Friday, April 20, 2018

ஆதாருடன் 12 டிக்கெட் முன்பதிவு: ஐ.ஆர்.சி.டி.சி.,

Added : ஏப் 19, 2018 20:54

கோவை,: 'ரயில் பயணியர், ஆதார் எண்ணை இணைத்து மாதம்தோறும், 12 டிக்கெட் முன்பதிவு செய்யலாம்' என, ஐ.ஆர்.சி.டி.சி., தெரிவித்துள்ளது.ஐ.ஆர்.சி.டி.சி., என்ற இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின், www.irctc.co.in எனும் இணையதளத்தில், டிக்கெட் முன்பதிவு செய்து லட்சக்கணக்கானோர் தினமும் பயணிக்கின்றனர். இதில், ரொக்கமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு வசதிகளும், சலுகைகளும் அறிமுகம் செய்யப்படுகின்றன.ரயில் பயணத்தில் ஆள் மாறாட்டம், டிக்கெட் முறைகேடு போன்றவற்றை கட்டுப்படுத்த, முன்பதிவு செய்வதில் பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதன்படி, பயணி ஒருவர் அதிக எண்ணிக்கையிலான டிக்கெட் பெறமுடியாது.ஐ.ஆர்.சி.டி.சி., அதிகாரி ஒருவர் கூறுகையில், 'டிக்கெட்' முறைகேடுகளை கட்டுப்படுத்த, ஆதார் எண் இணைக்க அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இணைய தளத்தில் ஆதார் எண்ணை இணைத்து, பயணி ஒருவர் மாதம்தோறும், 12 டிக்கெட் வரை முன்பதிவு செய்யலாம். ஆறு டிக்கெட் வரை பெற ஆதார் அவசியமில்லை' என்றார்.
சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்படாது: திருப்பதி தேவஸ்தானம்

Added : ஏப் 20, 2018 04:15



திருமலை : கோடை விடுமுறை துவங்கியுள்ளதால் வி.ஐ.பி.,க்களின் சிபாரிசு கடிதங்கள் இன்று(ஏப்.,20) முதல் ஏற்கப்படாது என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ஜூலை 16ம் தேதி வரை இது கடைபிடிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்து. மேலும், வாரத்தில் மூன்று நாட்களுக்கு வி.ஐ.பி., தரிசனமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
500 ரூபாய் நோட்டு அச்சிடும் பணி தீவிரம்

20.04.2018

புதுடில்லி: கரன்சி தட்டுப்பாட்டைப் போக்க, 500 மற்றும், 200 ரூபாய் நோட்டுகள் அச்சடிக் கும் பணி,முழுவீச்சில் நடப்பதாக, மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளது.நாடு முழுவதும், பல மாநிலங்களில், திடீரென ரூபாய் நோட்டு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.




தெலுங்கானா, ம.பி., ஆகிய மாநிலங்களில், பல, ஏ.டி.எம்., இயந்திரங்களில், 20 நாட்களாக பணம் நிரப்பப்படவில்லை.

தமிழகத்திலும் கூட சில பகுதிகளில் பணத்தட்டுப்பாடு நிலவுகிறது. இதை அடுத்து, ரூபாய் நோட்டு அச்சிடும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது. 'செக்யூரிட்டி பிரின்டிங் மற்றும் மின்டிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனம்' ரூபாய் நோட்டு அச்சிடும் பணியில் முழுவீச்சில் இறங்கியுள்ளது.

தட்டுப்பாட்டைப் போக்குவதற்காக, 70 ஆயிரம் கோடி மதிப்புக்கு, 500 மற்றும், 200 ரூபாய் நோட்டு கள் அச்சிடும் பணி நடக்கிறது.4 அச்சகங்களில், இரவு - பகலாக, ரூபாய் நோட்டுகள் அச்சிடப்படுகின் றன.அச்சிடப்பட்ட நோட்டுகளை, சோதனை முடிந்த பின், உடனுக்குடன், நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பும் பணியும் நடக்கிறது.

