Friday, April 21, 2017

எக்கணமும் தேவை சிக்கனம்

By ம. அஹமது நவ்ரோஸ் பேகம்  |   Published on : 21st April 2017 01:19 AM  |    
சிறு துளி பெரு வெள்ளம் என்பதின் முக்கியத்துவத்தை சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். சிக்கனமாக இருப்பதற்கு குழந்தைப் பருவத்திலேயே கற்றுக் கொள்கிறவர்கள் அந்தப் பழக்கத்தை பெரியவர்களானாலும் அப்படியே தக்க வைத்துக் கொள்கிறார்கள்.
பெரும்பாலான இளைஞர்கள் சிக்கனமாக இருப்பதை கேவலமாகவும், மற்றவர்கள் மத்தியில் அவர்களின் மதிப்பு குறைவதாகவும் கருதுகிறார்கள். இன்னும் கணக்கு பார்த்து செலவு செய்பவர்களுக்கு கஞ்சன் என்ற பட்டப்பெயரையும் சூட்டுகிறார்கள். பணத்தின் அருமை தெரியாமல் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வளர்ப்பதே இதற்கு காரணமாக அமைகிறது.
சிக்கனம், ஊதாரித்தனம், கஞ்சத்தனம் ஆகிய மூன்று பழக்கங்களுக்கிடையே உள்ள வித்தியாசத்தை அவர்களுக்குப் புரியும்படி சொல்லிக் கொடுக்க வேண்டும். ஊதாரித்தனம் வறுமையில் கொண்டு போய் விடும் அல்லது கடன் வாங்கி செலவு செய்யத் தூண்டும்.
பெற்றோர்களும், பெரியவர்களுமே வீட்டில் குழந்தைகளுக்கு வழிகாட்டியாகத் திகழ்கிறார்கள். நம் பழக்க வழக்கங்களே அவர்களின் வாழ்க்கையில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருப்பதால் நாம் சிக்கனத்தைக் கடைபிடிப்பது அவசியம். சிறிய விஷயம் தானே என்று நிறைய நேரங்களில் அலட்சியம் பாராட்டுகிறோம்.
பொதுவாகவே சிக்கனம் என்றால் பணத்தை மிச்சப்படுத்துவது என்று எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் பணம் மட்டுமின்றி எல்லா விஷயங்களிலும் சிக்கனத்தை கடைப்பிடிப்பது மிகவும் அவசியம். அவற்றுள் தண்ணீர், மின்சாரம், வாகன எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு போன்றவை முக்கியமானதாகும்.
சமையல் அறையிலோ, குளியல் அறையிலோ தண்ணீர்க் குழாயைத் திறக்கும் பொழுது தண்ணீர் தேவைப்படும் அளவுக்கே திறக்க வேண்டும். முழுவதுமாகத் திறந்து பாத்திரம் கழுவுவது, வாளி நிறைந்து தண்ணீர் வழிந்து ஓடினாலும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.
தண்ணீர் தாராளமாகக் கிடைக்கும் பொழுது ஒரு நிலைப்பாடு குறைவாகக் கிடைக்கும் பொழுது ஒரு நிலைப்பாடு என்றில்லாமல் எப்பொழுதும் சிக்கனத்தைக் கடைபிடிக்கவேண்டும். தண்ணீர் நம் வாழ்க்கைக்கு மட்டுமல்லாது எதிர்கால சந்ததியருக்கும் இன்றியமையாதது என்பதை நம் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.
ஒரு அறைக்குள் செல்லும் பொழுது மறக்காமல் மின்விளக்கு, மின்விசிறி ஸ்விட்சுகளை போடுபவர்கள் வெளியில் வரும்பொழுது அவற்றை மறக்காமல் அணைத்து விடவேண்டும்.
அடுப்பில் பாலையோ அல்லது வேறு உணவுப் பொருட்களையோ வைத்து விட்டு அது பற்றய ஞாபகமே இன்றி மணிக்கணக்கில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருப்பது, அல்லது அலை பேசியில் அரட்டை அடிப்பது பெரும்பாலான இல்லத்தரசிகளின் வாடிக்கையாக இருக்கிறது. இதனால் இதனால் எரிபொருள் விரயமாவதுடன், உணவுப் பொருளும் வீணாகப் போய்விடுகிறது.
பெண்கள் கடைகளில் பார்க்கும் தட்டு, முட்டு சாமான்களை வாங்கி பரண்களில் தூங்க விடக் கூடாது. புழங்குவதற்கு என்ன அவசியமோ அவை மட்டும் வீட்டில் இருந்தால் போதுமானது. வீட்டில் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கேற்ப உணவு தயாரிக்க வேண்டும்.
அளவுக்கதிகமாக சமைத்து குப்பையில் போடுவதும், குளிர்சாதனப் பெட்டியில் வைத்து இரண்டு மூன்று நாட்களுக்கு உபயோகிப்பதும் தவறான பழக்கங்களாகும். குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுக்கும் பொழுது வயிறு முட்ட, முட்ட கொடுக்கக் கூடாது.
எவ்வளவு சுவையான உணவாக இருந்தாலும் இரைப்பையில் அரை பாகம் சாப்பாடு, கால் பாகம் தண்ணீர், கால் பாகம் காலியாக வைத்திருப்பதால் உடல் ஆரோக்கியம் மேம்படும். அடிக்கடி வெளியில் வாங்கி சாப்பிடுவதற்குப் பதிலாக வீட்டிலேயே உணவு தயாரித்துக் கொடுப்பதால் பணம் மிச்சப்படுவதுடன் குடும்ப ஆரோக்கியத்தையும் உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.
உடை விஷயத்திலும் சிக்கனத்தைக் கடைபிடிக்க வேண்டும். குழந்தைகளுக்கான உடைகளை அலமாரி முழுக்க அடுக்கி வைத்து அவர்கள் ஓரிரு முறை பயன்படுத்திய பின் அல்லது பயன்படுத்தாமலே உடை சிறியதாகி விட்டதென்று கழிக்கும் நிலை நிறைய வீடுகளில் உள்ளது.
நமக்கு வசதி இருந்தாலும் ஆடம்பரமான விலை உயர்ந்த உடைகளை அவர்கள் கேட்கிறார்கள் என்பதற்காக வாங்கித்தரக்கூடாது.
எடுத்ததெற்கெல்லாம் இரு சக்கர வாகனத்தைப் பயன்படுத்தக் கூடாது. குழந்தைகள் படிக்கும் பள்ளியோ, கடை வீதிகளோ அருகில் இருக்கும் பொழுது அவர்களையும் கூட்டிக்கொண்டு நடந்ததே செல்ல வேண்டும். இதனால் எரிபொருள் சேமிப்புடன் நடக்கவே சலித்துக்கொள்ளும் இந்த காலத்துக்கு குழந்தைகளுக்கு நடை பயிற்சியும் கொடுத்த மாதிரி இருக்கும்.
ஆடம்பரம், பகட்டு, படாடோப வாழ்க்கை வாழ விரும்புபவர்களால் வறுமையில் வாடும் மக்களின் துயரத்தை உணர முடியாது. அவர்களிடம் தன்னலமே மிகுந்து காணப்படும். எளிமையாகவும், சிக்கனமாகவும் வாழ்பவர்களின் உள்ளங்கள் என்றும் ஆடம்பரத்தை விரும்பா.
கடைசியாக, பேசும் வார்த்தைகளிலும் சிக்கனம் வேண்டும். பேச்சில் சிக்கனம் காட்டுவதால் நம் ஆற்றல் பெருகும், சக்தி மிச்சமாகும்.

