாதாந்திர பஸ் பாஸில் எந்த மாற்றமும் இல்லை, அது தொடர்ந்து வழங்கப்படும். தினசரி வழங்கப்படும் 50 ரூபாய் டிக்கெட் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. ரூ.240-க்கு வழங்கப்படும் வாராந்திர பஸ் பாஸ் கட்டணம் ரூ.320 ஆக உயர்த்தப்படுகிறது” என அவர் தெரிவித்தார்.
புளி விலை குறைவுக்குக் காரணம் சொன்ன அண்ணா! நினைவுதினச் சிறப்புப் பகிர்வு! 

ஜெ.பிரகாஷ்

Chennai:

“சீமான்களில் சிலருக்குக்கூடச் சிற்சில சமயங்களில் ஏழையின் கண்ணீரைத் துடைக்க வேண்டும் என்கிற ஆசை வருவதுண்டு. ஆனால், அந்த ஆசை நிறைவேறுவதில்லை. காரணம், பிரபுக்களின் பட்டுத் துணிகளுக்கு ஏழையின் கண்ணீரைத் துடைக்கும் ஆற்றல் கிடையாது” என்றவர் பேரறிஞர் அண்ணா. ஆம், அவர் சொன்னது உண்மைதான். இன்றைய ஆட்சியாளர்களுக்கும் மக்கள் பிரச்னைகளைத் தீர்க்கும் ஆற்றல் கிடையாது என்கிறார்கள் நம் ஊர் அரசியல்வாதிகள்.

எழுத்து, பேச்சு, நாடகம், சினிமா, அரசியல் எனப் பலவற்றிலும் தனக்கென்று ஒரு முத்திரை பதித்தவர் அண்ணா. அவருடைய நினைவு தினம் இன்று. அண்ணாவின் பேச்சைக் கேட்பதற்காகவே காத்திருந்த மக்கள் கூட்டம் பல. அவருடைய கூட்டம் எந்த ஊரில் நடைபெற்றாலும் அந்த ஊர், அன்று திருவிழாக் கோலம் பூண்டுவிடும் அளவுக்கு அண்ணாவின் பேச்சு இருக்கும். இன்றும் நம் ஊர் ஆட்சியாளர்களில் சிலர் பேசுகிறார்கள், என்ன பேசுவதென்றே தெரியாமல். இதுநாள்வரை... ஜெயலலிதா, அவர்களை எல்லாம் பேசாமல் வைத்திருந்ததற்கு இப்போதுதான் காரணம் தெரிகிறது என்று நாள்தோறும் சமூக வலைதளங்கள் வறுத்தெடுக்கின்றன.

பாட்டியிடம் பேச மறுப்பு:

குறுகிய நேரமே கிடைத்தாலும் அதை மக்கள் விரும்பும்படியாகப் பேசுவதில் வல்லவரான அண்ணா, ஒருசமயம் கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு, “மாதமோ சித்திரை... மணியோ பத்தரை... உங்களைத் தழுவுவதோ நித்திரை... மறக்காது எமக்கிடுங்கள் முத்திரை” என ஒருசில மணித்துளிகள் மட்டுமே பேசி தன்னுடைய பேச்சாற்றல் மூலம் என்றும் மக்கள் மனங்களில் நிலைத்துநின்றார். அதேபோல் ஆங்கிலத்திலும் திறமையாகப் பேசக்கூடியவராக அண்ணா திகழ்ந்தார்.

ஆங்கிலத்தில் பேசுவதே மிகப்பெரிய கெளரவம் என்ற எண்ணம் மேலோங்கியிருந்த அன்றைய காலத்தில், கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த அண்ணா, ஒரு விடுமுறையின்போது அவரது பாட்டி வீட்டுக்குச் சென்றாராம். அப்போது பேரனைக் கட்டியணைத்து உச்சிமுகர்ந்த பாட்டி, “காலேஜ் படிப்பெல்லாம் படிக்கிறியே துரை.. பாட்டிக்கு கொஞ்சம் இங்கிலீஷ்லே பேசிக் காட்டேன்...” என்று பாசத்துடன் கேட்டாராம். பாட்டி எவ்வளவு வற்புறுத்தியும் ஆங்கிலம் பேச மறுத்துவிட்டாராம் அண்ணா. அத்துடன், “ஆங்கிலத்தில் பேசினால் உனக்கென்ன புரியும்? தேவையில்லாமல் வேண்டாம்” என்று கூறி மறுத்துவிட்டாராம்.



