Saturday, April 14, 2018


`எல்லாம் எனக்குத் தெரியும்; ஆனாலும் வருவேன்' - தமிழிசைக்கு மோடியின் பதில்! 

மலையரசு  

vikatan 

மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்ததனால், உலக அளவில் காங்கிரஸ், தி.மு.க-வின் மீதான மரியாதை குறைந்துள்ளது என தமிழிசை தெரிவித்துள்ளார்.



காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து நேற்று முன்தினம் சென்னை வந்த பிரதமர் மோடிக்குக் கறுப்புக்கொடி மூலம் எதிர்க்கட்சிகள் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர். எதிர்க்கட்சிகள் மட்டுமில்லாமல் தமிழ் ஆர்வலர்கள், மக்கள் அமைப்புக்கள் என மிகப்பெரிய அளவில் மோடிக்கு எதிராகக் கறுப்புக்கொடி போராட்டம் நடைபெற்றது. இதேபோல், #GoBackModi என்ற ஹேஷ்டேக்கும் உலக அளவில் ட்ரெண்டானது. இந்த எதிர்ப்புக்கு பா.ஜ.க தலைவர்கள் தற்போது எதிர்வினையாற்றத் தொடங்கியிருக்கிறார்கள். அந்தவகையில், சென்னை தி.நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்குப் பின் பேசிய, பாஜக, மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், ``பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்ததனால், உலக அளவில் காங்கிரஸ், திமுகவின் மீதான மரியாதை குறைந்துள்ளது.


ரூ.500 கோடி செலவில் நடந்த ராணுவ கண்காட்சியின் பெருமையைக் குறைந்துவிட்டனர். இந்தியாவை எந்த அளவுக்கு முன்னேற்ற வேண்டும் என நவீன விமானம், ஹெலிகாப்டர்களை பறக்கவிட்டுக் கொண்டிருக்கிறோம். நீங்கள் வெற்று பலூனை பறக்கவிடுகிறீர்கள். இந்தியாவை முன்னேற்றப்பாதையில் அழைத்துச் செல்வது யார் என மக்கள் சிந்திக்க வேண்டும். தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்கள் குறித்த தகவல்களை பிரதமரிடம் கூறினோம். ஆனால் `எல்லாம் எனக்குத் தெரியும்' எனக் கூறி தமிழகத்துக்குப் பிரதமர் வந்தார். அதற்குக் காரணம் தமிழக மக்கள் மீது அவர் வைத்திருக்கும் மரியாதை தான். கறுப்புக்கொடி போராட்டத்தில் மக்கள் ஈடுபடவில்லை. காவிரி விவகாரத்தைத் தீர்க்க வைக்காதவர்கள் தான் தற்போது நடைப்பயணம் செல்கிறார்கள்" என்றார்.


நாளை எனதே!


By டி.எஸ். ரமேஷ் | Published on : 14th April 2018 01:15 AM

 'நாளை நமதே' என்பது ஒரு எம்.ஜி.ஆர். படத்தின் பெயர். அது அசல் தமிழ்க் கதை அல்ல. மிகப் பிரபலமான ஹிந்தி திரைப்படமொன்றின் தழுவல். ஆனால் முறைப்படி தமிழ் பதிப்புக்கான உரிமை பெற்று எடுக்கப்பட்ட படம் அது. ஹிந்திப் படம் வெளியான ஆண்டு 1973. தழுவல் வெளியான ஆண்டு 1975. பல திரைப்படங்கள் போலவே, அந்தப் படத்தின் பெயருக்கும் கதைக்கும் சம்பந்தம் கிடையாது.
நாளை நமதே என்பது எம்.ஜி.ஆரின் அரசியல் கோஷமும் கூட. அந்தக் காலகட்ட அரசியல் சூழலையொட்டி எம்.ஜி.ஆரால் எழுப்பப்பட்ட கோஷம். அந்த கோஷ சொற்களுடன் ஆவேசமான கோஷ்டிப் பாடலும் படத்தில் இடம்பெற்றது. இப்போது அந்த கோஷம் வேறொருவர் கையில் சிக்கியிருக்கிறது. எம்.ஜி.ஆர். இல்லாததால், எம்.ஜி.ஆரின் வாரிசும் இல்லாததால், அந்த கோஷத்துக்கு உரிமை கொண்டாடி எவரும் ஆட்சேபிக்கவில்லை என்று தோன்றுகிறது. அது ஒரு புறமிருக்கட்டும்.
தனது திரையுல வாழ்வில் பல தழுவல்களைக் கடந்து வந்துள்ள கமல்ஹாசன் இப்போது எம்.ஜி.ஆரின் படப் பெயரைத் தழுவியுள்ளார். நிரூபிக்கப்பட்ட வெற்றி என்பதால் தழுவலில் இறங்குகிறார்கள். ஆனால் எல்லா தழுவல்களும் வெற்றியடைய வேண்டுமென்பதில்லையே!