செய்தித்தாளை புதைத்தால் செடி வளரும்... இது ஜப்பானில்!
மு.ராஜேஷ்





ஜப்பான் நாட்டின் தொழில்நுட்பங்கள் சிறந்தவை மற்றும் துல்லியமானவை என்பதை உலகம் அறியும். காகிதத்திலும் சற்று வித்தியாசமான தொழில்நுட்பம் ஒன்றை முயற்சித்திருக்கிறார்கள். ஜப்பானியர்களுக்கு காகிதத்தின் மீது உள்ள காதலை உணர்த்த ஒரிகாமி ஒன்று போதும். இருந்தாலும் அது செயற்கையானதுதானே என்று நினைத்திருப்பார்கள் போல. அதனால் காகிதத்தை உயிர்த்தெழ வைத்துவிட்டார்கள் அந்த காகிதக் காதலர்கள்.

ஜப்பானின் தினசரி நாளிதழ் தி மைனிச்சி (The mainichi). இது ஜப்பானின் மிகப்பெரிய,அதிகமாக விற்பனையாகும் நாளிதழ் நிறுவனங்களில் ஒன்று.

இந்த மைனிச்சி நிறுவனம் தனது செய்தித்தாள்களில் இருந்து செடிகள் வளரும் வகையிலான காகிதத்தை சென்ற ஆண்டு தயாரித்தது. இந்தச் செய்தித்தாள்கள் மண்ணில் விழுந்த சில நாட்களில் அதில் இருந்து சிறிய தாவரங்கள் வளரத் துவங்கும். செய்தித்தாளை படித்து முடித்த பின்பு மண்ணில் போட்டு தண்ணீர் ஊற்றினால் போதும் சிறிய செடிகள் வளர்ந்து மலர்கள் பூத்துக்குலுங்க தொடங்கிவிடும்.

முழுவதும் மறு சுழற்சி செய்யப்பட்ட காகிதத்தால் தயாரிக்கப்படும் இந்த செய்தித்தாளில் மலர்ச்செடிகளின் விதைகள் உட்பட பல செடிகளின் விதைகள் புதிய தொழில்நுட்பம் மூலமாக கலந்து தயாரிக்கப்பட்டு பின்பு அச்சிற்கு செல்கிறது.

மைகளில் உள்ள ரசாயனங்களால் கூட செடிகளின் வளர்ச்சி தடைபடக்கூடாது என்பதற்காக முழுக்க முழுக்க காய்கறிகள் மற்றும் பழங்களில் இருந்து பெறப்பட்ட சாயங்களை கொண்டே செய்தித்தாள் அச்சிடப்படுகிறது.காய்கறிகள் மற்றும் பழங்களின் சாறு சுற்றுச்சூழலையும் மாசு படுத்தாமலிருப்பதோடு மட்டுமின்றி செடிகள் வளர இயற்கை உரமாகவும் பயன்படுகின்றது இதனால் செடிகளும் செழித்து வளர்கின்றன.

ஜப்பானில் உள்ள பள்ளிகளுக்காக அச்சடிக்கப்படும் இந்த நாளிதழ்கள் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு மறுசுழற்சியின் அவசியத்தையும்,இயற்கை வளத்தை காப்பது பற்றியும்,மரம் வளர்ப்பதின் அவசியத்தை உணர்த்தவும் பயன்படுகின்றன.