மாணவர்களுக்குப் பதில்:

பாட்டியின் அன்புக் கட்டளையாக இருந்தபோதிலும், போலித்தனமான கெளரவத்துக்காகத் தேவையில்லாமல் ஆங்கிலத்தில் பேசுவதில் அண்ணாவுக்கு உடன்பாடில்லையாம். அதே நேரத்தில், தன்னுடைய அறிவுக்குச் சோதனை வருகிறது எனும் பட்சத்தில் அதற்கு முடிவுகட்டாமல் விட மாட்டார் அண்ணா. ஒருமுறை அண்ணாவின் ஆங்கிலப் புலமையை பரிசோதிக்க நினைத்த சில இங்கிலாந்து மாணவர்கள், “ ‘Because’ (ஏனெனில்) என்ற வார்த்தை தொடர்ந்து மூன்றுமுறை வருவது போன்றதொரு ஆங்கிலச் சொற்றொடரைக் கூற முடியுமா” என்று அவரிடம் கேட்டுள்ளனர். அதற்கு அண்ணா, “No sentence can begin with because because, because is a conjunction” (எந்த வாக்கியமும் ஏனெனில் என்ற வார்த்தையைக் கொண்டு தொடங்காது. ஏனெனில், ‘ஏனெனில்’ என்பது ஓர் இணைப்புச்சொல்.) என்று மின்னல் வேகத்தில் பதிலளித்தாராம்.

அதேபோல், ஒருசமயம் அமெரிக்க நாட்டு மாணவர்களிடம் உரையாடியுள்ளார். அப்போது மாணவர்களில் ஒருவர் எழுந்து, “தாங்கள் ஆங்கிலத்திலும் வல்லவர் என்று தெரியும். ஆங்கில எழுத்துகளான, ‘A, B, C, D’ ஆகிய நான்கு எழுத்துகளும் வராத நூறு வார்த்தைகளைக் கூற முடியுமா” என்று கேட்டாராம். அதற்கு அண்ணா, ஒன்றுமுதல் தொண்ணூற்று ஒன்பது (1 - 99)வரையிலான எண்களை ஆங்கிலத்தில் சொன்னாராம். நூற்றை (100) ஆங்கிலத்தில் சொன்னால், அதில் ‘D’ என்னும் எழுத்து வந்துவிடும் என எல்லோரும் எதிர்பார்த்திருந்தபோது, “STOP” என்று நூறு வார்த்தைகளையும் கூறி, அவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினாராம். தமிழைப்போலவே ஆங்கிலத்திலும் சுவாரஸ்யமாகவும், தொடர்ச்சியாகவும் பேசக்கூடிய ஆற்றல்பெற்றவரான அண்ணா, “பேசும் பொருள் பயன்படத்தக்கதாகவும் வீணான வம்புக்கு வித்திடாத வகையிலும் அமைத்துக்கொள்வது நல்லது” என்று மேடைப்பேச்சுக்கு இலக்கணம் கொடுத்தார்.

எதிர்க்கட்சி என்றால் என்ன?

ஒருவருடைய பேச்சு என்பது மற்றவருக்கு மாற்றத்தையும் மகத்துவத்தையும் கொடுக்கக்கூடியதாக இருக்க வேண்டும். அப்படியானதாகத்தான் இருந்தது அண்ணாவின் பேச்சு. பேச்சில் நடைக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல் நடைமுறையில் இருக்கும் பிரச்னைகள் குறித்தும் நகைச்சுவையாய்ப் பேசியவர் அண்ணா. அவர், முதல்வராக இருந்த சமயம் சட்டசபையில், “விலைவாசி குறைந்துள்ளது” என்று அண்ணாவும் உறுப்பினர்களும் கூறினர். இதற்கு, அப்போதைய எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர், “புளி விலை குறைந்துள்ளதே... அது யார் சாதனை” என்று கேலியாய்க் கேட்டிருக்கிறார். அதற்கு அண்ணா, “அது, புளியமரத்தின் சாதனை” என்று சொல்ல சபையே மகிழ்ச்சியில் திளைத்ததாம்.

