Sunday, August 12, 2018


மேட்டூர், நீர்திறப்பு, நீர்வரத்து

மேட்டூர் அணை, நடப்பாண்டில், இரண்டாம் முறையாக நிரம்பி உள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்படும், உபரி நீர் தொடர்ந்து வருகிறது. இதனால், மேட்டூர் அணையிலிருந்து, நான்கு ஆண்டுகளுக்கு பின், 1.25 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்படுவதால், காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, 10 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணை மொத்த நீர்மட்டம், 120 அடி; கொள்ளளவு, 93.47 டி.எம்.சி., கர்நாடகா அணைகளில் திறக்கப்பட்ட உபரி நீர், தொடர்ச்சியாக வந்ததால், நான்கு ஆண்டுகளுக்கு பின், ஜூலை, 23ல், மேட்டூர் அணை நிரம்பியது.பின், உபரி நீர் வரத்து குறைந்ததால், நேற்று முன்தினம், அணை நீர்மட்டம், 116.85 அடியாக சரிந்தது.

நீர்வரத்து :

இந்நிலையில், காவிரி நீர் பிடிப்பு பகுதியில், தீவிரமடைந்த பருவமழையால், கர்நாடகாவின் கபினி, கே.ஆர்.எஸ்., அணைகளில், நீர் வரத்து அதிகரித்தது.அவற்றிலிருந்து, இரு நாட்களாக, வினாடிக்கு, 1.43 லட்சம் கன அடி உபரி நீர், காவிரியில் வெளியேற்றப்பட்டது. அந்த நீர், நேற்று மதியம், 1:30 மணிக்கு, மேட்டூருக்கு



வந்தடைந்தது. இதையடுத்து, நடப்பாண்டில், இரண்டாம் முறையாக, மேட்டூர் அணை நிரம்பியது. நேற்று மாலை, அணைக்கு வினாடிக்கு, 1.35 லட்சம் கன அடி நீர் வந்தது. நேற்று மாலை, அணை உபரி நீர் திறக்கும், 16 கண் மதகு வழியாக, வினாடிக்கு, 1.௨5 லட்சம் கன அடி நீர், வெளியேற்றப்பட்டது. அது, காவிரியாற்றில் பெருக்கெடுத்து ஓடியது. மேட்டூர் காவிரி கரையோரம் சாகுபடி செய்த வாழை, பருத்தி, மாஞ்செடிகளை மூழ்கடித்தபடி, வெள்ளம் சென்றது. அனல்மின் நிலையம் அருகே, உபரி நீர் போக்கி யில், தனியார் கட்டிய குடோன், அருகிலுள்ள காளியம்மன் கோவிலை வெள்ளம் சூழ்ந்தபடி சென்றது. நேற்று, மேட்டூர் அணை நீர்மட்டம், 120 அடி; நீர் இருப்பு, 93.47 டி.எம்.சி.,யாக இருந்தது.

ஆய்வு :

மேட்டூர், காவிரி கரையோரத்திலுள்ள,

தங்கமாபுரிபட்டணம், கோல்நாயக்கன்பட்டி பகுதி களில், சேலம் கலெக்டர் ரோகிணி, நேற்று ஆய்வு மேற்கொண்டார்.பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: மேட்டூர் அணையில் இருந்து, 1.25 லட்சம் கன அடி நீர் வெளியேற்றுவதால், காவிரி கரையோரத்திலுள்ள மாவட்டங்களில், தாழ்வான பகுதி களில் வசிக்கும் மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல, அந்தந்த மாவட்ட நிர்வாகம் மூலம் எச்சரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் தொடர்ந்து கொண்டிருப்பதால், இன்று முதல், வெள்ளப்பெருக்கு அதிகம் இருக்கும். இதனால், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய, 10 மாவட்டங்களில், கரையோர பகுதிகளில் வெள்ள அபாய

எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

மூதாட்டி மீட்பு :

தங்கமாபுரிபட்டணத்தில், 12 வீடுகள் அருகே வரை தண்ணீர் சென்றது. இதனால், அந்த குடும்பத்தினர் வெளியேறுமாறு, வருவாய் துறையினர் எச்சரித்தனர். பலர், வீடுகளை பூட்டி, உறவினர்கள் வீடுகளுக்கு சென்றனர். அப்பகுதியில் வசித்தவர்கள், அங்குள்ள நகராட்சி துவக்கப்பள்ளியிலுள்ள, தற்காலிக வெள்ள நிவாரண மையத்தில் தங்க வைக்கப்பட்டனர். மேலும், 16 கண் மதகு, காவிரி கரையோரத்தில், தனியாக வசித்த, 70 வயது மூதாட்டி வீட்டின் அருகே தண்ணீர் சென்றது. நேற்று மாலை அவரை, வருவாய் துறையினர் மீட்டு, உறவினர் வீட்டுக்கு அனுப்பினர்.

