Wednesday, October 3, 2018

காத்திருக்கும் ஆபத்து!
By ஆசிரியர் | Published on : 03rd October 2018 01:35 AM |

நகரங்களில் மட்டுமல்லாமல் கிராமங்களிலும் தெருவோர உணவகங்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருக்கிறது. வேலையில்லாத இளைஞர்களுக்கும் கிராமப்புறங்களிலிருந்து நகரங்களுக்கு வேலை தேடி இடம் பெயர்பவர்களுக்கும் அதிக முதலீடு இல்லாமல் தொடங்கக்கூடிய தொழிலாக தெருவோர உணவகங்கள் உதவிக்கரம் நீட்டுகின்றன. தெருவோரத்தில் வாகனங்களை நிறுத்தியும், தள்ளு வண்டிகளிலும், நடைபாதைகளிலும் நடத்தப்படும் தற்காலிக உணவகங்கள் சாமானிய, நடுத்தர மக்களின் ஆதரவைப் பெற்றிருப்பதால்தான் இந்த அளவுக்கு பெருகிவருகின்றன என்கிற உண்மையையும் நாம் புறந்தள்ளிவிட முடியாது.
சமீபத்தில் தெருவோர உணவகங்கள் குறித்து நாடாளுமன்றக் குழு ஒன்று உணவுப் பாதுகாப்பு குறித்த சில கேள்விகளை எழுப்பியிருக்கிறது. இந்திய உணவுப் பாதுகாப்புத் தரநிர்ணய ஆணையத்தின் செயல்பாடு குறித்தும் நாடாளுமன்றக் குழு கண்டனம் தெரிவித்திருக்கிறது. உணவுப் பாதுகாப்பு குறித்து கண்காணிக்க வேண்டிய ஆணையம், அது குறித்து முறையான விதிமுறைகளை வகுத்து எந்த அளவுக்கு தெருவோர உணவகங்களின் சுத்தத்தையும், தரத்தையும் பாதுகாக்கிறது என்பதை நாடாளுமன்றக் குழு சரியான நேரத்தில் தட்டிக் கேட்க முற்பட்டிருக்கிறது.

இந்திய உணவுப் பாதுகாப்புத் தரநிர்ணய ஆணையத்தைப் பொருத்தவரை, பெரிய உணவு விடுதிகளிலும், உணவுத் தயாரிப்பு நிறுவனங்களிலும் சோதனைகளை நடத்தி வருகிறதே தவிர, அனைத்துத் தளத்திலும் அதன் செயல்பாட்டை உறுதிப்படுத்தவில்லை என்பது சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. உணவுக் கலப்படம், தவறான தகவல்களுடன் உணவுப் பொருள்களை விற்பனை செய்வது உள்ளிட்ட குற்றங்களில் உணவுப் பாதுகாப்புத் தரநிர்ணய ஆணையம் நடத்தியிருக்கும் சோதனைகளும், பதிவு செய்திருக்கும் வழக்குகளும், பெற்றுத் தந்திருக்கும் தண்டனைகளும் அதிர்ச்சி அளிக்கும் விதத்தில்தான் இருக்கின்றன.
2016-17 நிதியாண்டில் ஒட்டுமொத்த இந்தியாவில் ஆணையம் சோதனைக்காக எடுத்திருக்கும் மாதிரிகளின் எண்ணிக்கை வெறும் 18,325. இந்த மாதிரிகள் உணவுக் கலப்படத்துக்காகவும், தவறான தகவல்களுடன் விற்பனை செய்யப்பட்டதற்காகவும் ஆணையத்தால் சோதனைக்கு எடுத்துச் செல்லப்பட்டவை. அவற்றில் 13,080 மாதிரிகளில் மட்டும்தான் குற்றம் அறியப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. வழக்கு தொடர்ந்தபோது அவற்றில் 1,605 வழக்குகளில் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. அவற்றிலும்கூட பெரும்பாலானவை வெறும் பிழையுடன் தண்டிக்கப்பட்டவை.

