Wednesday, February 13, 2019


சின்னத்தம்பி சொல்லும் செய்தி!
By ஆசிரியர் | Published on : 12th February 2019 01:36 AM

தமிழக விவசாயிகள் சங்கத்தின் வெறுப்பையும் ஒட்டுமொத்த தமிழக மக்களின் பேரன்பையும் பெற்றிருக்கிறது சின்னத்தம்பி என்கிற 25 வயது ஆண் யானை. இந்த யானையைப் பழக்கப்படுத்தி கும்கி யானையாக்க முடியாது என்று யானைகள் குறித்த அறிஞர் அஜய் தேசாய் தெரிவித்திருக்கும் நிலையில், தமிழக வனத் துறை அதிகாரிகளின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை ஒட்டுமொத்த இந்தியாவே எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.

கடந்த ஏழு ஆண்டுகளாகவே, சின்னத்தம்பி என்கிற இந்த யானை கோவை மாவட்டம் ஆனைகட்டி, மாங்கரை பகுதிகளில் நடமாடி வருகிறது. ஆரம்பத்தில் பெரியதம்பி என்று ஊர் மக்களால் பெயரிடப்பட்ட யானையுடன், சின்னத்தம்பி வனப் பகுதியிலிருந்து ஊருக்குள் வருவதும், இரண்டு யானைகளுமாகப் பயிர்களைச் சேதப்படுத்துவதும் வழக்கமாகி விட்டிருந்தது. ஒருபுறம் பயிர்களைச் சேதப்படுத்தி விவசாயிகளின் வெறுப்புக்கு உள்ளானாலும், இன்னொருபுறம் ஊருக்குள் நுழைந்து பொதுமக்களின் அன்பையும், ஆதரவையும் இந்த யானைகள் பெற்றுக்கொண்டன என்பதுதான் வியப்புக்குரிய திருப்பம்.
இரண்டு யானைகளும் ஆனைகட்டி சாலைப் பகுதியில் சுற்றிவரும்போது, பொதுமக்கள் அவற்றுக்கு வாழைப் பழம் உள்ளிட்ட பொருள்களை வழங்குவது வழக்கமானது. 

பெரிய தம்பியும், சின்னத்தம்பியும் அந்தப் பகுதி மக்கள் யாரையும் துன்புறுத்தியதே இல்லை. சாலை வழியாகச் செல்லும் வாகனங்களுக்கு வழிவிட்டு ஒதுங்கி நிற்பது வரை சாதுவான மிருகங்களாகவே காட்சியளித்தன. ஆனால், பயிர்களை நாசம் செய்வதையும் வழக்கமாக்கிக் கொண்டிருந்ததுதான், விவசாயிகள் இந்த அளவுக்கு வெறுப்பும் கோபமும் அடைந்திருப்பதற்குக் காரணம்.
 
ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால், பெரியதம்பி யானை இறந்துவிட்டது. சின்னத்தம்பிக்குப் புதிய துணையாக விநாயகன் என்கிற யானை அமைந்தது. பெண் யானை ஒன்றுடனும் குட்டிகளுடனும்கூட சின்னத்தம்பியை ஊர் மக்கள் ஒரு சில முறை பார்த்திருக்கிறார்கள். வனத் துறையினரால் விநாயகன் யானை பிடிக்கப்பட்டு, கடந்த டிசம்பர் மாதம் முதுமலை புலிகள் சரணாலயத்தில் கொண்டுவிடப்பட்டது. சின்னத்தம்பியை வனத்துக்குள் அனுப்பும் முயற்சி வெற்றி பெறவில்லை.
இப்போது சின்னத்தம்பியின் நடமாட்டத்தை வனத் துறையினர் கண்காணித்து வருகின்றனர். அதை கும்கியாக பழக்கப்படுத்த முடியாது என்று அஜய் தேசாய் கூறியிருக்கும் நிலையில், சின்னத்தம்பியை என்ன செய்வது என்கிற குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிறது வனத் துறை. வனத் துறையினர் மீண்டும் விரட்டிவிட்டால், காட்டில் திரியும் ஏனைய யானைகளையும் அழைத்துக் கொண்டு அது மீண்டும் ஊருக்குள் நுழையாது என்பதற்கு என்ன உத்தரவாதம் என்று கேட்கிறார்கள், பயிர் நாசத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் விவசாயிகள்.

யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையேயான போராட்டம் நாளுக்கு நாள் வலுத்துக் கொண்டு வருகிறது. தமிழகத்தில் 2016-இல் 98 யானைகளும், 2017-இல் 124 யானைகளும், 2018-இல் 84 யானைகளும் கொல்லப்பட்டிருக்கின்றன. கடந்த மூன்று ஆண்டுகளில் மிருகங்களுக்கும் மனிதர்களுக்கும் இடையேயான போராட்டத்தில் 307 யானைகள், 126 மனிதர்கள் என உயிரிழப்பு ஏற்பட்டிருக்கிறது. இதற்கு மிக முக்கியமான காரணம், யானைகளின் வாழ்வாதாரமான வனங்கள் அழிக்கப்படுவதும், அவற்றின் வழித்தடங்கள் மனிதர்களால் ஆக்கிரமிக்கப்படுவதும்தான்.
சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு நிறுவனத்தின் ஆய்வுப்படி, ஆசிய யானைகளின் எண்ணிக்கை 41,410 முதல் 52,345 வரை என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதில் இந்தியாவில் மட்டும் 60% ஆசிய யானைகள் காணப்படுகின்றன. 2017-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, தென்னிந்தியாவில்தான் மிக அதிகமாக யானைகள் காணப்படுகின்றன. தென்னிந்தியாவில் 11,960, வடகிழக்கு இந்தியாவில் 10,139, மத்திய கிழக்குப் பகுதியில் 3, 128, வட இந்தியாவில் 2,085 யானைகள் இருப்பதாக அந்தக் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

தென்னிந்தியாவில் யானை வழித்தடங்களின் எண்ணிக்கை குறைவு. தமிழகத்தில் உள்ள மொத்த வழித்தடங்கள் 17 மட்டுமே. வட மாநிலங்களில் 150 சதுர கி.மீ.க்கு ஒரு வழித்தடம் காணப்படுவதாலும், எல்லா வழித்தடங்களும் விளைநிலங்கள் வழியாக இருப்பதாலும், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் மனிதர்களுக்கும் யானைகளுக்கும் இடையேயான மோதல்கள் தினசரி நிகழ்வாகவே மாறியிருக்கின்றன. தமிழகத்தின் நிலைமை அந்த அளவுக்கு மோசமில்லை என்றுதான் கூறவேண்டும்.
தென்னிந்தியாவில்தான் மிகச் சிறந்த யானை சரணாலயங்கள் உள்ளன. பந்திப்பூர், நாகர்ஹோலே, முதுமலை, வயநாடு, பிலிகிரி ரங்கசுவாமி கோவில், காவேரி, பிரம்மகிரி உள்ளிட்ட யானை சரணாலயங்களில் யானைகளுக்கான எல்லாவித உணவும் கிடைக்கிறது. யானைகள் தொடர்ந்து இடம் மாறிக்கொண்டே இருக்கும் இயல்புடையவை. தங்களது உணவுக்காகவும், தண்ணீருக்காகவும் அவை பயணிக்கும் வழித்தடங்கள் அடைக்கப்படும்போதும், ஆக்கிரமிக்கப்படும்போதும்தான் மனிதர்களுடன் மோதலில் ஈடுபடுகின்றன.

கோவை மாவட்டத்தில் மட்டும் கடந்த ஏழு ஆண்டுகளில் 77 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்; 61 பேர் காயமடைந்திருக்கிறார்கள்; 2,421 முறை விவசாய நிலங்களில் யானைகள் நுழைந்து குறைந்தது 261 முறை பயிர்கள் நாசமடைந்துள்ளன.

யானைகளின் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, வனப் பகுதிகள் அழிக்கப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்தாத வரை, காடுகளிலிருந்து யானைகள் ஊருக்குள் வருவதும், பயிர்களை நாசம் செய்வதும் அதிகரிக்குமே தவிர குறையாது. இதுதான் சின்னத்தம்பி நமக்கு உணர்த்தும் பாடம்!
குட்டு!

