Sunday, April 22, 2018

  12 ,வயதுக்குட்பட்ட, சிறுமியரை, பலாத்காரம், செய்பவருக்கு... தூக்கு!
22.04.2018  dinamalar

புதுடில்லி:நாடு முழுவதும், அதிர்ச்சி தரும் வகையில், பாலியல் கொடுமைகள் அரங்கேறி வரும் நிலையில், 12 வயதுக்கு உட்பட்ட சிறுமியரை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு, துாக்கு தண்டனை வழங்கும் அவசர சட்டத்துக்கு, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. பிரதமர், நரேந்திர மோடி தலைமையில், நேற்று நடைபெற்ற அவசர அமைச்சரவைக் கூட்டத்தில், இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டது.





ஜம்மு - காஷ்மீரின், கத்துவா மாவட்டத்தில், எட்டு வயது சிறுமி பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி, படுகொலை செய்யப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உ.பி.,யைச் சேர்ந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவமும், நாடு முழுவதும் அதிர்வுகளை ஏற்படுத்தியது.இதையடுத்து, பாலியல் கொடுமைகளில் இருந்து குழந்தை களை பாதுகாக்கும், 'பாக்ஸோ' சட்டத்தில் திருத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன் தினம், மத்திய அரசு,12 வயதுக்கு உட்பட்ட சிறுமி யரை,பாலியல் பலாத்காரம் செய்வோருக்கு, துாக்கு தண்டனை கிடைக்கும் வகையில் திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, தெரிவித்தது. இந்நிலையில், மோடி தலைமையில், அவசர அமைச்சரவை கூட்டம்,

நடந்தது. கூட்ட முடிவில், சிறுமியர் பாலியல் பலாத்கார வழக்குகளை விரைவாக விசாரணை நடத்தி முடிப்பது மற்றும் அதில் வழங்கப்படும் தண்டனை குறித்து, பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

அவை வருமாறு:பெண்களை பலாத்காரம் செய்பவர்களுக்கு வழங்கப்படும் ஏழு ஆண்டு சிறை தண்டனையை, 10 ஆண்டு அல்லது ஆயுள் தண்டனையாக மாற்ற முடிவு செய்யப்பட்டது. 16 வயதுக்குட்பட்ட சிறுமியர் பாலியல் பலாத்கார வழக்கில், தற்போது, 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டு வருகிறது.இது, 20 ஆண்டுகளாக உயர்த்தப் படும். அது, மேலும் நீட்டிக்கப்பட்டு, குற்றவாளி, வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்கும் வகையில் கடுமையாக்கப்படும்.

தவிர, 12 வயதுக்கு உட்பட்டசிறுமியர் பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட் டால், தற்போது, 20 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்படுகிறது. அது, ஆயுள் அல்லது துாக்கு தண்டனையாக உயர்த்தப்படும்.சிறுமியர் பாலியல் பலாத்கார வழக்குகளை, அதிகபட்சம் இரண்டு மாதங்களுக்குள் விசாரணை செய்து முடிக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டு உள்ளது. மேல் முறையீட்டு மனுக்களை, ஆறு மாதத்திற்குள் விசாரித்து முடிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த அவசர சட்டத்தில், ஜாமின் வழங்கு வதிலும் சில கட்டுப்பாடுகள் முன்வைக்கப் பட்டுள்ளன.இதன்படி, 16 வயதுக்குட்பட்ட சிறுமியை பலாத்காரம் செய்தவருக்கு, முன் ஜாமின் கிடையாது. குற்றஞ்சாட்டப்பட்டவர், ஜாமினுக்கு விண்ணப்பித்தால், அது பற்றி
 
முடிவெடுப்பதற்கு முன், அரசு வழக்கறிஞருக் கும், பாதிக்கப்பட்ட சிறுமி தரப்பில் ஒருவருக்கும், 'நோட்டீஸ்' அனுப்ப வேண்டும்.

இந்த சட்ட திருத்தம், ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்தின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட உள்ளது. விரைவில் இந்த மசோதாவை, பார்லி.,யில் தாக்கல் செய்ய தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இந்திய தண்டனை சட்டம், ஆதார சட்டம், குற்றவியல் நடை முறை சட்டம் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை தடை சட்டம் ஆகியவற்றில்திருத்தம் செய்யப்பட்டு, இந்த சட்ட திருத்தம் அமல்படுத்தப்பட உள்ளது.

