Tuesday, August 7, 2018

கருணை கொலைக்கு கதறிய ராணுவ வீரர்

Added : ஆக 07, 2018 01:10

சேலம்: உறவினர்கள் யாரும் கவனிக்க மறுப்பதால், தன்னை கருணைக் கொலை செய்யும் படி, போலீஸ் கமிஷனரிடம், முன்னாள் ராணுவ வீரர் கதறினார்.சேலம், அம்மாபேட்டையைச் சேர்ந்தவர் கிருஷ்ணன், 85; முன்னாள் ராணுவ வீரர். இவர், நேற்று போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்து, கதறி அழுதார். கமிஷனர் சங்கர், அவரிடம் விசாரித்தார்.கிருஷ்ணன் கூறியதாவது:என் தந்தை, தாசில்தாராக பணியாற்றியவர். நான் ராணுவத்தில் சேர்ந்து, சீனாவுக்கு எதிராக போரிட்டுள்ளேன். காஷ்மீரில் கடும் குளிரில், இரவு, பகல் பாராமல் பணியாற்றினேன். ஓய்வு பெற்ற பின், மதுரை கலெக்டருக்கு, கார் டிரைவராக பணிபுரிந்தேன். அப்போது, எனக்கு நீரிழிவு நோயின் அறிகுறி தென்பட்டதால், சேலம் வந்து விட்டேன்.நோய்க்கு மருந்து, மாத்திரை சாப்பிட்டு வரும் நிலையில், உறவினர்கள், எனக்கு உணவு தர மறுக்கின்றனர். நோயின் பிடியில் சிக்கி, தினமும் அவதியை சந்திப்பதால், என்னை கருணைக் கொலை செய்து விடுங்கள்.இவ்வாறு அவர் கூறினார்.அவருக்கு ஆறுதல் தெரிவித்து, போலீஸ் கமிஷனர் சங்கர் கூறியதாவது:உங்கள் உறவினர்களுக்கு, தகவல் தெரிவிக்கிறோம். அவர்கள் அளிக்கும் தகவல்படி, உங்களை காப்பகத்தில் சேர்த்து, பராமரிக்க நடவடிக்கை எடுக்கிறோம். அனைத்து உதவிகளையும் செய்து தருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.கிருஷ்ணனின் மகன் சுந்தருக்கு, போலீசார் தகவல் கொடுத்தனர். அவர் வந்து, தந்தையை அழைத்தார். அவர், செல்ல மறுத்ததால், போலீசார் சமாதானம் செய்து, மகனுடன் அனுப்பி வைத்தனர்.
'முக்கிய கோவில்களுக்கு சுற்றுலா பஸ் இயக்கம்'

Added : ஆக 06, 2018 23:34

திருச்சி: ''திருச்சியிலிருந்து, பல்வேறு முக்கிய கோவில்களுக்கு, விரைவில் சுற்றுலா பஸ் இயக்கப்பட உள்ளது,'' என்று அமைச்சர் நடராஜன் தெரிவித்தார்திருச்சியில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் நடராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:உள்நாட்டு சுற்றுலா பயணியர் வருகை, தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாகவும், வெளிநாட்டு சுற்றுலா பயணியர் வருகை, தொடர்ந்து, நான்கு ஆண்டுகளாகவும் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.மத்திய அரசின் பிரசாத் திட்டத்தில், தற்போது, காஞ்சிபுரம், வேளாங்கண்ணி ஆகிய இடங்களை மேம்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்து இரண்டு சுற்றுலா தலங்களுக்கான மேம்பாட்டு நிதி அறிவிக்கப்படும் போது, திருச்சி மாவட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு பெற்று, முக்கொம்பு, கல்லணை போன்ற சுற்றுலா தலங்கள் மேம்படுத்தப்படும்.சுற்றுலா துறை சார்பில், திருப்பதி தேவஸ்தானத்துடன் இணைந்து, ஏழுமலையான் கோவில் தரிசனம், தங்குமிடம் உள்ளிட்டவற்றுடன், தினமும் 150 பேர் சென்று வரும் வகையில், சென்னையிலிருந்து குறைந்த கட்டணத்தில், சுற்றுலா பஸ் இயக்கப்படுகிறது. அதே போல், திருச்சியிலிருந்து பல்வேறு முக்கிய கோவில்களுக்கு, விரைவில் சுற்றுலா பஸ் இயக்கப்பட உள்ளது.இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.


