Monday, April 23, 2018


பெண்ணுக்கு நீதி செய்வோம்
By எஸ். ஸ்ரீதுரை | Published on : 23rd April 2018 12:00 AM

 அதிர்ச்சி என்பதற்கு மேலாக இன்னொரு சொல்லைத்தான் தேட வேண்டியிருக்கிறது - நமது நாட்டில் நடைபெறும் பாலியல் குற்றங்களைப் பார்க்கும்போது.  சில ஆண்டுகளுக்கு முன்பு நிர்பயா கொடுமை அரங்கேறியபோது இதுவே கடைசி சம்பவமாக இருக்கட்டும் என்று வேண்டினோம். ஆனால், பாலியல் வன்முறைகள் குறைந்தபாடில்லை. நாட்டின் ஒவ்வொரு பிரதேசத்திலும் நடக்கின்ற பாலியல் வன்கொடுமைகள் நம்மை ஒரு நாகரிகச் சமுதாயம் என்று சொல்லிக் கொள்வதற்கே தகுதியில்லாமல் செய்துவிட்டன.

சிறுமிகளையும், கள்ளங்கபடமற்ற பெண் குழந்தைகளையும் பாலியல் கொடுமை செய்வதுடன் அவர்களைத் துன்புறுத்திக் கொலை செய்வதையும் ஜீரணிக்கவே முடியவில்லை. இவற்றுக்கெல்லாம் ஒருபடி மேலாக, குஜராத் மாநிலத்தில், இளைஞன் ஒருவன், தன்னைப் பெற்ற தாயையே பாலியல் பலாத்காரம் செய்திருக்கும் தகவல் நம்மை அதிர்ச்சியின் எல்லைக்கே விரட்டுகின்றது.

நாடெங்கும் பெண்குழந்தைகள் மற்றும் சிறுமிகளுக்கெதிராக அதிகரித்துவரும் பாலியல் வன்கொடுமைகளைக் கட்டுப்படுத்தும் விதமாக, பன்னிரண்டு வயதுக்குட்பட்ட சிறுமிகளைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்துபவருக்கு தூக்கு தண்டனை விதிக்கும் அவசரச் சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.

இந்நிலையில், ஆங்காங்கே நடைபெறும் சில சம்பவங்களை ஊடகங்கள் பெரிதுபடுத்தக் கூடாது என்று எழும் வாதம் வேதனையளிக்கிறது. இதர குற்றங்களைப் போலக் கருதி சமாதானம் செய்து கொள்ளக் கூடிய விஷயமில்லை பாலியல் குற்றங்களின் அதிகரிப்பு. குற்றங்கள் நடைபெற்று, அவை புகாராகப் பதியப்படுவதற்கே எத்தனையோ இடைஞ்சல்கள். விசாரணை காலத்தில் எத்தனையோ குறுக்கீடுகள். இவற்றையெல்லாம் மீறி ஊடக வெளிச்சத்தினால் வெளியுலகிற்குத் தெரிகின்ற குற்றங்களே இத்தனை என்றால், வெளியில் வராத அல்லது வெளியுலகம் அறிய அனுமதிக்கப்படாத குற்றங்களின் எண்ணிக்கை எவ்வளவு இருக்கும்? இதை சட்டம் ஒழுங்கு விவகாரமெனவும், அது மாநில அரசுகளின் பிரச்னை என்றும் மத்திய அரசு ஒதுங்கிக்கொள்ள முடியாது.

குற்றங்கள் நடந்து, அவை வெளிச்சத்திற்கும் வந்த பின்பு நடவடிக்கை எடுப்பது முக்கியம்தான். அதே சமயம், முக்கியமாக மூலைக்கு மூலை இத்தகைய பாலியல் வன்முறைக் கொடுமைகள் அரங்கேறாதபடி தடுப்பதும் மிகமிக முக்கியம். ஒரேயடியாகத் தடுப்பது கடினம்தான். ஆனால் சிறிது சிறிதாகக் குறைக்கலாம் அல்லவா?

சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைக்கு மரண தண்டனை என்பது வரவேற்கத் தகுந்ததுதான். ஆனால், அது குற்றம் செய்த பின்பு தண்டனை கொடுக்கும் முயற்சியே தவிர, குற்றமே நடக்காமல் தடுக்கும் வல்லமை கொண்டதா?

கொலை செய்தால் (அதிகபட்சமாக) மரண தண்டனை உண்டு என்பது யாருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால், கொலைக் குற்றம் அரங்கேறும் அந்தத் தருணத்தில் தண்டனையைப் பற்றி கொலையாளி யோசித்துக் கொண்டிருக்கிறாரா, என்ன? உணர்ச்சி முந்திக்கொண்டு நிற்கும்போது, அறிவு கொஞ்சமாவது சிந்திக்குமா?

பாலியல் குற்றங்களை எடுத்துக் கொண்டால், அவை உணர்ச்சி மீதூர்ந்த நிலையில், அறம், வெட்கம் இவையனைத்தையும் மறந்து, வெறியேறிய நிலையில் உள்ளவர்களால் நிகழ்த்தப்படுவது. அங்கு உணர்ச்சியின் வேகம் அறிவார்ந்து செயல்படுவதில்லை.

