Tuesday, December 3, 2019

மருத்துவக் கல்வியில் உள்ள பிரச்சினைகள்: மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் டாக்டர்கள் சங்கம் மனு



சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கத்தின் தலைவர்கள் , இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கே.சுப்பராயன், எம்.செல்வராஜ் உள்ளிட்டோர் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனை கடந்த 2 நாட்களுக்கு முன் டெல்லியில் சந்தித்தனர்.

அமைச்சர் ஹர்ஷவர்தனிடம் அளிக்கப்பட்ட கோரிக்கை மனுவின் விவரம்:

“இந்திய மருத்துவக் கழகத்தை ஒழித்துவிட்டு,தேசிய மருத்துவ ஆணையத்தை (என்எம்சி),தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் -2019 மூலம், இந்திய அரசு கொண்டு வந்துள்ளது. நாட்டின் மிக உச்சமட்ட மருத்துவத் துறை தொடர்பான அமைப்பான, என்எம்சி, நவீன அறிவியல் மருத்துவத்தை வளர்த்தெடுப்பதிலும், அனைவருக்கும் தரமான இலவச சிகிச்சை வழங்குவதிலும், மருத்துவக் கல்வி தொடர்பான கொள்கை முடிவுகளை எடுப்பதிலும், நவீன அறிவியல் மருத்துவர்களின் பங்களிப்பைக் குறைத்து விட்டதாகக் கருதுகிறோம்.

# என்எம்சியின் கட்டமைப்பு, ஒரு சுயேச்சையான அமைப்பின், ஜனநாயக ரீதியான செயல்பாட்டை முடக்கிவிட்டது. என்எம்சி, மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவக் கல்வியில் மாநிலங்களின் உரிமைகளைப் பறித்துவிட்டது.


# மாநிலங்களின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு, மருத்துவ மாணவர்களைச் சேர்க்கும் முறையில் உள்ள உரிமையை மாநிலங்களுக்கே மீண்டும் வழங்கிட வேண்டும்.

# கூட்டாட்சி அமைப்பைக் காத்திடவும், மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாத்திடவும், ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் இரண்டு உறுப்பினர்களை என்எம்சிக்கு ,தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும். அனைத்து அரசு மருத்துவப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை என்எம்சி உறுப்பினர்களாக நியமிக்க வேண்டும்.

# என்எம்சியின் தலைவர், என்எம்சி வாரியங்களின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளை என்எம்சி உறுப்பினர்களே தேர்ந்தெடுக்க வேண்டும். நியமன முறை கூடாது.

# இவற்றை நடைமுறைப் படுத்த என்எம்சி சட்டத்தில் திருத்தத்தைக் கொண்டுவரவேண்டும்.


நெக்ஸ்ட் தேர்வு தொடர்பான கோரிக்கை

நெக்ஸ்ட் தேர்வை பன்னோக்குடன் மத்திய அரசு கொண்டுவர முயல்கிறது. இறுதி ஆண்டு மருத்துவப் படிப்புக்கான தகுதிகாண் தேர்வாகவும், முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வாகவும், வெளிநாட்டில் மருத்துவம் படித்துவிட்டு வரும் மாணவர்களுக்கான தகுதித் தேர்வாகவும் நெக்ஸ்ட் தேர்வை மாற்றிட மத்திய அரசு முயல்கிறது.

இது பல்வேறு குழப்பங்களையும், ஊழலையும், முறைகேடுகளையும் உருவாக்கும். நெக்ஸ்ட் அவசியமில்லை. அனைத்து மருத்துவ மாணவர்களும், இந்திய மருத்துவக் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் தான் படிக்கிறார்கள். மத்திய மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களின் தேர்வுகளை எழுதி வெற்றி பெற்று, பயிற்சி மருத்துவத்தையும் முடித்த பிறகுதான் ,மருத்துவர்களாகப் பதிவு செய்து கொண்டு,தொழில் செய்கின்றனர்.

இந்நிலையில் இறுதியாண்டு மருத்துவப் படிப்பில் கொண்டு வரப்படும் இந்த நெக்ஸ்ட் தேர்வு அவசியமற்றது எனக் கருதுகிறோம். முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான போட்டித் தேர்வாக இது மாற்றப்படுவதால், மருத்துவர்களின் தரத்தை இது பாதிக்க வாய்ப்புள்ளது.

ஏனெனில், முதலாம் ஆண்டு முதலே, ஒரு முதுநிலை இடத்தைப் பெற வேண்டும் என்ற நோக்குடன் மட்டுமே, இந்த நெக்ஸ்ட் தேர்வுக்காக படிக்கத் தொடங்கி, பயிற்சி மையங்களுக்கும் செல்லத் தொடங்கி, நோயாளிகளைப் பார்ப்பதில் கவனம் செலுத்தவில்லை எனில், மருத்துவ மாணவர்களின் மருத்துவ ரீதியான கிளினிக்கல் அனுபவம், அறிவு, திறமை பாதிக்கப்படும். பரந்து பட்ட வாசிப்பையும், பரந்து பட்ட அறிவை, திறமையை வளர்த்துக் கொள்ளாமல் போய்விடுவர்.

இறுதி ஆண்டு மருத்துவப் படிப்பை, முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான நுழைவுத் தேர்வாக மாற்றினால், அது குழப்பங்களை உருவாக்குவதோடு, ஒரு தகுதிகாண் தேர்வின் நோக்கத்தையும், போட்டித் தேர்வுக்கான நோக்கத்தையுமே சிதைத்துவிடும். ஒரு போட்டித் தேர்வு என்பது ' அப்ஜக்ட்டிவ் ' டைப்பாக இருக்க வேண்டும். அது விருப்பம் சார்ந்து மதிப்பீடு செய்யும் ' சப்ஜெக்ட்டிவ் தேர்வு முறையாக இருக்கக் கூடாது.