கோர்ட்டை அவமதித்த சி.பி.ஐ., அதிகாரிக்கு..
நீதிமன்ற அறையின் மூலையில் அமர உத்தரவு

புதுடில்லி: விசாரணை அதிகாரியை இடமாற்றம் செய்ததால், நீதிமன்ற அவமதிப்பு குற்றம் இழைத்ததாக கூறி, சி.பி.ஐ.,யின் முன்னாள் இடைக்கால இயக்குனர் நாகேஸ்வர ராவுக்கு, உச்ச நீதிமன்றம், 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. மேலும், ஒரு நாள் முழுவதும், நீதிமன்ற அறையின் மூலையில் அமரும்படியும், நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பீஹார் மாநிலம், முசாபர்பூரில் உள்ள பாதுகாப்பு இல்லங்களில் நடந்த பாலியல் பலாத்கார சம்பவங்களை விசாரித்த அதிகாரி, ஏ.கே.சர்மாவை, சி.பி.ஐ., இடைக்கால இயக்குன ராக நியமிக்கப்பட்டிருந்த, நாகேஸ்வர ராவ், இடமாற்றம் செய்தார்.

நடவடிக்கை:

'அவரை இடமாற்றம் செய்யக்கூடாது' என, உச்ச நீதிமன்றம் பிறப்பித்திருந்த உத்தரவை மீறி, இந்த நடவடிக்கையை, ராவ் எடுத்தார். அவரது நடவடிக்கைக்கு ஆதரவாக, சி.பி.ஐ., சட்ட ஆலோசகர், பாஸுரன் கருத்து தெரிவித்திருந்தார். இதை எதிர்த்து தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, உச்ச நீதிமன்றத்தில், தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.

சி.பி.ஐ., இயக்குனர் சார்பில் ஆஜரான, அட்டர்னி ஜெனரல், கே.கே.வேணுகோபால், ''இந்த வழக்கில், நாகேஸ்வர ராவ், பாஸுரன் ஆகியோர், நீதிமன்றத்திடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ளனர்; அதை ஏற்க வேண்டும்,'' என்றார்.

அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், நீதிமன்றத்தின் மூலையில் உள்ள இருக்கையில், ஒரு நாள் முழுவதும் அமரும்படி, நாகேஸ்வர ராவுக்கும், பாஸுரனுக்கும் உத்தரவிட்டனர். மேலும், 'நாகேஸ்வர ராவ், பாஸுரன் ஆகியோர், தலா, 1 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்' என்றும், நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

பின், நீதிபதிகள் கூறியதாவது: நாகேஸ்வர ராவ் செய்தது, அப்பட்டமான நீதிமன்ற அவமதிப்பு செயல். ஏ.கே.சர்மாவை மாற்றுவதற்கான உத்தரவை, ஒரு நாள் கழித்து பிறப்பித்திருந்தால், வானம் இடிந்து, தரையில் விழுந்து விடுமா...

தண்டனை:

இந்த நீதிமன்றத்துக்கு என, கண்ணியம் உள்ளது; அது, காக்கப்பட வேண்டும். நாகேஸ்வர ராவ் செய்த குற்றத்துக்காக, அவரை, 30 நாள் சிறையில் அடைக்க உத்தரவிட்டிருக்க முடியும். ஆனால், நாங்கள் அதை விரும்பவில்லை. தவறை உணர வேண்டும் என்பதற்காக, இந்த தண்டனை தரப்பட்டுள்ளது. இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

நீதிபதிகளின் உத்தரவை அடுத்து, நீதிமன்ற அறையின் மூலையில் இருந்த இருக்கைகளில், நாகேஸ்வர ராவும், பாஸுரனும் அமர்ந்தனர். ஒரு நாள் முழுவதும் அந்த அறையில்,

பல்வேறு வழக்குகளின் விசாரணைகள் நடந்தன. மாலையில் விசாரணைகள் முடியும் வரை, அங்கேயே அமர்ந்திருந்த அவர்கள், தண்டனை நேரம் முடிந்த பின், சோர்ந்த முகத்துடன் அங்கிருந்து வெளியேறினர்.

