Sunday, April 22, 2018


ஆங்கில​ம் அறிவோமே 208: நான் ‘பாஸ்’ ஆயிட்டேன்!

Published : 10 Apr 2018 11:41 IST


ஜி.எஸ்.எஸ்.




கேட்டாரே ஒரு கேள்வி

Kaarma என்றால் என்ன? அது ஏதாவது லத்தீன் வார்த்தையா?

எனக்குத் தெரிந்து kaarma என்று ஒரு வார்த்தை கிடையாது. ஒருவேளை அது karma-வாக இருக்கலாம். அதாவது கர்மா. சம்ஸ்கிருத மொழியிலிருந்து ஆங்கிலத்துக்குச் சென்ற வார்த்தை இது. “முற்பகல் செய்தால் பிற்பகல் விளையும்”. அந்த முன்வினைதான் கர்மா.

“Bottom என்பதற்குக் கீழே என்பதைத் தவிர வேறு அர்த்தம் இருக்கிறதா?” என்று கேட்டிருக்கிறார் வாசகர் ஒருவர்.

Bottom என்பது ஒன்றின் மிகக் கீழ்ப்பகுதி.

முதுகுக்குக் கீழ் உள்ள பகுதியையும் ​bottom என்று அழைப்பார்கள்.

Bottom என்பது verb ஆகவும் பயன்படும். Those submarines cannot bottom என்றால் அவற்றால் கடலின் தரைப் பகுதியைத் தொட முடியாது என்று பொருள்.

Always Eat An Apple Says A Nurse என்பது எதற்கான Mnemonics என்பது தெரியுமா?

ஏழு கண்டங்களுக்கான முதல் எழுத்துகளை இவை நினைவுபடுத்துகின்றன. அதாவது Asia, Europe, Australia, Africa, South America, Antartica, North America.

Latitude, Longtitude ஆகிய இரண்டு வார்த்தைகளில் எது அட்சரேகை, எது தீர்க்கரேகை என்பதில் சில மாணவர்களுக்குக் குழப்பம் ஏற்படலாம் (இரண்டுமே கற்பனைக் கோடுகள்). Latitude என்பது கிழக்கு மேற்காகச் செல்வது. அதாவது அட்சரேகை. Longtitude என்பது வடக்கு, தெற்காகச் செல்வது அதாவது தீர்க்க ரேகை.

Latitude is Flatitude என்ற ஒரு வாக்கியத்தை நினைவில் கொள்ளுங்கள். Flat என்றால் நெடுஞ்சாண்கிடையாக என்பது உங்களுக்குத் தெரியும். அதாவது படுத்த வாக்கில். இப்போது கிழக்கு மேற்காகச் செல்வதுதான் Latitude என்பது மனதில் பதிந்து விடும். இன்னொன்றுதான் (மேல் கீழாக அதாவது வடக்கு தெற்காகச் செல்லும்) Longtitude.

இப்படித் தொடர்புடைய பல்வேறு வார்த்தைகளை நினைவுகொள்வதற்கான உத்திதான் Mnemonics.

Life Insurance, Life Assurance இரண்டுக்கும் என்ன வேறுபாடு?

ஆயுள் காப்பீடு எனப்படும் Life Insurance குறித்து அறிந்திருப்பீர்கள். நீங்கள் மாதா மாதம் அளிக்கும் தொகை குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு உங்கள் கைக்கு வந்து சேரும். இடையில் இறப்பு நேர்ந்தால் இறுதியில் கிடைக்கும் தொகை அப்போதே உங்கள் வாரிசுதாரருக்கு அளிக்கப்படும்.

Life Assurance என்றால் உங்கள் வாழ்க்கைக்கோ ஆயுளுக்கோ உறுதிமொழி அளிக்கப்படுகிறது என்பதல்ல. குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு உங்களுக்கு முதிர்வுத் தொகை வந்து சேரும். இதற்குத்தான் Assurance. மிகப் பெரும்பாலும் Life Assurance Policy-க்களில் இறந்துவிட்டால் எந்த அதிகப்படி தொகையையும் கொடுக்க மாட்டார்கள்.

Pass on, pass out, pass up ஆகிய மூன்றுக்கும் என்ன வேறுபாடு?

pass on என்பதற்கு இருவித அர்த்தங்கள் உண்டு. இறந்துபோவ​தை அப்படிக் குறிப்பிடுவார்கள். His wife passed on three years ago. ஒன்றை மற்றவருக்கு அனுப்புவதையும் அப்படிக் குறிப்பிடுவார்கள். Please pass the message on to all.

Pass out என்றால் நினைவிழத்தலைக் குறிப்பிடுவார்கள். My brother has made a complete recovery and remembers everything that happened before he passed out.

Pass up என்றால் ஒரு வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளத் தவறுதல். I shall never forgive myself if I passed up an opportunity like this.

Earth எனும் வார்த்தைக்கு எதிர்ச்சொல் unearth என்பதா?

நண்பரே, earth என்பது noun ஆகப் பயன்படுத்தப்படும்போது அது பூமியைக் குறிக்கிறது.

Unearth என்றால் புதைக்கப்பட்டிருந்த ஒன்றை வெளியில் எடுப்பது. ஆனால் (மீண்டும்) புதைப்பதை ‘earth’ என்ற வார்த்தையின் மூலம் பயன்படுத்தமாட்டார்கள். எனவே earth என்பதை இந்தப் பொருளில் பயன்படுத்தப்படுவதில்லை.

“Either என்றால் இரண்டில் ஒன்று என்றுதானே பொருள்? I want either coffee or tea என்றால் அப்படித்தான் அர்த்தமாகிறது. ஆனால், They planted roses on either side of the road என்று ஒரு நாளிதழில் படித்தேன். ஆனால், அந்தச் சாலையில் இருபுறங்களிலும் ரோஜாச் செடிகளை வைத்திருந்தார்கள். நாளிதழில் தவறாகக் குறிப்பிட்டார்களா?’’.

இந்த இடத்தில் either என்பது each என்ற வார்த்தைபோலப் பயன்படுகிறது. Each side எனும்போது இரு பக்கங்களிலும் என்ற அர்த்தமாகிறது.

இப்படி either என்ற வார்த்தை இரண்டில் ஒன்று என்பதற்குப் பதிலாக இரண்டும் என்ற பொருளில் சில நேரம் பயன்படுத்தப்படும். பெரும்பாலும் side, end, extreme போன்ற வார்த்தைகளுக்கு முன்பு either இடம்பெறும்போது இந்தப் பொருளில் பயன்படுத்தப்படுகிறது.

Domain என்ற வார்த்தையை அடிக்கடி கேள்விப்படுகிறேன். இதன் அர்த்தம்தான் என்ன?

நண்பரே domain என்பது ஒருவர் தன் பிடிக்குள் அல்லது கட்டுக்குள் வைத்திருக்கும் ஒரு பகுதி. The French domains என்றால் பிரெஞ்சுக்காரர்களின் வசமுள்ள பகுதி என்று பொருள். He treated the business as his private domain என்றால் அந்த வியாபாரத்தை அவர் தனது கைப்பிடிக்குள் வைத்திருப்பதாகக் கருதுகிறார் என்று பொருள்.