'இந்த வார இறுதிக்குள், பணத்தட்டுப்பாடு நீங்கும்' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

எஸ்.பி.ஐ., முதன்மை அதிகாரி, ரஜ்னிஷ்குமார் கூறுகையில், ''தட்டுப்பாடு ஏற்பட்டிருந்த மாநிலங்களில், ஸ்டேட் வங்கி கிளைகளுக்கு, ரூபாய் நோட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டு விட்டன. ''இன்று முதல், எஸ்.பி.ஐ.,கிளைகள் மற்றும் ஏ.டி.எம்.களில், பண தட்டுப்பாடு இருக்காது,'' என்றார்.
மாவட்ட செய்திகள்

100 டிகிரியை தாண்டி சுட்டெரிக்கும் வெயில்



சேலம் மாவட்டத்தில் தொடர்ந்து 100 டிகிரியை தாண்டி சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் அவதியுற்று வருகின்றனர்.

ஏப்ரல் 19, 2018, 04:00 AM

சேலம்

சேலம் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அக்னி வெயில் தொடங்குவதற்கு முன்பாக மாவட்டத்தில் 100 டிகிரியை தாண்டி வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதியுற்று வருகின்றனர். மதிய வேளையில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர். இதுதவிர இரவில் புழுக்கமும் அதிகமாக உள்ளது.

கடந்த 3 நாட்களாக சேலம் மாவட்டத்தில் வெயிலின் அளவு 100 டிகிரியை தாண்டி கொளுத்தி வருகிறது. அதாவது, கடந்த 16-ந் தேதி 100 டிகிரியும், நேற்று முன்தினம் 100.4 டிகிரியும், நேற்று 100.2 டிகிரியும் பதிவாகி உள்ளன. கடந்த 15-ந் தேதி லேசாக கோடை மழை பெய்ததால் வெப்பம் ஓரளவு தணிந்தது.

வெயிலையொட்டி சாலையோரங்களில் ஆங்காங்கே தற்காலிக ஜூஸ் கடைகள் பல தொடங்கி உள்ளன. இந்த கடைகளில் தற்போது பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. மேலும் வெயிலினால் குழந்தைகளுக்கு அடிக்கடி வயிற்று போக்கு, உடலில் சிறிய கொப்புளங்கள் ஏற்பட்டு வருகின்றன.

வெயிலின் தாக்கம் குறித்து சேலம் வானிலை அதிகாரிகள் கூறும் போது, ‘மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கத்தான் வாய்ப்புள்ளது. குறைய வாய்ப்பிருக்காது. அக்னி வெயில் காலத்தில் 105 டிகிரி தாண்டியும் வெயிலின் தாக்கம் இருக்கலாம். வானிலையில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது‘ என்றார்.
மாவட்ட செய்திகள்

கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்று பார்த்து கூறிய அரசு பெண் டாக்டர் கைது

கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்று பார்த்து கூறிய அரசு பெண் டாக்டரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரது மருத்துவமனையின் ஸ்கேன் சென்டருக்கு சீல் வைக்கப்பட்டது.

ஏப்ரல் 20, 2018, 04:30 AM

ஆத்தூர்,

சேலம் மாவட்டம் ஆத்தூர் டாக்டர் வரதராஜலு தெருவை சேர்ந்தவர் டாக்டர் தமயந்தி ராஜ்குமார். இவர் தலைவாசல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். மேலும் ஆத்தூரில் ‘மதுரா‘ என்ற பெயரில் மருத்துவமனையையும் நடத்தி வருகிறார். இந்த மருத்துவமனையில் செயல்பட்டு வரும் ஸ்கேன் சென்டரில் கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்று பார்த்து கூறி வந்துள்ளனர்.

இது தொடர்பாக எழுந்த புகாரை தொடர்ந்து அந்த ஸ்கேன் சென்டர் 2 முறை பூட்டி சீல் வைக்கப்பட்டது. இந்த பிரச்சினை தொடர்பாக கோர்ட்டில் வழக்கு உள்ளதால், ஸ்கேன் சென்டரின் சீல் அகற்றப்படவில்லை. இந்த நிலையில் மருத்துவமனையில் உரிய அனுமதியின்றி ஸ்கேன் பார்ப்பதாகவும், கருவில் உள்ள குழந்தை குறித்து தகவல் தெரிவிப்பதாகவும் சென்னை மருத்துவத்துறை இயக்குனருக்கு புகார்கள் சென்றன.