உணவுக் கலப்படத்துக்காக ஆணையத்தால் எடுக்கப்பட்ட மாதிரிகள் மிக மிக குறைவானவை. அதுகுறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று நாடாளுமன்றக் குழு கூறியிருக்கிறது. இதற்கு ஆணையம் வழங்கும் காரணங்களான போதுமான விதிமுறைகள் இல்லை, ஊழியர்கள் இல்லை உள்ளிட்டவை ஏற்புடையதாக இல்லை.
உணவுப் பொருள்கள் தயாரிக்கப்பட்டாலோ, விற்கப்பட்டாலோ, இலவசமாக வழங்கப்பட்டாலோ எதுவாக இருந்தாலும் அவற்றின் தரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பது அடிப்படை அவசியம். இப்போது உணவுத் துறை என்பது இந்தியாவின் மிகப்பெரிய துறையாக மாறியிருக்கும் நிலையில், இது குறித்த தீவிரமான சிந்தனையும், கடுமையான கட்டுப்பாடுகளும் தேவை. நாடாளுமன்றக் குழு முன்வைத்திருக்கும் சில ஆலோசனைகள் உடனடியாக அரசாலும் ஆணையத்தாலும் கவனத்தில் கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டாக வேண்டும்.

ஊராட்சி ஒன்றிய அளவிலிருந்து தொடங்கி எல்லா நிலைகளிலும் உணவுப் பொருள்களுக்கான சோதனை மையங்கள் அமைக்கப்பட வேண்டும் என்பது நாடாளுமன்றக் குழுவின் மிக முக்கியமான பரிந்துரை. நடமாடும் சோதனை மையங்கள் மாவட்ட அளவில் ஏற்படுத்தப்படுவதை உடனடியாக உறுதிப்படுத்தலாம் என்றும் பரிந்துரைத்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல், மாதிரிக்கு எடுத்துக் கொள்ளப்படும் உணவுப் பொருள்கள் குறித்த சோதனையின் முடிவுகள் ஊடகங்கள் வாயிலாக மக்களுக்குத் தெரியப்படுத்தப்பட வேண்டும் என்றும் நாடாளுமன்றக் குழு வலியுறுத்துகிறது.

உணவுப் பாதுகாப்புத் தரநிர்ணய ஆணையம், தூய்மையான தெரு உணவுத் திட்டம் என்கிற ஒரு முயற்சியை தில்லியிலும் கோவாவிலும் அறிமுகப்படுத்தியது. அதன் மூலம், தில்லியில் 23,000 தெருவோர உணவகங்களிலும், கோவாவில் 700 தெருவோர உணவகங்களிலும் உணவுப் பாதுகாப்பு குறித்தும், சுத்தம் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. அதேபோல உணவுப் பொருள்களை அகற்றுதல், இருக்கை வசதிகளை உறுதிப்படுத்துதல், கையில் உறையுடன் பரிமாறுதல் உள்ளிட்ட பல்வேறு இன்றியமையாத தேவைகள் இந்தத் திட்டத்தின் மூலம் அறிவுறுத்தப்படுகின்றன. இதை இந்தியா முழுவதும் நடைமுறைப்படுத்த போதுமான வசதியோ, நிதி ஆதாரமோ இல்லை என்கிற ஆணையத்தின் பதிலை நாடாளுமன்றக் குழு அரசிடம் தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
லட்சக்கணக்கான மக்கள் தெருவோரக் கடைகளையும் உணவகங்களையும் நாடத் தொடங்கிவிட்டிருக்கும் நிலையில், அந்த உணவகங்களில் பணியாற்றுவோருக்கு முறையான பயிற்சி அளிக்கப்படுவது அவசியம். பொது சுகாதாரத்தின் அடிப்படை உணவுப் பாதுகாப்பு என்பதை உள்ளாட்சி அமைப்புகளும், உணவுப் பாதுகாப்புத் தரநிர்ணய ஆணையமும் உணர்ந்து செயல்பட்டால் மட்டும் போதாது. உணவகங்களும் அவற்றை நாடும் பொதுமக்களும் அதை உணர்ந்தாக வேண்டும். தரநிர்ணயமும் சுத்தமும் இல்லாமல் தெருவோர உணவகங்கள் முறைப்படுத்தப்படாமல் வரைமுறையின்றிப் பெருகுமேயானால், காலரா, மலேரியா, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட தொற்று நோய்களை நாமே வருந்தி அழைப்பதாக ஆகிவிடும்.
அரசு விழாவில் கவர்னர், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., மோதல் : 'யூ கோ - யூ கோ' என இருவரும் காரசார வாக்குவாதம்

Added : அக் 02, 2018 22:01



புதுச்சேரி: புதுச்சேரியில் நடந்த அரசு விழாவில், ஒதுக்கப்பட்ட நேரம் கடந்தும் எதிர்க்கட்சி, எம்.எல்.ஏ. தொடர்ந்து பேசியதால், 'டென்ஷன்' ஆன கவர்னர் கிரண்பேடி, மைக்கை, 'ஆப்' செய்து, 'யூ கோ' என்றார். பதிலுக்கு, எம்.எல்.ஏ.,வும், 'யூ கோ' எனக் கூறியதால், பரபரப்பு ஏற்பட்டது.துாய்மை இந்தியா இயக்கத்தின் கீழ், புதுச்சேரியை திறந்தவெளி கழிப்பிடமற்ற மாநிலமாக அறிவிக்கும் விழா, கம்பன் கலையரங்கில் நேற்று நடந்தது.கவர்னர் கிரண்பேடி தலைமை வகித்தார். 