Public domain என்றால் அதிலுள்ள தகவல்களை யார் வேண்டுமானாலும் தாராளமாகப் பார்க்கலாம் என்று அர்த்தம்.

கணினிப் பயன்பா​ட்டில் ஒரே மாதிரியான பிற்சேர்க்கை உள்ள வலைத்தளங்களின் தொகுப்பை இப்படிக் குறிப்பிடுவார்கள்.

.com, .in, .org போன்றவை சில எடுத்துக்காட்டுகள்.


போட்டியில் கேட்டுவிட்டால்?

If you are________, you will be deported to the island; that is the rule of this land.

a) Upset

b) Stupid

c) Innocent

d) Troublesome

e) Charming

எப்படி இருந்தால் ஒருவரை ஒரு தீவுக்குக் கடத்துவார்கள்? சோக வயப்பட்டவரையா? முட்டாளையா? அப்பாவியையா? இடையூறு விளைவித்துக்கொண்டிருப்பவரையா? அழகானவரையா?

முட்டாளான ஒரு சர்வாதிகாரி இவர்களில் யாருக்கு வேண்டுமானாலும் அப்படி ஒரு தண்டனையைக் கொடுக்கக் கூடும். ஆனால், அப்படியில்லாத ஒரு ஆட்சியாளர் இடையூறு விளைவிப்பவருக்குத்தான் தண்டனை கொடுப்பார். எனவே troublesome என்ற வார்த்தையே இங்குப் பொருந்துகிறது.

If you are troublesome, you will be deported to the island; that is the rule of this land.

சிப்ஸ்

​திசை திருப்புவது என்பதை ஆங்கிலத்தில் எப்படிக் குறிப்பிடலாம்?

Digress

Cook யார்? Chef யார்?

சமையல்காரர் cook. ஒரு ஹோட்டல் அல்லது ரெஸ்டாரெண்ட்டில் பணிபுரியும் தொழிற் முறை சமையல் கலைஞர் Chef.

​Famine என்பதற்கும், drought என்பதற்கும் என்ன வித்தியாசம்?

Famine என்பது உணவுப் பஞ்சம், மழையின்மையால் ஏற்படும் தண்ணீர் பஞ்சம், drought.

தொடர்புக்கு - aruncharanya@gmail.com
பயனுள்ள விடுமுறை: கணினி கற்க எங்கே போகலாம்?

Published : 17 Apr 2018 10:51 IST

எஸ்.எஸ்.லெனின்



இன்று வீட்டுக்கொரு மரம் இருக்கிறதோ, இல்லையோ வீட்டுக்கொரு கணினி வந்துவிட்டது. அதிலும் இணைய வசதி இருந்தால் பலவற்றை இருந்த இடத்திலேயே கற்றுக்கொள்ளலாம். ஆனாலும், சிலவற்றை முறையாக கற்றுக்கொள்ள பயிலரங்குகளுக்கோ, கணினி மையங்களுக்கோ செல்ல வேண்டும்.

‘ஆப்’ டெவலப்பர் ஆகலாம்

ஆண்ட்ராய்டு இயங்கு தளத்தின் அடிப்படையிலான செயலிகளை உருவாக்குவது தற்போது வளர்ந்து வரும் துறையாகவும், இளைஞர்களுக்கு ஆர்வமூட்டக் கூடியதாகவும் உள்ளது. ஜாவா புரோகிராமிங், அப்ளிகேஷன் டெவலப்மெண்ட் தொடர்பான தகுதிப் படிப்புகளை முடித்தவர்கள், ஆண்ட்ராய்டு செயலிகள் உருவாக்கத்தைச் சிறப்பாக மேற்கொள்ள முடியும். இந்த வரிசையில் ஐஃபோன், பிளாக்பெர்ரி, விண்டோஸ் என இயங்கு தளங்களுக்கு ஏற்றவாறு கூடுதல் செயலிகள் உருவாக்கத்தையும் கற்றுக்கொள்ளலாம். ஓரிரு மாதங்களுக்கு அடிப்படைகளை மட்டும் பயிற்சி மையத்தில் கற்றுக்கொண்டால், கூடுதல் திறன்களை அவற்றுக்கென இருக்கும் இலவச இணையதளங்கள் மூலமாகவே பெற முடியும்.

இணையான இன்னொரு படிப்பு

பிளஸ் டூ தேர்வு எழுதியிருக்கும் மாணவர்கள் அடுத்து மேற்கொள்ளவிருக்கும் உயர்கல்விக்கு உதவும் வகையில் பட்டயப் படிப்புகளில் சேரலாம். உதாரணத்துக்கு, பொறியியல், கணினி அறிவியல் பட்டப் படிப்புகள் சேர விரும்பும் மாணவர்கள் அந்தப் பாடங்களுக்கு உதவும் இணையான மென்பொருள் திறன்களை உள்ளடக்கிய பட்டயப் படிப்பில் சேரலாம். கல்லூரியில் பயிலும் பாடங்கள் தொடர்பான கூடுதல் செய்முறை அனுபவத்தை இந்த பட்டயப் படிப்புகள் வழங்குவதாக அமைவது அவசியம். இவை ஓராண்டு முதல் 3 ஆண்டுகள்வரை வழங்கப்படுகின்றன. சில கல்லூரிகள் தமது வளாகத்திலேயே மாணவர்கள் மேற்கொள்ளும் பட்டப்படிப்புக்கு இணையான மற்றுமொரு பட்டயம் அல்லது பட்டப் படிப்பை வழங்குகின்றன. எனவே அவை குறித்தும் தெளிவாக விசாரித்துச் சேரலாம்.

வெப் டிசைனிங், கம்ப்யூட்டர் எய்டட் டிசைன் அண்ட் டிராயிங், பல்வேறு புரோகிராமிங் லாங்குவேஜ் படிப்புகள் போன்றவற்றில் பொறியியல், அறிவியல் மேற்படிப்புகளில் ஆர்வமுள்ளவர்கள் சேரலாம். மேலும் தற்போது வரவேற்பைப் பெற்று வரும் Data Mining and Analysis, Cyber Security and Ethical Hacking, RDBMS, Digital Marketing தொடர்பான சான்றிதழ் அல்லது டிப்ளமா பயிற்சிகளில் சேரலாம்.

இன்றைய தேதியில் ‘கம்ப்யூட்டர் கோர்ஸ்’ என்று சொன்னாலே அனிமேஷன், மல்டிமீடியா, கிராஃபிக்ஸ் டிசைனிங் தொடர்பான படிப்புகளே மாணவர்களின் உடனடி தேர்வாக இருக்கின்றன. கணினி விளையாட்டுகளும் திரைப்படங்களும் இந்த ஆர்வத்தை மாணவர்களிடம் விதைத்திருக்கின்றன.