அரசியல் உலக, திரையுலகத் தழுவல்களைக் கடந்து 'நாளை' என்பது பற்றி சிந்திக்கத் தலைப்பட்டால் பெரும் ஞானப்புதையல் கிடைக்கும். 'நமது - எனது' என்னும்போது ஒரு சொந்தம் கொண்டாடல் - உரிமை- ஒலிக்கிறது. 'சுயநலமல்ல, சுயநலமின்மையே மேன்மைக்கான தீர்வு' என்கிறார் சுவாமி விவேகானந்தர்.

பாரதிய சிந்தனை மரபில் 'இன்று' என்பது இப்போதைய பிறவியையும் நாளை என்பது அடுத்த பிறவியையும் குறிப்பதாக வைத்துக்கொள்ளலாம். 'இன்னொரு பிறவி வேண்டாம்' என்பது ஞானியரின் வேண்டுதல். எனவே, நாளை நமதே என்ற கோஷத்துக்கு ஞானியரின் பொருளையொட்டிய உபதேசத்தை வழங்க முடியாது.
நாளை - அதாவது, அடுத்த பிறவி- வேண்டாம் என்று பொருள் சொல்வோர் நாளை நமதே என்று கூற மாட்டார்கள். ஆனால் இங்கு ஒரு குழுவின் மேம்பாடு - முன்னேற்றம்- ஆகியவற்றை லட்சியமிட்டு இந்த வாசகம் முன்வைக்கப்படுகிறது.

'நிச்சயமற்ற நாளையை நம்பாதே. இன்று மட்டுமே நிஜம். அதை மகிழ்ச்சியுடன் வாழ்ந்து கழித்துவிடு' என்பது மேற்கில் தோன்றிய ஒரு சித்தாந்தம்.

நாளை நமதே என்று கூறும்போது, இன்று நம்முடையதாக இல்லை என்கிற பொருளும் வருகிறது. ஆனால் அது உண்மையா? இன்று என்பதை யாராவது நம்மிடமிருந்து பறித்துக் கொண்டுவிட்டார்களா அல்லது பறி கொடுத்துவிட்டோமா? நாளை நமதே என உத்தரவாதம் அளிக்க என்ன அவசியம் வந்துள்ளது?

அக்கறையின்மையால், உழைப்பின்மையால் இன்றைப் பறி கொடுத்தவர்களிடம், 'நாளை நமதே' என்று சொல்லி உசுப்பிவிட வேண்டியுள்ளது! இந்த நிலை எப்படி நேர்ந்தது? முதிர்ச்சியடைந்த நாகரிக சமூகத்தில், ஜனநாயகத்தில் இந்தப் புலம்பலுக்கு இடமுள்ளதா?
நாளை நமதே, நாளை எனதே என்ற இரு கோஷங்களில் எது பேராசை, சுயநலம் மிக்கது என்பது அவரவர் பார்வையைப் பொருத்தது என்று எளிதில் தள்ளிவிட முடியாது! எதற்காக அந்த கோஷங்களை முன்வைக்கிறோம் என்பதைப் பொருத்து பொருள்கொள்ளலாம்.

'நாளை எனதே' எனக் கூறுவதில் பொதுநலன் இல்லையே, சுயநலம்போல் உள்ளதே என்ற ஐயம் வேண்டாம். 'நாளை நமதே' என்பதில் பொதுநலன் இருப்பது போல இருந்தாலும், அந்தத் தழுவல் கோஷம் ஒரு குழுவின் வெற்றிக்காகவும் அதிகாரத்துக்காகவும் முன்வைக்கப்படுவது.
நம் நாட்டை அடிமைப்படுத்தியவர்களை அமைதி வழியில் எதிர்த்து, விடுதலைப் போருக்குத் தலைமை தாங்கிய மகாத்மா காந்தி பல கோஷங்களை முன்வைத்தார். எல்லோரையும் அறப்போரில் ஈடுபட அழைப்புவிடுத்தார். ஆனால், 'நாட்டை நான்தான் காப்பாற்றப் போகிறேன்' என்று நினைக்கும் ஒவ்வொருவருக்கும் 1910-லேயே எச்சரிக்கை செய்துவிட்டார். காந்திஜி தன் உறவினர் ஒருவருக்கு எழுதிய கடிதத்தில் அந்த எச்சரிக்கையை விடுக்கிறார்:

'இந்தியாவுக்கு விடுதலை பெற்றுத் தரப் போகிறேன் என்ற சுமையை அநாவசியமாக உன் தலையில் சுமந்து கொள்ளாதே. முதலில் உன்னையே நீ விடுவித்துக் கொள். அதுவே ஒரு பெரிய சுமை. நீ செய்ய வேண்டிய காரியங்களை உன்னை முன்னிறுத்திச் செய். உன்னை உணர்வதில்தான் உன் ஆன்மா மேன்மை அடைகிறது. உன்னுடைய விடுதலை, மேன்மையில் இந்தியாவின் மேன்மை இருக்கிறது' என்று காந்திஜி குறிப்பிடுகிறார்.
நாளை நமதே என்ற கோஷம், நாட்டைக் காக்கும் பெரும் சுமையை நமது தலையில் ஏற்றிக் கொள்வதாகும். எனவே, 'நாளை எனதே' எனக் கூறுவோம்! 'நாளை எனதே' என்பது சுய முன்னேற்றத்துக்கான முழக்கம். அது தன்னம்பிக்கையின் அறைகூவல்!