ஆகவே, பாலியல் குற்றங்களுக்கு, மரண தண்டனை உட்பட, கடும் தண்டனைகள் விதிப்பது எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியம், பாலியல் வெறியுணர்வு ஏற்படாத அல்லது அதிகரிக்காத வண்ணம் சமூகத்தின் நெறியுணர்வுகளைச் செழுமைப்படுத்துவதும் ஆகும்.
பள்ளிகளில் அறநெறிவகுப்புகளை மீட்டெடுப்பது, அவ்வகுப்புகளை வேறு முக்கிய(!)ப் பாடங்களுக்காக வேண்டி காவு கொடுக்காமல் இருப்பது, விடலைக் காதலைக் காட்சிப்படுத்தும் திரைப்படங்கள் மற்றும் காட்சி ஊடக நிகழ்ச்சிகளைக் கடும் தணிக்கை மூலம் கட்டுப்படுத்துவது, கணினி மற்றும் கைப்பேசி மூலம் காம உணர்வை ஊட்டும் இணையதளங்களுக்குத் தடை விதிப்பது, இளம் வயதினர் கைப்பேசி பயன்படுத்துவதை ஒரு கட்டுக்குள் கொண்டுவருவது ஆகியவற்றின் மூலம் இளைய தலைமுறையினர் உள்ளிட்ட ஆண்களிடம் பாலுணர்வு வெறி ஏறாமல் செய்து, பாலுணர்வு வக்கிரங்கள் அரங்கேறுவதைத் தடுக்கவும் குறைக்கவும் செய்யலாம்.
பெரும் போராட்டக் காலங்களில் ஒரு மாநிலம் முழுவதிலுமே கட்செவி அஞ்சல் மற்றும் முகநூல் போன்ற சமூக ஊடகங்களுக்குத் தடைவிதிப்பது போல, இளைய தலைமுறையினரின் மூளையை மழுங்கடித்து நேரத்தையும் கபளீகரம் செய்யும் பாலியல் தொடர்பான வலைதளங்களுக்கு இந்தியாவில் நிரந்தரத் தடை விதிக்கலாம்.

நவீன விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளால் ஏற்படும் தீமைகளைக் களைவதில் தயவு தாட்சண்யம் எதுவும் தேவையில்லை.
போலியோவையும், எயிட்ஸ் நோயையும் திறம்பட எதிர்கொண்டு ஒழித்த நமது மத்திய, மாநில அரசுகளின் நிர்வாகங்களால், பாலியல் வெறியாட்டம் என்ற இந்தப் பெரும் நோயையும் எதிர்கொண்டு ஒழித்திட முடியும். ஒழித்தாக வேண்டும்.

பல குற்றங்களுக்கிடையில், ஆங்காங்கே ஒருசில பாலியல் குற்றங்கள்தானே என்று சமாதானப்படுத்திக்கொள்வது சரியல்ல.
ஒருபுறம் விளையாட்டு, கல்வி, நிர்வாகம், இராணுவம், ஊடகம் போன்றவற்றில் நமது நாட்டுப் பெண்கள் சாதனைகள் படைத்துக்கொண்டிருக்க, மறுபுறம் அவ்வினத்தையே பாலியல் அத்துமீறல் குறித்த பயத்தில் வைத்திருப்பது நமக்குப் பெருமை தருவதா? பாலியல் வன்முறைகளைக் குறைப்பதும், பின்னர் ஒரேயடியாகத் தடுப்பதும் முடியாத காரியமல்ல. மனமிருந்தால் போதும். மார்க்கம் தன்னால் தெரியும்.
'மது குடிக்கும் மாணவர்களை கல்லூரியில் அனுமதிக்காதீங்க!' : சுற்றறிக்கை அனுப்பும்படி அண்ணா பல்கலைக்கு உத்தரவு