அண்ணா பல்கலையில் மறுமதிப்பீடு பணி துவக்கம் : முறைகேட்டில் ஈடுபடாத பேராசிரியர்களுக்கு அழைப்பு

Added : ஆக 06, 2018 23:27

அண்ணா பல்கலையில், தேர்வுத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு, பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், இந்த ஆண்டுக்கான தேர்வுத்தாள் மறுமதிப்பீடு பணி தற்போது துவங்கியுள்ளது. இந்த பணிக்கு, முறைகேட்டில் ஈடுபடாத பேராசிரியர்களை அனுப்பும்படி, இன்ஜி., கல்லுாரி களுக்கு பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.அண்ணா பல்கலையில், 2017 ஏப்ரல், மே மாதங்களில், இன்ஜினியரிங் மாணவர்களின் தேர்வுத்தாள்களை மறுமதிப்பீடு செய்ததில், பெரிய அளவில் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த மறுமதிப்பீட்டில், 73 ஆயிரம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இதில், 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், அதிக மதிப்பெண் பெற்றுள்ளனர். ஒவ்வொரு மாணவரிட மும், தலா, 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்று, அதிக மதிப்பெண் வழங்கியதாக, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரிகள் மீது, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
'டம்மி எண்' : இந்த விவகாரத்தில், பல்கலையின் முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உமா, திண்டிவனத்தில் உள்ள, அண்ணா பல்கலை உறுப்பு கல்லுாரியின் முன்னாள் முதல்வர் விஜயகுமார், உதவி பேராசிரியர் சிவகுமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், தனியார் இன்ஜி., கல்லுாரிகளை சேர்ந்த, ஏழு பேராசிரியர் களும் வழக்கில் சிக்கிஉள்ளனர். இந்நிலையில், இந்த ஆண்டுக்கான தேர்வுத் தாள் மறுமதிப்பீடு பணி, தற்போது துவங்கியுள்ளது. இந்த ஆண்டும், ஆயிரக்கணக்கான மாணவர்கள் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்துள்ளனர். இந்த முறை, சென்னை அண்ணா பல்கலை தேர்வுத்துறையின் நேரடி கட்டுப்பாட்டில், மறுமதிப்பீட்டு பணியை மேற்கொள்ள, துணைவேந்தர் சுரப்பா உத்தரவிட்டுள்ளார். மேலும், தேர்வுத்தாள் மறுமதிப்பீடு தொடர்பாக, கடும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு உள்ளன. அதாவது, தேர்வுத் தாள்களுக்கு சரியான, 'டம்மி எண்' ஏற்படுத்தி, அந்த டம்மி எண்ணை, யாருக்கும் தெரியாமல் ரகசியமாக வைத்திருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தேர்வுத்தாள் திருத்துவதில், எந்த அதிகாரி மற்றும் மைய பொறுப்பாளர்களின் சிபாரிசுகளையும் ஏற்கக் கூடாது என, பேராசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

இதற்கிடையில், அனைத்து, இன்ஜி., கல்லுாரிகளுக்கும், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, வெங்கடேசன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: மாணவர்களுக்கான தேர்வை நடத்துவது, விடைத்தாளை திருத்தி, முறையாக தேர்வு முடிவை வெளியிடுவது போன்ற நடவடிக்கையில், பல்கலை யின் உறுப்பு கல்லுாரிகள், மண்டல கல்லுாரிகள் மற்றும் தனியார், இன்ஜி., கல்லுாரிகளின் பங்கு முக்கியமானது.பெரும்பாலான தனியார் கல்லுாரிகள், தங்களின், 70 சதவீத ஆசிரியர்களை, தேர்வுத்தாள் திருத்த பணிக்கு அனுப்பாததால், திருத்துவதில் தாமதம் ஏற்படுகிறது.