அதிகபட்ச நீர் வரத்து திறப்பு :

மேட்டூர் அணைக்கு அதிகபட்சமாக, 1961ல், 3.01 லட்சம் கன அடி நீர்; 2005ல், 2.41 லட்சம்; 2013ல், 1.45 லட்சம் கன அடி நீர் வந்தது. நான்கு ஆண்டுகளுக்கு பின், நேற்று மேட்டூர் அணைக்கு, அதிகபட்சமாக வினாடிக்கு, 1.35 லட்சம் கன அடி நீர் வந்தது. மேட்டூர் அணையிலிருந்து, 1961ல் அதிகபட்சமாக, 2.84 லட்சம் கன அடி நீர்; 2005ல், 2.31 லட்சம்; 2013ல், 1.35 லட்சம் கன அடி நீர், காவிரியாற்றில் வெளியேற்றப்பட்டது. அதன்பின், நேற்று, காவிரியாற்றில் அதிகபட்சமாக, 1.25 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.- நமது நிருபர் -
வேளாண் நுழைவுத்தேர்வு அனுமதி அட்டை வெளியீடு

Added : ஆக 12, 2018 03:32

கோவை:தேசிய வேளாண் நுழைவுத்தேர்வெழுதும் மாணவர்களுக்கான, மின்னணு அனுமதி அட்டையை, ஐ.சி.ஏ.ஆர்., வெளியிட்டுள்ளது.
ஐ.சி.ஏ.ஆர்., எனப்படும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் கீழ் நாடு முழுவதும் செயல்படும் வேளாண் பல்கலைகள் மற்றும் நிறுவனங்களில், பல்வேறு வேளாண் படிப்புகள் வழங்கப்படுகின்றன.இவற்றில், இளநிலை படிப்புகளில், 15 சதவீதம், முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளில், 25 சதவீத இடங்கள், அகில இந்திய வேளாண் நுழைவு தேர்வுகள் மூலம், இடஒதுக்கீடு முறையில் நிரப்பப்படுகின்றன.

ஜூன் 22, 23ம் தேதிகளில் நடந்த தேசிய வேளாண் நுழைவுத்தேர்வுகள், தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டன. மறுதேர்வுகள், ஓ.எம். ஆர்., வினாத்தாள்கள் மூலம், 'ஆப் - லைன்' முறையில், நடக்கிறது.முதுநிலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளுக்கான தேர்வுகள், ஆக., 18; இளநிலை படிப்புகளுக்கான தேர்வுகள், ஆக., 19ல் நடக்கின்றன.

நாடு முழுவதும், 54 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.தமிழக மாணவர்களின் வசதிக்காக, கோவை, சென்னை ஆகிய நகரங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான, மின்னணு அனுமதி அட்டையை, ஐ.சி.ஏ.ஆர்., வெளியிட்டுள்ளது. மாணவர்கள், www.icarexam.net என்ற இணையதளத்தில், தங்கள், 'லாகின் ஐடி' மற்றும் 'பாஸ்வேர்டு' பயன்படுத்தி, 'அப்ளிகன்ட் லாகின்' பகுதியில்,'கிளிக்' செய்து, 'இ - அட்மிட்' அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஒரு நாள் மழைக்கே மின் தடை சீசனை சமாளிக்குமா வாரியம்?

Added : ஆக 12, 2018 01:48


ஒரு நாள் மழைக்கே, பல இடங்களில், மின் வினியோகம் பாதித்ததால், வடகிழக்கு பருவமழை சீசனை, மின் வாரியம் சமாளிக்குமா என்ற சந்தேகம், மக்களிடம் எழுந்துள்ளது.

