Thursday, September 13, 2018

இருமல்களின் வகைகளும் அதற்கான இயற்கை வைத்தியமும்!

கற்பூரவள்ளி இலையின் சாற்றை சிறிதளவு சர்க்கரை கலந்து கொடுத்தால், குழந்தைகளின்   கபம் கலந்த இருமல் நீங்கும். வறட்டு இருமலுக்கு திப்பிலியை வறுத்துப் பொடி செய்து, தேனில் குழைத்துக் கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும். இதை அனைவரும் செய்யலாம்.

வெங்காயம் 150 கிராம், சர்க்கரை 150 கிராம் எடுத்து வெங்காயத்தைப் பொடிப் பொடியாக நறுக்கி தண்ணீர் விட்டு அரைத்துக்கொள்ளவும். பிறகு அதை மெல்லிய துணியில் வடிகட்டவும். இந்த வெங்காயச் சாற்றில் சர்க்கரையைச் சேர்த்து பாகுபதமாகக் காய்ச்சி இறக்கவும். இந்த வெங்காயப் பாகை ஒரு வேளைக்கு ஒரு தேக்கரண்டி உட்கொண்டால் எப்பேர்ப்பட்ட இருமலும் சரியாகும்.

தொடர்ச்சியான இருமல்:

இருமல் தொடர்ந்து ஏற்பட்டு தொல்ல அளிக்கும்போது, பத்து கிராம் சிற்றரத்தையை உடைத்து ஒரு சட்டியில் போட்டு ஒரு டம்ளர் நீர்விட்டு பாதியாகச் சுண்டுமளவு கஷாயமாக்கிக்கொண்டு அதில் இரண்டு தேக்கரண்டி அளவு எடுத்து, அத்துடன் ஒரு தேக்கரண்டி இஞ்சி சாற்றை கலந்து உள்ளுக்குக் கொடுத்து வந்தால் குணமாகும்.

சிற்றிருமல்:

நீங்கள் நன்றாகக் காய்ச்சிய பசும் பாலுடன் ஒரு சிட்டிகை மஞ்சள் தூளுடன் சிறிது மிளகுத்தூளையும் சேர்த்துக் கலக்கி அருந்த இருமல் தணியும்.

இரைப்பு இருமலுக்கு:

இஞ்சிச் சாறு, ஈர வெங்காயச் சாறு, எலுமிச்சம்பழச்சாறு இவைகளை சம அளவு எடுத்து வேளைக்கு ஒரு தேக்கரண்டி அளவு மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் இரைப்பு இருமல் சாந்தியாகும். இருமல் அதிகமாயிருந்தால் ஒரு நாளைக்கு இரு வேளை சாப்பிடலாம்.

கோழை இருமல்:

நாய் துளசியைக் கொண்டு வந்து தினம் கொஞ்சம் சாப்பிட்டு வந்தால் கோழை இருமல் போன்ற குறைகளை அகற்றும். இதனைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் நல்ல போஷாக்கு பெறும்.

வறட்டு இருமல்:

வறட்டு இருமல் ஏற்பட்டிருந்தால், ஆழாக்களவு பசும்பாலுடன் அரைத் தேக்கரண்டியளவு மிளகை உடைத்துப் போட்டுக் கொதி வரும் வரைக் கொதிக்க வைத்து, இறக்கி வடிகட்டி, சிறிதளவு பனங்கற்கண்டையும் சேர்த்துக் கலக்கிப் படுக்கப் போகுமுன் குடித்துவிட வேண்டும். இது போல மூன்று நாள் சாப்பிட்டால் போதும், வறட்டு இருமல் குணமாகும்.

உடல் சூட்டினால் இருமல்:

உடல் சூட்டினால் ஏற்படும் இருமலைத்தான் இந்த மருத்துவம் கண்டிக்கும். மிளகுத் தூளையும் பனை வெல்லத்தையும் சேர்த்துப் பிசைந்து வைத்துக்கொண்டு ஒரு சுண்டைக்காய் அளவு உள்ளுக்குச் சாப்பிட்டு வந்தால், இரண்டொரு நாட்களில் சூட்டு இருமல் சரியாகும்.

எந்த வகையான இருமலுக்கும்:

பொதுவாக எந்த வகையான இருமலையும் சீரகம் குணப்படுத்திவிடும். 10 கிராம் சீரகத்தைச் சுத்தம் பார்த்து அதை இலேசாக வறுத்து எடுத்து அம்மியில் வைத்துத் தூள் செய்து அது எந்த அளவு இருக்கிறதோ அந்த அளவு கற்கண்டைத் தூள் செய்து அத்துடன் கலந்து, ஒரு சீசாவில் வைத்துக்கொண்டு, காலை, மாலை அரை தேக்கரண்டியளவு சாப்பிட்டு வெந்நீர் குடிக்க ஐந்தே நாளில் இருமல் குணமாகும்.

கக்குவான் இருமலுக்கு:

கக்குவான் இருமலின்போது வெள்ளைப் பூண்டை உரித்து அதை நெய்யில் வதக்கி வைத்துக்கொண்டு சாதத்துடன் சுமார் இரண்டு கிராம் எடை வீதம் சேர்த்துக் கொடுத்து வந்தால் கக்குவான் இருமல் குணமாகும்.

ஜலதோஷம் காரணமாக இருமல்:

ஜலதோஷம் காரணமாக இருமல் ஏற்பட்டிருந்தால் ஒரு சுத்தமான சட்டியை அடுப்பில் வைத்து சட்டியைக் காயவிட்டு அதில் இரண்டு தேக்கரண்டியளவு மிளகைப் போட்டு நன்றாக வறுக்க வேண்டும். மிளகு வறுபட்டு சிவந்து வருகி, அதில் தீப்பொறி பறக்கும் சமயம் ஆழாக்குத் தண்ணீரை அதில் விட்டு மூடி நன்றாகக் கொதிக்க விட வேண்டும். கொதித்தபின் இறக்கி அதில் பாதியை மட்டும் ஒரு டம்ளரில் இறுத்துக்கொண்டு, அதில் தேவையான அளவு சர்க்கரைச் சேர்த்துக் காலையில் குடித்துவிட வேண்டும். மறுபகுதியை மிளகுடன் வைத்திருந்து மாலையில் குடித்துவிட வேண்டும். இருமல் குணமாகும்.
 