சிறப்பு ஏற்பாடுகள்

சிறுமியர் பாலியல் வழக்கு விசாரணையை துரிதப்படுத்த, சிறப்பு ஏற்பாடுகளாக, அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட திட்டங்கள்:

* மாநில அரசு மற்றும் உயர் நீதிமன்றங்களுடன் கலந்து ஆலோசித்து, விரைவு நீதிமன்றங்கள் உருவாக்கப்படும். அரசு வழக்கறிஞர்கள் பதவிகள் புதிதாக உருவாக்கப்படும்

* பலாத்கார வழக்குகளுக்காகவே அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு சிறப்பு தடயவியல் கருவிகள் வழங்கப்படும்

* வழக்கை விரைவில் முடிக்கும் நோக்கில், தேவையான உதவிக்கு ஆட்கள் வழங்கப்படும்

* அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், பாலியல் பலாத்கார வழக்குகளுக்காகவே, சிறப்பு தடயவியல் பரிசோதனைக்கூடம் அமைக்கப்படும்

அதிர செய்த பாலியல் வழக்குகள்

ஜன., 2018: ஜம்மு - காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில், எட்டு வயது சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அவருக்கு உணவு வழங்கப்படாததால், பசி மயக்கத்தில் இருந்த சிறுமியை, பலமுறை பலாத்காரம் செய்து, தலையில் கல்லைப் போட்டு கொடியவர்கள் கொடூரமாக கொன்றனர்

ஜூன், 2017: உ.பி.,யில் உள்ள உன்னாவ் என்ற இடத்தில், 17 வயது சிறுமி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், பா.ஜ., - எம்.எல்.ஏ., குல்தீப் சிங் செங்கார், கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்டிச., 2012: தலைநகர், டில்லியில், 23 வயது மருத்துவ மாணவி, நிர்பயா, ஓடும் பஸ்சில் ஆறு பேரால், பலாத்காரம் செய்யப்பட்டு இறந்தது, உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அசத்தல்!  சுங்கச்சாவடிகளில் இனி நிற்க தேவையில்லை
ஐந்து நவீன வசதிகள் விரைவில் அறிமுகம்


dinamalar 22.04.2018

புதுடில்லி:தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளில், வாகனங்களை நிறுத்தி பணம் செலுத்தும் நடைமுறைக்கு பதிலாக, ஐந்து நவீன வசதிகளை, மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளது. மொபைல் போன், கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு மூலம், எளிதாக, சுங்கக் கட்டணத்தை செலுத்தும் நடைமுறை, விரைவில் அமலுக்கு வர உள்ளது.





நாடு முழுவதும், தேசிய நெடுஞ்சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகின்றன. இதையடுத்து, நீண்ட துார சாலை வழி பயணங் கள் எளிதாகி, நேரம் மிச்சமானது. ஆனால், வழியெங்கும் வரும் சுங்கச் சாவடிகளில் நிறுத்தி நிறுத்தி, சுங்கக் கட்டணம் செலுத்து வது, தங்கள் பயண நேரத்தை அதிகரிப்பதாக, பயணியர் தெரிவித்தனர்.

பண்டிகை மற்றும் விடுமுறை காலங்களில், சுங்கச்சாவடிகளில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பதால், கடுமை யான போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம், ஐந்து நவீன திட்டங்களை செயல்படுத்த உள்ளது.இவை, டில்லி - மும்பை, டில்லி - சண்டிகர், டில்லி - கோல்கட்டா மற்றும் பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலை களில், முதல்கட்டமாக பரிசோதிக்கப்பட உள்ளன.

'மொபைல் ஆப்'

இதற்காக, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், 'மொபைல் ஆப்' எனப்படும், மொபைல் போன் செயலியை, விரைவில் அறிமுகப்படுத்த

முடிவு செய்துள்ளது. தேசிய நெடுஞ் சாலையில் பயணம் செய்வோர், அந்த செயலியை, மொபைல் போனில் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.அதில், பெயர், வாகன எண் உட்பட, கேட்கப்படும் அனைத்து தகவல்களையும் பூர்த்தி செய்ய வேண்டும். தகவல்கள் உடனடியாக சரிபார்க்கப் பட்டு, அந்த செயலி செயல்படத் துவங்கும்.

இதில், இரு வகையாக சுங்கச்சாவடி கட்டணத்தை செலுத்த முடியும். முதலாவதாக, உங்கள்வங்கிக் கணக்கில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை, அந்த செயலியில் உள்ள, 'இ - வாலட்'டில் சேமித்து வைக்க வேண்டும்.

வெளியூர் பயணம் புறப்படுவதற்கு முன், நீங்கள் செல்லும் இடத்தை, அந்த செயலியில் குறிப்பிட் டால், வழியில் எத்தனை சுங்கச்சாவடிகள் உள்ளன, மொத்தம் செலுத்த வேண்டிய தொகை எவ்வளவு என, தெரிந்து விடும். அதை புறப்படு வதற்கு முன், மொத்தமாக செலுத்தி விடலாம்.ஒவ்வொரு சுங்கச்சாவடியை நெருங்கும் போதும், உங்கள் மொபைல் போனுக்கு, 'க்யூ.ஆர். கோட்' எனப்படும், சங்கேத குறியீடு அனுப்பப்படும்; அதை, சுங்கச் சாவடியில், 'ஸ்கேன்' செய்து, செல்ல வேண்டும்.