சென்னையில், குறிப்பிட்ட சில இடங்களில் கேபிள்; மற்ற இடங்களில், மின் கம்பம் வாயிலாக, மின் வாரியம், மின் வினியோகம் செய்கிறது. அக்டோபரில், வடகிழக்கு பருவமழைக் காலம் துவங்குகிறது. அப்போது, மின் விபத்து, மின் தடை ஏற்படாமல் இருக்க, மின் வினியோக பெட்டி, 'டிரான்ஸ்பார்மர்' உள்ளிட்ட சாதனங்களில், பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும்படி, உதவி பொறியாளர்களுக்கு, மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

பலர், அந்த பணிகளை துரித கதியில் மேற்கொள்ளாமல், அலட்சியமாக உள்ளனர். சென்னை, காஞ்சி, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில், சில தினங்களாக, இரவில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நேற்று முன்தினம் இரவு துவங்கிய மழை, நேற்று வரை தொடர்ந்தது. இதனால், பல இடங்களில், மின் தடை ஏற்பட்டது.

இது குறித்து, மின் வாரிய அதிகாரி கூறியதாவது:கன மழையால், வேகமாக காற்று வீசிய இடங்களில், மரக் கிளைகள், அருகில் இருந்த மின் கம்பிகள் மேல் விழுந்தன. மழை தண்ணீர் பட்டதும், அதிக வெப்பத்துடன் இருந்த, மின் கம்பியை ஒட்டியிருந்த, 'இன்சுலேட்டர்' என்ற கருவிகளும் பழுதாகின. இதுபோன்ற காரணங்களால், மின் வினியோகம் பாதித்தது.

பழுது, உடனடியாக சரி செய்யப்பட்டு, மின் சப்ளை வழங்கப்பட்டது. தண்ணீர் தேங்கும் பகுதிகளில், முன்னெச்சரிக்கையாக, தற்காலிகமாக, மின் சப்ளை நிறுத்தப்பட்டது. மழை சீசனின் போது, எந்த பிரச்னையும் ஏற்படாது.இவ்வாறு அவர் கூறினார்.பணம் தர மறுப்பு!மழைநீரில் மூழ்குவதை தடுக்க, தரையை ஒட்டி உள்ள, பெரிய மின் வினியோக பெட்டியின் உயரத்தை அதிகரிக்க, 4,500 ரூபாய்; சிறிய பெட்டிக்கு, 2,500 ரூபாய்; மின் வினியோக பெட்டிக்கு கதவு போடுவதற்கு, 600 ரூபாய் என, பிரிவு அலுவலகங்களுக்கு வழங்க, மேற்பார்வை பொறியாளர்களுக்கு, மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது. அவர்கள் பணம் தராததால், மின் வினியோக பெட்டியை சீரமைப்பது தாமதமாவதாக, உதவி பொறியாளர்கள் புகார் எழுப்பியுள்ளனர்.
கூட்டணி சேர மறுத்து விட்டு குலுங்கி அழுது என்ன பயன்?'

Added : ஆக 12, 2018 00:54 |



  கருணாநிதி மறைவுக்கு அஞ்சலி தெரிவிக்கும் விதமாக, விஜயகாந்த் வீடியோ பதிவு வெளியிட்டதால், தி.மு.க.,வினர் மட்டுமின்றி, தே.மு.தி.க., வினரும் கடுப்படைந்துஉள்ளனர்.

சினிமாவில் கதாநாயகனாகவும், நடிகர் சங்க தலைவராகவும் இருந்த காலத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு, விஜயகாந்த் மிக நெருக்கமானவராக இருந்தார். எப்போது வேண்டுமானாலும், கருணாநிதியை சந்திக்கும் செல்வாக்கு பெற்றவராக விளங்கினார்.

நடிகர் சங்கம் சார்பில், கருணாநிதிக்கு, சென்னை யில் பிரமாண்டமான பாராட்டு விழா நடத்தி, தங்க பேனாவையும், விஜயகாந்த் பரிசளித்தார்.

விஜயகாந்த் செயல்பாடுகளை பார்த்து வியந்த கருணாநிதி, அரசியலில், தனக்கு அருகில் வைத்துக் கொள்ளலாம் என, கணக்கு போட்டார்.ஆனால், 2005ல், தே.மு.தி.க.,வை, விஜயகாந்த் துவங்கினார். 2006 சட்டசபை தேர்தலில், தி.மு.க.,விற்கு எதிராக, விஜயகாந்த் தீவிர பிரசாரம் செய்தார். இருப்பினும், தி.மு.க., ஆட்சிக்கு வந்தது.

அதேநேரத்தில், சென்னை, கோயம்பேடு மேம்பால கட்டுமானப் பணிக்காக, விஜயகாந்துக்கு சொந்தமான, திருமண மண்டபத்தின் ஒரு பகுதி இடிக்கப்பட்டது. இதற்காக, எட்டு கோடி ரூபாய்க்கு மேல், விஜயகாந்திற்கு இழப்பீடு கிடைத்தது.விஜயகாந்தின் வீடு மற்றும் கட்சி அலுவலகத்தில், வருமான வரி சோதனை நடந்தது. இத்தனைக்கும் கருணாநிதி தான் காரணம் என்ற ரீதியில், விஜயகாந்த் பேச துவங்கினார்.

