Thursday, April 12, 2018

நடுவுல கொஞ்சம் உண்மையைக் காணோம்!

Published : 06 Apr 2018 12:11 IST

ராஜலட்சுமி




சமூக ஊடங்களில் இன்று புரளிக்குப் பஞ்சமே இல்லை. அவை உண்மையா என்றுகூட யோசிக்காமல், உடனே அவற்றை மற்றவர்களுக்குப் பகிர் கிறோம். புரளியை உண்மை என நம்பி ஷேர் செய்து பிரச்சினைகளில் மாட்டிக்கொள்ளவும் செய்கின்றனர். தொழில்நுட்பம் வளர்ச்சி அடையஅடைய புரளிகளும் சமூக ஊடகங்களில் அதிகளவில் சுற்றிவருகின்றன. இதுபோன்ற புரளிகளை ஆராய்ந்து அது உண்மையா, பொய்யா எனச் சொல்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறது ‘யூ டர்ன்’ (You Turn) என்ற ஃபேஸ்புக் பக்கம்.

சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பின்தொடரும் இந்தப் பக்கத்தை இளைஞர்கள் இருவர் சேர்ந்து நிர்வகித்து வருகிறார்கள். சமூக ஊடகங்களில் புரளிகளை அம்பலப்படுத்தும் இந்த ஐடியா எப்படி உதித்தது என்று ‘யூ டர்ன்’ பக்கத்தை நிர்வகிப்பவர்களில் ஒருவரான ஐயன் கார்த்திகேயனிடம் கேட்டோம்.


“நன்கு படித்தவர்கள்கூடப் புரளிகளை ஆராயாமல் அதைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன். அது எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்தியது. என்னுடைய நண்பர் விக்னேஷ் காளிதாசனுடன் சேர்ந்து சமூக ஊடகங்களில் உலவும் புரளிகளை அம்பலப்படுத்த விரும்பினேன்.

அதன் ஒரு பகுதியாகத்தான் யூ டர்ன் பக்கத்தைத் தொடங்கினோம். ஃபேஸ்புக்கில் மீம்ஸ் மூலம் பெரும்பாலும் புரளிகள் வலம் வருவதால், மீம்களைக் கொண்டு உண்மையை ஆதாரத்துடன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிடுகிறோம்.

பெரும்பாலும் ஒவ்வொரு நாளும் ட்ரெண்டிங்கில் உள்ள விஷயங்களைத் திசை திருப்பவும், அதில் தொடர்புடையவர்களைப் பற்றிய தவறான செய்திகளை மீம்ஸ் மூலம் பரப்பவும், பிரச்சினை பற்றிய தவறான கண்ணோட்டத்தை மக்களிடம் கொண்டுசேர்க்கவுமே மீம்களை உலவவிட்டு நம்ப வைக்கின்றனர்” என்கிறார் ஐயன் கார்த்திகேயன்.  

பெரும்பாலும் அரசியல் கட்சிகளுடைய தொழில்நுட்ப அணியே அவதூறான செய்திகளைப் பரப்புகின்றன.  இதேபோல் வியாபார ரீதியாகத் தவறான செய்திகளை ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரப்புவர்களும் இருக்கின்றனர்.

ஃபேஸ்புக் மட்டுல்லாமல் ட்விட்டர், யூடியூப் போன்ற சமூக ஊடகங்களிலும் தவறான செய்திகளை ஆராய்ந்து ஆதாரத்துடன் இவர்கள் மக்களிடம் கொண்டு சேர்க்கிறார்கள். சமூக ஊடகங்களில் தவறான செய்திகள் பரப்பப்படுவதைத் தடுப்பதால் உங்களுக்கு என்ன நன்மை என்ற கேள்வியை முன்வைத்தோம்.


கார்த்திகேயன்

“சமூகம் நிறைய பிரச்சினைகளைச் சந்திக்கிறது. அதில், எது பொய் எது உண்மை எனத் தெரியாமல் பயணம் செய்கிறது. இப்படியே சென்றால், எதிர்காலத்தில் ஒரு அறிவுள்ள சமூகம் அமையாது.