அமைச்சர்கள், நமச்சிவாயம், கமலக்கண்ணன், பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் சாமிநாதன், சங்கர் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். விழா அழைப்பிதழில், தொகுதியின், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அன்பழகன் பெயர் இடம்பெற்றிருந்தது. ஆனால், நிகழ்ச்சி நிரலில் அவரது பெயர் இல்லாததால், விழாவிற்கு வந்த போதே, அதிகாரிகளிடம் கடிந்து கொண்டார். அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் அதிகாரிகள் சமாதானம் செய்து, வாழ்த்துரை வழங்க அனுமதிப்பதாக கூறி, மேடைக்கு அழைத்து சென்றனர். விழா துவங்கியதும், 10 நிமிடம் மட்டும் என்ற நிபந்தனையுடன், 11:35 மணியளவில் அன்பழகன், வாழ்த்திப் பேச அழைக்கப்பட்டார்.

அவர் பேசியதாவது: 'ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்கும் விழாக்களில், நேரம் கருதி, எம்.எல்.ஏ., - எம்.பி.,க்கள் பேச வாய்ப்பு அளிப்பதில்லை. இவ்விழா, அந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல. எனவே, எம்.எல்.ஏ.,வை பேச அனுமதித்து, நிகழ்ச்சி நிரல் தயாரித்திருக்க வேண்டும்.எதிர்க்கட்சி, எம்.எல்.ஏ., என்பதால், என் தொகுதி புறக்கணிக்கப்படுகிறது. என் தொகுதியில், 900க்கும் மேற்பட்ட கூரை வீடுகள் உள்ளன. கழிப்பிடம் கட்ட விண்ணப்பித்தவர்களுக்கு அனுமதி தரவில்லை; துப்புரவு பணி படுமோசம்.இவ்வாறு குற்றச்சாட்டுகளை அடுக்கியபடி பேசினார்.கால அவகாசம் முடிந்தும், அவர் தொடர்ந்து பேசியதால், பேச்சை முடித்துக் கொள்ளுமாறு, அதிகாரி ஒருவர் மூலம், கவர்னர் தெரிவித்தார்.

 ஆனால், அன்பழகன் பேச்சை தொடர்ந்தார். சில நிமிடங்களில், மீண்டும், பேச்சை முடித்துக் கொள்ளுமாறு மற்றொரு அதிகாரி மூலம், கவர்னர் கூறினார். அந்த அதிகாரி, துண்டு சீட்டில் எழுதி கொடுத்ததையும், அன்பழகன் பொருட்படுத்தவில்லை.தொடர்ந்து, ''10 நிமிடங்கள் கடந்து விட்டது. நிகழ்ச்சியை முடிக்க வேண்டும். எனவே, பேச்சை முடித்துக் கொள்ளுங்கள்,'' என, கவர்னரே நேரடியாக கூறினார். இதையும் கண்டுகொள்ளாத அன்பழகன், ''இத்திட்டத்தை நிறைவேற்றும் உள்ளாட்சி ஊழியர்களுக்கு, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்தினீர்களா?''குப்பை அகற்றும் ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதா, அவர்களுக்கு மத்திய அரசின் உத்தரவுப்படி, குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படுகிறதா,'' என, சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

இதனால், ஆத்திரமடைந்த கவர்னர் கிரண்பேடி, அன்பழகன் அருகே சென்று, பேச்சு நிறுத்தும்படி கூறினார். ஆனால், அன்பழகன் பேச்சை தொடர்ந்ததால், மைக்கை 'ஆப்' செய்யும்படி கூறி, துண்டிக்கச் செய்தார். இதனால், ஆவேசமடைந்த அன்பழகன், கவர்னரை நோக்கி, ''நீங்கள் தவறாக நடந்து கொள்கிறீர்கள்,'' என்றார். கையெடுத்து கும்பிட்ட கவர்னர், ''தயவு செய்து கிளம்புங்கள்,'' என்றார். தொடர்ந்து, இருவருக்கும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட, டென்ஷனின் உச்சத்திற்கே சென்ற கவர்னர், ''யூ கோ'' என்றார்.''நான் போக மாட்டேன்; யூ கோ,'' என, பதிலுக்கு, கவர்னரை பார்த்து, அன்பழகன் கூறினார். இதனால், விழா மேடையில், பதற்றமான சூழல் ஏற்பட்டது. பின், அமைச்சர் நமச்சிவாயம், ராதாகிருஷ்ணன், எம்.பி., இருவரும், அன்பழகனை சமாதானம் செய்து, அனுப்பி வைத்தனர்.