20 வருடத்துக்கு முன்பு பெட்ரோல் விலை எவ்வளவு தெரியுமா? பெருமூச்செல்லாம் கூடாது

By DIN | Published on : 12th September 2018 11:05 AM |



சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.84.05க்கு விற்பனையாகிறது. பெட்ரோல், டீசல் விலை நிலவரங்கள் தினந்தோறும் பெட்ரோல் நிரப்புபவர்களின் ரத்தக் கொதிப்பை அதிகரிக்கவே செய்கிறது.

இதற்கு எந்த மாற்று வழியும் இல்லாமல், ஒவ்வொரு நாளும் பெட்ரோல் பங்குகள் சொல்லும் விலையிலேயே பெட்ரோல், டீசலை நிரப்பிக் கொண்டு என்றுதான் இதற்கு விடிவுகாலம் பிறக்குமோ என்று தன்னைத் தானே நொந்து கொண்டு செல்கிறார்கள் வாகன ஓட்டிகள்.

வாகனத்தை விட்டுவிட்ட பேருந்தில் செல்லலாம் என்றால், பேருந்துக் கட்டணம் ஏற்கனவே விண்ணை முட்டிக்கொண்டு நிற்கிறது. பேருந்து கட்டணம் எகிறிவிட்டதால், அதனை தாங்க முடியாத பேருந்து பயணிகள் ரயில் பயணத்துக்கு மாறி, அங்கும் கூட்டம் நிரம்பி வழிகிறது.

பொதுப் போக்குவரத்துக்கும் மாற முடியாமல், சொந்த வாகனத்துக்கும் பெட்ரோல் நிரப்ப முடியாமல் தவிக்கும் ஏழைக் குடும்பங்கள் ஏராளம்.

சரி.. இன்றைய விலை, நேற்றைய விலை எல்லாம் தினமும் தெரிந்த விஷயமாகிவிட்டது.

நாம் எப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறோம் என்று ஒருமுறை திரும்பிப் பார்ப்போமா? அதாவது சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு 1998ம் ஆண்டு இதே செப்டம்பர் மாதத்தில் நாம் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு எவ்வளவு கொடுத்திருப்போம், கொடுத்திருக்கிறோம் என்பது நினைவிருக்கிறதா? பலருக்கும் நிச்சயம் நினைவிருக்கும். அப்போது வாகனத்தை இயக்காத இளைஞர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை அல்லவா? அதாவது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 20 ஆண்டுகளுக்கு முன்பு வெறும் ரூ.23.94 மட்டுமே. 20 ஆண்டுகளில் பெட்ரோல் விலை 238 சதவீதம் உயர்ந்துள்ளது. அதாவது ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக பெட்ரோல் விலை 12% உயர்ந்துள்ளது.

அதே சமயம், 10 ஆண்டுகளுக்கு முன்பு என்று எடுத்துக்கொண்டால் 2008ம் ஆண்டு ஜனவரி மாதம் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.32.82 ஆகவும், அதே ஆண்டு டிசம்பரில் ரூ.34.98 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவைவிட்டு வெளியேறும் முன் ஜேட்லியை சந்தித்தேன்: விஜய் மல்லையா

By DIN | Published on : 13th September 2018 01:50 AM |

dinamani 13.09.2018

இந்தியாவில் இருந்து வெளியேறும் முன்பு, மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியை சந்தித்து, வங்கிகளுடனான பிரச்னைகளுக்கு தீர்வு காண தயாராக இருப்பதாக தெரிவித்தேன்' என்று தொழிலதிபர் விஜய் மல்லையா கூறியுள்ளார்.

இந்திய பொதுத் துறை வங்கிகளில் ரூ.9,000 கோடி அளவுக்கு கடன் பெற்று, அதனை திருப்பி செலுத்தாத விஜய் மல்லையா (62), பிரிட்டனுக்கு தப்பிவிட்டார். கடந்த 2016, மார்ச்சில் இந்தியாவைவிட்டு வெளியேறிய அவரை, நாடு கடத்தி கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை லண்டன் நீதிமன்றம் மூலம் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
இதுதொடர்பான வழக்கின் விசாரணை, லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில் ஆஜராவதற்காக வந்த விஜய் மல்லையா, செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்தியாவில் இருந்து வெளியேறும் முன்பு மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியை சந்தித்தேன். வங்கிகளுடனான பிரச்னைகளுக்கு தீர்வு காண தயாராக இருப்பதாக அவரிடம் பலமுறை தெரிவித்தேன். இதுதான் உண்மை.
வங்கிகளிடம் பெற்ற கடனை திருப்பிச் செலுத்துவதற்கான விரிவான திட்டத்தை, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஏற்கெனவே தாக்கல் செய்துள்ளேன். அனைத்து கடன்களையும் அடைப்பேன். என்னிடம் இருந்து கடன்தொகையை வசூலிக்க வேண்டும் என்பதே எனக்கு எதிரான வழக்கின் முக்கிய நோக்கம்.

நான் கடன்தொகையை திருப்பி அளிக்க முயற்சிப்பதை வங்கிகள் ஏன் ஊக்குவிக்க மறுக்கின்றன? இந்த கேள்வியை வங்கிகளிடம் ஊடகங்கள் எழுப்ப வேண்டும். அரசியல் கட்சிகளால் நான் பலிகடா ஆக்கப்பட்டுள்ளேன்.
என்னை நாடு கடத்தக் கோரும் வழக்கில் நீதிமன்றத்தின் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது. எனக்கு சாதகமான உத்தரவு வரும் என நம்புகிறேன் என்றார் மல்லையா.

மல்லையா கூறுவது உண்மையல்ல


தன்னை சந்தித்துப் பேசியதாக விஜய் மல்லையா கூறுவது உண்மையல்ல' என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

கடந்த 2014-ஆம் ஆண்டிலிருந்து மல்லையாவை சந்திக்க நான் நேரம் ஒதுக்கவில்லை. நேரம் ஒதுக்கியிருந்தால்தானே, அவர் என்னை சந்தித்தாரா? இல்லையா? என்ற கேள்வி எழும். விஜய் மல்லையா, மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர். அவர் எப்போதாவதுதான் அவைக்கு வருவார். ஒருமுறை அவையிலிருந்து நான் எனது அறைக்கு சென்றபோது, விறுவிறுவென வந்து என்னுடன் சேர்ந்து நடந்தார். அப்போது, வங்கி பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கான ஒரு திட்டத்தை முன்வைக்கிறேன்' என்று தெரிவித்தார். ஆனால், நீங்கள் என்னிடம் பேசுவதற்கு எதுவும் இல்லை; வங்கிகளிடம்தான் உங்களது திட்டங்களை தெரிவிக்க வேண்டும்' என்று கூறிவிட்டேன். அப்போது, அவரிடம் இருந்து எந்த ஆவணங்களையும் நான் பெறவில்லை. இந்த ஒரு வரி உரையாடல்தான் எங்களிடையே நடைபெற்றது. அதுவும், எம்.பி. என்ற உரிமையை அவர் தவறாக பயன்படுத்தியதால் நடைபெற்ற உரையாடல் என்றார் ஜேட்லி.