இரண்டாவது, இந்த செயலியை, யூ.பி.ஐ., எனப்படும், மின்னணு தொழில்நுட்பம் சார்ந்த பணப் பரிவர்த்த னைக்கான நடைமுறையுடன் இணைக்க வேண்டும். இதன் மூலம், வங்கிக் கணக்கில் இருந்து, சுங்கக் கட்டணம் தானாகவே கழித்துக் கொள்ளப்படும்.

தனி வரிசை

இது மட்டும் அல்லாமல், 'வை - பை' அல்லது, 'ப்ளூடூத்' தொழில்நுட்ப உதவியுடன், வங்கிக் கணக்கு அல்லது கிரெடிட் கார்டு மூலம், சுங்கக் கட்டணத்தைசெலுத்தும் முறையும் பரிசோதிக்கப் பட உள்ளது. இந்த வசதியை பெற விரும்பும் வாகனங்களுக்கு, தனி வரிசை ஒதுக்கப்படும்.இது தவிர, தைவான் போன்ற நாடுகளில் உள்ள தானியங்கி முறையும் பரிசோதிக்கப்பட உள்ளது. இதில், சுங்கச்சாவடிகளே இருக்காது.

நெடுஞ்சாலையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில்,

  தானியங்கி ஸ்கேனிங் கருவி வைக்கப்படும். அனைத்து வாகனங்களிலும், 'சென்சார்' பொருத்தப்படும்.ஸ்கேனிங் கருவியை வாகனம் கடந்து செல்லும் போது, 'சென்சார்' உதவியுடன், சுங்கக் கட்டணம், தானாகவே கழித்துக் கொள்ளப்படும். 'நம் ஊரில் இருக்கும் வாகன எண்ணிக்கையை ஒப்பிடும் போது, இது சற்று கடினமான முயற்சி' என, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

'தரமான சேவை பெற செலவு செய்யலாமே'

'நவீன முறையை செயல்படுத்த, அதிகம் செல விட வேண்டியிருக்கும். இவ்வளவு தொகை செலவு செய்வதற்கு, சுங்கக் கட்டண முறை யையே ரத்து செய்ய முடியாதா...' என, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர், நிதின் கட்கரியிடம், செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அவர் கூறியதாவது:

நெடுஞ்சாலைகளில், சுங்கக் கட்டணத்தை ஒழிக்கும் நடவடிக்கைக்கு வாய்ப்பே இல்லை. நாம் நிறைய நெடுஞ்சாலைகள் அமைக்க வேண்டிஉள்ளது; அதற்கு நிறைய முதலீடுகள் தேவைப்படுகின்றன.ஆனால், நம்மிடம் அதற்கான நிதி இல்லை.

நம்மிடம், ஐந்து லட்சம் கோடி ரூபாய்க்கான நெடுஞ்சாலைப் பணிகள் உள்ளன. ஆனால், நம் ஆண்டு பட்ஜெட் தொகை, 60 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே. தரமான சேவைகளுக்கு, மக்கள் பணம் கொடுத்து தான் ஆக வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாநில செய்திகள்

பெண் டாக்டர்கள் மகப்பேறு விடுப்பு எடுத்தாலும் மருத்துவ மேற்படிப்பில் சலுகை மதிப்பெண் வழங்க வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு



பெண் டாக்டர்கள் மகப்பேறு விடுப்பு எடுத்தாலும் மருத்துவ மேற்படிப்பில் சலுகை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

ஏப்ரல் 22, 2018, 03:30 AM

சென்னை,

மலைக்கிராமங்கள், தொலைதூரப் பகுதிகள் மற்றும் எளிதில் அணுக முடியாத பகுதிகளில் தொடர்ந்து 2 ஆண்டுகள் பணியாற்றிய அரசு டாக்டர்களுக்கு மருத்துவ மேற்படிப்பில் கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படும் எனவும், மகப்பேறு விடுப்பு, ஈட்டிய விடுப்பு எடுத்திருந்தால் கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட மாட்டாது என்றும் மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கொள்கை விளக்கக் குறிப்பேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை எதிர்த்து டாக்டர் அருணா உள்பட 6 அரசு பெண் டாக்டர்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதே கோரிக்கை தொடர்பாக வேறு சிலர் தொடர்ந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், ‘மகப்பேறு விடுப்பு காலத்தை பணிக்காலமாக கருதி, பாதிக்கப்பட்ட பெண் டாக்டர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்க வேண்டும்’ என்று உத்தரவிட்டிருந்தார்.