சபாநாயகரிடம் புகார்

விழாவில் இருந்து வெளியேறிய அன்பழகன், சபாநாயகர் வைத்திலிங்கத்தை அவரது வீட்டில் சந்தித்து, 'எம்.எல்.ஏ.,வின் உரிமையை பறிக்கும் வகையில் கவர்னர் நடந்து கொண்டார்' என புகார் தெரிவித்தார்.


நிருபர்களிடம் அன்பழகன் கூறுகையில், '

'அரசு விழாவில், எம்.எல்.ஏ.,வை வெளியேறுமாறு கூற கவர்னருக்கு என்ன அதிகாரம் உள்ளது. ஆளும் அரசின் தவறுகளை சுட்டிக்காட்டும் கடமையும், பொறுப்பும் எம்.எல்.ஏ.,க்களுக்கு உண்டு. கவர்னர் இந்த மாநிலத்தின் ராணி இல்லை. கட்சி தலைமையிடம் பேசி, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வேன்,'' என்றார்.

கவர்னர் விளக்கம்டுவிட்டரில், கவர்னர் கிரண்பேடி 

விளக்கம்:அன்பழகனுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் கடந்து பேசியதால், முடித்துக் கொள்ளும்படி, விழா தலைமை பொறுப்பில் இருந்த நானும், அமைச்சரும் அறிவுறுத்தினோம்.ஆனால், அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.அதையடுத்து, விழாவை குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க வேண்டும் என, நானே நேரடியாக சென்று கூறினேன். அவர் ஏற்றுக் கொள்வதாக தெரியாததால், மைக்கை, 'ஆப்' செய்யுமாறு கூறினேன்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
'ஜாக்டோ --- ஜியோ' நாளை போராட்டம் : பள்ளிகளில் வகுப்புகள் பாதிக்கும் அபாயம்

Added : அக் 02, 2018 22:15

காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து, இன்று பள்ளிகள் திறக்கும் நிலையில், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள், நாளை விடுப்பு எடுக்கும் போராட்டத்தை அறிவித்து உள்ளனர். இதனால், அரசு அலுவலகங்களில் பணிகளும், பள்ளிகளில் வகுப்புகளும் பாதிக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

விடுப்பு : அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ'வின் கூட்டம், செப்., 16ல், சேலத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள், நாளை தற்செயல் விடுப்பு எடுக்கின்றனர். அதன் பின், வரும், 13ல், சேலத்தில், வேலைநிறுத்த ஆயத்த மாநாடு நடத்த உள்ளனர்.இதன் பின்னும், அரசு தரப்பில் பேச்சு நடத்தாவிட்டால், நவ., 27 முதல், கோரிக்கைகள் நிறைவேறும் வரை, காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து, ஜாக்டோ -- ஜியோ உயர்மட்ட குழு உறுப்பினர், பேட்ரிக் ரைமண்ட் கூறியதாவது:அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஆறாவது ஊதிய குழு பரிந்துரைப்படி வழங்க வேண்டிய, 21 மாத ஊதிய நிலுவை தொகையை, தாமதமின்றி வழங்க வேண்டும்.

மதிப்பூதியம் : ஊராட்சி செயலர்கள், ஊர்ப்புற நுாலகர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள், இடைநிலை ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு, வரையறுக்கப்பட்ட ஊதிய முறைகளை அமல்படுத்த வேண்டும். அவர்களுக்கான மதிப்பூதியம், தொகுப்பூதியம் மற்றும் சிறப்பு ஊதிய முறைகளை, நிரந்தர காலமுறை ஊதியமாக, அரசு அறிவிக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடர் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.ஜாக்டோ - ஜியோ போராட்டத்தால், நாளை அரசு அலுவலக பணிகளும், அரசு பள்ளிகளில் வகுப்புகளும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. பள்ளிகளை பொறுத்தவரை, பகுதி நேர ஆசிரியர்களை வரவழைத்து, வகுப்புகளை நடத்த, தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

'டின் பீர்' குடித்த எலிகள்: பீஹாரில் அதிர்ச்சி

Added : அக் 02, 2018 23:14 |





பாட்னா : பறிமுதல் செய்து வைத்து இருந்த, 11 ஆயிரம் பீர் டின்களை, எலிகள் கடித்து, அவற்றில் இருந்த பீரை குடித்து விட்டதாக, நீதிமன்றத்தில் போலீசார் கூறியிருப்பது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீஹார் மாநிலத்தில், மதுவிலக்கு அமலில் உள்ளது. இதனால், மாநிலம் முழுவதும் மதுவிலக்கு போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். பல இடங்களில் பெட்டி, பெட்டியாக மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன.

