Friday, September 7, 2018


கண்காணிக்கப்படுகிறோம்!


By ஆசிரியர் | Published on : 29th August 2018 01:12 AM |


செல்லிடப்பேசியிலும் அறிதிறன்பேசியிலும் தங்களுக்குத் தேவையான நபர்களின் எண்களை, பயன்படுத்துபவர்கள் சேமித்து வைப்பது வழக்கம். வெளியே இருந்து எந்த ஒரு எண்ணையும் முன் அனுமதியில்லாமல் இணைத்துவிட முடியாது. 

இந்தியாவிலுள்ள அறிதிறன்பேசி (ஸ்மார்ட்போன்') பயனாளிகளுக்கு திடீர் அதிர்ச்சி. அவர்களுடைய அறிதிறன்பேசியில் சேமித்துள்ள எண்களில் ஆதார் சேவையை வழங்கும் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் உதவி எண் அவர்கள் கேட்காமலேயே இடம்பெற்றிருந்தது.
 
பிரச்னை விவாதப் பொருளானவுடன் மத்திய சட்டம் மற்றும் தகவல் தொடர்பு அமைச்சர் இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட்டார். அறிதிறன்பேசியை உருவாக்கிய கூகுள் நிறுவனம் தாங்கள்தான் அதற்குக் காரணம் என்று ஏற்றுக்கொண்டிருக்கிறது. கூகுள் நிறுவனம் வாடிக்கையாளர்களின் தன்மறைப்புநிலையை (பிரைவஸி') மீறி அவர்களது அறிதிறன்பேசிகளில் நுழைந்ததற்கு மன்னிப்பு கேட்டது. 2014-இல் சில முக்கியமான அவசர சேவைக்கான எண்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்கு எல்லா அறிதிறன்பேசிகளிலும் ஒரு புதிய முறையை இணைத்ததாகவும் தவறுதலாக இந்த எண்ணும் இணைக்கப்பட்டதாகவும் தெரிவித்தது. இது குறித்து தாங்களே விசாரணை நடத்தப்போவதாகவும் தெரிவித்தது. 

ஒவ்வொரு தனிநபரும் தொடர்பு எண்கள், கடவுச் சொற்கள் என்று அனைத்தையும் தன்னுடைய செல்லிடப்பேசி அல்லது அறிதிறன்பேசியில்தான் சேமித்து வைத்திருக்கிறார். பல்வேறு தகவல்களும் அதன் மூலம்தான் பரிமாறிக்கொள்ளப்படுகின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக, வங்கிக் கணக்கும், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்கிறது. அப்படி இருக்கும்போது தனிநபருடைய அறிதிறன்பேசியில் கூகுளால் நுழைய முடியும் என்றால், தன்மறைப்புநிலைக்கு ஏற்படும் பாதிப்பு எத்தகையது என்பதை நாம் உணரவேண்டும். 

ஆண்ட்ராய்ட்' தொழில்நுட்பத்தில் இயங்கும் அறிதிறன்பேசிகளிலும், ஆப்பிள்' நிறுவனத்தின் ஐ போன்'களிலும் தன்மறைப்புநிலைக்கான கட்டளையுடன் (கமாண்ட்) நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்பது மறைக்கப்பட்டிருந்தாலும் கூட, பயனாளிகளின் செயல்பாடுகள் கூகுள் நிறுவனத்தால் கண்காணிக்கப்படுகின்றன என்கிற அதிர்ச்சிதரும் செய்தியை அúஸாசியேட் பிரஸ்' நிறுவனத்தின் புலன் விசாரணை வெளிப்படுத்தியிருக்கிறது. 

இங்கிலாந்திலுள்ள பெர்கிலி என்கிற இடத்தில், ஆராய்ச்சி மாணவி ஒருவர் தன்னுடைய ஆண்டராய்ட்' அறிதிறன்பேசியைப் பயன்படுத்திக் கொண்டிருந்தார். அப்போது, அவர் இருக்கும் பகுதி தொடர்பான விளம்பரங்கள் தொடு திரையில் வரத் தொடங்கின. வேறு ஓர் இடத்திற்கு சென்றபோது அந்தப் பகுதி சார்ந்த விளம்பரங்கள் வந்தன. இத்தனைக்கும் அவர் கூகுள் வரைபடம் தொடர்பான செயலியை முடக்கிவைத்திருந்தார். அதிலிருந்து, ஒரு செயலி தடை செய்யப்பட்டிருந்தாலும் கூகுள் நிறுவனம் பயனாளிகளைப் பின்தொடர்கிறது என்பது வெளிப்பட்டது.

