Sunday, August 12, 2018


இம்ரான் கான் பதவியேற்பு விழாவில் நவ்ஜோத் சிங் சித்து பங்கேற்பு? 


By DIN | Published on : 11th August 2018 07:16 PM |



கோப்புப்படம்

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் பதவியேற்கும் விழாவில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து பங்கேற்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் பிரதமராக அந்நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், பிடிஐ கட்சியின் தலைவருமான இம்ரான் கான் வரும் 18-ஆம் தேதி இஸ்லாமாபாத்தில் பதவியேற்கிறார். இந்த பதவியேற்பு விழாவுக்கு இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கபில் தேவ், சுனில் கவாஸ்கர் மற்றும் நவ்ஜோத் சிங் சித்து ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் மற்றும் உள்துறை அமைச்சகத்திடம் இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக நவ்ஜோத் சிங் சித்து சனிக்கிழமை தெரிவித்தார்.

மேலும் பஞ்சாப் அரசு இதுதொடர்பாக சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "பாகிஸ்தானின் பிரதமராக பதவியேற்க இருக்கும் பிடிஐ கட்சியின் தலைவர் இம்ரான் கான் இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் பஞ்சாப் அரசின் அமைச்சருமான நவ்ஜோத் சிங் சித்துவுக்கு பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளார். மேலும், சித்துவுக்கு தனிப்பட்ட முறையில் தொலைபேசியிலும் அழைப்பு விடுத்துள்ளார். சித்து அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டுள்ளார்" என்று கூறப்பட்டிருந்தது.

இதனால், இம்ரான் கான் பதவியேற்பு விழாவில் சித்து பங்கேற்க வாய்ப்புள்ளது.

தமிழ்நாடு விளையாட்டு பல்கலைகழகத்தின் முதல் பெண் துணைவேந்தர்: ஷீலா ஸ்டீபன் நியமனம்


By DIN | Published on : 11th August 2018 08:56 PM |




தமிழ்நாடு விளையாட்டு பல்கலைகழகத்தின் துணைவேந்தராக ஷீலா ஸ்டீபன் சனிக்கிழமை நியமிக்கப்பட்டார்.

தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைகழத்தின் துணைவேந்தராக ஷீலா ஸ்டீபனை நியமித்து தமிழக ஆளுநரும், பல்கலைகழகத்தின் வேந்தருமான பன்வாரிலால் புரோஹித் சனிக்கிழமை பணிநியமன ஆணையை அவரிடம் வழங்கினார்.

இதன்மூலம் ஷீலா ஸ்டீபன் தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைகழகத்தின் முதல் பெண் துணைவேந்தர் என்ற பெருமையை பெற்றார். இவர் 3 ஆண்டுகளுக்கு துணை வேந்தராக பணியாற்றவுள்ளார்.

ஷீலா ஸ்டீபன் 70-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறார்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் நலம் குறித்து ராஜ்நாத் சிங் விசாரிப்பு

By ANI | Published on : 11th August 2018 10:02 PM |




புதுதில்லி: தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் வாஜ்பாய்(94) உடல்நலம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அமித்ஷா உள்ளிட்டோர் இன்று நேரில் சென்று கேட்டறிந்தனர்.

முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் மூட்டுவலி பிரச்னையினால் அவதிப்பட்டு வந்தநிலையில், கடந்த இருபது ஆண்டுகளில் 10 முறை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், வயது மூப்பு மற்றும் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்ட அவரால் சரிவர பேசமுடியாமல் போனதை அடுத்து அரசியலில் இருந்து ஒதுங்கினார். இதைத்தொடர்ந்து அரசியல் நிகழ்வுகளில் அதிகம் பங்கேற்காமல் இருந்த அவர் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், சிறுநீரக தொற்று மற்றும் குறைந்த சிறுநீர் வெளியீடு காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வாஜ்பாய்க்கு சிகிச்சை நடைபெற்று வருகிறது.