பறிமுதல் செய்யப்படும் மது பாட்டில் பெட்டிகளை, வழக்கு விசாரணை முடியும் வரை பாதுகாக்க வேண்டியது போலீசின் பொறுப்பு. அதனால், அவற்றை போலீஸ் ஸ்டேஷன்களில் பாதுகாப்பு அறையில் வைப்பர். கடந்த இரண்டு ஆண்டுகளாக, பல்வேறு இடங்களில், பறிமுதல் செய்யப்பட்ட, 11 ஆயிரத்து, 584 பீர் டின்கள் தொடர்பான வழக்கு, கைமுர் மாவட்ட நீதிமன்றத்தில், நேற்று முன் தினம் விசாரணைக்கு வந்தது.

அப்போது, பறிமுதல் செய்யப்பட்ட பீர் டின்கள் நீதிமன்றத்துக்கு எடுத்து வரப்பட்டன. அனைத்து டின்களும் துளையிடப்பட்டிருந்தன; அவற்றில் பீர் இல்லை. இதுபற்றி விளக்கம் அளித்த போலீசார், எலிகள், டின்களை ஓட்டை போட்டு, பீரை குடித்து விட்டதாக கூறினர். இதைக்கேட்டு, நீதிபதி குமாரி அன்னபூர்ணா அதிர்ச்சி அடைந்தார். அனைத்து டின்களுமே துளையிடப்பட்டு இருந்ததால், இதுபற்றி விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த, 2017ம் ஆண்டிலும், இதேபோல் ஒரு வழக்கில், மது பாட்டில் மூடியை எலிகள் கடித்து, மதுவை குடித்து விட்டதாக போலீசார் கூறினர். விசாரணையில் போலீஸ்காரர்களே மதுவை குடித்து விட்டு, எலிகள் மீது பழி போட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, இரண்டு போலீசார், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐந்து மாநில தேர்தல் திருவிழா

Added : அக் 02, 2018 23:03


மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் மாநிலங்களுடன், சமீபத்தில் கலைக்கப்பட்ட தெலுங்கானா சட்டசபைக்கும், இந்தாண்டு இறுதியில் தேர்தல் நடக்க உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில், அடுத்த ஆண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தலுக்கு முன்னோட்டமாக, இந்த மாநிலங்களுக்கான தேர்தல் பார்க்கப்படுகிறது. இதற்காக, அரசியல் கட்சிகள் பிரசார வியூகங்களை வகுத்து வருகின்றன; அதன் ஒரு தொகுப்பு:

அமித் ஷாவின் வியூகம் : ராஜஸ்தானில் ஆளும், பா.ஜ.,வைச் சேர்ந்த, முதல்வர் வசுந்தரா ராஜே மீது அதிருப்தி இருந்தாலும், கட்சியின் வெற்றிக்காக, கட்சி தலைவர் அமித் ஷா, பல்வேறு வியூகங் களை வகுத்து வருகிறார். இதற்காக, மாநிலத்தை, ஜெய்ப்பூர், ஜோத்பூர், சித்துார்கர்க் என, மூன்று மண்டலங்களாகப் பிரித்து, ஒவ்வொரு மண்டலத்துக்கும், இரண்டு மூத்த தலைவர்களை பொறுப்பாளர்களாக்கி உள்ளார். ஜாதியின் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ள இந்த மண்டலங்களுக்கு, அந்தந்த ஜாதியைச் சேர்ந்தவர்களை பொறுப்பாளராக்கி உள்ளார். இதைத்தவிர, கட்சி மிகவும் பலவீனமான நிலையில் உள்ள, 40 தொகுதி களை அடையாளம் பார்த்து, அங்கு தீவிர பிரசாரத்துக்கும் உத்தரவிட்டுள்ளார்.