பொது நலன் மனு; ஐகோர்ட்டில் தள்ளுபடி:

சி.பி.ஐ., இயக்குனராக இருந்த அலோக் வர்மா, சிறப்பு இயக்குனராக இருந்த ராகேஷ் அஸ்தானா இடையே, கடந்தாண்டு இறுதியில் ஏற்பட்ட மோதலை அடுத்து, இருவரையும் கட்டாய விடுப்பில் அனுப்பிய மத்திய அரசு, இடைக்கால இயக்குனராக, நாகேஸ்வர ராவை நியமித்தது. பணியில் சேர்ந்ததும், சி.பி.ஐ., அதிகாரிகள் பலரை, நாகேஸ்வர ராவ் அதிரடியாக இடமாற்றம் செய்து உத்தரவிட்டார். தற்போது, சி.பி.ஐ.,க்கு, முழு நேர இயக்குனராக, ரிஷி குமார் சுக்லா நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், நாகேஸ்வர ராவ் இடைக்கால இயக்குனராக இருந்தபோது பிறப்பித்த இடமாற்ற உத்தரவுகளின் தற்போதைய நிலை குறித்த தகவல்களை தெரிவிக்கக் கோரி, டில்லி உயர் நீதிமன்றத்தில், உசேன் முயீன் பரூக் என்பவர், பொது நலன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை பரிசீலித்த நீதிமன்றம், 'இந்த மனுவில் பொது நலன் எதுவும் கிடையாது. இடமாற்றம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நீதிமன்றத்தை அணுகலாம்' எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்தது.

அண்ணா பல்கலை ஆராய்ச்சி நிதியில் மோசடி? : விசாரணை நடத்த துணைவேந்தர் சுரப்பா உத்தரவு

Added : பிப் 13, 2019 00:43


சென்னை, அண்ணா பல்கலை கழக துணைவேந்தராக, சுரப்பா பதவி ஏற்றது முதல், பல அதிரடி சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறார். பல முறைகேடுகளை கண்டுபிடித்து, பல்கலை கழக ஊழியர்கள் பலர் மீது, அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளார். ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழங்கப்படும் நிதியிலும், மோசடி நடந்ததாக வந்த புகார்களை தொடர்ந்து, அது குறித்து விசாரிக்கவும், சுரப்பா உத்தரவிட்டுள்ளார். 

தமிழக கவர்னராக, பன்வாரிலால் புரோஹித் பதவி ஏற்றதும், தமிழக பல்கலை கழகங்களை சீர்திருத்த முடிவு செய்தார். தகுதியான நபர்களை, பல்கலை கழக துணை வேந்தர்களாக தேர்வு செய்ய துவங்கினார்.
ஒரு காலத்தில், புகழ் பெற்று விளங்கிய, சென்னை அண்ணா பல்கலை கழகம், 15 ஆண்டுகளாக, மிக மோசமான நிலைக்கு சென்றது. காரணம், பல்கலை கழக துணை வேந்தர்கள் பலர், அரசியல், பண பல செல்வாக்குடன் நியமிக்கப்பட்டனர். அவர்களால் ஏற்பட்ட அவப்பெயரை போக்கவும், பல்கலை கழகத்தின் தரத்தை உயர்த்தவும், துணை வேந்தராக சுரப்பா நியமிக்கப்பட்டார். 

அவர் பதவி ஏற்றது முதல், பல அதிரடி சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். பணம் வாங்கி, மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கியது உட்பட, பல முறைகேடுகள், ஊழல்கள் வெளிச்சத்துக்கு வந்தன. பல பேராசிரியர்கள் மீது, நடவடிக்கை பாய்ந்துள்ளது. அந்த வகையில், ஆராய்ச்சிக்கு ஒதுக்கப்பட்ட பணத்தில், முறைகேடு நடந்த மோசடியும் அம்பலமாகியுள்ளது. 

இது குறித்து கூறப்படுவதாவது: 

'அண்ணா பல்கலை கழகத்தில், ஆளில்லா வான்வெளி வாகனம் வடிவமைக்கும் திட்டத்திற்காக, 20 கோடி ரூபாய் வழங்கப்படும்' என, 2015ல், சட்டசபையில், 110 விதியின் கீழ், அப்போதைய முதல்வர், ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி, நிதியும் ஒதுக்கப்பட்டது. 

