Sunday, September 16, 2018

டிக்கெட் இல்லை என இழப்பீடு மறுக்க முடியாது: ரயிலில் இருந்து விழுந்து பயணி இறந்த வழக்கில் உத்தரவு

Added : செப் 15, 2018 23:02
சென்னை,: ஓடும் ரயிலில் இருந்து கீழே விழுந்து இறந்த, கூலித்தொழிலாளியின் குடும்பத்துக்கு, 8 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, ரயில்வே துறைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது.

தள்ளுபடிமின்சார ரயிலில், தாம்பரத்தில் இருந்து கடற்கரைக்கு சென்ற போது, சைதாப்பேட்டை - மாம்பலம் இடையே, சீனிவாசன் என்பவர், கீழே விழுந்து இறந்தார்.அவரிடம் பயண டிக்கெட் இல்லாததால், இழப்பீடு வழங்க, ரயில்வே நிர்வாகம் மறுத்தது. இழப்பீடு கோரிய மனுவை, ரயில்வே தீர்ப்பாயம் தள்ளுபடி செய்தது.இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், சீனிவாசனின் குடும்பத்தினர் வழக்கு தொடுத்தனர். மனுவை, நீதிபதி, எம்.வி.முரளிதரன் விசாரித்தார். மனுதாரர்கள் சார்பில், வழக்கறிஞர், எஸ்.பார்த்தசாரதி ஆஜரானார்.

நீதிபதி பிறப்பித்த உத்தரவு:ரயிலில் இருந்து, ஒருவர் கீழே விழுந்து இறக்கும் போது, அவரது வாரிசுகளால், பயண டிக்கெட்டை தாக்கல் செய்ய இயலாது. உயிரிழந்தவர் வசம், ௨,௫௧௦ ரூபாய் இருந்ததாக, தீர்ப்பாயம் கூறியுள்ளது. இவ்வளவு பணம் வைத்திருந்தவர், கண்டிப்பாக பயண டிக்கெட் வாங்கியிருப்பார் என்பது, குடும்பத்தினரின் கருத்து.ரூ.8 லட்சம்இதை மறுக்கும் வகையில், எந்த ஆதாரங்களையும், ரயில்வே தாக்கல் செய்யவில்லை.பாக்கெட்டில், ௨,௫௧௦ ரூபாய் வைத்திருந்தவர், அதிகபட்சம், ௨௦ ரூபாய்க்கான பயண டிக்கெட்டை வாங்காமல் பயணம் செய்திருப்பாரா; விபத்தின் போது, பயண டிக்கெட் காணாமல் போயிருக்கலாம்.ஒருவர் டிக்கெட் வாங்கி பயணித்தாரா, இல்லையா என்பதை, ரயில்வே தான் நிரூபிக்க வேண்டும்.பயண டிக்கெட்டை சமர்ப்பிக்காததால், மனுதாரர்களுக்கு இழப்பீடு மறுப்பது சரியல்ல. எனவே, தீர்ப்பாயத்தின் உத்தரவு, தள்ளுபடி செய்யப்படுகிறது. சீனிவாசனின் மனைவி, ௩௮ம் வயதில், கணவரை இழந்துள்ளார். இழப்பீடு பெறும் உரிமை, மனுதாரர்களுக்கு உள்ளது.மனுதாரர்களுக்கு, 8 லட்சம் ரூபாயை, வட்டிஉடன் ரயில்வே வழங்க வேண்டும். இழப்பீட்டு தொகைக்கான காசோலையை, ௧௨ வாரங்களில், உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் அலுவலகத்தில் அளிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
சபரிமலை நடை இன்று மாலை திறப்பு தரிசனம் முடிந்ததும் திரும்பிவிட அறிவுறுத்தல்

