Sunday, November 10, 2019

அறிந்ததும் அறியாததும்: மவுனம் பேசியதே!




ஆங்கிலத்தில் மட்டுமல்ல பிரெஞ்சு, ஜெர்மன் மொழி, இந்தோனேசிய மொழி, இத்தாலி மொழி, ஸ்பானிஷ், டர்கிஷ் உள்ளிட்ட பல மொழிகளில் மவுன எழுத்துக்கள் உள்ளன. “அதுதான் உச்சரிக்கத் தேவை இல்லையே, அப்புறம் எதற்கு அநாவசியமாக இந்த எழுத்துக்களைச் சொற்களுக்கு இடையில் எழுத வேண்டும்?” என்று தோன்றலாம்.

ஆங்கில மொழி என்பது பிற மொழிகளின் கலப்பால்தோன்றிய மொழியாகும். 85 சதவீத ஆங்கிலச் சொற்கள்ஜெர்மன் மொழி, பிரெஞ்சு, லத்தின் ஆகிய மூன்று மொழிகளில் இருந்து பெறப்பட்டவை. 12 சதவீத ஆங்கிலச் சொற்கள் கிரேக்கம், சீனம், ஜப்பானிய மொழிகளில்இருந்து உயிர்பெற்றவை. இப்படி பிற மொழிகளின் தாக்கம் அதிகம் இருப்பதால்தான் மவுன எழுத்துகள்கொண்ட மொழியாக ஆங்கிலம் விளங்குகிறது.


ஆனால், திகைத்துப்போக வேண்டியதில்லை. மவுனசொற்களுக்கான வரையறையைப் புரிந்துகொண்டுவிட்டால் அதை தவிர்த்துவிட்டு ஆங்கிலச் சொற்களைச்சரியாக உச்சரிக்கக் கற்றுக்கொண்டுவிடலாம்.

இதோ சில உதாரணங்கள்

1. மவுனமான H

Hour, Honest, Heir, Honour உள்ளிட்டவை பிரெஞ்சுமொழியில் இருந்து பெறப்பட்ட ஆங்கிலச் சொற்கள்.

இவற்றில் முதல் எழுத்தாக H இடம்பெறும்போது அங்கு H மவுன எழுதாகிவிடும்.

அதுவே, Hotel, House போன்ற அசலான ஆங்கிலச் சொற்களின் முதல் எழுத்தாக இடம்பெறும்போது H அதற்கான ஒலியுடன் உச்சரிக்கப்படும்.

2. மவுனமான K

N என்ற எழுத்துக்கு முன்னால் K இடம்பெறும்போதெல்லாம் K மவுன எழுத்தாகிவிடும். அப்போது அந்தச் சொல்லை N-ல் இருந்துதான் உச்சரிக்கத் தொடங்க வேண்டும்.

Knowledge, Knight

3. மவுனமான L

D, F, M, K, ஆகிய எழுத்துக்களுக்கு முன்னால்இடம்பெறும்போது L மவுனமாகிவிடும். உதாரணத்துக்கு, would, half, palm, yolk. (ஆனால், scold (ஸ்கோல்ட்) என்று சொல்லும்போது L கேட்குதே என்று ‘திட்டாதீர்கள்’. விதிவிலக்கு உண்டு!)

4. மவுனமான M

N-க்கு முன்னால் M இடம்பெற்றால் அது மவுன எழுத்தாகிவிடும். உதாரணத்துக்கு, mnemonic.

5. மவுனமான N

M-க்குப் பின்னால் N வந்து, அதுவே சொல்லின்கடைசி எழுத்தாக இருக்கும்போது N மவுனமாகிவிடும். உதாரணத்துக்கு, Column, Hymn, Solemn.

தொடர்ந்து மவுன எழுத்துக்களைப் பற்றிப் பேசுவோம்!

படுக்கை இல்லாமல் வரண்டாவில் சிகிச்சைபெறும் உள் நோயாளிகள்: மதுரை அரசு மருத்துவமனையில் குளிரிலும், கொசுக்கடியிலும் தவிக்கும் பரிதாபம்


மதுரை  10.11.2019

மதுரை அரசு மருத்துவமனையில் போதிய ‘பெட்’ வசதியில்லாமல் உள்நோயாளிகள், இந்த குளிரிலும், மழையிலும் வரண்டாவில் சிகிச்சை பெறும் பரிதாபம் ஏற்பட்டுள்ளது.

