Friday, June 8, 2018

மாநில செய்திகள்

‘நீட்’ தேர்வில் தோல்வி அடைந்த மற்றொரு மாணவி தற்கொலை உருக்கமான தகவல்கள்





விழுப்புரம் பிரதீபாவை தொடர்ந்து ‘நீட்’ தேர்வில் தோல்வி அடைந்த திருச்சியை சேர்ந்த சுபஸ்ரீ என்ற மாணவியும் தற்கொலை செய்துகொண்டார்.

ஜூன் 08, 2018, 04:45 AM

திருச்சி,

விழுப்புரம் மாவட்டம் பெருவளூரை சேர்ந்த மாணவி பிரதீபா நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். பிரதீபா மரண செய்தி தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இந்த சோகம் அடங்குவதற்கு முன்பாக திருச்சியில் மற்றொரு மாணவி தற்கொலை செய்துகொண்டார்.

திருச்சி அருகே உள்ள உத்தமர் கோவிலை சேர்ந்தவர் கண்ணன் (வயது 47). அரசு போக்குவரத்து கழக டிரைவரான இவர் அண்ணா தொழிற்சங்கத்தின் கிளை தலைவராகவும் உள்ளார். இவரது மனைவி செல்வி, மகள் சுபஸ்ரீ (17), மகன் மிதுன் (13).

மருத்துவராக விரும்பிய சுபஸ்ரீ பிளஸ்-2 தேர்வில் 907 மதிப்பெண்கள் பெற்று இருந்தார். ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் மருத்துவ படிப்பில் சேரமுடியும் என்பதால் தனியார் பயிற்சி நிறுவனம் ஒன்றில் சேர்ந்து சிறப்பு பயிற்சி பெற்று நீட் தேர்வை எழுதினார்.

ஆனால் ‘நீட்’ தேர்வில் அவர் 24 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றிருந்தார். இதனால் அவரது டாக்டர் படிப்பு கனவு தகர்ந்துபோனது. தேர்வு முடிவு வெளியானதில் இருந்தே அதிகம் பேசாமல் சுபஸ்ரீ சோகமாக இருந்தார். அவரை பெற்றோர் சமாதானப்படுத்தினர். ஆனாலும் அவர் சோகமாகவே இருந்தார். இதனால் அவரை திடப்படுத்துவதற்காக பெற்றோர் நேற்று முன்தினம் மாலை காலபைரவர் கோவிலுக்கு அழைத்துச்சென்றனர்.

பின்னர் வீடு திரும்பியதும் இரவு 10 மணி அளவில் தனது அறையில் இருந்த சுபஸ்ரீ திடீரென துப்பட்டாவால் மின் விசிறியில் தூக்குபோட்டுக் கொண்டார். இதனை அறிந்த அவரது பெற்றோர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் உடலை கீழே இறக்கி ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். ஆனால் வழியிலேயே சுபஸ்ரீ பரிதாபமாக இறந்துவிட்டார்.

இதுபற்றி கொள்ளிடம் டோல்கேட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். போலீசார் சுபஸ்ரீயின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். நேற்று காலை சுபஸ்ரீயின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. பல்வேறு அரசியல் கட்சியினர், அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் சுபஸ்ரீயின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள்.

போக்குவரத்து அமைச்சர் விஜயபாஸ்கர், தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் கண்ணனை செல்போனில் தொடர்புகொண்டு ஆறுதல் தெரிவித்தனர். இதனையடுத்து சுபஸ்ரீ உடல் மின்மயானத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

சுபஸ்ரீயின் தந்தை கண்ணன் கூறும்போது, “நீட் தேர்வில் தவறான பதிலுக்கு மதிப்பெண் மைனஸ் ஆகும் என்பதை மறந்து, அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்திருக்கிறாள். இதனால் வெகுவாக மதிப்பெண்கள் குறைந்து விட்டது. நாங்கள் பரவாயில்லை, வெளிநாட்டுக்கு அனுப்பி மருத்துவம் படிக்கவைக்கிறோம் என்றோம். இருப்பினும் 3 நாட்களாக அமைதியாக இருந்தவள் இப்படி ஒரு விபரீத முடிவை எடுத்துவிட்டாள். என் மகளைபோன்ற முடிவை எந்த மாணவியும் தேடிக்கொள்ள வேண்டாம். எங்கள் நிலைமை இனி எந்த பெற்றோருக்கும் வரக்கூடாது. தமிழ்நாட்டுக்கு ‘நீட்’ தேர்வு கூடாது” என்றார்.
தலையங்கம்

வேலையில்லா திண்டாட்டத்தின் கொடூரம்





தமிழ்நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது.

ஜூன் 08 2018, 03:00

தமிழ்நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. இன்ன வேலைக்காக படிக்கிறோம், அந்த வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில், வங்கிகளில் கடன்வாங்கி படிக்கும் மாணவர்கள் அந்த வேலை கிடைக்காமல், என்ன வேலை கிடைத்தாலும் சரி, எவ்வளவு சம்பளம் கிடைத்தாலும் சரி, தன் சாப்பாட்டு செலவுக்கும், வங்கிக்கடனை அடைப்பதற்கும் வருமானம் கிடைத்தால்போதும் என்ற நிலைக்கு ஆளாகி விடுகிறார்கள். பல பட்டங்கள் பெற்றவர்கள் கூட, படிக்காதவர்கள் பார்த்துக் கொண்டு இருக்கும் வேலையை பெறுவதற்கு போட்டிப்போடும் நிலை ஏற்பட்டுவிடுகிறது.