இவை தவிர அக்கவுண்டிங் சார்ந்த கணினிப் பயிற்சிகள் மேல்நிலை வகுப்பில் வணிகவியல், கணக்கு பதிவியல் படித்த மாணவர்களுக்குத் தொலைநோக்கில் உதவிகரமாக அமையும்.

எங்கே சேரலாம்?

தனியார் பயிற்சி மையங்கள் பல்வேறு வகையிலான கணினி படிப்புகளைக் கட்டண அடிப்படையில் வழங்குகின்றன. இவற்றில் மாணவரின் உயர்கல்வி ஆர்வம், நிதி ஒதுக்கீடு, பயிற்சிக்கான கால அளவு, பயிற்சி மையத்தின் கட்டணம் ஆகியவற்றைப் பொறுத்துப் பெற்றோர் உதவியுடன் கலந்தாலோசித்து ஒரு தீர்மானத்துக்கு வரலாம்.

கணினி வசதிகள், நூல்கள், திறமையான பயிற்றுநர் ஆகியவற்றைப் பற்றி விசாரித்தபின் மையத்தில் இணைவது நல்லது. கோடை வெயிலில் அதிகத் தொலைவுக்கு அலைவதும், பயணங்கள் மேற்கொள்வதும் உயர்நிலை வகுப்பு மாணவர்களுக்கு உகந்ததல்ல என்பதால், உங்கள் பகுதியில் இருக்கும் பல்வேறு பயிற்சி நிலையங்களை அணுகி பாடத் திட்டங்கள், கட்டண விகிதங்களை ஒப்பிட்டு முடிவுக்கு வரலாம். சில பயிற்சி மையங்கள் பெயருக்கு நுழைவுத் தேர்வுகளை நடத்தியும், மாணவர்களின் தேர்வு மதிப்பெண்கள் மற்றும் சமூக அடிப்படையிலும் சலுகைகள் அளிப்பார்கள். பெரும்பாலும் சேர்க்கையை அதிகரிப்பதற்கான அறிவிப்புகள் என்றபோதும், அவை பயனுள்ளதாக இருந்தால் பயன்படுத்திக்கொள்ளலாம்.

சில கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் அரசின் நிதி உதவியுடன் பயிற்சி மையங்களை நடத்திவருகின்றன. அவற்றின் சார்பில் வழங்கப்படும் கணினி சார்ந்த இலவசப் பயிற்சிகளையும் விசாரித்து சேர்ந்து பயனடையலாம்.

ஆங்கிலம் அறிவோமே 209: தொட்டதெல்லாம் பொன் ஆனால் மகிழ்ச்சியா?

Published : 17 Apr 2018 11:02 IST


ஜி.எஸ்.எஸ்.






கேட்டாரே ஒரு கேள்வி

நிறைய மதிப்பெண் எடுத்தால் ‘good marks’ என்கிறோம். குறைவான மதிப்பெண் எடுத்தால் ‘bad marks’ என்று கூறுவதில்லையே. ‘Poor marks’ என்றுதானே கூறுகிறோம். இதற்கு ஏதாவது பின்னணி உண்டா?

வீட்டிலுள்ளவர்கள் வீட்டைவிட்டுக் கிளம்பிவிட்டார்கள் என்றால் அதை எப்படிக் குறிப்பிடலாம்?

They are going out என்றா அல்லது They have gone out என்றா?

இப்போது அவர்கள் கிளம்பிக்கொண்டிருக்கிறார்கள் என்றால் They are going out. இது present continuous tense.

இப்போதுதான் கிளம்பிச் சென்றார்கள் என்றால் They have gone out. அதாவது அவர்கள் வீட்டில் இப்போது இல்லை. இது present perfect tense.

Present Perfect Tense பயன்பாடு குறித்து இன்னும் கொஞ்சம் பார்ப்போம். கடந்த காலத்தில் நடைபெற்ற ஒரு செயல்பாட்டின் விளைவு இன்னமும் தொடர்கிறது என்றால் Present Perfect Tense-ஐப் பயன்படுத்துவது பொருத்தமாக இருக்கும்.

I have lost my purse என்றால் என் பர்ஸ் தொலைந்துவிட்டது என்பதுடன் இப்போதுவரை அதை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் அர்த்தமாகிறது.

We bought a new car என்றால் நாங்கள் ஒரு காரை வாங்கினோம், அவ்வளவுதான்.

We have bought a new car என்றால் நாங்கள் ஒரு காரை வாங்கினோம் என்பதுடன் அந்த கார் இப்போது எங்களிடம் இருக்கிறது என்பதையும் அது குறிக்கிறது.

“Midas touch என்கிறார்களே, சிறுவயதில் நான் படித்த ‘தொட்டதெல்லாம் பொன்னாகும்’ மைதாஸ்தான் இவரா என்பதைத் தெளிவு படுத்துங்கள்”.

ஆமாம். கதையில் வரும் மைதாஸ் மத்தியத் துருக்கியைச் சேர்ந்வர் கடவுளிடம் பெற்ற வரத்தின்படி அவர் எதைத் தொட்டாலும் பொன்னாகும். ஏதோ நினைவில் தன் மகளையும் அவர் தொட்டுவிடுகிறார். மகளும் (உண்மையாகவே) தங்கச் சிலையாகிவிட, மைதாஸ் தன் முட்டாள்தனத்தை எண்ணி வருந்துகிறார். ஆகக் கதையின்படி Midas Touch என்பது பேராசைக்கு அடையாளம். துயரமான விளைவுக்கான குறியீடு.

ஆனால், ஆங்கில மொழியில் Midas Touch என்பது ‘தொட்டதெல்லாம் துலங்கும்’ என்கிற அர்த்தத்தை மட்டுமே அளிக்கும்.

முக்கியமாக வியாபாரத்தில் எதைத் தொட்டாலும் மிகச் சிறப்பான விளைவுகளை ஒருவரால் கொண்டுவர முடிந்தால் அவருக்கு Midas Touch இருப்பதாகக் கூறுவார்கள்.

“I am on the side of the angels என்பதன் சரியான அர்த்தம் என்ன?” என்று கேட்டிருக்கிறார் ஒரு வாசகர்.

“நான் நியாயத்தின் பக்கம் இருக்கிறேன்” என்று இதற்குப் பொருள். அதாவது தேவதைகள் நியாயத்தையும், சாத்தான்கள் அநியாயத்தையும் குறிக்கின்றன.

இந்த இடத்தில் பிரிட்டனைச் சேர்ந்த அறிஞர் பெஞ்சமின் டிஸ்ரேலி என்பவர் கூறிய வாக்கியங்கள் நினைவுக்கு வருகின்றன. சார்லஸ் டார்வின் பரிணாமக் கோட்பாட்டை வெளியிட்ட நேரம் அது. குரங்குகளிலிருந்து பிறந்தவன் மனிதன் என்பது உட்பட. இது குறித்து டிஸ்ரேலியிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் ‘Is man an ape or an angel? Now I am on the side of the angels” என்றார்.

“Hysterectomy என்றால் என்ன?”