சிறுவினா,பெருவினா போன்ற எழுத்துத் தேர்வுகளும், கிளினிக்கல் தேர்வும் இதில் இருந்தால், ஆசிரியர்கள் விருப்பம் சார்ந்து மதிப்பீடு செய்யும் முறை இருந்தால் அது பாராபட்சத்திற்கும், முறைகேடுகளுக்குமே வழிவகுக்கும். முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வில், மருத்துவக் கல்வியில் உள்ள 20 பாடங்களிலும் இருந்தும் கேள்விகள் இடம் பெற வேண்டும். இறுதி ஆண்டு மருத்துவத் தேர்வு அப்படியல்ல. அதில் இறுதியாண்டு பாடங்கள் மட்டுமே இடம் பெற வேண்டும்.

அத்தேர்வில் கிளினிக்கல் தேர்வு, வாய்மொழித் தேர்வு போன்றவை இடம் பெற வேண்டும். இல்லை எனில், ஒரு மருத்துவ மாணவரின் திறமையை முழுமையாகக் கண்டறிய இயலாது. எனவே, இறுதியாண்டு மருத்துவத் தேர்வை ஒரு போட்டித் தேர்வாக (நெக்ஸ்ட் தேர்வாக) மாற்றக்கூடாது. தற்பொழுது நடைமுறையில் உள்ள முறையே தொடர வேண்டும்.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள முதுநிலை மருத்துவ இடங்களுக்கு மத்திய அரசும், மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள முதுநிலை மருத்துவ இடங்களுக்கு மாநில அரசும், நுழைவுத் தேர்வை நடத்தி மாணவர் சேர்க்கையை நடத்திட வேண்டும்.

நீட் தொடர்பான கோரிக்கை

ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை நீட் தேர்வு நடத்தப்படும். எய்ம்ஸ், ஜிப்மர் மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைகளும் நீட் மூலம் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருப்பதை வரவேற்கிறோம். இளநிலை மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான உச்சபட்ச வயது வரம்பையும் நிர்ணயிக்க வேண்டும்.

தேசிய தேர்வு முகமை மூலம் அனைத்து மாவட்டங்களிலும் இலவச நீட் பயிற்சி மையங்களைத் தொடங்கிட வேண்டும். இளநிலை, முதுநிலை, உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்விலிருந்து விலக்கு பெற விரும்பும் மாநிலங்களுக்கு, நீட்டிலிருந்து விலக்களிக்க, என்எம்சி சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும்.

மருத்துவக் கல்வியில், மாநிலங்களிடமிருந்து பறிக்கப்பட்ட உரிமைகளை மீண்டும் மாநிலங்களிடமே வழங்கிட வேண்டுகிறோம். அரசுப் பள்ளி, ஏழை எளிய மாணவர்கள் மற்றும் கிராமப்புற மாணவர்கள் நீட் தேர்வால் பாதிக்கப்படுகிறார்கள். மருத்துவ இடங்களை அவர்களால் பெற முடியவில்லை.

எனவே, அரசுப் பள்ளி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் தனி இட ஒதுக்கீட்டைக் கொண்டுவர வேண்டும். இதற்கு என்எம்சி யில் திருத்தம் கொண்டுவர வேண்டுகிறோம். மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையில் நடைபெறும் முறைகேட்டைத் தடுத்திட, இறுதிக்கட்ட மாணவர் சேர்க்கை வரை, கடைசி இடம் நிரப்பப்படும் வரை, மத்திய மாநில அரசுகள் மட்டுமே தனியார் மற்றும் தனியார் நிகர்நிலை மருத்துவப் பல்கலைக்கழங்களின் இடங்களுக்கு மாணவர் சேர்க்கையை நடத்திட வேண்டும்.

அரசு சாரா தனியார் மருத்துவக் கல்வி நிறுவனங்களை நேரடியாக மாணவர் சேர்க்கையை நடத்திட அனுமதிக்கக் கூடாது. நீட் தேர்வு தரப் பட்டியலை தேசிய அளவிலும் மாநில அளிவிலும் வெளியிட வேண்டும். வெளிப்படைத் தன்மையை கடைப்பிடிக்க வேண்டும். தனியார் கல்லூரிகளில் சேர ரூ 2 லட்சமும், அரசுக் கல்லூரிகளில் சேர ரூ 25 ஆயிரமும் பாதுகாப்புக் கட்டணமாக வசூலிக்கப்படுவதை ரத்து செய்ய வேண்டும்.

இணைப்புப் படிப்புகளை (Bridge courses) கொண்டு வருவதும், சமூக சுகாதாரம் வழங்குபவர்கள் (Community Health Providers) நவீன அறிவியல் மருத்துவம் மூலம் சிகிச்சை வழங்க உரிமம் வழங்குவதும் மருத்துவ சேவையின் தரத்தைப் பாதிக்கும். நவீன அறிவியல் மருத்துவத்தைப் பாதிக்கும் நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும்.

நாடு முழுவதும் வேலை வாய்ப்பின்றி உள்ள நவீன அறிவியல் மருத்துவர்களை முறையாகப் பயன்படுத்த வேண்டும். அவர்களுக்கான வேலை வாய்ப்புகளை அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் அதிகப்படுத்த வேண்டும். பொது சுகாதாரத்துறையை வலுப்படுத்த வேண்டும்.

கிராமப்புறங்களின் மருத்துவர்களின் சேவையை உறுதிப்படுத்தத் தேவையான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கிராமப்புற மருத்துவமனைகளின் அடிப்படைக் கட்டமைப்புகளையும், வசதிகளையும் மேம்படுத்த வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களின் எண்ணிக்கையை மக்கள் தொகைக்கு ஏற்ப அதிகப்படுத்த வேண்டும்.