அந்த நிதியில், அண்ணா பல்கலை வான்வெளி ஆராய்ச்சி மையம் சார்பில், பல வகையான, ஆளில்லா விமானங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. அவை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளுக்கும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், போக்குவரத்து இடையூறுகளை கண்காணிக்கவும், காவல் துறையால் பயன்-படுத்தப்படுகின்றன. வெள்ளத்தடுப்பு பணிகளுக்காக, வருவாய் துறையாலும் பயன்படுத்தப்படுகிறது.
இந்த திட்டத்திற்காக வாங்கப்பட்ட பல உபகரணங்கள், ஆராய்ச்சி மாணவர்கள் தாங்களாகவே கண்டுபிடித்ததாக கூறியுள்ளது குறித்து, துணை வேந்தருக்கு அடுக்கடுக்கான புகார்கள் சென்றன. 'வேர்ல்ட் ரிக்கார்ட் நோவோ ஜெனரேட்டர்' என்ற ஆளில்லா விமானத்தை, அண்ணா பல்கலையின், எம்.ஐ.டி., மாணவர்கள் கண்டு பிடித்ததாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

ஆனால், அந்த ஆளில்லா விமானம், சீனாவில் தயாரானது. ஆன்லைனில் விற்பனை செய்யப்படுகிறது. இது, சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், பல்கலை கழகத்திற்கு, பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழக காவல்துறைக்கு போக்குவரத்தை கட்டுப்படுத்தவும், பெரும் கூட்டம் கூடும் இடங்களில் மக்களை கண்காணிக்கவும், 'ட்ரோன்' எனப்படும், ஆளில்லா குட்டி விமானங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ட்ரோன்களையும் பொருத்த, 3 லட்சம் ரூபாய் தான் செலவாகும் என, கூறப்படுகிறது. ஆனால், 30 லட்சம் ரூபாய் அளவிற்கு கணக்கு காட்டப்பட்டுள்ளது. இந்த உபகரணங்கள் பற்றிய விலை உட்பட, முழு விபரங்கள் இணையதளங்களில் உள்ளன. 

இணைய தளங்களில் புகுந்து, இந்த உபகரணங்கள் பற்றிய விபரங்களை எடுத்து, ஆதாரத்துடன், புகார்களை கவர்னர் அலுவலகத்திற்கும், துணை வேந்தருக்கும், எம்.ஐ.டி.,யில் படிக்கும் மாணவர்கள் அனுப்பினர். மறைந்த ஜனாதிபதி அப்துல் கலாம் படித்து பெருமை சேர்த்த அண்ணா பல்கலை கழகத்தின், எம்.ஐ.டி., வளாகத்திற்கு களங்கம் ஏற்படாமல் தடுக்க, உடனடி நடவடிக்கை எடுக்கும்படி, அவர்கள் புகார்களில் கூறியிருந்தனர்.
இது குறித்து, முழு விசாரணை நடத்த துணைவேந்தர், சுரப்பா உத்தரவிட்டுள்ளார். இந்த விசாரணையின் முடிவில், மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என, தெரிகிறது.
- நமது நிருபர் -

தாசில்தார் பாலியல் தொல்லை : மாற்றுத்திறன் பெண் போராட்டம்

Added : பிப் 12, 2019 21:49 |

திருநெல்வேலி: பாலியல் தொந்தரவு அளித்த தாசில்தார் மீது நடவடிக்கை எடுத்து, தனக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும் என, மாற்றுத்திறனாளி பெண் கூறினார்.திருநெல்வேலி, கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள, பேரிடர் மேலாண்மை பிரிவில், தற்காலிக ஊழியராக இருந்தவர் சரண்யா, 32. மாற்றுத்திறனாளியான இவருக்கு, அங்கு தாசில்தாராக உள்ள திருப்பதி, 57, என்பவர், பாலியல் தொந்தரவு அளித்ததாக சர்ச்சை எழுந்தது.விசாரித்த மாவட்ட நிர்வாகம், தாசில்தார் மீது புகார் கூறிய சரண்யாவை, நான்கு மாதங்களுக்கு முன், பணிநீக்கம் செய்தது. தொடர்ந்து, சரண்யா, தாசில்தார் குறித்து, கலெக்டர் ஷில்பாவிடம் புகார் தெரிவித்தார். அதன்பின்னும், தாசில்தார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதையடுத்து சரண்யா, நேற்று, நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில், அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்க நிர்வாகிகள் ஆதரவுடன், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்.சரண்யா கூறுகையில், ''பாலியல் தொந்தரவு தந்த தாசில்தார், திருப்பதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.''கலெக்டர் அறிவுரைப்படி, போலீசில் புகார் அளித்தேன். ஆனால், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. என்னை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும். அதுவரை என் போராட்டம் தொடரும்,'' என்றார்.

