Thursday, August 8, 2019

இருசக்கர வாகனம் ஓட்டுபவரும், பின்னால் அமர்பவரும் ஹெல்மெட் அணியாவிட்டால் அபராதம்: போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை 



சென்னை

இருசக்கர வாகனம் ஓட்டுபவரும், பின்னால் அமர்ந்திருப்போரும் ஹெல்மெட் அணியாவிட்டால் ரூ.1000 அபராதம் விதிக்கும் சட்டம் விரைவில் நடைமுறைக்கு வரவுள் ளது என்று போக்குவரத்து காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை போக்குவரத்து காவல்துறை சார்பில் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

சாலை விபத்துகளில் 90 சதவீதம் பேர் தலைக்கவசம் அணியாத காரணத்தால் இறக்கின்றனர். தலைக்கவசம் அணிபவர்களில் சிலர் ‘சின் ஸ்டிராப்’பை சரிவர அணிவதில்லை. குழந்தைகளை பள்ளிகளில் விடுகின்ற நேரமும் சந்தைக்கு செல்கின்ற நேரமும் தலைக்கவசம் அணிய விலக்கு அளிக்கப்பட்டதாக இருசக்கர வாகன ஓட்டிகள் நினைத்துக் கொள் கின்றனர்.

இருசக்கர வாகனத்தை எங்கே ஓட்டிச்சென்றாலும், எவ்வளவு தூரம் ஓட்டிச்சென்றாலும் தலைக் கவசம் அணிய வேண்டியது கட் டாயம். அதேபோல், இரு சக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந் திருப்பவரும் கட்டாயம் தலைக் கவசம் அணியவேண்டும். குழந்தை களும் தலைக்கவசம் அணிவது அவர்களது பாதுகாப்பை உறுதி செய்யும். விபத்து எங்கே எப்போது நடக்கும் என்று யாருக்கும் தெரியாது.

எத்தகைய சட்ட நடவடிக்கைகள் எடுத்தாலும், விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினாலும், பொதுமக்களும் தங்கள் கடமையை உணர்ந்து சாலைவிதிகளையும், வாகனம் ஓட்டும்போது பொறுப்புணர்வுட னும் இருந்தால் மட்டுமே விபத்து களையும், உயிரிழப்புகளையும் தடுக்கமுடியும். மேலும், தற் போது மோட்டார் வாகன சட்ட திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதன்படி, தலைக்கவசம் அணியாதவருக்கு தற்போது விதிக்கப்படும் அபராதத் தொகை ரூ.100-ல் இருந்து 1,000 ரூபாயாக உயர்த்தப்பட்டு விரைவில் நடை முறைபடுத்தப்பட உள்ளது.

நாம் அனைவரும் வீட்டிலிருந்து புறப்படும்போது கைபேசி போன்றவற்றை எடுத்துச் செல்ல மறப்பதில்லை. அதேபோல் உயிர் காக்கும் தலைக்கவசம் அணி வதையும் ஒரு கட்டாய பழக்க மாகக் கொள்ளவேண்டும். பொது மக்கள் தங்களின் மனதில் தனி மனித ஒழுக்கத்தை ஏற் படுத்திக்கொண்டு, சாலை விதி களை கடைபிடிப்பதிலும் தங்களின் சந்ததிகளை காப்பதிலும் காவல்துறையோடு கைகோர்த்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 18.12.2025