'சபாஷ்' சரியான போட்டி : பா.ஜ.,வைச் சேர்ந்த, முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான அரசு அமைந்துள்ள மத்திய பிரதேசத்தில், ஆட்சியைப் பிடிக்க, காங்கிரஸ் மற் றும், பா.ஜ., இடையே கடும் போட்டி நடக்கிறது. மக்களை கவருவதற்காக இரு கட்சிகளும், பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன.கால்நடை பராமரிப்புக்காக பல்வேறு மாநிலங்களில் தனியாக அமைச்சர்கள் இருப்பர். ஆனால், முதல் முறையாக பசு பாதுகாப்புக்காக மட்டும், தனியாக அமைச்சரை நியமிக்கப் போவதாக, சவுகான் அறிவித்துள்ளார்.'மாநிலத்தில் உள்ள, 23 ஆயிரம் கிராம பஞ்சாயத்துகளிலும், பசு பாதுகாப்புக்காக கோசாலைகள் அமைக்கப்படும்' என, காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் ஏற்கனவே அறிவித்துள்ளார்.இந்த இரு கட்சிகளும் போட்டிப் போட்டு அறிவிப்புகளை வெளியிட்டு வருவதால், வாக்காளர்களுடன், தற்போது பசு மாடுகளும், தேர்தலுக்காக காத்திருக்கின்றன.

பீதியில் கட்சி தலைவர்கள்பா.ஜ.,வைச் சேர்ந்த, ரமண்சிங் முதல்வராக உள்ள சத்தீஸ்கரில், காங்கிரஸ் மற்றும், பா.ஜ., ஆகிய இரண்டு தேசியக் கட்சிகளும், ஒரே மனநிலையில் உள்ளன. தேர்தல் நடப்பதற்கும் என்னென்ன அரசியல் கூத்துகள் நடக்குமோ என, இரு கட்சிகளின் மாநிலத் தலைவர்களும் பீதியில் உள்ளனர்.காங்கிரஸ் தலைமை யிலான எதிர்க்கட்சிகள் கூட்டணியில் உள்ள, உ.பி., முன்னாள் முதல்வர் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் அஜித் ஜோகியின் ஜனதா காங்கிரஸ் கட்சியுடன் தனி கூட்டணியை அமைத்துள்ளது.தேசிய அளவில் ஒரே கூட்டணியில் இருந்தாலும், சத்தீஸ்கரில், மாயாவதி தனி கூட்டணி அமைத்துள்ளது, காங்கிரஸ் தலைவர்களுக்கு குழப்பத்தையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது. அதே நேரத்தில், இவர்கள் எப்போது வேண்டுமானாலும் மீண்டும் கூட்டணி அமைக்க வாய்ப்பு ஏற்பட்டுவிடுமோ என, ஆளும், பா.ஜ.,வைச் சேர்ந்தவர்கள் பீதியில் உள்ளனர்.காசு, பணம், துட்டு!ஓட்டுக்காக பணம் கொடுப்பது எல்லாமல் சகஜமாகிவிட்ட நிலையில், இதற்காக பேரம் பேசுவது என்பது தான், தற்போது அரசியலில் புது, 'டிரெண்டாக' உள்ளது. தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி இந்த புதிய டிரெண்டை உருவாக்கி, சர்ச்சையில் சிக்கியுள்ளது.எல்லாரெட்டி தொகுதிக்கான, கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ரவீந்தர் ரெட்டி, சமீபத்தில், ஒரு மகளிர் குழுவினருடன் ஆலோசனை நடத்தினார். 

'மகளிர் சுய உதவிக் குழுக்களின் கூட்டத்தைக் கூட்டுங்கள்; எனக்கு ஓட்டுப் போடுவீர்கள் என, ஒரு மனதாக தீர்மானங்கள் நிறைவேற்றுங்கள், உங்களுக்கு, ஐந்து லட்சம் ரூபாய் தருகிறேன்' என, அவர் பேரம் பேசிய வீடியோ, தற்போது தெலுங்கானாவில் வேகமாக பரவி வருகிறது.போட்டி திட்டம்!'ஆயுஷ்மான் பாரத்' எனப்படும், தேசிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி, சமீபத்தில் துவக்கி வைத்தார். ஏழை, எளிய மக்களுக்கு, மருத்துவ சிகிச்சை அளிக்கும் இந்த திட்டத்தை, காங்கிரஸ் ஆளும், வடகிழக்கு மாநிலமான மிசோரமும் செயல்படுத்துகிறது. இந்த திட்டத்தின்கீழ், அய்ஸ்வாலில், நகர்ப்புற சுகாதார மையமும் துவக்கி வைக்கப்பட்டது. அதே நேரத்தில், மாநில முதல்வர் லால் தன்ஹாவ்லா, மற்றொரு புதிய திட்டத்தை அறிவித்துள்ளார். மத்திய, மாநில அரசுகளின் திட்டத்தின்கீழ் வராத ஏழைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, முதல்வர் சிறப்பு மருத்துவ திட்டத்தை அறிவித்துள்ளார்.இதில், ஒருவருக்கு, இரண்டு லட்சம் ரூபாய் வரை பலன் கிடைக்கும் வகையில், 15 மருத்துவமனைகளுக்கு, 2.95 கோடி ரூபாயும் ஒதுக்கி வைத்துள்ளார். தேர்தல் வருவதால், இந்த போட்டி திட்டத்தை அவர் அறிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