Added : செப் 15, 2018 23:43

சபரிமலை புரட்டாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. உணவு, தண்ணீர் பிரச்னை உள்ளதால், தரிசனம் முடிந்ததும் ஊர் திரும்பிவிடுமாறு பக்தர்களுக்கு தேவசம் போர்டு அறிவுறுத்தியுள்ளது.55 நாட்கள் இடைவெளிக்கு பின் சபரிமலையில் இன்று முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். மாலை 5:00 மணிக்கு மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றுவார். தொடர்ந்து ஆழிகுண்டத்தில் தீ வளர்க்கப்படும். இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். நாளை அதிகாலை 4.00 மணிக்கு நெய் அபிஷேகம் துவங்கும். 21-ம் தேதி இரவு 10:00 மணி வரை நடை திறந்திருக்கும். தினமும் படிபூஜை உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் நடைபெறும். தந்திரி கண்டரரு ராஜீவரரு பூஜைகளை நடத்துவார்.
கட்டுப்பாடுகள்

பம்பை உருக்குலைந்து காணப்படுவதால் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. போலீசார் அனுமதிக்கும் பாதை வழியாக மட்டுமே செல்ல வேண்டும். குடிநீர், உணவு எடுத்து செல்ல வேண்டும். சன்னிதானத்திலும் தண்ணீர் தட்டுப்பாடு உள்ளது. தரிசனம் முடிந்த உடன் ஊர் திரும்பிவிட வேண்டும்.பக்தர் வாகனங்கள் நிலக்கல்லில் நிறுத்தப்படும். அங்கிருந்து கேரள அரசு பஸ்சில் சென்று திரும்ப வேண்டும்.பம்பையில் புலி மீது அமர்ந்த கோலத்தில் 28 அடி உயர ஐயப்பன் சிலை வைக்கப்பட உள்ளது. இதற்கு நேற்று தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார் அடிக்கல் நாட்டினார்.
'மருந்து சீட்டை டாக்டர்கள் கையால் எழுத கூடாது'

Added : செப் 15, 2018 21:03 |



டேராடூன்: அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள், நோயாளி களுக்கு பரிந்துரைக்கும் மருந்து சீட்டுகளை, இனி கையால் எழுதி தராமல், 'கம்ப்யூட்டர் பிரின்ட் அவுட்'களாக தரவேண்டும் என, உத்தரகண்ட் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான ஒரு வழக்கில், உத்தரகண்ட் உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில், குறிப்பிடப்பட்டுள்ளதாவது: அரசு மற்றும் தனியார் டாக்டர்கள், நோயாளி களுக்கு மருந்து சீட்டுகளை, கையால் எழுதி தருகின்றனர். இதனால், நோயாளிகள் மற்றும் அவரது உறவினர்கள், பல சந்தர்ப்பங்களில், டாக்டர்களின் கையெழுத்து புரியாமல் தவிக்கின்றனர். இதை தவிர்க்கும் வகையில், உத்தரகண்டை சேர்ந்த அரசு மற்றும் தனியார் டாக்டர்கள், இனி மருந்து சீட்டுகளை, கம்ப்யூட்டர் பிரின்ட் அவுட்களாக வழங்க வேண்டும்.அரசு டாக்டர்களுக்கு, கம்ப்யூட்டர் மற்றும், 'பிரின்டர்' வசதிகளை, மாநில அரசு செய்து தர வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாநில செய்திகள்

பிளஸ்-2 மார்க் அடிப்படையில் உயர்கல்விக்கான மாணவர் சேர்க்கை தமிழக அரசு அறிவிப்பு





பிளஸ்-2 பொதுத்தேர்வு 600 மதிப்பெண்களுக்கு நடைபெறும் என்றும், அந்த மதிப்பெண்களின் அடிப்படையில்தான் உயர்கல்விக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் தமிழக அரசு அறிவித்து உள்ளது.

பதிவு: செப்டம்பர் 16, 2018 05:30 AM

சென்னை,

தமிழக கல்வி திட்டத்தில் பல்வேறு மாற்றங்களை அரசு செய்து வருகிறது. இதுவரை எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே பொதுத்தேர்வு என்று இருந்தது. இந்த நிலையில் எஸ்.எஸ்.எல்.சி. முடித்து பிளஸ்-1 வகுப்பு செல்லும் மாணவர்களுக்கு அதற்கான பாடத்தை நடத்தாமல், அப்போதே பிளஸ்-2 வகுப்புக்கான பாடத்தை பெரும்பாலான பள்ளிகள் நடத்த தொடங்கிவிடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதனையடுத்து பிளஸ்-1 வகுப்புக்கும் பொதுத்தேர்வை அறிமுகம் செய்ய பள்ளிக்கல்வி துறை திட்டமிட்டது. கடந்த கல்வியாண்டு முதல் அந்த புதிய முறை அமல்படுத்தப்பட்டது.