உங்களுக்கு கத்தரிக்காய் சாப்பிடப் பிடிக்காதா? இதைப் படிச்சப்புறம், நிச்சயம் சாப்பிடுவீங்க! 



இயற்கை நமக்கு அளித்திருக்கும் கொடைகளில் ஒன்று காய்கறிகள். தினமும் நாம் சமைப்பதற்கு காய்கறிகளை பயன்படுத்துகிறோம். அந்த காய்கறிகளில் என்ன சத்துகள் இருக்கின்றது என்பதை நாம் தெரிந்து சாப்பிடுகிறோமா என்றால் இல்லை, எத்தனை பேருக்கு தெரியும் நாம் சாப்பிடும் காய்கறியில் என்ன சத்துகள் இருக்கிறது என்று. கேரட், கறிவேப்பிலை கண்களுக்கு உகந்தது என பொதுவாக நாம் அறிந்திருப்போம். நாம் சாப்பிடும் காய்கறிகளின் பயன்கள் மற்றும் சத்துகளை அறிந்து சாப்பிட்டலாமே. காய்கறிகளில் நாம் முதலில் கத்தரிக்காய் பற்றி பார்ப்போம்.

கத்தரிக்காய்...

என்ன சத்துகள் இருக்கு? தினமும் கத்தரிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் சத்துகள். பொதுவாக கத்தரிக்காயில் வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து இருப்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். மேலும் ஃபைபர் 11%, மாங்கனீசு 10%, பொட்டாசியம் 5.3%, ஃபோலேட் 4.5%, வைட்டமின் கே 3.5%, செம்பு 3.5%, வைட்டமின் பி 63.5%, டிரிப்தோபன் 3.1%, வைட்டமின் சி 3%, மெக்னீசியம் 2.8%, வைட்டமின் பி 32.6%, கலோரி 1%.

யாருக்கு நல்லது?

ஆஸ்துமா நோயாளிகள் கத்தரிக்காயை மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து சாப்பிடலாம். மேலும் உடல் சூட்டை தக்க வைத்துக்கொள்ள விரும்புபவர்களும் இவ்வாறு சாப்பிடலாம்.

யாருக்கு நல்லதல்ல?

சரும நோயாளிகள், புண், அலர்ஜி உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. மேலும் இவற்றை சாப்பிட்டால் அலர்ஜி அதிகப்படும், மேலும் அரிப்பை தூண்டும்.. அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் முதல் மூன்று மாதங்களுக்கு சாப்பிடக்கூடாது.

பலன்கள்...

கத்தரிக்காய் பெருங்குடல் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும். மேலும் நீரிழிவை கட்டுப்படுத்த கத்தரிக்காயை பயன்படுத்துகின்றனர். நரம்புகளுக்கு வலுவூட்டும். சளி, இருமலை குறைக்கும். கொழுப்பின் அளவை கட்டுபடுத்தி இதயத்திற்கு பாதுகாப்பு அளிக்கும், ரத்த அழுத்தத்தை குறைக்கும். ஊதாநிற கத்தரிக்காய் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

Image courtesy: archanaskitchen.com
Dailyhunt

வாழ்க்கை சுத்த போர்னு தோணுதா? அப்போ வாங்க கொஞ்ச நேரம் கால் வீசி ஊஞ்சல் ஆடலாம்! 

dinamani-dailyhunt 



இப்படி யோசித்து பாருங்களேன் நன்றாகவே இருக்கிறது... கூடவே சுவாரஸ்யமும் கூட... அப்புறம் சின்ன திருப்தி கூட உண்டு.

வயதான பாட்டி கால் பந்தாட்ட மைதானத்துக்கு அருகில் நடந்து போய்க் கொண்டு இருக்கிறார், எதோ ஒரு கணத்தில் பந்து தவறிப் போய் அவரது காலடியில் வந்து விழுகிறது, பாட்டி அதை அமைதியாக புன்னகையுடன் எடுத்து பந்தை உதைத்த இளைஞனிடம் தருகிறார். இது இயல்பான நிகழ்வு.

அதே பாட்டி காலடியில் உரசும் கால்பந்தை எல்லையில்லாக் குறும்புடன் எட்டி உதைத்து விட்டு தானும் அந்த விளையாட்டில் கலந்து கொள்ளத் தயாராக நிற்பதாக கற்பனை செய்து பாருங்கள். பாட்டிகளுக்கும் ஏதோவொரு நொடியில் கால் பந்து விளையாடிப் பார்க்க ஆசை வராதா என்ன? அந்த ஆசையை அடக்கி வைக்காமல் இந்தக் காலத்துப் பேரன், பேத்திகளோடு ஆடிப் பார்த்து விட்டார் என்றால் பிறகு அவருக்கு ஜென்ம சாபல்யம் கிட்டிவிட்டதாகத் தான் அர்த்தம்.