கடந்த, 2011ல், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து, தி.மு.க.,வை பின்னுக்கு தள்ளி, எதிர்க்கட்சி தலைவராக, விஜயகாந்த் பதவி ஏற்றார்.

வீடியோ பதிவு

கட்சியின் மாநில நிர்வாகிகள் உசுப்பேற்றியதால், முதல்வர் கனவில் மிதந்த விஜயகாந்த், தி.மு.க., - அ.தி.மு.க., எதிர்ப்பு அரசியலை கையில் எடுத்தார். ஜெயலலிதாவையும், கருணாநிதியையும் கடுமையாக விமர்சித்து பேசினார். இதனால், 2014 லோக்சபா மற்றும், 2016 சட்டசபை தேர்தல்களில், தே.மு.தி.க.,விற்கு படுதோல்விகள் தான் பரிசாக கிடைத்தன.

இரண்டு பெரிய தலைவர்களை எதிர்த்து, அரசியல் செய்தது, தே.மு.தி.க.,வின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்து விட்டது.லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல் களில், தி.மு.க., வின் தோல்விகளுக்கு காரணமாக இருந்த விஜயகாந்தும், பிரேமலதாவும், கருணாநிதி மறைவிற்கு கண்ணீர் மல்க, வீடியோ பதிவு வெளியிட்டுஉள்ளனர்.

சட்ட போராட்டம்

அமெரிக்காவில் இருந்து இரங்கல் கடிதமும், விஜயகாந்த் எழுதி உள்ளார். இவர்களின் நடவடிக்கை, தி.மு.க., மட்டுமின்றி, தே.மு.தி.க., வினர் மத்தியிலும், கடும் அதிருப்தியை ஏற்படுத்திஉள்ளது.

இதுகுறித்து, தே.மு.தி.க., வட்டாரத்தில் கூறப்படுவதாவது:விஜயகாந்திற்கும், பிரேமலதாவிற்கும், தன் தலைமையில் திருமணம் செய்து வைத்தவர், கருணாநிதி. அந்த நன்றி விசுவாசத்தை காட்டுவதற்கு, 2016ல், தி.மு.க.,வுடன், தே.மு.தி.க., கூட்டணி அமைத்திருக்கலாம். கூட்டணி உறுதியாகும் என, நம்பிய கருணாநிதி, 'பழம் நழுவி, பாலில் விழுந்து விட்டது' என்றார். ஆனால், மனைவி பேச்சை கேட்டு, விஜயகாந்த், தி.மு.க., கூட்டணியை அலட்சியப்படுத்தினார்.

தே.மு.தி.க., கூட்டணியில் இருந்திருந்தால், கருணாநிதி முதல்வராக இருந்து, இன்றைக்கு இறந்திருப்பார். அவருக்கு, மெரினாவில் இடம் கிடைக்க, சட்ட போராட்டம் நடத்த வேண்டிய தேவை இருந்திருக்காது.

'கிங் மேக்கர்'

தேர்தல் பிரசாரங்களில், கருணாநிதியை ஊழலுக்கு பொறுப்பாளி என்ற ரீதியில் விஜயகாந்தும், பிரேமலதாவும் கடுமையாக விமர்சித்தனர். ஒரு கூட்டத்தில் பேசிய விஜயகாந்த், 'இனி கருணாநிதியை, 'கலைஞர்' என்று அழைக்க மாட்டேன்' என்று, ஆவேசமாக கூறினார். இப்போது, அரசியலுக்காக, கருணாநிதிக்கு இரங்கல் கடிதமும், வீடியோவும் வெளியிட்டு உள்ளார்.

அப்போதே, கட்சியினர் பேச்சை கேட்டு இருந்தால், இன்றைக்கு ஜெயலலிதாவையும், கருணாநிதியையும், முதல்வர் ஆக்கிய, 'கிங் மேக்கர்' என்ற பெயர், விஜயகாந்திற்கு கிடைத்திருக்கும். அரசியலில் செல்வாக்கு மிக்கவராக, விஜயகாந்த் இருந்திருப்பார்.கூட்டணி சேர மறுத்து விட்டு, இப்போது குலுங்கி அழுது என்ன பயன்?இவ்வாறு அக்கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.