- ectomy (அதாவது எக்டொமி) என்றால் அறுவைச் சிகிச்சையின் மூலம் ஏதோ ஒரு உடல் பகுதியை நீக்குவது.

Hysterectomy என்றால் கருவை நீக்குதல். Mastectomy என்றால் மார்பகத்தை நீக்குதல்.

Tonsillectomy என்றால் தொண்டைப் பகுதியில் உள்ள டான்சில்ஸ் சதையை நீக்குவது என்று பொருள்.

கேட்டாரே ஒரு கேள்வி நியாயமான சந்தேகத்தைத்தான் எழுப்புகிறது. Poor marks என்று குறிப்பிடும் நாம் rich marks என்று குறிப்பிடுவதில்லைதான். அதேபோல good marks பயன்பாடு வெகு சகஜம். Bad marks அரிதாகவே பயன்படுத்தப்படுகிறது.

பேசாமல் high marks, low marks என்று மட்டுமே கூறிவிடலாமே.

“விளம்பரங்களில் ‘Classified advertisements’ என்கிறார்களே அதற்கு என்ன பொருள்?”

நாளிதழ்களில் சிறிய எழுத்துகளில் பொதுவான தலைப்புகளின்கீழ் இத்தகைய விளம்பரங்கள் இடம்பெறுகின்றன. பிற பெரிய அளவிலான விளம்பரங்களைவிட இவற்றுக்கான கட்டணங்கள் குறைவாக இருக்கும். Matrimonial, Rental, Obituary போன்ற தலைப்புகளில் இவற்றைப் பார்க்கலாம்.

இந்த இடத்தில் ‘Classified advertisements’-களில் நாம் பார்க்கக்கூடிய சில abbreviations குறித்து அறிந்துகொள்வோம். அப்படி இடம்பெறும் கீழே உள்ள abbreviation-களின் விரிவாக்கங்கள் என்ன என்பதைச் சொல்ல முயலுங்கள்.

1.Vgc

2. Ff

3. Grad

4. K+b

5. Info

6. Pcm

மேலே கொடுக்கப்பட்டுள்ள classified advertisements abbreviations-களுக்கான விரிவாக்கங்கள் இதோ:

1.Vgc = very good condition

2. Ff = factory fitted (car)

3. Grad = graduate

4. K+b = kitchen and bathroom

5. Info = information

6. Pcm = per calendar month


தொடக்கம் இப்படித்தான்

பெருமழை பெய்யும்போது It is raining cats and dogs என்கிறார்களே. இதற்கு ஏதாவது பின்னணி உண்டா?

அந்தக் காலத்தில் இருந்த கூரை வீடுகளின் மேற்பகுதியில் பூனை, நாய் போன்ற வீட்டு விலங்குகள் மறைந்துகொள்ளும். பெருமழை பெய்யும்போது மேலிருந்து இவையும் கீழே விழுந்துவிடும். எனவே மிக அதிக அளவில் மழை பெய்யும்போது அதை It is raining cats and dogs என்றார்களாம்.

இது ஒரு செவிவழித் தகவல்தான். ஆனால், அறிவியல் வேறொன்றை ஏற்றுக்கொள்கிறது. அதன்படி ‘It is raining frogs’ எனலாம். தவளைகள் ஏரியில் உறவு கொள்ளும்போது அந்த ஏரியைச் சுழற்காற்று கடந்து சென்றால் அது தவளையின் கருவுற்ற முட்டைகளையும் அள்ளிச் செல்லும். காற்றுவெளியில் அந்த முட்டைகள் பொறிக்கப்படுகின்றன. காற்று தணிந்தவுடன் காற்றிலுள்ள எல்லா கனமான பொருள்களும் தரையை நோக்கி விழுகின்றன. தலைப்பிரட்டைகளும்தான்.

Lest என்றால்?

Otherwise.

Condiment என்றால் ஏலக்காயா?

இல்லை. Condiment-களில் ஏலக்காயும் ஒன்று. Condiment என்றால் உணவுக்குச் சுவையூட்டும் பொருள். ஏலக்காய் என்பது cardamom.

பாத்திரங்களில் ஏற்படும் அதுங்கலை ஆங்கிலத்தில் எப்படிக் குறிப்பிடலாம்?

Dent

தொடர்புக்கு:

aruncharanya@gmail.com
அனுபவம் புதுமை: இதுதான் காதல் என்பதா?

Published : 20 Apr 2018 09:59 IST

கா. கார்த்திகேயன்



ஓர் இளைஞனும் யுவதியும் சாதாரணமாகப் பார்த்துப் பேசிக்கொள்வதைக்கூடக் காதல் என்று நினைக்கக்கூடிய காலம் இது. இந்த விஷயத்தில் பதின் பருவத்தினரைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். இரு பாலர் படிக்கும் கல்லூரி என்றால், வகுப்புத் தோழி யதார்த்தமாகப் பழகினால்கூட, மாணவர்கள் ‘மிஸ்டர் ரோமியோ’க்களாக மாறி கனவு காண ஆரம்பித்துவிடுவார்கள்.

இனக்கவர்ச்சிக்கும் காதலுக்கும் வித்தியாசம் தெரியாத பருவம் என்பதால், அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. உடன்படிப்பவர்களும் அதே வயதுடையவர்கள் என்பதால், அவர்களுடைய வழிகாட்டலும் எதிர் மறையாக இருக்கும். ‘டேய், உன் ஆள் வருதுடா’ என்று தூபம் போட்டு காதல் நெருப்பை மூட்டிக்கொண்டே இருப்பார்கள்.

சம்பந்தப்பட்ட பெண் காதலிக்கிறாரா, இல்லையா; நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார் என்ற நினைப்பெல்லாம் இனக்கவர்ச்சிக் காதலில் அடங்காது. சாதாரணமான பழக்கத்துக்கும் காதலுக்கும் வித்தியாசமும் தெரியாது. என்றாவது ஒரு நாள், ‘எல்லோரிடமும் பழகுவது மாதிரிதானே உன்னிடமும் பழகினேன். நீ தப்பா புரிஞ்சுக்கிட்டா என்ன பண்ண முடியும்’ என்று தோழி சொல்லும்போது சப்த நாடியும் அடங்கி, படிப்பு மறந்து, தூக்கம் துறந்து, அதிலிருந்து மீள கஷ்டப்படுபவர்கள் அனேகம். குறிப்பிட்ட யுவதி மீது இரு இளைஞர்களுக்கு இனக் கவர்ச்சியின் நீட்சி இருந்தால், ரணகளமாகிவிடும்.