சர்ச்சை : இந்த நிலை தொடர்ந்தால், பேராசிரியர்களை அனுப்பாத கல்லுாரி மாணவர்களின், தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்படும்.மேலும், தேர்வுத்தாள் திருத்தும் நடவடிக்கைகளில், பேராசிரியர்களின் பங்கும், அவர்களுக்கான பொறுப்பும் மிகவும் முக்கியமானது. திருத்த பணிக்கு வரும் பேராசிரியர்கள் தங்களின் மனசாட்சிப்படி, திருத்த பணிகளில் ஈடுபட வேண்டும். அவ்வாறு ஈடுபட்டால் மட்டுமே, அந்த பணி அர்த்தமுள்ளதாக இருக்கும்.மாறாக, பொதுமக்கள் மத்தியில், பல்கலையின் தேர்வுத்தாள் திருத்தம் குறித்து, சர்ச்சை ஏற்படும் வகையில், நடந்து கொள்ளக்கூடாது. சமூகத்தில் கசப்பான மற்றும் தேவையற்ற பிரச்னைகள் ஏற்படாத வகையில், கல்லுாரிகளும், அனுபவம் மிக்க, திறமையான, மனசாட்சியுடன் தேர்வுத்தாள் திருத்தும் ஆசிரியர்களை, பணிக்கு அனுப்ப வேண்டும்.இந்த ஆண்டுக்கான மறுமதிப்பீட்டில், எந்த பிரச்னைக்கும், சர்ச்சைக்கும் இடமின்றி, தங்கள் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நமது நிருபர் -

போட்டோ வெளியிட கோர்ட் தடை


Added : ஆக 07, 2018 06:42

மதுரை: தஞ்சாவூர் பொன்னையா ராமஜெயம் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி (பிரிஸ்ட் பல்கலை) டிரஸ்ட்மேலாண்மை அறங்காவலர் முருகேசன் மற்றும் அறங்காவலர்கள் உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:தஞ்சாவூர் ஈஸ்வரி நகர் இந்தியன் வங்கி கிளையில் கடன் வாங்கி, செலுத்தினோம். கடனை செலுத்தத் தவறியதாக போட்டோவுடன் வங்கி அறிவிப்பு வெளியிட்டது. இது வங்கி விதிகளுக்கு முரணானது.போட்டோவுடன் அறிவிப்பு வெளியிட தடை விதிக்கவேண்டும். எங்கள் ஆறு பேருக்கு தலா ஒரு கோடி ரூபாய் வீதம் இழப்பீடு வழங்க வங்கிக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறுகுறிப்பிட்டனர்.நீதிபதிகள் டி.ராஜா, கிருஷ்ணன் ராமசாமி அமர்வு: மனுதாரர்களின் போட்டோக்களை வெளியிடக்கூடாது. கிளைமேலாளருக்கு நோட்டீஸ் அனுப்பி ஆக.,20க்கு ஒத்திவைக்கப்படுகிறது, என்றது.
நிஜத்திடம் டிக்கெட் கேட்ட போலி ரயிலில் சிக்கினார் சென்னை வாலிபர்

Added : ஆக 07, 2018 01:13

வடமதுரை; முத்துநகர் ரயிலில், பரிசோதகரிடமே டிக்கெட் கேட்ட, 'போலி' பரிசோதகர் சிக்கினார். துாத்துக்குடியில் இருந்து சென்னை செல்லும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில், திண்டுக்கல் கடந்து சென்று கொண்டிருந்தது. அப்போது, ஒரு பெட்டியில் ரயில் டிக்கெட் பரிசோதகர் தோற்றத்தில் ஏறிய ஒரு வாலிபர், அங்கிருந்த, டி.டி.இ.,யிடம் டிக்கெட்டை காட்டும்படி கேட்டுள்ளார். அதிர்ச்சியடைந்த அவர், 'நானும் ஒரு டிக்கெட் பரிசோதகர்' எனக்கூறி, அந்த வாலிபரிடம் அடையாள அட்டையை காட்டும்படி கேட்டார். வாலிபரும் ஒரு அடையாள அட்டையை காட்டியுள்ளார். மேலும் துறை சார்ந்த சில கேள்விகளை கேட்கவே வாலிபர் உளறிக்கொட்டினார். அந்த வாலிபரை பிடித்து, ரயிலில் இருந்த போலீசாரிடம் ஒப்படைத்தார். விசாரணையில், போலி, டி.டி.இ.,யாக நடித்தவர் சென்னை சூளைமேட்டை சேர்ந்த ரமேஷ், 31, என்பதும், டிராவல்ஸ் நிறுவனத்தில் டிக்கெட் புக்கிங் பணி செய்வதும் தெரிந்தது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 விமானிகள் நீக்கம் : டி.ஜி.சி.ஏ., அதிரடி