சட்டம், மருத்துவம் படித்தவர்கள்கூடத் தவறான செய்திகளை நம்புகின்றனர். ஆக, உண்மைச் செய்தியை எடுத்துரைத்து, புரளிகளை அம்பலப்படுத்துவதே எங்களின் குறிக்கோள்.

தவறான செய்திகளை ‘யூ டர்ன்’ மூலம் தடுப்பது திருப்தியைத் தருகிறது. பலருக்கும் எதிர்நிலையை நாங்கள் கொண்டிருப்பதால், எங்கள் பக்கத்தை முடக்கும் முயற்சியிலும் ஈடுபடுகின்றனர்.

இங்கு உண்மைக்கு அத்தனை எதிர்ப்பு” என்கிறார் ஐயன் கார்த்திகேயன்.

மக்களிடம் உண்மைகளைக் கொண்டுசேர்க்கும் வகையில் http://youturn.in/ என்ற இணையதளத்தையும் இவர்கள் தொடங்கியுள்ளனர்.
றெக்க கட்டி பறக்குது!

Published : 06 Apr 2018 12:18 IST

மிது கார்த்தி



என்னதான் விதவிதமாக பைக்குகளும் கார்களும் விற்பனைக்கு வந்தாலும், எப்போதுமே சைக்கிளுக்கான கெத்து தனிதான். நடுவில் சைக்கிள் மீதிருந்த மோகம் குறைந்திருந்த நிலையில், இப்போது மீண்டும் அதன் மீது ஈர்ப்பு அதிகரித்திருக்கிறது. அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் சைக்கிள் மீதான மோகம் அதிகரிக்கும் என்றும் கணிக்கப்பட்டிருக்கிறது. எப்போதுமே சைக்கிள் ‘இளைஞர்களின் அடையாள’மாக இருந்துவருகிறது. சைக்கிள் மீது எப்போதும் இளைஞர்களுக்கு ஈர்ப்பு இருக்க என்ன காரணம்?

முதல் வாகனம்

பெரியவர்களாகி கார், பைக் என எதை ஓட்டினாலும், வாகனம் ஓட்டுவதற்குப் பிள்ளையார்சுழி போடுவது சைக்கிள்தான். முதன்முதலில் கீழே விழுந்து, முட்டியில் சிராய்ப்பு வாங்கி, பேலன்ஸ் செய்து ஓட்டும் முதல் வாகனமும் சைக்கிள்தான். சைக்கிள் சீட்டைப் பிடித்துக்கொண்டு ஓட்டக் கற்றுக்கொடுக்கும் அப்பாவின் கைகள் விடுபடும்போது சுதந்திரமாக சைக்கிள் ஓட்டும் இன்பம் ஒரு தனி சுகம். கரையைத் தொட ஓடி வரும் கடல் அலையைப் போல மனதில் சுதந்திரக் காற்று வீசும். மனதில் தைரியத்தையும் ஏற்படுத்தும்.

பெற்றோர் துணையில்லாமல் பள்ளிக்குச் செல்லவும் வெளியே நண்பர்களுடன் ஊர்சுற்றவும் சைக்கிளும் உற்றத் தோழனாக இருந்தது. பதின் பருவத்தில் ஒரு நண்பனைப் போல மனதுக்கு நெருக்கமான வாகனமாக சைக்கிள் எல்லோருக்குமே இருந்திருக்கும். ஆனால், காலப்போக்கில் சைக்கிள் மீதான ஈர்ப்பு சற்றுக் குறைந்தது. சைக்கிளை காயலான் கடைப் பொருளைப் போல பார்க்கும் நிலையும் வந்தது. ஆனால், அந்தப் போக்கு இன்று மாறிவருகிறது. சைக்கிளை ஒதுக்கி வைத்தவர்கள், அதைத் தேடி வாங்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. வீட்டில் பைக், கார் இருந்தாலும் சைக்கிளையும் வாங்கி வைக்கும் போக்குக் கூடியிருக்கிறது. அந்த வகையில்தான் அமெரிக்கா, சீனாவைத் தொடர்ந்து இந்தியாவிலும் சைக்கிள் பயன்பாடு அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.



