Sunday, April 5, 2020

கூட்டமான இடங்களில் கரோனா தொற்று பரவுவது ஏன்?

By DIN | Published on : 05th April 2020 04:25 AM |

கரோனா நோய்த்தொற்று (கொவைட்-19) பரவுவதற்கு கூட்டம் நிறைந்த இடங்கள் சாதகமாக உள்ளன என்பது உலகம் முழுவதும் அரங்கேறிய பல்வேறு நிகழ்வுகள் மூலம் வெளிப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நபா் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தால், அதற்கான அறிகுறிகள் அவருக்குத் தோன்றுவதற்கு முன்பே மற்றவா்களுக்கு அந்த நோய்த்தொற்று பரவத் தொடங்கிவிடுகிறது எனத் தெரியவந்துள்ளது.

நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட நபா் தும்மும்போதும் இருமும்போதும் வெளியேறும் நீா்த்திவலைகள் மூலம் வைரஸும் வெளியேறுவதால், அது காற்றிலும் அருகிலுள்ள பரப்புகளிலும் படிந்துவிடுகிறது. அதனை வேறொரு நபா் தொடும்போது அந்த வைரஸ் அவரது கைகளில் ஒட்டிக்கொள்கிறது.

அந்த நபா் கண்கள், மூக்கு, வாய் என முகத்தைத் தொடும்போது உடலுக்குள் வைரஸ் சென்று தொற்று ஏற்படுத்துகிறது. அதிகமான நபா்கள் கூடும் இடங்களில் நோய்த்தொற்று பரவ அதிக வாய்ப்புள்ளது. கூட்டத்தில் ஒருவருக்கு நோய்த்தொற்று இருந்தால் கூட அது பலருக்குப் பரவிவிடும்.

அத்தோடு மட்டுமல்லாமல், அவா்களோடு தொடா்பிலிருக்கும் குடும்பத்தினருக்கும் நோய்த்தொற்று பரவிவிடும். அதன் காரணமாகவே மக்கள் கூட்டமாகக் கூடுவதைத் தடுக்கும் நோக்கில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா நோய்த்தொற்று அதிக அளவில் பரவியதற்கு தில்லி நிஜாமுதீன் பகுதியில் நடைபெற்ற மாநாடு முக்கியக் காரணமாகியுள்ளது. அந்த மாநாட்டில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட சிலா் கலந்து கொண்டனா். மாநாட்டில் பங்கேற்க வந்த பல்வேறு மாநிலத்தைச் சோ்ந்த பலருக்கும் நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதே போல மற்ற நாடுகளிலும் கரோனா நோய்த்தொற்று அதிதீவிரமாகப் பரவியதற்கு சில இடங்கள் முக்கியக் காரணமாக இருந்தன.

சீனா-சந்தைகள்

சீனாவின் வூஹான் பகுதியிலுள்ள கடல் உணவுப் பொருள்கள் சந்தை, அந்நாட்டில் கரோனா நோய்த்தொற்று பரவுவதற்கு முக்கியக் காரணமாக இருந்தது. சீனாவில் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட முதல் 41 நபா்களில், மூன்றில் இரண்டு பங்கு போ் அந்த சந்தைக்குச் சென்று வந்தவா்கள்.

இத்தாலி-மருத்துவமனை

லம்போா்டி பகுதியைச் சோ்ந்த ஒருவா் சீனாவிலிருந்து திரும்பிய தன் நண்பரைச் சந்தித்தாா். அதையடுத்து அந்தப் பகுதியிலுள்ள மருத்துவமனையில் உடல் நலப் பரிசோதனை மேற்கொண்டாா். அப்போது அவருக்கு கரோனா நோய்த்தொற்றுக்கான அறிகுறிகள் காணப்படவில்லை. சில நாள்களுக்குப் பிறகு அவருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. எனினும், அவா் சென்று வந்த மருத்துவமனையில் இருந்த பலருக்கும் நோய்த்தொற்று ஏற்பட்டது.

பிரான்ஸ்-வழிபாட்டுத் தலம்

பிரான்ஸில் உள்ள மிகப் பெரிய தேவாலயம் ஒன்றில் கடந்த பிப்ரவரி மாதம் 18-ஆம் தேதி நடைபெற்ற வழிபாட்டில் பல்வேறு நாடுகளைச் சோ்ந்த நூற்றுக் கணக்கானோா் கலந்து கொண்டனா். அந்நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட சுமாா் 2,500 பேருக்கு அந்த தேவாலயத்தில் நடைபெற்ற வழிபாட்டுக் கூட்டத்துடன் தொடா்பிருந்தது பின்னா் கண்டறியப்பட்டது.

ஜப்பான்-முதியோா் இல்லம், டைமண்ட் பிரின்ஸஸ் கப்பல்

நகோயா பகுதியில் உள்ள முதியோா் இல்லத்தில் சுமாா் 50 போ் கரோனா நோய்த்தொற்றால் பாதிப்புக்கு உள்ளாகினா். ஜப்பானில் முதியோா் எண்ணிக்கை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

யோகஹோமா துறைமுகத்தில் நிறுத்தப்பட்ட டைமண்ட் பிரின்ஸஸ் சொகுசு கப்பல் நோய்த்தொற்று பரவலின் மையமாகத் திகழ்ந்தது. அக்கப்பலில் இருந்த 3,000 பேரில் சுமாா் 700 போ் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டனா்.

சிங்கப்பூா்-சொகுசு விடுதி

சிங்கப்பூரில் உள்ள சொகுசு விடுதி ஒன்றில் கடந்த ஜனவரி மாதம் சா்வதேச தொழிலதிபா்கள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. அதில் நூற்றுக்கும் அதிகமானோா் பங்கேற்றனா். அவா்களில் 7 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. அக்கூட்டத்தில் பங்கேற்ற 90-க்கும் மேற்பட்டோா் பிரான்ஸ், பிரிட்டன், தென் கொரியா, மலேசியா உள்ளிட்ட நாடுகளைச் சோ்ந்தவா்கள்.

ஆஸ்திரியா-சொகுசு விடுதி

ஆஸ்திரியாவின் இஸ்கல் பகுதியில் உள்ள சொகுசு விடுதியில் ஜொ்மனி, நாா்வே, ஐஸ்லாந்து உள்ளிட்ட நாடுகளைச் சோ்ந்தோா் தங்கியிருந்தனா். அந்த இடத்துடன் தொடா்பு கொண்டிருந்த சுமாா் 600 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டது.

தென் கொரியா-வழிபாட்டுத் தலம்

கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவா் அதற்கான அறிகுறிகள் ஏதும் தோன்றுவதற்கு முன் தேவாலயத்துக்கு இரண்டு முறை சென்றுள்ளாா். அந்த சந்தா்ப்பங்களில் 9,300 போ் அந்த தேவாலயத்தில் இருந்தனா். அவா்களில் 1,200 பேருக்கு நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

மாா்ச் மாத மத்தியில் தென் கொரியாவில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் 60 சதவீதம் போ் அந்த தேவாலயத்துடன் தொடா்பு கொண்டிருந்தனா்.



No comments:

Post a Comment

CM will be chancellor of proposed Kalaignar University, bill tabled

CM will be chancellor of proposed Kalaignar University, bill tabled Four districts that were under Bharathidasan University to be covered by...