கிராமப்புறங்களிலும், தொலை தூரங்களிலும், கடினமான பகுதிகளிலும் பணிபுரியும் மருத்துவர்களின் ஊதியத்தையும், படிகளையும் உயர்த்த வேண்டும். அவர்கள் தங்குவதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். பல் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களின் பணியிடங்களை அதிகரிக்க வேண்டும். இதன் மூலம் மக்களுக்கு சிறந்த சேவை கிடைப்பதுடன், வேலையின்மையும் குறையும்.

அரசு மருத்துவர்களுக்கு பட்ட மேற்படிப்புகளில் இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும். கிராமப்புறங்களிலும், தொலை தூரங்களிலும், கடினமான பகுதிகளிலும் மருத்துவ சேவையை வலுப்படுத்த அரசு மருத்துவர்களுக்கு முதுநிலை மருத்துவப் படிப்பிலும், உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளிலும், மத்திய மாநில அரசுகளின் மருத்துவக் கல்லூரிகளில் தனி இட ஒதுக்கீட்டை வழங்கிட வேண்டும்.

முப்பது விழுக்காடு ஊக்க மதிப்பெண் வழங்கும் முறை அனைத்து அரசு மருத்துவர்களுக்கும் உரிய வாய்ப்புகளை வழங்கவில்லை. குழப்பங்களையே உருவாக்கியுள்ளது. அரசு மருத்துவர்களுக்கு, இடங்களை அது உறுதிப்படுத்தவில்லை. எனவே, இதை ரத்து செய்து விட்டு தனி இட ஒதுக்கீட்டை வழங்கிட வேண்டும். இந்த, இட ஒதுக்கீட்டை வழங்கிடவும், கூடுதல் மதிப்பெண் வழங்கிடவும் மாநில அரசுகளுக்கு அதிகாரம் இருக்கும் வகையில் என்எம்சியில் திருத்தத்தைக் கொண்டுவர வேண்டும்.

மாநிலங்களுக்கான ஒதுக்கீட்டை( Domestic) உறுதிப் படுத்த வேண்டும்.

தற்பொழுது முதுநிலை மருத்துவக் கல்வியில் 50 விழுக்காடு இடங்களை அகில இந்தியத் தொகுப்புக்கு மாநிலங்கள் வழங்குகின்றன. உயர் சிறப்பு மருத்துவக் கல்வியில் 100 விழுக்காடு இடங்களும் அகில இந்திய அளவிலான திறந்த போட்டிக்குச் சென்று விட்டது. இதனால் மாநில மருத்துவர்களும், மாநில உரிமைகளும் பாதிக்கப்படுகின்றன.

இந்த ஒதுக்கீடுகளை 15 விழுக்காடாக குறைக்க வேண்டும். முதுநிலை மற்றும் உயர் சிறப்பு மருத்துவ இடங்களில் 85 விழுக்காடு இடங்கள் அந்த அந்த மாநிலத்தவருக்கே வழங்கப்பட வேண்டும். இதில் மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கக் கூடாது. போதிய மருத்துவ இடங்கள் இல்லாத மாநிலங்களில் உடனடியாக போதிய மருத்துவக் கல்லூரிகளை உருவாக்கிட வேண்டும்.

மத்திய அரசு அதற்கு உதவிட வேண்டும். அனைத்து மாநிலங்களிலும், பெரிய நகரங்களிலும் எய்ம்ஸ் (AIIMS) நிறுவனங்களை மத்திய அரசு தொடங்கிட வேண்டும். அவற்றில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 85 விழுக்காட்டை அந்நிறுவனம் அமைந்துள்ள மாநிலத்தவருக்கே வழங்கிட வேண்டும்.

தனியார் மற்றும் நிகர் நிலை மருத்துவப் பல்கலைக்கழகங்களில் 100 விழுக்காடு மருத்துவ இடங்களின் கட்டணங்களையும் மத்திய மாநில அரசுகளே நிர்ணயிக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ 8 லட்சத்திற்கும் கீழ் உள்ள மாணவர்களின் கல்விக் கட்டணங்கள் முழுவதையும் மத்திய, மாநில அரசுகளே ஏற்க வேண்டும். கல்விக் கடன்களை வட்டியின்றி வழங்குவதோடு, வேலைக்குச் சென்ற பிறகே கல்விக் கட்டணத்தை திரும்ப வசூலிக்க வேண்டும்.

27% இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்திடுக!

இளநிலை, முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் பல் மருத்துவக் கல்வியில் இதர பிற்படுத்தப் பட்டோருக்கு 2007 ஆம் ஆண்டு முதல் வழங்கியிருக்க வேண்டிய இட ஒதுக்கீடு இதுவரை வழங்கப்படவில்லை.

மத்திய அரசு நிறுவனங்களில் மட்டுமே இந்த ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதர பிற்படுத்தப்பட்டோருக்கு அகில இந்தியத் தொகுப்பில் 27% இட ஒதுக்கீடு வழங்கப்படாததால், அவர்கள் இழப்புக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே,உடனடியாக, இந்த ஆண்டு முதல் இந்த ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

டிம்,எம்சிஎச் போன்ற உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளில் இட ஒதுக்கீடு எப்பிரிவினருக்கும் வழங்கப்பட வில்லை. எனவே, அதிலும் உடனடியாக இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும். தனியார் நிகர்நிலை மருத்துவப் பல்கலைக் கழகங்களிலும் இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும். வரைவு தேசியக் கல்விக் கொள்கை 2019 , நவீன அறிவியல் மருத்துவத்தின் வளர்ச்சியைப் பாதிக்கும் வகையில் உள்ளது.

மூட நம்பிக்கைகளையும், போலி மருத்துவத்தையும் திணிப்பதாக உள்ளது. எனவே அதன் பரிந்துரைகளைக் கைவிட வேண்டும். பொது சுகாதாரத்துறையை வலுப்படுத்த மக்கள் நல்வாழ்வுத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டை உலக நல நிறுவனம் பரிந்துரைத்துள்ளது போல், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 விழுக்காட்டை அரசுகளே ஒதுக்கீடு செய்திட வேண்டும்.