எந்த மனிதருக்கும் எதிரி இல்லை என்று எவராலும் சொல்ல முடியாது. அதுபோன்றுதான் எந்தக் கட்சிக்கும் அதை எதிர்த்து நிற்கக்கூடிய ஓர் எதிர்க்கட்சி இருக்கும். நாட்டில் ஓர் எதிர்க்கட்சியின் மதிப்பு எப்படி என்பதை அண்ணா சொன்ன இந்த உவமை மூலம் அறியலாம். “சமையல் செய்யும்போது,குழம்பு கூட்டுவோர் தாய்மார்கள். அப்போது, உற்றுக் கவனியுங்கள். கூட்டினது சட்டிக் குழம்பு. அதற்கு ஒருபிடி உப்பு சேர்ப்பார்கள். ஏன் ஒருபிடி உப்பு..? சட்டிக் குழம்பு போதாதா என்றால், அந்தக் குழம்பு யாருக்கும் பயன்படாது; யாரும் அதனைச் சாப்பிடவும் மாட்டார்கள். அப்படி உப்பில்லாத குழம்பு சாப்பிடுபவர்கள் இருப்பார்களானால், அவர்கள் நாக்கு செத்துப்போனவர்கள் என்றுதான் நினைக்கத் தோன்றும். எப்படி ஒரு சட்டிக் குழம்புக்கு, ஒருபிடி உப்புத் தேவையோ, அப்படித்தான் ஓர் ஆட்சிக்கு ஓர் எதிர்க் கட்சியும் தேவை” என்று சரியான உவமை சொன்ன பேரறிஞர் அவர்.



“ ‘கேப்பிடல்’ படித்திருக்கிறீர்களா?”

ஒருவர், பிரபலமானவராக இருந்தாலே பிரச்னைதான். அப்படியே அவர் அமைதியாக இருந்தாலும், மற்றவர்கள் அவரை விடுவதில்லை. இது, இன்று நேற்றல்ல. காலந்தொட்டே வருகிறது. அண்ணாவின் வாழ்க்கையிலும் இதுபோன்று ஒருசம்பவம் அரங்கேறியிருக்கிறது. நண்பர் ஒருவரின் வீட்டு நிகழ்வில் கலந்துகொள்வதற்காகக் கோவைக்குச் சென்றிருந்தார் அண்ணா. அப்போது கம்யூனிஸ்ட் தோழர்கள் சிலர், கேள்விக் கணைகளைத் தொடுத்திருக்கின்றனர். அவர்கள் கேட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் தாராளமாய்ப் பதில்சொல்ல, இறுதியில், “கார்ல் மார்க்ஸ் எழுதிய, ‘கேப்பிடல்’ படித்திருக்கிறீர்களா” என்றார்களாம். அதற்கு அண்ணா, “நான் திருக்குறள் படித்திருக்கிறேன்” என்றாராம். “நாங்கள் கேட்டது ‘கேப்பிடல்’ படித்திருக்கிறீர்களா என்பதுதான்” என்று மறுபடியும் வினா தொடுத்திருத்திருக்கின்றனர் கம்யூனிஸ்ட் தோழர்கள். அதற்கு அண்ணா, “நான் திருக்குறளையே படித்து முடித்துவிட்டேன் என்கிறபோது, ‘கேப்பிட’லை ஏன் தனியாகப் படிக்கவேண்டும்? ‘கேப்பிட’லில் தொழில் துறைகளைப் பற்றியும், ஆலைகளைப் பற்றியும் இருக்கிறது. ஆனால், திருக்குறளில் நீங்கள் சொல்கிற தொழில் துறைகளும் ஆலைகளும் மட்டுமல்லாது, மனிதச் சமுதாயத்துக்குத் தேவையான அனைத்தும் இருக்கிறது” என்றாராம். கேள்விக் கணைகள் தொடுத்தவர்கள் வாயடைத்துப் போனார்களாம்.