Added : ஏப் 23, 2018 05:05
dinamalar

சென்னை: 'மாணவர்கள் மது மயக்கத்தில் வரக்கூடாது; மீறி வந்தால், கல்லுாரியில் இருந்து நீக்கப்படுவர்' என்ற நிபந்தனையை, விளக்க குறிப்பேட்டில் சேர்க்கும்படி, அனைத்து கல்லுாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப, அண்ணா பல்கலைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கோவையில் உள்ள, தமிழ்நாடு பொறியியல் கல்லுாரியில் படிக்கும் மூன்றாம் ஆண்டு மாணவர், மோகன் தாக்கல் செய்த மனுவில், 'என்னை, நான்காம் ஆண்டில் தொடர அனுமதிக்க வேண்டும்; மூன்றாம் ஆண்டு தேர்வு முடிவை வெளியிட வேண்டும்' என, கோரியிருந்தார்.இம்மனுவை விசாரித்த நீதிபதி, கிருபாகரன் பிறப்பித்த உத்தரவு:மக்களின் வாழ்க்கையில், மதுபானம் எவ்வளவு அழிவை ஏற்படுத்துகிறது என்பதை, இந்த வழக்கு வெளிப்படுத்துகிறது.சென்னை மாகாண முதல்வராக இருந்த, ராஜகோபாலாச்சாரியார், 1938ல், மது விலக்கை அமல்படுத்தினார். இதை தளர்த்தி, கொள்கை வகுத்த நீதிமன்றம் தான், இந்த பேரழிவுக்கு காரணம்.தமிழகத்தில், மது குடிப்பதால், பல குடும்பங்கள் நிர்கதியாக விடப்பட்டு, பலர் இறந்த சம்பவங்கள் உண்டு. குஜராத், பீஹார் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் மதுவிலக்கு உள்ளது. தமிழகத்தில், மாணவர்கள் கூட, மது அருந்தி, தன் வாழ்க்கையை சீரழித்துக் கொள்வது அதிகரித்துள்ளது.மது குடித்ததால், முதல் தலைமுறை இன்ஜி., கல்லுாரி மாணவன் ஒருவன், எப்படி பாதிக்கப்பட்டுள்ளான் என்பது தான், இந்த வழக்கு. மூன்றாம் ஆண்டை முடித்த இவர், கல்லுாரி நேரத்தில் மது குடித்ததால், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்; போதிய வருகை பதிவு இன்றி, தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை. மீண்டும் செமஸ்டர் தேர்வை எழுத உத்தரவிட்டதை அடுத்து, இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.வருகைப்பதிவு பிரச்னை மையமானது என்றாலும், கல்லுாரி நேரத்தில் மது அருந்தி, மாணவர்கள் மத்தியில் பிரச்னையை ஏற்படுத்தியதே முக்கிய பிரச்னை.மாணவர்கள் வகுப்புக்கு சென்று, பாடங்களை படித்து கல்வியறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். கல்லுாரி வளாகத்திலோ, வெளியிலோ தவறான நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது. மாணவ பருவத்தில் அறிவை வளர்த்து, அதன் வழியாக நல்ல பதவியில் அமர்ந்து, நாகரிகமாக வாழ வேண்டும். கல்வி நிறுவனத்தில், கல்விக்கான சூழ்நிலையே நிலவ வேண்டும்.இத்தகைய செயல்பாடுகள் உடையவரை தொடர்ந்து அனுமதித்தால், கல்லுாரி மற்றும் மாணவர்களில் நலனுக்கு உகந்ததாக இருக்காது.எனவே, மனுதாரர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார். பல்கலை விதிமுறைப்படி, தேர்வு எழுத, 75 சதவீதம் வருகைப்பதிவு இருக்க வேண்டும்; இவருக்கு, 54 சதவீதமே உள்ளதால், தேர்வு எழுத முடியவில்லை. இதனால், மீண்டும் செமஸ்டர் தேர்வு எழுதும்படி, அண்ணா பல்கலை உத்தரவிட்டுள்ளது. எனவே, இம்மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.'மாணவர்கள் மது மயக்கத்தில் வரக்கூடாது; மீறி வந்தால், கல்லுாரியில் இருந்து நீக்கப்படுவர்; கல்லுாரி வளாகத்திற்குள்ளும் அனுமதிக்கப்படமாட்டார்கள்' என்ற நிபந்தனையை, விளக்க குறிப்பேட்டில் சேர்க்கும்படி, அனைத்து கல்லுாரிகளுக்கும், சுற்றறிக்கை அனுப்ப, அண்ணா பல்கலைக்கு உத்தரவிடப்படுகிறது. பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்கள் யாரும் தேவை இல்லாத பழக்க வழக்கங்களில் ஈடுபட்டு, பாதிக்கப்பட்டு விடக் கூடாது.நம் மாநிலத்தின் ஒவ்வொரு மூலையிலும், டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்பட்டு, கஷ்டப்பட்டு சம்பாதித்த மக்களின் பணம் உறிஞ்சப்படுகிறது; எஞ்சியதே குடும்பத்திற்கு செல்கிறது. இதனால், வீட்டில் இருக்கும் பெண்கள் கூட, வேறு பணிகளுக்கு செல்லும் நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. பள்ளி செல்லும் மாணவர்கள் உட்பட, பலர் மதுவுக்கு அடிமையாகின்றனர். சமூகத்திற்கு தீங்கான இப்பிரச்னைக்கு, அரசு தீர்வு காண வேண்டும்.இவ்வாறு நீதிபதி, கிருபாகரன் உத்தரவிட்டார்.




Sunday, April 22, 2018

மனதுக்கு வயது இல்லை- ஏப்ரல் 21,2014

Published : 21 Apr 2014 08:32 IST

மனநல மருத்துவர் ஜி.ராமானுஜம்

அதிகாலை நேரம். அந்த பெரியவர் எழுந்து மடமடவெனக் குளிக்கிறார். நல்ல உடைகளை அணிந்துகொள்கிறார். பிறகு மனைவியைப் பார்த்து ‘‘நான் வேலைக்குக் கிளம்ப வேண்டும். இன்னுமா சாப்பாடு தயார் பண்ணவில்லை?’’ என்று சத்தம் போடுகிறார். 70 வயதாகும் அந்த பெரியவர் வேலையில் இருந்து ஓய்வு பெற்று 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றன. அதையே மறந்துவிட்டார்.

வயதானால் எல்லோருக்கும் மறதி ஏற்படத்தான் செய்யும். சிலருக்கு அது அதி தீவிரமாக இருக்கும்.

டிமென்ஷியா (Dementia) என்று அழைக்கப்படும் இந்த நோய் சாதாரண மறதிபோல ஆரம்பித்தாலும் சில ஆண்டுகளில் நினைவுத் திறன் வெகுவாகக் குறைந்துவிடும். ஆனால் மூளையில் ஏற்கெனவே பதிந்துள்ள விஷயங்கள், குறிப்பாகப் பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விஷயங்கள் மறந்து போகாமல் நினைவில் இருக்கும். இடம், காலம் பற்றிய குழப்பம் வரலாம். தாம் இருப்பது பல ஆண்டுகளுக்கு முன்பு வசித்த வீடு அல்லது ஊர் என்று நினைத்துக் குழப்பிக்கொள்வார்கள்.

எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தின் அருமையான சிறுகதை ஒன்று உண்டு. அதில் நயாகரா நீர் வீழ்ச்சிக்குச் சென்ற முதியவர் ஒருவர் அமெரிக்கா கனடா எல்லையில் வழி மறந்து எதிர் நாட்டுக்குப் போய்விடுவதாக இருக்கும் அக்கதை. அதுபோல காய்கறி, பால் வாங்க வெளியே சென்றால் முதியவர்கள் வழி மறந்து தொலைந்துபோய் விடுவார்கள்.

இன்னும் சிலருக்குச் செயல்திறனும் இழக்கத் தொடங்கிவிடும். சட்டை போடுவது, பல் தேய்ப்பது போன்ற செயல்களை எப்படிச் செய்வது என்றுகூட மறந்து விடும். ஆட்களை அடையாளம் காண்பதிலும் குழப்பம் இருக்கும். பேப்பர்காரரைப் பேரன் என்று நினைத்துப் பேசிக் கொண்டிருப்பார்கள்.

இதுபோன்ற மறதிகள் இருக்கும்போது, ‘வயதானால் இதெல்லாம் சகஜம்’ என்று நினைத்து விட்டுவிடக் கூடாது. இந்த நோயைக் கட்டுப்படுத்தக்கூடிய மருந்துகள் இருக்கின்றன.