சமீபத்தில் ஐகோர்ட்டில் நடந்த ஒரு வழக்கின்போது, நீதிபதி என்.கிருபாகரன் வேலையில்லாத திண்டாட்டம் எந்த நிலைக்கு போயிருக்கிறது என்பதை எடுத்துக்காட்டி இருக்கிறார். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அப்போது முதுகலை பட்டம் பெற்ற ஆசிரியர்களில் சிலர், பிளஸ்–2 பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தமாட்டோம் என்று போராட்டம் நடத்திக் கொண்டு வந்ததை குறிப்பிட்டு, ‘‘ஆசிரியர்கள் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும். அவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை கிடைத்திருக்கிறது. சென்னை ஐகோர்ட்டில் அடிப்படை சம்பளம் ரூ.7,500–க்காக துப்புரவு பணியாளர்கள் வேலையை பார்த்துக் கொண்டிருக்கும் என்ஜினீயரிங் பட்டதாரிகள், எம்.பில். படித்தவர்களைவிட, ஆசிரியர்கள் நல்லநிலையில் இருக்கிறார்கள் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்’’ என்று கூறியிருக்கிறார். என்ஜினீயரிங் படித்தவர்கள், எம்.பில். படித்தவர்கள் ஐகோர்ட்டில் மட்டும் இத்தகைய சாதாரண பணியில் ஈடுபடவேண்டிய நிலைக்கு தள்ளப்படவில்லை. பல இடங்களில் வேலையில்லா திண்டாட்டத்தின் இத்தகைய நிலையை பார்க்க முடிகிறது. இந்த செய்தி என்றைக்கு பத்திரிகையில் வந்ததோ, அன்றே ‘டிடிநெக்ஸ்ட்’ ஆங்கில பத்திரிகையில் வெளிவந்த ஒரு செய்தி உயர் பட்டங்களை பெற்ற பலர் ‘டாஸ்மாக்’ பார்களிலும், ஓட்டல் சமையல் அறைகளிலும், வீடு வீடாகச் சென்று நுகர்வோருக்கு பொருட்களை வழங்கும் பணியில் இருப்பதை ஆதாரத்துடன் சுட்டிக்காட்டி இருக்கிறது. ‘‘ஒரு புதிய இந்தியாவை இளைஞர் சக்தி என்று சொல்லப்படும் யுவசக்தி கொண்ட இந்தியாவை படைப்பேன்’’ என்று பிரதமர் கூறிக்கொண்டிருக்கும்போது, இவ்வாறு இளைஞர் சக்தி வீணாகிக்கொண்டிருப்பது நிச்சயமாக வருந்தத்தக்கது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும், மாணவர்களுக்கு படிக்கும்போதே ‘திறன் மேம்பாட்டு பயிற்சி’களை அளிக்கவும், ஆங்கிலத்தில் புலமை பெறவும் செய்ய வேண்டும். இதுமட்டுமல்லாமல், வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் நிறைய தொழிற்சாலைகளை தனியார் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொடங்க ஊக்கம் அளிக்கவேண்டும். கனரக தொழிலில் பெரிய பெரிய எந்திரங்கள், கம்ப்யூட்டர்களைக் கொண்டே உற்பத்தி இருக்கும் என்பதால், ஆட்கள் அதிகம் தேவைப்படாது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளை தொடங்குவதன் மூலமாகத்தான் நிறைய வேலைவாய்ப்புகளை பெருக்கமுடியும். இத்தகைய தொழிற்சாலைகளிலும் வேலைபார்ப்பவர்களை மட்டும் உருவாக்காமல், சிறு தொழில்களை தொடங்கும் தொழில் முனைவோரை உருவாக்கும் வகையிலான படிப்புகளை பல்கலைக்கழகங்கள் தொடங்க வேண்டும். எப்படி விவசாயத்திற்கு என தனி பல்கலைக்கழகம் இருக்கிறதோ, பொறியியல் படிப்புக்கு என தனி பல்கலைக்கழகம் இருக்கிறதோ, சட்டப்படிப்புக்கு என தனி பல்கலைக்கழகம் இருக்கிறதோ, ஆசிரியர் படிப்புக்கு என தனி பல்கலைக்கழகம் இருக்கிறதோ, டாக்டர்கள், நர்சுகள் படிப்புக்கு என தனி பல்கலைக்கழகம் இருக்கிறதோ, அதுபோல சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு என தனி பல்கலைக்கழகம் தொடங்கும் முயற்சியை தமிழக அரசு மேற்கொள்ளவேண்டும்.

Thursday, June 7, 2018

பதின் பருவம் புதிர் பருவமா?- 2: என் வழி தனி வழி

Published : 26 Sep 2015 12:57 IST

டாக்டர் ஆ.காட்சன்



‘வர வர அவன் சொன்ன பேச்சைக் கேட்கவே மாட்டேங்கிறான்’… ‘எப்பப் பாரு இவளுக்குக் கண்ணாடி முன்னாடி நின்னுக்கிட்டிருக்கணும்’... பதின் வயதுப் பிள்ளைகள் உள்ள எல்லா வீடுகளிலும் இந்த வசனங்களைக் கேட்க முடியும். வளரிளம் பருவத்தில் வெளிப்படையாகத் தெரியும் மாற்றங்களில், இதெல்லாம் சில உதாரணங்கள் மட்டுமே.

இதுவரை பெற்றோரோடு தூங்கிய மகன்/மகள், தனி அறையை நாடத் தொடங்குவார்கள். இவ்வளவு காலம் தாயின் கையைப் பிடித்து சாலையில் நடந்து சென்றிருந்தாலும், இப்போது வெட்கமாகத் தோன்றும். பெற்றோரின் ஆலோசனையைவிட நண்பர்களின் சொற்கள் வேதவாக்காகத் தெரியும்.

ஆனால், இந்தப் பருவம்தான் தனக்கென்று ஒரு தனித்தன்மை (Identity) மற்றும் அகநிலையை - சுயத்தை (Self) உருவாக்கிக்கொள்ளும் காலம். இது ஆரோக்கியமான மாற்றம்தான்!

பெற்றோரின் பங்கு

இந்த நேரத்தில் ‘ஐயையோ... அவன் அப்படிச் செய்யுறான்.. இவள் இப்படிப் போறா..’ என்று பெற்றோர்கள் புலம்புவதால், பயனில்லை. பிள்ளைகளின் வளர்ச்சி மாற்றத்தைப் புரிந்துகொண்டு, அவர்களுடைய உலகத்தில் பங்கேற்று, அவர்களுக்கு ஆதரவாக இருப்பதுதான் அவசியத் தேவை.

உதாரணமாக, ‘அந்தப் பசங்களுடன் சேராதே' எனக் கட்டளையிடுவதைவிட, பிள்ளைகள் யார் யாருடன் நட்பு கொண்டிருக்கிறார்கள், அவர்களுடன் எப்படிப் பழகுகிறார்கள் என்று சற்றே விலகி நின்று கண்காணிப்பது பலன் தரும். தாங்கள் புறக்கணிக்கப்படுவதாகவோ அல்லது அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுவதாகவோ வளரிளம் பருவத்தினர் நினைத்துவிட்டால் கொஞ்சம் ஆபத்துதான்.