- நமது நிருபர் -
ஜெ., நினைவிடத்திற்கு எதிரான வழக்குகள் வாபஸ்
முதல்வர் பழனிசாமிக்கு கிடைத்த வெற்றி 

 

dinamalar 12.08.2018

மெரினாவில், தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய அனுமதி மறுத்தது, ஜெ., நினைவிடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க.,வினர் தொடர்ந்த வழக்குகளை, வாபஸ் பெற வைத்தது போன்ற நடவடிக்கைகளால், முதல்வர் பழனிசாமிக்கு, அ.தி.மு.க.,வினரிடம் ஆதரவு கிடைத்துள்ளது.




காமராஜர் நினைவிடம் :

தி.மு.க., தலைவர் கருணாநிதி, ஆக., 7ம் தேதி மாலை இறந்தார். 'அவரது உடலை, சென்னை, மெரினா கடற்கரையில், அண்ணாதுரை நினைவிட வளாகத்தில், அடக்கம் செய்ய, அனுமதி அளிக்க வேண்டும்' என, தி.மு.க., சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால், மெரினா கடற் கரையை ஒதுக்க முடியாது. அதற்கு பதிலாக, கிண்டியில், காமராஜர் நினைவிடம் அருகே இடம் ஒதுக்குவதாக, அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது.இதை ஏற்க மறுத்து, மெரினாவில் இடம் ஒதுக்கக் கோரி, நீதிமன்றத்தில், தி.மு.க., தரப்பில் வழக்கு தொடர்ந்தனர். மெரினாவில், ஜெ., நினைவிடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து, ஏற்கனவே, தி.மு.க., - பா.ம.க., வழக்கறிஞர்கள் தொடுத்திருந்த வழக்குகளை, திடீரென அவர்கள் வாபஸ் பெற்றனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், கருணாநிதி உடலை அடக்கம் செய்ய, மெரினாவில் இடம் ஒதுக்கும்படி உத்தரவிட்டது. கருணாநிதிக்கு கடற்கரையில் இடம் கொடுக்க, அரசு மறுத்த தகவல் வெளியானதும், தி.மு.க.,வினர், முதல்வர் பழனிசாமியை வசைபாடினர். அ.தி.மு.க.,விலும்
பெரும்பாலானோர், 'அவர்கள் கேட்ட இடத்தை கொடுத்திருக்கலாம். தேவையில்லாமல் இடத்தை மறுத்து, கெட்டப் பெயர் வாங்க வேண்டியதில்லை' என, கருத்து தெரிவித்தனர்.

வழக்கு விசாரணை :

'துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் மூத்த அமைச்சர்களும், முதல்வரிடம் இடத்தை வழங்கி விடலாம்' என, தெரிவித்துள்ளனர்.ஆனால், முதல்வர் தன் முடிவில் உறுதியாக இருந்துள்ளார். அவர் ஏன், அத்தகைய முடிவெடுத்தார் என்பதை, வழக்கு விசாரணைதெளிவுபடுத்தியது. மெரினா கடற்கரையில், ஜெ.,க்கு நினைவிடம் கட்டினால், சுற்றுச்சூழல் பாதிக்கும் எனக்கூறி, வழக்கு தொடர்ந்தவர்கள், வழக்குகளை வாபஸ் பெற்றதன் வாயிலாக, அவர்களுடைய நோக்கம், சுற்றுச்சூழல் அல்ல; ஜெ., தான் என்பது தெளிவானது.ஜெ.,க்கு நினைவிடம் கட்ட, முட்டுக்கட்டையாக இருந்த வழக்குகள், வாபஸ் பெறப்பட்டதால், நினைவிடத்திற்கான தடைகள் நீங்கின. நெடுஞ்செழியன், ஜானகி போன்றோர் மறைந்தபோது, அவர்கள் உடலை அடக்கம் செய்ய, மெரினாவில் இடம் ஒதுக்கும்படி, அப்போது, முதல்வராக இருந்த கருணாநிதியிடம் கேட்டபோது, அவர் மறுத்துள்ளார். இதற்கான ஆதாரங்கள், அரசு தரப்பில், நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.காமராஜருக்கு, கடற்கரையில் இடம் தர, கருணாநிதி மறுத்தாரா என்பதும், விவாதப் பொருளாகி உள்ளது. அப்போது, காங்கிரசில் முக்கிய தலைவர்களாக இருந்த, சிலர் மறுத்துள்ளனர்; வேறு சிலரோ உண்மை என, தெரிவித்துள்ளனர். எது எப்படியோ, கருணாநிதிக்கு கடற்கரையில் இடம் தர மறுத்த, முதல்வர் பழனிசாமி மீது கோபப்பட்ட அ.தி.மு.க.,வினர், தற்போது, அவரை பாராட்ட துவங்கி உள்ளனர். அவருக்கு ஆதரவாக, சமூக வலைதளங்களில், கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