ஓவியம்: பாலு

அப்படியொரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. ஆளுமைத் திறன் தொடர்பான வகுப்புகளை ஞாயிற்றுக்கிழமைகளில் எடுப்பது எனது வழக்கம். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அப்படி ஒரு நாள் மையத்துக்குச் சென்றுகொண்டிருந்தேன். வழியில் கும்பலாக ஆட்கள் ஆங்காங்கே நின்றுகொண்டிருந்தார்கள். அங்கே நான் பார்த்த காட்சி சினிமாவை நினைவுபடுத்தியது. சாலையின் இரு பக்கங்களிலும் ஆட்கள் குவிந்திருக்க, என்னுடைய மாணவர்கள் சரவணனும் பாபுவும் அருகே நின்றுகொண்டு மல்லுக்கட்டிக்கொண்டிருந்தார்கள். அருகே நின்றவர்கள் ரவுடிகளைப் போலத் தெரிந்தார்கள். அடிதடி நடப்பதற்கான சூழல் தென்பட்டது.

அங்கே என்னைப் பார்த்தவுடன் இருவரும் பம்மினார்கள். சூழலைக் கருத்தில்கொண்டு, ‘எதுவாக இருந்தாலும் பிறகு பேசிக்கொள்ளலாம்” என்று கூறி அவர்களை அங்கிருந்து வீட்டுக்கு அனுப்பி வைத்தேன். உடன் இருந்த சிலரிடம் விசாரித்த போதுதான் காதல் விவகாரத்தால் மோதிக்கொண்டது தெரிய வந்தது. அவர்களை என் வீட்டுக்கு வரவழைத்தேன். “என்னை ஒரு சகோதரனா நினைச்சு பிரச்சினையைச் சொல்லு” என்று சொன்னவுடன் கிளிசரின் இல்லாமலேயே சரவணனின் கண்கள் கலங்கின. “சார், நான் லவ் பண்ற பொண்னோட மனசை பாபு மாத்திட்டான். நானும் அவளும் ஆறு மாசமா நல்லாத்தான் பழகிட்டு இருந்தோம். இப்போ பாபுவோடத்தான் அதிகமா பழகுறா” என்றவனைக் குறுக்கிட்டேன்.

“நீ அந்தப் பொண்ண லவ் பண்றதை அந்தப் பொண்ணுகிட்ட சொல்லிட்டியா?".

“இல்ல சார்”

“அந்தப் பொண்ணாவது உன்கிட்ட சொல்லுச்சா?”

“இல்ல சார். ஆனால் லவ் பன்றோம் சார்”.

சரவணனும் குழம்பி என்னையும் குழப்பமாகப் பார்த்தான். அவனை அனுப்பிவிட்டு பாபுவிடம் பேசிய போது அவனுடைய புலம்பல் வேறு மாதிரி இருந்தது. “என்னோட சாப்பாட்டை எடுத்து சாப்புடுவா, எனக்கு பர்த்டே கிப்ட் தந்தா, தினமும் மொபைல் போனில் பேசுவா” எனச் சொல்லிக்கொண்டே போனான். அவனையும் அனுப்பிவிட்டு, இரண்டு நாட்கள் கழித்து மையத்தில் படிக்கும் சம்பந்தப்பட்ட பெண்ணை அழைத்துப் பேசினேன்.

“லவ்வா, இல்லவே இல்ல” என்று மறுத்தார் அந்த பெண். “கிப்ட் தர்றது, சாப்பாட்டை எடுத்து சாப்புடுறது, அவுங்களுடன் சகஜமாகப் பேசுவதையெல்லாம் லவ்வுன்னு எடுத்துக்கிட்டா, நான் என்ன பண்றது. என்னைப் பொறுத்தவரைக்கும் உடன் படிக்கிற எல்லோருமே என் நண்பர்கள். அவ்வளவுதான், இதுக்கு மேல ஒன்றும் இல்லை” எனத் தெளிவாகக் கூறினார்.


பிறகு சரவணன், பாபு இருவரையும் ஒன்றாக உட்கார வைத்துப் பேசினேன்.

“சரவணா, அந்தப் பொண்ணு உன்னை லவ் பண்ணல”.

உடனே சரவணன், “சார் பாபுவ..” என்று இழுத்தவனை குறுக்கிட்டு “அட, அந்தப் பொண்ணு யாரையும் லவ் பண்ணலப்பா” என்றேன். உடனே ஆயிரம் வாட்ஸ் பல்பு அவர்கள் முகத்தில் ஒளிர்ந்தது. தனக்குக் கிடைக்கலே என்ற வருத்தத்தைவிட எதிராளிக்குக் கிடைக்கலே என்ற சந்தோஷம். பாடத்தைச் சொல்லி புரியவைப்பதைவிட இனக்கவர்ச்சிக்கும் காதலுக்கும் உள்ள வித்தியாசத்தைச் சொல்லி புரியவைப்பதற்கு ரொம்பவே மெனக்கெட வேண்டியிருந்தது. நீண்ட நேரத்துக்குப் பிறகு அதைப் புரிந்துகொண்டார்கள். பிறகுதான் நிம்மதி அடைந்தேன்.

சமீபத்தில் ஒரு முன்னாள் மாணவரின் திருமணத்தில் அந்த மூவரையும் சந்திக்க நேர்ந்தது. தொழில், வேலை, குடும்பம் காரணமாக வெவ்வேறு இடத்தில இருந்தாலும் அவர்கள் மூவரும் இன்றும் நல்ல நட்பைத் தொடர்கிறார்கள் என்பதைப் பார்க்கும்போதே தெரிந்தது. மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

இன்றைய இளம் தலைமுறையினர் தான் ‘தனியாள்’ என்று சொல்லிக்கொள்வதைக் கவுரவக் குறைச்சலாக நினைக்கிறார்கள். படிக்கும் காலமாக இருந்தாலும்கூட, தங்களுக்குத் துணை அவசியம் என்றும் நினைக்கிறார்கள். பதின் பருவத்தில் இனக்கவர்ச்சியால் உண்டாகும் இந்த உணர்வு, சிக்கலானதுதான். அது ஒரு ஆனந்த அனுபவமாக இருப்பதைப் போலத் தெரியலாம். ஆனால், மூழ்கடிக்கவும் செய்துவிடலாம். படிக்கும் பருவத்தில் எதிர் பாலினத்தினரிடம் ஈர்ப்பு ஏற்படுவது இயற்கையே. அதைக் காதல் என்று கற்பனைக் கோட்டை கட்டுவது யாருடைய தவறு?

(அனுபவம் பேசும்)

திருச்சி சாரநாதன் பொறியியல் கல்லூரி மேலாண்மைத் துறைத் தலைவரான கா. கார்த்திகேயன், ஆளுமைத் திறன் தொடர்பாக எழுதிவருகிறார். இந்தத் துறை சார்ந்து மாணவர்களுக்காகவும் தொழில்முனைவோருக்காகவும் மூன்று நூல்களை எழுதியுள்ளார். உள்ளூர் தொலைக்காட்சி அலைவரிசைகளில் நிகழ்ச்சி நடத்திவரும் இவர், கல்லூரிகளில் மென்திறன் பயிற்சியாளராகவும் பணியாற்றி வருகிறார்.