வாஜ்பாய் உடல் நலம் குறித்து தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் நலம் மீட்டெடுக்கப்பட்டு மருத்துவர்களின் குழுவினரால் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், வாஜ்பாய்க்கு உரிய சிகிச்சை அளித்து வருகிறோம் என்றும் தெரிவித்துள்ளது.

இதனிடையே, வயதுமூப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வாஜ்பாயை பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்தனர். முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி, பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் பலர் மருத்துவமனைக்கு நேரில் சென்று வாஜ்பாய் உடல்நலம் குறித்து கேட்டறிந்தனர்.
பணி பதிவேடு தராமல் 2 ஆண்டுகளாக அலைக்கழிப்பு அரசு மருத்துவக்கல்லூரி நர்ஸ் தற்கொலை முயற்சி : மனிதாபிமானமற்ற அதிகாரிகளே காரணம் என கடிதம்


2018-08-12@ 02:45:05

திருவண்ணாமலை: பணி பதிவேடு தராமல் அதிகாரிகள் 2 ஆண்டுகளாக அலைக்கழித்ததால், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நர்ஸ் தற்கொலைக்கு முயன்றார். திருவண்ணாமலை அடுத்த தண்டராம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (46). இவரது மனைவி மீரா (38). இவர் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 2 ஆண்டுகளாக நர்ஸாக பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில், அரசு பணியில் சேர்ந்து பல ஆண்டுகள் ஆகியும் மீராவுக்கு ஊதிய உயர்வு கிடைக்கவில்லை. இவருக்கு பிறகு பணியில் சேர்ந்த நர்ஸ்களுக்கு அதிக ஊதியம் வழங்கப்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் சந்தேகம் அடைந்த மீரா, தனது பணி பதிவேட்டில் தான் பணியாற்றிய விபரங்கள் முறையாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதை அறிய திருவண்ணாமலை மருத்துவ பணிகள் இணை இயக்குனர் அலுவலகத்தை அணுகினார்.

ஆனால், அதிகாரிகள் சரிவர பதில் தெரிவிக்காமல் மீராவை அலைக்கழித்ததுடன், உங்களது பணி பதிவேட்டை சென்னை டிஎம்எஸ் அலுவலகத்திற்கு அனுப்பி உள்ளோம் என்று தெரிவித்துள்ளனர். அங்கு சென்று விசாரித்ததில் பணி பதிவேடு எங்களுக்கு வரவில்லை என அதிகாரிகள் கூறினார்களாம். கடந்த 2 ஆண்டுகளாக திருவண்ணாமலைக்கும், சென்னைக்கும் மீரா அலைக்கழிக்கப்பட்டார். இதனால் மனவேதனையடைந்த அவர் நேற்று முன்தினம், உடன் பணிபுரியும் நர்சுக்கு போன்செய்து, தான் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறியுள்ளார். இதுகுறித்து மீராவின் கணவர் செல்வராஜூக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் வீட்டிற்கு விரைந்து சென்று பார்த்தபோது மீரா மயங்கி கிடந்தார். அவரை உடனடியாக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், மீரா மயங்கி கிடந்த அறையில், சென்னை ஊரக மற்றும் மருத்துவ நலப்பணிகள் இயக்குனருக்கு எழுதிய கடிதம் கண்டெடுக்கப்பட்டது. அதில், 2 ஆண்டுகளாக பணி பதிவேடு தேடி அங்கும்இங்கும் நடந்து கொண்டிருக்கிறேன். எனது பணி பதிவேடு உள்ளதா, இல்லையா? என்பது தெரியவில்லை. என்னை யாரும் மனிதாபிமானத்தோடு நடத்தவில்லை. அதிகாரிகளிடம் பலதடவை முறையிட்டும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மனு கொடுத்தும் பலனில்லை. எனது தற்கொலையிலாவது நர்ஸ் சமூகத்திற்கு விடிவு பிறக்கட்டும். எனது மரணத்திற்கு மருத்துவத்துறை அதிகாரிகளே காரணம் என கூறப்பட்டிருந்தது. இதுகுறித்து தண்டாரம்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடையாளம் இழந்த கார்டன், கோபாலபுரம்

Added : ஆக 12, 2018 02:40

ஜெயலலிதா மறைவால், அரசியல் அடையாளத்தை இழந்த, போயஸ் கார்டன் வரிசையில், தற்போது, கோபாலபுரமும் இணைந்துள்ளது.