இதைத்தொடர்ந்து மருத்துவத்துறை இயக்குனர் டாக்டர் இன்பசேகரன் உத்தரவின்பேரில், இணை இயக்குனர் டாக்டர் கமலக்கண்ணன், கடலூர் மருத்துவமனை கதிரியக்கவியல் டாக்டர் நடராஜன், மருத்துவத்துறை குற்றத்தடுப்பு பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு பிரபாகரன், மருத்துவப்பணிகள் துறை சேலம் மாவட்ட இணை இயக்குனர் (பொறுப்பு) டாக்டர் சத்யா, தாசில்தார் முத்துராஜா, இன்ஸ்பெக்டர் கேசவன் ஆகியோர் கொண்ட அதிகாரிகள் குழு நேற்று மதியம் 2 மணிக்கு திடீரென்று மருத்துவமனைக்கு சென்று ஆய்வு நடத்தினார்கள்.

அப்போது கர்ப்பிணிகள் சிலர் பரிசோதனைக்காக காத்திருந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர்கள் பெரம்பலூர், கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்பதும், ஸ்கேன் பார்க்க வந்ததும் தெரியவந்தது. மேலும் இது குறித்து டாக்டர் தமயந்தி ராஜ்குமாரிடமும் விசாரணை நடத்தினார்கள். இந்த விசாரணை நேற்று இரவு 9 மணி வரை 7 மணி நேரம் நீடித்தது.

விசாரணையில் அவர் கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்று பாலினத்தை பார்த்து கூறியது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து ஆத்தூர் போலீசார் டாக்டர் தமயந்தி ராஜ்குமாரை கைது செய்தனர். மேலும் மருத்துவமனையில் அனுமதியின்றி செயல்பட்ட ஸ்கேன் சென்டருக்கு மீண்டும் சீல் வைக்கப்பட்டது.

இது குறித்து மருத்துவப்பணிகள் துறை சேலம் மாவட்ட இணை இயக்குனர் (பொறுப்பு) டாக்டர் சத்யா நிருபர்களிடம்கூறியதாவது:-

ஆத்தூரில் செயல்பட்டு வந்த மதுரா மருத்துவமனையில் ஸ்கேன் மூலம் கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்று பார்த்து தெரிவித்து வந்துள்ளனர். இது சட்டப்படி குற்றமாகும். இதற்காக டாக்டர் தமயந்தி ராஜ்குமார், ரூ.6 ஆயிரம் கட்டணம் வசூலித்து வந்துள்ளார். நாங்கள் பரிசோதனைக்காக ஒரு கர்ப்பிணியை அனுப்பி வைத்தோம். அவரிடம் கருவில் உள்ள குழந்தையை ஆணா, பெண்ணா என்று கேட்க கூறி இருந்தோம். இதன்படி அவரும், டாக்டரிடம் கேட்டுள்ளார். அவர் கருவில் உள்ள குழந்தை குறித்து தெரிவித்து, ரூ.6 ஆயிரம் பெற்றுள்ளார். இதன் மூலம் கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை அவர் தெரிவித்தது உறுதி செய்யப்பட்டது. மேலும் கருவில் உள்ள குழந்தை பெண்ணாக இருந்தால், சிலருக்கு கருவையும் கலைத்து உள்ளார். இதைத்தொடர்ந்து போலீசில் அளித்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.
தலையங்கம் 

கசக்கி எறியப்பட்ட பிஞ்சுமலர்



மகாகவி பாரதியார், ‘பாரத ஜனங்களின் தற்கால நிலைமை’ என்ற தலைப்பில் எழுதிய ஒரு பாடல் இன்றைக்கு நடக்கும் நிலைமைகளை பார்க்கும்போது, ஒட்டுமொத்த பாரத மக்களும் பாடவேண்டிய நிலை இருக்கிறது.

ஏப்ரல் 20 2018, 03:00 AM

மகாகவி பாரதியார், ‘பாரத ஜனங்களின் தற்கால நிலைமை’ என்ற தலைப்பில் எழுதிய ஒரு பாடல் இன்றைக்கு நடக்கும் நிலைமைகளை பார்க்கும்போது, ஒட்டுமொத்த பாரத மக்களும் பாடவேண்டிய நிலை இருக்கிறது.