இதனிடையே, ஜேட்லியின் கருத்து தொடர்பாக செய்தியாளர்களிடம் விஜய் மல்லையா கூறுகையில், மத்திய நிதியமைச்சருடனான எனது சந்திப்பு, அதிகாரப்பூர்வமற்றது; தற்செயலாக நிகழ்ந்தது. இந்த விவகாரத்தை மேலும் சர்ச்சையாக்க வேண்டாம்' என்றார்.

மல்லையாவை தப்பவிட்டது ஏன்?

இந்தியாவைவிட்டு வெளியேற விஜய் மல்லையாவை அனுமதித்தது ஏன்? என்று மத்திய அரசுக்கு காங்கிரஸ் கேள்வியெழுப்பியுள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறியதாவது:

கடன் முறைகேடுகளில் தொடர்புடைய தொழிலதிபர்கள் மல்லையா, நீரவ் மோடி, மெஹுல் சோக்ஸி ஆகியோர் நாட்டைவிட்டு தப்பியதற்கு மத்திய பாஜக அரசு உடந்தையாக இருந்தது என்ற எங்களது குற்றச்சாட்டு தற்போது உறுதியாகியுள்ளது.

விஜய் மல்லையா-ஜேட்லி இடையிலான சந்திப்பில் என்னென்ன விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது என்பது மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். மல்லையாவை நாட்டைவிட்டு வெளியேற அனுமதித்தது ஏன்? என்ற கேள்விக்கான பதிலையும் மக்கள் எதிர்பார்க்கின்றனர் என்றார் அபிஷேக் சிங்வி.

நாடு கடத்தக் கோரும் வழக்கில் டிச.10-இல் தீர்ப்பு
மல்லையாவை நாடு கடத்தக் கோரும் வழக்கில் லண்டன் நீதிமன்றம் டிசம்பர் 10-ஆம் தேதி தீர்ப்பு வழங்க உள்ளது. இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இதனை நீதிபதி தெரிவித்தார்.

முன்னதாக நடைபெற்ற விசாரணையின்போது, மல்லையாவுக்கு எதிராக இந்திய அதிகாரிகள் தாக்கல் செய்த ஆதாரங்கள் சிறிதும் அடிப்படையில்லாதவை' என்று அவரது தரப்பு வழக்குரைஞர்கள் வாதிட்டனர். மேலும், மல்லையாவை அடைக்க திட்டமிடப்பட்டுள்ள மும்பை ஆர்தர் சாலை சிறை அறை தொடர்பாக அதிருப்தி தெரிவித்த வழக்குரைஞர்கள், சுதந்திரமான குழு மூலம் அந்த அறையில் ஆய்வு நடத்த வேண்டும் என்று கோரினர்.

விஜய் மல்லையா இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டால், அவரை மும்பை ஆர்தர் ரோடு மத்திய சிறையில் அடைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக லண்டன் நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் தரப்பில் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த மல்லையா, அந்த சிறை அறையில் சூரிய ஒளியே இருக்காது என்றும், சுகாதாரக் குறைவாக இருக்கும் என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்தார். ஆனால், சிறை வளாகம் சுகாதாரமாக இருக்கும்; மல்லையாவுக்கு தனி கழிவறை, சலவை வசதி அளிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து, மல்லையாவை அடைக்க திட்டமிட்டுள்ள சிறை அறையின் விடியோ பதிவை தாக்கல் செய்யுமாறு இந்திய அதிகாரிகளுக்கு லண்டன் நீதிமன்றம் கடந்த ஜூலையில் உத்தரவிட்டது. அதன்படி, மும்பை சிறை அறையின் விடியோவை சிபிஐ அதிகாரிகள் கடந்த மாதம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.



நாமெல்லாம் பாரதியின் வாரிசுகளே!

By ஜெயகாந்தன் | Published on : 12th September 2018 01:32 AM |

நாம் எல்லோருமே பாரதியின் வாரிசுதான். சில பேர் அதை உணர்ந்திருக்கிறார்கள். சில பேர் அதை உணராமலும் இருக்கலாம். ஆனால், பாரதியிலிருந்துதான் நம்முடைய சிந்தனை, நம்முடைய கலாசாரம், நம்முடைய வாழ்க்கை முறை இதெல்லாம் சரியான அர்த்தத்தில் நவீனம் பெற ஆரம்பித்தன. பாரதி, மகாகவி மட்டுமல்ல, மகா புருஷர்; மகத்தான சமூக சிந்தனாவாதி; சமூக விஞ்ஞானி; இந்த உலகத்தைப் புனருத்தாரணம் செய்ய வந்த சிற்பி.

எங்களுடைய நண்பர்கள் சபையில் நாங்கள் அடிக்கடி ஒரு கேள்வியைக் கேட்பதுண்டு, பாரதியாரை நீ எப்படி பரிச்சயம் கொண்டாய்? முதலிலே உனக்கு என்ன பாடல் தெரியும்?' இந்த கேள்விக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு அனுபவத்தைச் சொல்லுகிற பொழுது, எப்படி பாரதி வேரிலேயிருந்து இந்தப் புதிய தலைமுறை பரிணமித்து வந்திருக்கிறது என்கிற சமூக உண்மையை அறிந்து கொள்கிற ஞானம் பெற முடியும்.