காலக் குழப்பம் இருப்பதால் பெரிய கடிகாரம், பெரிய காலண்டர் ஆகியவற்றை இவர்களது கண்ணில் படும்படி மாட்டிவைக்க வேண்டும். அடிக்கடி நாள் கிழமை தேதிகளை இவர்களிடம் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும்.

குடும்ப நபர்கள் அடங்கிய பெரிய புகைப்படத்தை ஹாலில் மாட்டி வைக்கலாம். சாப்பிட்டது, குளித்தது போன்றவற்றை தினமும் டைரி ஒன்றில் எழுதிக் காட்டலாம்.

குறிப்பாகச் சிலர் மாத்திரை சாப்பிட்டதையே மறந்து மீண்டும் மீண்டும் சாப்பிட்டு விடுவார்கள். இதுபோன்ற ஆபத்தைத் தடுக்க அவர்களுக்கான மாத்திரைகளை திங்கள், செவ்வாய் என்றும் காலை, மாலை என்றும் தனித்தனியாக ஒவ்வொரு வேளையாகப் பிரித்து வைக்க வேண்டும்.

எல்லாவற்றையும்விட முக்கியமாக, தினமும் கொஞ்ச நேரமாவது வயதானவர்களை வெளியில் அழைத்துச் சென்றும் அவர்களிடம் பேசியும் அன்று நடந்த விஷயங்களைப் பகிர்ந்துகொண்டும் நேரத்தைச் செலவிட வேண்டும். மறதியை விடப் புறக்கணிப்பு கொடுமையானது.
மனசு போல வாழ்க்கை- 20: கற்கண்டுச் சுவைதானே கல்வி!

Published : 04 Aug 2015 12:15 IST


டாக்டர். ஆர். கார்த்திகேயன்




படிப்பது மாணவர்களுக்குப் பெரும் பிரச்சினையாக இருப்பது, படிப்பதை நினைவில் வைத்துக் கொள்வதும் அதைச் சிறப்பாக தேர்வில் எழுதுவதும்தான்.

அறிவுத்திறன் அபாரமாக உள்ள பல பிள்ளைகள்கூட தேர்வுகளில் சிறப்பாகச் செய்வதில்லை. பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் படிப்பில் கவனம் செலுத்தவே சிரமப்படுவதாகக் குறைபடுகின்றனர். என்ன படித்தாலும் தேர்வு நேரத்தில் பதற்றப்படுவதாகச் சொல்லும் மாணவர்களை நிறைய இருக்கிறார்கள். ஒரு தேர்வில் சற்று மதிப்பெண்கள் குறைந்தாலே வாழ்க்கையே முடிந்துவிட்டதாக மாணவர்கள் நினைப்பதும் தெரிகிறது. பல பெற்றோர்களும் ஆசிரியர்களும் வேறு அந்த மாதிரி நினைக்க வைக்கின்றனர். மாணவர்கள் சிறப்பாகப் படிக்க, தேர்வெழுத நம் நேர்மறை சிந்தனை முறையான அஃபர்மேஷனை எப்படிப் பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்!

உளவியல் வன்முறை

இன்று மாணவர்களைப் பந்தயக் குதிரைகள் போல ஆக்கிக்கொண்டிருக்கிறோம். பெற்றோரின் பெருமை காக்கவும், பள்ளியின் ‘ரிசல்ட்’ காக்கவும், நண்பர்கள் மத்தியில் மானம் காக்கவும் அவர்கள் தொடர்ந்து மன உளைச்சலில் துடிக்கிறார்கள். சுதந்திரமான போக்கில் படிக்கும், தேர்வெழுதும் நிலை இன்று இல்லை. அவர்கள் சுய மதிப்பு தொடர்ந்து காயப்பட்டுக்கொண்டே இருக்கிறது.

பல பள்ளிகளில் பேதப்படுத்துவதையும் அவமானப்படுத்துவதையும் தண்டிப்பதையும் படிப்பதற்கான கிரியா ஊக்கிகளாக பயன்படுத்தி வருகிறார்கள். மின்சாரக் கம்பிக்குப் பயந்து சொன்னதைச் செய்யும் சர்க்கஸ் மிருகம் போலத் தண்டனையிலிருந்தும் அவமானத்திலிருந்தும் தப்பிக்க மாணவர்கள் படிக்கிறார்கள். மதிப்பெண்களுக்குத் தக்கவாறு செக் ஷன் பிரிப்பது, பெஞ்சுகள் அமைப்பது, மரியாதை கொடுப்பது எனச் செய்வதாகப் பல பெற்றோர்கள் புகார் கொடுக்கிறார்கள். உடல்ரீதியான தாக்குதல்கள் வகுப்பறைகளில் குறைந்திருந்தாலும், உளவியல் வன்முறைக்குக் குறைவில்லை.

பொய்ச் சமூகங்கள்

பல ஆசிரியர்கள், படிக்காத மாணவர்கள் என்றால் அவர்களை மட்டமாக நடத்துகிறார்கள். பெற்றோர்- ஆசிரியர் கூட்டங்களில் பெற்றோர்கள் கூனிக் குறுகி நிற்பதைப் பார்க்கிறோம். தான் ஒன்றுக்கும் லாயக்கில்லை என்ற எண்ணத்தை ஒரு மாணவனுக்கு மிக எளிமையாக ஒரு ஆசிரியரால் ஏற்படுத்த முடியும். அவ்வளவு வலிமையான ஆயுதம் ஆசிரியர்களிடம் உள்ளது. திட்டுவதை விடப் புறக்கணித்தல் மிக மோசமானது. ஒப்பிட்டுப் பேசுவது, படிக்காததால் பெற்றோருக்கு அவமானம் எனச் சொல்லி மறுக வைப்பது எனும் அணுகுமுறைகள் மாணவர்கள் மன நிலையை முழுவதுமாக எதிர்மறையாகத் திருப்பி விடுகின்றன.