அப்படி நம்பிவிட்டால், பெற்றோரை எதிரியாகப் பார்க்க ஆரம்பிப்பார்கள். உறவு சிக்கலுக்கு உள்ளாகும். இந்தக் கட்டத்தில் அவர்களை அதிகம் சந்தேகப்படுவதோ அல்லது அதிகம் நம்புவதோ, இரண்டுமே அவர்களுடைய மனதைப் பாதிக்கும்.

புதிய பிரச்சினைகள்

‘கூகுள்’ யுகத்துக்கு முன்னால் விடலைப் பருவத்தினரின் நடவடிக்கை மாற்றங்கள் கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருந்தன. அதுவரை கசங்கிய சட்டை அணிந்தவன், திடீரென்று அயர்ன் செய்து நீட்டாக அணிய ஆரம்பிப்பது, எண்ணெய் வழியத் தலைசீவி சென்றவள் சிகை அலங்காரத்தை மாற்றச் சிரத்தையெடுப்பது போன்றவையெல்லாம் நடக்கும். அதையெல்லாம் தாண்டி அதிகபட்சமாக சைக்கிள் கேட்பார்கள். ஆனால், இப்போதோ ‘டாக்டர், என் பையன் மொபைல் போன் வாங்கிக்கொடுத்தால்தான் ஸ்கூலுக்குப் போவேன் என்று அடம்பிடிக்கிறான்’ என்றோ, ‘ஒன்றரை லட்ச ரூபாய்க்குப் பைக் வாங்கித் தரவில்லையென்றால், வீட்டைவிட்டு ஓடிப்போய்விடுவேன் என்று மிரட்டுகிறான்’ என்றோ மனநல மருத்துவரிடம் புகார் சொல்லும் அளவுக்குப் பிரச்சினைகள் சகஜமாகி வருகின்றன.

கஷ்டப்பட விடலாமா?

சிறுவயதிலேயே குடும்பச் சூழ்நிலை, பொருளாதார நிலையைப் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுத்து வளர்ப்பதில் தவறே இல்லை. ‘நான் பட்ட கஷ்டத்தை, என் பிள்ளைகள் அனுபவிக்கக் கூடாது’ என்ற எண்ணம், பெற்றோரிடம் இருப்பது இயல்பான ஒன்றுதான். இந்த வயதில் இது தேவையில்லை என்று பெற்றோர் நினைத்தால், அதைத் தைரியமாகப் பிள்ளைகளிடம் சொல்லப் பழக வேண்டும். மிக இன்றியமையாததாகவும், அதேநேரம் விலை உயர்ந்ததாகவும் இருந்தால், அதன் மதிப்பைச் சுட்டிக்காட்டிக் கையில் கொடுப்பதில் தவறில்லை.

நான் யார்?

‘பாட்ஷா' படத்தில் ரஜினி, ‘எட்டு எட்டா மனுஷ வாழ்க்கையைப் பிரிச்சுக்கோ' என்று பாடியதைப் போல, நூறு வருடங்களுக்கு முன்னரே புகழ்பெற்ற ஜெர்மன் உளவியல் நிபுணர் எரி எரிக்சன் வாழ்க்கையை எட்டு நிலைகளாகப் பிரித்து, ஒவ்வொன்றிலும் மனதளவில் ஏற்படும் மாற்றங்களைக் கூறியிருக்கிறார்.

அதில் ஐந்தாம் நிலையான பதிமூன்று வயதில் ஆரம்பித்து இருபத்தியொரு வயதில் முடியும் பருவத்தில் ஏற்படும் முக்கிய மாற்றமாக Self என்றழைக்கப்படும் தனித்துவமும் சுயமும் உருவாவதைக் குறிப்பிடுகிறார். இந்தக் காலகட்டத்தில்தான் ‘தான் யார், இந்தச் சமூகத்தில் தன் பங்கு என்ன?’ என்ற குழப்பம் ஏற்படும். இதற்கு Identity crisis (அடையாளச் சிக்கல்) என்று பெயர்.

அந்தக் குழப்பத்தைத் தீர்ப்பதற்காக மனம் எடுக்கும் பல முயற்சிகளில் ஒன்றுதான், தனக்குப் பிடித்த ஒருவரோடு தன்னை அடையாளப்படுத்திக் கொள்வது. விளைவாக ஒரு நடிகர், நடிகை அல்லது விளையாட்டு வீரரின் தீவிர ரசிகராக அடையாளப்படுத்திக் கொள்வது, அரசியல் தலைவரின் மானசீகத் தொண்டனாக மாறுவது, மதரீதியான நம்பிக்கைகளில் ஐக்கியமாவது போன்ற மாற்றங்கள் நடக்கும். பச்சை குத்திக்கொள்வது முதல் பாலாபிஷேகம் செய்வதுவரை, எல்லாமே இதன் வெளிப்பாடுதான்.

தடம் மாறும் நிலை

இந்த மாற்றங்களில் பெரும்பாலா னவை போகப்போக ஆரோக்கியமான முதிர்ச்சியை அடைந்துவிடும். இந்த அடையாளப்படுத்திக்கொள்ளுதல் சில நேரங்களில் எதிர்பாலின ஈர்ப்பாக மாறி, காதல் வயப்படுவதிலும் முடியும்.

சில வேளைகளில் சமூகவிரோதக் கும்பலுடன் சேர்வது, ஜாதி அடிப்படையில் அடையாளம் காண்பது அல்லது போதைப்பொருள் பயன்படுத்துவது போன்ற ஆரோக்கியமற்ற செயல்பாடுகளிலும் முடிவடையலாம். பெற்றோரின் சரியான வழிகாட்டுதல், சாதகமான குடும்பச் சூழ்நிலை, ஆரோக்கியமான கல்வி போன்றவை, இந்தக் காலகட்டத்தில் சரியான பாதையைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும்.

கட்டுரையாளர், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் மற்றும் மனநல மருத்துவர்

தொடர்புக்கு: godsonpsychiatrist@gmail.com

மனசு போல வாழ்க்கை 33: உங்களை உண்ணும் உணவு

Published : 10 Nov 2015 14:49 IST


டாக்டர். ஆர். கார்த்திகேயன்





நீ எதை உண்கிறாயோ அதுவாக ஆகிறாய் என்கிறது கடோபநிஷத்.