ஜெ., வழியில் :

இதுகுறித்து, அ.தி.மு.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:கருணாநிதி எதிர்ப்பே, அ.தி.மு.க., துவங்க காரணம். கட்சியை துவக்கிய, எம்.ஜி.ஆர்., அவருக்கு பின், கட்சியை வழிநடத்திய ஜெயலலிதா ஆகியோர், கருணாநிதியை எதிர்த்தே, அரசியல் செய்தனர்.கருணாநிதி குடும்பத்தினர் கேட்டதும், மெரினாவில் இடம் ஒதுக்கி


இருந்தால், முதல்வர் பழனிசாமிக்கு நல்ல பெயர் கிடைத்திருக்கும் என, சிலர் கூறுகின்றனர். நல்ல பெயர், தி.மு.க.,வினரிடம் கிடைத்திருக்கும். அதனால், அ.தி.மு.க.,விற்கு என்ன பயன்?கருணாநிதி உத்தரவை எடுத்துக்காட்டி, இடம் தர மறுத்ததால், தற்போது, ஜெ., வழியில் முதல்வர் செயல்படுகிறார் என்ற உணர்வு, கட்சிக்காரர்களிடம் ஏற்பட்டுள்ளது. வாழ்நாள் முழுவதும், ஜெ.,வை, நீதிமன்ற படியேற வைத்தவர்களை, இறுதி அஞ்சலிக்காக, நீதிமன்றம் செல்ல வைத்துவிட்டார். கடற்கரையில் நினைவிடம் கட்ட, எதிர்ப்பு தெரிவித்து வழக்கு போட்டதும், அவர்கள். வாபஸ் பெற்றதும் அவர்களே. தற்போது, ஸ்டாலினுக்கு வெற்றி என்கின்றனர். இது, எப்படி நியாயமாகும்; எட்டு மணி நேரம், தி.மு.க.,வினரை அலைய வைத்து, முதல்வர் பழனி சாமி வெற்றி பெற்றுள்ளார்.

ஜெ., படத்தை, சட்டசபையில் வைக்க எதிர்ப்பு தெரிவித்து, நீதிமன்றம் சென்றனர். எங்கள் தலை வியை இழிவுப்படுத்த, எல்லா வகையிலும் முயற்சித்தனர். நாங்கள், அந்த அளவுக்கு கீழிறங்கவில்லை. அவர்கள் போட்ட வழக்குகளையும், உத்தரவுகளையும் அடிப்படையாகக் கொண்டே, இடம் மறுக்கப்பட்டது.ஜெ.,க்கு நினைவிடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து, அவர்கள் தொடர்ந்த வழக்குகளை, அவர்களாகவே வாபஸ் பெற வைத்து, அ.தி.மு.க.,விற்கு மிகப்பெரிய வெற்றியை, பழனிசாமி தேடி தந்துள்ளார். உண்மையில் இது, முதல்வர் பழனிசாமிக்கு கிடைத்த வெற்றி.இவ்வாறு அவர்கள் கூறினர்.- நமது நிருபர் -
காஞ்சிரபுரத்தில் நாளை உள்ளூர் விடுமுறை

Added : ஆக 12, 2018 08:25

காஞ்சிபுரம் : ஆடிப்பூரத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கவனக்குறைவால் நிகழும் குழந்தை மரணங்களில் முதல் குற்றவாளிகள் பெற்றோர்களே!

By RKV | Published on : 11th August 2018 04:06 PM |



இன்று நாளிதழ்களில் வெளிவந்துள்ள செய்தி...

"குழந்தைகள் நலனுக்காக தனித் துறையை உருவாக்கினால் என்ன? என்று மத்திய அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது."

இப்படிப்பட்ட கேள்விகள் எழக்காரணம், குழந்தைகள் பாதுகாப்பு விஷயத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் கவனக்குறைவு மரணங்கள் மற்றும் விபத்துகளே!

இதோ பண்ருட்டியில் இருந்து வந்த செய்தி ஒன்று மீண்டும் குழந்தைகள் பாதுகாப்பு விஷயத்தில் பீதியைக் கிளப்பியுள்ளது.

அண்டா நீரில் மூழ்கிய குழந்தை சாவு...