நலம் வாழ

சைக்கிள் ஓட்டிகளின் ரசனைக்கு ஏற்ப இன்று சைக்கிள் மாடல்களும் மாறிக்கொண்டிருக்கின்றன. இளைஞர்களை ஈர்க்கும் வகையிலான சைக்கிள்கள் சந்தையில் வந்தவண்ணம் உள்ளன. பார்ப்பதற்கு ஸ்டைலாகவும் ஓட்டுவதற்கு எளிமையாக இருக்கும்படி அவை வருகின்றன. இளைஞர்களைத் தாண்டி நடுத்தர வயதினருக்கு சைக்கிள் மீது திடீரென ஈர்ப்பு கூடுவதற்கு ஆரோக்கியம் ஒரு காரணம். இந்தக் காலத்தில் உடற்பயிற்சியே செய்யாமல், உடல் நலனைப் பேண ஃபிட்னெஸ் வகுப்புகளுக்கும் ஜிம்முக்கும் இளைஞர்கள் நடையாய் நடக்கிறார்கள். ஆனால், ‘சைக்கிளிங்’ செய்வது உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்வு தரும் என்பதால், சைக்கிள் மீதும் அவர்களின் பார்வை திரும்பியிருக்கிறது.

“சைக்கிளில் கல்லூரிக்குச் சென்றால், ஆரோக்கியத்தைப் பாதுகாக்க தனியாக ஃபிட்னெஸ் வகுப்புகளுக்கோ, ஜிம்முக்கோ போக வேண்டிய அவசியம் இருக்காது. நான் பைக்தான் ஓட்டிவந்தேன். ஆனால், என் சகோதரர் சைக்கிள் ஓட்டுவதைப் பார்த்து, எனக்கும் சைக்கிள் மீது ஆசை வந்தது. தினமும் சைக்கிள் ஓட்டுவது, நல்ல உடற்பயிற்சியாகவும் அமைந்துவிடுகிறது. இப்போது சைக்கிளில்தான் கல்லூரிக்குப் போகிறேன்” என்கிறார் கோவையைச் சேர்ந்த தினேஷ்.



டிராபிக் பிரச்சினை இல்லை

உடல்நலம் சார்ந்து மட்டுமல்ல, தனிப்பட்ட விருப்பம், ஆரோக்கியம், போக்குவரத்து நெரிசல் என எல்லாவற்றையும் தாண்டி, சூழலை மாசுபடுத்தக் கூடாது என்று நினைக்கும் இளைஞர்களின் தேர்வாகவும் சைக்கிள் மாறிவருகிறது. கல்லூரிக்கோ அலுவலகத்துக்கோ பைக்கில் சென்றுவந்த பலரும், இன்று சைக்கிளில் சென்றுவரும் போக்கு கூடியிருக்கிறது.

“இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உடல்பருமனைக் குறைக்க சைக்கிள் ஓட்ட ஆரம்பித்தேன். தினமும் காலை சூளைமேட்டில் உள்ள வீட்டிலிருந்து மெரினாவரை சைக்கிளில் சென்று வர ஆரம்பித்தேன். பிறகுதான் அலுவலகத்துக்கும் சைக்கிளில் சென்று வரலாமே என்று தோன்றியது. இரண்டு ஆண்டுகளாக வீட்டுக்கும் நுங்கம்பாக்கம் அலுவலகத்துக்கும் சைக்கிளில் செல்ல ஆரம்பித்தேன். டிராபிக்கில் வண்டிகள் அணிவகுத்து நின்றால்கூடச் சிறிய சந்துபொந்தில் புகுந்து நான் சென்றுவிடுவேன். இதனால் எனக்கு நேரம் மிச்சமாகிறது. சூழலைக் காக்க என்னால் ஆன ஒரு சிறு உதவி” என்கிறார் சென்னையைச் சேர்ந்த தங்கபிரகாஷ்.