திரு.வி.க-வுக்குப் பதில்:

1936-ம் ஆண்டு, சென்னை நகரசபைத் தேர்தலுக்காகக் களமிறக்கப்பட்டார் அண்ணா. அவரை எதிர்த்துக் காங்கிரஸ் சார்பில் பாலசுப்பிரமணியம் என்பவர் போட்டியிட்டார். அவரை ஆதரித்துப் பலரும் பிரசாரத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக திரு.வி.க., “நந்தவனத்தில் நாயொன்று செத்துக் கிடந்தால் மக்கள் நாயை அகற்றுவரோ... நந்தவனத்தை அழிப்பரோ... நாயையே அகற்றுவர். அதுபோலக் காங்கிரஸில் தீயவர் சிலர் இருந்தால், தீயவரை அகற்றுவது நன்றா அல்லது அதற்காகக் காங்கிரஸையே அழிப்பது நன்றா? கூர்ந்து பார்மின்! தீயவரை அகற்றுவதன்றோ நல்லவரின் கடமை? நந்தவனத்தைத் தூய்மைப்படுத்திக் காப்பற்றுவதால் காங்கிரஸையும் காப்பாற்றவேண்டும்” என்று பாலசுப்பிரமணியத்துக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்தார்.

அதற்கு அண்ணா, அடுத்து நடைபெற்ற கூட்டத்தில் இவ்வாறாகப் பதில் சொன்னாராம். “திரு.வி.க. பேசும்போது, ‘நந்தவனத்தில் நாய் செத்துக்கிடந்தால் நாயை அகற்றுவதா அல்லது நந்தவனத்தை அழிப்பதா' என்று கேட்கிறார். நல்லவர்கள் சுகம்பெறவும் நலிவடைந்தோர் குணம்பெறவுமே நந்தவனம் அமைந்திருக்கிறது. நல்ல மனிதர்கள் நுழையவேண்டிய நந்தவனத்தில் நாய் நுழையலாமா... நாய் நுழைந்தால், பின் அது நந்தவனமாகுமா? நலிந்தவர்க்கும் நலம்பயக்க வேண்டிய நந்தவனம் நாயைச் சாகடிக்குமா? நாயும் சாகிறதென்றால், நந்தவனத்தில் மணம் வீசவில்லை, விஷக்காற்று வீசுகிறகென்றுதானே பொருள்படும். நாயையும் சாகடிக்கும் விஷக்காற்று வீசும் நந்தவனம் ஊரின் நடுவே இருக்கலாம். அதனை அழித்துப் புதிதாகத் தோற்றுவிப்பதுதானே நல்லவர் செய்யும் கடமையாக இருக்க முடியும்” என்ற அண்ணா பதிலுரைத்தாராம். அதற்கு, மறுபதில் சொல்ல முடியாமல் காங்கிரஸ்காரர்கள் கலைந்துவிடுவார்களாம்.



“ஆலயங்களில் விளக்கு எரியாது!”

அதேநேரத்தில், தன்னை எதிர்த்து நின்ற தோழர் பாலசுப்பிரமணியத்தைப் பற்றி அண்ணா பேசும்போது, “என்னுடைய நண்பர் பாலசுப்பிரமணியம். அவர், ‘நெய்க்கு தொன்னை ஆதாரமா... தொன்னைக்கு நெய் ஆதாரமா' என்ற தத்துவத் துறையைப் பற்றிப் படித்தவர். நான், ‘நெய்யும் தொன்னையும் மக்களுக்குக் கிடைக்கச் செய்வது எப்படி' என்று ஆராயும் பொருளாதாரத் துறையைப் பற்றிப் படித்தவன். இருவரில் யார் உங்களுக்குப் பயன்படுவோம் என்பதை நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள்” என்று குறிப்பிட்டுப் பேசுவாராம்.
இதற்கெல்லாம் மறுத்துப் பதில் சொல்ல முடியாத காங்கிரஸ்காரர்கள், வேறுவகையில் திசையைத் திருப்புவார்களாம். அந்தச் சமயத்தில், கோயில்களுக்கும் மெர்க்குரி விளக்குகள் போடப்பட்டு வந்தன. இதை வைத்து காங்கிரஸ்காரர்கள், “அண்ணாதுரைக்கு ஓட்டுப்போட்டால், ஆலயங்களில் விளக்கு எரியாது” என்று துண்டுப் பிரசுரங்கள் அச்சடித்து அண்ணாவுக்கு எதிராக வெளியிட்டனர்.