சென்னை, தேனாம்பேட்டை, போயஸ் கார்டனில், மறைந்த, அ.தி.மு.க., பொதுச்செயலரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவின் வீடு உள்ளது. அதன் அருகில் உள்ள, கோபாலபுரத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதி வீடு உள்ளது.

சட்டசபை, லோக்சபா தேர்தல்களின் போது, போயஸ் கார்டனும், கோபாலபுரமும் களை கட்டும். தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., தலைவர்கள் வசித்ததால், தேசிய அளவில், தமிழகத்தின் அரசியல் முகவரிகளாக, போயஸ் கார்டனும், கோபாலபுரமும் திகழ்ந்தன.ஜெயலலிதா மறைவால், அவரின் போயஸ் கார்டன் வீட்டை, நினைவிடமாக்கும் பணியை, தமிழக அரசு துவக்கியுள்ளது.

தற்போது, கருணாநிதியின் மறைவால், இனி, கோபாலபுரம் வீட்டிற்கு, கூட்டணி தொடர்பாக பேச்சு நடத்துவதற்கு, தலைவர்கள் வர வாய்ப்பில்லை. இதனால், போயஸ் கார்டனும், கோபாலபுரமும், தன் அடையாளத்தை இழந்துள்ளன.

- நமது நிருபர் -

நிகர்நிலை மருத்துவ பல்கலை ஆக., 20ல் இறுதி கவுன்சிலிங்

Added : ஆக 12, 2018 02:03

சென்னை:நிகர்நிலை பல்கலை, மத்திய பல்கலை, இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லுாரிகளில், இறுதி கட்ட கவுன்சிலிங், வரும், 20ல் நடைபெற உள்ளது.

அரசு மருத்துவ கல்லுாரிகளில், அகில இந்திய ஒதுக்கீடுக்கு சமர்ப்பிக்கப்படும், 15 சதவீத இடங்கள் மற்றும் நிகர்நிலை பல்கலை, மத்திய பல்கலை, இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லுாரிகளில் உள்ள, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இடங்களுக்கான மாணவர் சேர்க்கையை, மத்திய சுகாதார சேவைகள் இயக்ககம் நடத்துகிறது.

ஒப்படைப்பு

இரண்டு கட்ட கவுன்சிலிங் முடிந்து, அரசு மருத்துவ கல்லுாரிகளில் நிரம்பாத இடங்கள், அந்தந்த மாநில ஒதுக்கீட்டுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அதன்படி, தமிழகத்துக்கு, 98 எம்.பி.பி.எஸ்., மற்றும் 15 பி.டி.எஸ்., இடங்கள் ஒப்படைக்கப்பட்டன. நிகர்நிலை, மத்திய பல்கலை, இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லுாரிகளில், இறுதிகட்ட கவுன்சிலிங், வரும், 20ல் நடைபெறும் என, மத்திய சுகாதார இயக்ககம் அறிவித்துள்ளது.

மத்திய சுகாதார இயக்ககம் வெளியிட்ட அறிவிப்பு:

நிகர்நிலை பல்கலை, மத்திய பல்கலை, இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லுாரிகளில் உள்ள காலிஇடங்கள் குறித்த விபரம், வரும், 14, 15ல், mcc.nic.in என்ற,இணையதளத்தில் வெளியிடப்படும்.இறுதி கட்ட கவுன்சிலிங் நடைமுறைகள், 16 முதல், 18ம் தேதி வரை நடைபெறும்.