இந்த கேள்வியை என்னைக் கேட்டபோது, எனக்கு பதிலே தெரியவில்லை. அறிவறிந்த பருவத்திலிருந்து, நந்தன் கதையிலே காலில் நகம் முளைத்த நாள் முதலாய்' என்று சொல்வான், அது மாதிரி, ஓடி விளையாடு பாப்பா' என்ற பாடலைக் கேட்கின்ற பருவத்திலேயிருந்து, அவரது பகவத் கீதை' உரையைப் பயில்கிற பக்குவம் வரை பாரதி நம்முடைய அறிவில், சிந்தையில், ஊனில், உயிரில், உடலில் கலந்து கலந்து நம்மைக் காலந்தோறும் உயிர்ப்பித்துக் கொடுப்பதனை உணர்கிற பலரில் நான் ஒருவன்.

நம்மையெல்லாம் - காலம் கடந்து வாழ்கிற, நாடு கடந்து வாழ்கிற பிரபஞ்சம் முழுவதும் பரவிக் கிடக்கிற தமிழர்களையெல்லாம் - ஒன்றிணைக்கிற ஒரு மாபெரும் சக்தி மகாகவி பாரதி என்பதனை அவரது எழுத்துகள் சொல்லும். சைபீரியப் பாலைவனத்திலிருந்து பிஜித் தீவிலே கரும்புத் தோட்டத்திலே கண்ணீர் வடித்து அழுகின்ற பெண்கள்வரை, அவரது உலகப் பார்வை வியாபித்திருந்தது. தமிழர்காள்! மகாகவி பாரதியின் பார்வை படாத இந்தப் பிரபஞ்சத்தை நீங்கள் எங்கேயும் பார்க்க முடியாது.

பாரதியைப் பற்றி நிறைய செய்திகள் உண்டு. அவரது காலம் ரொம்பக் குறுகியது. 39 ஆண்டுதான். நாற்பது வயது கூட ஆகவில்லை. அவரைப் படிக்கிற பொழுது - சிலரைப் படிக்கிறபோதுதான் நமது உள்ளத்திலேயிருந்து அந்த சொற்கள் வருகின்றன என்று தோன்றும். எல்லாரும் கவிதை எழுதுகிறார்கள். நன்றாக எழுதுகிறார்கள். பாரதியாரை விடக் கூட நன்றாகக் கவிதை எழுதுபவர்கள் இருப்பதாக நினைப்பவர்களும் நிரூபிப்பவர்களும்கூட உண்டு. ஆனால், அவரை மாதிரி காலத்தைப் பிணைக்கிற ஒரு மகத்தான சக்தியாய் யார் இருக்கிறார்கள்? கவிஞன் என்றால் சோம்பித்திரிபவர்கள்; சுருண்டு கிடப்பவர்கள்; குனிந்து நடப்பவர்கள்; நிமிர்ந்து நிற்க முடியாதவர்கள்; அழுக்குப் பிடித்தவர்கள் என்றெல்லாம் இக்காலத்தில் பல கோலங்கள் காட்டுகின்றபொழுது, பாரதி, சற்றுக் குனிந்து நடக்கிறவனைப் பார்த்தால் அடே நிமிர்ந்து நட!' என்பார்.

வளைந்து கிடக்கிற மனிதனைப் பார்க்கப் பொறாத மனம். பன்றிப் போத்தை சிங்க ஏறாக்குதல் வேண்டும்' என்கிற மனம். அது மொழி கடந்த மனம். அதனால்தான் அவருக்கு அச்சம் வருகிறது. தான் தமிழன், தான் தமிழன் என்பதை மறுபடியும் மறுபடியும் சொல்லிக் கொள்ள வேண்டியிருக்கிறது. இந்தச் சிறப்பெல்லாம் தமிழுக்கு வந்து சேருதல் வேண்டும். சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே'. இந்தச் சொல்லுக்குப் பழுதில்லை. இங்கே தமிழிலே என்ன சொற்கள் வந்து கலந்த போதிலும் இந்த சமுத்திரம் எல்லாவற்றையும் இழுத்து ஈர்த்து தனக்குள்ளே வயப்படுத்திக் கொள்ளும்.
சென்றிடுவீர் எட்டுத் திக்கும், கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்து இங்கு சேர்ப்பீர்' என்றால், எல்லாக் கலாசாரமும் வந்து இங்கு கலக்கட்டும், அந்தச் சவாலை இந்த மொழி ஏற்றுக்கொள்ளும் என்று சொல்லுகிற தெம்பு இருந்தது. மெல்லத் தமிழ் இனி சாகும்' என்று அந்தப் பேதை உரைத்தான் என்றான். அது பேதையர் சொல். இங்கு கூறத் தகாதவர்கள் கூறுகின்ற சொல். கொன்றிடல் போலொரு வார்த்தை இங்கு கூறத்தகாதவன் கூறினன் கண்டீர்'.
என்ன விபரீதம்! ஆன்றோர்களும், சான்றோர்களும், புலவர்களும், கற்றோர்களும் இன்று மெத்தத்தான் கவலைப்படுகிறார்கள் தமிழ் செத்துப் போகுமென்று. அது சாகாத மொழி! என்றுமுள தென்றமிழ்'. என்றும்' என்றால் மூன்று காலம். இது இருந்தது, இருக்கிறது, இருக்கும் என்று சொல்லத் தகுந்த சொரூபம் உடையது.

எனவே, நான் கற்றதெல்லாம் நான் சிந்தித்ததெல்லாம் நான் பெற்றதெல்லாம் பாரதியிடமிருந்துதான். ஒரு வாரிசை இந்த விஷயத்தில் உரியவனே உருவாக்குவதில்லை. அவனுடைய சொற்கள். அவன் வாழ்ந்த வாழ்க்கை. நல்லார் குணங்கள் உரைப்பதுவும் நன்று'. அதனால்தான் பாரதியைப் பற்றி செய்தி பரவுதல் வேண்டும். அது தமிழனைப் பற்றிய செய்தி. தமிழனைப் பற்றிய செய்தி என்றால் அது இந்தியாவின் சிறப்பான சிந்தனையின் சாரம் என்று அர்த்தம்.

தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடு
சூழ்கலை வாணர்களும் - இவள்
என்று பிறந்தவள் என்றுண ராத இயல்பினள்
என்று சொல்வது இந்த தேசத்தை மட்டுமல்ல; இந்த மொழியை. ஆகவே, இந்த மொழியின்பால் அக்கறை கொண்ட அன்பர்கள் வேறு நாடுகளிலும் இருக்கிறார்கள். அவர்கள் வேற்று மொழியிலே வல்லவர்களாகவும் இருக்கிறார்கள். வேறு துறைகளிலே வல்லவர்களாகவும் இருக்கிறார்கள். இதெல்லாம் பாரதியார் கண்ட கனவு. அவர் கனவுகள் எல்லாம் பலித்திருக்கின்றன. அவர் கண்ட கனவு பலித்த யுகத்தில் நாம் வாழ்கிறோம். அன்று பாழ்பட்டு நின்றது பாரதம். தாழ்வுற்று, வறுமைமிஞ்சி விடுதலை தவறிக்கெட்டுப் பாழ்பட்டு நின்ற பாரதத்தில் அவர் கனவு கண்டார். இன்றைய பாரதம் உலகுக்கெல்லாம் ஞானதானம் செய்கின்ற நாடாக உயர்ந்திருக்கிறது. பாரதியின் கனவுகள் எல்லாம் பலித்ததன் விளைவு நாம்.

நல்ல சந்ததியினர் பித்ருக்களை மறக்காமல் இருப்பார்கள் என்பது மட்டுமல்ல, பிதுர்க்கடனையும் தவறாமல் நிறைவேற்றுவார்கள். திருலோக சீதாராம் என்ற நண்பர், பாரதி புத்திரர். நாம் எல்லாம் பாரதியின் புத்திரர்கள். பாரதியாருக்கு ஆண் வாரிசு கிடையாது. அது திருலோக சீதாராமுக்கு ரொம்ப வருத்தம் தந்தது. பாரதியார் இறந்த தினத்தில் ஒவ்வொரு ஆண்டும் அவர் பித்ருக்களுக்குச் செய்ய வேண்டிய கடனை நிறைவேற்றி வந்தார்.
நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ இருக்கிறதை நம்புங்கள். கடவுள் இல்லை என்று யோசிப்பவர்களுக்குத்தானே நம்பலாமா கூடாதா என்பது. இருக்கிற எல்லாவற்றிலும் எழுதுகோல் தெய்வம், எழுத்தும் தெய்வம்' என்று எழுத்தாளர்களுக்கெல்லாம் மந்திரம் போல் சொல்லைக் கற்றுத் தந்தவன் மகாகவி பாரதி. எனவே அவன் புகழைப் பாடுவதற்கு நேரம் கிடையாது; காலம் கிடையாது; நாள் கிடையாது.

நமது சுவாசம் பாரதி. நாமெல்லாம் பாரதியின் வாரிசுகள். நான் எப்போதுமே பாரதியின் வாரிசு என்று நானாகவே எண்ணிக் கொண்டிக்கிறேன். எப்படி திருலோக சீதாராம் பிதுர்க்கடன் நிறைவேற்றி தன்னை வாரிசு என்று நினைத்துக் கொண்டாரோ அதுபோல்.
பாரதியார் இட்ட கட்டளைகளை நிறைவேற்றுவோம். அவர் என்ன சொன்னார்? தெளிவாகத் தெரிந்து கொள். அப்புறம் இன்னொருவருக்கு தெளிவு ஏற்படுத்துவதற்காக சொல்லு. தெளிவுறவே அறிந்திடுதல். தெளிவு பெற மொழிந்திடுதல்'. சொல்லுவதில் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குத் தெளிவு ஏற்பட வேண்டும். புரியாத விஷயங்களெல்லாம் எனக்கு சம்பந்தமல்லாததென்று இந்தக் காலத்திலும் நான் ஒதுக்கிவிடுவேன். அது ரொம்பப் பெரிய விஷயமாக இருக்கலாம். கணக்கு எனக்கு இன்று வரை தெரியாது. ஆனால், இந்தக் கணக்கு இல்லாமல் உலகத்தில் எந்தக் காரியமும் இல்லை என்றறிகிறபோது நான் எதற்குமே லாயக்கற்றவன் என்கிற தாழ்வுணர்ச்சி ஏற்படுகிறது.

பள்ளிக்கூடத்தில் கணக்கு சொல்லிக் கொடுக்கும்போது, மைதானம் எவ்வளவு நீளம், எவ்வளவு அகலம் என்று சொல்லிக் கொடுத்தால் இது ஏண்டா நமக்கு' என்று தோன்றும். நான் எங்கே மைதானத்தை அளக்கப் போகிறேன். நிறுத்தவும், அளக்கவும் விற்கவும் வாங்கவும் கணக்கு வேண்டும். நான் ஏன் கணக்கு படிக்க வேண்டும்? ஒரு கணக்கனுக்கு இவையெல்லாம் வேண்டும். ஒரு விஞ்ஞானிக்கு இதெல்லாம் வேண்டும். அப்புறம் எனக்குத் தோன்றியது. அடடே, பாரதியாரும் நம்ம கேசுதான். அவருக்கும் கணக்கு பிடிக்காதாம். கணக்கு பிணக்கு ஆமணக்கு' என்று எழுதி வைப்பாராம். இப்படி பாரதியாரோடு ஒரு ஒற்றுமை கண்டேன்.

அதற்கு மேலே என்னவென்றால் நம்மை மாதிரியே, வெளியே சொல்ல வெட்கம். இளம் வயதில், அரும்பு மீசை கூட முளைக்காத பருவத்தில் ஒன்பது வயதுப் பொண்ணு மேலே காதல்.
பாரதியார் சொல்கிறார்:

ஒன்பதாய பிராயத்த ளென் விழிக்
கோதுகாதை சகுந்தலை யொத்தனள்
என்ப தார்க்கும் வியப்பினை நல்குமால்'
என்செய் கேன் ? பழி யென்மிசை யுண்டுகொல்?
அன்பெ னும்பெரு வெள்ளம் இழுக்குமேல்
அதனை யாவர் பிழைத்திட வல்லரே?
முன்பு மாமுனி வோர்தமை வென்றவில்
முன்ன ரேழைக் குழந்தையென் செய்வனே?
என்று பிள்ளைப் பிராயத்தில் நான் படிக்கிறேன். படித்துக் கொண்டே போனால் நம்மை எங்கெங்கோ கொண்டு போகிறது. உலகத்தை எல்லாம் காட்டித் தருகிறது ஒரு சிறு புத்தகம். கிறிஸ்துவர்க்கு எப்படி பைபிளோ, இஸ்ஸாமியருக்கு எப்படி குரானோ, மார்க்சிஸ்ட்டுகளுக்கு எப்படி தாஸ் காபிடலோ அது போல் தமிழர்களாகிய நம் அனைவருக்கும் கையில் இருக்க வேண்டிய புத்தகம் பாரதியாருடையது.