ஆனால், இவை எவற்றுக்கும் பயப்படாத அண்ணா, “இந்த நகரத்தில் உள்ள சேரிகள் எல்லாம் பன்னெடுங்காலமாக இருளில் மூழ்கி இருக்கின்றன. அந்தச் சேரிகளுக்கெல்லாம் விளக்குப்போட்ட பிறகு, ஏழை எளிய மக்கள் வசிக்கிற பகுதிகளுக்கெல்லாம் விளக்குப்போட்ட பிறகு, பணமும், மின்சாரமும் மிச்சப்பட்டால் கோயிலுக்கு விளக்கு எரியும். சேரிப் பகுதிகளில் மக்கள் இருட்டிலே வசிக்கிறார்கள். அங்கு நண்டு கடித்தாலும், நட்டுவாய்க்காலி கடித்தாலும் அந்தத் துன்பங்களையெல்லாம் மக்கள் அனுபவிக்க வேண்டியிருக்கிறது; அவர்களுக்கு விளக்குப்போடாமல் ஆண்டவனுக்கு விளக்குப்போட்டால் ஆண்டவன் முகம் கறுக்குமேயொழிய, ஒளி பெறாது” என்று உண்மையை உரைத்தார். ஆனால், மக்கள் விழிப்படையவில்லை என்பதை அன்றைய தேர்தல் காட்டியது. ஆம், அண்ணா அதில் தோல்வியுற்றார். அதேபோல், இன்றும் மக்கள் தாம் செய்த தவற்றை எண்ணி வருந்திக்கொண்டிருக்கின்றனர்.

தோல்விக்குப் பதில்:

தேர்தலில் தோல்வியுற்ற அண்ணாவிடம் அவரது நண்பர்கள், “தேர்தலில் தோற்றும் மகிழ்ச்சியாகக் காணப்படுகிறீர்களே” என்று வினவினராம். அதற்கு அண்ணா, “தேர்தலில் போட்டியிடுவதும் பிரசாரம் செய்வதும் நமது உரிமை; ‘மக்களை அணுகி, எங்களுக்கு வாக்களியுங்கள்' என்று கேட்பதுகூட நமது உரிமைதான். ஆனால், ‘ஏன் எங்களுக்கு வாக்களிக்கவில்லை' என்று கேட்கக்கூடிய உரிமை நமக்கேது? வெற்றியோ... தோல்வியோ... நம் கையில் இல்லை; மக்கள் கையில்தான் இருக்கிறது என்கிறபோது அதைக் கண்டு நாம் ஏன் வருத்தப்படவேண்டும்; துயரம்கொள்ள வேண்டும்” என்றாராம்.

 இப்படியெல்லாம் தமிழுக்காகவும், தமிழ் மண்ணுக்காகவும் பாடுபட்ட அண்ணாவை, “இன்னும், இரண்டு ஆண்டுகள் அவர் இருந்திருந்தால், உலகத் தலைவர்களில் ஒருவராக ஆகியிருப்பார்” என்று புகழ்ந்திருந்தார் முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம். அதனால்தானோ, என்னவோ, காலன் அவரைக் கடத்திச் சென்றுவிட்டான்.

தெரிந்த பெயர் தெரியாத விவரம்: எழும்பூர் ரயில் நிலையம்

Published on : 30th January 2018 03:49 PM |


சென்னை மாகாண ஆளுநராக இருந்த எலிஹூ யேல் என்பவரால், மொகலாய வைஸ்ராய் நவாப் சுல்ஃபிகர் அலி கானிடமிருந்து 1720-ஆம் ஆண்டு விலைக்கு வாங்கப்பட்ட இடம்தான் எழும்பூர்.

சென்னை எழும்பூர் ரயில் நிலையம் இந்தியாவின் முக்கியமான மற்றும் பெரிய தொடர்வண்டி (ரயில்) நிலையங்களில் ஒன்றாகும். தெற்கு ரயில்வேயின் கட்டுப்பாட்டிற்குள் வருகின்றது.

இந்த ரயில் நிலையம் ஒரு கோட்டையாக இருந்தது. இதற்கு பெயர் "எழும்பூர் ரெடோ'.

ஆரம்பத்தில் வெடிபொருட்கள் சேமிக்க பயன்படுத்தப்பட்டது.