நடுத்தர வயதை தாண்டிய அத்தையோ அல்லது அம்மாவோ, சித்திகளோ பூங்காவில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர்... அருகில் சறுக்கு மரத்தில் குழந்தைகள் சறுக்கி விளையாடிக் கொண்டிருக்கின்றனர்... அவர்களைக் கண்காணித்தவாறே பேசிக் கொண்டிருக்கும் அத்தையோ ...அம்மாவோ, சித்தியோ பேச்சின் ஏதோவொரு கணத்தில் முகமெல்லாம் த்ரில்லுடன் எழுந்து போய் சிறுவர்கள் சறுக்கி விளையாடும் அந்த சறுக்கு மரத்தில் ஒன்றுக்கு இரண்டு முறை அட்டகாசமான சந்தோசத்துடன் சறுக்கி முடித்து விட்டு வந்து மறுபடியும் பேச அமர்ந்தால் அப்போது அவர்களது முகத்தைப் பார்க்க வேண்டுமே... அந்த சந்தோசத்துக்கு ஈடு இணையே கிடையாது.

பழைய எம்.ஜி.ஆர் பாட்டுக்கு மொத்த குடும்பத்தினர் முன்னும் தாளம் போட்டு டான்ஸ் ஆடும் தாத்தா... அதை ரசித்துக் கொண்டே கூட ஆடும் பாட்டி.

மழை வந்ததும் குதூகலமாகப் பிள்ளைகளை ஓடி வரச்சொல்லி முற்றத்திலோ, மொட்டை மாடி வெற்று வெளியிலோ ரெயின் டான்ஸ் ஆடும் அப்பாக்கள்... அதை தடுக்காமல் கூட நனையும் அம்மாக்கள்.

வயதாகிறது என்ற நினைப்பே இல்லாமல் தெருவில் செப்பு வைத்து விளையாடும் குழந்தைகளோடு குழந்தைகளாய் ஆற்று மணலை அரிசிச் சோறாய் பாவனை செய்து வெறும் தண்ணீரை சாம்பாராகவும் ...உதிர்த்த முருங்கைப் பூக்களை கூட்டு பொரியலாகவும் சுகமான கற்பனை செய்து கொண்டு விளையாடித் தீர்க்கும் மனம் கொண்ட அத்தைகளும்... மாமாக்களும்.

கண்ணா மூச்சோ, குலை குலையாம் முந்திரிக்காயோ எந்த விளையாட்டானாலும் குடும்பத்தோடு என்றேனும் ஓர்நாள், ஒரே ஒரு நாளேனும் ஆடிப் பார்த்து விடும் ஆரோக்கியமான ஆசைகள் உள்ள மனிதர்கள் நிறைந்த வீடு... பிரியம் சமைக்கிற கூடு.

வாழ்க்கையில் இன்னும் சுவாரஸ்யங்கள் மிச்சம் இருக்கின்றன.

நம்புங்கள்...

மேலே சொன்ன எல்லாவற்றையும் விட பலருக்கும் மிகப் பிடித்த விஷயம் ஒன்றுண்டு அது ஊஞ்சலில் உட்கார்ந்து ஆடுவது. எந்த வயதிலும் இது அலுக்காத ஒரு செய்கை. இப்போதும் கூட கிண்டி சிறுவர் பூங்காவிலோ அல்லது வேறு ஏதோ பூங்காக்களிலோ பார்க்கலாம் வயது வித்யாசம் பாராமல் சிலர் ஊஞ்சலில் உட்கார்ந்து வீசி வீசி ஆடி ரசிப்பதை.

வேகம் கூடக் கூட ஜிவ்வென்று வானத்தில் பறப்பதைப் போல ஆனந்தம் பொங்கும் அற்புத ஆடல் அது. அதனால் தானோ தெய்வங்களையும் ஊஞ்சலில் வைத்து ஆட்டி உள்ளம் குளிர்விக்கிறோமோ என்னவோ?! மீனாட்சி அம்மையின் ஊஞ்சல் விளையாட்டை பிள்ளைத் தமிழில் ரசிக்கலாம்.

வீட்டில் நீளமான பலகை ஊஞ்சலோ அல்லது பிரம்புக் கூடை ஊஞ்சலோ வாங்கி மாட்டி ஆட இடம் இருந்தால் கண்டிப்பாக ஒரு ஊஞ்சல் வாங்கி மாட்டி விடுங்கள்... டென்சன் குறையும்.

அப்புறம் மனமிருந்தால் எந்த வயதிலும் சைக்கிள் விடலாம்... அது கூட ரிலாக்ஸ் செய்து கொள்ள மிகச் சிறந்த வழி தான். கண்களைக் குளிர்விக்க பச்சை பசேல் மரகத மலைகள்... சைக்கிள் வழுக்கிக் கொண்டு நழுவ குண்டு குழி நிரடல் இல்லா தார்ச்சாலை, எதிர் காற்றில் முகம் தழுவும் ஜில் ஜில் குளிர்... எல்லாம் கிடைத்தால் 80 வயதிலும் சைக்கிள் விடலாம். அது ஒரு பரவசம் மட்டுமல்ல ஆனந்தம்... பேரானந்த அனுபவம்!