வெல்லுவதோ இளமை: கேட்ஸ் திறந்த ‘புதிய ஜன்னல்’

Published : 20 Apr 2018 09:59 IST

என். சொக்கன்



பல நாட்களாகப் பட்டினி கிடந்த ஒருவருக்குத் திடீரென்று அறுசுவை விருந்து கிடைத்தால் எப்படியிருக்கும்? அப்படி இருந்தது வில்லியத்துக்கும் அவனுடைய நண்பர்களுக்கும்.

அதற்குக் காரணம் கணினி என்ற அறிவியல் அதிசயமே!

இன்றைக்கு ஒரு கணினி இருந்தால் போதும். அலுவலக வேலை பார்க்கலாம், பாட்டு கேட்கலாம், சினிமா பார்க்கலாம், மின்னஞ்சல் படிக்கலாம், நண்பர்களுடன் அரட்டையடிக்கலாம்... இவை எவையும் அன்றைய கணினியில் சாத்தியமல்ல! அன்றைக்குப் புழக்கத்தில் இருந்த கணினிகள் ஒவ்வொன்றும் அறையளவு பெரிதாக இருந்தன. அவற்றில் பாட்டு, திரைப்படம், மின்னஞ்சல், ஃபேஸ்புக்கெல்லாம் வராது. ஒரு ஒளிப்படத்தைக்கூடப் பார்க்க முடியாது. வெறும் எழுத்துகள்தாம்.


ஆனால், அந்தக் கணினிகள் அன்றைய தொழில்நுட்பத்தின் மிகப் பெரிய சாதனை. அவற்றைப் பயன்படுத்தி புரோக்ராம்கள் எனப்படும் நிரல்களை எழுதலாம். நாம் என்ன சொன்னாலும் கணினியைக் கேட்கச்செய்யலாம். அதனால்தான், வில்லியம் போன்ற அன்றைய இளைஞர்கள் பலருக்குக் கணினிகளை மிகவும் பிடித்திருந்தது. ஆர்வத்துடன் கற்றுக்கொண்டார்கள், விதவிதமான நிரல்களை எழுதிக் குவித்தார்கள்.

இத்தனைக்கும் வில்லியம் முழுக் கணினியைப் பயன்படுத்தவில்லை. அவனுடைய பள்ளியிலிருந்து ஒரு பெரிய கணினிக்கு இணைப்பு உருவாக்கப்பட்டிருந்தது. அதை வைத்து அந்தக் கணினியில் நுழைந்து நிரல்களை எழுதிப் பழகிக்கொண்டான். அவனுக்குச் சொல்லித் தரவும் அங்கே யாரும் இல்லை. அவனே புத்தகங்களை, கையேடுகளைப் புரட்டிப் பார்த்தான், ஏதோ எழுதிப் பார்த்தான், அவை பிரமாதமாக வேலை செய்வதைப் பார்த்து வியந்துபோனான். சரியான நிரல்கள், பிழையான நிரல்கள் என இரண்டுமே அவனுக்குப் புதிய விஷயங்களைக் கற்றுத்தந்தன.

திடீரென்று ஒருநாள், அவர்களுடைய கணினி இணைப்பு வேலைசெய்யவில்லை.

வில்லியமும் அவனுடைய நண்பர்களும் கணினியை மொத்தமாகப் பயன்படுத்தியதால் அதற்கு ஒதுக்கப்பட்டிருந்த நேரம் தீர்ந்துவிட்டது.

‘ஆனா, எங்களுக்கு கம்ப்யூட்டர் வேணுமே; நாங்க என்ன செய்யறது?’வில்லியம் பரிதாபமாகக் கேட்டான்.


‘பள்ளிக்கூடத்துக்காகக் கொடுத்த இலவச நேரம் முடிஞ்சிடுச்சு. இனிமே நீங்களே காசு கொடுத்துப் பயன்படுத்தினாதான் உண்டு.’

அதற்கு அவர்கள் சொன்ன வாடகைத் தொகை மிக அதிகம். ஆனாலும், வில்லியமும் அவனுடைய நண்பர்களும் தங்களுடைய பாக்கெட் மணி, சேமிப்பையெல்லாம் செலவழித்துத் தொடர்ந்து கணினியைப் பயன்படுத்திவந்தார்கள். ஆனால், முன்புபோல் எந்நேரமும் கணினியின் முன்னே கிடக்க முடியாது. கொடுக்கிற காசுக்குச் சிறிது நேரம்தான் பயன்படுத்த அனுமதி.

அதுவரை கணினியை இஷ்டம்போல் பயன்படுத்திப் பழகியிருந்த அவர்களுக்கு, இப்படிச் சிறிது சிறிதாகப் பயன்படுத்துவது பிடிக்கவில்லை. ‘இன்னும் இன்னும்’ என்று ஏங்கினார்கள்.

அப்போது அவர்கள் ஊரில் ‘கம்ப்யூட்டர் சென்டர் கார்ப்பரேஷன்’ (CCC ) என்ற நிறுவனத்திடம் சில கணினிகள் இருந்தன. ஆனால், அவையும் வாடகைக்குப் பெறப்பட்டவையே.

அந்தக் கணினிகளில் அவ்வப்போது சிறிய, பெரிய பிழைகள் தென்படும். அதுபோன்ற நேரத்தில் பிழை திருத்தப்படும்வரை CCC நிறுவனம் அந்தக் கணினிக்கு வாடகை தர வேண்டியதில்லை.

இதைத் தெரிந்துகொண்ட வில்லியம் யோசித்தான், ‘பிழைகள் தாமே வரும்வரை காத்திருக்க வேண்டுமா? நாமே உள்ளே நுழைந்து அந்தப் பிழைகளைக் கண்டுபிடித்தால் என்ன?’


இப்படித் தினந்தோறும் பிழைகளைக் கண்டுபிடித்துக்கொண்டே இருந்தால், அந்தக் கணினிகளுக்கு வாடகை தர வேண்டியதில்லை. CCCக்குப் பணம் மிச்சம்.

ஆனால், இதனால் வில்லியத்துக்கு என்ன லாபம்?

பிழையைக் கண்டுபிடிக்க நெடுநேரம் கணினி முன்னே உட்கார வேண்டும். இரண்டு, மூன்று பிழைகளைக் கண்டுபிடித்துச் சொல்லிவிட்டு மீதி நேரமெல்லாம் நிரல் எழுதிப் பழகலாமே.

வில்லியம் சொன்ன யோசனை CCC நிறுவனத்துக்கு மிகவும் பிடித்திருந்தது.அதன் பிறகு, வில்லியம் தொடர்ந்து மணிக்கணக்காகக் கணினிகளைப் பயன்படுத்தி மகிழ்ந்தான். பல தனித்துவமான நிரல்களை எழுதினான்.

பிழைகளைக் கண்டுபிடிக்கும் நோக்கத்துடன் கணினியின்முன் அமர்ந்தாலும், அதன்மூலம் வில்லியம் கற்றுக்கொண்டவை ஏராளம். ஆரம்பத்தில் விளையாட்டாகக் கணினியைப் பயன்படுத்தியவன், சிறிது சிறிதாகப் பயனுள்ள நிரல்களை எழுதத் தொடங்கினான். கணினியைப் பயன்படுத்தி ஏகப்பட்ட விஷயங்களைச் சாதிக்க முடியும் என்பதைப் புரிந்துகொண்டான். அது பற்றி நிறையப் படிக்கத் தொடங்கினான்; நண்பர்களுடன் விவாதித்தான்.