அதிலே திருக்குறள் இருக்கிறது. அதில் கம்பர் இருக்கிறார். வள்ளுவர் இருக்கிறார். இவர்களைப் பற்றி எல்லாம் பாரதியார் சொல்லவில்லை என்றால் எனக்கு அவர்கள் மீது மரியாதை வந்திருக்காது. இப்படி தானறிந்த, தன்னை உயர்த்திய அனைத்தையும் தன் பிள்ளைகளுக்கு எப்படிப் பெற்றோர் சொல்வார்களோ அது மாதிரி தமிழ்ச் சந்ததியினருக்கு பாரதியார் தந்து போயிருக்கிறார். தமிழ் பேசுகிற, தமிழிலே சிந்திக்கிற அத்தனை பேருமே பாரதியின் வாரிசுகள்தான்! (வ.உ.சி. நூலகம் வெளியிட்ட மகாகவி பாரதியார் கவிதைகள்' நூலில் இடம்பெற்ற எழுத்தாளர் ஜெயகாந்தனின் உரை)
தாய்மையின் தடுமாற்றம்

By ப. இசக்கி | Published on : 13th September 2018 01:23 AM

சென்னையில், திருமணமாகி இரு குழந்தைகளுக்குத் தாயான ஒரு பெண், வேறு ஓர் ஆணுடன் தகாத உறவை விரும்பி, தன் இரு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்துக் கொன்றுவிட்டார்' என்ற செய்தி அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது.

தகாத உறவுக்காக, பெற்ற பிள்ளைகளை தாய் கொல்வதும், கணவரை மனைவி கொல்வதும், மனைவியைக் கணவர் கொல்வதும் புதிதல்ல. ஆண்டாண்டு காலமாக நடந்துகொண்டுதான் இருக்கிறது. இப்போது அதிகமாகிவிட்டது என்றும் கூறமுடியாது. ஊடகங்களின் வீச்சு அதிகரித்துள்ளதால், எந்த மூலையில் என்ன நடந்தாலும் உடனே அது பொதுவெளிக்கு வந்து விடுகிகிறது. அப்படி எல்லாமும் நமது காதுகளை வந்து எட்டுவதால் இத்தகைய துன்பியல் சம்பவங்கள் அதிகரித்துவிட்டனபோலத் தோன்றலாம்.

நல்ல தங்காள், தனது ஏழு குழந்தைகளையும் கிணற்றில் வீசிவிட்டு, தானும் விழுந்து தற்கொலை செய்து கொண்டாள். இப்போது பெண்களில் சிலர், குடிகாரக் கணவரது அழிச்சாட்டியம் தாங்க முடியாமல் குழந்தைகளைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்கின்றனர். சிலர், பெண் குழந்தை வேண்டாம் என்று பிறந்த உடனேயே கொன்றுவிடுகின்றனர்.
நல்ல தங்காள், குழந்தைகளைக் கொன்றதற்குக் காரணம் வறுமை என்றால், குடிகார அல்லது குடும்பப் பொறுப்பற்ற கணவரால் குழந்தைகளைக் கொல்லும் தாய்மார்களுக்கு பாசம் அதிகம். தான் இறந்த பிறகு குழந்தைகள் அநாதையாகிவிடக் கூடாது என்கிற ஒரே காரணத்துக்காகத்தான் குழந்தைகளையும் கொன்றுவிடுகின்றனர். சமூக-பொருளாதார காரணங்களால் பெண் குழந்தைகள் கொல்லப்படுகின்றனர். ஆனால், இவர்கள் மீது பச்சாதாபம் கொள்ளும் சமூகம், சென்னை சம்பவத்துடன் தொடர்புடைய பெண் மீது கோபத்தைக் கொட்டுகிறது. அதற்குக் காரணம் அந்தப் பெண்ணின் தாய்மையைத் தடுமாறச் செய்த காமம் எனும் கயமைதான்.

இந்தச் சமுதாய சீரழிவுக்கு சில முக்கியக் காரணங்கள் உள்ளன. முதலாவது, கூட்டுக் குடும்ப முறை சிதைவு. குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் தகாத செயல்களில் ஈடுபட முயற்சி செய்யும்போது, மூத்தவர்கள் அவர்களுக்கு தக்க ஆலோசனைகளை வழங்கி குடும்ப கட்டமைப்பு உடையாமல் பார்த்துக் கொள்வார்கள். இப்போது கூட்டுக் குடும்பம் அருகி, தனிக் குடும்பம் பெருகிவிட்டது. தனிக் குடும்பத்தில் நடப்பது வெளியில் தெரிவதில்லை. கட்டுப்படுத்தவோ, ஆலோசனை சொல்லவோ ஆள் இல்லை. இறுதியில் விபரீதத்தில் முடிகிறது.

அடுத்து திருமண முறை. பெரியவர்கள் பார்த்து திருமணம் செய்து கொள்பவர்கள் குடும்ப சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு கணவரும் மனைவியும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தும், ஒருவரையொருவர் அனுசரித்து வாழவும் கற்றுக் கொள்கின்றனர்; குடும்ப உறவுகள் பிணைக்கின்றன; விபரீதங்கள் தடுக்கப்படுகின்றன.

காதல் திருமணம் செய்துகொண்டு தனிக் குடித்தனம் நடத்துவோரை கண்காணிப்போரும், கட்டுப்படுத்துவோரும் இல்லை. எனவே, கருத்து வேறுபாடு ஏற்பட்ட உடனே பிரிவு தொடங்கிவிடுகிறது. இதனால் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்; குடும்பம் உருக்குலைந்து போகிறது.
மனித வாழ்வில் உறவுக்கு இணையான முக்கியத்துவம் நட்புக்கும் உண்டு. உறவுகள் செய்யாததைக் கூட நண்பர்கள் செய்வார்கள். உறவுகளுக்கிடையே சில வேளைகளில் பொறாமை இருக்கும். உண்மையான நட்புக்குப் பொறாமை இருக்காது. ஆலோசனை சொல்வார்கள்; நல்வழிப்படுத்துவார்கள். எனவே, தரமான நட்பு அவசியம். தரமான நட்பு என்பது இப்போது அரிதாகி, ஆதாய நோக்குடனான நட்புதான் அதிகமாகி இருக்கிறது. ஆண்-பெண் தகாத உறவு கூட முதலில் நட்பில்தான் தொடங்குகிறது. வீட்டுச் சுவரில் முளைக்கும் சிறு செடி வளர்ந்து கிளைவிட்டு சுவரை உடைப்பது போல, சில நட்பு கணவன்-மனைவி உறவில் விரிசலை ஏற்படுத்தி விடுகிறது. எனவே, நட்பிலும் கவனம் தேவை.