‘‘நெஞ்சு பொறுக்கு திலையே – இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்’’...என்பதுதான் அந்தப்பாடல். ஜம்மு–காஷ்மீர் மாநிலத்திலுள்ள கதுவா கிராமத்தைச்சேர்ந்தவர் முகம்மது யூசுப் புஜ்வாலா. இவர் அங்குள்ள பகர்வால் சமுதாயத்தைச்சேர்ந்தவர். இது ஒரு நாடோடி சமுதாயம். ஆடு, மாடு, குதிரைகளை வளர்த்து பிழைக்கும் சமுதாயம். பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு விபத்தில் முகம்மது யூசுப் தன் தாய், 2 மகன்கள், ஒருமகளை இழந்ததால், தன் மைத்துனியின் 3 மாதக்குழந்தையை வாங்கி தத்தெடுத்து வளர்த்தார். அந்த குழந்தையை மிகச்செல்லமாக வளர்த்திருக்கிறார். ஜம்முவில் பெரும்பான்மையாக வசிக்கும் மற்றொரு சமூகத்தினர், இந்த நாடோடி குடும்பங்களை தங்கள்பகுதியில் வசிக்கக்கூடாது, வெளியேறி செல்லவேண்டும் என்று வெகு நாட்களாகவே அதட்டி, மிரட்டி அச்சுறுத்தி வந்திருக்கிறார்கள்.

இந்தநிலையில், முகம்மது யூசிப்பின் வளர்ப்பு மகளான 8 வயது சிறுமி தாங்கள் வளர்த்த 2 குதிரைக்குட்டிகளை தேடிக்கொண்டு, அந்தப்பகுதியில் உள்ள குளத்துக்கரைக்கு சென்றிருக்கிறாள். அதன்பிறகு அவளை காணவில்லை. ஒருவாரம் கழித்து அந்த ஊரிலுள்ள ஓய்வுபெற்ற அரசு அலுவலர் சஞ்சிராம் என்பவர் வீட்டின் அருகில் உடலெல்லாம் சிதைக்கப்பட்டு, நெருப்பு காயங்களோடு கை–கால்கள் முறிக்கப்பட்டு, முகம் முழுவதும் காயத்தோடு அந்த சிறுமி பிணமாக கிடந்திருக்கிறாள். ஆரம்பத்தில் போலீசார் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. 3 மாதங்களுக்குப்பிறகு காவல்துறை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தபிறகு, இது நாடு முழுவதும் பரபரப்பான செய்தியாக வந்தபோது போலீஸ் விசாரணையை தொடங்கியது. சஞ்சிராம் உள்பட 8 பேர் கோவிலில் வைத்து இந்த கொடூர செயலை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் மிகவேதனை என்னவென்றால், கைது செய்யப்பட்டவர்களுக்கு ஆதரவாக நடந்த பேரணியில் 2 பா.ஜ.க. மந்திரிகளும் கலந்துகொண்டதுதான். இப்போது அவர்கள் மந்திரிசபையில் இருந்தும் ராஜினாமா செய்துள்ளனர். நாடுமுழுவதும் கொந்தளித்துக்கொண்டிருந்தது. இந்த சம்பவம் பெரும்தீயாக எரிந்துகொண்டிருக்கின்ற நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தில் மைனர் பெண்ணை கற்பழித்ததாக ஒரு பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார். குஜராத் மாநிலம் சூரத்தில், கிரிக்கெட் ஸ்டேடியம் அருகிலுள்ள புதரில் 11 வயது சிறுமி கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறாள். ஆக, விவரம் அறியாத பிஞ்சுமலர்கள் இவ்வாறு கசக்கி எறியப்படும் சம்பவங்கள் அதிகமாக நடந்துகொண்டிருக்கிறது. காஷ்மீர் முதல்–மந்திரி இந்த வழக்கை விசாரிக்க விரைவுகோர்ட்டு அமைத்து 90 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்திருப்பது சற்று ஆறுதலை தருகிறது. மத்தியமந்திரி மேனகாகாந்தி, 12 வயதுக்கு குறைந்தவர்களை கற்பழிப்பவர்களுக்கு மரணதண்டனை விதிக்கும்வகையில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் தடுப்புசட்டத்தில் திருத்தம் கொண்டுவரவேண்டும் என்று கூறியிருக்கிறார். இதே கருத்து நாடுமுழுவதும் இப்போது எதிரொலித்திருக்கிறது. இந்தச்சம்பவத்தில் குற்றவாளிகள் யாரும் தப்பமுடியாது என்று பிரதமர் கூறியிருக்கிறார். தண்டனை மட்டும் இதுபோன்ற குற்றங்களை தடுத்துவிடுமா? அல்லது வேறு எந்தவகையான நடவடிக்கைகளை அரசும், சமுதாயமும் எடுக்கவேண்டும் என்பதை தீவிரமாக ஆராய்ந்து, இனி ஒருபோதும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காத நிலையை உருவாக்கவேண்டும்.