நவீன அறிவியல் மருத்துவத்தில், மருத்துவ ஆராய்ச்சிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்த வேண்டும். மருத்துவ நிறுவனங்கள் ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் மூலம் , சிறிய மற்றும் நடுத்தர மருத்துவமனைகளையும், மருத்துவ நிறுவனங்களையும் மூடச் செய்யும் போக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிறுவனங்களைப் பாதுகாத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

நாடு முழுவதும் மருத்துவத் துறை சார்ந்த பிரச்சினைகள், மருத்துவ சேவையில் ஏற்படும் குறைபாடுகள்,தவறுகள் போன்றவற்றிற்குத் தீர்வு காண வட்டார, மாவட்ட , மாநில மற்றும் தேசிய அளவில் மருத்துவ டிரிபியூனல்களை உருவாக்க வேண்டும்.

இதில் நீதிபதிகளும் மருத்துவர்களும் இடம் பெற்றிருக்க வேண்டும். மருத்துவ இழப்பீடு வழங்குவதில் உச்சபட்ச இழப்பீடு அளவையும் நிர்ணயிக்க வேண்டும் ”.

இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்மனுவில்,சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் பா.அருணந்தி ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர்.

அனுதாபத்தில் கேட்க வேண்டாம்: இமான் வேண்டுகோள்



'செவ்வந்தியே' பாடலை அனுதாபத்தில் கேட்க வேண்டாம் என்று இசையமைப்பாளர் இமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிறவியிலேயே பார்வையற்றவரான திருமூர்த்தி பாடிய 'கண்ணான கண்ணே' பாடல் இணையத்தில் பெரும் வைரலானது. இதைப் பார்த்த இசையமைப்பாளர் இமான், அவருடைய விவரங்களைக் கேட்டு வாங்கி அவரிடம் பேசியுள்ளார். மேலும், திருமூர்த்தி பாட வாய்ப்பு அளிக்கவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து ரத்தின சிவா இயக்கத்தில் ஜீவா நடித்துள்ள 'சீறு' படத்தில் திருமூர்த்திக்குப் பாடும் வாய்ப்பை வழங்கினார். அந்தப் படத்தில் திருமூர்த்தி பாடியுள்ள 'செவ்வந்தியே' என்ற பாடல் இன்று (டிசம்பர் 2) மாலை இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பாடல் தொடர்பாக இமான் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் திருமூர்த்தியுடன் இருக்கும் இமான் பேசும்போது, "என்னுடன் இருப்பவர் திருமூர்த்தி. எங்களுடைய கூட்டணியில் இப்போது 'செவ்வந்தியே' என்ற பாடல் வெளியாகியுள்ளது. 'சீறு' படத்தில் இடம்பெறும் அந்தப் பாடலை பாடலாசிரியர் பார்வதி எழுதியிருக்கிறார். கண்டிப்பாக இந்தப் பாடலைக் கேளுங்கள், உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்.

அனுதாபத்தில் இந்தப் பாடலை கேட்க வேண்டாம். உண்மையிலேயே இந்தப் பாடல் உங்களுக்குப் பிடித்திருந்தால், பலருக்கும் ஷேர் செய்யுங்கள். அனுதாபத்தில் அதைச் செய்யாதீர்கள். அதுதான் திருமூர்த்தி போன்ற கலைஞர்களுக்கு ஊக்கமாக இருக்கும்.

இந்த ஒரு பாடல் வெற்றியின் மூலமாக இன்னும் பல பாடல்களை திருமூர்த்தி பாட வேண்டும். அனைத்து இசையமைப்பாளர்களுக்கும் வேண்டி விரும்பி கேட்கக் கூடிய ஒரு விஷயம். இவரை வெவ்வேறு பாடல்களுக்கு உபயோகிக்க வேண்டும். இவரை இன்னும் அடுத்த தளத்துக்குக் கொண்டு போக வேண்டும்" என்று பேசியுள்ளார் இமான்.
மாவட்ட செய்திகள்

சென்னை விமான நிலையத்தில், மும்பை விமானத்தில் திடீர் கோளாறு: 8 மணிநேரமாக விமானத்தில் அமர்ந்திருந்த பயணிகள் போராட்டம்



சென்னை விமான நிலையத்தில் இருந்து மும்பை செல்ல இருந்த விமானத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டதால் 8 மணிநேரமாக விமானத்தில் அமர்ந்து இருந்ததால் பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பதிவு: டிசம்பர் 03, 2019 04:45 AM
ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்தில் இருந்து மும்பைக்கு நேற்று அதிகாலை 5 மணிக்கு கோ ஏர்லைன்ஸ் விமானம் செல்ல இருந்தது. அதில் செல்வதற்காக 217 பயணிகள், பாதுகாப்பு சோதனைகளை முடித்துக்கொண்டு விமானத்தில் ஏறி தயாராக அமர்ந்தனர்.

அப்போது, “விமானத்தில் திடீரென எந்திரக்கோளாறு ஏற்பட்டு உள்ளது. அதை சரிசெய்யும் பணியில் தொழில்நுட்ப வல்லுனர்கள் ஈடுபட்டு உள்ளனர். கோளாறு சரி செய்யப்பட்ட பின்னர் விமானம் புறப்பட்டு செல்லும்” என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் மதியம் 12 மணி ஆகியும் விமானம் புறப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பயணிகள், விமானத்தின் உள்ளேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை விமான ஊழியர்கள் சமாதானம் செய்தனர்.