வாழ்க்கை இப்படிப்பட்ட சுவாரஸ்யங்களால் நிரம்பியதாகத் தான் இருக்க வேண்டுமே தவிர; நீருக்குள் இருந்து தரையில் தூக்கி எறியப்பட்ட மீனின் போராட்டம் போலாகி விடக்கூடாது.

எனவே ரசித்து வாழுங்கள்... என்றென்றைக்குமாய் ரசித்து... வாழ்வை ருசித்து வாழ்ந்தால் கடும் மன உளைச்சலையும் கூட 'ஃபூ' என ஊதித்தள்ளி விடலாம்.
Dailyhunt

'காலத்தால் அழியாத பாடல்களை தந்தவர் கவிஞர் பட்டுக்கோட்டை 

கல்யாணசுந்தரம்'

காலத்தால் அழியாத பாடல்களை தந்தவர் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்று தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு புகழாரம் சூட்டினார்.

பட்டுக்கோட்டையிலுள்ள கவிஞர் கல்யாணசுந்தரம் நினைவு மணிமண்டபத்தில் அவரது 89-ஆவது பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் தமிழக அரசு சார்பில், மணிமண்டபத்திலுள்ள கவிஞர் கல்யாணசுந்தரம் சிலைக்கு அமைச்சர் இரா.துரைக்கண்ணு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பேசியதாவது:

கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய பாடல்கள் என்றென்றும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கக்கூடியவை. அவருடைய தத்துவப் பாடல்களின் வரிகள் எளிய நடையில் பாமர மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ளன. காலத்தால் அழியாத பாடல்களை தந்த அவரது எழுத்தாற்றலுக்கு புகழ் சேர்க்கும் வகையில் அவருடைய பிறந்த நாளை தமிழக முதல்வரின் ஆணைப்படி அரசு விழாவாக இங்கே நடத்தி சிறப்பு செய்கிறோம் என்றார். அமைச்சரைத் தொடர்ந்து, மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம், தஞ்சாவூர் ஆட்சியர் ஆ.அண்ணாதுரை ஆகியோரும் கவிஞர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
விழாவையொட்டி, 10 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டு மனைப்பட்டா, சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 2 பேருக்கு மாற்றுத்திறனாளி உதவித் தொகை, 2 பேருக்கு முதலமைச்சர் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை, ஒருவருக்கு விபத்து காப்பீட்டுக்கான நிதியுதவி என மொத்தம் ரூ.1லட்சத்து 36 ஆயிரத்து 500 மதிப்புள்ள நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மயிலாடுதுறை எம்.பி.
ஆர்.கே. பாரதிமோகன், எம்எல்ஏக்கள் சி.வி.சேகர் (பட்டுக்கோட்டை), மா.கோவிந்தராசு (பேராவூரணி), மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் முன்னாள் தலைவர் துரை.திருஞானம், தஞ்சை மாநகராட்சி முன்னாள் மேயர் சாவித்திரி கோபால், பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் இரா.கோவிந்தராசு, வட்டாட்சியர் ஜி.சாந்தக்குமார் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
Dailyhunt

சித்திரை மாத முக்கியப் பண்டிகைகள், விசேஷ தினங்கள்! #VikatanPhotoStory 



த மிழ் மாதங்களில் முதல் மாதம் சித்திரை. சித்திரை என்றால் 'ஒளி பொருந்திய' அல்லது 'அழகிய' என்று பொருள். ஆண்டின் தொடக்கமாக வந்து நல்ல நல்ல மாற்றங்களைத் தரும் மாதம். கடுமையான கோடைக்காலமாக சித்திரை இருந்தாலும், காய்-கனிகளில் பல இந்தக் காலத்தில் மட்டுமே கிடைக்கக்கூடியவை. ஆலயம்தோறும் திருவிழாக்கள் நடைபெறும் மாதமும் இதுதான். சித்திரை மாதத்தில் வரும் விழாக்கள், பண்டிகைகள், விசேஷங்களையும் இங்கே காண்போம்.

ஏப்ரல் 14 - தமிழ்ப் புத்தாண்டுப் பிறப்பு

`ஹே விளம்பி' ஆண்டு முடிவடைந்து, 'விளம்பி' ஆண்டு இன்று முதல் தொடங்குகிறது. 'மக்களுக்கு மகிழ்ச்சியையும் பணவரவையும் தருவதாக இந்த ஆண்டு அமையும்' என ஜோதிட நூல்கள் சொல்கின்றன.