பள்ளியில் பயிலும் மாணவர்கள் நாளிதழ்களை ஆர்வத்தோடு படிப்பதோடு மட்டுமில்லாமல் அதன் பின்பு நாளிதழை மண்ணில் வைத்து செடிகளாக மாற்றுகின்றனர்.இந்த புதிய முயற்சியின் மூலமாக குழந்தைகளின் வாசிப்பு பழக்கம் மேம்படுவதோடு சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வும் ஏற்படுகிறது.



இப்படி அச்சடிக்கப்பட்ட செய்தித்தாள் ஒரு நாளில் 4 மில்லியன் பிரதிகள் விற்றதோடு மட்டுமில்லாமல் $700,000 டாலர்கள் வருமானத்தையும் மைனிச்சி நிறுவனம் பெற்றது.

காலையில் தினசரி நாளிதழில் தொடங்கும் காகிதப் பயன்பாடு என்பது நமது அன்றாட வாழ்க்கையில் ஒரு வகையில் தவிர்க்கமுடியாத ஒன்றாகவே இருக்கிறது,காகிதம் என்றாலும் அது மக்குவதற்கு 2 வாரத்திற்கு மேல் ஆகும் மறுசுழற்சி செய்வது எளிது என்றாலும் அதில் ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றை இதுபோன்ற தொழில்நுட்பங்கள் குறைக்கலாம்.

ஜப்பானியர்களின் இந்த தொழில்நுட்பம் காகிதம் மக்கும் காலத்தை குறைப்பதோடு மட்டுமில்லாமல் குழந்தைகளுக்கு சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. ஒரிகாமி கொக்குகள் செய்வது அவர்களுக்கு பிடித்தமான பொழுதுபோக்குகளில் ஒன்று. இனிமேல் ஒரிகாமி கொக்குகள் செய்யும்போது அவைகள் பறக்க சிறிய காட்டையும் உருவாக்கிவிடுவார்கள் ஜப்பானியர்கள்.

டெக்னாலஜியை இப்படி சுற்றுசூழலுக்கும், மற்ற உயிரினங்களுக்கும் பாதிப்பில்லாமல் மனிதர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த பயன்படுத்துவதுதான் உண்மையான வளர்ச்சி.
கவிதை அல்ல... உயிர்காக்கும் கவசம்! ஆரோக்கியம் சொல்லும் வைரமுத்து வரிகள்

பாலு சத்யா


தமிழ்நாட்டின் பெரு நகரம், சிறு நகரம், சிற்றூர்... அத்தனையிலும் இந்தக் காட்சிகளைப் பார்க்க முடியும்.... காலை நேரத்தில் அரசு மருத்துவமனையில் வெளி நோயாளிகள் பிரிவில் கையில் சீட்டோடு காத்திருக்கும் பெருங்கூட்டம். சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை, தாம்பரம் சானடோரியத்தில் உள்ள காசநோய் மருத்துவமனை, அரசு கண் மருத்துவமனை போன்ற சிறப்புப் பிரிவுகள் என்றால், கூட்டத்தின் அளவைச் சொல்லி முடியாது. இதற்குச் சற்றும் குறையாதது, மாலை நேரத்தில் அந்தந்தப் பகுதிகளில் பிரபலமான மருத்துவரின் கிளினிக்குகள். டோக்கன் வாங்கிக்கொண்டு, வரிசை வரிசையாகக் கிடக்கும் நாற்காலிகளில் சுருண்டுகொண்டு, தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களை வெறித்துக்கொண்டிருப்பார்கள் எண்ணற்ற நோயாளிகள். ஏக்கர் கணக்கில் பரந்து விரிந்திருக்கும் மல்ட்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளிலோ, உள்ளிருப்பு நோயாளிகளின் எண்ணிக்கையே அதிகம். மருத்துவத் தொழில்நுட்பம் வெகு முன்னேற்றமடைந்துவிட்டது; ஆனாலும் நம்மைத் தாக்கும் நோய்க் கூட்டம் குறைந்தபாடில்லை. மருத்துவமனைகள் அதிகமாகிவிட்டன; நோயாளிகளின் எண்ணிக்கையோ பலமடங்கு அதிகமாகிவிட்டது. உண்மையில் நம் ஆரோக்கியம் நம் கையில் என்பது பலருக்குப் புரிவதில்லை.



அவர் ஒரு பெரு நிறுவனத்தில் நிதி மேலாளர். சமீபத்தில் இருதயத்தில் அடைப்பு ஏற்பட்டது. ஒரு பெரிய தனியார் மருத்துவமனையில் பைபாஸ் அறுவைசிகிச்சை செய்துகொண்டார். அந்தப் பிரச்னை தீர்ந்தது; புதிதாக ஒன்று முளைத்தது. வலது காலையும் வலது கையையும் அசைக்க முடியவில்லை; கூடவே கடுமையான வலி. பைபாஸ் செய்ததால் ஏற்பட்ட பக்கவிளைவாக இருக்குமோ என பயந்தவர், இதய மருத்துவரைப் போய்ப் பார்த்திருக்கிறார்.

`இது எங்க பிரச்னை இல்லை. நியூராலஜிஸ்டைப் போய்ப் பாருங்க!’ என நரம்பியல் நிபுணரிடம் அனுப்பியிருக்கிறார்கள். இப்போது நரம்பியல் நிபுணரிடம் சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறார் அவர். `நோய் நாடி நோய் முதல்நாடி...’ என்கிற திருக்குறளுக்கு ஏற்ப ஆராய்ந்து சிகிச்சை தர மருத்துவர்களுக்கு நேரமில்லை. விளைவு, பெருகுகிறது நோயாளிகளின் எண்ணிக்கை! இன்னொரு பக்கம் ஆரோக்கியம் காக்கும் படலம்! உடல் இளைக்க டயட்... உடல் உறுதிக்கு எக்சர்சைஸ்... இரு மாதங்களுக்கு ஒருமுறை சர்க்கரை டெஸ்ட்... ஆறு மாதங்களுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை... இப்படி மருத்துவர்கள் பரிந்துரைக்கும் பட்டியலின் பின்னால் ஓடி, ஓடிக் களைத்துப் போய்க்கிடக்கிறது இன்றைய தலைமுறை.