அடுத்து, நமது கல்வி முறை. பள்ளிக் கூடங்களில் அறிவை வளர்க்கும் கல்வி போதிக்கப்படுகிறது. அறத்தை வளர்க்கும் கல்வி இல்லை. நல்லொழுக்க போதனை வகுப்புகள் கிடையாது. சமுதாயத்தில் ஒழுக்கமாகவும், சக மனிதர்களுடன் இணக்கமாகவும், அனுசரித்தும் வாழ வேண்டியதன் அவசியத்தை சொல்லிக் கொடுப்பார் இல்லை. பள்ளிக் கல்வியை முடித்து கல்லூரிக்குச் சென்றால், கல்வி பற்றிக் கேட்கவே வேண்டாம்.

இறுதியாக, பெண்களின் இயல்பான தாய்மைப் பண்பின் அவசியம் குறித்து அடுத்தடுத்த தலைமுறைக்கு நாம் தவறாமல் போதிக்கிறோமா என்ற கேள்வியும் எழாமல் இல்லை. பெண் குழந்தை பூப்பெய்தியதும் 16 நாள் சடங்கின்போது அவர்கள் கையில் மரப்பாச்சி பொம்மை ஒன்றைக் கொடுப்பார்கள். அந்தப் பொம்மையை குழந்தை போன்று மடியில் வைத்து விளையாடுவாள் அந்தச் சிறுமி. இது சிறுமிக்கு உடல் அளவிலும், உணர்வு நிலையிலும் தாய்மையை ஊட்டும். இப்போது நகர்ப்புறங்களில் மட்டுமல்ல, கிராமங்களில் கூட மரப்பாச்சி பொம்மையைக் காண்பது அரிது.

தமிழ்ச் சமுதாயம் என்பது அடிப்படையில் தாவரச் செழிப்பால் மனிதச் செழிப்பையும், மனிதச் செழிப்பால் தாவர செழிப்பையும் உண்டாக்கி அதன் மூலம் நீடித்து, நிலைத்து வாழும் விருப்பம் கொண்டது. அதாவது, விருத்தி'தான் அடிப்படை. அதனால்தான், மங்கள காரியமாக இருந்தாலும், அமங்கள காரியமாக இருந்தாலும் அங்கு தாவரச் செழிப்பை உண்டாக்கும் தானியங்களுக்கு முக்கியத்துவம் உண்டு. திருமணத்தின்போது வீடுகளில் முளைப்பாரி வளர்ப்பதும், மணமக்கள் மீது அட்சதையாக அரிசி தூவுவதும், ஈமக்காரியங்களின்போது சுடுகாட்டில் தானியங்களை விதைப்பதன் தாத்பரியம் இதுதான். மனித விருத்திக்கான மண் பெண்தான். அவள் அழிவு சக்தி அல்ல; ஆக்க சக்தி. இவற்றையெல்லாம் இன்றைய இளம் தலைமுறையினருக்கு நாம் கற்றுக் கொடுக்க வேண்டியது அவசியம்.
கோடிகளை குவித்த ஆர்.டி.ஓ., அதிகாரிபுரோக்கர் வீட்டில் ஆவண புதையல் 

dinamalar 13.09.3018

கள்ளக்குறிச்சியில் கைதான மோட்டார் வாகன ஆய்வாளர் பாபு, கோடிக்கணக்கில் சொத்துகளை வாங்கி குவித்து உள்ளது, லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனையில் தெரியவந்துள்ளது. இவருக்கு, புரோக்கராக செயல்பட்ட செந்தில்குமாரின், சேலம் ஆத்துார் வீட்டில் நடத்திய சோதனையில் ஏராளமான ஆவணங்கள் சிக்கின.

கடலுார், தவுலத் நகரைச் சேர்ந்தவர், பாபு, 52. விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி, ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், மோட்டார் வாகன ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.

கள்ளக்குறிச்சியில் கைது :

இவர் தகுதிச்சான்று வழங்க, 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய போது, நேற்று முன்தினம் விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசாரால், கள்ளக்குறிச்சியில் கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து, கடலுாரில் உள்ள அவரது வீட்டில், கடலுார் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். அதில், 33.50 லட்சம் ரூபாய், 15 கிலோ வெள்ளி, 140 சவரன் நகைகள், 45 வங்கி சேமிப்பு கணக்குகளுக்கான புத்தகங்கள் கைப்பற்றப் பட்டன.

மேலும், ஆறு வங்கி லாக்கருக்கான சாவி மற்றும் பல கோடி ரூபாய்க்கு வாங்கி குவிக்கப்பட்ட சொத்துகளுக்கான ஆவணங் களை கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட வங்கி சேமிப்பு கணக்கு புத்தகங்களில், 60 லட்சம் ரூபாய் டிபாசிட் செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

வங்கி லாக்கரில், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பு சொத்துகளுக்கான ஆவணங்கள் மற்றும் நகைகள் வைக்கப்பட்டு


இருப்பதும் தெரிய வந்துஉள்ளது. இருப்பினும், வங்கி களின் அனுமதியுடன் அவற்றை திறந்து பார்த்த பிறகே, உண்மை மதிப்பு தெரியவரும் என, போலீசார் தெரிவித்தனர்.

கடலுார் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில், பாபு வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம், நகைகள் உட்பட அனைத்து ஆவணங்களையும், நேற்று முன்தினம் இரவு, விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து, 45 வங்கி கணக்குகளை முடக்கி வைக்க, சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு கடிதம் அனுப்பும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

ஆவண புதையல் :

மோட்டார் வாகன ஆய்வாளர் பாபுவுக்கு, 13 ஆண்டுகளாக புரோக்கராகவும், பினாமியாகவும் இருக்கும், சேலம் மாவட்டம், ஆத்துாரைச் சேர்ந்த, ஜோதிடர் செந்தில்குமார், 44, என்பவரையும், போலீசார் கைது செய்தனர்.அவரது வீட்டில், நேற்று முன்தினம் மாலை, 4:30 முதல், சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசார், சோதனை மேற்கொண்டனர். இது, அதிகாலை, 2:30 மணி வரை நடந்தது.