தகவல்களை சேமிப்பது, எண்மத் தகவல்களைப் பயன்படுத்துவது என்பது மிகவும் பிரச்னைகள் நிறைந்த செயல்பாடு. கடந்த ஆண்டு வெளியான கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா முறைகேடு' எந்த அளவுக்கு சேமிக்கப்படும் தகவல்கள் சேமித்து வைத்தவர் எதிர்பாராமலும், அவரது ஒப்புதல் இல்லாமலும் பயன்படுத்தப்படுகின்றன என்பதை வெளிச்சம் போட்டது. அறிதிறன்பேசிகளில் பயனாளிகளின் ஒப்புதல் இல்லாமலே அவர்களிடம் உள்ள தகவல்கள் கூகுள் நிறுவனத்தால் பயன்படுத்தப்படுவது உலகளாவிய அளவில் மிகப்பெரிய விமர்சனத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
கூகுள் நிறுவனத்தின் வரைபடம் கோடிக்கணக்கான அறிதிறன்பேசி பயன்பாட்டாளர்களால் பயன்படுத்தப்படுகிறது என்பது மட்டுமல்ல, அவர்களின் நம்பிக்கைக்கு உகந்ததாகவும் கருதப்படுகிறது. 

அறிதிறன்பேசிப் பயனாளிகள் தாங்கள் எங்கே இருக்கிறோம், எங்கே போகிறோம் உள்ளிட்ட எந்த விவரத்தையும் வெளியிட விரும்பாவிட்டாலும் கூட, கூகுள் நிறுவனம் அவர்களைக் கண்காணிக்கிறது. இதனால் கூகுள் நிறுவனமும் அதனுடன் தொடர்புடைய முகநூல் செயலியும் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் கடுமையான கண்டனத்திற்கு உள்ளாகியிருக்கின்றன. பயனாளிகளின் முன் அனுமதியில்லாமல் அவர்களது அறிதிறன்பேசியில் சேமித்து வைத்திருக்கும் தகவல்களைப் பயன்படுத்தி பல்வேறு நிறுவனங்களின் விளம்பரங்களை அவர்கள் மீது திணிக்கின்றன. தாங்கள் இருக்கும் இடம் குறித்த தகவலை முடக்கியிருப்பதாக பயனாளிகள் நினைத்தாலும் கூட, அவர்களுக்குத் தெரியாமல் அவை பயன்படுத்தப்படுகின்றன.

கூகுளும் முகநூலும் நுகர்வோருக்கு சேவை செய்வதாகக் கூறிக்கொண்டாலும், அத்தனை பயனாளிகளின் தகவல்களையும், அவர்கள் பரிமாறிக்கொள்ளும் செய்திகளையும் சேகரித்து தணிக்கை செய்து தேவையான தகவல்களை சேமித்து வைத்து கொள்கின்றன. இந்த தககவல்களை பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு விலைபேசி லாபம் ஈட்டுகின்றன. கடந்த ஆண்டில் மட்டும் ஐரோப்பிய யூனியன் கூகுள் நிறுவனத்திற்கு 2.4 பில்லியன் யூரோ (சுமார் ரூ.19,715 கோடி) அபராதம் செலுத்த உத்தரவிட்டிருக்கிறது.

கூகுள், முகநூல் உள்ளிட்டவற்றிலிருந்து பெறப்படும் தகவல்களின் அடிப்படையில் அமெரிக்க நிறுவனங்கள் 2018-இல் இதுவரை செய்திருக்கும் விளம்பரங்களின் அளவு சுமார் 20 பில்லியன் டாலரைவிட (சுமார் ரூ.1.40 லட்சம் கோடி) அதிகம். பயனாளிகளின் தகவல்கள் குறித்த உரிமை அவர்களிடம்தான் இருக்க வேண்டும். அதிலும் வாடிக்கையாளருக்குத் தெரிவிக்காமல் திருட்டுத்தனமாக தகவல்களைத் திரட்டுவது என்பது மன்னிக்க முடியாத குற்றம்; தன்மறைப்புநிலைக்கு மிகப்பெரிய சவால்; நம்பிக்கை துரோகம்.

இந்தப் பிரச்னைக்கு சர்வதேச அளவில் தீர்வு கண்டுபிடிக்கப்பட்டாக வேண்டும். இல்லையென்றால் அது அறிதிறன்பேசிப் பயனாளிகள் நிர்வாணமாக நிற்பதற்குச் சமம்!
கனம் கோர்ட்டார் அவர்களே...

By ஆசிரியர் | Published on : 05th September 2018 01:34 AM |

கடந்த வாரம் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஹுலுவாடி ஜி.ரமேஷ், எம்.ஜி.முரளிதரன் ஆகியோர் அடங்கிய அமர்வு அதிர்ச்சி அளிக்கும் உத்தரவு ஒன்றைப் பிறப்பித்திருக்கிறது. 