மதுரை அரசு மருத்துவமனை, சென்னை அரசு மருத்துவமனைக்கு அடுத்து மிகப்பெரிய மருத்துவமனையாக உள்ளது.

தினமும் 2,500 முதல் 2800 நோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனர். ஆனால், நிரந்தரமாகவே 3,500 பேர் உள்நோயாளிகள் சிகிச்சைப்பெறுகின்றனர்.

மருத்துவமனையில் 3 ஆயிரம் ‘பெட்’கள் மட்டுமே உள்ளதால் நோயாளிகளுக்கு ‘பெட்’கள் கிடைப்பதில்லை. அதனால், சிகிச்சைப்பெறுகிற நோயாளிகளை சிகிச்சைக்கு காத்திருக்கும் நோயாளிகளுக்காக, அவசரம் அவசமாகவே டிஸ்சார்ஜ் செய்யப்படுகின்றனர்.

தற்போது மழைக்காலம் தொடங்கிவிட்டதால் மருத்துவமனையில் வைரஸ் காய்ச்சல் நோயாளிகள், டெங்கு காய்ச்சல் நோயாளிகள், மற்ற உடல் நலகுறைவால் வரும் நோயாளிகள் இரட்டிப்பாகி உள்ளது. ஆனால், வார்டுகளில் போதிய ‘பெட்’ வசதியில்லை. அதற்காக நோயாளிகளை மருத்துவர்கள் திருப்பி அனுப்ப முடியாது என்பதால் அவர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

அதனால், மோசமான நிலையில் உள்ள நோயாளிகளை ‘பெட்’களிலும், மற்ற நோயாளிகளை அந்தந்த வார்டுகள் முன் வரண்டாவில் படுக்க வைத்து சிகிச்சை அளிக்கின்றனர். குளுக்கோஸ் ஏற்றும் ஸ்டாண்டுகளை வைக்க இடமில்லாமல்

சுவர்களில் கம்பியை அடித்து ‘ட்ரிப்ஸ்’ ஏற்றுகின்றனர். சிலருக்கு வரண்டாவிலே ஸ்டாண்டுகள் வைத்து ‘ட்ரிப்ஸ்’ ஏற்றுகின்றனர்.

முதியவர்கள், குழந்தைகள் கூட இந்த மழைக்காலத்தில் குளிர்காற்று வீசும் நேரத்தில் தரையில் படுத்து சிகிச்சைப்பெறுவதால் அவர்கள் உடல்நிலை மேலும் மோசமடைகிறது. ஏற்கெனவே மருத்துவமனையில் கொசுத் தொல்லை அதிகமாக உள்ளதால் பலர், சிகிச்சையைத் தொடராமல் இடையிலே தனியார் மருத்தவமனைக்கு சென்றுவிடுகின்றனர். பண வசதி சுத்தமாக இல்லாத தனியார் மருத்துவமனைக்கு செல்ல வாய்ப்பே இல்லாத அடித்தட்டு ஏழை உள் நோயாளிகள் மட்டுமே அத்தனை சிரமங்களையும் தாங்கிக் கொண்டு சிகிச்சை பெறுகின்றனர்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை, பழைய மருத்துவமனை கட்டிடம், அண்ணா பஸ்நிலையம் கட்டிடம், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ஆகிய மூன்று இடங்களில் உள்ளது.

பழைய மருத்துவ கட்டிடத்தில் செயல்படும் மருத்துவப்பிரிவுகளில் மட்டுமே இடநெருக்கடியும், போதிய ‘பெட்’ வசதியும் இல்லாமல் உள்ளது. அதேநேரத்தில், அண்ணாபஸ்நிலையம் மருத்துவமனை கட்டிடம், மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டிடப்பிரிவுகளில் செயல்படும் வார்டுகளில் பயன்பாடில்லாமல் ‘பெட்’கள் உள்ளன.

மருத்துவமனை நிர்வாகப்பிரிவு மருத்துவ அதிகாரிகள், மருத்துவ சிகிச்சை, பணியாளர்கள் வருகையை மட்டுமே கண்காணிக்கின்றனர். நோயாளிகளுக்கான வசதிகளை மேம்படுத்தவும், அவர்களுடைய பிரச்சினைகளை காது கொடுத்துக் கேட்பதும் இல்லை.

