Saturday, August 10, 2019

டெல்லியில் இருந்து சென்னை வந்த விமானம் தரை இறங்கும்போது சக்கரங்கள் இயங்காததால் பரபரப்பு-143 பேர் உயிர் தப்பினர்

டெல்லியில் இருந்து சென்னை வந்த விமானம் தரை இறங்கும்போது சக்கரங்கள் இயங்காததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பிறகு பத்திரமாக தரை இறக்கப்பட்டதால் 143 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

பதிவு: ஆகஸ்ட் 09, 2019 04:15 AM

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் உள்நாட்டு முனையத்துக்கு டெல்லியில் இருந்து 138 பயணிகள், 5 விமான ஊழியர்களுடன் விமானம் ஒன்று வந்தது. விமான நிலைய ஓடுபாதையில் விமானத்தை தரை இறக்க விமானி முயற்சித்தார்.

அப்போது விமானத்தின் சக்கரங்கள் இயங்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த விமானி, விமானத்தை தரை இறக்காமல் வானத்தில் சிறிதுநேரம் வட்டமடித்தார். பின்னர் இதுபற்றி விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து விமான நிலையத்தில் விமானத்தை அவசரமாக தரையிறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. முன்னெச்சரிக்கையாக தீயணைப்பு வாகனங்கள், வீரர்களுடன் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டன. மருத்துவ குழுவினரும் வரவழைக்கப்பட்டனர். பாதுகாப்பு படையினரும் குவிக்கப்பட்டதுடன், அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் பயணிகளை மீட்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.

பின்னர் விமானம் தரையிறங்க அனுமதி வழங்கப்பட்டது. பரபரப்பான சூழ்நிலையில் விமானம் தரை இறக்கப்பட்டது. அப்போது இயங்காமல் இருந்த சக்கரங்கள் திடீரென இயங்கத் தொடங்கியது.

எனவே விமானம் பத்திரமாக தரை இறங்கியது. அதில் இருந்த 143 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

அதன்பின்னரே விமானத்தில் இருந்தவர்களும், விமான நிலையத்தில் முன்னெச்சரிக்கையாக நின்றிருந்த அதிகாரிகள் உள்பட அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இந்த சம்பவம் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

No comments:

Post a Comment

பழிவாங்கும் நோக்கத்துடன் செய்யும் டிரான்ஸ்பர்களை ஒருபோதும் ஏற்க முடியாது: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு

பழிவாங்கும் நோக்கத்துடன் செய்யும் டிரான்ஸ்பர்களை ஒருபோதும் ஏற்க முடியாது: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு 12.04.2025 மதுரை: பழிவாங்கும் ...