ஜோதிட அறை உள்ளிட்ட இடங்களில் இருந்த ஆவணங்களை பறிமுதல் செய்தனர். அதில், ஸ்ரீருத்ர கங்கா பைனான்ஸ் மற்றும் ஸ்ரீருத்ர கங்கா சிட்ஸ் பிரைவேட் லிமிடெட், தொழுதுார் கிரீன்பார்க் பள்ளியில், பங்குதாரராக உள்ள ஆவணங்கள் மற்றும் அறக்கட்டளை ஆவணங்கள் சிக்கின.

செந்தில்குமாரின் மனைவி கவிதா பெயர்களில், 2 கோடி ரூபாய்க்கு, நிதி நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது தெரிந்தது. அதற்கு, வரி செலுத்தியபோதும், முதலீடு செய்துள்ள வருவாய்க்கு ஆதாரம் இல்லை. வீட்டிலிருந்து, 15 வங்கி கணக்குகளின் சேமிப்பு கணக்கு புத்தகம், 150 சவரன் நகைகள் உட்பட,33 கோடி ரூபாய் மதிப்புக்கும் அதிகமான சொத்துகளின் ஆவணங்கள் சிக்கி உள்ளன.

இதுகுறித்து, போலீசார் கூறியதாவது: ஆத்துாரில், 2006ல் பாபு பணிபுரிந்தபோது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த

புகாரில், செந்தில்குமார் வீட்டில், 62.62 லட்சம் ரூபாய்க்கு, ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதில், சேலம் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில், பாபு மீது வழக்கு நடக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

சசிகலா குடும்ப ஜோதிடர் :

செந்தில்குமார், கேரளாவின் பிரசன்ன ஜோதிடம் பார்ப்பது வழக்கம். 2008 முதல், சசிகலாவின் குடும்பத்தை சேர்ந்தவர்கள், தினகரன் ஆதரவு, முன்னாள் அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, பூங்குன்றன், எம்.பி.,க்கள், அ.தி.மு.க., நிர்வாகிகள் சிலருக்கு, குடும்ப ஜோதிடராக உள்ளார். இவர்கள், செந்தில்குமாரிடம் ஆலோசித்து, முக்கிய கோவில்களில் நடக்கும் பரிகார பூஜையில் பங்கேற்பர்.

வாரிசு வேலையில் வந்தவர் :

கடலுார், செம்மண்டலம் பகுதியைச் சேர்ந்த, பாபுவின் தந்தை சுப்ரமணியன். வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், உதவியாளராக பணிபுரிந்தார். அவர் இறந்ததால், 1991ல், பாபுவுக்கு, தமிழக அரசு, வாரிசு வேலை வழங்கியது. 1998 முதல், மோட்டார் வாகன ஆய்வாளராக, பல்வேறு இடங்களில் பணிபுரிந்து வருகிறார். 2006ல், சொத்து குவிப்பு புகாரில் வழக்கு பதிவானதால், பதவி உயர்வின்றி பணிபுரிகிறார். பாபுவின் இரு மகள்கள், மருத்துவக் கல்லுாரிகளில் படிக்கின்றனர். தம்பி செந்தில், ஆத்துார், விழுப்புரத்தில், இரு, நான்கு சக்கர வாகனங்கள் விற்பனை செய்கிறார். தங்கை ஜெயலலிதா, அவரது கணவர் ராஜேந்திரன், உளுந்துார்பேட்டையில், 'டிரைவிங் ஸ்கூல்' நடத்துகின்றனர். ஆய்வின்போது, ஏராளமான ஆவணங்கள் கிடைத்துள்ளதால், குடும்ப உறவினர்களிடம், போலீசார் சோதனை நடத்த முடிவு செய்துள்ளனர்.


- நமது நிருபர் -

அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,வுக்கு குரு பெயர்ச்சிக்கு பின் திருமணம்

Added : செப் 12, 2018 21:28 | 

  பவானிசாகர்: பவானிசாகர், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., திருமணம் நேற்று நடக்கவில்லை. 'குருப்பெயர்ச்சி முடிந்து திருமணம் நடக்கும்' என, அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.ஈரோடு மாவட்டம், பவானிசாகர் தொகுதி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,வாக இருப்பவர், ஈஸ்வரன், 42. அ.தி.மு.க.,வைச் சேர்ந்த இவருக்கு, பண்ணாரி அம்மன் கோவிலில், நேற்று திருமணம் நடப்பதாக இருந்தது. ஆனால், நிச்சயிக்கப்பட்ட பெண், 1ம் தேதி, மாயமானார். அதே தேதியில், எம்.எல்.ஏ., திருமணத்தை நடத்த, தீவிரமாக பெண் தேடினர். இதனால், திட்டமிட்டபடி நேற்று திருமணம் நடக்கும் என, ஒரு தரப்பினர் நம்பினர். ஆனால் நேற்று, அவரது திருமணம் நடக்கவில்லை.
பண்ணாரி அம்மன் கோவில் அலுவலக ஊழியர்கள் கூறியதாவது:ஏற்கனவே பதிவு செய்துள்ளபடி, பண்ணாரி அம்மன் கோவிலில், நேற்று காலை, மொத்தம், 28 திருமணங்கள் நடந்தன.அதில், எம்.எல்.ஏ., ஈஸ்வரன் திருமணம் நடந்ததாக, ஆவணங்களில் பதிவு இல்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.திருமணம் நிறுத்தப்பட்ட தகவல், 'வாட்ஸ் ஆப்' மற்றும் சமூக வலைதளங்களில் பரவியது. தீவிர பெண் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட, எம்.எல்.ஏ., ஆதரவாளர்கள் சோகத்தில் உள்ளனர்.
அ.தி.மு.க.,வினர் கூறியதாவது:குறிப்பிட்ட தேதியில், திருமணத்தை முடிக்க, பெண் தேடும் பணியில் ஈடுபட்டோம். பல்வேறு இடங்களில், பேச்சு நடந்தது. ஆயினும், திட்டமிட்டபடி திருமணம் நடக்கவில்லை. ஜோதிடர் அறிவுரைப்படி, குருப்பெயர்ச்சி முடிந்து, திருமணம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

NEWS TODAY 21.12.2025