அருணா உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்யநாதன், ‘மகப்பேறு விடுப்பு எடுக்க பெண் டாக்டர்களுக்கு உரிமை உள்ளது. ஆனால், கூடுதல் மதிப்பெண் கேட்க முடியாது. நீதிபதிகள் இருவிதமான உத்தரவுகள் பிறப்பித்துள்ளதால், இந்த வழக்கை இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணைக்கு பரிந்துரை செய்கிறேன்’ என்று உத்தரவிட்டார்.

இதன்படி இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஹுலுவாடி ஜி.ரமேஷ், எம்.தண்டபாணி ஆகியோர் விசாரித்து, ‘பெண் ஊழியர்களையும், அவர்களின் குழந்தைகளையும் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் மகப்பேறு விடுப்பு அளிக்கப்படுகிறது. எனவே அந்த விடுப்பு காலத்தையும் பணிக்காலமாக கருத்தில் கொண்டு, மருத்துவ மேற்படிப்பிற்கான சலுகை மதிப்பெண்களை அரசு வழங்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.
மாநில செய்திகள்

நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்





நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை என்று மத்திய அமைச்சர் அஸ்வினி குமார் இன்று கூறியுள்ளார். #NEETExam

ஏப்ரல் 21, 2018, 03:49 PM

சென்னை,

இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் 2018-19-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வை (நீட் தேர்வு) சி.பி.எஸ்.இ. (மத்திய கல்வி வாரியம்) நடத்த இருக்கிறது.

வருகிற மே மாதம் 6-ந் தேதி ‘நீட்’ தேர்வு நடைபெற உள்ளது.
இதற்கான நுழைவுச்சீட்டு (ஹால் டிக்கெட்) கடந்த 18ந்தேதி வெளியானது.

இந்த நிலையில் மத்திய அமைச்சர் அஸ்வினி குமார் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை என்று கூறியுள்ளார். அவர், நாடு முழுவதும் ஒரே தேர்வு முறை மருத்துவ கல்விக்கு கடைப்பிடிக்கப்படுகிறது என்றார்.

தொடர்ந்து அவர், தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது பற்றி 2 மாதங்களில் தெளிவான முடிவு எட்டப்படும். எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது பற்றி தமிழக அரசுடன் பேசி வருகிறோம்.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதில் பல்வேறு சவால்கள் நீடித்து வருகின்றன. அனைத்து மக்களும் எளிதில் அணுக கூடிய ஓர் இடத்தினை தமிழக அரசு தேர்வு செய்து தந்தபின் உடனே அதுபற்றி பரிசீலனை மேற்கொள்ளப்படும் என கூறினார்.
தேசிய செய்திகள்

வங்கி கணக்குடன் ‘ஆதார்’ இணைப்பது கட்டாயம்




வங்கி கணக்குடன் ‘ஆதார்’ இணைப்பது கட்டாயம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

ஏப்ரல் 22, 2018, 05:30 AM

புதுடெல்லி,

வங்கி கணக்குகள், பரஸ்பர நிதி முதலீடுகள், பான் அட்டை, ஓய்வூதியம், சமூக நல திட்டங்கள், செல்போன் சேவை, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி, ஓட்டுனர் உரிமம், வாகனங்கள் பதிவு, சமையல் கியாஸ் மானியம் ஆகியவற்றுக்கு ஆதார் எண் இணைப்பு கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது.

ஆனால் இதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு தரப்பினரும் வழக்குகள் தொடுத்து, அவை நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில் வங்கி கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என பாரத ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது.

கே.ஒய்.சி. (‘உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள்’) என்னும் நடைமுறை விதியின் ஒரு பகுதியாக இதை ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது.

அதே நேரத்தில், இது சுப்ரீம் கோர்ட்டு வழங்க உள்ள இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

திருத்தப்பட்ட நடைமுறைப்படி வங்கியில் ‘பயோமெட்ரிக் ஐ.டி.’க்கு விண்ணப்பிக்கிறவர்களிடம் ஆதார் எண், பான் என்னும் வருமான வரி நிரந்தர கணக்கு எண் அல்லது படிவம் எண்.60 ஆகியவற்றை கேட்டுப்பெற வேண்டும் என்று வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது.

Saturday, April 21, 2018

``அதெல்லாம் சொல்லணும்னு அவசியமில்லை!" - விசாரணையில் வெடித்த நிர்மலா தேவி
vikatan.com

எஸ்.மகேஷ்

போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட நிர்மலா தேவி, பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் மூன்று அதிகாரிகளின் பெயரைக் குறிப்பிட்டுள்ளார். இதனால் அவர்களிடம் விசாரணை நடத்தவுள்ளதாக சி.பி.சி.ஐ.டி போலீஸார் தெரிவித்தனர்.

அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவியை ஐந்து நாள்கள் போலீஸ் காவலில் எடுத்த சி.பி.சி.ஐ.டி. போலீஸார், இரண்டாவது நாளாக அவரிடம் இன்று விசாரணை நடத்திவருகின்றனர். விசாரணையின்போது நிர்மலா தேவி சோர்வாகக் காணப்பட்டார். இதனால் அவருக்கு மருத்துவப் பரிசோதனை நடந்தது. மனஅழுத்தம், உடல் சோர்வு ஆகியவை காரணம் என்று மருத்துவர்கள் போலீஸாரிடம் கூறியதோடு அவரிடம் விசாரணையும் நடத்தலாம் என்றும் தெரிவித்தனர். இதையடுத்து அவரிடம் விசாரணையைப் போலீஸார் தொடங்கினர். காலையில் பெண் இன்ஸ்பெக்டர்கள் டீம் முதலில் விசாரித்தது. எஸ்.பி ராஜேஸ்வரி மேற்பார்வையில் நடந்த இந்த விசாரணையில் நிர்மலா தேவி சொன்ன தகவல்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டன.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``நிர்மலா தேவியிடம் உங்களால் எத்தனை மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற கேள்வியைக் கேட்டபோது அவரது முகம் மாறியது. `நான் மாணவிகளுக்கு நல்ல வழியைத்தான் காட்டினேன். ஆனால், என்னுடைய பேச்சை வேறுவிதமாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது' என்று ஆவேசமாகக் கூறினார். உடனே நாங்கள், நீங்கள் நல்ல விதமாகப் பேசினால், எதற்காக உங்கள்மீது மாணவிகள் புகார் கொடுத்துள்ளார்கள் என்று கேட்டோம். அதற்கு, 'செல்போன் உரையாடல் வெளியானது தொடங்கி என்னை சஸ்பெண்டு செய்தது வரை பெரிய சதி இருக்கிறது. நீதிமன்றத்தில் நிச்சயம் உண்மையைச் சொல்லுவேன்' என்று கூறினார்.

ஆனாலும், எங்களது கிடுக்குப்பிடி கேள்விகளுக்கு அவரால் பதில் சொல்ல முடியவில்லை. கல்லூரியில் பணியாற்றும் உங்களுக்கு எப்படி பல்கலைக்கழகத்தில் முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைத்தது என்று கேட்டதற்கு, அதையெல்லாம் உங்களிடம் சொல்ல வேண்டிய அவசியமில்லை' என்று கூறினார். இதனால், விசாரித்த பெண் இன்ஸ்பெக்டர் ஒருவர் கோபத்தில், `நீங்கள் எங்களிடமிருந்து எதையும் மறைக்க முடியாது. சம்பந்தப்பட்ட மாணவிகள், கல்லூரி நிர்வாகத்தினர், விசாரணை அறிக்கைகள் எல்லாம் உங்களுக்கு எதிராகவே இருக்கின்றன. எனவே, உண்மையைச் சொல்வதைத் தவிர வேறுவழியில்லை என்று விடாப்பிடியாக விசாரித்தோம். அதன் பிறகு நீண்ட நேரம் அமைதியாக இருந்த நிர்மலா தேவியிடம் பெண் போலீஸ் உயரதிகாரி விசாரித்தார். அப்போது, பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் மூன்று பெயரை மட்டும் நிர்மலா தேவி கூறினார். அவர்கள் மூன்று பேரும் முக்கிய பதவிகளில் இருப்பவர்கள். அவர்கள் சொன்னதால்தான் இப்படி செய்தேன் என்று தெரிவித்தார். அவர்களும் நிர்மலா தேவியுடன் வாட்ஸ் அப்பில் சாட்டிங் செய்துள்ளதற்கான ஆதாரங்கள் எங்களுக்குக் கிடைத்துள்ளன. இதனால் விரைவில் அவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்கவுள்ளோம்" என்றனர்.

யார் அவர்கள் என்று சி.பி.சி.ஐ.டி போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு, "அவர்கள் குறித்த விவரங்களை இப்போதைக்குச் வெளியில் சொல்ல முடியாது. ஏனெனில், அது விசாரணையைப் பாதிக்கும். ஏற்கெனவே பல்கலைக்கழகத்தில் யாரெல்லாம் நிர்மலா தேவியுடன் நட்பில் இருந்தார்கள் என்ற தகவல் சேகரிக்கப்பட்டுள்ளது. அந்தப் பட்டியலில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்த மேலிடத்தின் கிரீன் சிக்னலுக்காகக் காத்திருக்கிறோம். உயரதிகாரிகளிடம் ஆலோசித்துவிட்டு அவர்களிடம் விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். இந்த வழக்கில் பல்கலைக்கழகத்தைத் தவிர, உயர் கல்வித்துறையில் உள்ள சிலர் மீதும் எங்களுக்குச் சந்தேகம் இருக்கிறது. நிர்மலா தேவி சொன்ன பல்கலைக்கழக மூன்று பேரிடம் விசாரிக்கும்போது அவர்கள் யார் என்று எல்லோருக்கும் தெரியும்" என்றார்.