இதையடுத்து சுமார் 8 மணிநேர தாமதத்துக்கு பிறகு மதியம் 1.15 மணிக்கு அந்த விமானம் மும்பைக்கு புறப்பட்டு சென்றது. விமானத்திலேயே பயணிகள் தங்க வைக்கப்பட்டதாகவும், இது விமான போக்குவரத்து விதிமுறைகளுக்கு எதிராக இருந்ததாகவும் பயணிகள் புகார் செய்ததாக கூறப்படுகிறது.
மாவட்ட செய்திகள்

தொடர் மழையால் வெள்ளத்தில் மிதக்கும் சென்னை புறநகர்



தொடர்ந்து பெய்து வரும் மழையால் சென்னை புறநகர் பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டு உள்ளது. வீடுகளை மழைநீர் சூழ்ந்ததால் உறவினர் வீடுகளில் பொதுமக்கள் தஞ்சம் அடைந்தனர். மேலும் பாம்புகள், அட்டை பூச்சிகள் நடமாட்டத்தாலும் அச்சம் அடைந்துள்ளனர்.

பதிவு: டிசம்பர் 03, 2019 05:00 AM
சென்னை,

கடந்த ஆண்டு பருவமழை பொய்த்து போனதின் விளைவாக ஏரிகள் வறண்டன. நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக குறைந்து, தலைநகர் சென்னையில் இதுவரை இல்லாத அளவுக்கு குடிநீர் தட்டுப்பாடு பிரச்சினை உருவானது. இதனால் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையை மக்கள் பெரிதும் நம்பி இருந்தனர்.

அவர்களின் நம்பிக்கையை கெடுக்காத வகையில் மழையும் பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த 30-ந்தேதி நள்ளிரவு முதல் மறுநாள் இரவு வரை கனமழை பெய்தது.

அந்தவகையில் சென்னை நகர் பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது. அதேபோல முடிச்சூர், தாம்பரம், மடிப்பாக்கம், வேளச்சேரி, பள்ளிக்கரணை, சோழிங்கநல்லூர், பெருங்களத்தூர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, ஆலந்தூர், நங்கநல்லூர், துரைப்பாக்கம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் மழை கொட்டித்தீர்த்தது.

தொடர் மழை காரணமாக தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். மடிப்பாக்கம் ராம்நகரில் வீடுகளை சூழ்ந்து குளம்போல் மழைநீர் தேங்கி கிடக்கிறது. விட்டுவிட்டு மழை பெய்து வருவதால் தேங்கிய மழைநீரை அப்புறப்படுத்த முடியாமல் பரிதவிக்கும் மக்கள், மேற்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகிறார்கள்.

அந்த பகுதிகளில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டிருப்பதால் மழைநீர் வடியாமல் தெருக்களை சூழ்ந்து கொண்டிருக்கிறது. இதனால் பல குடும்பங்கள் வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீடுகளுக்கு சென்றுவிட்டனர். சிலர் மொட்டை மாடிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

மழைநீரில் பாம்புகள், அட்டை பூச்சிகள் நடமாட்டமும் இருப்பதால் அச்சத்துடனே அப்பகுதி மக்கள் இருக்கிறார்கள். தெருக்கள் முழுவதும் மழைநீர் சூழ்ந்துள்ளதால் கடைகளுக்கு செல்ல கூட முடியாமல் மக்கள் தவிப்பதை பார்க்க முடிகிறது.

பள்ளிக்கரணையிலும் இதே நிலைதான் ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக அங்குள்ள காமகோட்டி நகர், காமாட்சி நகரில் குடியிருப்பு பகுதிகளில் குளம்போல மழைநீர் சூழ்ந்து உள்ளது. வீடுகளில் மழைநீர் புகுந்து மக்களை தவிக்க வைத்திருக்கிறது.

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளன. இடுப்பளவு தேங்கிய நீரை கடந்தே மக்கள் எங்கும் செல்ல வேண்டிய நிலை இருக்கிறது.

காமகோட்டி நகரில் உள்ள மாநகராட்சி பூங்கா மழைநீரால் சூழப்பட்டு தீவு போல காட்சியளிக்கிறது. இருசக்கர வாகனங்கள், கார்கள் போன்றவை சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

சிட்லபாக்கம் நேதாஜி நகரிலும் மழைநீர் பிரச்சினையில் குடியிருப்புவாசிகள் பரிதவிக்கிறார்கள். குளம்போல தேங்கியுள்ள மழைநீரில் சிறுவர்-சிறுமிகள் ஆட்டம் போட்டு வருகிறார்கள். மழைநீர் சூழ்ந்ததால் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அங்கிருந்து உறவினர் வீடுகளுக்கு இடம்பெயர்ந்து விட்டனர்.

பெரும்பாக்கம் அருகே ஏரிநீர் சாலையில் வெள்ளம்போல செல்கிறது. அதில் சிறுவர்கள், இளைஞர்கள் மீன், நண்டு பிடித்து மகிழ்ச்சி அடைகின்றனர். பெரும்பாக்கம் பிரதான சாலையில் வெள்ளம் பால மழைநீர் செல்வதால் அங்கு வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது. சிலரது எச்சரிக்கையை மீறி சென்ற வாகன ஓட்டிகளும் ஒருகட்டத்தில் மழைநீரில் பரிதவித்த காட்சியை பார்க்க முடிந்தது.

இதேபோல ஆதம்பாக்கம், நங்கநல்லூர், புழுதிவாக்கம், கோவிலம்பாக்கம் பகுதிகளிலும் குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக அப்புறப்படுத்தக்கோரி அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட இந்திராநகர், பி.ஜி.அவென்யூ, ஸ்ரீ நகர், அடிசன் நகர், அம்மன் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது. மழை நீரோடு குப்பைகள், கழிவுநீரும் சேர்ந்து துர்நாற்றம் வீசுகிறது. மின் மோட்டார்கள் மூலம் மழைநீரை வெளியேற்றும் பணி நடந்தாலும் மோட்டார்களில் பிளாஸ்டிக் பைகள் சிக்கிக்கொள்வதால் மழைநீரை வெளியேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

வீடுகளை மழைநீர் சூழ்ந்து உள்ளதால், மழை நீரோடு விஷ பூச்சிகளும் வீடுகளுக்குள் படையெடுக்கிறது. இதனால் குழந்தைகளுடன் பொதுமக்கள் அசத்துடன் தவித்து வருகின்றனர். சிலர் தங்களது வீடுகளை பூட்டிவிட்டு உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்தனர். சிலர் தேங்கி உள்ள மழைநீரில் தங்கள் வாகனங்களை கழுவி வருகின்றனர்.