ஏப்ரல் 15 - சித்திரை அமாவாசை


சித்திரை அமாவாசை 'பித்ரு பூஜை' சிறப்பான வாழ்வைத் தரும். கடுமையான கோடைக்கால அமாவாசை என்பதால், அம்மன் ஆலயங்களில் 'பால்குட திருவிழா' நடைபெறுவது வழக்கம். சித்தர்களுக்கு உகந்த இந்த அமாவாசையில் சதுரகிரி, திருவண்ணாமலை, வெள்ளியங்கிரி போன்ற தலங்களுக்குச் சென்று வழிபடலாம்.

ஏப்ரல் 18 - அட்சய திருதியை

அமாவாசைக்கு அடுத்து மூன்றாம் நாளில் வரும் இந்தப் புனித நாள் எப்போதும் குறையாத செல்வ வளங்களைத் தரும் திருநாள். பரசுராமர் ஜனித்த திருநாளும் இதுவே. பாஞ்சாலிக்கு, கிருஷ்ணர் துகில் அளித்ததும் இந்த நாளில்தான். இந்த நாளில் லட்சுமி மற்றும் குபேரரை வணங்கினால் ஐஸ்வர்ய யோகம் பெறலாம்.



ஏப்ரல் 20 - ஆதிசங்கரர் ஜயந்தி



சிவபெருமானின் அம்சமாகத் தோன்றி, புவியில் சாந்தியும் சமாதானமும் தழைக்கப் பாடுபட்ட மகாஞானி ஆதிசங்கரர். அத்வைத தத்துவத்தின் பிதாமகரான ஆதிசங்கரர், கேரள மாநிலத்தின் 'காலடி' என்ற ஊரில் இதே நாளில்தான் பிறந்தார். எட்டு வயதில் துறவியாகி மக்களை முறையான வழிபாட்டுக்குக் கொண்டு சென்ற அவதாரப் புருஷரின் ஜன்ம நாளின்று.

ஏப்ரல் 21 - ஸ்ரீராமாநுஜர் ஜயந்தி



தான் அறிந்துகொண்ட திருமந்திரத்தை உலகமும் அறிந்துகொள்ளட்டும் என்று குருவின் கட்டளையையும் மீறி ஓதிய திருவடிவத்தின் பெயர்தான் ஸ்ரீராமானுஜர். எந்த உயிரிலும் பேதம் பார்க்காமல், நாராயணனை மட்டுமே பார்த்து மகிழ்ந்த உடையவர் ஸ்ரீராமாநுஜரின் அவதார தினம் இன்று.

ஏப்ரல் 23 - வாஸ்து தினம்



பூமியின் இயல்புக்கேற்றவாறு வாஸ்து பகவான் விழித்திருக்கும் நாள்களில் வாஸ்து வழிபாடு செய்தால், எந்தத் தடையுமில்லாமல், நல்லமுறையில் கட்டடம் வளர்ச்சி பெறும். இந்த வகையில் சித்திரை மாதம் 10-ம் நாளில் பூமி பூஜை செய்து வேலையைத் தொடங்கலாம்.

ஏப்ரல் 24 - சத்ய சாய்பாபா ஸித்தி தினம்

புட்டபர்த்தி ஸ்ரீசத்ய சாய்பாபா ஸித்தியடைந்த தினம் இன்று. பல கோடி பக்தர்களின் வழிபாட்டுக்குரிய பகவான் ஸ்ரீபாபா ஆன்மிகப் பணிகளோடு பல சமூக நலப்பணிகளும் செய்தவர்.

ஏப்ரல் 25 - பட்டாபிஷேகம்



மதுரை நகராளும் அன்னை மீனாட்சிக்கு நடைபெறும் 'சித்திரைத் திருவிழா'வில் இன்று ஸ்ரீமீனாட்சிக்கும், சொக்கநாதப் பெருமானுக்கும் பட்டாபிஷேக வைபவம் நடைபெறும். அரியணை ஏறிய அன்னை மீனாட்சியின் அழகுக் கோலம் காண்பதற்கரியது.

ஏப்ரல் 27 - மீனாட்சித் திருக்கல்யாணம்



மலையத்துவஜ பாண்டியனின் திருமகளாகப் பிறந்து பாண்டியப் பேரரசின் வீர இளவரசியாக வளர்ந்த மீனாட்சியை, சௌந்திர பாண்டியனாக வந்து ஈசன் கரம் பிடிக்கும் திருநாள் இன்று.

ஏப்ரல் 29 - சித்ரா பௌர்ணமி, அழகர் ஆற்றில் இறங்குதல்.



தங்கை மீனாட்சிக்கும் சொக்கநாதருக்கும் நடந்த திருமணத்துக்கு சீர்வரிசையளிக்க, அண்ணனான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி வரும் வைபவம் நடைபெறும் நாள் இன்று. சித்ரா பௌர்ணமி நாளில் கண்ணகிக்கான வழிபாடும் நடைபெறும்.