Added : ஆக 07, 2018 00:36


மும்பை: சவுதி அரேபியாவின், ரியாத் நகர விமான நிலையத்தில், 'டாக்சிவே' எனப்படும் இணைப்பு பாதையில் இருந்து விமானத்தை ஓட்ட முயன்ற, 'ஜெட் ஏர்வேஸ்' நிறுவனத்தின் இரண்டு பைலட்டுகளின் உரிமத்தை, டி.ஜி.சி.ஏ., 'சஸ்பெண்ட்' செய்துள்ளது. கடந்த வாரம், மேற்காசிய நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் உள்ள விமான நிலையத்தில் இருந்து, ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானம், 148 பயணியருடன் புறப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஓடு பாதைகளுக்கு இடையே உள்ள, டாக்சிவே எனப்படும் இணைப்பு பாதையில் நிறுத்தப்பட்டிருந்த அந்த விமானத்தை, அங்கிருந்தபடியே மேலே செலுத்த, விமானிகள் முயன்றதால் பரபரப்பு நிலவியது. ஓடுபாதையில் நுழைந்த அந்த விமானம், நிலை தடுமாறி, பயங்கர சத்தத்துடன் அப்படியே நின்றது. இதையடுத்து, அந்த விமானத்தில் இருந்த பயணியர், உடனடியாக பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த சம்பவம், பயணியர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், அந்த விமானத்தை இயக்கிய இரு விமானிகளின் உரிமங்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளதாக, டி.ஜி.சி.ஏ., எனப்படும், விமான போக்குவரத்து பொது இயக்குனரகம், நேற்று அறிவித்துள்ளது.
சித்தா படிப்பு, 'அட்மிஷன்' அடுத்த வாரம் விண்ணப்பம்

Added : ஆக 06, 2018 23:33

சென்னை: 'சித்தா மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம், அடுத்த வாரம் முதல், அரசு சித்தா மருத்துவ கல்லுாரிகளில் வினியோகிக்கப்படும்' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.தமிழகத்தில், ஆறு அரசு சித்தா மருத்துவ கல்லுாரிகளில், 390 இடங்கள் உள்ளன. அதேபோல, தனியார் மருத்துவ கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டுக்கு, 1,350 இடங்கள் உள்ளன. இந்த படிப்புகளுக்கான கவுன்சிலிங், 'நீட்' நுழைவுத் தேர்வு அடிப்படையில் நடைபெறுவதாக இருந்தது. பின், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.கடந்த, 2017ல் மாணவர் சேர்க்கைக்கு ஆக., 2ல், விண்ணப்பம் வினியோகம் துவங்கியது. நடப்பாண்டில், இதுவரை, விண்ணப்பம் வினியோகிக்கப்படவில்லை. சித்தா மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங், பிளஸ் 2 அடிப்படையில் நடைபெறுவதால், 'அலோபதி' மருத்துவ படிப்பில், இடம் கிடைக்காத மாணவர்கள், சித்தா படிப்பிற்கு விண்ணப்பிக்க வாய்ப்புள்ளது. எனவே, விண்ணப்பம் வினியோகம், எப்போது துவங்கும் என, மாணவர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.இதுகுறித்து, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை அதிகாரிகள் கூறுகையில், 'சித்தா மருத்துவ படிப்புகளுக்கான, தகவல் குறிப்பேடு மற்றும் விண்ணப்பம் வினியோகம் அச்சிடும் பணிகள் முடிந்துள்ளன. அடுத்த வாரம் துவக்கத்தில், சித்தா மருத்துவ கல்லுாரிகளில், விண்ணப்பம் வினியோகம் துவங்கும்' என்றனர்.***

NEWS TODAY 27.06.2026