தொழில்நுட்பத்தால் கவனக்குறைவு இன்று எல்லா வயதினருக்கும் வந்துவிட்டது. ஸ்மார்ட் ஃபோனைக் கைக்குழந்தையைப் பார்ப்பது போலச் சதா அதையே பார்த்துக் கொண்டிருக்கிறோம். விக்கினால் கூட வாட்ஸ் அப்பில் வீடியோ எடுத்து அனுப்பிவிடுகிறார்கள். ஃபேஸ்புக்கும் ட்விட்டரும் இன்ஸ்டாகிராமும் பல பொய் சமூகங்களை வடிவமைத்துவருகின்றன. டி.வியில் சதா சர்வ காலமும் ஏதோ ஒரு சினிமா ஓடிக்கொண்டிருக்கிறது. தேர்வு நேரத்தில்தான் 20-20 விளையாடுவார்கள் அல்லது மோட்டோ ஜி.பி. ரேஸில் பைக் ஓட்டுகிறார்கள். படிப்பிலிருந்து கவனத்தை சிதற வைக்கக் கோடிக் காரணங்கள் உண்டு. நம் காலத்தில் இவை இருந்ததில்லை. ஆதலால் ஆதரவோடும் புரிதலோடும் நம் பிள்ளைகளை அணுகுவது முக்கியம்.

ஆசையோடு படித்தல் என்பது மிக முக்கியம். ஆனால் பிடிக்காத பாடம் அல்லது பிடிக்காத குரூப் எனும்போது ஆசையை விடப் பயமும் வெறுப்பும்தான் மிஞ்சுகிறது. கணக்குப் படிக்காவிட்டால் குடி முழுகிப் போய்விடும் என்று சொல்லி வராத பாடத்தில் போட்டு வாழ்க்கையைக் கெடுத்த பல பெற்றோர்களை எனக்குத் தெரியும்.

சம்மதிக்காமல்

கற்றல் இங்கு அயர்ச்சியையும் மன உளைச்சலையும் தருவதால் மாணவர்களுக்கு நம்பிக்கையும் ஊக்கமும் குறைந்து தோல்வி பயமும் மன நெருக்கடியும் இயல்பாக வந்து விடுகின்றன. இந்தப் பின்னணியில் தான் மாணவர்களின் தற்கொலை முயற்சிகளைப் புரிந்துகொள்ள வேண்டும்.

மாணவர்களுக்கு என் நேரடி விண்ணப்பம் இதுதான்: உங்கள் வாழ்க்கையில் கல்வி ஒரு அங்கம். அதை ரசித்துச் செய்ய முடியும். அதன் வெற்றி தோல்விகள் நீங்கள் நினைக்கும் அளவுக்கு வாழ்க்கையை மாற்றிப் போடாது. உங்களுக்கான படிப்பை, வேலையை, துறையைத் தேர்ந்தெடுக்கும்போது நீங்கள் சிறப்பாகச் செய்வீர்கள். உங்களுக்கு யாரும் போட்டி அல்ல. நீங்கள் சம்மதிக்காமல் யாரும் உங்களை அவமானப்படுத்த முடியாது. உங்களால் எதையும் செய்ய முடியும். அதை நீங்கள் எக்காலத்திலும் மறக்கக் கூடாது.

பயமில்லாமல் ஆசையோடு எந்தக் கட்டாயமுமின்றிப் படிப்பது காலத்துக்கும் நிலைக்கும். புரிந்து படிக்கவும் உதவும். படித்ததைச் செயல்படுத்தவும் நம்பிக்கை தரும். பிறருக்காகப் படிப்பதை விடுத்துத் தனக்காகப் படிக்கையில் ஊக்கம் தானாக வரும்.

படிப்பது தியானம் போல. அது உள்ளுக்குள் நிகழும் ரசவாதம். அதை உணர்ந்து ரசித்து அனுபவித்துச் செய்ய முடியும்.

விடுமுறை நாளில் படுத்தவாறு கையில் காபியுடன் பிடித்த கதைப் புத்தகத்தை ஆழ்ந்து படிப்பது போலப் பாடப் புத்தகத்தையும் மனம் லயித்துப் படிக்க முடியும்.

‘கற்பது கல்லை உடைப்பது போலல்ல; கற்கண்டு சுவைப்பது போல’ என்பதை மனம் நம்பும்போது கற்றல் அனுபவம் ஒரு சுக அனுபவமே!

மாணவர்கள் கீழ்க்கண்ட அஃபர்மேஷன்களை பயன்படுத்தலாம்:

“நான் முழு ஆர்வத்துடனும் கவனத்துடனும் கற்கிறேன்.”

“நான் என் மீது பூரண சுய மதிப்பும் நம்பிக்கையும் கொள்கிறேன்.”

“நான் எல்லாத் தேர்வுகளிலும் என் அதிகபட்சத் திறமையை வெளிப்படுத்துகிறேன்.”

“நான் விரும்பிய துறையை ஏற்று, அதில் சிறப்பாகக் கற்கிறேன்.”

“நான் படிப்பது தொடர்பான அனைத்து எதிர்மறை எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் வெளியேற்றுகிறேன்.”

தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com
குருட்டு' பக்தி!

- தென்கச்சி சுவாமிநாதன்

 
. கர்ணனின் கதையை மாணவர்களிடையே விளக்கிக் கொண்டிருந்தார் அந்த ஆசிரியர்.

''தன் குருநாதரின் மேல் அதீத பக்தி கொண்டிருந்தவன் கர்ணன். ஒருமுறை, அவனின் ஆசிரியரான பரசுராமன், சற்று நேரம் களைப்பாற எண்ணினார். இதை உணர்ந்த கர்ணன், அருகிலிருந்த மரத்தடியில் அமர்ந்தான். உடனே, அவனது ஒரு தொடையில் தலை வைத்துப் படுத்த பரசுராமன் சற்று நேரத்தில் தூங்கிப் போனார்.