பண்ருட்டி அருகே அண்டா நீரில் மூழ்கிய ஆண் குழந்தை வியாழக்கிழமை உயிரிழந்தது.
பண்ருட்டி அருகே உள்ள கட்டமுத்துப்பாளையம் கிராமத்தில் வசிப்பவர் சிலம்பரசன் (32). புதுவையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஜெயசித்ரா (26). இவர்களது குழந்தைகள் மிதுன் (2), லக்ஷன் (7 மாதம்). வியாழக்கிழமை மதியம் வீட்டிலிருந்த அண்டா நீரில் மூழ்கிய நிலையில் லக்ஷன் உயிரிழந்துள்ளார்.
இதைக் கண்ட பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். குழந்தை உயிரிழந்த வேதனையில் வீட்டிலிருந்து வெளியேறிய தாய் ஜெயசித்ராவை காணவில்லையாம். இதுகுறித்து புதுப்பேட்டை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

சென்னையிலும் இதே போன்று உயிரிழப்பை ஏற்படுத்திய மற்றொரு சம்பவம்...

ஹஜ் பயணத்திற்கு தாத்தாவை வழியனுப்ப வந்த 2 வயதுக் குழந்தை மாடியில் இருந்து தவறி விழுந்து மரணம்...

ஹூப்ளியில் வசித்து வரும் மோசிம் என்பவர் தனது தந்தை ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளவிருந்ததால் அவரை வழியனுப்புவதற்காக குடும்பத்துடன் இரு நாட்களுக்கு முன் சென்னை வந்திருந்தார். அப்போது தந்தைக்கான பயண ஏற்பாடுகளைக் கவனிக்க அவரை அழைத்துக் கொண்டு தன் 2 வயதுமகன் அப்துல்லாவுடன் ஹஜ் கமிட்டி அலுவலகத்துக்குச் சென்றிருக்கிறார். சுமார் 100 அறைகளைக் கொண்ட அந்த ஹஜ் கமிட்டி அலுவலகத்தின் மூன்றாவது மாடியில் மோசிமின் குடும்பத்தினர் தங்க வைக்கப்பட்டிருந்தனர். முற்பகல் 11 மணியளவில் தாத்தா பாட்ஷா பயணத்திற்காக விமானநிலையம் சென்றடைந்ததும் தங்களது அறைக்குத் திரும்பிய மோசிம் குடும்பத்தார் அறையை காலி செய்து கொண்டு ஊர் திரும்பத் தயாராக பெட்டிகளை அடுக்கி எடுத்துக்கொண்டு மூன்றாவது மாடியில் இருந்து கீழிறங்கும் முனைப்பில் இருந்திருக்கின்றனர். அப்போது மூன்றாவது மாடி பால்கனியில் ஒரு பெரிய ஷூட்கேஸின் மீது அமர்ந்து வெளியே சாலையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த 2 வயதுக் குழந்தை அப்துல்லா தவறிப்போய் அங்கிருந்து கீழே விழுந்திருக்கிறான்.

குழந்தை கீழே விழுவதைக் கண்டதும் பீதியில் உறைந்த அங்கிருந்த மக்கள் உடனடியாகக் குழந்தையை அருகிலிருக்கும் எக்மோர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல உதவியிருக்கிறார்கள். தலையில் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட அப்துல்லா சிகிச்சை பலனளிக்காமல் மருத்துவமனையில் உயிரிழந்தார் எனத் தெரிகிறது.

இந்த மரணம் நிகழ்ந்திருப்பதும் கவனக்குறைவினால் தான். 2 வயதுக் குழந்தைய உயரமான ஷூட்கேஸில் அமர வைத்தது யார் குற்றம்?

பெற்றோர்களின் கவனக்குறைவே பிள்ளைகளின் உயிர் குடிக்கும் எமனாகி விடுவது வேதனைக்குரியது மட்டுமல்ல கண்டனத்திற்குரியதும் கூட!

இது போன்ற சம்பவங்கள் கடந்த காலங்களிலும் நிகந்ததுண்டு.


மூன்றாம் மாடி ஜன்னலருகே படுக்கையறையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி தவறி விழுந்து மரணம்...

கடந்தாண்டும் சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் மூன்றாம் மாடியில் படுக்கையறை ஜன்னல் அருகில் விளையாடிக் கொண்டிருந்த 1 வயதுக் குழந்தை ஒன்று அங்கிருந்து தவறி விழுந்து உயிரிழந்தது பரிதாபகரமானது.