பல்கலைக்கழகத்தில் உள்ளவர்களிடம் கேட்ட போது, "நிர்மலா தேவி பல்கலைக்கழகத்துக்கு வந்தால், கடவுளின் பெயரைக்கொண்ட ஒரு அதிகாரியைச் சந்திப்பதுண்டு. அடுத்து, துணைவேந்தர் அலுவலகத்தில் இருக்கும் ஸமார்ட் ஆபீஸருடன் பேசுவார். பிறகு, பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அலுவலகத்தில் பணியாற்றும் பெண் அதிகாரியுடன் டீ சாப்பிடுவார். இதுதவிர கணிதத்துறைக்கும் தொலைதூரக் கல்வி இயக்குநரகத்துக்கும் செல்வார். இங்குதான் நீங்கள் சொல்லும் அடையாளங்களுடன் கூடியவர்கள் பணியாற்றுகின்றனர்" என்றனர்.
மாட்சிமை தாங்கிய திரு.எஸ்.வி.சேகர், திரு.ஹெச்.ராஜா அவர்களுக்கு... பெண் நிருபர்கள் சார்பாக ஒரு கடிதம்!
vikatan.com

நமது நிருபர்

திரு. ஹெச். ராஜா, திரு. எஸ்.வி.சேகர் அவர்களுக்கு... வணக்கம்.

சமீபத்தில் தமிழகத்தை உலுக்கிய ஒரு முக்கியப் பிரச்னையில், கருத்துக் கூறுவதாக நினைத்து நீங்கள் இருவரும் வெளிப்படுத்திய வார்த்தைகள், மிக மலிவானவை. கண்டனத்துக்கு உரியவை. சட்ட தண்டனைக்குரியவை. எந்தவொரு பிரச்னையென்றாலும், உடனே பெண்களைக் குறிவைத்துப் பேசும், அவர்களை 'கேரக்டர் அசாஸினேஷன்' செய்யும், வக்கிரர்காரர்கள் ஏந்தும் அந்த ஆயுதத்தைத்தான் நீங்கள் கையிலெடுத்திருக்கிறீர்கள். இதன் மூலம், உங்கள் 'தரத்தை' நீங்களே வெட்டவெளிச்சமாக்கி இருக்கிறீர்கள். இன்று மாநிலமே உங்கள் மீது வெறுப்பு, அருவருப்பு கொண்டுள்ளது.



ஒரு கல்லூரிப் பேராசிரியர், தன் மாணவிகளை உயரதிகாரிகளுக்கு இரையாக்க முனையும் பிரச்னை விஸ்வரூபம் எடுத்து, மாநிலத்தின் ஆளுநரைச் சுற்றிச் சுழன்று நிற்கிறது. அது குறித்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில், ஆளுநர், ஒரு பெண் பத்திரிகையாளரைக் கன்னத்தில் தட்டுகிறார். பின்னர் அவரே, மன்னிப்பும் கேட்கிறார். இதற்கிடையில், அவருக்கு ஆதரவாகப் பேசுவதாக நினைத்து நீங்கள் உளறிக் கொட்டியிருக்கும் வார்த்தைகள், உங்கள் மனதின் அழுக்குகள்.

ஹெச்.ராஜா அவர்களே, இந்தப் பிரச்னையில் சம்பந்தமே இல்லாமல் ஒரு பெண் அரசியல்வாதி குறித்து நீங்கள் உங்கள் சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டிருக்கும் வார்த்தைகளில், யாரை இழிவுபடுத்திவிட்டதாக நினைத்துக் களிப்புற்றீர்கள்? உண்மையில், அந்த வார்த்தைகளில் இழிவுபட்டிருப்பது, உங்களுடைய அகம்தான். சம்மந்தப்பட்டவரின் பொது வாழ்க்கை குறித்து நீங்கள் விமர்சனங்கள் வைத்திருந்தால், அது ஒரு அரசியல்வாதியின் கருத்தாக, வாதமாக இருந்திருக்கக்கூடும். ஆனால் பெண்மையை, தாய்மையைக் குறிவைத்த அந்த அழுகிப்போன எழுத்துகளில் வடிந்தது, உங்கள் மனதின் சீழ். தெருச்சண்டைகளில், ஒருவரை இகழ பெண்களைச் சுட்டும் கெட்ட வார்த்தைகளைச் சட்டென உமிழும் தரம்கெட்டவர்களின் செயல்தான், இந்தப் பதிவின் அடிப்படை நிறம். ஒரு பொதுவெளியில் உங்களின் அந்த மனதைப் பிளந்து காட்டியிருக்கிறீர்கள். அறிந்துகொண்டோம்.

அடுத்ததாக, திரு. எஸ்.வி. சேகர் அவர்கள்.