மருத்துவமனை பணியாளர்கள் கூறுகையில், ‘‘எந்தளவுக்கு மருத்துவமனையில் இடநெருக்கடி, அடிப்படை கட்டமைப்பு வசதி இல்லையோ, அதே அளவுக்கு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், கவனிக்கும் செவிலியர்கள், மருத்துவப்பணியாளர்கள், மருந்துகள் வழங்கும் மருந்தாளுநர்கள் வரை ஆட்கள் பற்றாக்குறை உள்ளது. மருத்துவ மாணவர்களை வைத்தே மருத்துவமனையை அன்றாடம் சமாளிக்க வேண்டிய உள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் நோயாளிகள் வருகை சதவீதத்தை தணிக்கை செய்து, அவர்களுக்கான ‘பெட்’ வசதியையும், உடைந்த ‘பெட்’களுக்குப் பதிலாக புதிய ‘பெட்’களை வாங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், பல வார்டுகளில் உடைந்த ‘பெட்’களுக்கு செங்கல் கொடுத்து முட்டுக்கொடுக்கப்பட்டுள்ளது.

பெட் வசதிகளை அதிகரிக்க வேண்டும். அதற்கு சரியான திட்டமிடுதல் இல்லை. ‘பெட்’ பற்றாக்குறையை தற்காலிகமாக நோயாளிகளை வரண்டாவில் படுத்து சிகிச்சை பெறுவதை தவிர்க்க அண்ணா பஸ்நிலையம் விபத்து, காய சிகிச்சைப்பிரிவு, மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மற்றும் பழைய மருத்துவ கட்டிடப்பிரிவுகளில் சரிவிகிதமாக நோயாளிகள் பிரித்து, சிகிச்சை பெற வைக்கலாம்.

வார்டில் இடம் இல்லாமல் இடவசதியுள்ள கட்டிடங்களுக்கு அந்த சிகிச்சைப்பிரிவுகளை மாற்றலாம். மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டிடப்பிரிவில் இன்னும் மருத்துவ சிகிச்சைப்பிரிவுகள் முழுமையாக செல்லவில்லை. மருத்துவமனை ‘டீன்’ மற்றும் உயர் அதிகாரிகள் நிர்வாகப்பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தாமல் நோயாளிகளுக்கான சிரமங்கள், அவர்களுக்கான வசதிகளை மேம்படுத்த மருத்துவமனையில் உயர்மட்ட குழுவை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும்.

தேனி, சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் ஸ்பெஷாலிட்டி சிகிச்சை பிரிவுகள் முழுஅளவில் மேம்படுத்தாமல் உள்ளது. அதனால், அந்த மருத்துவமனையில் இருந்து உயர் சிகிச்சைக்கு நோயாளிகள் மதுரைக்கு அதிகளவு பரிந்துரை செய்யப்படுகின்றனர். இதைத் தடுக்க, அங்கு ஸ்பெஷாலிட்டி சிகிச்சைப் பிரிவுகளை முழுமையாக செயல்படுத்த வேண்டும், ’’ என்றார்.

மாவட்ட செய்திகள்

சேலத்தில் கொட்டித்தீர்த்த கனமழை: ஆயிரக்கணக்கான வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது



சேலத்தில் விடிய, விடிய கொட்டித்தீர்த்த கனமழையால் ஆயிரக்கணக்கான வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

பதிவு: நவம்பர் 10, 2019 04:30 AM
சேலம்,

சேலம் மாநகரில் நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு தொடங்கிய மழை இடைவிடாமல் விடிய, விடிய கொட்டித்தீர்த்தது. சேலம் அம்மாபேட்டை, கிச்சிப்பாளையம், சிவதாபுரம், பழைய சூரமங்கலம், கன்னங்குறிச்சி, கொண்டலாம்பட்டி, பழைய மற்றும் புதிய பஸ்நிலையங்கள், பள்ளப்பட்டி, அழகாபுரம் என பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் மழைநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது.

வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது

சேலம் ரெயில் நகரில் உள்ள ஏரி நிரம்பியதால் அங்கிருந்து தண்ணீர் வெளியேறி பழைய சூரமங்கலம், பெரியார் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் பொதுமக்கள் விடிய, விடிய தூங்காமல் பெரிதும் அவதியுற்றனர். மேலும் அவர்கள் வீடுகளில் புகுந்த மழைநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.