இந்தியாவுக்குள் நுழைந்து சில நூறு ஆண்டு காலமே ஆனாலும், அழுத்தமாக காலூன்றி நிற்கிறது ஆங்கில மருத்துவம். அதற்கு முன்னர் நம் பாரம்பர்ய மருத்துவ முறைகளான ஆயுர்வேதம், சித்த மருத்துவம்... இவ்வளவு ஏன்... வீட்டு வைத்தியமே போதுமானதாக இருந்தது நம் முன்னோருக்கு. நோய்க் கூட்டத்திலிருந்து தப்பிக்க, வியாதிகளிடம் இருந்து வருமுன் காக்க எத்தனையோ வழிகள் உள்ளன. அவற்றை நாம் முறையாகக் கடைப்பிடிக்க, கவனிக்கத் தவறிவிட்டோம் என்பதே உண்மை. ஒரு சராசரி மனிதன் ஆரோக்கிய வாழ்வுக்குப் பின்பற்றவேண்டிய எளிய வழிமுறைகளை அழுத்தமாகச் சொல்கிறது ஒரு கவிதை.... கவிஞர் வைரமுத்து `மருத்துவ அறிக்கை’ என்ற தலைப்பில் எழுதியது. அது இங்கே...

மருத்துவ அறிக்கை

டாக்டர்
மருத்துவ முறையை
மாற்றுங்கள்

*
``வாயைத்திற’’ என்பீர்கள்
வயிறு தெரியும்படி
வாய் திறப்போம்

``நாக்கை நீட்டு’’ என்பீர்கள்

கல்கத்தா காளியாய்
நாக்கை நீட்டுவோம்

``முதுகைத் திருப்பி
மூச்சிழு’’ என்பீர்கள்

அப்போது தான்
உண்மையாய் சுவாசிப்போம்
அவ்வளவுதான்!

``அஞ்சேல்’’ என்று
அருள் வாக்கு சொல்வீர்கள்

வாசிக்க முடியாத கையெழுத்தில்
வாயில் வராத பெயரெழுதிக்
காகிதம் கிழிப்பீர்கள்

மூன்று வேளை... என்னும்
தேசிய கீதத்தை
இரண்டே வார்த்தையில்
பாடி முடிப்பீர்கள்

போதாது டாக்டர்

எங்கள் தேவை
இது இல்லை டாக்டர்

நோயாளி பாமரன்
சொல்லிக் கொடுங்கள்

நோயாளி மாணவன்
கற்றுக் கொடுங்கள்

வாய்வழி சுவாசிக்காதே

காற்றை
வடிகட்டும் ஏற்பாடு
வாயில் இல்லையென்று
சொல்லுங்கள்

சுவாசிக்கவும்
சூத்திரமுண்டு

எத்தனை பாமரர்
இஃதறிவார்?

சுவாசிக்கப்படும் சுத்தக்காற்று
நுரையீரலின்
தரைதொட வேண்டும்

தரையெங்கே தொடுகிறது?
தலைதானே தொடுகிறது

சொல்லிக் கொடுங்கள்

சாராயம் என்னும்
திரவத்தீயைத் தீண்டாதே

கல்லீரல் எரிந்துவிடும்

கல்லீரல் என்பது கழுதை
பாரஞ்சுமக்கும்
படுத்தால் எழாது
பயமுறுத்துங்கள்

ஒருகால்வீக்கம்
உடனே கவனி
யானைக்காலின் அறிகுறி

இரு கால் வீக்கம்
இப்போதே கவனி
சிறுநீரகத்தில் சிக்கலிருக்கலாம்

வாயில் என்ன
ஆறாத புண்ணா?

மார்பகப் பரப்பில்
கரையாத கட்டியா?

ஐம்பது தொட்டதும்
பசியே இல்லையா?

சோதிக்கச் சொல்லுங்கள்

அறியாத புற்றுநோய்
ஆனா ஆவன்னா எழுதியிருக்கலாம்.

நோயாளியை
துக்கத்திலிருந்து
துரத்துங்கள் டாக்டர்

நோயொன்றும் துக்கமல்ல

அந்நியக்கசடு வெளியேற
உடம்புக்குள் நிகழும்
உள்நாட்டு யுத்தமது

சர்க்கரை என்பது
வியாதியல்ல
குறைபாடு என்று கூறுங்கள்

செரிக்காத உணவும்
எரிக்காத சக்தியும்
சுடுகாட்டுத்தேரின்
சக்கரங்கள் என்று
சொல்லுங்கள் டாக்டர்

*



ஊமை ஜனங்களிவர்
உள்ளொளி அற்றவர்

பிணி வந்திறப்பினும்
முனி வந்திறந்ததாய்
முனகுவர்
சொல்லிக் கொடுங்கள்

யோகம் என்பது
வியாதி தீர்க்கும்
வித்தை என்று
சொல்லுங்கள்
உயிர்த்தீயை உருட்டி உருட்டி
நெற்றிப் பொட்டில்
நிறுத்தச்சொல்லுங்கள்!