மனதைப் பக்குவப்படுத்த உடலைப் பக்குவப்படுத்த வேண்டும் என்றுதான் ஒவ்வொரு மதமும் முதலில் உணவுக்கட்டுப்பாட்டை விதிக்கிறது. எல்லா மதங்களும் உண்ணாவிரதத்தைப் பரிந்துரைக்கின்றன. எந்த நாளில், எந்த நேரத்தில் , எப்படிப்பட்ட முறையில் என்பதில்தான் வேறுபாடுகள். பிரார்த்தனை செய்து கடவுளுக்கு நன்றி சொல்லிவிட்டு உண்பதும் எல்லாச் சமயங்களும் பரிந்துரைப்பதே. பிறரோடு பகிர்ந்து உண்பதும் பொதுவாக மதங்கள் வலியுறுத்தும் கருத்து.

உணவின் தேர்வு

உண்ணுதல் புனிதமான செயல். உடல் வளர்ப்பது உயிர் வளர்ப்பது. அது இறைமையைப் போற்றும் செயல். கடவுள் வாழும் ஆலயமே உடல். உணவு சமைப்பதும், பரிமாறுவதும், உண்பதும், பகிர்வதும் தெய்வீகச் செயல்கள். அதனால்தான் சிந்தையை முழுவதுமாக இந்தச் செயல்களில் செலுத்துவது அவசியம்.

அறம் சார்ந்த வாழ்க்கையை மேம்படுத்துவதே சமய நம்பிக்கை. பிற சமய அன்பர்களின் உணவுப் பழக்கத்தில் அத்து மீறல் செய்வது அராஜகம். யார் உணவையும் பறிப்பதோ தடுப்பதோ மிருகச்செயல். உணவு என்பது தனி நபர் உரிமை. தங்கள் அறிவுக்கும் நம்பிக்கைக்கும் வசதிக்கும் ஏற்ப உண்ணுதல் அவரவர் தேர்வு.

இது மட்டும்தான் சிறந்த உணவு என்று எண்ணுதல் பேதமை. காரணம் உணவுகள் தட்ப வெப்ப நிலை, வேலை, உடல் உழைப்பு, கலாச்சாரம் சார்ந்தவை. அதனால்தான் ஒரு உணவைச் சிறந்த உணவு என்று யார் மீதும் திணிப்பது அறியாமை.

ஒரே உணவு சரியா?

எஸ்கிமோக்கள் பூமியின் வடதுருவத்தில் உறைந்த பனி மண்டலத்தில் வாழும் பழங்குடி மக்கள். அங்குள்ள மிருகங்களை அவர்கள் உண்டாலும், அவற்றின் கொழுப்பு மாரடைப்பை வரவழைக்காது. ஆனால் நாம் இங்கு எதைத் தொட்டாலும் கொலஸ்ட்ராலுக்குப் பயப்படுகிறோம். அதற்கான காரணம், நாம் இப்போது உண்ணும் பல உணவுகள் நம் பாரம்பரியத்தில் இல்லாதவை. நம் வாழ்வு முறைக்கு ஒவ்வாதவை. அவற்றை ஜீரணிக்க நாம் சிரமப்படுகிறோம்.

அவரவருக்கான உணவு எது என்பதைத் தீர்மானிப்பது அவரவர் கடமை. ஒரு அலுவலகத்திலோ ஒரு குடும்பத்திலோ அனைவருக்கும் ஒரே உணவு என்பதே அடிப்படையில் ஒரு குறைபாடுதான். எல்லோருக்கும் ஒரே உணவு என்பது அலுவலகத்துக்கும் வீட்டுக்கும் ஒரு நிர்வாகக் கண்ணோட்டத்தில் எளிதானது. அதனால் நிறைய நேரமும் மனித உழைப்பும் மிச்சமாகிறது. ஆனால், தனி நபர் ஆரோக்கியத்துக்கு இது நன்மை பயக்காது.

உடலின் உணவுமொழி

உணவு விடுதிகளில் புதுப் புது உணவுகள் படையெடுப்பது சந்தையின் அசுர வளர்ச்சியால். மெனு கார்டு முன்பு ஒரு அட்டையாக இருந்தது. இன்று அது டெலிபோன் டைரக்டரி போல வீங்கி வருகிறது. உலக நாடுகளில் உள்ள அனைத்து உணவுகளையும் இங்கேயே உட்கார்ந்துகொண்டு ருசி பார்க்கத் தயாராகிவிட்டோம்.

ஆனால் ஒவ்வொரு உணவின் தன்மை பற்றியும் அது நம் உடலையும் மனதையும் என்ன செய்யும் என்பதைப் பற்றியும் யோசிக்கிறோமா? ஒரு உணவின் தயாரிப்பில் என்னவெல்லாம் பயன்படுத்தப்படுகின்றன என்று தெரிந்து கொள்கிறோமா? இதற்குப் பெரிதாக ஒன்றும் செய்ய வேண்டாம். உங்கள் உடலோடு சற்று உறவாடினால் போதும்.

ஒவ்வொரு உணவுக்கும் பிறகு ஏற்படும் உணர்வு, எண்ணம், உடல் மாறுதல்கள் என்று கூர்ந்து கவனியுங்கள். உடல் உங்களோடு பேசத் தயாராக இருக்கிறது. நீங்கள் தயாரா?

தேவாமிர்த ருசி

நட்சத்திர விடுதியில் தட்டை ஏந்தி ஒரு 50 அயிட்டங்களை அரையும் குறையுமாக அள்ளித் தின்றுவிட்டு வீடு வந்திருப்பீர்கள். சாப்பிடும் போது நன்றாக இருக்கும். வீடு வந்து படுக்கும்போது கொஞ்சம் ரசம் சாதம் சாப்பிட்டால் பரவாயில்லை என்று தோன்றும். இது உங்களுக்கு நிகழ்ந்திருக்கிறதா? அப்படி என்றால் ஏன் என்று யோசியுங்கள்.

வேலை செய்யும்போது அலுவலகத்தின் சமாச்சாரங்களைப் பேசியே என்ன உண்கிறோம் என்று உணராமலே மதிய உணவு எடுத்துக் கொள்வோம். எல்லா உணவுகளும் சரியாகத்தான் இருக்கும். ஆனால் பெரிய திருப்தி இருக்காது. ஆனால், ஒரு நாள் சுற்றுலாவின் போது, அருவியில் நீண்ட நேரம் குளித்துவிட்டு உண்ணும் ஒரு சாதாரணக் கடையின் உணவு தேவாமிர்தமாக ருசிக்கும். ருசியைக்கூட விடுங்கள். பசித்துக் காத்திருக்கும்போது வரும் சமையல் நறுமணம் எவ்வளவு தூண்டுதலாக இருக்கும்! இதை எத்தனை நாட்கள் நாம் முகர்ந்திருக்கிறோம்?