இந்தியா முழுவதிலும் உள்ள சுங்கச் சாவடிகளில் நீதிபதிகள் உள்ளிட்ட சிறப்புத் தகுதி பெற்றோருக்கு (வி.ஐ.பி.), தனியாக வழி ஒதுக்கப்பட வேண்டும் என்பதுதான் அந்த உத்தரவு. இதுகுறித்து இந்தியாவிலுள்ள எல்லா சுங்கச் சாவடிகளுக்கும் தெரிவிக்கப்பட வேண்டும் என்றும், சிறப்புத் தகுதி பெற்றோருக்கான தனிப் பாதையில் மற்ற வாகனங்கள் அனுமதிக்கப்படக்கூடாது என்றும் அந்த உத்தரவு தெரிவிக்கிறது.
இந்தியா முழுவதும் சிறப்புத் தகுதி பெற்றோர்' கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், இப்படியோர் உத்தரவை நீதிபதிகளால் எப்படிப் பிறப்பிக்க முடிந்தது? ஏற்கெனவே சுங்கச் சாவடிகளில் சிறப்புத் தகுதி பெற்றோரிடமிருந்து சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. அப்படி இருக்கும்போது, சில நிமிடத் தாமதங்களைக் கூட சிறப்புத் தகுதி பெற்றோரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்பதும், ஜனநாயக நாட்டில் மக்களில் ஒருவராக இருக்க அவர்கள் தயாராக இல்லை என்பதும் ஏற்றுக் கொள்ளவே முடியாத மனப்போக்கு.

நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் தங்களுக்கு ஏற்படும் சில நிமிடத் தாமதங்களைத் தாங்கிக்கொள்ள முடியாத நீதிபதிகள், இந்தியா முழுவதுமுள்ள நீதிமன்றங்களில் கோடிக்கணக்கில் தேங்கிக் கிடக்கும் வழக்குகள் குறித்தோ, அவற்றின் தாமதத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்கள் குறித்தோ கவலைப்பட்டிருக்க வேண்டும். இந்தியாவின் 24 உயர்நீதிமன்றங்களில் கடந்த 10 ஆண்டுகளில் 10 லட்சத்துக்கும் அதிகமான வழக்குகள் தீர்ப்புக்காகக் காத்துக் கிடக்கின்றன. இந்தியாவின் அனைத்து நீதிமன்றங்களிலும் 3.3 கோடி வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இதுகுறித்தெல்லாம் கவலைப்படாமல் முழுக்க முழுக்க அரசின் நிர்வாக முடிவுக்கு உட்பட்ட சுங்கச்சாவடிக் கட்டண வசூல் குறித்தும், சிறப்புத் தகுதி பெற்றோருக்கு தனிப்பாதை ஒதுக்குவது குறித்தும் நீதிபதிகள் கவலைப்படுகிறார்களே, இது வேதனை அளிக்கிறது.

நியாயமாகப் பார்த்தால், நீதிபதிகளின் கோபமும் ஆத்திரமும் சுங்கச் சாவடிகள் மீதுதான் திரும்பி இருக்க வேண்டும். செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் தமிழகத்திலுள்ள 14 நெடுஞ்சாலை சோதனைச் சாவடிகளில் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது. கடந்த 9 ஆண்டுகளில் மட்டும் இரண்டரை மடங்கு அதாவது, 250% சுங்கக் கட்டணம் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இந்த அடாவடி சுங்கக் கட்டணக் கொள்ளை குறித்து நீதிபதிகள் கவலைப்பட்டிருக்க வேண்டும். 

தமிழகத்திலுள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் நீளம் சுமார் 5,324 கி.மீ. அதில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் பராமரிப்பில் 3,285 கி.மீ. சாலைகளும், மாநில நெடுஞ்சாலை பராமரிப்பில் 2,039 கி.மீ. சாலைகளும் உள்ளன. தமிழ் நாட்டிலுள்ள 44 நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளில் 26 சுங்கச் சாவடிகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலும் 18 சுங்கச் சாவடிகள் தமிழக அரசின் கட்டுப்பாட்டிலும் உள்ளன. ஆனால், அத்தனை சுங்கச் சாவடிகளிலும் கட்டணம் வசூல் செய்யும் பொறுப்பு தனியாரிடம் விடப்பட்டுள்ளது. இந்தத் தனியார் நிறுவனங்களுக்கு அரசு நிர்ணயித்திருக்கும் தொகைக்கும், சுங்கச் சாவடிகளில் வசூலாகும் தொகைக்கும் இடையே இருக்கும் இடைவெளி குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டால், சுங்கக் கட்டணக் கொள்ளை எவ்வளவு பெரிய மோசடி என்பது வெளிப்படும்.

தமிழகம் முழுவதும் மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருப்பதைத் தொடர்ந்து சுங்கச் சாவடிகளில் வசூலாகும் கட்டணமும் கணிசமாகவே அதிகரித்திருக்கிறது. இந்த நிலையில், சுங்கக் கட்டணம் குறைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தொடர்ந்து ஆண்டுதோறும் கட்டணம் அதிகரிக்கப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் 14 சுங்கச் சாவடிகளில் கட்டண
அதிகரிப்பு நடந்திருப்பது குறித்து ஊடகங்களிலோ, பொதுவெளியிலோ எந்தவிதமான சலசலப்போ, விமர்சனமோ இல்லாமல் இருப்பது அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்துகிறது.