அதாவது, பிளஸ்-2 பொதுத்தேர்வில் 1,200 மதிப்பெண்கள் என்றிருந்த நிலை மாற்றப்பட்டு, பிளஸ்-1 வகுப்புக்கும் பொதுத்தேர்வு என்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டு, பிளஸ்-1-க்கு 600 மதிப்பெண்களும், பிளஸ்-2-க்கு 600 மதிப்பெண்களும் என்று பிரிக்கப்பட்டது.

பிளஸ்-2 முடித்து மாணவர்கள் உயர்கல்விக்கு செல்லும்போது பிளஸ்-1, பிளஸ்-2 மதிப்பெண்களை சேர்த்து கணக்கில் கொள்ளப்படும் என்று அரசு அறிவித்து அதற்கான அரசாணையையும் வெளியிட்டது. ஆனால் தற்போது அந்த முடிவை அரசு மாற்றிக்கொண்டுள்ளது.

பிளஸ்-2 பொதுத்தேர்வில் மாணவர்கள் 600 மதிப்பெண்களுக்கு எடுக்கும் மார்க்கின் அடிப்படையிலேயே உயர்கல்விக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும், பிளஸ்-1 மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிளஸ்-1, பிளஸ்-2 மதிப்பெண்களுக்கு தனித்தனியே சான்றிதழ் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்காக அரசாணை திருத்தி வெளியிடப்பட்டு இருக்கிறது.

திருத்தப்பட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வுகளில் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும், பிளஸ்-1 பொதுத்தேர்வுக்கு 600 மதிப்பெண்கள் மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கு 600 மதிப்பெண்கள் என பதிவு செய்து தனித்தனி மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

பிளஸ்-1 அல்லது பிளஸ்-2 பொதுத்தேர்விலோ அல்லது 2 பொதுத்தேர்வுகளிலுமோ முழுமையாக தேர்ச்சி அடையாத மாணவர்களுக்கு, பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கும் நேரத்தில், அவ்விரு பொதுத்தேர்வுகளிலும் முழுமையாக தேர்ச்சி பெறும் வரை மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை மட்டும் பதிவு செய்து மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும்.

மாணவர்களின் நலன் கருதி, பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களை மட்டும் உயர்கல்வி சேர்க்கைக்கு எடுத்துக்கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நிருபர்களிடம் மேலும் கூறியதாவது:-

10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு 3 பொதுத்தேர்வுகளை மாணவர்கள் எழுத வேண்டி இருக்கிறது. இதற்கு முன்பு பிளஸ்-1 பொதுத்தேர்வு இல்லை என்ற நிலை இருந்தது. ஆனால் இப்போது அதுவும் பொதுத்தேர்வாக மாற்றப்பட்டு இருக்கிறது.

இப்படியாக தொடர்ந்து தேர்வு என்பதால் மாணவர்களுக்கு மனஅழுத்தம் அதிகமாக உள்ளதாக புகார்கள் வந்தன. இதையடுத்து பிளஸ்-2 பொதுத்தேர்வில் 1,200 மதிப்பெண்கள் என்றிருப்பதை 600 மதிப்பெண்களாக குறைத்திருக்கிறோம். அதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டு இருக்கிறது. பிளஸ்-2 படிக்கும் மாணவர்கள் தங்களுக்குரிய 600 மதிப்பெண்களிலேயே உயர்கல்விக்கு செல்வதற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

எனவே இனி பிளஸ்-2 மாணவர்கள் உயர்கல்விக்கு செல்ல 1,200 மதிப்பெண்கள் தேவையில்லை, 600 மதிப்பெண்கள் போதுமானது. இதனால் மாணவர்களும் உற்சாகம் அடைவார்கள். கடந்த ஆண்டு பிளஸ்-1 பொதுத்தேர்வு எழுதியவர்களுக்கும் இந்த அரசாணை பொருந்தும். அதேபோல், கடந்த ஆண்டு பிளஸ்-1 தேர்வு எழுதியவர்களுக்கு தனியாக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்.