நீங்கள் உண்ணும் உணவால் ஏற்படும் உடல் மாற்றங்களையும் மன மாற்றங்களையும் ஒரு வாரத்துக்கு கூர்ந்து நோக்குங்கள். உங்கள் உடல் பற்றிய அறிவும், உணவு பற்றிய விழிப்புணர்வும் அதிகரிக்கும்.

உணவே மருந்து

நம் கலாச்சாரம், மரபணுக்கள், கற்றல் மூலமாக நம்மிடம் உள்ள சில ஆதார உணவுகள் உண்டபின் வயிற்றுக்கும் மனதுக்கும் பெரிய திருப்தி தருபவை. அவற்றைக் கண்டறிந்து வகைப்படுத்தி உண்பதுதான் புத்திசாலித்தனம். உங்களுக்கான உணவை உங்கள் உடலே தேர்வு செய்யும். அதன் மொழி கேட்டு நடப்பதுதான் உத்தமம்.

நம் பாட்டி, தாத்தாக்களின் தெம்பு நம் பெற்றோர்களுக்கு இல்லை. நம் பெற்றோர்களின் தெம்பு நமக்கு இல்லை. நம் தெம்பாவது நம் பிள்ளைகளுக்கு இருக்குமா? மருத்துவம் வளர்ந்த அளவு ஆரோக்கியம் வளர்ந்துள்ளதா? யோசியுங்கள். நாம் கோட்டை விடும் இடம் உணவு என்று புரியவரும். உணவில் எல்லா அத்துமீறல்களையும் செய்கிறோம். சந்தை, அரசியல், சமூகம் அவற்றை செய்ய வைக்கிறது. ஆனால் நோய்வாய்ப்படுகையில் அவதிப்படுபவர் நீங்கள் மட்டும் தானே!

உலகின் எல்லா மனப்பயிற்சி மையங்களும், சமயங்களும், சோதனைகளும் உணவில்தான் தொடங்குகின்றன. உடல் பயிற்சிகூட அடுத்ததுதான்.

பேசாமல், பிற செயல்களில் ஈடுபடாமல் சாப்பிட்டுப் பாருங்கள். சரியான நேரத்தில் சாப்பிடுங்கள். டி.வியும் செல்போனும் சாப்பிடும் இடத்திலேயே இருக்க வேண்டாம். கிடைக்கின்ற உணவில் உங்களுக்கு ஏற்றதாய், அளவாய் உண்ணுங்கள். உண்ணும் அளவுக்கு உடல் உழைப்பு உள்ளதா என்று பாருங்கள். பாரம்பரிய உணவுகள், வீட்டில் சமைத்த உணவுகளுக்கு முன்னுரிமை தாருங்கள். வெளி உணவு என்றால் லேபிள் பாருங்கள். டப்பாவில் அடைத்த உணவுகளைத் தவிர்க்கப் பாருங்கள். ஆனால் எந்தக் காரணம் கொண்டும் எந்த உணவின் மீதும் வெறுப்பும் விரோதமும் வேண்டாம்.

இந்த உணவை உண்ணும் வாய்ப்பைத் தந்த இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள். உங்கள் உணவு உடல் திடமும் மன நிறைவும் அளிக்கும் மாமருந்து என்பதை மறந்துவிட வேண்டாம்!

தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com


ராக யாத்திரை 06: உயிரை உருக்கும் உன்னத இசை!

Published : 25 May 2018 11:03 IST

டாக்டர் ஜி. ராமானுஜம்

 

போன வாரம் கடினமான கேள்வி என நினைத்திருந்தேன். அந்த நினைப்பு கர்நாடக அரசுபோல் அற்ப ஆயுளில் கவிழ்ந்து விட்டது. அசாமில் தேர்வு மையம் வைத்தாலும் அசராமல் ‘நீட்’டாக எழுதுபவர்களன்றோ நாம்! ‘சரிகமபதநி என்னும் சப்தஸ்வர ஜாலம்’ என்னும் பாடலே அது. படம் ‘ராக பந்தங்கள்’(1982). இசை: குன்னக்குடி வைத்தியநாதன். வாணி ஜெயராம், எஸ்.பி.பி குரலில் ஒலிக்கும் இனிய மாயா மாளவ கௌளை அது. சரியாகச் சொன்னால் பலருள் முதல்வரான கோடம்பாக்கம் ஹரிஷ் மற்றும் துணை முதல்வர் நெல்லை உமா கனகராஜ் ஆகியோருக்குப் பாராட்டுக்கள்!

முன்னரே சொன்னதுபோல் முதலிரவு(1979) திரைப்படத்தின் ‘மஞ்சள் நிலாவுக்கு இங்கு ஒரே சுகம்’ என்ற பாடல் இந்த ராகத்தில் ஒரு மாஸ்டர் பீஸ். ‘ஆலங்குயில் கூவும் ரயில் யாவும் இசைஆனதடா’ என்பதுபோல் ரயிலின் கூவெனும் ஒலியும் மாயா மாளவ கௌளையின் ஒரு ஸ்வரமாக ஒலிக்கும் மந்திரப் பாடல் அது. ஜெயச்சந்திரன் - பி.சுசீலா குரலில் ஒலிக்கும் மெல்லிசை வகை அது. ரயிலின் ஓசை மட்டுமல்ல தட தட என்று ஓடும் லயமும் தாளமாக இணையும் ஒரு மாயவித்தை நடக்கும் இப்பாடலில்.


வரம் வாங்கி வந்தவர்

இசைஞானியின் ஆர்மோனியம் சிலரைப் பார்த்தால் படு உற்சாகமாக மெட்டுப் போடும். அப்படி வரம் வாங்கி வந்தவர்களுள் ஒரு இயக்குனர் ஆர்.சுந்தரராஜன். ‘பயணங்கள் முடிவதில்லை’யில் இந்த வெற்றிப் பயணம் தொடங்கியது. ஒரு காலகட்டத்தில் அவர் மாபெரும் வெற்றிப்பட இயக்குநர் என்றால் இப்போதுள்ள பொடிசுகள் நம்ப மறுக்கலாம். அவரது இயக்கத்தில் வெளியானது ‘அம்மன் கோவில் கிழக்காலே’(1986) என்றப் படம்.

பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட்... அதில் ஜெயச்சந்திரனும் ஜானகியும் பாடியுள்ள பாடல் ஒன்று மாயா மாளவ கௌளையில். ‘பூவை எடுத்து ஒரு மாலை தொடுத்து வச்சேனே’ என்ற பாடல்தான் அது. இசையின் ஆரம்ப பாடங்கள் கற்றுக் கொடுப்பது இந்த ராகத்தில்தான் எனப் பார்த்தோம் அல்லவா? இந்தப் பாடலும் ராதாவுக்கு விஜயகாந்த் இசை கற்றுக் கொடுக்கும் பாடல்தான். ‘காத்துல சூடம்போலக் கரையுதே’ எனும்போது கரையாத மனமும் உண்டோ?
உயிரே… உயிரே…

இந்த ராகமே மெல்லிய சோகம்தான். அதிலும் சோகமான ஒரு சூழல் வந்தால் மனதை உருக்கி விடும். அப்படி உருக்கும் ஒரு பாடல்தான் ‘ஒருவர் வாழும் ஆலயம்‘(1988) படத்தில் வரும் பாடல். ஷண்முகப்ரியன் இயக்கத்தில் பெரிதாக வெற்றியடையாத படம் இது. ஆனால் எத்தனையோ கேள்விப்பட்டிராத படங்களிலெல்லாம் அற்புதமாக இசை அமைந்திருக்கும் இளையராஜாவின் பாடல்களைப் போன்றே இப்படத்திலும் அமைந்த ‘உயிரே உயிரே உருகாதே’ பாடல் அக்மார்க் நெய்யில் செய்த மாயா மாளவ கௌளை. ராகமும் சோகம், சூழலும் சோகம். இதோடு யேசுதாஸின் தெய்வீக தத்துவக் குரலும் சேர்ந்து ஒலித்து உயிரையே உருக்க வைக்கும்.

இன்னொரு சோகமான சூழல். பெர்லின் சுவர்போல் காதலர்களைப் பிரிக்கும் சுவற்றின் இரு பக்கத்திலிருந்தும் எழும் சோகமான ஜோடிக்குரல்கள். ‘இது நம்ம பூமி’(1992) திரைப்படத்தில் ஒலிக்கும். ‘ஆறடிச் சுவருதான் ஆசையப் பிரிக்குமா கிளியே’ என்ற பாடல் அது. கிளி என்னும் உச்சரிப்பு யேசுதாஸுக்குக் கொஞ்சம் கிலிதான் என்றாலும் சமாளித்துத் தன் கந்தர்வக் குரலில் சொர்ணலதாவுடன் பாடியிருப்பார்.

இளையராஜாவின் பாடல்களில் ஒரு சிறப்பே சரணம் ஆரம்பிக்கும் விதம். எடுப்பு என்று சொல்லப்படும் இந்தத் தொடக்கம் பல பாடல்களில் எடுப்பாக இருக்கும். இப்பாடலிலும் பெரிதாக இசைக் கருவிகள் இல்லாமல் பின்னணியில் குழல் இசை மட்டுமே முக்கியமாக ஒலிக்கும் இப்பாடலில் ‘ஆழ்கடல் அலைகளும் ஓயுமோ’ என்னும் எடுப்பு, காவிய சோகத்தைத் தரும் இடம் (ஒரு தகவல் - இப்பாடலில் மூன்று சரணங்கள்).


அமரத்துவப் பாடல்

ரஜினிகாந்த் எந்த ஆரவாரமும் இல்லாமல் அமைதியாக, அழகாக நடித்த ஒரு படம் ஸ்ரீ ராகவேந்திரா (1985) . இந்தப் படத்திலும் இசை சொல்லிக் கொடுக்கும் ஒரு பாடல். அதே மாயா மாளவ கௌளை. அதே யேசுதாஸ். ‘ராம நாமம் ஒரு வேதமே’ என்னும் பாடல். ஆரம்பத்தில் வாணி ஜெயராம் குழந்தை ராகவேந்திரருக்கு. ‘மணிமுடி இழக்கவும் மரவுரி தரிக்கவும் அரண்மனை அரியணை துறந்தவனாம், இனியவள் உடன் வர இளையவன் தொடர்ந்திட வனங்களில் உலவிடத் துணிந்தவனாம்’ என்பதுபோல் வாலியின் அழகுதமிழ்க் கவிதை மொழிகளும் பாடலின் இறுதியில் வரும் ஸ்வரக்கோர்வைகளும் ஒரு அரிய அனுபவத்தைத் தருபவை.

தொல்லிசை, மெல்லிசை என இசைஞானியால் பிரித்து மேயப்பட்ட இந்த ராகத்தில் போடப்பட்ட பாடல்களில் உன்னதமான ஒன்று மேற்கத்திய சங்கதிகளுடன் ஒரு இசை விருந்தாக அமைகிறது. ‘கோபுர வாசலிலே’(1991) திரைப்படத்தில் வந்த ‘காதல் கவிதைகள் படித்திடும் நேரம்’ பாடல்தான் அது. ஆரம்பத்தில் வரும் வயலின்களின் சேர்ந்திசை, பின்னர் எஸ்.பி.பி - சித்ராவின் குரலில் ஒலிக்கும் வரிகள், இடையே வரும் தாள லய ஒலிகள், பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவு என அனைத்தும் இப்பாடலை அமரத்துவம் பெற்றதாக ஆக்குகின்றன.

சரி. கொஞ்சம் கடினமான கேள்வியுடன் முடிப்போமா? கல்கியின் நாயகியின் பேரில் தொடங்கும் ஒரு மாயா மாளவ கௌளை பாடல் எது, என்ன படம்? அட! உடனே பதில் சொல்லக் கிளம்பிவிட்டீர்களே?

தொடர்புக்கு: ramsych2@gmail.com
ராக யாத்திரை 05: தாழ் திறந்த இசையின் கதவு

Published : 18 May 2018 10:47 IST

டாக்டர் ஜி. ராமானுஜம்
 



‘இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்’ பாடல் காட்சியில் சுமித்ரா, லதா
- THE HINDU ARCHIVES

முதலில் ஒரு ஷொட்டு; ஒரு குட்டு. இம்முறை வினாத்தாள் கொஞ்சம் எளிது போலும். காலையிலேயே பல்லைக்கூடத் துலக்காமல் பதிலளித்த பலரில், முதல்வரான கோவை அந்தோணிராஜ் அவர்களுக்குப் பாராட்டுகள். சென்ற வாரம் கேட்ட வினாவுக்கு விடை – ‘தீபம்’ (1977). அந்தப் படத்தில் உள்ள ‘அந்தப்புரத்தில் ஒரு மகராணி’ என்ற பாடல்தான் அது. ‘மாயா மாளவ கௌளை’யில் இசைஞானி அமைத்து டி.எம்.எஸ், ஜானகி பாடிய பாடல். பிற்காலத்தில் மாயா மாளவ கௌளையில் அமைக்கப்போகும் அபூர்வப் பாடல்களின் அச்சாரம் அதுதான்.