இவையெல்லாவற்றையும் விட அதிகக் கண்டனத்துக்குரியது சென்னை அயனாவரம் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் 11 வயதுச் சிறுமிக்கு 7 மாதங்களாகத் தொடர்ந்து நடத்தப் பட்டு வந்த பாலியல் வன்கொடுமைச் சம்பவம். அதில் பிடிபட்டு அடையாளம் ஊர்ஜிதப்படுத்தப் பட்ட குற்றவாளிகள் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கான தண்டனை இன்னனும் உறுதி செய்யப்படவில்லை. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இம்மாதிரியான சம்பவங்கள் தொடர்கதையாவதைக் கண்டு தான் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மேற்கண்ட கேள்வியை எழுப்பியுள்ளனர். தங்களது கேள்விக்கான காரணங்களாக உச்சநீதிமன்றம் முன்வைத்திருக்கும் காரணங்களும் ஒப்புக் கொள்ளக்கூடியவையே. அதில் மறுப்பதற்கு ஏதுமில்லை. குழந்தைகளுக்கு எதிரான பாதுகாப்பின்மை குறைய வேண்டுமெனில் பெற்றோர் தங்களது குழந்தைகளின் மீதான கவனத்தையும், பொறுப்புணர்வையும் அதிகரித்தே ஆக வேண்டிய சூழல் தற்போது நிலவி வருகிறது. எத்தனை கவனமுடன் இருந்த போதும் சில நேரங்களில் குழந்தைகள் தங்கள் வயதுக்கு மீறிய விஷயங்களைப்பற்றி அறிந்து கொள்ளும்படியாகவும், உடல் மற்றும் மனவேதனை கொள்ளும்படியானதுமான சம்பவங்கள் நிகழ்ந்து விடுகின்றன. அதைத் தடுக்க வேண்டியது முதலில் பெற்றோர்களின் கடமையல்லவா?

அதனால் தான் நீதிமன்றம் கீழ்க்கண்டவாறு கேள்வி எழுப்பியுள்ளது.

வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் 15 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், குழந்தைகளை பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கும் நபர்களுக்கு, அறுவைச் சிகிச்சை மூலம் ஆண்மை நீக்கம் செய்வது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என கடந்த 2015-ஆம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை மத்திய அரசு அமல்படுத்தவில்லை. இதனையடுத்து, மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி, குழந்தைகள் மீதான பாலியல் கொடுமைகளுக்கு, வெளி நபர்கள் மட்டுமின்றி பெற்றோர்களும் காரணமாக உள்ளனர். 7 மாதங்களாக ஒரு சிறுமியை பலர் பாலியல் கொடுமை செய்துள்ளனர். அந்தச் சிறுமியின் தாயார் என்ன செய்து கொண்டிருந்தார்?
தன் மகளைக் கூட அவர்களால் கவனித்துக் கொள்ள முடியாதா? என்று கேள்வி எழுப்பியதோடு, கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறை குறைவின் காரணமாக பெரியவர்களின் அரவணைப்பு இல்லாமல் குழந்தைகள் வளர்கின்றனர். திருமணமானவுடன் தனிக்குடித்தனம் என்ற நிலை உருவாகிவிட்டது. இந்த முறையில் சில நன்மைகளும், சில பாதிப்புகளும் இருக்கத்தான் செய்கின்றன என கருத்து தெரிவித்தார்.

மேலும், ஒற்றை பெற்றோர் முறை சமுதாயத்தில் அதிகமாக உருவாகியுள்ளது. விவாகரத்து பெற்றுக் கொண்ட பின்னர், குழந்தை தாய் இல்லாமல் தந்தையிடமோ அல்லது தந்தை இல்லாமல் தாயுடனோ வாழ்வதால் மனதளவில் பாதிக்கப்படுகிறது. தாய், தந்தையுடன் குழந்தை வளர்ந்தால் தான் மனதளவிலும் ஆரோக்கியமாக இருக்கும் என்றார்.
குழந்தைகள் நலன் கருதி பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறையை, பெண்கள் நலத் துறை' என்றும் குழந்தைகள் நலத் துறை' என்றும் மத்திய அரசு இரண்டாகப் பிரித்தால் என்ன என்று கேள்வி எழுப்பினார்.

இது குறித்து மத்திய அரசின் கருத்தைக் கேட்டு தெரிவிக்கும்படி உதவி சொலிசிட்டர் ஜெனரல் கார்த்திகேயனுக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை வரும் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

NEWS TODAY 28.06.2026