உணவு முறை திருத்துங்கள்
தட்டில் மிச்சம் வைக்காதே
வயிற்றில் மிச்சம்வை

பசியோடு உட்கார்
பசியோடு எழுந்திரு

சொல்லுங்கள் டாக்டர்

அவிக்காத காய்களே
அமிர்தமென்று சொல்லுங்கள்

பச்சை உணவுக்குப்
பாடம் நடத்துங்கள்

மருந்தை உணவாக்காதே
உணவை மருந்தாக்கு


மாத்திரைச் சிறைவிட்டு
மனிதனே வெளியேவா

கோணாத ஒருவன்
கூனன் ஆனான் - ஏனாம்?

அவன்
டப்பா உணவுகளையே
உட்கொண்டதுதானாம்

ஒருவனுக்கு
விஷப்பாம்பு கடித்தும்
விஷமில்லை - ஏனாம்?

அவன்
உப்பில்லா உணவுகளையே
உட்கொண்டதுதானாம்

ஆரோக்கிய மனிதத் தேவை
அரைகிராம் உப்புதானே

மனிதா

உப்பைக் கொட்டிக் கொட்டியே
உயிர் வளர்க்கிறாயே
செடி கொடியா நீ?
சிந்திக்கச்சொல்லுங்கள்

உண்மை இதுதான்

மனிதனைத் தேடி
மரணம் வருவதில்லை!
மரணம் தேடியே
மனிதன் போகிறான்

டாக்டர்
எல்லா மனிதரையும்
இரு கேள்வி கேளுங்கள்:

``பொழுது
மலச்சிக்கல் இல்லாமல்
விடிகிறதா?

மனச்சிக்கல் இல்லாமல்
முடிகிறதா?’’

நன்றி: `வைரமுத்து கவிதைகள்’ நூல். வெளியீடு: சூர்யா வெளியீடு, சென்னை)
கடலை மிட்டாய் விற்பவர் கற்றுக்கொடுத்த அனுபவப் பாடம்! #MorningMotivation

க. பாலாஜி





காலையிலிருந்து சென்னை மக்களை வேகாத வெயிலில் அலையவிட்டு விட்டு அத்தனை அமைதியாக மேற்கில் மறைந்து கொண்டிருந்தது சூரியன். வேலை முடித்து வீட்டுக்கு கிளம்புபவர்கள், கல்லூரி, பள்ளி மாணவர்கள் என அத்தனை கூட்டம் எழும்பூர் ரயில் நிலையத்தில். சுண்டல், வேர்க்கடலை, சமோசா விற்பனை ஜோராக நடந்து கொண்டிருந்தது. அத்துடன் புறநகர் மின்சார ரயில்களில் பயணம் செய்பவர்களின் பாட்டுச் சத்தமும் சேர்ந்து கொண்டு ரயில் நிலையமே திருவிழா திடல் போல காட்சியளித்தது. சென்னை பீச் ஸ்டேஷனிலிருந்து தாம்பரம் செல்லும் ரயிலில் ஏறி ஜன்னல் ஓரமாக இருக்கிறதா என நோட்டம் விட்டால் எல்லாவற்றிலும் ஆட்கள் அமர்ந்திருந்தார்கள். சரி, 'ஏதாச்சும் ஒரு இடத்துல உட்காருவோம்' என நினைத்துக்கொண்டு, நடக்கும் பாதையை ஒட்டிய ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டேன். ரயில் சேத்துப்பட்டை தாண்டியிருந்தது. ஓர் அக்கா கூடை நிறைய ஆரஞ்சு பழங்களை வைத்துக் கொண்டு "அஞ்சு பழம் அம்பது ரூவா, வாங்கிக்கோ வாங்கிக்கோ" என கூவிக்கூவி விற்றுக் கொண்டிருந்தார். இன்னோர் அண்ணன் "10 பிஸ்கட் 20 ரூபா சூடா இருக்கு வேணுமா சார்" என ஒவ்வொருவரிடமும் கேட்டுக் கொண்டிருந்தார். ஒரு குட்டி அலுமினிய வளையத்துக்குள் தன் உடலை நுழைத்து, அதிலிருந்து வெளியே வந்து உதவி கேட்டுக் கொண்டிருந்தாள் ஒரு சிறுமி. கதவு பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு பூ கட்டிக் கொண்டிருந்தார்கள் சில பெண்கள். செய்தித்தாள்களை கீழே மடித்து போட்டு அதில் அமர்ந்து தங்களது அன்றாட நிகழ்வுகள் குறித்து பேசி சிரித்துக் கொண்டு வந்தார்கள் சிலர். கல்லூரி இளைஞர்கள் சிலர் ஃபுட் போர்டில் தொங்கிக் கொண்டு வந்தார்கள்.

ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் மக்கள் கூட்டம் கூட்டமாக ஏறுவதும், இறங்குவதுமாக இருந்தாலும் கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. யாருக்கும் நிற்ககூட இடமில்லாத நிலைமை. ரயில் மாம்பலம் நிலையத்தில் நின்று புதிதாக நிறைய பயணிகளை ஏற்றிக் கொண்டு நகரும் பொழுதுதான் அந்த மனிதரை பார்த்தேன். கறுப்புக் கண்ணாடி அணிந்திருந்தார். ஒரு கையில் ஸ்டிக்குடன், வண்ண வண்ணமாக நீளமான பேனாக்களையும் வைத்திருந்தார். இன்னொரு கையில் நிறைய வேர்க்கடலை பர்ஃபி பாக்கெட்டுகளையும் வைத்திருந்தார். தோளில் ஒரு பை கிழிந்து தொங்கிக் கொண்டிருந்தது. சிகப்பு வண்ண உடையும் முகத்தில் மாஸ்க்கும் மாட்டியிருந்தால் அப்படியே சான்டாகிளாஸ் போலத்தான் இருந்திருப்பார். கூட்டத்தை விலக்கிக் கொண்டு "சுவீட்டான வேர்க்கடலை ரெண்டு பாக்கெட் பத்து சார் வாங்கிக்கங்க" எனச் சொல்லி ஒவ்வொரு அடியாக முன்னேறி வந்து கொண்டிருந்தார். முகத்தில் அத்தனை சந்தோஷம், வழக்கமாக அந்த ரயிலில் பயணிக்கும் சிலர் அவரிடம் "என்னய்யா இன்னிக்கு ரொம்ப சந்தோஷமா இருக்க போலையே.." என்று கேட்க "இன்னிக்குதான் என்னை நீ பாக்குறியா? புதுசா கேக்குற? நாம எப்பவுமே ஹாப்பி தான்யா!" - அந்த குரல் வந்த பக்கம் திரும்பி அவர் பதில் சொல்ல அந்த இடமே கலகலப்பாகியது. ஒரு கடலை பாக்கெட்கூட விற்கவில்லை.



என் பக்கத்தில் வந்ததும் கையிலிருந்த பேனாக்களையும், வேர்க்கடலை பாக்கெட்டுகளையும் மொத்தமாக என் கையில் கொடுத்தார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. நாம்தான் எதுவுமே கேட்கவில்லையே நம் கையில் அத்தனையையும் கொடுக்கிறாரே என குழம்பிக்கொண்டிருந்த நேரத்தில் தொண்டையை செருமிக் கொண்டு.

"சைலன்ஸ் ப்ளீஸ்" எனச் சொல்ல எல்லோரும் பேச்சை நிறுத்திவிட்டு அவரைப் பார்த்தார்கள். அவரிடம் பேசிக் கொண்டிருந்தவர்களோ இன்னும் உற்சாகமாகி "சைலன்ஸ் ப்ளீஸ்.. சைலன்ஸ் ப்ளீஸ்" எனச் சத்தம்போட மொத்தப் பெட்டியும் அமைதியான நொடியில்...

"ஆண்டவன் படைச்சான் என்கிட்டே கொடுத்தான் அனுபவி ராஜான்னு அனுப்பி வைச்சான். என்ன அனுபவி ராஜான்னு அனுப்பி வைச்சான்..." என சத்தம் போட்டு பாடி நிறுத்த அவர்கள் சிவாஜியோடு கோரஸ் பாடும் நண்பர்களைப் போல கோரஸ் போட்டார்கள்.

"உலகம் எந்தன் கைகளிலே.. உருளும் பணமும் பைகளிலே..." என்று பாடி தன் சட்டைப் பாக்கெட்டில் இருந்த சில்லறைகளை ஆட்டிக் காண்பித்தபோது எங்கும் சிரிப்பலை எழுந்தது.

"யோசிச்சுப் பார்த்தா நானே ராஜா..." எனப் பாடி கொஞ்சம் யோசித்துவிட்டு "இன்னிக்கு குரல் சரியில்லை மீதியை நாளைக்கு பாடுறேன்" எனச் சொல்லி என்னிடமிருந்த வேர்க்கடலை மிட்டாய் பாக்கெட்டுகளையும் வாங்கிக் கொண்டிருக்கையில் எல்லோரும் கை தட்ட ஆரம்பித்திருந்தோம். அவருடைய கையிலிருந்த வேர்க்கடலை மிட்டாய்கள் மளமளவென விற்க தொடங்கியிருந்தன. மீதமிருந்த பர்ஃபி பாக்கெட்டுகளை கையில் பிடித்துக் கொண்டு கதவருகில் நின்று கொண்டிருந்தவரிடம் நானும் இரண்டு பர்ஃபி பாக்கெட்டுகளை வாங்கிக் கொண்டு பேச்சு கொடுக்க ஆரம்பித்தேன். "ரொம்ப நல்லா பாடுனீங்க... உங்க குரல்ல அவ்ளோ சந்தோஷம். சூப்பர் சார்'னு சொல்ல.. அமைதியாக என் பக்கம் திரும்பி புன்னகைத்தவர் "மனசுல சந்தோஷம் இருந்தா, அது நம்ம வார்த்தைகள்லயும் வெளிப்படும் சார். அது மட்டுமில்லாம ஏற்கெனவே ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு யோசனையோட போய்கிட்டு இருப்பாங்க. நாமளும் சோகமா மூஞ்ச வைச்சுக்கிட்டு பர்ஃபி வாங்கிக்கங்கன்னு போய் நின்னா எப்படி வாங்குவாங்க. அதான் நீங்க சந்தோஷப்படுற மாதிரி ஒரு பாட்டை எடுத்துவிட்டேன். இதுவும் பிஸினஸ் ட்ரிக்ஸ்தான் சார்!" எனச் சொல்லிய பொழுது ரயில் குரோம்பேட்டையில் நின்றிருந்தது. வேகமாக ரயிலில் இருந்து இறங்கியவர் எதிரே பீச்சுக்கு போகும் ரயிலை பிடிக்க ஸ்டிக்கை கீழே தட்டி தட்டி நடந்து கொண்டிருந்தார்..!