தொடக்கத்தில் ஓர் அருமையான வயலின் இசையின் தொடக்கம். ‘சாமந்திப் பூக்கள் மலர்ந்தன; இரு சந்தனத் தேர்கள் அசைந்தன’ என்னும் இடத்தில் சிதார் இசை. ‘ஆசை கனிந்து வர அவன் பார்த்தான்’ என ஜானகியின் ஹஸ்கி கொஞ்சல். ‘சங்குவண்ணக் கழுத்துக்குத் தங்க மாலை’ என முழங்கும் டி.எம்.எஸ். கம்பீரக் குரல் என்று ஒவ்வோர் இசைக்கலைஞரும் இந்தப் பாடலில், இந்த ராகத்தின் மேன்மையை வெளிப்படுத்தியிருப்பார்கள். சுமார் நாற்பது ஆண்டுகள் கடந்தும் பலரது மனத்தில் பசுமையாகப் பதிந்துள்ள பாடல்.

அச்சாரமாக அமைந்த பாடல்

மாயா மாளவ கௌளை கொஞ்சம் சோகமான ராகம். அதில் என்னதான் நட்பு, மகிழ்ச்சி, பக்தி, நெகிழ்ச்சி, காதல் எனச் சொன்னாலும் முத்துச் சரத்தைக் கோக்கும் இழைபோல ஒரு மெல்லிய சோகக் கீற்றுத் தென்படும். அப்படித் தெரியும் பாடல் ஒன்றுதான் 1978-ல் இசைஞானி மெட்டமைத்த ஒரு பாடல். பஞ்சு அருணாசலம் திரைக்கதை, எஸ்.பி.முத்துராமன் இயக்கம் என்னும் மாபெரும் வெற்றிக் கூட்டணியின் இன்னொரு தூணாகத் தன்னை இசைஞானி இளையராஜா உறுதிசெய்து கொண்டிருந்த காலகட்டம் அது.

‘வட்டத்துக்குள் சதுரம்’ என்ற திரைப்படத்தில் அமைந்த ‘இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்’ என்ற பாடல். ‘அதோ அதோ என் பாடலில் ஒரே ராகம்’ என மாயா மாளவ கௌளையைத்தான் சொல்கிறதோ அப்பாடல்? வழக்கம்போல் வயலின், குழல் என ராகத்தைச் செம்மைப்படுத்தும் கருவிகளுடன் ஜானகி, சசிரேகா, உமாதேவி குரலில் நட்பைப் பிரதிபலிக்கும் அட்டகாசமான பாடல். கேட்கக் கேட்க மனதைக் கரைய வைக்கும் இசை.

அடுத்த வருடம். அதே கூட்டணி. தந்தை தன்னைப் புரிந்துகொள்ளாத மகளைப் பார்த்துப் பாடும் சோகமான ஒரு பாடல். தந்தையாக ‘நடிகர் திலகம்’ சிவாஜி கணேசன். மகளாக ஸ்ரீதேவி. ‘கவரி மான்’ (1979) படத்தில் எஸ்.பி.பி. குரலில் மெல்லிய சோகமாக மாயா மாளவ கௌளை. ‘பூப்போல உன் புன்னகையில்’. பிற்காலத்தில் இதே ராகம் ஏராளமான சோகப் பாடல்களாக ராஜாவின் ஆர்மோனியத்திலிருந்து ஒலிக்கப் போவதன் ஆரம்ப அறிகுறி இது.

மெல்லிசையில் மறுஜென்மம்

அதே வருடம் இன்னொரு டி.எம்.எஸ் பாடல். சிவாஜி கணேசன், ரஜினிகாந்த் இணைந்து நடித்த முதல் படம் ‘நான் வாழ வைப்பேன்’. ‘மஜ்பூர்’ என்ற அமிதாப்பச்சன் நடித்த படத்தின் மறு ஆக்கம். படத்தின் பாடல்களெல்லாம் சூப்பர் ஹிட். இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘எந்தன் பொன்வண்ணமே அன்பு பூவண்ணமே’ என்ற மறக்க முடியாத பாடல் சோகமும் தத்துவச் சுவையும் அடங்கிய ஒரு மாயா மாளவ கௌளையில் மெல்லிசையாக மறுஜென்மம் எடுத்தது.

அப்படியே 1980-க்கு வந்தோமானால். தமிழில் பல முத்திரை நாயகர்களை அறிமுகப்படுத்திய, பிரபலப்படுத்திய படம் ‘நிழல்கள்’. அந்தப் படத்தில் போட்டிருப்பார் பாருங்கள் ஒரு மா.மா.கௌளை! உண்மையிலேயே அது ‘மா’பெரும் மா.கௌளைதான். தொடக்கத்தில் வரும் தந்தி இசை. லேசான சோக வயலின். அப்படியே கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சமாக டெம்போவைக் கூட்டிக் கொண்டேபோய் ஒரு டஷ்!!! திருமறைக்காட்டில் திருஞானசம்பந்தரும் அப்பரும் திறந்த கதவுபோல் ஒரு திறப்பு. ‘பூங்கதவே தாழ்திறவாய்...’ என தீபன் சக்கரவர்த்தி, உமாரமணன் குரலில். இடைவெளியில் மேற்கத்திய இசை சங்கதிகளை இந்த ராகத்தில் வெளிப்படுத்தியிருப்பார் இசைஞானி.

வளைந்துகொடுக்கும் ராகம்

நல்ல ராகம் என்பது நல்ல களிமண் போல் எப்படி வேண்டுமானாலும் வளைந்து கொடுக்கும். திறமையான மட்பாண்டக் கலைஞர் அதைப் பானையாகவோ, யானையாகவோ மாற்றுவது அந்த மண்ணை மேலும் அழகுபடுத்தவே. நல்ல இசைக்கலைஞன் கையில் கிடைக்கும் நல்ல ராகமும் அது போன்றே பல்வேறு வடிவங்களாக வெளிப்படும். மேற்கத்திய இசை, மெல்லிசை, கர்னாடக இசை, நாட்டார் இசை என எல்லா வடிவங்களிலும் இந்த ராகத்தின் வேறு வேறு முகங்களைக் காட்டியவர் இளையராஜா .