இந்த நிலையில், கர்ணனின் மற்றொரு தொடையின் மீது வந்து அமர்ந்த காட்டு வண்டு ஒன்று, அவன் தொடையைத் துளைக்க ஆரம்பித்தது. ரத்தம் பொங்கியது. பல்லைக் கடித்தபடி வலியைப் பொறுத்துக் கொண்டான் கர்ணன். சிறிது அசைந்தாலும் குருநாதரின் தூக்கம் கெட்டு விடுமே என்ற எண்ணம் அவனுக்கு.

ஆம்! ஆசிரியர் அமைதியாகத் தூங்க வேண்டும் என்பதற்காக, தனக்கு ஏற்பட்ட அந்த சித்ரவதையை தாங்கிக் கொண்டான் அந்த மாணவன்!''

- கதையைக் கூறி முடித்த ஆசிரியர், ''என் அருமை மாணவர்களே... நீங்களும் கர்ணனைப் போன்று உங்கள் ஆசிரியரின் மீது பக்தி செலுத்த வேண்டும். செய்வீர்களா?'' என்று கேட்டார்.

''நிச்சயம் செய்வோம்!'' - ஒட்டு மொத்த மாணவர்களும் உரக்கக் குரல் கொடுத்தனர்.

மகிழ்ச்சியடைந்த ஆசிரியர் தொடர்ந்தார்...

''சரி... நானும் பரசுராமனைப்போல் உங்களின் தொடையில் தலை வைத்துப் படுத்திருக்கிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது, கர்ணனுக்கு நிகழ்ந்தது போலவே உங்கள் தொடையையும் வண்டு துளைத்தால் என்ன செய்வீர்கள்?''

மாணவர்கள் பதில் சொன்னார்கள் ''நாங்களும் அவனைப் போலவே பல்லைக் கடிச்சிக்கிட்டு வலியைப் பொறுத்துக்குவோம்!''

உற்சாகம் அடைந்த ஆசிரியர் ஆர்வத்துடன் கேட்டார் ''ஏன் அப்படிச் செய்யணும்?''

மாணவர்கள் சொன்னார்கள்... ''நீங்க முழிச்சிக்கிட்டா பாடம் நடத்த ஆரம்பிச்சுடுவீங்களே... அதான்!''

- இந்த குருபக்தியை போன்றுதான் இன்றைக்கு சிலரது தெய்வ பக்தியும் இருக்கிறது.

ஆண்டவன் பேரைச் சொல்லி தங்களை வருத்திக் கொள்கிறார்கள். அதன் நோக்கம், 'இதை விட பெரிய வருத்தம் ஏதும் வந்துவிடக் கூடாதே' என்பதுதான்.

அழகான இயற்கைக் காட்சியைப் பார்க்கிறோம்.அதன்மேல் ஒரு காதல் பிறக்கிறது. உடனே, அந்த இயற்கைக் காட்சியிடம் இருந்து எதையாவது நாம் எதிர்பார்க்கிறோமா? அல்லது அதுதான் நம்மிடமிருந்து எதையாவது எதிர்பார்க்கிறதா?

அதுமாதிரிதான் கடவுளையும் நாம் நேசிக்க வேண்டும். நம்மால் அவரை நேசிக்காமல் இருக்க முடியாது என்ற நிலை வரவேண்டும். அதற்குப் பெயர்தான் பக்தி என்கிறார் சுவாமி விவேகானந்தர். ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். கடவுளே உங்கள் தொடையில் தலை வைத்துப் படுத்தாலும், அவருக்காக நீங்கள் எந்தத் துன்பத்தையும் ஏற்க வேண்டிய அவசியம் இல்லை!
பதின் பருவம் புதிர் பருவமா? - இதுவும் ஒரு போதைதான்

Published : 26 Mar 2016 12:11 IST
 
டாக்டர் ஆர்.காட்சன்





காற்று புக முடியாத இடங்களில்கூட நுழைந்துவிடும் இணையதளம், அலைக்கற்றைகள் பெற்றோரின் கண்களை மறைத்துவிடுவதில் ஆச்சரியமில்லை. சில வருடங்களுக்கு முன்வரை வளர் இளம்பருவத்தினரின் நடவடிக்கைகளைப் பெற்றோர் நேரடியாகக் கண்காணிக்க முடிந்தது. “இவ்வளவு நேரம் ரோட்டில் நின்று என்ன கதை பேசுற” என்று பெற்றோரோ, ‘‘உங்க பையன் பஸ் ஸ்டாண்ட் கிட்ட ஒரு பொண்ணுகிட்ட ரொம்ப நேரமா பேசிக்கிட்டு இருந்ததைப் பார்த்தேனே’’என்று அப்பாவிடம் போட்டுக்கொடுக்கும் அண்ணாச்சியோ இணைய உலகத்தில் நடப்பதைக் கண்காணிக்க முடியாது. அதுவும் கல்லூரிக்குள் நுழைந்துவிட்டால் இணையதளம், மொபைல் போனை அவர்கள் பயன்படுத்துவதற்கு நேரம் காலம் இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது.

இணைய போதை

இணைய அடிமைத்தனத்தை (Internet addiction) பற்றி மருத்துவர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தபோது ‘என்ன பாஸ் நீங்க, எதை எடுத்தாலும் அடிமைத்தனம்னு சொல்றீங்க, மனநலப் பாதிப்புன்னு சொல்றீங்க. அதனால எத்தனை நல்ல விஷயங்கள் கிடைக்குது, நீங்க இப்படிச் சொன்னா நாங்க என்னதான் பண்றது?’என்று கேட்டார். அவர் கேட்டதில் நியாயம் இருக்கத்தான் செய்தது. வலைதளம் என்பது சமீபகாலமாக மனிதனின் வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது உண்மைதான். ரயில், பஸ் டிக்கெட் புக் செய்வதிலிருந்து வரன் பார்ப்பதுவரை பல்வேறு அன்றாட தேவைகளுக்கு இணையதளம் மற்றும் மொபைல்போன் கண்டிப்பாகத் தேவைப்படுகிறது.