நம்மைச் சுற்றியுள்ள ஒவ்வொரு மனிதரிடமும் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது என்பதை எப்போதாவது உணர்ந்து இருக்கிறீர்களா!? "யார் பேச்சையும் நின்று கவனிக்க நேரமே கிடைப்பதில்லை" எனப் புலம்பும் அதே நேரத்தில் வாட்ஸ்அப் குரூப்பில் வந்த பழைய மொக்கை மெசேஜை இன்னொரு குரூப்புக்கு ஃபார்வேர்ட் செய்து கொண்டிருப்போம். அல்லது, நம் நண்பர் "டிராவலிங் டூ ஊட்டி வித் மை ஃபேமிலி" என போட்ட ஸ்டேட்டஸுக்கு கமென்ட் போட்டுக் கொண்டிருப்போம். ஆனால், 'சூரியன்' படத்தில் கவுண்டமணி சொல்வது போல "நான் இங்கே ரொம்ப பிஸி" டையலாக்கைச் செல்லாதவர்கள் ரொம்பவே குறைவுதான். ஆயிரம் புத்தகங்களில் இருந்து கற்றுக் கொள்ளும் அறிவை ஒருவருடைய அனுபவத்திலிருந்து கற்றுக் கொள்ள முடியும் எனச் சொல்வார்கள். அதே போலத்தான் கடலை மிட்டாய் விற்பவரும் வருடக்கணக்கில் எம்.பி.ஏ மாணவர்கள் படிக்கும் பிசினஸ் சூட்சுமத்தை எளிதாக சொல்லிவிட்டார் தானே!?
வெயில் பாதிப்பிலிருந்து மாணவர்களைக் காக்கும் அரசுப் பள்ளியின் 'வாவ்' முயற்சி!
வி.எஸ்.சரவணன்





கோடை வெயிலின் தாக்கத்தை, பெரியவர்களாலேயே தாங்கிக்கொள்ள முடியவில்லை. பள்ளிக்குச் செல்லும் மாணவர்களுக்கு இன்னும் சிரமம்தான். உற்சாகமாக விளையாடும்போது அதிக எனர்ஜியை இழக்கவும் செய்வார்கள். அவர்களின் உடல்சூடு அதிகமாவதையும் தவிர்க்க முடியாது. மாணவர்களின் கல்வியில் மட்டுமல்ல உடல்நிலையிலும் அக்கறைக் காட்டுகிறது நல்லம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி. காஞ்சிபுரம் மாவட்டம், வண்டலூர் அருகே உள்ளது நல்லம்பாக்கம் அரசுப் பள்ளி.

"எங்கள் பள்ளிக்கு நிழலையும் குளிர்ந்த சூழலையும் தந்துகொண்டிருந்த ஏழு மரங்கள் சில மாதங்களுக்கு முன் வீசிய வர்தா புயலில் விழுந்துவிட்டன. அதனால் இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. அதனால் மாணவர்களில் பலர் சோர்ந்துவிடுவதைப் பார்த்தேன். மேலும், இந்தப் பகுதியில் பலருக்கும் 'அம்மை நோய்’ வருவதாக கேள்விப்பட்டேன். அதனால் மாணவர்களை வெயிலின் பாதிப்பிலிருந்து காப்பாற்ற, தினந்தோறும் பழங்கள் கொடுக்கலாம் என்று முடிவெடுத்தேன். இந்த யோசனையை ஆசிரியர்களோடு கலந்து ஆலோசித்தபோது, ஓரிரு வகுப்புகளுக்கு என்றில்லாமல் பள்ளியில் படிக்கும் 200 மாணவர்களுக்கும் பழங்கள் கொடுக்கலாம் என்றனர்.

அதன்படி, நேற்று முன்தினம் (ஏப்ரல் 17) அனைத்து மாணவர்களுக்கு தர்பூசணி பழக்கீற்றுகளை வாங்கித்தர முடிவுசெய்தோம். அதற்காக தர்பூசணி வியாபாரம் செய்பவரை அழைத்தோம். அவர், ஒவ்வொரு மாணவருக்கும் தர்பூசணிக் கீற்றை அழகாக நறுக்கிக் கொடுத்தார். மாணவர்களும் மகிழ்ச்சியோடு சாப்பிட்டனர். எங்கள் பள்ளி வளாகத்திலேயே அங்கன்வாடி மையம் இருக்கிறது. அங்கு படிக்கும் 20 மாணவர்களுக்கும் தர்பூசணிக் கீற்றுகளைக் கொடுத்தோம். சுவையான தர்பூசணியைக் கொடுத்தவரிடம் விலையைக் கொஞ்சம் குறைத்துகொள்ளுங்கள் என்று கேட்க நினைத்தோம். ஆனால், அவரோ, பணமே வேண்டாம் என்றுக்கூறி ஆச்சர்யத்தை அளித்தார். 'பசங்களுக்குனு நீங்க நல்ல விஷயம் செய்யறீங்க. அதற்கு என்னோட பங்களிப்பாக இன்னைக்கு கொடுத்த தர்பூசணி இருக்கட்டுமே' என்றார். எவ்வளவு வற்புறுத்தியும் அவர் பணம் பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். அவரின் மகன் எங்கள் பள்ளியில்தான் படிக்கிறான்.

இந்தச் செய்தி தெரிந்த பலரும் தாங்களும் இதற்கு உதவுதாக கூறி வருகின்றனர். ஒருவர், இளநீர் வாங்கித்தருவாக கூறியிருக்கிறார். கனடாவில் வசிக்கும் ஒருவர் பள்ளியின் இறுதி நாளன்று அனைத்து மாணவர்களுக்கும் பிரியாணியும் அவர்களுக்கு ரொம்ப பிடித்த ஐஸ்கிரீமோடு விருந்தளிப்பதாகக் கூறினார். ஆனால், தன் பெயரை எங்கும் சொல்லக்கூடாது என்று கண்டிப்புடன் கூறினார். நேற்று, அனைத்து மாணவர்களுக்கும் திராட்சை பழங்கள் வாங்கிதந்தோம். இதற்கு ஆசிரியர்களின் ஒத்துழைப்பைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்" என்று மகிழ்ச்சியின் பூரிப்போடு பகிர்ந்துகொண்டார் பள்ளியின் தலைமை ஆசிரியர் சந்தோஷ் ராஜ்குமார்.