இந்த ஆர்வம், வில்லியத்தின் தொழில் முயற்சிகளுக்கு வழிவகுத்தது. கணினியில் நிரல்களை எழுதுவது வெறும் பொழுதுபோக்கல்ல, அதைப் பயன்படுத்திப் பல பயனுள்ள விஷயங்களைச் செய்யலாம், அந்த நிரல்களைத் தேவையுள்ள நிறுவனங்களுக்கு விற்றுப் பணம் சம்பாதிக்கலாம் என்று அவன் நிரூபித்தான்.

அதே காலகட்டத்தில், கணினி களுக்கான வன்பொருள் (ஹார்டுவேர்) வசதிகளும் பெரிய அளவில் வளர்ந்தன. இதைப் பயன்படுத்திக்கொண்டு வில்லியம் தன்னுடைய தொழில் முயற்சிகளைச் செம்மையாக்கினான். அதன் மூலம், ‘ஒவ்வொரு மேசையிலும் ஒரு கணினி’ என்ற ஒரு புரட்சிக்கு அவன் முக்கியக் காரணமானான்.

அந்த வில்லியம், நாமெல்லாம் ‘பில் கேட்ஸ்’ என்ற பெயரில் நன்கறிந்த, உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவர்.

கணினித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பில் கேட்ஸ் நிறையப் பணம் சம்பாதித்தார் என்பது உண்மைதான். ஆனால், காசு சம்பாதிப்பதற்காக அவர் இந்தத் தொழிலுக்கு வரவில்லை. கணினிகளின்மீது அவருக்கிருந்த பேரார்வம்தான் அவரை இங்கே வரவைத்தது. இந்தத் துறையை இன்னும் பெரிய அளவில் வளர்ப்பது எப்படி என்ற கேள்விதான் அவரை முன்னேற்றியது.

‘உனக்குப் பிடித்த ஒரு வேலையைத் தேர்ந்தெடு; அதன்பிறகு நீ வாழ்நாள் முழுக்க வேலைசெய்ய வேண்டியதில்லை’ என்று சொல்வார்கள்; அப்படி இளம் வயதிலேயே மனத்துக்குப் பிடித்த ஒரு வேலையை விரும்பித் தேர்ந்தெடுத்துச் செய்து, அதன்மூலம் புகழும் பணமும் சம்பாதித்து, சமூகத்தின்மீது தாக்கத்தையும் உண்டாக்கிய அபூர்வமான மனிதர் பில் கேட்ஸ்.

(இளமை பாயும்)

தொடர்புக்கு: nchokkan@gmail.com

கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக அறிவியல், இலக்கணம், சிறுவர் இலக்கியத் துறைகள் சார்ந்து எழுதிவருகிறார் என். சொக்கன். வாழ்க்கை வரலாறு, பழந்தமிழ் இலக்கியம் பற்றி குறிப்பிடத்தக்க நூல்களை எழுதியிருக்கிறார். பெங்களூருவில் குடும்பத்துடன் வசிக்கும் சொக்கன், பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் கணினிப் பொறியாளர்.
உலகப் புத்தக நாள் ஏப்.23: துள்ளித் துளிர்த்த காதல்!

Published : 20 Apr 2018 09:59 IST

நிஷா




காதலை உருகி மருகிச் சொல்லும் கதைப் புத்தகங்களுக்கு எப்போதுமே இளைஞர்கள் மத்தியில் தனி வரவேற்பு இருக்கும். ‘ஆக்ஸிடெண்ட்லி இன் லவ்’ என்ற புத்தகத்துக்கும் இளைஞர்கள் அமோக வரவேற்பு அளித்தார்கள். ஏனென்றால், இந்தக் கதையின் கரு, காதலும் காதல் நிமித்தமுமே.

பொதுவாக, காதல் படங்களும் காதல் புத்தகங்களும் பெரும்பாலும் நமக்குப் பிடித்தவைதான். குறிப்பாக, சோகத்தில் முடியும் லைலா மஜ்னு வகைக் காதல். ஆனால், இப்போது காலம் மாறிவிட்டது. இன்று காதலை எப்படிச் சொல்வது என்று தயங்கி எந்த இளைஞனும் ‘இதயம்’ முரளியைப் போல் கையில் புத்தகத்துடன் தலையைக் குனிந்தபடி மருகித் திரிவதில்லை. ஒருவேளை அந்தக் காதல் தோல்வியில் முடிந்தாலும், அதற்காக அவர்கள் தாடி வளர்த்து சோகத்தில் மூழ்குவதில்லை. இன்றைய இளைஞர்கள் ‘அட்டகத்தி’ தினேஷைப் போல் காதலை எளிதாக எடுத்துக்கொண்டு வாழ்வை வீணடிக்காமல் மகிழ்ச்சியுடன் கடந்து செல்கிறார்கள்

நிகிதா சிங் எழுதியிருக்கும் ‘ஆக்ஸிடெண்ட்லி இன் லவ்’ என்ற புத்தகத்தில் இருக்கும் காதல் இன்றைய தலைமுறையினரின் காதல்தான். உணர்ச்சிக் கொந்தளிப்புகள் எவையுமின்றி, ‘எது நடந்தால்தான் என்ன?’ என்ற ரீதியில் வெகு சாதாரணமாகக் கடந்துசெல்லும் காதல் அது. சொல்லப்போனால் இந்தப் புத்தகத்தின் மையக் கருவை மணிரத்னம் சுட்டுவிட்டாரோ என்று சந்தேகத்தை ஏற்படுத்தும் அளவுக்கு இதன் கரு ‘ஓகே கண்மணி’ படத்தின் கதையுடன் ஒத்துப்போகிறது.



நிகிதா சிங்

அந்தப் படம் பார்த்தவர் களுக்கு இந்தப் புத்தகத்தின் கதையைத் தனியாகச் சொல்லத் தேவையில்லைதான். இருந்தாலும், மற்றவர்களுக்காக இந்தக் கதையின் சுருக்கத்தைச் சொல்ல வேண்டியுள்ளது. ஒரு காலத்தில் மாடலிங் துறையில் கொடிகட்டி பறந்து, இன்று அதே துறையில் சரிவைச் சந்தித்துக்கொண்டிருக்கும் ஷவ்வி முகர்ஜி எனும் இளம் பெண்ணுக்கும் துஷார் மெகர் எனும் ஒளிப்படக் கலைஞனுக்கும் இடையேயான நிர்பந்தமற்ற காதல் வாழ்க்கைதான் இந்தக் கதை.