நேற்று காலை மழைநீர் வீட்டுக்குள் புகுந்த ஆத்திரத்தில் பொதுமக்கள் சேலம் புதுரோடு பகுதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் போக்குவரத்தும் பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சூரமங்கலம் போலீசார், மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து பொதுமக்கள் ஜி.வெங்கடாஜலம் எம்.எல்.ஏ. வீட்டை முற்றுகையிட்டனர். இதையடுத்து ஜி.வெங்கடாஜலம் எம்.எல்.ஏ. பெரியார் நகர் பகுதியில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பொருட்கள் சேதம்

கிச்சிப்பாளையம், கருவாட்டு பாலம், பச்சப்பட்டி, நாராயண நகர், களரம்பட்டி ஆகிய பகுதியில் உள்ள சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சாலையில் உள்ள பள்ளம், மேடு தெரியாமல் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்துக்கு உள்ளானார்கள். தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் வெளியே வர முடியாமல் சிக்கி தவித்தனர். பச்சப்பட்டி பகுதியில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது. இதனால் வீட்டுக்குள் சிக்கியவர்களை அந்த பகுதி வாலிபர்கள் ஸ்ட்ரெச்சர் மூலம் மீட்டு வந்தனர்.

சேலம் நகரில் ஆயிரக்கணக்கான வீடுகளில் மழை தண்ணீர் புகுந்தது. வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்கள் மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்கள் நனைந்து சேதம் அடைந்தன.

வீடுகள் இடிந்தன

கனமழையினால் சேலம் மணக்காடு பகுதியில் செல்வி, ராஜீவ், லட்சுமி ஆகியோரின் கூரை வீடுகள் உள்பட 5 பேரின் வீடுகள் இடிந்தன. வீட்டிற்குள் இருந்தவர்கள் முன்கூட்டியே வெளியே வந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். வீடுகள் இடிந்து விழுந்ததால் டி.வி., மிக்சி உள்ளிட்ட பொருட்கள் தண்ணீரில் நனைந்து சேதமானது.

மேலும் மழைநீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.
பராசரன் யார்

Added : நவ 10, 2019 04:20

அயோத்தி வழக்கில் மூத்த வழக்கறிஞர் பராசரன் 93 வாதம் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இவரது தளராத உழைப்பும் நினைவாற்றலும் அனைவரையும் கவர்ந்தது.'2.77 ஏக்கர் நிலத்தை ஹிந்து அமைப்பான ராம் லல்லாவுக்கு வழங்க வேண்டும்' என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்த அமைப்பு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வாதாடியவர் பராசரன்.இவரது தலைமையில் யோகேஸ்வரன் அனிருத் சர்மா ஸ்ரீதர் அஸ்வினி குமார் உள்ளிட்ட வழக்கறிஞர் குழு இயங்கியது. வழக்கு விசாரணையின் போது இவர் 'ராமர் பிறந்த இடத்தில் 433 ஆண்டுகளுக்கு முன் மசூதி கட்டி பாபர் செய்த தவறை சரி செய்ய வேண்டும். அயோத்தியில் எந்த மசூதியில் வேண்டுமானாலும் தொழுகை நடத்தலாம். அங்கு 50 - 60 மசூதிகள் உள்ளன. ஆனால் இந்துக்களுக்கு ராமர் பிறந்த இடம் இது மட்டுமே. இதனை மாற்ற முடியாது' என வாதாடினார்.

40 நாள் விசாரணையில் எந்த இடத்திலும் உணர்ச்சிவசப்படாமல் வாதத்தில் பங்கேற்றார்.விசாரணையின் கடைசி நாளில் முஸ்லிம் தரப்பு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜிவ் தவானுக்காக நீதிமன்றத்துக்கு வெளியே காத்திருந்தார். அவருடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.1927 அக். 9ல் திருச்சி ஸ்ரீரங்கத்தில் பிறந்தவர். 1958ல் வழக்கறிஞராக பதிவு செய்தார். உச்சநீதிமன்ற வழக்கறிஞராக பல ஆண்டுகள் இருந்துள்ளார். 1979ல் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி அமலில் இருந்த போது தலைமை வழக்கறிஞராக இருந்தார். 1983 - 1989 வரை இந்தியாவின் அட்டர்னி ஜெனரலாக பதவி வகித்தார். 2003ல் இவருக்கு பத்மஸ்ரீ விருதும் 2011ல் பத்ம விபூஷண் விருதும் வழங்கப்பட்டது. 2012 - 18 ராஜ்யசபா நியமன எம்.பி. யாக பதவி வகித்தார்.
பவுர்ணமி கிரிவலம்: உகந்த நேரம்

Added : நவ 10, 2019 03:54

திருவண்ணாமலை:திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், பவுர்ணமி தோறும், லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று அருணாசலேஸ்வரர், உண்ணா முலையம்மனை தரிசனம் செய்து வருகின்றனர்.