சாலைகளுக்கும் பாலங்களுக்கும் சுங்கக் கட்டணம் வசூலிப்பது என்பது புதிய நடைமுறை ஒன்றுமல்ல. பல முக்கியமான இடங்களில் கட்டப்பட்ட பாலங்களுக்குக் கட்டணம் வசூலிக்கப்பட்டு பாலத்திற்கான செலவு ஈடுகட்டப்பட்டது. அந்தக் கட்டணத்தை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளே வசூலித்தன. பாலத்திற்கான செலவு வசூலாகிவிட்டால் கட்டணம் வசூலிப்பதும் நிறுத்தப்பட்டுவிடும். அதேபோல, கட்டு -பராமரி- ஒப்படை' திட்டத்தின் கீழ்தான் தேசிய நெடுஞ்சாலைகளும் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். 

சாலை அமைத்த நிறுவனத்தின் முதலீடு, வட்டி, லாபம் அனைத்தையும் கணித்துப் பார்த்துதான் சுங்கச்சாவடிக் கட்டணம் தீர்மானிக்கப்படுகிறது. ஆனால், முதலீட்டைவிட 30 மடங்குக்கும் அதிகமாக பணம் ஈட்டிய பிறகும் கூட, தனியார் நிறுவனங்கள் பராமரிப்பு' என்கிற பெயரில் முன்பு வசூலித்ததைவிட அதிகக் கட்டணத்தைத் தொடர்ந்து வசூலித்துக் கொண்டிருக்கும் சுங்கக் கட்டணக் கொள்ளை குறித்து அரசியல்வாதிகளும் பேசுவதில்லை, சமூக ஆர்வலர்களும் பேசுவதில்லை, நீதிமன்றங்களும் தலையிடுவதில்லை, பொதுமக்களுக்கும் இதுகுறித்த பிரக்ஞை' இல்லை.
சுங்கச் சாவடிகளில் நடைபெறும் கட்டணக் கொள்ளை குறித்து கவலைப்படாமல் சில நிமிடத் தாமதங்களுக்காக தனி வழி அமைக்க வேண்டும் என்கிற சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்யும் என்று எதிர்பார்ப்போமாக!

நோயல்ல, அறிகுறி!

By ஆசிரியர் | Published on : 06th September 2018 01:35 AM |


இரண்டு நாள்களுக்கு முன்பு சென்னையிலிருந்து தூத்துக்குடி செல்லும் விமானத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக கோஷம் எழுப்பிய ஆராய்ச்சி மாணவி லூயி சோபியா பிரச்னை பரபரப்பாக ஊடகங்களில் பேசப்பட்டு வருகிறது. சோபியா மேல் தொடரப்பட்டிருக்கும் வழக்கைத் திரும்பப் பெறவேண்டும் என்று திமுக உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் வலியுறுத்தி இருக்கின்றன. இந்தப் பிரச்னையை அரசியல் கோணத்தில் மட்டும் பார்ப்பது என்பது சரியாக இருக்காது.

சென்னையிலிருந்து தூத்துக்குடிக்குச் சென்ற விமானத்திலிருந்து இறங்கும்போது, சக பயணியான தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தன்னைக் கடந்து சென்றதைப் பார்த்தவுடன் ஆவேசமாக பாசிச பாஜக அரசு ஒழிக' என்று அத்தனை பயணிகளையும் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்க்க வைக்கும்படி உரக்கக் கோஷம் எழுப்பினார் சோபியா. அதை தமிழிசை செளந்தரராஜன் பொருட்படுத்தாமல், விமானத்திலிருந்து இறங்கிவிட்டார். அப்படியே அவர் அதை சட்டை செய்யாமல் போயிருந்தால் பிரச்னை பெரிதாகி இருக்காது. லூயி சோபியாவுக்கு தேவையில்லாமல் இந்த அளவிலான ஊடக விளம்பரமும் கிடைத்திருக்காது.

தூத்துக்குடி விமான நிலையத்தின் வரவேற்பறையில், பொது இடத்தில் நடந்துகொண்ட முறை சரிதானா என்று தமிழிசை செளந்தரராஜன் கேள்வி எழுப்பியதற்கு, தன்னுடைய கருத்தை வெளியிடும் உரிமை தமக்கு இருக்கிறது என்று லூயி சோபியா பதிலளிக்க, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. தமிழிசை செளந்தரராஜன் அளித்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் லூயி சோபியா மீது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், அரசு, அரசு சார்ந்த உயர் அதிகாரிகளுக்கு எதிராக மக்களைத் தூண்டச் செய்யும் விதத்தில் பேசுதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்திருக்கின்றனர். நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பிறகு அவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார். 

இதுகுறித்து பல்வேறு அரசியல் கட்சிகள் கடுமையான கண்டனத்தை முன்வைத்திருக்கின்றன. பாசிச பாஜக அரசு ஒழிக' என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் முன்னிலையில் முழக்கமிட்டார் என்ற ஒரே காரணத்துக்காக லூயி சோபியா மீது புகார் அளித்ததற்கும், அவர் கைது செய்யப்பட்டதற்கும் கண்டனம் தெரிவிக்கின்றனர். ஜனநாயக நாட்டில் ஆட்சி ஒழிக' என்று கோஷமிடக் கூட உரிமையில்லையா என்கிற கேள்வி எழுப்பப்படுகிறது. 