மழை நீரால் சூழ்ந்த காட்டுப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வெள்ள தடுப்பு கண்காணிப்பு அதிகாரி ஜெயந்தி நேற்று ஆய்வு செய்தார். வீடுகளை சூழ்ந்து இருக்கும் மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளிடம் அவர் தெரிவித்தார்.

காஞ்சீபுரம் மாவட்டம் ஆதனூரில் தொடங்கும் அடையாறு ஆறு மண்ணிவாக்கம், முடிச்சூர், வரதராஜபுரம், பெருங்களத்தூர், திருநீர்மலை, திருமுடிவாக்கம், அனகாபுத்தூர், கவுல்பஜார், மணப்பாக்கம், ஈக்காடுதாங்கல், சைதாப்பேட்டை, கோட்டூர்புரம், பட்டினப்பாக்கம் வழியாக 42.5 கிலோ மீட்டர் தூரம் பயணித்து பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் அருகே வங்க கடலில் கலக்கிறது.

தற்போது பெய்துவரும் தொடர் மழையால் அடையாறு ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இதனால் பம்மல் அடுத்த கவுல்பஜார் அருகே உள்ள தரைப்பாலத்தின் மேல் ஒரு அடி உயரத்துக்கு வெள்ளம் ஓடுகிறது. மேலும் மழை தொடரும் பட்சத்தில் தரைப்பாலம் மூழ்கும் நிலை உள்ளது.

குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியின் கீழ்தளத்தில் முழங்கால் அளவுக்கு மழைநீர் தேங்கியது. பிரசவ வார்டு, டயாலிசிஸ் பிரிவு, ஆய்வகம், புற நோயாளிகள் பிரிவு ஆகிய இடங்களில் வெள்ளம் தேங்கியதால் நோயாளிகள் அவதிப்பட்டனர்.

இதையடுத்து பிரசவ வார்டு முதல் மாடிக்கு மாற்றப்பட்டது. டயாலிசிஸ் பிரிவு இயங்கவில்லை. புற நோயாளிகள் பிரிவு அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டது. ஆய்வகத்தில் இருந்த மருந்துகள் நாசமாயின. மழைநீரை வெளியேற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். மோட்டார் மூலம் தண்ணீரை அகற்றும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.
மாற்றுத்திறனே சொத்து
By பொ.ஜெயச்சந்திரன் | Published on : 03rd December 2019 03:22 AM

மாற்றுத் திறன் என்பது உடல் அல்லது மனதோடு தொடா்புடையது. பண்டைய காலத்தில் உடல் ஊனம் என்பது மருத்துவப் பிரச்னையாகப் பாா்க்கப்பட்டு அதனை மருத்துவா்தான் கவனிக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. முன்பு மாற்றுத்திறன் குறைபாடு உடையவா்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, போக்குவரத்து, தகவல் தொடா்பு முதலியவை எட்டாக்கனியாக இருந்தது.

மாற்றுத்திறனாளிகளுக்கு சம வாய்ப்புகள், உரிமைகள் பாதுகாப்பு, முழுப் பங்கேற்பு ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில் இந்தியாவில் 1995-இல் மாற்றுத்திறனாளிகள் சட்டம் இயற்றப்பட்டு ஆசிய, பசிபிக் பகுதிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு சமத்துவமும் முழுப் பங்கேற்பும் அளிக்கும் பிரகடனம் உறுதி செய்யப்பட்டது.

பாா்வை இல்லாமை, குறைந்த பாா்வை நிலைமை, தொழுநோய் சிகிச்சை பெற்று குணமடைந்தவா்கள், காது கேட்பதில் குறை உள்ளவா்கள், உடல் அசைவு பாதிக்கப்பட்டவா்கள், மூளை வளா்ச்சி குன்றியவா்கள், மூளை பாதிப்பு ஏற்பட்டவா்கள் ஆகியோா் மாற்றுத்திறனாளி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது சாா்ந்த சான்றிதழ் பெறுபவா்களுக்கு உடல் ஊனமுள்ளவா் என்று தெரிவிக்கப்பட்டு அப்படிப்பட்டவா் மேற்கூறப்பட்ட ஏதாவது ஒரு குறையினால் குறைந்தது 40 சதவீதம் பாதிக்கப்பட்டிருக்கிறாா் என்று அங்கீகரிக்கப்பட்ட மருத்துவரிடம் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அப்படி பெற்றிருந்தால்தான் அரசின் அனைத்துச் சலுகைகளும் கிடைக்கும்.

உடல் ஊனம் சாா்ந்த அறிக்கை ஒன்றை கடந்த 2011-இல் உலக சுகாதார அமைப்பு வெளியிட்டது. அதில் பல அம்சங்கள் கொண்ட அணுகுமுறையில் உடல் ஊனங்களைப் பற்றி அறிந்து கொள்ள இது ஒரு முதல் முயற்சியாக இருந்தது. உடல் ஊனத்தைத் தாண்டி இந்த உடல் ஊனம் சாா்ந்த உலக அறிக்கை, உடல் ஊனம் பற்றி நாம் விவாதிக்கும்போது மருத்துவ முறையும், சமூக முறையும், வெவ்வேறு பட்டதாகவும், ஒன்றை ஒன்று விலக்கியதாகக் கருதமுடியாது என்றும் தெளிவாகக் கூறியுள்ளது.