அண்ணாமலை பல்கலையில் நியமனங்களை ரத்து கோரி மனு : ரத்து செய்யக்கோரி கவர்னருக்கு புகார் மனு


Added : பிப் 12, 2019 23:43

'அண்ணாமலை பல்கலையில், 13 ஆயிரம் பேர் முறைகேடாக நியமிக்கப்பட்டது குறித்து, விசாரணை நடத்தப்பட வேண்டும்' என, கவர்னர் பன்வாரிலால் புரோஹித்துக்கு, கல்லுாரி ஆசிரியர்கள் அமைப்பு புகார் மனு அனுப்பியுள்ளது.சிதம்பரத்தில் உள்ள, அண்ணாமலை பல்கலையை, ஐந்தாண்டுகளுக்கு முன் அரசே ஏற்றது. இங்கு கூடுதலாக இருந்த, 370 பேராசிரியர்கள், மூன்றாண்டுகளுக்கு முன், அரசு கலை கல்லுாரிகளுக்கு, ஒப்பந்த அடிப்படையில் மாற்றப்பட்டனர்.அவர்களின் மூன்றாண்டு பதவி காலம் முடியும் நிலையில், மீண்டும், மூன்றாண்டுகளுக்கு மாற்று பணியை நீட்டித்து, கல்லுாரி கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு, முதுநிலை மற்றும், பிஎச்.டி., முடித்த பட்டதாரிகள் அமைப்பான, 'நெட், செட்' சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.இந்த அமைப்பின் தலைவர், தங்கமுனியாண்டி மற்றும் பொது செயலர், நாகராஜன் ஆகியோர், கவர்னருக்கு அனுப்பியுள்ள புகார் மனு:பல்கலை மானிய குழு மற்றும், தமிழக உயர்கல்வி துறை விதிகளின்படி, பேராசிரியர் பணிக்கு, ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் தகுதி பெற்றுள்ளனர். நெட், செட் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றும், ஆராய்ச்சி படிப்பான, பிஎச்.டி., முடித்தும், ஏராளமானோர் வேலைக்கு காத்திருக்கின்றனர். இவர்களில் பலர், அரசு கலை கல்லுாரிகளில், கவுரவ விரிவுரையாளர்களாக, மிக குறைந்த சம்பளத்தில், பணியாற்றுகின்றனர்.இந்நிலையில், அண்ணாமலை பல்கலையில், விதிகளை மீறியும், தகுதி பார்க்காமலும் நியமிக்கப்பட்ட பேராசிரியர்களை, தமிழக உயர்கல்வி துறை, அரசு கல்லுாரிகளுக்கு மாற்றுகிறது. இந்த நடவடிக்கை, உயர்கல்வி தரத்தை கடுமையாக பாதிக்கும். மேலும், விதிகளை மீறி, 13 ஆயிரம் பேர், அண்ணாமலை பல்கலையில் நியமிக்கப்பட்டு உள்ளனர்.இதுகுறித்து, அரசு விசாரணை நடத்தாமல் உள்ளது. எனவே, அரசு கலை கல்லுாரிகளில், அண்ணாமலை பல்கலை பேராசிரியர்களுக்கு பணி வழங்குவதை, உடனே ரத்து செய்ய வேண்டும். விதிமீறிய நியமனங்கள் குறித்து, விசாரணை நடத்தி, 13 ஆயிரம் நியமனங்களை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

- நமது நிருபர் -
ரூ.2000,இனாம்,நிச்சயம்,அரசு,முடிவு
சென்னை: தமிழகத்தில் வறுமை கோட்டிற்கு கீழுள்ள தொழிலாளர்களுக்கு இனாமாக அரசு அறிவித்துள்ள 2000 ரூபாய் சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட உள்ளது. இம்மாத இறுதிக்குள் அந்தத் தொகை 60 லட்சம் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட உள்ளதாக சட்டசபையில் முதல்வர் பழனிசாமி நேற்று உறுதி அளித்துள்ளார்.