லூயி சோபியா குறிப்பிடுவது போல, கோஷம் எழுப்பவோ, எதிர்ப்பைத் தெரிவிக்கவோ நிச்சயமாக அவருக்கு உரிமை உண்டு. ஆனால், பொது இடத்தில் இதுபோன்ற கோஷங்களை எழுப்புவது மேலை நாடுகளில் படிக்கும் ஆராய்ச்சி மாணவி ஒருவருக்கு அநாகரிகமான செயல் என்று தெரியாமல் போனதுதான் ஆச்சரியம். 

திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு எதிராகவோ, மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசனுக்கு எதிராகவோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனுக்கு எதிராகவோ, விமானத்திலோ, ரயிலிலோ, பொது இடத்திலோ இதுபோல கோஷம் எழுப்ப முற்பட்டால், அதை அவர்களின் தொண்டர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். தனது கருத்தை சொல்ல லூயி சோபியாவுக்கு உரிமை இருந்தாலும் அவர் விமானத்தில் கோஷம் எழுப்பியது தவறு. தமிழிசை அதை சட்டை செய்யாமல் விட்டிருக்கலாம். அவருடன் வாக்குவாதம் செய்ததும், அவர் மீது புகார் அளிக்க முற்பட்டதும் அவருக்குப் பெருமை சேர்க்கவில்லை.
இன்றைய இளைஞர்கள் மத்தியில் அமைப்பு சார்ந்த அரசியல் கட்சிகளின் மீது பரவலாக வெறுப்பு அதிகரித்து வருகிறது. சமீபத்தில் 128 நாடுகளில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், அரசியலில் நாட்டம் இருந்தாலும் அவர்கள் அரசியல்ரீதியாகக் களம் இறங்குவதை விட, தெருவில் இறங்கிப் போராடுவதில்தான் கூடுதல் நாட்டம் கொள்கிறார்கள் என்று தெரியவந்திருக்கிறது. 9% முதல் 17% வரையிலான 40 வயதுக்கு உட்பட்டவர்கள் தெருவில் இறங்கிப் போராடுவதிலும் லூயி சோபியா பாணியில் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்துவதிலும் நாட்டம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். 

மக்கள் ஆட்சி முறைதான் பெரும்பாலானவர்களால் விரும்பப்படுவதாக இருந்தாலும் கூட, வாக்களிப்பில் பங்குபெறும் இளைஞர்களின் எண்ணிக்கைக் குறைவாகவே இருக்கிறது. அவர்கள் கட்சி உறுப்பினர்களாகவோ, தொண்டர்களாகவோ இருப்பதில் நாட்டம் இல்லாதவர்களாகவும், தெருவில் இறங்கிப் போராடுவதிலும், சமூக வலைதளங்களில் கருத்துப் பதிவு செய்பவர்களாகவும்தான் அதிகமாகக் காணப்படுகின்றனர். 

உலகில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில் 2% மட்டும்தான் 30 வயதுக்குட்பட்டவர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது. 2016 அமெரிக்கத் தேர்தலில் வாக்களிக்காதவர்களில் 3-இல் 2 பங்கு வாக்காளர்கள் 50 வயதிற்கும் கீழே உள்ளோர்.

அரசியல் கட்சிகளும் அவற்றின் தலைவர்களும் ஊழல்வாதிகள், பணத்தாசையும், பதவி வெறியும் பிடித்தவர்கள் என்கிற கருத்து இளைய தலைமுறையினரிடம் அதிகரித்து வருகிறது.
சமுதாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்துடன் களமிறங்கும் இளைஞர்களுக்கு அரசியல் கட்சிகளில் இடமில்லாமல் இருப்பதுதான் அவர்களை ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடத் தூண்டுகின்றன. 

லூயி சோபியாவின் செயல்பாடு இன்றைய அரசியல் ஆட்சி அமைப்புக்கு எதிராகக் காணப்படும் இளைய தலைமுறையின் மனநிலை வெளிப்பாடு. அதற்கு வடிகால் ஏற்படுத்தித் தீர்வு கண்டாக வேண்டும்.
குற்றமில்லை!

இந்தியாவில் இனிமேல் ஓரினச் சேர்க்கை...
பழைய சட்டத்தை மாற்றி சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

dinamalar 07.09.2018













புதுடில்லி : 'வயதுக்கு வந்த இருவர், சுயவிருப்பத்தின் அடிப்படையில், ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது குற்றமில்லை' என, உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. ஓரினச் சேர்க்கையை குற்றமாக பார்க்கும், 158 ஆண்டுகள் பழமையான, 377வது சட்டப் பிரிவு, அரசியல் சாசனம் அளித்துள்ள தனிமனித உரிமை, சம உரிமைக்கு எதிரானது என்றும், ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, ஒருமித்த தீர்ப்பில் கூறியுள்ளது.






ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவதை குற்றமாக பார்க்கும், 377வது சட்டப் பிரிவை எதிர்த்து, 2001ல், டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 'ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது குற்றமல்ல' என, டில்லி உயர் நீதிமன்றம், 2009ல் அளித்த தீர்ப்புக்கு, உச்ச நீதிமன்றம், 2013ல், தடை விதித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து, பிரபல நடனக் கலைஞர் நவ்தேஜ் ஜவ்ஹார், பத்திரிகையாளர் சுனில் மெஹ்ரா, சமையல் கலைஞர் ரீது டால்மியா, ஓட்டல் அதிபர்கள் அமான் நாத், கேஷன் சூரி உள்ளிட்ட பலர், உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த வழக்குகளை விசாரித்த, தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா, நீதிபதிகள், டி.ஒய்.சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா, ஆர்.எப்.நரிமன், ஏ.எம். கன்வில்கர் அடங்கிய அரசில் சாசன அமர்வு, நேற்று தீர்ப்பு அளித்தது.


பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த வழக்கில், ஓரினச் சேர்க்கையை குற்றமாக பார்க்கும், 377வது சட்டப் பிரிவின் ஒரு பகுதியை ரத்து செய்து, ஐந்து நீதிபதிகளும், ஒருமித்த தீர்ப்பை அளித்தனர். ஐந்து நீதிபதிகளும், தனித்தனியாக, அதே நேரத்தில், ஒருமித்த தீர்ப்பை அளித்துள்ளனர். ஓரினச் சேர்க்கைக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், 493 பக்கங்கள் அடங்கிய தீர்ப்பில், அமர்வு கூறியுள்ளதாவது:

பாலியல் உணர்வு என்பது, ஒருவரது உடலில் ஏற்படும் உயிரியல் நிகழ்வாகவும், இயற்கையாகவும் அமைந்தது; இதில் பாகுபாடு பார்ப்பது, அரசியல் சாசனம் அளித்துள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது. ஓரினச் சேர்க்கை என்பது, மனது அல்லது உடலில் ஏற்படும் கோளாறும் அல்ல; அது இயற்கையான ஒரு நிலையே.

ஒருவரது உணர்வு மறுக்கப்படுவது, இறப்புக்கு சமம். அந்த வகையில், இந்திய தண்டனை சட்டத்தின், 377வது பிரிவில், ஓரினச் சேர்க்கையை குற்றமாக பார்ப்பது, அரசியலமைப்பு சட்டத்தின், 14, 15, 19 மற்றும் 21வது பிரிவுகள் அளித்து உள்ள உரிமைகளுக்கு எதிராக உள்ளது; இது சட்டவிரோதமானது, ஒருதலைபட்சமானது. தனிமனித உரிமை, கண்ணியத்துடன் வாழும் உரிமை, சம உரிமை ஆகியவற்றில் பாரபட்சம் கூடாது.

அதே நேரத்தில், ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் வைத்துக் கொள்ளும் உறவு, முழுக்க முழுக்க சொந்த விருப்பமானதாக, இருவரும் ஏற்றுக் கொண்டதாக, கட்டுப்பாடு மற்றும் மிரட்டல் இல்லாததாக இருக்க வேண்டும்.

இத்தனை ஆண்டுகளாக, ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு எதிராக பாகுபாடு இருந்ததோடு, இந்தச் சட்டத்தை அவர்களுக்கு எதிரான ஒரு ஆயுதமாக பயன்படுத்தி வந்துள்ளனர்.

இந்த நிவாரணம், இவ்வளவு தாமதமாக அவர்களுக்கு கிடைத்துள்ளதற்காகவும், அவர்களை ஒதுக்கி வைத்ததற்காகவும், இந்த சமூகம், அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். ஓரினச் சேர்க்கையை குற்றமாக பார்க்கும் பகுதி மட்டுமே நீக்கப்படுகிறது.

அதே நேரத்தில், ஒருவருடைய விருப்பம் இல்லாமல் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது, சிறுவர் - சிறுமியர் மற்றும் விலங்குகளுடன் உறவு வைப்பது குற்றம் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. அதற்கான தண்டனை தொடரும்.

ஓரினச்சேர்க்கையாளர்கள் மீது ஏற்கனவே தொடரப்பட்ட வழக்குகளில் தீர்ப்பு அளிக்கப்பட்டிருந்தால், இந்தத் தீர்ப்பு அதற்கு பொருந்தாது. நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு மட்டும், இந்தத் தீர்ப்பு பொருந்தும். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.


நாடு முழுவதும் கொண்டாட்டம் :

ஓரினச் சேர்க்கையை குற்றமாக பார்க்கக் கூடாது என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஓரினச் சேர்க்கையாளர்களுக்காக போராடி வந்தவர்கள் மற்றும் ஆதரவாளர்கள், பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர். ஓரினச் சேர்க்கையாளர் உரிமைக்கான அடையாளமாகக் கருதப்படும், வானவில் நிறங்கள் கொண்ட கொடிகளையும் பலர் ஏந்தி, கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

வரலாறு முக்கியம்!