ஆனால், நம் கண்களை மறைக்கும் விஷயமாக, பலருடைய அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் ஒன்றாகவும் அது மாறிவருவதைப் பற்றித் தெரிந்துகொள்வது அவசியம். பெரும்பாலோர் குடிக்கிறார்கள் என்ற ஒரே காரணத்துக்காக, ‘மது' ஒரு போதை வஸ்துவே இல்லை என்று சொல்லிவிட முடியாதில்லையா? (பார்க்க: பெட்டிச் செய்தி)

பிரச்சினையின் தீவிரம்

புள்ளிவிவரங்களின்படி அமெரிக்காவில் 8-18 வயதுக்கு உட்பட்ட இளம்பருவத்தினரில் 23 சதவீதம் பேர் இணையதளம் அல்லது ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகி உள்ளனர். சீனாவில் 13 சதவீதம் வளர்இளம் பருவத்தினர் இணையதள அடிமைகளாக உள்ளனர். இந்தப் புள்ளிவிவரங்களில் மேற்கத்திய நாடுகளுக்குக் குறைச்சலில்லாமல் இந்தியாவும் இடம்பெற்றிருப்பது மட்டுமல்லாமல், இணையதளத்தைப் பயன்படுத்தும் இரண்டாவது பெரிய நாடான சீனாவுக்கு அடுத்துப் பெரிய நாடாக இந்தியா உருவெடுத்துவருவது பெருமைக்குரிய விஷயமல்ல, முன்னெச்சரிக்கையோடு அணுகவேண்டிய விஷயமும்கூட.

தென்கொரியாவில் நடத்தப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பின்படி சுமார் இரண்டு சதவீதம் சிறார்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மருந்துகள் மூலம் சிகிச்சை பெறும் அளவுக்கு இணையதளம் மற்றும் கணினிகளுக்கு (ஸ்மார்ட் போன் உட்பட) அடிமையாக மாறியிருக்கிறார்கள் என்பது அதிர்ச்சிக்குரிய செய்தி. இத்தனை விரிவாக இதைப் பரிசீலிக்க வேண்டியதற்கான காரணம் ‘மொபைல்போன், இணையதளம் போன்றவை அப்படி என்ன செய்துவிடும்?’ என்று நாம் மெத்தனமாக இருந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான்.

எளிதில் அடிமையாவது யார்?

இணையதளத்தைப் பயன்படுத்தும் எல்லோரும் அதற்கு அடிமையாகிவிடுவதில்லை. நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவாக உள்ளவர்களை எவ்வாறு கிருமிகள் எளிதில் தாக்குகின்றனவோ, அதுபோலச் சில குறிப்பிட்ட பிரச்சினையுள்ள வளர்இளம் பருவத்தினர் எளிதில் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. பின்வரும் வகையினர் அதிகம் பாதிக்கப்படக் கூடும்.

>> மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள்.

>> இயற்கையாகவே அதிகப் பதற்றத் தன்மை உள்ளவர்கள்.

>> கூச்ச சுபாவம் உள்ளவர்கள்.

>> படிப்பில் பின்தங்கியுள்ள மாணவர்கள்.

>> கற்றல் திறன் குறைபாடு உள்ள குழந்தைகள்.

>> சமூகப் பழக்கங்கள் குறைந்த அளவில் மட்டுமே கிடைக்கும் குழந்தைகள்.

>> அதிகத் துறுதுறுப்பு மற்றும் கவனக் குறைவு நோயால் பாதிக்கப்படும் சிறார்கள் (ADHD).

>> மிதமான அளவு ஆட்டிசம் (Autism) பாதிப்புக்கு உள்ளானவர்கள்.

>> தாழ்வு மனப்பான்மை கொண்டவர்கள்.

>> அதிக வேலைப்பளு மற்றும் படிப்பு திணிக்கப்படும் சிறார்கள்.

>> சிறு வயதிலேயே சமூக விரோதச் செயல்கள் மற்றும் போதைப் பழக்கங்களுக்கு ஆளாகும் வளர்இளம் பருவத்தினர்.


எது இணைய அடிமைத்தனம்?

இணையதளம் மற்றும் ஸ்மார்ட் போனைக் கல்வி, தொழில் பொழுதுபோக்கு போன்ற காரணங்களுக்காக அன்றாடம் பயன்படுத்துவது அடிமைத்தனம் அல்ல. ஆனால், அதைத் தவிர மற்ற நேரங்களில் பின்வரும் காரணங்களுக்காக ஒருவர் அதிகம் பயன்படுத்தினால், அவர் இணையத்துக்கு அடிமையானதாக எடுத்துக்கொள்ளலாம்:

>> நாளுக்கு நாள் இணையதளம் (பேஸ்புக், வாட்ஸ்அப் உட்பட) பயன்படுத்தும் நேரம் அதிகரித்துக்கொண்டே செல்லுதல்.

>> ஆரம்பத்தில் தீர்மானித்த நேரத்தை விட அதிக நேரம் சென்ற பின்னும் கட்டுப்படுத்த முடியாத தன்மை.

>> அதிக நேரம் செலவழித்தால்தான் திருப்தி என்ற தன்மை அல்லது இணையதளப் பயன்பாட்டுக்காக ஒரு அப்ளிகேஷனையோ, மொபைல் போன், லேப்டாப், டேப்களில் திருப்தியில்லாமல் அடிக்கடி மாற்றிக்கொண்டே இருப்பது.

>> வலைதளத்தில் நேரம் விரயமாவதால் படிப்பு, விளையாட்டு, பிறருடன் நேரடியாகச் செலவிடும் நேரம் உட்பட மற்ற முக்கிய வேலைகளைப் புறக்கணிக்க ஆரம்பிப்பது.