தனி டிராக்

சீனா, நெதர்லாந்து, ஜெர்மனி போன்ற நாடுகளில் கணிசமானோர் சைக்கிளைத்தான் பயன்படுத்துகிறார்கள். அதற்குக் காரணம், அங்கே சைக்கிள் ஓட்டுபவர்களுக்கெனத் தனித் தடம் இருக்கிறது. ஆனால், இந்தியாவில் அந்த நிலை இன்னும் வரவில்லை. சில இடங்களில் அதற்கு முயன்று பார்த்தாலும் பெரிய அளவில் பலன் கிடைக்கவில்லை. இந்தியாவைப் பொறுத்தவரை சைக்கிளுக்கான தனித் தடம் என்பது என்பது இன்னும் கனவாகவே இருக்கிறது. இந்த நிலை மாறும்போது இந்தியாவில் சைக்கிள் பயன்படுத்துவோர் எண்ணிக்கை இன்னும் அதிகமாகலாம்.
டிஜிட்டல் போதை 29: செல்ஃபி: சுய(ம்) நலமா?

Published : 07 Apr 2018 10:55 IST

வினோத் ஆறுமுகம்




ஒரு நல்ல போட்டோவுக்காக நீங்கள் என்ன விலை தருவீர்கள்? இன்றைய இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையின் அதிகபட்ச விலையை, அதாவது உயிரையே தருகிறார்கள். சுற்றுலாத் தலங்களில் சமீபகாலமாகக் காவல்துறைக்குப் பெரும் தலைவலியாக இருப்பது செல்ஃபி மரணங்கள்தாம். ஒரு நல்ல செல்ஃபி எடுத்து, தனது ஃபேஸ்புக்கிலோ இன்ஸ்டாகிராமிலோ பகிர்ந்து சில லைக்குகள் வாங்கும் ஆர்வத்தில் அல்லது வெறியில் மதியிழந்து இவர்கள் மரணமடைகிறார்கள். சமீபத்திய ஆண்டுகளில் செல்ஃபி மோகம் காரணமாக இத்தகைய பலிகள் அதிகரித்து வருவதைப் புள்ளிவிவரங்கள் உறுதிப்படுத்துகின்றன.

ஒரு பக்கம் மரணம் பயமுறுத்துகிறது என்றால், உளவியல் ஆய்வாளர்களோ செல்ஃபி வெறியால் நார்சிஸம் (சுயமோகம்), சைக்கோபாத் (ஆளுமைக் கோளாறு) போன்ற மனநோய்கள் அதிகமாகி வருவதாகக் கவலையுடன் குறிப்பிடுகிறார்கள். குறிப்பாகப் பதின் வயது இளைஞர்கள் தங்கள் படங்கள் சமூக ஊடகங்களில் ஏற்படுத்தும் வினைகள், எதிர்வினைகளால் மன உளைச்சலுக்கு ஆளாவதும் அதிகரித்துள்ளது.

உளவியல் காரணம் என்ன?

அமெரிக்காவில் ஒரு வகுப்பறையில் ஆசிரியரும் ஒரே ஒரு மாணவரும் மட்டும் இருந்தார்கள். அந்த ஆசிரியர் கர்ப்பமாக இருந்தார். திடீரென்று அந்த ஆசிரியருக்குப் பிரசவ வலி வந்துவிட்டது. வலியால் துடித்துக்கொண்டிருந்தார். உடனே அங்கே இருந்த மாணவன் செய்த முதல் காரியம் செல்ஃபி எடுத்துச் சமூக ஊடகங்களில் பகிர்ந்ததுதான்!

இந்தச் செய்தியை மறுநாள் பிரசுரித்த பத்திரிகைகள் ஆங்கிலத்தில் ‘செல்ஃபி’ஷ்’ (சுயநல செல்ஃபி) எனத் தலைப்பிட்டிருந்தன. ஒருவர் பிரசவ வலியில் துடித்துக்கொண்டிருந்தபோது, அதை செல்ஃபி எடுத்த அந்த மாணவனின் மனநிலை என்ன? அவன் ஏன் அப்படிச் செய்தான்? உளவியல்ரீதியாக இதற்குக் காரணம் இருக்கிறது.

பதின் வயது என்பது ஒருவருக்குச் சுய அடையாளத்தை உருவாக்கும் பருவம். நான் யார், இந்த உலகில் என் அடையாளம் என்ன என்று மனது சிந்திக்கத் தொடங்கும். அது மட்டுமல்ல. பதின் பருவம் என்பது தன் இணையைத் தேடும் பருவமும்கூட. தன்னைச் சுற்றி உள்ளவர்கள் மத்தியில், இந்த இரு காரணங்களுக்காக எதையாவது செய்து தம் இருப்பைப் பதின் வயதினர் உறுதிசெய்வது வழக்கம்.