ஓரினச் சேர்க்கையை குற்றமாக கருதும் சட்டம், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், நம் நாட்டில் அமலுக்கு வந்தது. அந்த காலத்தில், பெரும்பாலான நாடுகளில், ஓரினச் சேர்க்கைக்கு தடை இருந்தது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள், தங்கள் ஆதிக்கத்தில் இருந்த அனைத்து நாடுகளிலும், இந்த சட்டத்தை அமல்படுத்தினர். இதனால், பல ஆண்டுகளாக, ஓரினச் சேர்க்கையாளர்கள், திருநங்கையர் ஆகியோர், இந்த சட்டத்தை பயன்படுத்தியே நசுக்கப்பட்டனர். தற்போது, இந்த சட்டத்தின் ஒரு பிரிவு ரத்து செய்யப்பட்டதன் மூலம், ஓரினச் சேர்க்கையாளர்கள், இதை, தங்களுக்கு கிடைத்த வரலாற்று வெற்றியாக கொண்டாடி மகிழ்கின்றனர். உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால், இத்தனை நாட்களாக, ஓரினச் சேர்க்கையாளருக்கு எதிராக பின்பற்றப்பட்டு வந்த அடக்கு முறைக்கு முற்றுப் புள்ளி வைக்கப்படும்.
'குட்கா' ஊழல் வழக்கில் சி.பி.ஐ., நடவடிக்கை

அதிகாரிகள் உட்பட ஐந்து பேர் கைது  dinamalar 07.09.2018

சென்னை : 'குட்கா' ஊழல் வழக்கில், 'குடோன்' உரிமையாளர்கள் மாதவ ராவ், உமாசங்கர் குப்தா உள்பட, ஐந்து பேரை, சி.பி.ஐ., அதிகாரிகள், நேற்று கைது செய்தனர். இவர்களை, 15 நாள் சிறையில் அடைக்க, சென்னை சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை அண்ணா நகரைச் சேர்ந்தவர் மாதவ ராவ். இவர் குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை, சென்னை அருகே செங்குன்றம் பகுதியில் கோடவுனில் மறைத்து வைத்திருந்தார். 2016ல், இவரது வீடு அலுவலகம் உள்பட பல்வேறு இடங்களில் வருமான வரி துறையினர் சோதனை நடத்தினர்.

இதில், அமைச்சர்கள், அதிகாரிகள் உள்பட பலருக்கு 40 கோடி ரூபாய் வரை லஞ்சம் கொடுத்த தகவல்கள் அடங்கிய 'டைரி' சிக்கியது. இது குறித்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர். பின் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி இந்த வழக்கு, சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றப்பட்டது.


இதையடுத்து குட்கா கோடவுன் உரிமையாளர் மாதவ ராவிடம் விசாரணை நடந்தது. அதைத்தொடர்ந்து, கோடவுனுக்கு, சி.பி.ஐ., அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.

இந்நிலையில் மாதவ ராவ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தமிழக சுகாதார துறை அமைச்சர், விஜயபாஸ்கர், டி.ஜி.பி., - டி.கே.ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் ஆணையர் ஜார்ஜ், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா ஆகியோர் வீடுகளில் நேற்று முன்தினம், சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும் கோடவுன் உரிமையாளர்கள் மாதவ ராவ், உமாசங்கர் குப்தா, சீனிவாச ராவ், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், கலால் வரி துறை அதிகாரிகள் வீடுகள் உள்பட சென்னை, புதுச்சேரி, பெங்களூரு, மும்பை என மொத்தம் 40 இடங்களில் சோதனை நடந்தது.

தமிழக டி.ஜி.பி., - டி.கே.ராஜேந்திரன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் பெயர்களில் உள்ள ஆவணங்கள் வங்கிக் கணக்குகளை சி.பி.ஐ., அதிகாரிகள் ஆய்வு செய்ததாக தகவல் வெளியானது. முன்னாள் போலீஸ் ஆணையர் ஜார்ஜ் வீட்டில் நேற்று முன்தினம் துவங்கிய சோதனை நேற்று காலை வரை நீடித்தது. இதில் முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.

சென்னை ராயபுரம், போலீஸ் குடியிருப்பில் உள்ள, இன்ஸ்பெக்டர் சம்பத்குமார் வீட்டை சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று காலை 'சீல்' வைத்தனர்.

துாத்துக்குடிக்கு மாற்றலாகி சென்ற பின்னும் இந்த வீட்டை அவர் காலி செய்யவில்லை. நீண்ட காலமாக பூட்டி வைத்திருப்பதால் அதில் நிறைய ஆவணங்கள் இருக்கலாம் என, சி.பி.ஐ., அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

15 நாள் காவல்:

குட்கா ஊழல் வழக்கில் கோடவுன் உரிமையாளர்கள் மாதவ ராவ், உமாசங்கர் குப்தா, சீனிவாச ராவ், உணவு பாதுகாப்பு துறை அதிகாரி, செந்தில்முருகன் மற்றும் கலால் வரி துறை அதிகாரி, எம்.கே.பாண்டியன் ஆகியோரை சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று காலை கைது செய்தனர்.