மே 04 - அக்னி நட்சத்திரம் ஆரம்பம்

சூரியன், பரணி 4-ம் பாதத்தில் தொடங்கி, கார்த்திகை, ரோகிணி முதல் பாதம் வரை சஞ்சரிக்கும் காலம்தான் அக்னி நட்சத்திரக் காலம். பொதுவாக, `இந்தக் காலத்தில் சுபகாரியங்கள் எதுவும் செய்யக் கூடாது' என்பார்கள். அர்ஜுனன் 'காண்டவ வனம்' எனும் இந்திரனின் வனத்தை எரித்த காலம் அக்னி நட்சத்திரக் காலம் என்றும் சொல்லப்படுகிறது. அக்னி நட்சத்திர காலத்தில் சிவாலயங்களில் இறைவனுக்கு தாராபிஷேகம் செய்விப்பார்கள்.

மே 7 - சித்திரை திருவோண நடராஜர் அபிஷேகம்



நடராஜருக்கு தேவர்களின் கணக்குப்படி ஆறுகால அபிஷேகமாக ஆண்டுக்கு ஆறு முறை அபிஷேகம் செய்வார்கள். அதில் சித்திரை மாத திருவோண நட்சத்திரத்தில் செய்யப்படும் அபிஷேகம் இன்று நடைபெறும். உச்சிகால அபிஷேகமான இதை தரிசித்தால், பிறப்பிலா பேரின்ப நிலையை எட்டலாம் என்பது ஐதீகம்.

மே 10 - தத்தாத்ரேயர் ஜயந்தி



பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளின் அம்சமாக வணங்கப்படும் ஸ்ரீ தத்தாத்ரேயர் நித்ய சஞ்சீவிகளில் முதன்மையானவர். இவர் அத்திரி மகரிஷிக்கும் அகல்யாவுக்கும் இதே நாளில் பிறந்தார். இவர் பிறந்த தலம் சுசீந்திரம். 'தத்தாத்ரேயர் சாந்தி மந்திரம்' மனநிம்மதியை அளிக்கக்கூடியது.
Dailyhunt

முக்கிய குற்றவாளிகள் விடுதலையா? சேலத்தில் தண்டனை பெற்றவர்கள் வேதனை! 

dailyhunt   14.04.2018

சேலம் வீராணத்தை அடுத்த பள்ளிக்கூத்தானூர் பகுதியில் 2003-ஆம் ஆண்டு சுந்தரராஜன், குப்புசாமி கொலை வழக்கு சேலம் முதலாவது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நீதிபதி ரவீந்தரன் விசாரணை செய்துவந்த இந்த வழக்கில், தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில், 7 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், 5 பேருக்கு ஒற்றை ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது. அதையடுத்து, நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உறவினர்கள் கதறிக் கண்ணீர் வடித்தனர்.

இதுகுறித்து அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களிடம் விசாரித்தபோது, "நாங்கள் சேலத்தை அடுத்த வீராணம் பள்ளிக்கூடத்தானூர் பகுதியில் வசித்து வருகிறோம். நாங்கள் அனைவரும் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். இவ்வழக்கில் கொலை செய்யப்பட்ட சுந்தரராஜன், குப்புசாமி ஆகியோர் ஊருக்குள் ரவுடிகளாக வலம் வந்தார்கள். ஊருக்குள் அனைவரிடமும் பிரச்னைகள் செய்துவந்தார்கள். ஊரையே இவர்களின் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளும் அளவுக்கு அனைவரையும் மிரட்டி, அடித்து தொந்தரவு செய்துவந்தார்கள்.

சம்பவம் நாளான 15.7.2003-ஆம் தேதி மாலை 6 மணிக்கு, அவர்கள் இருவரும், பூசாரி அருணாசலம் கடையில் சிக்கன் வாங்கிவிட்டுப் பணம் கொடுக்கவில்லை. பூசாரி, பணம் கேட்டதால் அவரை அடித்து உதைத்தார்கள். இதையடுத்து, அவர் ஊருக்குள் வந்து முறையிட்டார். ஊர்க்காரர்கள் அனைவரும் சேர்ந்து சுந்தரராஜனையும், குப்புசாமியும் அடித்துக் கொலை செய்துவிட்டார்கள். அதையடுத்து, அன்றைய சேலம் மாவட்ட எஸ்.பி.பொன்மாணிக்கவேல் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை செய்துவிட்டு, "பரவாயில்லை. ரவுடிகளை ஊரே சேர்ந்து அடித்துக் கொலை செய்திருக்கிறீர்கள். இப்படிச் செய்தால்தான் ரவுடிகள் திருந்துவார்கள். வயதானவர்கள் 6 பேரும் சரணடைந்துவிடுங்கள். மேற்கொண்டு நான் பார்த்துக்கொள்கிறேன்'' என்று கூறிவிட்டுச் சென்றார்.

ஆனால், இந்தக் கொலை விவகாரம் தொடர்பாக அந்த ஊரில் 103 பேரைக் காவல் துறை கைதுசெய்தது. பிறகு, அதில் 24 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, சேலம் முதலாவது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கை நீதிபதி ரவீந்தரன் விசாரித்துவந்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர்கள் கிருபைவரன், திருநீலகண்டன் ஆஜரானார்கள். பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் தனித்தனியே வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதாடி வந்தார்கள்.