படமாகவே காட்டும் ஆர்வம்

ஒரு நிகழ்ச்சி நடக்கும்போது தன் இருப்பை உணர்த்துவது, அதாவது, ‘ஏய்… நான் அங்கேதான் இருந்தேன்!’ என்று சொல்ல முனைவதுதான் செல்ஃபி மோகத்துக்கு அடிப்படை. அநாவசியத் தகவல் நிறைந்திருக்கும் இந்தக் காலத்தில், தான் ஒரு தகவலைப் பற்றித் தெரிந்து வைத்திருக்கிறேன் என்பது மட்டுமல்ல, ‘நான் அந்த இடத்திலேயே இருந்தேன்’ என்று செல்ஃபி நிரூபிப்பதால், கூடுதலாகத் தன் மீது மற்றவர்களின் கவனத்தைக் குவிக்க முடியும் என்று நினைக்கிறார்கள்.

அண்ணா சாலையில் பேருந்து பள்ளத்தில் விழுகிறது, அதை செல்ஃபி எடுத்துச் சமூக ஊடகங்களில் பகிர்ந்தால் மற்றவர்களின் கவனம் தன் மீது திரும்பும் என்ற ஒரு அற்ப மகிழ்ச்சி. இது போன்ற பல உதாரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

காட்சிப் பொருளா நாம்..?

அடுத்து, செல்ஃபி எடுத்துக்கொள்வதற்கு இன்னொரு முக்கியக் காரணம், ‘என்னை இப்படி ஏற்றுக்கொள்வாயா?’ என்று பிறரின் அங்கீகாரத்துக்காக ஏங்குகிற மனநிலை. இது மற்றவர்கள் முன் நம்மைக் காட்சிப் பொருளாக்கும் மனநிலை. இது ஒருவரின் சுயகவுரவத்தைக் கூட்ட மேற்கொள்ளும் நடவடிக்கை. அழகான இடத்திலோ ஒரு பிரபலத்துடனோ செல்ஃபி எடுத்து மற்றவர்கள் முன் தன்னைக் காட்சிப் பொருளாகப் பகிர்வது. அது பெறும் ‘லைக்’குகளைக் கொண்டு தன்னுடைய சுயகவுரவம் அதிகரித்துவிட்டதாக நம்பிக்கொள்வது.

அப்படி மற்றவர்கள் ‘லைக்’ செய்யவில்லை என்றால், மனச்சோர்வு கொள்கிறார்கள் இளைஞர்கள். இந்த செல்ஃபி மனச்சோர்வு என்பது இன்னொரு புதிய பிரச்சினை. அதைப் பற்றி அடுத்த வாரம் பார்ப்போம்.

கட்டுரையாளர், டிஜிட்டல் சமூக ஆய்வாளர்
தொடர்புக்கு: digitaldiet2017@gmail.com
மருத்துவ உலகின் காலாட்படை!

Published : 07 Apr 2018 10:54 IST


மு. வீராசாமி

 

உலக சுகாதார நாள்: ஏப்ரல் 7

‘திருமணமான பிறகு நன்றாகச் சாப்பிட வேண்டும். அதுவும் முக்கியமாகக் கருவுற்ற காலத்தில். அப்போதுதான் நீங்கள் ஆரோக்கியமாக இருப்பீர்கள், தாய்ப்பால் நன்றாகச் சுரக்கும்!’

- கனிவு மிகுந்த இந்த வார்த்தைகளை, அங்கே கூடியிருந்த கருவுற்ற தாய்மார்களிடையே மிகவும் நிதானமாகச் சொல்லிக்கொண்டிருந்தார் அந்தக் கிராம சுகாதார செவிலி. பொருளாதாரத்தில் பின்தங்கிய கருவுற்ற தாய்மார்களுக்கு, அரசு 12 ஆயிரம் ரூபாய் நிதியுதவியாக வழங்குகிறது. அதன் முக்கிய நோக்கமே, அந்தத் தாய்மார்கள் பிரசவ காலத்தில் நன்றாகச் சாப்பிட வேண்டும் என்பதற்காகத்தான். ஊட்டச்சத்துமிக்க உணவு, பழங்கள் சாப்பிடுவதற்கு அந்தப் பணத்தைப் பயன்படுத்த வேண்டும். ஆனால், பலர் அதைச் சீட்டுப்பணம் சேமிப்பதற்கும் நகைநட்டு வாங்குவதற்கும் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