நீண்ட நேர விசாரணைக்கு பின் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி திருநீலபிரசாத் முன் ஐந்து பேரையும் ஆஜர்படுத்தினார். இவர்களை செப்., 20ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

ஸ்டாலின் வலியுறுத்தல் :

அறிவாலயத்தில் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் அளித்த பேட்டி: 'குட்கா' விவகாரம் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிலும் அவருடைய உறவினர்கள் நண்பர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். தமிழக வரலாற்றில் முதல் முறையாக போலீஸ் டி.ஜி.பி., வீட்டிலும் அவரது அலுவலகத்திலும் சி.பி.ஐ., சோதனை நடந்துள்ளது. அவர்கள் இருவரும் தாமாக முன்வந்து, பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லையென்றால் இவர்களை பதவியிலிருந்து நீக்க வேண்டும். இந்த விவகாரத்தில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதோடு அமைச்சர், டி.ஜி.பி.,யை, உடனே கைது செய்ய வேண்டும் என்பது தான் எங்களுடைய கோரிக்கை. இவ்வாறு அவர் கூறினார்.

ஆராய்ச்சி செய்யாத பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு, 'கட்'

Added : செப் 07, 2018 00:56




'ஆராய்ச்சிகளில் ஈடுபடாத பேராசிரியர்களுக்கு, பதவி உயர்வு இல்லை' என, அண்ணா பல்கலை முடிவு செய்துள்ளது.

அண்ணா பல்கலை கட்டுப்பாட்டில், தமிழகம் முழுவதும், 600க்கும் மேற்பட்ட, இன்ஜினியரிங் மற்றும் கட்டடவியல் மேலாண்மை கல்லுாரிகள் செயல்படுகின்றன. இவற்றில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளில் பணியாற்றும் உதவி பேராசிரியர்களுக்கு, இணை பேராசிரியர்களாகவும்; இணை பேராசிரியர்களுக்கு, பேராசிரியர்களாகவும் பதவி உயர்வு வழங்கப்படுகின்றன.

ஆனால், கடந்த ஆண்டு களில், பதவி உயர்வு வழங்கியதில், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ.,யின் விதிகளை சரியாக பின்பற்றவில்லை என, உயர் கல்வித் துறை கண்டறிந்துள்ளது.அதனால், இந்த ஆண்டு முதல், பதவி உயர்வுக்கு, புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, ஏ.ஐ.சி.டி.இ., மற்றும் பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., விதிகளின் அடிப்படையில் மட்டுமே, பதவி உயர்வு வழங்க, அண்ணா பல்கலை முடிவு செய்து உள்ளது.இது குறித்து, கடந்த வாரம், அண்ணா பல்கலையில் நடந்த, சிண்டிகேட் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. அதையடுத்து, 'பதவி உயர்வுக்கு தகுதி பெறும், உதவி மற்றும் இணை பேராசிரியர்கள், பிஎச்.டி., என்ற ஆராய்ச்சி படிப்பில், குறைந்தபட்சம், ஒரு மாணவரையாவது உருவாக்க வேண்டும்.

'யு.ஜி.சி., அங்கீகரித்த பிரபலமான ஆய்வு இதழ்களில், குறைந்தபட்சம், இரண்டு ஆய்வு கட்டுரை கள் வெளியிட்டிருக்க வேண்டும்' என, கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது.பதவி உயர்வுக்கு விண்ணப்பித்தோர் குறித்து, அண்ணா பல்கலை துணை வேந்தர் தலைமையிலான குழு, நேர்முகத் தேர்வு நடத்தி, சுயமாக முடிவு செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில், 1,884 பேர், பதவி உயர்வுக்கு விண்ணப்பித்து உள்ளனர். அவர்களில், 600 பேருக்கு மட்டுமே, புதிய விதிகளின்படி பதவி உயர்வு கிடைக்கும் என, கூறப்படுகிறது.

- நமது நிருபர் -
துணை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பம்

Added : செப் 07, 2018 00:28

சென்னை:துணை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம், வரும், 10ம் தேதி துவங்குகிறது.

அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில், பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம்., பி.பி.டி., - பி.ஓ.டி., உள்ளிட்ட, 15 துணை மருத்துவ படிப்புகள் உள்ளன. இந்த படிப்புகளுக்கு, அரசு ஒதுக்கீட்டில், 8,000; நிர்வாக ஒதுக்கீட்டில், 4,000த்திற்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன.இதற்கான மாணவர் சேர்க்கை, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நடைபெற உள்ளது.மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப வினியோகம், அரசு மருத்துவ கல்லுாரிகளில், வரும், 10ல் துவங்கி, 19ல் முடிகிறது.மேலும், www.tnhealth.org, www.tnmedicalselection.org என்ற இணையதளங்களிலும், விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, செப்., 20க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...