பிளஸ்-1 பொதுத்தேர்வில் எந்த தடையும் இல்லை. பிளஸ்-1 தேர்வு தொடர்ந்து நீடிக்கும். மேலும் பிளஸ்-1 படிக்கும் மாணவர்கள் பொதுத்தேர்வில் தோல்வி அடைந்தால் அந்த பாடங்களை எழுதிக்கொண்டே பிளஸ்-2 வகுப்பில் தொடர்ந்து படிக்கலாம்.

தமிழ்நாடு முழுவதும் 413 மையங்களில் ‘ஸ்பீடு’ நிறுவனம் மூலம் ‘நீட்’ தேர்வுக்கான பயிற்சி தொடங்கி உள்ளது. தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிகளிலும் ‘நீட்’ தேர்வுக்கான பயிற்சிகள் நடைபெற்று வருகின்றன. பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு தமிழிலும், ஆங்கிலத்திலும் நீட் தேர்வு எழுதுவதற்கான பயிற்சிக்கு 23 ஆயிரத்து 648 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.

கடந்த ஆண்டு நீட் தேர்வுக்கு விலக்கு கிடைக்குமா? இல்லையா? என்ற குழப்பம் நிலவி வந்ததால் குறைந்த அளவு மாணவர்களே சேர்ந்தனர். இதனால் இதில் 1,475 மாணவர்களே தேர்ச்சி பெற்றனர். அதில் 27 மாணவர்கள் எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர்ந்து உள்ளனர்.

சென்ற ஆண்டு தமிழ் மொழியாக்கத்தில் பிரச்சினை ஏற்பட்டதால் நீட் தேர்வு கேள்விகளில் குழப்பம் ஏற்பட்டது. இந்த ஆண்டு அதுபோன்ற குறைபாடுகள் இல்லாத வகையில் மாநில அரசு இணைந்து செயல்படும்.

நீட் தேர்வுக்கான மையங்களுக்கு மாநிலத்தில் உள்கட்டமைப்பு வசதியில்லாத காரணத்தை காட்டி சென்ற ஆண்டு வேறு மாநிலங்களில் மையங்கள் அமைக்கப்பட்டன. இந்த ஆண்டு மாணவர்கள் வேறு மாநிலங்களுக்கு சென்று நீட் தேர்வு எழுத வேண்டிய அவசியம் இருக்காது. மாநிலத்தில் நீட் தேர்வு எழுத எத்தனை மையங்கள் வேண்டுமானாலும் அமைத்து தருவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்து இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பேட்டியின்போது பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ், பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.
மாவட்ட செய்திகள்

தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் 2 பெண்களிடம் கொள்ளை தொடரும் சம்பவங்களால் பயணிகள் அச்சம்




ஆந்திராவில் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் 2 பெண்களிடம் கொள்ளை அரங்கேறியுள்ளது.

பதிவு: செப்டம்பர் 16, 2018 04:45 AM

சென்னை,

ஆந்திராவை சேர்ந்தவர் சுதீஷ் என்பவரின் மனைவி கீதா(வயது 22). இவர் நேற்று முன்தினம் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் மூலம் புறப்பட்டார். ரெயில் ஓங்கோல் நிலையத்தில் நேற்று அதிகாலை நின்றபோது, தூங்கிக்கொண்டிருந்த கீதாவின் கழுத்தில் கிடந்த சங்கிலியை மர்ம ஆசாமி ஒருவர் ஜன்னல் வழியாக பறிக்க முயற்சித்தார்.

சுதாரித்து கொண்ட கீதா சங்கிலியை காப்பாற்ற மர்ம ஆசாமியிடம் போராடினார். இந்த போராட்டம் வலுக்கவே சங்கிலியை இனி பறிக்க வாய்ப்பில்லை என மர்ம ஆசாமி நினைத்தார். கிடைத்த வரை லாபம் என்ற வகையில் சங்கிலியை விட்டு, கீதா அருகே இருந்த கைப்பையை லபக்கென எடுத்துக்கொண்டு மர்ம ஆசாமி ஓட்டம் பிடித்தார். இந்த கைப்பைக்குள் ரூ.25 ஆயிரம் பணம் மற்றும் செல்போன் இருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடரும் சம்பவங்கள்

அதே தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் நேற்று அதிகாலை நடந்த இன்னொரு சம்பவத்தில் தஞ்சாவூரை சேர்ந்த மைதிலி(35) என்பவரிடம் 7 பவுன் தங்க சங்கிலி மர்ம நபரால் பறிக்கப்பட்டது. இந்த சம்பவமும் ஓங்கோலில் ரெயில் நிலையத்திலேயே அரங்கேறியது. மேற்கண்ட இரு சம்பவங்கள் குறித்து சென்டிரல் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்குகள் ஓங்கோல் ரெயில்வே போலீசாருக்கு மாற்றப்பட்டது.