இது குறித்து, தாய்மார்களிடையே அந்தச் செவிலி பேசும்போது, “உங்களில் சிலர் அந்த மாதிரி செய்வதை நாங்கள் பார்க்கிறோம். இன்னும் சிலர் வீட்டுக் கடனை அடைப்பதற்கு அந்தப் பணத்தைப் பயன்படுத்துகிறார்கள். இனி அப்படிச் செய்யாதீர்கள். அந்தப் பணத்தைக் கொண்டு கருவுற்ற காலத்தில் நன்றாகச் சாப்பிடுங்கள்” எனும்போது, அதில் சிறிது அக்கறையும் கண்டிப்பும் கலந்திருந்தன.
நலத்திட்டத் தூண்கள்

கருவுற்ற காலத்தில் நன்றாகச் சாப்பிட்டால்தான் ரத்த சோகை ஏற்படாது. இல்லையென்றால் கைகால் சோர்ந்துபோய், குழந்தை பிறப்பு காலத்தில் அதிக ரத்தப் போக்கு ஏற்பட்டு பிரசவத்தில் சிக்கல் ஏற்படலாம். வழக்கமாகச் சாப்பிடும் உணவைக் காட்டிலும் கூடுதலாக உட்கொள்ள வேண்டும்.

நேரப்படி சாப்பிடுவதும் செவிலியர் தரும் சத்து மாத்திரைகளைத் தவறாமல் உட்கொள்வதும் முக்கியம். கருவுற்ற காலத்தில், தாய் நல்ல எண்ணங்களுடன் இருக்க வேண்டும். மகிழ்ச்சியாக இருப்பதும் அவசியம். அப்போதுதான் குழந்தை ஆரோக்கியமாகப் பிறக்கும். கருவுற்றது உறுதி செய்யப்பட்டவுடன் படுத்து உறங்கிக்கொண்டே இருக்காமல் சின்னச் சின்ன வேலைகளைச் செய்துகொண்டே இருப்பதும் முக்கியம். சுகப்பிரவசத்துக்கு இது உதவும்.

இந்தக் கருத்துகளை எல்லாம், உறவினர் ஒருவர் எடுத்துச் சொல்வதுபோல அந்தச் செவிலி சொல்லிக்கொண்டிருந்தார். இவரைப் போன்ற கரிசனம் மிக்க செவிலியரால்தான், பல கிராமங்களில் ‘தாய்-சேய் நலத் திட்டம்’ முழுமையாகச் செயல்படுத்தப்படுகிறது. அதனாலேயே இவர்களின் பணி, போற்றுதலுக்குரியது. இத்தகைய சுகாதாரப் பணியாளர்களை நாம் ‘மருத்துவ உலகின் காலாட்படை’ என்று சொல்லலாம்.

திடீர்ப் பிரச்சினைகள்

மருந்து என்பது நோயைக் கட்டுப்படுத்தவும் குணப்படுத்தவும்தான். அதில் சந்தேகமில்லை. ஆனால், சில நேரம் மருந்து விபரீத விளைவுகளை ஏற்படுத்துவதும் உண்டு. ஏன் மரணம்கூட ஏற்படலாம். மருத்துவ உலகில் இது தவிர்க்க முடியாது.

பக்க விளைவு என்றோ ஒவ்வாமை என்றோ அதற்குக் காரணங்கள் சொல்லப்படுவது உண்டு. பென்சிலின், அற்புதமான ஒரு ஆன்டிபயாடிக் மருந்து. பல நோய்களுக்குச் சிறந்த நிவாரணியாக உச்சத்தில் இருந்தது. ஆனால், அதுவே ஒரு காலகட்டத்தில் மோசமான மரணங்களை உண்டாக்கி, மருத்துவ உலகை அச்சத்தில் ஆழ்த்தவும் செய்தது.