இதே ஆளுநர் பிரச்னை. ஆளுநர் சம்பந்தப்பட்ட பெண் பத்திரிகையாளருக்கு மன்னிப்பு அறிக்கை விடுகிறார். உங்களுக்கு கோபம் தலைக்கேறி, உங்களின் அந்த 'நியாயம்' வெளிப்படுகிறது, உங்கள் சமூக வலைதளத்தில் நீங்கள் பகிர்ந்ததொரு பதிவின் மூலமாக. 'பெண் பத்திரிகையாளர்கள் தங்களின் உயர் அதிகாரிகளை, நிறுவனத் தலைமைகளை 'திருப்தி' செய்து வாய்ப்புப் பெற்றவர்களே' என்கிறீர்கள். இதன் மூலம் நீங்கள் சொல்ல வருவது, 'இப்படிப்பட்டவதானே நீ? உன்னை கவர்னர் கன்னத்தில் தட்டினதால் என்ன?' என்பதைத்தானே? மிகக் கடுமையான கண்டனங்கள்.

வார்த்தைக்கு வார்த்தை வக்கிரமும், ஆணவமும் கோத்த அந்தப் பதிவைப் பகிர, என்ன தைரியம் உங்களுக்கு என்ற குரல்கள் வலுக்க ஆரம்பித்தவுடன், அவற்றை எதிர்கொள்ளத் திராணியற்று, 'அது நண்பரின் போஸ்ட், படிக்காமல் ஷேர் செய்துவிட்டேன்' என்கிறீர்கள். எனில் அந்தப் பதிவுக்கு, 'ஒரு பல்கலைக்கழகமும், ஆளுநரும், கன்னியின் கன்னமும்' என அருவருப்பான தலைப்பை நீங்கள் கொடுத்துப் பகிர்ந்திருந்ததும், அதைப் படிக்காமலேயேதானா? கொதித்தெழுந்த பத்திரிகைத் தோழமைகள் வீதிகளில் போராட்டம் நடத்துகிறார்கள். நீங்கள், ஏசி அறைக்குள் இருந்தபடி அதிகார மையங்களுடன் ஆலோசனையில் இருக்கிறீர்கள். தோழர் பாலபாரதி சொல்வதுபோல, வருத்தம், மன்னிப்பு எதுவாக இருந்தாலும் நீதிமன்றத்துக்கு வந்து கேளுங்கள் நீங்கள்.

பெண் பத்திரிகையாளர்களின் பணிவாழ்வை அவ்வளவு கொச்சையாகச் சுட்டும் நீங்கள், இந்தத் துறையில் ஆர்வமும் வியர்வையுமாக ஓடிக்கொண்டிருக்கும் எங்களின் உழைப்பைப் பற்றி அறிவீர்களா? ஒவ்வொரு செய்தி சேகரிப்புக்கும், நாங்கள் தரும் விடாமுயற்சி எவ்வளவு தெரியுமா? கால நேரம் பார்க்காமல் ஓர் அசைமென்ட்டை முடித்துவிட்டு வீடு திரும்பும் பெண்ணின் அயற்சி கலந்த மனநிறைவை உங்களால் உணரமுடியுமா என்ன? மாநகரங்களில், பிரஸ் மீட்களில், 50 ஆண் பத்திரிகையாளர்களுக்கு நடுவே 10 பெண் பத்திரிகையாளர்கள் சிறுபான்மையாக நின்றாலும், அது எங்களுக்கு நம்பிக்கை தரும் எண்ணிக்கையே. சிறுநகரங்களில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முதல் அரசு மருத்துவமனை பிணவறை வரை, 20 ஆண் பத்திரிகையாளர்களுக்கு மத்தியில் ஒற்றைப் பெண்ணாக ஓடி உழைத்துக்கொண்டிருக்கும் சகோதரிகளின் உழைப்பு, எவ்வளவு தீரம் தெரியுமா? ஒரு எளிமையான பின்புலத்தில் இருந்து வந்து, தன் மாவட்டத்துச் செய்திகளை உலகுக்குக் கொடுத்துக்கொண்டிருக்கும் அந்தப் பெண்களின் வலிமை வணக்கத்துக்குரியது.

பத்திரிகைத் துறைக்கு தங்கள் பெண்களை வேலைக்கு அனுப்பியிருக்கும் ஆயிரமாயிரம் வீடுகளில், உங்கள் வார்த்தைகள் என்ன மாதிரியான வலியைக் கொடுக்கும் என்பதை ஒரு கணம் சிந்தித்தீர்களா? பெண் செய்தியாளரிடம், 'நீங்க அழகா இருக்கீங்க' என்று சொல்லும் அமைச்சர், பெண் செய்தியாளரின் கன்னத்தைத் தட்டும் கவர்னர், 'பெண் பத்திரிகையாளர்கள் எல்லாம் 'அப்படித்தான்' ' என்ற உங்களின் 'ஆய்வறிக்கை'... இதையெல்லாம் பார்த்த எங்கள் அப்பாவும், அம்மாவும், சகோதரர்களும், சகோதரிகளும், கணவரும், மகன்களும், மகள்களும், நட்பும் கொண்டிருக்கும் கோபக் கனலை வெப்பம் குறையாமல் எடுத்து வைத்திருக்கிறார்கள், வாக்குப் பெட்டியில் சேர்க்க. வரும் ஒரு நாள். தேர்தல் திருநாள்.