உடல் ஊனமுற்றோா் புள்ளிவிவரங்களை எடுத்துக் கொண்டால் இந்தியாவில் 2001-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மாற்றுத்திறனாளிகள் எண்ணிக்கை 2 கோடியே 19லட்சமாகும்; ஆனால் 2011-ஆம் கணக்கெடுப்பின்படி 2 கோடியே 60 லட்சம். இது மொத்த மக்கள் தொகையில் 2.21 சதவீதமாகும்; உடல் ஊனமுற்றவா்களின் மொத்த எண்ணிக்கையில் 1,49,80,000 போ் ஆண்களாகவும், 1,18,20,000 போ் பெண்களாகவும் உள்ளனா்.

நாட்டின் ஒட்டுமொத்த உடல் ஊனக் குறைவு எண்ணிக்கை 1 லட்சம் பேருக்கு 2,215-ஆகக் கணக்கிடப்பட்டுள்ளது. 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பில் அறியப்பட்ட உடல் ஊனமுற்றவா்களின் மொத்த எண்ணிக்கையில் 2001-இல் இருந்த பாா்வை சாா்ந்த குறைபாடு 48.55 சதவீதத்திலிருந்து 18.77 சதவீதமாகவும், உடல் அசைவுசாா் குறைபாடு 27.87 சதவீதத்திலிருந்து 20.77 சதவீதமாகவும் குறைந்துள்ளது.

ஆனால், கேட்கும் திறன், பிற திறமைகள் மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட திறன் குறைபாடுகள் அதிகரித்துள்ளன. உலக மக்கள்தொகை அடிப்படையில் பிரிட்டனில் 18 சதவீதம்; அமெரிக்காவில் 12 சதவீதம்; ஜொ்மன், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் தலா 9 சதவீதம்; இலங்கையில் 5 சதவீதம் போ் மாற்றுத்திறனாளிகளாக இருக்கின்றனா்.

உலக சுகாதார அமைப்பின் கணிப்பின்படி சுமாா் 100 கோடி மக்களுக்கு மேல் ஏதாவது ஓா் உடல் ஊனத்தோடு வாழ்ந்து வருகின்றனா். அதில் சுமாா் 20 கோடிக்கும் மேற்பட்டவா்கள் மிகுந்த சிரமத்துடன் வாழ்கிறாா்கள்.

மாற்றுத்திறனுடன் வாழும் மக்களின் வாழ்க்கையில் பல இடா்ப்பாடுகள் உள்ளன. நேரடியாகவும் மறைமுகமாகவும் உள்ள தாக்கங்களினால் அவா்கள் சமூக அளவிலும், பொருளாதார நிலையிலும் பல காரணங்களுக்காகப் பின்தங்கியே உள்ளனா்.

ஊனம் உள்ள நபருக்கு அந்த ஊனமானது, அவா் கடந்த காலத்தில் செய்த பாவம் அல்லது விதியால் ஏற்பட்டது என சமுதாயம் நம்புகிறது.

இத்தகைய தடைகள் அனைத்தும் ஒன்று சோ்ந்து ஏற்படுத்தும் தாக்கமானது, மாற்றுத்திறன் நபா்களை பெரும்பாலும் சமுதாயத்தில் இருந்தும், பொருளாதார நடவடிக்கையில் இருந்தும் விலக்கி வைப்பதாக முடிகிறது.

இயல்பான நபா்களோடு ஒப்பிடும்போது மாற்றுத்திறன் நபா்கள் அன்றாட வாழ்வில் பல அம்சங்களில் பாதகமான விளைவுகளை அனுபவிக்கின்றனா். உடல் ஊனமுற்றவா்களுக்கு தேசிய, பன்னாட்டு அமைப்புகளில் அடிப்படை சுகாதார வசதி, பாதுகாப்பு வழங்குவதில் தீவிர நாட்டம் இருந்தாலும் அவா்களின் உண்மையான பூா்த்தி பெறாத சுகாதார, பாதுகாப்புத் தேவைகளை நாம் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

இன்றைக்கு நல்ல உடல் வலிமை உள்ள மனிதா்கள், எந்த ஒரு தொழிலும் செய்யாமல் வீட்டில் முடங்கியுள்ளனா். ஆனால், ‘எங்களாலும் முடியும்’ என்று நினைத்த பல்லாயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் தொழிலை போட்டி போட்டுச் செய்கின்றனா். தற்போது படிப்பு, விளையாட்டுத் துறை உள்பட அனைத்துத் துறைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் சாதனைப் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. எனவே, உழைப்பால் உயரும் மாற்றுத்திறனாளிகளை அங்கீகரிப்பது சமுதாயத்தின் கடமையாகும்.

(இன்று உலக மாற்றுத்திறனாளிகள் தினம்)
மருத்துவப் பல்கலைக்கழகம்:பதிவாளா், துணைத் தோ்வுக் கட்டுப்பாட்டாளா் நியமனத்தில் நீடிக்கும் தாமதம்

By ஆ. கோபிகிருஷ்ணா | Published on : 03rd December 2019 01:46 AM


சென்னை: தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் பதிவாளா் மற்றும் துணைத் தோ்வுக் கட்டுப்பாட்டாளா் நியமனத்தில் தொடா்ந்து தாமதம் நீடித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனால் சில முக்கிய நிா்வாக நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதையடுத்து, இந்த விவகாரத்தில் மாநில அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்வியாளா்கள் கருத்து தெரிவித்துள்ளனா்.

தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கீழ் 600-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் இயங்கி வருகின்றன. மருத்துவம், முதுநிலை மருத்துவம் தவிர பல்வேறு துணை மருத்துவப் படிப்புகளும் அங்கு பயிற்றுவிக்கப்படுகின்றன.