சில ஆண்டுகளுக்கு முன்புகூட போலியோ சொட்டு மருந்து முகாமில் சில குழந்தைகளுக்குப் பிரச்சினை ஏற்பட்டது நினைவிருக்கலாம். இந்தப் பிரச்சினை மாநிலம் முழுவதும் இங்கொன்றும் அங்கென்றுமாகப் பரவி மக்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. அப்போதெல்லாம் பிரச்சினையைத் தைரியமாக எதிர்கொண்டு, பொறுமையாக மக்களிடையே அமைதியை ஏற்படுத்தி சொட்டு மருந்தைத் திறம்பட வழங்கியதில் சுகாதாரப் பணியாளர்களின் பங்கு அபரிமிதமானது.


இடைவெளி குறைப்பு

கிராம மக்களுக்கு ஆத்திர அவசரம் என்றால் அரசு மருத்துவனைதான் புகலிடம். அது கைகால் வலியாகட்டும், காய்ச்சல், வயிற்றுப்போக்காக இருக்கட்டும், அவர்களுக்கு எல்லாமே உள்ளூர் ஆரம்ப சுகாதார நிலையங்கள்தான் கண் கண்ட கோயில்.

பெண்களுக்கும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் இடையிலான தொடர்பு பின்னிப் பிணைந்தது. கருவுற்றது முதல் குழந்தைப்பேறுக்குப் பிறகு குழந்தைக்குத் தடுப்பூசி போடுவதுவரை பெண்களுக்கும் சுகாதார நிலையங்களுக்கும் இடையேயான தொடர்பு, ஒரு தொடர் நிகழ்வாக இருக்கிறது.

பிரசவம் என்பது பெண்களைப் பொறுத்த வரையில் மறுபிறப்புப் போன்றது. இதனால்தான் கருவுற்ற தாய்மார்களுக்கு உறவினர்கள், நண்பர்கள் சூழ வளைகாப்பு நிகழ்வைச் சிறப்பாக நடத்துகிறார்கள். பொருளாதாரத்தில் பின்தங்கிய காரணங்களால், பெண்கள் பலருக்கு இந்த வாய்ப்பு பெரும்பாலும் அமைவதில்லை. ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் சமுதாயத்துக்கும் உள்ள இடைவெளியைப் போக்கவும் ஒரு இணக்கமான சூழலுக்கு வழிவகுக்கவும் இதுபோன்ற வளைகாப்பு நிகழ்ச்சிகள் வழிவகுக்கின்றன.

போற்றுவோம்

இப்போதும் உணவுப் பொருட்களில் கலப்படம் எவையும் செய்யப்பட்டுள்ளனவா? தரமானதாக இருக்கிறதா? காலாவதியான பொருட்களை விற்றுக்கொண்டிருக்கிறார்களா? சுற்றுப்புறம் தூய்மையாக இருக்கிறதா? கொசு பரவுவதற்கு வாய்ப்பாகத் தண்ணீர் எங்கேனும் தேங்கி இருக்கிறதா என்றெல்லாம் ஆய்வு செய்ய சுகாதாரப் பணியாளர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள். இந்த உலக சுகாதாரப் பணியாளர்கள் வாரத்தில் (ஏப்ரல் 8 முதல் 12 வரை) அவர்களின் பணியை நினைவுகூர்ந்து அங்கீகரிப்பதோடு, வாய்ப்புக் கிடைக்கும்போது போற்றவும் செய்வோம்.

கட்டுரையாளர், மதுரை தேசியக் கண் மருத்துவச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்

தொடர்புக்கு: veera.opt@gmail.com

இந்து திருமணச் சட்டப்படி பெண்ணின் சம்மதம் பெறாத திருமணம் செல்லாது: உச்ச நீதிமன்றம் விளக்கம்

Published : 12 Apr 2018 08:25 IST

புதுடெல்லி



இந்து திருமணச் சட்டப்படி பெண்ணின் சம்மதம் பெறாத திருமணம் செல்லாது என உச்ச நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.

கர்நாடகா அரசியல்வாதி ஒருவர் தனது மகளின் விருப்பத்துக்கு மாறாக, கட்டாயத் திருமணம் செய்துவைத்தார். இதையடுத்து கர்நாடகாவை விட்டு வெளியேறிய அப்பெண் தற்போது டெல்லியில் தங்கியுள்ளார். மேலும் டெல்லி மகளிர் ஆணைய உதவியுடன் உச்ச நீதிமன்றத்தை நாடினார்.