பெண் பத்திரிகையாளர் ஒருவர், உங்கள் அரசியல் சார்புக்கு எதிரான ஒரு கருத்தைக் கூறியதால், பத்திரிகை துறையே கேவலமானது என்று வாய்மொழிந்திருக்கிறீர்கள். நாளை மருத்துவத் துறை, சட்டத் துறை, காவல்துறை சேர்ந்த ஒரு பெண், உங்கள் அரசியல் நிலைப்பாட்டுக்கு எதிராக ஒரு கருத்தைக் கூறினால், 'அந்த டிப்பார்ட்மென்ட்ல இருக்கிற பொம்பளைங்களே இப்படித்தான்' என்பதைத்தான் இனி உங்களிடமிருந்து எதிர்பார்க்க முடியும். இதுதான் நீங்கள் செய்யும் அரசியலா?

களத்தில் உடன் நிற்பது முதல் வழிகாட்டுவதுவரை, பணி வாழ்வில் எங்களுக்குப் பலமாகவும், அரணாகவும் இருக்கும் சக ஊடக நண்பர்களையும், சீனியர்களையும், எங்கள் திறமைக்கான அங்கீகாரம் அளிக்கும் நிறுவனத் தலைமைகளையும் சேர்த்தே நீங்கள் கொச்சைப்படுத்தியிருக்கிறீர்கள். கண்டிக்கிறோம், எச்சரிக்கிறோம்.

செய்திகளை முந்தித் தருவது, பிழையற்று, தெளிவாக வழங்குவது உள்ளிட்ட பணித் தேவைகளுடன், எங்கள் செய்தியின் மூலம் ஓர் அவலம் மாறிவிட வேண்டும், சம்பந்தப்பட்ட மக்கள் நன்மை பெற்றுவிட வேண்டும், ஒரு சின்ன மாற்றம் நடந்துவிட வேண்டும் என்ற பணி அறத்தையும் சேர்த்தே எடுத்துச்சென்று கொண்டிருக்கிறோம். கரடு, முரடான பாதைகளிலும், கொட்டும் மழையிலும், கொளுத்தும் வெயிலிலும், உடல் நடுங்கும் உறை பனியிலும் நாள் முழுக்க வேலைபார்க்கிறோம். மாதவிடாய் கால வலியுடனும், கர்ப்பகால சோர்வுடனும், பால்கட்டும் மாருடனும், மெனோபாஸ் அவஸ்தையுடனும் என, இந்த உலகத்தின் ஒவ்வொரு நிகழ்வையும் இப்படி எங்கள் பாடுகளினூடேதான் நாங்கள் செய்தியாக்கி உலகுக்குத் தருகிறோம். அந்த உழைப்புக்கான பலனை, அங்கீகாரத்தைப் பெறுகிறோம்.

ஆனால், நாங்கள் வாய்ப்புப் பெறுவதற்கான 'ஃபார்முலா' ஆக நீங்கள் சொல்லியிருக்கும் விஷயங்கள், எவ்வளவு விஷமானவை? இன்று 40 வயதுகளில் இருக்கும் பெண் பத்திரிகையாளர் ஒருவர், தன் 20 வயதுகளில் இந்தத் துறைக்கு வந்தபோது அவர் எத்தனை பிரச்னைகளைக் கண்டிருப்பார்..? எழுத்து, உழைப்பு, அனுபவம், அறிவு என்ற துடுப்புகள்கொண்டு காலம் கடந்து, இன்று இந்தத் துறையில் தனக்கென ஓர் இடம் உருவாக்கிக்கொண்டிருப்பார்..? நீங்கள் சொல்லியிருக்கும் 'ஃபார்முலா' அந்த சீனியர் ஜர்னலிஸ்ட் பெண்களின் அர்ப்பணிப்பை எல்லாம் எவ்வளவு வக்கிரத்துடன் புறந்தள்ளுகிறது..? நீங்கள் சொல்லியிருக்கும் 'ஃபார்முலா' இன்று 20 வயதுகளில் இந்தத் துறைக்கு வந்து உற்சாகத்துடன் ஓடிக்கொண்டிருக்கும் தங்கைகளை எல்லாம் எவ்வளவு ஆணவத்துடன் பார்க்கிறது?

சுட்டாலும் வெண்மை தரும் சங்கு. நாங்கள் சங்கு..!

NEWS TODAY 29.06.2026