இந்தக் கட்டடம் 2.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதில் 1.7 ஏக்கர் டாக்டர் பால் ஆண்டி என்பவரிடமிருந்து பெறப்பட்டது. பின்னர் செளத் இந்தியா ரெயில்வே நிறுவனம் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கியது.

இந்தோ-சாராசனிக் மற்றும் கோதிக் பாணியில் இக்கட்டடம் கட்டப்பட்டதாகும். ராபர்ட் சிஸ்ஹோம் என்ற ஆங்கிலேயர் கட்டடத்திற்கான வரைபடத்தை வடிவமைத்தார்.

பெங்களூரைச் சேர்ந்த டி. சாமிநாத பிள்ளையால் 1905-இல் செப்டம்பர் மாதம் கட்டுமானம் தொடங்கப்பட்டது. கட்டுமானத்திற்காக சுமார் 1.7 மில்லியன் செலவிடப்பட்டது. இதற்கான செங்கல் பூந்தமல்லியில் இருந்த சாமிநாத பிள்ளையின் சூளையில் தயாரானது.

இந்த ரயில் நிலையம் 1908 ஜூன் 11 ம் தேதி திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிலையத்திற்கு ராபர்ட் கிளைவ் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. மக்கள் எதிர்ப்பின் காரணமாக, எழும்பூர் ரயில் நிலையம் என பெயர் வைக்கப்பட்டது. முதலில் மின்சாரம் இல்லாததால் ஜெனரேட்டர் பயன்படுத்தப்பட்டது.

1951-ஆம் ஆண்டு தெற்கு ரயில்வே உருவான பிறகு சென்னையின் முக்கிய மீட்டர்கேஜ் முனையமாக எழும்பூர் நிலையம் மாறியது.

தொடக்கத்தில் எழும்பூரில் இருந்து இலங்கையின் கொழும்பு நகர் வரை ரயில்கள் இயக்கப்பட்டன. கொழும்பு செல்லும் பயணிகள் எழும்பூர் - தனுஷ்கோடி போட் மெயிலில் பயணம் செய்வர். பின்னர் அவர்கள் தனுஷ்கோடியில் இறங்கி, படகு மூலம் இலங்கையின் தலைமன்னாருக்குச் செல்வர். தலைமன்னாரில் இருந்து கொழும்பு செல்ல ஒரு ரயில் தயாராக காத்திருக்கும்.

சிகாகோவில் உரையாற்றிய பின் விவேகானந்தர் இலங்கை வழியாக தனுஷ்கோடி வந்து, சென்னை எழும்பூர் வந்திறங்கினார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

1964ஆம் ஆண்டு வீசிய புயலில் தனுஷ்கோடி இருப்புப் பாதை முற்றிலுமாக அழிந்துபோனது. அத்துடன் இந்த ரயில் சேவை நிறுத்தப்பட்டது.

சுமார் 750 மீ நீளம் கொண்ட இந்த ரயில் நிலையத்தில் 11 நடைமேடைகள் உள்ளன. நடைமேடைகள் 1,2,3 குறைந்த நீளம் கொண்டவை. இவை சிறிய ரக ரயில்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.

முக்கியமான 4ஆம் நடைமேடை எழும்பூர் ரயில் நிலையத்தின் மையப்பகுதியில் நீண்டுள்ளது. 5,6,7 ஆம் நடைமேடைகள் நீள ரக ரயில்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. ஆரம்பத்தில், இங்குள்ள நடைமேடை அருகே, கார்கள் வந்து செல்ல அனுமதிக்கப்பட்டது.

பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இரண்டாவது நுழைவுவாயில் ரூ. 115.3 மில்லியன் செலவில் கட்டப்பட்டு, 2006 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்த வாயில் திறக்கப்பட்டது.

தினமும் சுமார் 35 முக்கிய வழித்தடங்களுக்கு ரயில்கள் மற்றும் 118 புறநகர் ரயில்கள் இயக்கப்படுகின்றன. தினமும் ஒன்றரை லட்சம் பயணிகள் பயணிக்கிறார்கள்.

உணவகங்கள், கட்டணக் கழிப்பிடங்கள், உதவி மையங்கள், "ப்ரௌசிங்' மையம், தங்கும் விடுதி, புத்தகக் கடைகள் என பல வசதிகள் இங்கு உண்டு.

NEWS TODAY 14.02.2026