அவர் தனது மனுவில், மணப்பெண் சம்மதம் இல்லாத இந்து திருமணங்களை செல்லாது என அறிவிக்க வேண்டும் என கோரினார். இந்த மனு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், “திருமணத்துக்கு மணப்பெண் சம்மதம் தெரிவிக்க வேண்டும் என்பது இந்து திருமணச் சட்டத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும். ஒரு பெண்ணை ஏமாற்றியோ அல்லது கட்டாயப்படுத்தியோ திருமணம் செய்துவைத்தால் அத்திருமணம் செல்லாது என்பது இந்து திருமணச் சட்டத்தில் ஏற்கெனவே தெளிவாக உள்ளது. எனவே புதிய உத்தரவு பிறப்பிக்கத் தேவையில்லை. இது தொடர்பாக சிவில் நீதிமன்றங்களே உண்மையை ஆராய்ந்து முடிவு எடுக்கலாம்” என்று குறிப்பிட்டனர்.

இந்த விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள் அப்பெண்ணுக்கு பாதுகாப்பு அளிக்க டெல்லி போலீஸாருக்கு உத்தரவிட்டனர். வழக்கை மே 5-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
தந்தையை கவனிக்காத மகன் சொத்துப்பதிவு ரத்து

Added : ஏப் 12, 2018 00:51

பழநி: தந்தையை பராமரிக்காத மகனிடம் இருந்து சொத்தை மீட்டு, தந்தையிடம் ஒப்படைக்க, சப் - கலெக்டர் நடவடிக்கை மேற்கொண்டார்.பழநி அருகே, கொழுமங்கொண்டானைச் சேர்ந்தவர் ராமசாமி, 75. இவருக்கு, இரண்டு மகள்கள், ஒரு மகன். மகன் மகுடீஸ்வரனுக்கு, தன் பெயரில் இருந்த, 4 ஏக்கர் நிலத்தை எழுதிக் கொடுத்தார்.சாப்பாட்டுக்கு சிரமப்படுவதாகவும், சொத்தை வாங்கிய பின், தன்னை பராமரிக்காமல் மகன் ஏமாற்றி விட்டதாகவும், பழநி, சப் - கலெக்டர் அருண்ராஜிடம் ராமசாமி புகார் அளித்தார். வி.ஏ.ஓ., விசாரணையில், சொத்தை எழுதி வாங்கியதும், ராமசாமியை, அவரது மகன் பராமரிக்காதது தெரிந்தது.இதையடுத்து, தமிழ்நாடு மூத்த குடிமக்கள் மற்றும் பெற்றோர் பராமரிப்பு நல்வாழ்வு சட்டப்படி, கீரனுார் சார் - பதிவாளர் அலுவலகத்தில், பதிவு செய்த பத்திரத்தை ரத்து செய்ய, சப் - கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார்.அருண்ராஜ் கூறுகையில், ''பெற்றோரிடம் சொத்தை பெற்று, வயதான காலத்தில் பராமரிக்காமல் தவிக்க விடும் மகன்கள் குறித்து, புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


வைகை எக்ஸ்பிரஸ் நேரம் மாற்றம்

Added : ஏப் 12, 2018 00:52

சென்னை: வைகை எக்ஸ்பிரஸ், 16ம் தேதி வரை, நேரம் மாற்றி இயக்கப்படுகிறது.சென்னை எழும்பூரில் இருந்து, மதுரைக்கு, தினமும், பகல், 1:40 மணிக்கு இயக்கப்படும், வைகை எக்ஸ்பிரஸ், இன்று முதல், 16ம் தேதி வரை, பகல், 2:40 மணிக்கு இயக்கப்பட உள்ளது.இப்பாதையில், ஓட்டிவாக்கம் - கல்குழி ரயில் நிலையங்கள் இடையே, பாதை பராமரிப்பு பணி நடப்பதால், நேரம் மாற்றி இயக்கப்படுவதாக, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

NEWS TODAY 27.06.2026