சபரிமலையில் நெரிசலை சமாளிக்க கேரள அரசு திட்டம் ; நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்க முடிவு

Added : அக் 02, 2018 18:11 |



திருவனந்தபுரம்: பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவை அடுத்து சபரிமலையில் ஐயப்பன் தரிசனத்திற்கு நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்க முடிவு செய்திருப்பதாக கேரள அரசு வட்டாரம் தெரிவிக்கிறது.
சமீபத்திய சுப்ரீம் கோர்ட் உத்தரவை அடுத்து முதல்வர் பினராயிவிஜயன் தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.

கார்த்திகை மாதம் பிறந்ததும் நவம்பர் 16 முதல் சபரிமலையில் நடை திறக்கப்படுகிறது. அன்று முதல் 42 நாட்கள் பக்தர்கள் லட்சக்கணக்கில் குவிய துவங்குவர். இதிலும் பெண்களும் வருவார்கள் என்பதால் கூட்டம் மேலும் அதிகரிக்கக்கூடும். கடந்த விரத காலங்களில் நாள் ஒன்றுக்கு தற்போது 80 ஆயிரம் முதல் 90 ஆயிரம் பேர் வரை வருகை புரிந்துள்ளனர். வரும் நாட்களில் கூட்டம் அதிகரிக்கும் பட்சத்தில் நெரிசல் ஏற்பட கூடுதல் வாய்ப்பு உள்ளது. எனவே ஒரு லட்சம் பக்தர்களுக்கு மேல் தரிசனத்திற்கு அனுமதிக்க கூடாது என போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆன்லைன் மூலம் அனுமதி

மேலும் பெண்களுக்கென சன்னிதானத்தில் தனி வரிசை அமைப்பது இயலாத காரியமாக கருதப்படுகிறது. தனி வரிசை அமைக்கும் பட்சத்தில் உறவினர்கள் தனித்தனியாக பிரிவதுடன் காணாமல் போகும் சூழலும் ஏற்படும் என்று அதிகாரிகள் யோசனை தெரிவித்துள்ளனர்.மேலும் நாள் ஒன்றுக்கு தரிசனத்திற்கு வரும் பக்தர்களை கணக்கிட தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு ஆன்லைன் மூலம் அனுமதியை வழங்கவும் ஆலோசனை கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் பக்தர்கள் எண்ணிக்கையை அறிந்து கொள்ள முடியும். திருப்பதியில் ஆன்லைன் நடைமுறையால் பெரும் சவுகரியங்கள் இருப்பதாகவும், இதனை சபரிமலையில் பின்பற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் பெண்களுக்கான குளியலறை வசதிகள், பஸ்களில் தனி இடம் ஒதுக்கீடு, தனி, தனி டிக்கட் கவுன்டர்கள், பெண் காவலர்கள் மேலும் பெண் கண்டக்டர்கள் நியமிக்கவும் , நிலக்கல் பகுதியில் 10 ஆயிரம் பெண்கள் தங்கும் அளவிற்கு ஓய்வு அறைகளும் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
மாநில செய்திகள்

ஏ.சி. எந்திரத்தில் கியாஸ் கசிந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மூச்சுத்திணறி சாவு


சென்னையில் ஏ.சி. எந்திரத்தில் இருந்து கியாஸ் கசிந்ததால் மூச்சுத்திணறி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.

பதிவு: அக்டோபர் 03, 2018 04:45 AM

பூந்தமல்லி,

சென்னை கோயம்பேடு மெட்டுகுளம், வள்ளுவர் தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 33). தனியார் சிமெண்ட் கிடங்கில் மேற்பார்வையாளராக வேலை செய்து வந்தார். இவர் அரும்பாக்கத்தை சேர்ந்த கலையரசியை (28) காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் மகன் கார்த்திகேயன் (7). தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான்.

நேற்று முன்தினம் இரவு படுக்கை அறையில் ஏ.சி. எந்திரத்தை இயக்கி விட்டு 3 பேரும் தூங்கினர். நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் சரவணன் வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நேற்று விடுமுறை என்பதால் தூங்குகிறார்கள் என அருகில் வசிக்கும் அவர்களின் உறவினர்கள் நினைத்தனர்.