சட்டசபையில் நேற்று பட்ஜெட் மீது நடந்த விவாதம்:

தி.மு.க. - பொன்முடி: 'தேர்தல் கண்ணோட்டம் இல்லாமல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது' என்று பாராட்டி ஒரு நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டு உள்ளது என்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் படித்து காட்டினார். நடுநிலை நாளிதழான 'தினமலர்' பத்திரிகையில் 'பாழ்' என்று தலைப்பிட்டு ஒரு செய்தியை முதல் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

'ஓட்டு வங்கியை உயர்த்துவதற்காக 2000 ரூபாய் உதவித்தொகையை அறிவித்துள்ளனர்' என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. பட்ஜெட் தாக்கலுக்கு பின் கருத்து தெரிவித்த தி.மு.க. தலைவர் ஸ்டாலின் 'இது நிழல் பட்ஜெட்' என்றார். அப்போது அதற்கு அர்த்தம் புரியவில்லை. தற்போது தொழிலாளர்களுக்கு 2000 ரூபாய் உதவித்தொகையை முதல்வர் அறிவித்த பின் தான் நிழல் பட்ஜெட்டிற்கு அர்த்தம் புரிகிறது.




துணை முதல்வர் பன்னீர்செல்வம்: நாங்கள் 2011 முதல் நிஜ பட்ஜெட்டை மட்டுமே தாக்கல் செய்து வருகிறோம். மக்கள் ஆதரவை முழுமையாக பெற்றுள்ளோம். அதனால் தான் நாங்கள் இந்த இடத்தில் அமர்ந்து இருக்கிறோம். நீங்கள் எதிர்க்கட்சியாக அமர்ந்து இருக்கிறீர்கள்.

முதல்வர்: உழைக்கும் தொழிலாளர்களுக்கு 2000 ரூபாய் உதவித்தொகை அறிவித்தது சரியா, இல்லையா என்று மட்டுமே பொன்முடி கூற வேண்டும். ஏழை தொழிலாளர்கள் காக்கப்பட வேண்டும். பருவ மழை பொய்த்து விட்டதால் விவசாய தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 'கஜா' புயலால் பாதிக்கப்பட்டவர்கள் போராட்டங்களை நடத்துகின்றனர்.

இதையெல்லாம் ஆராய்ந்து தான் 2000 ரூபாய் உதவித்தொகையை அரசு அறிவித்துள்ளது.


தேர்தலை மனதில் வைத்து அறிவிக்கவில்லை. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் அனைவருக்கும் இந்த உதவித்தொகை கிடைக்கும். இதில் அந்த கட்சி இந்த கட்சி என்று பார்க்கவில்லை.

பொன்முடி: இரண்டு நாட்களுக்கு முன் நிஜ பட்ஜெட் தாக்கல் செய்யும் போதே இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கலாமே; உங்களுக்குள் இருக்கும் பிரச்னை பற்றி எனக்கு தெரியாது.

துணை முதல்வர்: சட்டசபையில் 110 விதியின் கீழ் மட்டுமின்றி எப்போது வேண்டுமானாலும் அறிவிப்புகளை வெளியிடுவதற்கு முதல்வருக்கு அதிகாரம் உள்ளது.

பொன்முடி: நெல் கொள்முதல் விலையாக குவிண்டாலுக்கு சாதாரண ரகம் 50 ரூபாய் சன்ன ரகம் 70 ரூபாய் மட்டுமே

ஊக்கத் தொகை அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் குவிண்டாலுக்கு 2000 முதல் 3000 ரூபாய் வரை விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். கரும்புக்கு உரிய கொள்முதல் விலையை நிர்ணயம் செய்யவில்லை.

மின்துறை அமைச்சர் தங்கமணி: கடுமையான வறட்சியால் தான் ஏழை தொழிலாளர்களுக்கு உதவித்தொகையை அரசு அறிவித்துள்ளது.

பொன்முடி: ஏழை தொழிலாளர்களுக்கு கொடுப்பதை தவறு என்று நாங்கள் சொல்லவில்லை. ஏன் இந்த அறிவிப்பை பட்ஜெட்டில் வெளியிடவில்லை என்று தான் கேட்கிறோம்.

தி.மு.க. - ஆஸ்டின்: வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு வழங்கப்படுவதாக அறிவித்துள்ள 2000 ரூபாயை இந்த நிதியாண்டில் வழங்கி இருக்கலாம். அதை விடுத்து 2018 - 19ம் ஆண்டு துணை நிதி நிலை அறிக்கையில் சேர்த்தது ஏன்; அந்தத் தொகை இந்த ஆண்டு வழங்கப்படுமா?