சமீபகாலமாக ஓங்கோல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் ரெயில் கொள்ளைகள் அதிகளவில் நடந்து வருகின்றன. குறிப்பிட்ட சிலர் தான் இந்த தொடர் திருட்டில் ஈடுபட்டு வருகிறார்கள் என்று தெரியவந்துள்ளது. கடந்த 10 நாட்களில் சென்னை வந்த 2 பயணிகளிடம் பல லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணங்களை இந்த பகுதியில் மர்ம நபர்கள் திருடியுள்ளனர். இந்த நிலையில் 3-வது முறையாக இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதால் ரெயில் பயணிகள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். மேலும் எந்த வித அசம்பாவித சம்பவங்கள் நடக்கும் முன்னர் அந்த ரெயில் திருட்டில் ஈடுபடும் மர்ம ஆசாமிகளை பிடித்து தண்டிக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாநில செய்திகள்

ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரையும் விடுவிக்கக்கூடாது குண்டு வெடிப்பில் பலியான இன்ஸ்பெக்டரின் மனைவி எதிர்ப்பு





ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரையும் விடுவிக்கக்கூடாது குண்டு வெடிப்பில் பலியான இன்ஸ்பெக்டரின் மனைவி எதிர்ப்பு

பதிவு: செப்டம்பர் 16, 2018 05:30 AM

தாம்பரம்,

ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரையும் விடுவிக்க ராஜீவ் கொலையின்போது கொல்லப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகுருவின் மனைவி பாலசரஸ்வதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள முருகன், நளினி, பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது. கவர்னர் பன்வாரிலால் புரோகித் இந்த 7 பேரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில், ராஜீவ் கொலையின்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகுரு குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார். இவரது மனைவி பாலசரஸ்வதி சென்னை பல்லாவரத்தில் வசித்துவருகிறார். ராஜீவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் களை விடுவிக்கக்கூடாது என அவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ‘தினத்தந்தி’ நிருபருக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

என்னுடைய கணவர் ராஜகுரு பல்லாவரம் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியில் இருந்தபோது ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ்காந்தி தேர்தல் பிரசார கூட்டத்திற்கு பாதுகாப்பு பணிக்கு சென்றார். அங்கு விடுதலை புலிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த எனது கணவர் ராஜகுருவும் கொல்லப்பட்டார்.

எனது கணவர் உடலை பொட்டலமாக எங்களிடம் கொடுத்தார்கள். என் வாழ்க்கையில் எல்லாமுமாக இருந்த என் கணவரை இழந்து தவித்தேன். என் 2 பிள்ளைகள் தந்தையின் உடலை கூட பார்க்கவில்லை. அந்த அளவிற்கு பொட்டலமாக என் கணவர் உடலை கொடுத்தார்கள். என் குழந்தைகள் அழுது கதறினர். அதன்பிறகு என் குடும்பம் எத்தகைய கஷ்டத்தை அனுபவித்தது என்பது சொல்லிமாளாது.

என் குடும்பத்தின் நிலை யாருக்கும் வரக்கூடாது. அந்த அளவிற்கு நாங்கள் என் கணவரை இழந்த பிறகு கஷ்டப்பட்டோம். நாங்களும் தமிழர்கள் தான். எந்த தலைவரும் எங்கள் வீட்டிற்கு வந்து கேட்டதில்லை. என்னைப்போல தான் அந்த வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்ட அத்தனை குடும்பங்களும் வேதனைகளை அனுபவித்தது.