மாணவர் சேர்க்கைபின், 20ம் தேதி கவுன்சிலிங் நடத்தப்பட்டு, இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். அன்றைய தினம், முடிவுகள் வெளியிடப்படும். இடங்களை பெற்ற மாணவர்கள், வரும், 21 முதல், 26ம் தேதிக்குள் தேர்ந்தெடுத்த கல்லுாரியில் சேர வேண்டும்.சேராத இடங்கள் காலி இடங்களாக அறிவிக்கப் பட்டு, அந்தந்த கல்லுாரி களே, 'நீட்' தேர்வு அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடத்த அனுமதிக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஆறாண்டாகியும் முடியாத அகல ரயில் பாதை பணி பட்டுக்கோட்டை - திருவாரூர் இடையே ரயில் ஓடுமா?

Added : ஆக 12, 2018 01:38



தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை - திருவாரூர் இடையேயான, 'மீட்டர் கேஜ்' பாதையை, அகல ரயில் பாதையாக மாற்றும் பணி, ஆறு ஆண்டுகளாகியும் முடியா ததால், பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியிலிருந்து, பட்டுக்கோட்டை - திருவாரூர் - திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி வரையிலான, 187 கி.மீ., மீட்டர் கேஜ் பாதையை, அகல ரயில் பாதையாக மாற்றும் பணி, 2012 முதல் நடந்து வருகிறது. இதற்கான, திட்டச்செலவு, 1,700 கோடி ரூபாய்.

இதில், காரைக்குடி - பட்டுக்கோட்டை இடையே, 73 கி.மீ., பாதை பணி முடிந்து, ஜூலை, 2 முதல், ரயில் போக்குவரத்து நடந்து வருகிறது.பட்டுக்கோட்டை - திருவாரூர் - திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி இடையே, அகல ரயில் பாதை பணி நடந்து வருகிறது. இதில், பட்டுக்கோட்டை - திருவாரூர் இடையேயான, 76 கி.மீ., பாதை பணியை விரைவாக முடித்து, ராமேஸ்வரம் - காரைக்குடி - பட்டுக்கோட்டை - திருவாரூர் - சென்னை இடையே, ரயில் போக்குவரத்தை துவக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள், தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

பாதையின் நிலை

பட்டுக்கோட்டை - திருவாரூர் பாதையில், 12 ரயில் நிலையங்கள் உள்ளன. பெரிய நிலையமான, அதிராம்பட்டினத்தில், 80 சதவீத பணி முடிந்துள்ளது. நடைபாதை மற்றும் மேற்கூரை அமைக்கும் பணி நடந்து வருகிறது. அதேபோல, தில்லைவிளாகம், திருத்துறைப்பூண்டி ரயில் நிலையங்களின் கட்டுமான பணியும், 80 சதவீதம் முடிந்துள்ளது. நடைபாதைக்கு மண் நிரப்பப்பட்டு, மேற்கூரை அமைக்கும் பணி நடந்து வருகிறது.முத்துப்பேட்டையில், ரயில் நிலைய பணி முடிந்து, டிக்கெட் கவுன்டர் அமைக்கப்பட்டு உள்ளது.

நடைபாதையில், மண் நிரப்பப்பட்டு, மேற்கூரை அமைக்கும் பணி நடக்கிறது. திருநெல்லிக்காவல் நிலைய கட்டுமான பணி, மந்த கதியில் நடக்கிறது. திருவாரூர் ரயில் நிலையத்தில், இணைப்பு நடைபாதை பணிகள் முடிந்துள்ளன. மின் விளக்குகள் அமைக்கும் பணி முடியவில்லை.