‘சக்களத்தி’(1979) என்றொரு படம். சுதாகர், விஜயன் நடித்தது. அந்தப் பட டைட்டில் பாடலில் மாயா மாளவ கௌளையில் இளையராஜாவே பாடிய பாடல் ‘என்ன பாட்டு பாட என்ன தாளம் போட’. கிராமத்து நாயகன் பாடுவது என்பதால் ஆங்காங்கே கொஞ்சம் ராகமும் தாளமும் விலகிவிடும். என்றாலும் நாட்டுப்புற இசையில் இந்த ராகத்தின் சாயலைக் கண்டறிந்து மறு உருவாக்கம் செய்த பாடல்களில் தொடக்கப் பாடல் இது.

அந்திவரும் நேரத்தில் அந்தப்புர மகராணி

1983-ல் இந்த ராகத்தை மிகவும் ஸ்டைலாக ‘பூங்கதவே’ போல் ‘முந்தானை முடிச்சு’ திரைப்படத்தில் அமைத்திருப்பார். பாக்யராஜின் ‘டிரில்’ வகை உடற்பயிற்சி நடனத்துடன் எஸ்.பி.பி, ஜானகி குரலில் வரும், ‘அந்தி வரும் நேரம்’ ஒரு வித்தியாசமான மெல்லிசை. கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் ‘அந்தப்புரத்தில் ஒரு மகராணி’ ‘அந்தி வரும் நேர’த்திலும் ஆங்காங்கே தென்படுவாள்.

இந்த முறை கொஞ்சம் கஷ்டமான கேள்வியைக் கேட்போமா? பாடத்திட்டத்தில் இல்லாத கேள்வி! சரிகமபதநி என்றே தொடங்கும் ஒரு பாடல்! மாயா மாளவ கௌளையில். என்ன படம்? பாடியவர்கள்? யார் இசையமைப்பாளர்? (இசைஞானி அல்ல). முழு பதிலும் சொல்பவர்க்கே பாராட்டு. பார்க்கலாம்!

தொடர்புக்கு: ramsych2@gmail.com

70,000 எம்.பி.பி.எஸ். விண்ணப்பங்கள் தயாரிக்கும் பணிகள் தீவிரம்

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் படிப்புகளுக்கானகலந்தாய்வுக்கு 70,000 விண்ணப்பங்கள் அச்சடிக்கும்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

ஜூன் 11 முதல் விண்ணப்ப விநியோகம்: 

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவு நாடு முழுவதும் ஜூன் 4-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழக மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் ஜூன் 11-ஆம் தேதி முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது.தமிழகத்தில் உள்ள 23 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் விண்ணப்பங்களை நேரடியாகப் பெற்றுக் கொள்ளலாம். இதுதவிரwww.tnhealth.org மற்றும் www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் இருந்தும் ஜூன் 11-ஆம் தேதி முதல் விண்ணப்பங்களைப் பதவிறக்கம் செய்து கொள்ளலாம். மொத்த இடங்கள்: தமிழகத்தில் 23 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 3,050 இடங்கள் உள்ளன. அவற்றில் 15 சதவீத அகில இந்திய இடங்கள் போக 2,594 இடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறும். அதே போன்று தமிழகத்தில் சென்னை பாரிமுனையில் உள்ள பல் மருத்துவக் கல்லூரி, சிதம்பரம் ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரி ஆகிய 2 அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 200 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. அவற்றில் அகில இந்திய இடங்கள் 30 போக, மீதம் உள்ள 170 இடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறும்.

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் என அனைத்துக்கும் மருத்துவக் கல்வி இயக்ககத்தின் தேர்வுக்குழு கலந்தாய்வை நடத்த உள்ளது.விண்ணப்பங்களைப் பெறுவதற்கும், இணையதளத்தில் பதிவிறக்கம் செய்வதற்கும் ஜூன் 18-ஆம் தேதி கடைசியாகும். பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் தேர்வுக்குழுவுக்குச் சென்று சேர ஜூன் 19-ஆம் தேதி கடைசியாகும். ஜூலை 1-ஆம் தேதி முதல் கலந்தாய்வு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.70,000 விண்ணப்பங்கள்: நேரடி விநியோகத்துக்காக 70 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சடிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

இது தொடர்பாக மருத்துவக் கல்வி தேர்வுக் குழுச் செயலர் டாக்டர் ஜி.செல்வராஜ் கூறியது: அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்க 45,000 விண்ணப்பங்களும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பிக்க 25,000 விண்ணப்பங்களும் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேற்கொண்டு விண்ணப்பங்கள் தேவைப்பட்டாலும் அச்சடித்து மீண்டும்விநியோகிக்கப்படும் என்றார் அவர்.

818 Medical Colleges in India, Maximum in UP, Maharashtra, Tamil Nadu: Health Ministry tells Parliament Written By : Divyani PaulPublished On 15 Feb 2026 11:00 AM  |  Updated On 15 Feb 2026 11:00 AM New Delhi: The Union Ministry of Health and Family Welfare has informed the Lok Sabha that India currently has a total of 818 medical colleges, including AIIMS and Institutes of National Importance (INIS) across India. The details were shared in response to an Unstarred Question on February 6, 2026. Replying to queries raised by Shri Jagannath Sarkar regarding districts without government medical colleges and plans for prioritising high-population districts, Minister of State for Health and Family Welfare Shri Prataprao Jadhav said that the National Medical Commission (NMC) has reported a total of 818 medical colleges nationwide. Also Read: 18 AIIMS Functional, 4 Under Construction: Health Minister tells Parliament As per the list shared in this regard, Uttar Pradesh has the highest number of medical colleges at 88 (51 government and 37 private), followed by Maharashtra with 85 (43 government and 42 private), and Tamil Nadu with 78 colleges (38 government, 40 private). Karnataka has 72 (24 government and 48 private), Telangana has 66 (37 government, 29 private), and Rajasthan has 49 (34 government, 15 private). However, several smaller States and UTs, such as Andaman & Nicobar Islands, Arunachal Pradesh, Chandigarh, Goa, Mizoram, Nagaland and Sikkim have only one medical college each.

818 Medical Colleges in India, Maximum in UP, Maharashtra, Tamil Nadu: Health Ministry tells Parliament Written By : Divyani PaulPublished O...