>> வலைதளத்தில் நேரம் விரயமாவதால் படிப்பு, விளையாட்டு, பிறருடன் நேரடியாகச் செலவிடும் நேரம் உட்பட மற்ற முக்கிய வேலைகளைப் புறக்கணிக்க ஆரம்பிப்பது.

>> பெற்றோரிடம் இணையப் பயன்பாட்டைப் பற்றிய தகவல்களை மறைப்பது அல்லது பொய் சொல்வது.

>> அன்றாட வாழ்க்கையில் பாதிப்புகளை ஏற்படுத்துவது தெரிந்தும், விட முடியாத நிலை.

>> இணையதளத் தொடர்பு மற்றும் மொபைல் போன் இல்லாமல் ஒருநாள் இருந்தாலும் எதையோ பறிகொடுத்த உணர்வு, எரிச்சல், கோபம், மன உளைச்சல், தூக்கமின்மை, பதற்ற உணர்வு, உடல் மற்றும் மனச்சோர்வு ஆகியவை ஏற்படுவது.

>>படிப்பு உட்பட வாழ்க்கையின் மற்றப் பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக்கொள்ளும் ஒரு வடிகாலாக, இணையதளச் செயல்பாடுகளை அணுகுவது.
மனதுக்கு இல்லை வயது!- 17:04:14

Published : 17 Apr 2014 12:01 IST

பேராசிரியர்கள் இராம.சீனுவாசன்
வே.ராஜி சுகுமார்

நாற்பது வயதை கடக்கும் ஒவ்வொருவருக்கும் அறுபது வயது முதல் தனது பொருளாதார தேவையை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்கிற அச்சம் கலந்த சந்தேகம் இருக்கும். பிரச்சினையை எதிர்கொள்வதுதான் பிரச்சினையைத் தீர்க்கும் ஒரே வழி.

நாற்பது வயதில் உள்ள நீங்கள் உங்கள் குடும்பத்துடன் வாழ மாதம் முப்பதாயிரம் ரூபாய் தேவை என்று வைத்துக்கொள்வோம். விலைவாசியில் எந்த மாற்றமும் இல்லை என்றால் 20 ஆண்டுகளுக்கு பின்பும் உங்களுக்கு மாதம் முப்பதாயிரம் ரூபாய் இருந்தால் போதுமானது. ஆனால், விலையேற்றம் நடந்தே தீரும். ஆண்டுக்கு 7 சதவீதம் விலையேற்றமாக வைத்துக்கொண்டால்கூட 20 ஆண்டுகளுக்குப் பிறகு குறைந்தது மாத செலவுக்கு 1.20 லட்சம் ரூபாய் தேவை.

அப்படி எனில் 1.20 லட்சம் மாத வட்டி வரக்கூடிய அளவுக்கு உங்களது சேமிப்பு அன்றைய தினம் எவ்வளவு இருக்க வேண்டும்? மாதம் 1.20 லட்சம் ரூபாய் வட்டி வருவாய் வர வேண்டும் என்றால் வருடத்திற்கு 14.40 லட்சம் ரூபாய் கிடைக்கும். வட்டி ஏழு சதவீதம் என்று வைத்துக்கொண்டால் உங்களிடம் அறுபது வயதில் இரண்டு கோடி ரூபாய் முதலீடு இருக்க வேண்டும். ஆக, உங்கள் செலவுகள் நீங்கலாக நீங்கள் இன்னும் 20 ஆண்டுகளில் இரண்டு கோடி ரூபாய் சேமிக்க வேண்டும். இதற்கு ஆண்டுதோறும் 4.80 லட்சம் ரூபாயை 7 சதவீத வட்டியில் முதலீடு செய்யவேண்டும்.

அறுபது வயதுக்கு மேல் வருடம் 7 சதவீதம் விலையேற்றமும், உங்களது மருத்துவ செலவுகளும் அதிகரிக்கும்போது, உங்களுக்கு அடுத்தடுத்த ஆண்டுகளில் இன்னும் கூடுதலாக பணம் தேவைப்படும். இதனை சமாளிக்க மேலும் ஒரு கோடி ரூபாய் தேவைப்படலாம். மனம் தளர வேண்டாம். இத்தனையையும் சமாளிக்க வழிகள் உண்டு!

ஒவ்வொரு நாள் காலையும் சீக்கிரம் படுக்கையை விட்டு எழும்போது அன்றைய தினத்தில் நமக்கு வேலை செய்ய கூடுதல் நேரம் கிடைக்கும். அதைப்போலதான் சேமிப்பும். சீக்கிரமே சேமிக்க ஆரம்பியுங்கள்.

பிரச்சினையை எளிதில் சமாளிக்கலாம். மேலே சொன்னதுபோல் இரண்டு கோடியை இருபது ஆண்டுகளில் சேமிக்க ஆண்டுக்கு 4.80 லட்சம் ரூபாய் தேவை. இதையே நீங்கள் முப்பது வயதிலிருந்தே ஆரம்பித்தால் ஆண்டுக்கு 2.12 லட்சம் ரூபாய் சேமித்தாலே போதும்.

இது எப்படி சாத்தியம்? முப்பது வயதில் ஆண்டுக்கு 2.12 லட்சம் ரூபாய் சேமித்தால் அடுத்த 10 ஆண்டுகளில் அது 29 லட்சம் ரூபாயாக மாறும். அதனை அடுத்த 20 ஆண்டுகளில் மீண்டும் முதலீடு செய்தால், அதுமட்டுமே ஒரு கோடி ரூபாயைத் தாண்டும். தொலைநோக்கு பார்வையிலான இளமையில் சேமிப்பு என்பது எவ்வளவு அவசியம் என்பது இப்போது புரிந்திருக்கும்!

NEWS TODAY 30.06.2026