Tuesday, November 28, 2017

தினகரன் கோஷ்டி எம்.பி.,க்கள் அணி மாறினர் : முதல்வரை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்

Added : நவ 27, 2017 23:43



தினகரன் ஆதரவு, எம்.பி.,க்கள் மூன்று பேர், நேற்று முதல்வர் பழனிசாமியை, அவரது வீட்டில் சந்தித்து, ஆதரவு தெரிவித்தனர். இது, சசிகலா குடும்பத்தினரிடம், கடும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. அ.தி.மு.க.,விலிருந்து விலக்கப்பட்ட தினகரன், தனி அணியாக செயல்பட்டு வந்தார். அவருக்கு, 20 எம்.எல்.ஏ.,க்களும், ஆறு எம்.பி.,க்களும், நான்கு மாவட்ட செயலர்களும், ஆதரவு தெரிவித்தனர். மற்ற, எம்.எல்.ஏ.,க்கள், தன் பக்கம் வராததால், ஆட்சியை கவிழ்க்க, தினகரன் முடிவு செய்தார்.அவரது ஆதரவு, எம்.எல்.ஏ.,க்களில், 18 பேர், முதல்வர் பழனிசாமிக்கு எதிராக, கவர்னரை சந்தித்து, புகார் மனு அளித்தனர்.

தகுதி நீக்கம் : அதன் காரணமாக, அவர்களை தகுதி நீக்கம் செய்து, சபாநாயகர், தனபால் உத்தரவிட்டார். தினகரனை நம்பி சென்றதால், 18 எம்.எல்.ஏ.,க்கள் பதவியை இழந்தனர்.
அதேபோல், தினகரனுக்கு ஆதரவாக செயல்படும், எம்.பி.,க்கள், நவநீதகிருஷ்ணன், விஜிலா சத்தியானந்த், கோகுலகிருஷ்ணன், நாகராஜன், செங்குட்டுவன், உதயகுமார் ஆகியோரை, பதவி நீக்கம் செய்யும்படி, பன்னீர் - பழனி அணி சார்பில், துணை ஜனாதிபதி மற்றும் லோக்சபா சபாநாயகரிடம், மனு அளிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில், அ.தி.மு.க.,வும், அதன் இரட்டை இலை சின்னமும், பன்னீர் - பழனி அணிக்கு கிடைத்தது. இதனால், கட்சியும் ஆட்சியும், பன்னீர் - பழனி அணியினரின் முழு கட்டுப்பாட்டில் வந்தது. தற்போது, கட்சி எதுவும் இல்லாமல், தினகரன் தனி மரமாக உள்ளார். அவர், தன் அரசியல் வாழ்க்கையை தொடர, ஏதேனும் அரசியல் கட்சியில் இணைய வேண்டும் அல்லது புதிய கட்சி துவங்க வேண்டும் என்ற நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

எதிர்காலம் வீண் : இது, அவரது ஆதரவாளர்களிடம் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. தினகரனை நம்பினால், தங்களின் அரசியல் எதிர்காலம் வீணாகி விடும் என்பதால், மீண்டும், அ.தி.மு.க.,விற்கு திரும்ப துவங்கி உள்ளனர். அதன்படி, தினகரன் ஆதரவு, எம்.பி.,க்கள் நவநீதகிருஷ்ணன், விஜிலா சத்தியானந்த், கோகுலகிருஷ்ணன் ஆகியோர், நேற்று மாலை, சென்னையில், முதல்வர் பழனிசாமியை, அவரது இல்லத்தில் சந்தித்து பேசினர். அவர்கள் அணி மாறியதாக, தகவல் வெளியானது.இதை, எம்.ஜி.ஆர்., மன்ற செயலர், தமிழ்மகன் உசேன் உறுதிப்படுத்தினார்.

எம்.பி.,க்கள் விஜிலா சத்தியானந்த், கோகுலகிருஷ்ணன் ஆகியோர் கூறுகையில், 'இரட்டை இலை சின்னம் இருக்கும் இடத்தில் தான் இருப்போம்' என்றனர். இவர்களை பின்பற்றி, தினகரன் பக்கம் உள்ள மற்றவர்களும், அணி மாற திட்டமிட்டுள்ளனர்.தினகரனால் பதவி இழந்த, எம்.எல்.ஏ.,க்கள், உயர் நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை காத்திருப்பதா அல்லது அதற்கு முன், அணி மாறலாமா என்ற, ஊசலாட்டத்தில் உள்ளனர்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

Section of Anna University PhD scholars excluded from convocation

Section of Anna University PhD scholars excluded from convocation Scholars who completed their viva after this date will be awarded degrees ...