நாளை இரவு, 7:09 மணி முதல், 12ம் தேதி இரவு, 8:13 மணி வரை, ஐப்பசி மாத பவுர்ணமி திதி உள்ளது.அது, பக்தர்கள் கிரிவலம் செல்ல உகந்த நேரம் என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
43 மார்க்கிற்கு, 'அவுட் ஆப் சிலபஸ்' அண்ணா பல்கலை தேர்வில் குளறுபடி

Added : நவ 10, 2019 00:51

சென்னை:அண்ணா பல்கலை செமஸ்டர் தேர்வில், மருத்துவ எலக்ட்ரானிக்ஸ் பாடத்தில், 43 மதிப்பெண்களுக்கு, 'அவுட் ஆப் சிலபஸ்' கேள்விகள் இடம் பெற்றதால், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அண்ணா பல்கலையின் இணைப்பு இன்ஜினியரிங் கல்லுாரிகளில், டிசம்பரில் நடத்தப்பட வேண்டிய செமஸ்டர் தேர்வுகள், ஒரு மாதம் முன்னதாக, நவம்பர், 6ல் துவங்கின. முதல் நாளிலேயே, வினாத்தாள், 'லீக்' ஆனதாக புகார் எழுந்தது. இது குறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, 'பிற்பகல் தேர்வுக்கான வினாத்தாளை, ஒரு கல்லுாரியில் மாற்றி கொடுத்து விட்டனர். 'பின் தவறு சரி செய்யப்பட்டு, வேறு வினாத்தாள் வழங்கப்பட்டது' என, பல்கலையின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகம் விளக்கம் அளித்தது.

இந்நிலையில், நேற்று காலையில், 2017ம் ஆண்டு பாடத்திட்டத்தின்படி, மருத்துவ எலக்ட்ரானிக்ஸ் தேர்வு நடந்தது. அதாவது, 2017ம் ஆண்டு பாட திட்ட கேள்விகளுக்கு பதிலாக, 2013ம் ஆண்டு பாட திட்ட கேள்விகள் மாற்றி கேட்கப்பட்டுள்ளன.வினாத்தாளில், 'ஏ, பி' பிரிவில், 15ம் எண்ணில், லேசர் மற்றும் தெர்மோகிராப் தொடர்பான கேள்விகள்; 9ம் எண்ணில் இடம் பெற்ற, லேசர் அறுவை சிகிச்சை குறித்த கேள்வி.மேலும், அறுவை சிகிச்சைக்கு பயன்படும் நுரையீரல் இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்த கேள்விகள் பாட திட்டத்தில் இல்லாதவை என, மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த, 'அவுட் ஆப் சிலபஸ்' கேள்விகள் வந்ததால், கருணை மதிப்பெண்களாக, 43 மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. இதுபோன்ற பிரச்னை, வரும் தேர்வுகளில் வராத வகையில், வினாத்தாளை சரியாக அமைக்குமாறு, அண்ணா பல்கலைக்கு மாணவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
அறைகள் வாடகை திருமலையில் உயர்வு

Added : நவ 10, 2019 02:14

திருப்பதி:திருமலையில், தேவஸ்தானத்திற்கு சொந்தமான அறைகளின் வாடகை, இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.

திருமலையில், ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் தங்குவதற்காக, தேவஸ்தானம், 7,000 வாடகை அறைகளை கட்டியுள்ளது. இதில், இலவச அறைகள் முதல், 50 ரூபாயிலிருந்து, 12 ஆயிரம் ரூபாய் வரையிலான வாடகை அறைகளும் உண்டு. இவற்றை, பக்தர்கள் நேரடியாகவும், 'ஆன்லைன்' முன்பதிவு மூலமும் பெற்று வருகின்றனர்.இந்நிலையில், நந்தகம் வளாகத்தில் உள்ள அறைகளின் வாடகையை, தேவஸ்தானம், 600 ரூபாயிலிருந்து, 1000 ரூபாயாக உயர்த்தியுள்ளது.கெளஸ்துபம், பாஞ்சன்யம் வளாகத்தில் உள்ள ஓய்வறைகளின் வாடகை, 500 ரூபாயிலிருந்து 1,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வாடகை உயர்வு, நேற்று முதல் அமல்படுத்தப்பட்டது.தேவஸ்தானம், எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல், அறைகளின் வாடகையை உயர்த்திஉள்ளதால், திருமலைக்கு வரும் பக்தர்கள், சிரமப்பட்டு வருகின்றனர்.

NEWS TODAY 09.07.2026