இந்தப் பாதையில், மணலி, ஆலத்தம்பாடி, அம்மனுார், மாவூர் ரோடு, மாங்குடி நிலையங்களின் கட்டுமான பணிகள், மந்த கதியில் நடக்கின்றன. அவற்றில், பாலப் பணிகள் முடிந்துள்ளன. ரயில்வே கேட், சிக்னல் பணி இன்னும் துவங்கவில்லை. பட்டுக்கோட்டை - அதிராம்பட்டினம் - முத்துப்பேட்டை இடையே, 19 கி.மீ., ஜல்லி நிரப்பி, தண்டவாளம் அமைக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் - திருநெல்லிக்காவல் இடையே, 13 கி.மீ., மற்றும் திருநெல்லிகாவல் - தில்லைவிளாகம் இடையே, 27 கி.மீ., துாரத்திற்கு, ஜல்லி நிரப்பப்பட்டு, தண்டவாளம் அமைக்கும் பணி, மந்த கதியில் நடக்கிறது.

கடும் அதிருப்தி

இப்பாதையில் உள்ள, லெவல் கிராசிங் கேட்டுகளில் சிக்னல் கட்டட பணி நடந்து வருகின்றன. பாதையில், சிக்னல் அமைக்கும் பணிகள் இன்னும் துவங்கவில்லை. எந்த, 'கேட்'டும் முழுமையாக முடிக்கப்படவில்லை. இப்பாதை பணி மந்தகதியில் நடப்பதால், மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

இதுகுறித்து, திருவாரூர் மாவட்ட ரயில் உபயோகிப்பாளர் சங்க செயலர், பாஸ்கரன் கூறியதாவது:பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர், சென்னையில் வசிக்கின்றனர். அவர்கள், ரயிலில் சென்னை செல்ல வேண்டுமெனில், தஞ்சை அல்லது திருவாரூர் சென்று, அங்குஇருந்து செல்ல வேண்டும்.

'நான்கு ஆண்டுகளில் ரயில் போக்குவரத்து துவக்கப்படும்' என, அதிகாரிகள் கூறினர்; ஆறு ஆண்டு களாகியும், பாதை பணி முடியவில்லை.திருவாரூர் - காரைக்குடி மீட்டர் கேஜ் பாதையை, அகல ரயில் பாதையாக மாற்றும் பணியை, முதலில் காரைக்குடியில் இருந்து துவங்காமல், திருவாரூரில் இருந்து துவங்கியிருக்க வேண்டும்.

அப்படி செய்திருந்தால், பட்டுக்கோட்டை வரை பாதை பணி முடிந்து, சென்னை - பட்டுக்கோட்டை வரை ரயில் போக்குவரத்து துவங்கிஇருக்கும். பயணியர் மற்றும் சரக்கு போக்குவரத்தால், ரயில்வேக்கு வருவாய் கிடைத்திருக்கும்; மக்களுக்கும், பயண செலவு குறைந்து இருக்கும்.தற்போது, 'பாதை பணி டிசம்பருக்குள் முடிக்கப்படும்' என, அதிகாரிகள் கூறுகின்றனர். பணிகள் மந்தகதியில் நடப்பதாலும், இனி, மழைக்காலம் என்பதாலும், வேலைகள் தாமதமாக வாய்ப்புள்ளது.

பணிகளை முடுக்கிவிட்டு, 2019 மார்ச் முதல், ராமேஸ்வரம் மற்றும் காரைக்குடியில் இருந்து, திருவாரூர் வழியாக, சென்னைக்கு ரயில் போக்குவரத்தை துவங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

'கடவுளுக்கே வெளிச்சம்'

மல்லிபட்டினம், அதிராம்பட்டினம் மற்றும் முத்துப்பேட்டை மீனவர்கள் கூறியதாவது:சேதுபாவா சத்திரம், மல்லிபட்டினம், பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளில், மீன், இறால், கருவாடு வியாபாரிகள் அதிகம் உள்ளனர். மீட்டர் கேஜ் பாதையில், ரயில் போக்குவரத்து இருந்தபோது, ராமேஸ்வரம் - சென்னை இடையே இயக்கப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில்கள்; முக்கிய ரயில் நிலையங்கள் இடையே இயக்கப்பட்ட பயணியர் ரயில்களில், மீன், இறால், கருவாடு, தேங்காய், நெல், அரிசி போன்றவை, அதிகம் அனுப்பப்பட்டு வந்தன.