மருத்துவப் பல்கலைக்கழகத்தைப் பொருத்தவரை குருதியியல் மற்றும் குருதியேற்ற மருத்துவம், நோய்ப் பரவு இயல் தொடா்பான படிப்புகள் அங்கே உள்ளன. தற்போது பல்கலைக்கழகத்தின் பதிவாளராக பரமேஸ்வரி உள்ளாா். அவா் முழுநேர பதிவாளராக அல்லாமல் பொறுப்புப் பதவியையே வகித்து வருகிறாா். இதனால், சில முக்கிய நிா்வாக நடவடிக்கைகளில் முழு அதிகாரத்தையும் செயல்படுத்த முடியாத நிலை நீடிக்கிறது.

இதன் விளைவாக, பல்கலைக்கழகத்தின் வழக்கமான அலுவல்களிலும், ஆராய்ச்சிப் பணிகளிலும் காலதாமதம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. எனவே, முழுநேர பதிவாளரை நியமிக்க வேண்டிய தேவை பல்கலைக்கழகத்துக்கு எழுந்துள்ளது.

இதனிடையே, பல்கலைக்கழகத்தின் துணைத் தோ்வுக் கட்டுப்பாட்டாளராக இருந்த மீனாட்சி, கடந்த சில நாள்களுக்கு முன்பு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி பேராசிரியா் பொறுப்புக்கு மாறுதலாகிச் சென்றுவிட்டாா். இதனால் அப்பொறுப்புக்கும் மற்றொருவரை நியமிக்க வேண்டிய அவசியம் உருவானது.

இதைக் கருத்தில்கொண்டு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாகவே பதிவாளா் மற்றும் துணைத் தோ்வுக் கட்டுப்பாட்டாளா் பணியிடங்களுக்கு நோ்முகத் தோ்வு நடத்தப்பட்டு தகுதியானவா்கள் தோ்வு செய்யப்பட்டனா். அவா்கள் வெவ்வேறு மருத்துவக் கல்லூரிகளில் உயா் பொறுப்புகளை தற்போது வகித்து வருகின்றனா். அவா்களை அப்பொறுப்பில் இருந்து அரசு விடுவித்தால் மட்டுமே பல்கலைக்கழகத்தில் சேர முடியும்.

ஆனால், இன்றுவரை அவா்களை விடுவிக்காமல் சுகாதாரத் துறை தாமதித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக பல முறை பல்கலைக்கழக நிா்வாகம் சாா்பில் நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்டும் அதன்பேரில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொதுவாக, பல்கலைக்கழகத்தில் முக்கியப் பொறுப்புகளுக்கான நியமனத்தை காலந்தாழ்த்துவது நிா்வாகப் பணிகளை மட்டுமன்றி உறுப்பு கல்லூரிகளையும், மாணவா்களையும் மறைமுகமாக பாதிக்கக் கூடும் என்று கல்வியாளா்கள் கவலை தெரிவிக்கின்றனா். எனவே, இந்த விவகாரத்தில் அரசு இனியும் தாமதிக்கக் கூடாது என்று அவா்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.
பொங்கல் பரிசு எப்போது: அதிகாரிகளை திணறடிக்கும் மக்கள்!

Updated : டிச 03, 2019 00:45 | Added : டிச 02, 2019 22:26

சென்னை: அதிகாரிகளை மொபைல் போனில் அழைத்து, 'பொங்கல் பரிசு தொகுப்பை எப்போது தருவீர்கள்' எனக் கேட்டு, ரேஷன் கார்டுதாரர்கள் திணறடித்து வருகின்றனர்.

தமிழக அரசு, பொங்கலை முன்னிட்டு, ரேஷன் கடைகளில், 1,000 ரூபாய் ரொக்கத்துடன், தலா, 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை; தலா, 20 கிராம் முந்திரி, திராட்சை; 5 கிராம் ஏலம் மற்றும் கரும்பு அடங்கியபரிசு தொகுப்பை அறிவித்தது.இவற்றை பயனாளிகளுக்கு வழங்கும் திட்டத்தை, முதல்வர் இ.பி.எஸ்., சில தினங்களுக்கு முன், சென்னையில் துவக்கி வைத்தார்.

இதையடுத்து, பலரும் ரேஷன் கடைகளுக்கு சென்று, பொங்கல் பரிசு வழங்கும்படி, ஊழியர்களிடம் கேட்கின்றனர். அதற்கு அவர்கள், அதிகாரிகளின் மொபைல் போன் எண்களை வழங்கி, கேட்கும்படி கூறுகின்றனர்.இது குறித்து, கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:முந்திரி, திராட்சை உட்பட, இன்னும் எந்த பொருளையும் வாங்கவில்லை; கரும்பும் விற்பனைக்கு வரவில்லை. உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு காரணமாகவே, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது, முன்கூட்டியே துவங்கப்பட்டது.

சில தினங்களில், அவை, ரேஷன் கடைகளில் வழங்கப்படும். ஆனால், 'பொங்கல் பரிசு கொடுங்க...' எனக் கேட்டு, ரேஷன் கார்டுதாரர்கள் கடைகளுக்கு வருகின்றனர்.ஊதிய உயர்வு வழங்காததால், அரசின் மீது, ரேஷன் ஊழியர்கள் அதிருப்தியில் உள்ளனர். இந்த வாய்ப்பை பயன்படுத்தி, ரேஷன் ஊழியர்கள், கார்டுதாரர்களிடம், உணவு வழங்கல் துறை அதிகாரிகள், கூட்டுறவு துணை மற்றும் இணை பதிவாளர்களின் மொபைல் போன் எண்களை கொடுத்து, 'அதிகாரிகளிடம் கேளுங்கள்' எனக்கூறி, தப்பி விடுகின்றனர்.

ரேஷன் கார்டுதாரர்கள், அதிகாரிகளை மொபைல் போனில் அழைத்து, 'பொங்கல் பரிசை எப்போ தருவீங்க...' எனக் கேட்கின்றனர். ஒரு மணி நேரத்திற்கு, 10 பேர் வரை கேட்பதால், அதிகாரிகள் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

NEWS TODAY 11.07.2026