ஒரு போட்டோ சூட்டில் துஷாரைப் பார்த்த மாத்திரத்திலேயே இருவருக்குள்ளும் காதல் பற்றிக்கொள்கிறது. முதல் சந்திப்பின்போது இருவரும் மதுபோதையின் உச்சத்தில் இருந்தனர். அதனால், அவர்கள் அன்று பேசியதும் கூடிக் கலந்ததும் எந்த அளவுக்கு உண்மை என்று அவர்களுக்கு உறுதியாகத் தெரியவில்லை.

ஒருவித நெருக்கத்தை உணர முடிந்த அவர்களால் காதலை மங்கலாகவே உணர முடிகிறது. எனவே, காதல் கல்யாணம் என்ற சமூகக் கட்டுகளிலும் நிர்ப்பந்தங்களிலும் சிக்கிக் கொள்ளாமல் நெருக்கத்துடன் மட்டும் தங்கள் உறவைத் தொடர்வது என்று முடிவுசெய்து வாழ்கின்றனர். இறுதியில் சுவாரசியமும் இழுவையும் கலந்த சில பக்கங்களுக்குப் பிறகு காதலை உணர்ந்து இருவரும் இணைந்து வாழ ஆரம்பித்துக் கதையை முடித்துவைக்கிறார்கள்.

ரொம்பப் பிரமாதமான கதை இல்லை என்றாலும்கூட, சிக்கலற்ற வார்த்தைகளைக்கொண்டு வாசிப்பதற்கு எளிதான மொழியில் சுவாரசியமான சம்பவங்களைத் தொகுத்து வாசிக்கும் பொழுதுகளை நிகிதா சிங் எளிதாகக் கவர்ந்துகொள்கிறார். வாசிப்பு ஒரு சுவாரசியமான அனுபவம். ஆனால், வாசிக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கு அது சிரமமான ஒன்றுதான். இந்தப் புத்தகம் அந்தச் சிரமத்தைக் களைந்து அவர்களையும் வாசிப்பைக் காதலிக்க வைக்கக்கூடும்.
புத்தக வாசிப்புக்குப் புது முறையைக் கையாளலாமே!

Published : 21 Apr 2018 09:34 IST

புத்தக வாசிப்பில் மாணவர்களுக்கு ஆர்வத்தை ஊட்டுவது என்பது அவர்களின் வளமான எதிர்காலத்துக்கு அஸ்திவாரம் இடும். இவ்விஷயத்தில் கல்வித் துறையும் புதிய முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும். பாடப் புத்தகத்தைத் தவிர ஏதாவது நல்ல புத்தகம் ஒன்றை, மாணவர்களின் வயது, வாசிக்கும் திறன், அவர்களை ஈர்க்கக்கூடிய துறை ஆகியவற்றுக்கு ஏற்பத் தேர்ந்தெடுத்து இரண்டு மாதங்களுக்கு ஒரு புத்தகம் என்று கொடுத்து வாசிக்கச் சொல்லலாம். என்ன வாசித்தோம் என சிறு கட்டுரை எழுதித்தரச் சொல்லலாம். இதற்கு மதிப்பெண், தேர்வு என்றெல்லாம் அச்சமூட்டக் கூடாது. முன்பெல்லாம் குடிமைப் பயிற்சி அல்லது நன்னெறி வகுப்பு என்று வாரத்துக்கு ஒன்று அமைத்ததைப் போல மாதத்துக்கு ஒன்றாகக்கூட நூல் வாசிப்புக்கு ஒதுக்கலாம்.

புத்தகத்தில் கவனிக்க வேண்டியவை குறித்தும், வாசிக்கும் விதத்தையும் பொதுவாகச் சொல்லித்தர வேண்டும். ஆறாவது வகுப்பு முதல் எட்டாவது வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்குச் சித்திரக் கதைகளுடன் உள்ள புத்தகங்களைத் தரலாம். முதலில் பாடப்புத்தகம் தவிர்த்து பிற புத்தகங்களும் உள்ளன என்ற அறிமுகமே மாணவர்களுக்கு மகிழ்ச்சியையும் ஊக்கத்தையும் அளிக்கும். வாசித்துப் பழகி ருசி ஏற்பட்டுவிட்டால் பிறகு தன்னம்பிக்கை பிறக்கும். இதனால், தாங்களாகவே அடுத்த கட்டத்துக்கு நகர்வார்கள்.

பட்டிமன்றம், பேச்சுப்போட்டி என்று ஏதாவது ஒரு தலைப்பில் பேசச் சொல்வதைப் போல, ஒரு புத்தகத்தைப் பற்றி திறனாய்வு அல்லது குழு விவாதத்துக்கு ஏற்பாடுசெய்தால் நன்கு வாசித்த மாணவர்களின் பேச்சு, மற்றவர்களுக்கு முன்மாதிரியாகவும் தூண்டுதலாகவும் அமையும். ஆசிரியர்களுக்கே மாணவர்களின் கற்றல் திறனையும் விவாதிக்கும் திறனையும் இதர ஆற்றல்களையும் தொடக்கத்திலேயே அடையாளம் காணும் வாய்ப்பாக அமையும்.

கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியியல் போன்ற பாடங்களுக்கான எளிய அறிமுக நூல்களைக்கூட இப்படிச் சுற்றுக்குவிட்டு படிக்கவைப்பதன் மூலம் அந்தந்தப் பாடங்களில் லயிப்பைக் கூட்டவும், சந்தேகங்களைத் தெளிந்துகொள்ளவும் வழிவகுக்கலாம். ஆசிரியர்களே உடனிருந்து வரிக்கு வரி சொல்லித்தந்து புரியவைக்கும் முறைக்குப் பதிலாக, தாங்களே படிக்கவும், சந்தேகம் வரும்போது ஆசிரியரிடம் கேட்டு மேற்கொண்டு தொடரவும் இந்தப் பயிற்சி உதவும். ஆசிரியர்கள் மட்டுமே தங்களுடைய பொறுப்பாகக் கருதாமல் வகுப்புத் தலைவன் போன்ற மாணவர் குழுவையும் இணைத்துக்கொண்டால் குழு இயக்கமாக மலரும்.

பாடப்புத்தக வாசிப்பைவிட பிற நூல்களை வாசிக்கும் மாணவர்களுக்குக் கற்பனைத்திறனும் தானாகவே வாக்கியங்களை அமைக்கும் லாகவமும் கூடிவிடும். கற்பித்தல் என்ற கடமை ஆசிரியர்களுக்கு எளிதாகிவிடும். வெறும் பாடப்புத்தகம் எனும்போது தோன்றும் கடமையுணர்ச்சி, அதைத் தாண்டிய படிப்பு எனும்போது ஆர்வத்தையும் உற்சாகத்தையும் நிரம்ப ஊட்டும். ஆசிரியர்கள் கண்காணிப்பில் அவர்களுடைய வழிகாட்டலில் நல்ல நூல்களைத் தாங்களாகப் படிக்கும் மாணவர்கள், நடந்து செல்லும் மாணவர்கள் மிதிவண்டியை ஓட்டப் பழகும்போது அடையும் மகிழ்ச்சியையும் தன்னம்பிக்கையையும் அடைவார்கள்!

NEWS TODAY 25.12.2025