விசாரணை முடிந்து இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், நடேசன், ஜெகன் (எ) ஜெகநாதன், குமரவேல், அண்ணாமலை, செல்வம், தியாகராஜன், செல்வராஜ் ஆகிய 7 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், சேகர், தர்மலிங்கம், செல்வம், குமரேசன், மாணிக்கம் ஆகிய 5 பேருக்கு ஒற்றை ஆயுள் தண்டனையும், விஜயா, கிருஷ்ணம்மாள், மாது ஆகிய 3 பெண்களுக்கு 1,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுத் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த குட்டி (எ) செல்வம், பூசாரி (எ) அருணாசலம், முருகேசன், கலைவாணன், மணிமாறன் ஆகிய 5 பேர் விடுதலை செய்யப்பட்டனர். மேலும் இந்த வழக்குத் தொடர்பாகக் குற்றம்சாட்டப்பட்டிருந்த சடையன், கருப்பன், நிலா ஆகியோர் ஏற்கெனவே இறந்துவிட்டனர். இதுதவிர இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பழனிவேல் என்பவரை நக்சல் தொடர்பு இருப்பதாகச் சொல்லி தனிவழக்காக விசாரிக்கப்பட்டு வருகிறது.

நீதிபதி ரவீந்தரன் வழங்கிய தீர்ப்பையடுத்து, ஊர்ப் பொதுமக்கள் அனைவரும் குவியத் தொடங்கினார்கள். தண்டனை பெற்றவர்களை அவர்களுடைய குடும்பத்தினர்களும், உறவினர்களும் கட்டிப்பிடித்துக் கதறி அழுத காட்சி, அனைவருக்கும் சோகத்தை ஏற்படுத்தியது. தங்கள் அப்பாக்கள் சிறைக்குச் செல்வதைப் பார்த்து கண்ணீர் வடித்த குழந்தைகள், அவர்களுடைய கன்னத்தில் முத்தம் கொடுத்து அழுத காட்சி மிகவும் பரிதாபமாக இருந்தது. அதையடுத்து தண்டனை பெற்றவர்கள் 3:00 மணிக்கு காவல் துறை வாகனத்தில் ஏற்றப்பட்டுக் கோவை மத்திய சிறைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.



இதுபற்றி ஒற்றை ஆயுள் தண்டனை பெற்ற சேகர் என்பவரிடம் பேசிய போது, "நான் 5 வயது குழந்தையாக இருந்தபோது போலியோ நோய் தாக்குதலுக்கு ஆளாகிட் கால் செயலிழந்ததால் என்னால் சரியாக நடக்க முடியாது. 75 சதவிகிதம் கால்கள் ஊனம் என்ற சான்றிதழ் பெற்றிருக்கிறேன். எனக்குக் கண் பார்வையும் குறைவு. சம்பவம் நடந்தபோது ஊரே கூடி கும்பலாக இருந்தது. அந்தக் கும்பலைவிட்டு விலகி ஓர் ஓரமாக நின்றுகொண்டிருந்தேன். இந்த வழக்குக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. எனக்கு ஆயுள் தண்டனை வழங்கி இருக்கிறார்கள்'' என்றார், வேதனையுடன்.

இரட்டை ஆயுள் வழங்கப்பட்ட குமரவேல், "சம்பவம் நடந்தபோது நான் ஊரிலேயே இல்லை. கலரம்பட்டியில் தறி ஓட்டிக் கொண்டிருந்தேன். இந்த வழக்குக்கு முக்கியக் காரணமாக இருந்தவர்கள் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த வழக்கில் சம்பந்தமே இல்லாதவர்களுக்கு ஆயுள் தண்டனை கொடுத்திருக்கிறார்கள்'' என்றார். செந்தில் என்பவர், ``எங்கள் குடும்பத்தில் 4 பேர்மீது ஆயுள் தண்டனை விதித்திருக்கிறார்கள். எங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. கொலைக்குச் சம்பந்தம் இல்லாதவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்திருக்கிறார்கள். இதனால் எங்கள் குடும்பமே பெரிய பாதிப்புக்குள்ளாகி இருக்கிறோம்'' என்று கண்ணீர்விட்டார்.



இதுகுறித்து அரசு தலைமை வழக்கறிஞர் தனசேகரன், "பாதிக்கப்பட்டவர்கள் பல கதைகளைச் சொல்லலாம். அதைப் பற்றி நான் பேச முடியாது. இந்த வழக்கைப் பொறுத்தவரை நீதியரசர் முழுமையாக விசாரணை செய்து தீர்ப்பு வழங்கி இருக்கிறார்கள். இது சரியான தீர்ப்பு'' என்றார்.

அப்போது, சேலத்தில் எஸ்.பி-யாக இருந்த பொன்மாணிக்கவேலிடம் விளக்கம் கேட்பதற்காகப் பலமுறை தொடர்புகொண்டும் அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை. அவருடைய விளக்கம் கிடைத்தால் அதையும் பதிவு செய்வோம்.
Dailyhunt

NEWS TODAY 23.12.2025