முதல்வர்: இந்த மாதம் இறுதிக்குள் வங்கி கணக்கில் 2000 ரூபாய் செலுத்தப்படும்.

ஆஸ்டின்: நீங்கள் 1000 ரூபாய் 2000 ரூபாய் மட்டுமல்ல 10 ஆயிரம் ரூபாய் கொடுத்தாலும் உங்கள் நோக்கம் நிறைவேறாது. ஏனெனில் மக்கள் கொதி நிலையில் உள்ளனர். இவ்வாறு விவாதம் நடந்தது.
நான்கு பல்கலைகளின் துணைவேந்தர் பதவி காலி : உயர் கல்வி செயலருக்கு நிர்வாக அதிகாரம்

dinamalar 13.02.2019

நான்கு பல்கலைகளின் துணைவேந்தர் பதவி காலியாகும் நிலையில், அதன் நிர்வாக அதிகாரம், உயர்கல்வி துறைக்கு மாற்றப்பட உள்ளது.

தமிழக உயர் கல்வியில், கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளின் நிர்வாகங்களில், பல்வேறு குழப்பங்களும், முறைகேடு புகார்களும் தொடர்ந்த வண்ணம் உள்ளன.கல்லுாரி முதல்வர்கள் நியமனம், பதவி உயர்வு, இடமாறுதல், துணைவேந்தர்கள் நியமனம், பேராசிரியர்கள் நியமனம் போன்றவற்றில், பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன.உயர் கல்வி துறையில் நடந்த முறைகேடு தொடர்பாக, தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசாரின் விசாரணையில், மூன்று வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இதில், உயர் கல்வி அதிகாரிகள் முதல், பல்கலைகளின் நிர்வாகிகள் வரை, விசாரணை வளையத்தில் உள்ளனர்.இந்நிலையில், நான்கு பல்கலைகளில், துணைவேந்தர் பதவிகள்காலியாகின்றன. அவற்றின் நிர்வாக அதிகாரத்தை, உயர்கல்வி துறை செயலருக்கு மாற்ற, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை துணைவேந்தர், தங்கசாமி, திருவள்ளுவர் பல்கலை துணைவேந்தர், முருகன் ஆகியோரின் பதவிக்காலம், பிப்., 7ல் நிறைவடைந்தது.கொடைக்கானல் தெரசா மகளிர் பல்கலை துணைவேந்தர், வள்ளியின் பதவிக்காலம், வரும், 15லும், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை துணைவேந்தர், பாஸ்கரனின் பதவிக்காலம், மார்ச், 2லும் முடிகிறது.இந்த நான்கு பல்கலைகளுக்கும், தற்காலிக நிர்வாக ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட உள்ளது. 

இந்த குழுவின் ஒருங்கிணைப்பாளராக, உயர்கல்வி செயலர், மங்கத்ராம் ஷர்மா நியமிக்கப்பட்டு, அவரது நேரடி பார்வையில், நான்கு பல்கலைகளின் நிர்வாகமும்மாற்றப்பட உள்ளது.ஏற்கனவே, கோவை பாரதியார் பல்கலையின் துணைவேந்தர், கணபதி, லஞ்ச ஒழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட பின், அந்த பதவியும், பல மாதங்களாக காலியாக உள்ளது.இது குறித்து, உயர் கல்வி துறை பேராசிரியர்கள் கூறியதாவது:பல்கலைகளின் நிர்வாகங்களை, உயர் கல்வி சார்ந்த பேராசிரியர்கள் மேற்கொண்டால் மட்டுமே, வெளிப்படை தன்மையுடன் அமையும். ஏற்கனவே, பல துணைவேந்தர்கள் அரசியல் செல்வாக்கால் நியமிக்கப்பட்டு, அரசு அதிகாரிகளின் பரிந்துரைப்படி முடிவு எடுத்தனர்.தற்போது, ஐந்து பல்கலைகளின் நிர்வாகமும், உயர் கல்வி துறையின் நேரடி பார்வையில் வருவதால், குழப்பங்கள் இன்னும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

NEWS TODAY 11.06.2026