Thursday, April 19, 2018

32,000 அடி உயரத்தில் விமான இன்ஜின் வெடித்துச் சிதறியது: ஜன்னல் வழியாக தூக்கி எறியப்பட இருந்த பெண் பிற்பாடு மரணம் 
 

19.04.2018

சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று நியூயார்க் நகரிலிருந்து டல்லஸ் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது நடுவானில் அதன் இன்ஜின் வெடித்துச் சிதறியது. பறந்துவந்த இன்ஜின் பாகமொன்று ஜன்னல் கண்ணாடியை உடைத்து நொறுக்க ஜன்னல் சீட்டில் அமர்ந்திருந்த பெண்மணி விமானத்திலிருந்து வெளியே தூக்கி எறியப்பட இருந்தார்.

முதலில் தலை வெளியே இழுக்கப்பட பிறகு இடுப்புப் பகுதி வரை விமானத்தின் ஜன்னலுக்கு வெளியே இழுக்கப்பட்டுக் கொண்டிருந்தது.

ஆனால் பயணிகள் அவரை தூக்கி எறியாமல் உள்ளே இழுத்துப் பிடித்துக் காப்பாற்றினாலும் இன்ஜின் பாகமான உலோகத்துண்டு அவரைத் தாக்கியது. தலையில் கடுமையான அடி காரணமாக அவர் பிறகு உயிரிழந்தது பயணிகளிடையே கடும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்தப் பெண்மணியின் பெயர் ஜெனிபர் ரியோர்டன். இவர் வெல்ஸ் பார்கோ வங்கியின் மக்கள் தொடர்புத் துறையின் துணைத்தலைவராகப் பணியாற்றி வந்தார். இவர் தவிர 7 பேர் காயமடைந்தனர்.


பறந்து கொண்டிருந்த விமானத்தின் ஜன்னல் வழியாக வெளியே இழுக்கப்பட்டு காப்பாற்றப்பட்டு பிறகு இறந்து போன ஜெனிபர் ரியர்டன். - படம். | ஏ.பி.

சுமார் 149 பயணிகள் பயணித்த இந்த விமானம் போயிங் 737 ரக இரட்டை இன்ஜின் விமானமாகும். விபத்துக்குப் பிறகு பிராணவாயு மாஸ்க்குகளுடன் பயணிகள் காப்பாற்றப்பட அவசரமாக பிலடல்பியாவில் விமானம் தரையிறக்கப்பட்டது.

அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் பிலடெல்பியாவுக்கு குழு ஒன்றை அனுப்பி விசாரணை மேற்கொண்டு வருகிறது.

ஆனால் விசாரணை லேசுபட்டதல்ல என்று தெரிகிறது 12 முதல் 15 மாதங்கள் வரை ஆகலாம் என்று கூறப்படுகிறது.

இந்தக் களேபரத்திலும் பெண் விமானி மிகவும் நிதானமாக பதற்றமடையாமல் பயணிகளையும் பதற்றப்படுத்தாமல் செயல்பட்டது பலரது பாராட்டுகளையும் ஈர்த்துள்ளது.

இன்ஜின் வெடித்துச் சிதறி சப்தம் கேட்டு பயணிகள் மிரண்டு போய் பிரார்த்தனைகளில் இறங்கினர். ஒரு சில மனவலிமையுடையோர் மட்டும் ஒன்றும் இல்லை, பயப்பட வேண்டாம் என்று தைரியம் காட்டியதாக செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

NEWS TODAY 28.06.2026