இப்பாதை மூடப்பட்டு, ஆறு ஆண்டுகளாகியும் பணி முடியாததால், பொருட்களை சென்னைக்கு விற்பனைக்கு எடுத்துச் செல்ல, சரக்கு லாரிகள் மற்றும் ஆம்னி பஸ்களில் கூடுதல் செலவாகிறது. இந்த பாதையில், ரயில் ஓடினால், வியாபாரிகள் அதிகம் பயன்பெறுவர். ஆனால், எப்போது ரயில் ஓடும் என்பது, அந்த கடவுளுக்கே வெளிச்சம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

'இது தான் நவீன தொழில்நுட்பம்'

''காரைக்குடி - பட்டுக்கோட்டை இடையே உள்ள, 36 ரயில்வே கேட்களில், நான்கு கேட்களில் மட்டுமே ஆட்கள் உள்ளனர். மற்ற, 32 கேட்டுகளை திறந்து மூட, ரயிலிலேயே ஊழியர்கள் வருகின்றனர். அவர்கள் ரயில் அந்த இடத்தை அடைந்ததும் இறங்கி, ரயில்வே கேட்டை மூடி, ரயில் சென்றதும், மீண்டும் திறந்து விடுகின்றனர்.

''இந்த காட்சிகளை பதிவு செய்யும் சிலர், சமூக வலைதளங்களில் பரப்பி, 'இந்தியன் ரயில்வேயின் நவீன தொழில்நுட்பம் இது தான்' என, கிண்டலடிப்பது வேதனையாக உள்ளது. கேட்களில், தேவையான ஊழியர்களை நியமித்திருந்தால், இந்நிலை ஏற்பட்டிருக்காது. இனியாவது, ரயில்வே நிர்வாகம், இந்த பிரச்னையை தீர்க்க கவனம் செலுத்த வேண்டும்.
ஏ.வி.காந்தி, அரிமா சங்க மாவட்ட தலைவர், தஞ்சாவூர்

'மாப்பிள்ளை ரயில்'

பேராவூரணி ரயில் பயணியர் சங்க தலைவர் பழனிவேல், செயலர் கிருஷ்ணன் ஆகியோர் கூறியதாவது:காரைக்குடி - பேராவூரணி - பட்டுக்கோட்டை இடையே, ஜூலை, 2ல் இருந்து, திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில், பயணியர் ரயில் இயக்கப்படுகிறது. இதற்கு, 3:15 மணி நேரமாகிறது. ஆனால், பஸ்சில், 2:15 மணி நேரத்தில் செல்ல முடியும்.

ரயில் வேகம் குறைத்து இயக்கப்படுவதால், 'மாப்பிள்ளை அழைப்பு' ரயில் என, பயணியர் கிண்டலடிக்கின்றனர். எனவே, கட்டணம் குறைவாக இருந்தும், பயண நேரம் அதிகம் என்பதால், இந்த ரயிலில் செல்ல பயணியர் ஆர்வம் காட்டவில்லை.ரயிலின் வேகத்தை அதிகரித்து, தினமும் ரயிலை இயக்கவும், பட்டுக்கோட்டை - திருவாரூர் பாதை பணியை விரைவாக முடிக்கவும் வலியுறுத்தி, திருச்சி ரயில்வே கோட்ட பொது மேலாளர் அலுவலகம் முன், போராட்டம் நடத்த உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -
ஒரு நாள் மழைக்கே மின் தடை
சீசனை சமாளிக்குமா வாரியம்?

- நமது நிருபர் -

NEWS TODAY 28.06.2026