இன்றைக்கு ராஜீவ் கொலை கைதிகளை விடுதலை செய்யவேண்டும் என அனைத்து தலைவர்களும் பேசி வருகிறார்கள். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அத்தனை பேரும் அப்பாவிகளா. ராஜீவ் காந்தி கொலையின்போது அங்கு செயல்பட்ட விடுதலை புலிகள் ஒற்றைகண் சிவராசன், தாணு ஆகியோருடன் இப்போது சிறையில் உள்ளவர்கள் அந்த பொதுக்கூட்ட இடத்தில் ஒன்றாக இருந்த புகைப்படங்கள் அனைத்தும் என்னிடம் உள்ளது. அவர்கள் ராஜீவ் கொலையாளிகளுக்கு துணையாக இருந்தார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.

இப்போது பல ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்டார்கள், அவர்களை விடுதலை செய்யவேண்டும் என கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் அனைவரும் அப்பாவிகள் என்பதுபோல பேசிவருவது இந்த படுகொலையில் உயிரை இழந்தவர்களின் குடும்பங்களில் கடும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது. நீண்ட நாட்கள் சிறையில் இருந்தால் கொலை குற்றவாளிகளை விடுதலை செய்யலாம் என்றால், யார் வேண்டுமானாலும் கொலை செய்ய தயங்க மாட்டார்கள். இந்த முடிவை அரசு மறுபரிசீலனை செய்யவேண்டும். இந்த கொலை வழக்கில் சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்யக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.
மாநில செய்திகள்

ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரை விடுவிக்கும் விவகாரத்தில் நியாயமான முடிவு எடுக்கப்படும் கவர்னர் மாளிகை அறிவிப்பு





ராஜீவ் காந்தி கொலை கைதிகள் 7 பேரை விடுவிக்கும் விவகாரம் சிக்கலான பிரச்சினை என்பதால், அரசியல் சட்டப்படி ஆய்வு செய்து நியாயமான முடிவு எடுக்கப்படும் என்று கவர்னர் மாளிகை அறிவித்து உள்ளது.

பதிவு: செப்டம்பர் 16, 2018 05:59 AM

சென்னை,

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது.

இதை எதிர்த்து மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு முடிவு எடுத்து கவர்னரின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கலாம் என்று கடந்த 6-ந் தேதி அறிவுறுத்தியது.

இதைத்தொடர்ந்து 9-ந் தேதி கூடிய தமிழக அமைச்சரவை, ராஜீவ் காந்தி கொலை கைதிகள் 7 பேரையும் விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றி, அதை கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு அனுப்பி வைத்தது. மேலும் 7 பேர் தொடர்பான கோப்புகளையும் கவர்னருக்கு அனுப்பியது.

தமிழக அரசின் இந்த பரிந்துரை குறித்து கருத்து கேட்டு, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கவர்னர் அறிக்கை அனுப்பி இருப்பதாக கடந்த வியாழக்கிழமை தகவல் வெளியானது.

இந்த நிலையில் இதுகுறித்து கவர்னர் மாளிகையின் சார்பில் நேற்று செய்திக்குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டது.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளின் விடுதலை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்துடன் தொடர்பு கொண்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த அனுமானத்தின் அடிப்படையில் சில தனியார் தொலைக்காட்சிகள் விவாதங்களை நடத்தி வருகின்றன. இந்த விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

இந்த பிரச்சினை (7 பேரின் விடுதலை) சிக்கலான ஒன்றாகும். இதில் சட்டரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும், அரசியல் சாசன அடிப்படையிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இந்த விவகாரம் தொடர்பாக ஏராளமான ஆவணங்கள் உள்ளன. பல்வேறு கோர்ட்டு தீர்ப்புகள் அடங்கிய அந்த ஆவணங்களை 14-ந் தேதியன்றுதான் மாநில அரசு ஒப்படைத்தது. மேலும் பல ஆவணங்களை தந்து கொண்டிருக்கின்றனர். அந்த ஆவணங்கள் அனைத்தையும் உன்னிப்பாக கவனித்து மேல்நடவடிக்கை எடுப்பதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.

இந்த பணியில் தேவைப்படும் போது ஆலோசனைகள் பெறப்படும். இந்த விஷயத்தில் அரசியல் சாசனத்தின் அடிப்படையில் நியாயமான முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

NEWS TODAY 01.07.2026