காலை 9 மணிக்கு பிறகும் கதவு திறக்கப்படவில்லை. அதே சமயம் ஜெனரேட்டர் ஓடும் சத்தம் கேட்டது. வீட்டில் இருந்து சிறிது கியாஸ் வாடையும் வந்தது. இதனால் கலையரசியை செல்போனில் தொடர்பு கொண்டனர். செல்போனை யாரும் எடுக்காததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு முன்பக்க அறையில் சரவணன் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். படுக்கையில் கலையரசியும், கார்த்திகேயனும் இறந்த நிலையில் கிடந்தனர்.

உடனே அவர்கள் வீட்டில் ஓடிக்கொண்டிருந்த ஜெனரேட்டர், ஏ.சி. எந்திரத்தை நிறுத்தினர். வீட்டில் உள்ள ஜன்னல் கதவுகளை திறந்து விட்டனர். பின்னர் 3 பேரின் உடல்களையும் வீட்டுக்கு வெளியே எடுத்து வந்து உறவினர்கள் தங்களது மடியில் வைத்து கதறி அழுதனர்.

இதுகுறித்து கோயம்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது உடனே உதவி கமிஷனர் ஜான் சுந்தர், இன்ஸ்பெக்டர் மாதேஸ்வரன் மற்றும் போலீசார் அங்கு வந்து 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

முதல்கட்ட விசாரணையில் கிடைத்த தகவல் குறித்து போலீசார் கூறியதாவது:-

கோயம்பேடு பகுதியில் நள்ளிரவு 3 முறை மின்சாரம் தடைபட்டு மீண்டும் வந்தது. மின்சாரம் தடைபட்டாலும் ஏ.சி. எந்திரம் இயங்க வீட்டின் உள்ளேயே ஜெனரேட்டரை இணைப்பு கொடுத்து சரவணன் வைத்துள்ளார். மின்சாரம் தடைபட்டு மீண்டும் வந்த போது அதிக மின் அழுத்தம் காரணமாக ஏ.சி. எந்திரத்தில் இருந்து கியாஸ் கசிவு ஏற்பட்டுள்ளது. ஆழ்ந்த தூக்கத்தில் இருந்ததால் கலையரசி, கார்த்திகேயன் ஆகியோர் படுக்கையிலேயே மூச்சுத்திணறி இறந்தனர்.

படுக்கை அறையில் இருந்து வெளியே வந்து வீட்டின் கதவை திறக்க சரவணன் முயற்சி செய்துள்ளார். எனினும் மூச்சுத்திணறல் அதிகம் ஏற்படவே சரவணன் முன் அறையில் மயங்கி விழுந்து இறந்துள்ளார். ஏ.சி. எந்திரத்தை மெக்கானிக் உதவியுடன் கழற்றி சோதனை செய்து வருகிறோம். வீட்டின் வெளியே வைக்க வேண்டிய ஜெனரேட்டரை வீட்டுக்குள் சரவணன் வைத்துள்ளார்.

அனைத்து கதவுகளும், ஜன்னல்களும் மூடப்பட்டதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு 3 பேரும் இறந்து விட்டனர். இருப்பினும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும். இவ்வாறு போலீசார் கூறினர்.

இதுகுறித்து உறவினர்கள் கூறியதாவது:- சரவணன் வேலை முடிந்து இரவு வீட்டுக்கு வந்தால் காலையில் தாமதமாக தான் எழுந்திருப்பார். காலையில் அவரை எழுப்பினால் நிம்மதியாக தூங்க விட மாட்டீர்களா என திட்டுவார். இதன் காரணமாகவே நாங்கள் சிறிது அலட்சியமாக இருந்து விட்டோம். கார்த்திகேயனுக்கு 4-ந்தேதி பிறந்தநாள். இதற்காக அவனுக்கு புத்தாடைகளை வாங்கி வைத்திருந்தனர்.

சரவணன் அவரது மனைவி, மகன் மீது மிகுந்த பாசத்துடன் இருந்தார். உறவினர் வீடு மற்றும் நிகழ்ச்சிகளுக்கு மனைவி, மகன் இல்லாமல் செல்ல மாட்டார். வாழ்க்கையில் மட்டுமல்ல, சாவிலும் 3 பேரும் பிரியாமல் இந்த உலகத்தை விட்டே சென்று விட்டனர். இவ்வாறு உறவினர்கள் கண்ணீருடன் கூறினர்.

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...