பள்ளியின் வராண்டாவில் ஒன்று முதல் எட்டு வகுப்புகள் வரையிலான மாணவர்கள் அமர்ந்து சாப்பிடும் காட்சியே பேரழகாக இருக்கிறது. மாணவர்களுக்கு உதவுவதற்கான வெளியிருந்து மட்டுமல்ல, பள்ளிக்குள் இருந்தும் ஒருவர் முன் வந்திருக்கிறார். அதுவும் அங்கு படிக்கும் மாணவர்.

" ஆமாம். அந்தப் பையன் பேர் ரஞ்சித். ஆறாம் வகுப்பு படிக்கிறான். தன் வீட்டிலிருந்து தயிரும் மோரும் எடுத்து வருகிறேன். அதை எல்லோருக்கும் கொடுக்கலாம் என்றான். அவன் அப்படிச் சொன்னது நெகிழ்வான தருணம். ஒரு நல்ல விஷயம், மற்றவர்களையும் அதில் ஈடுபடச் செய்யும் என்பது உண்மை என்பது இது ஓர் எடுத்துக்காடு. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உதவும் எண்ணம் பலருக்கும் இருக்கிறது. அவர்கள் தாங்களாகவே முன்வருவது உதவுவது மகிழ்ச்சியான விஷயம்." என்கிறார் அந்தப் பள்ளியின் ஆசிரியை நா.கிருஷ்ணவேணி.

அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நல்லதொரு அன்பு பரிமாற்றம் நிகழ்வது ஆரோக்கியமான தலைமுறைக்கு வித்திடுவதாக அமையும். இதுபோன்ற அரசுப் பள்ளிகளை வாழ்த்துவதும் உதவுவதும் அவசியம்.

‘‘ஏன் டாஸ்மாக்குக்கு எதிராக போராடுகிறோம் தெரியுமா’’ - தமிழக பெண்கள் சார்பில் ஒரு மடல்!

ஶ்ரீதேவி.கே




டாஸ்மாக்... இந்த வார்த்தையக் கேக்கும்போதே எங்க மனசுல வெஷம் பாய்ச்சின மாதிரி இருக்கு. இது எத்தனை பொண்ணுகள விதவையா, வாழாவெட்டியா ஆக்கி வீதியில வீசியிருக்கு தெரியுமா? புருஷன் குடிச்சிட்டு வர்ற வீட்டுல அவனுக்கு வாக்கப்பட்ட பெண்டாட்டியும், அவனை நம்பிப் பொறந்த புள்ளையும் படற வேதனை எவ்வளவு கொடூரமானது தெரியுமா?இப்போ இத்தனை பொம்பளைங்க தமிழ்நாட்டுல வீதியில இறங்கி போராடுறோமே ஏன் தெரியுமா..?

புருஷன் ஒவ்வொரு நாளும் வேலை முடிஞ்சி வீட்டுக்கு வரும்போதே குடிச்சிட்டுத்தான் வருவான்னு தெரிஞ்ச பொம்பள மனசு படுற பாடு, சென்மச் சாபம். அவன் வீதியில ஆடை வெலகிக் கெடக்குற கோலத்த, பார்த்தவங்க வீட்டுல வந்து பகடியா சொல்லிட்டுப் போக, ஓடிப்போயி அவனத் தோள் சொமையாத் தூக்கியாந்து வீட்டுக்குள்ள போட்டு, சாப்பிட்டானோ இல்லையோனு வயித்துக்கு ஆகாரம் வெச்சு, அவன் போதையில ஒறங்கிப்போக, பாவி மகளுக்கு தூக்கம் ஒரு கேடா? பாவம் கொட்டக் கொட்டக் முழிச்சிருப்பா. சில பேருக்கு போதையில இருக்கும்போது பொண்டாட்டிய அடிக்கிறது வழக்கமாகிச்போச்சு. அவன் கண்ணுல பட்டா அடிப்பான், உதைப்பான், 'இன்னும் குடிக்கக் காசு கொடுடீ'ன்னு தலைமுடியப் புடிப்பான். அதவிட, கண்ணுமண்னு தெரியாம அவன் ஏசுற வார்த்தைங்க பெருசா வலிக்கும் அவளுக்கு. அதனாலயே புருஷனுக்கு போதை குறையுற வரைக்கும் அவன் கண்ணுல பட்டுடக் கூடாதுன்னு தன் குழந்தைய முந்தானையில ஒளிச்சிக்கிட்டு ஏதோ ஒரு வீட்டுத் திண்ணையில கெடக்குற அவளோட அவஸ்தைய என்னன்னு சொல்ல?

பாவி மக அவன கட்டினத தவிர வேறு எந்தப் பாவத்தையும் பண்ணலையே? சோம்பேறியா, ஒதவாக்கரையா அவனுக்குக் கட்டுனவன் வாய்ச்சிருந்தா, விதிச்சது அதுதான்னு விடலாம். ஆனா, ஓடா ஒழைக்குற மனுசன், அப்படி ஒழச்ச காசையெல்லாம் நேரா சாராயக் கடையில கொண்டு கொடுத்து கரியாக்குற கொடுமைய, அவ மனசு எப்படித்தான் ஏத்துக்கும்? அஞ்சையும் பத்தையும் அவ யோசிச்சு யோசிச்சு செலவளிச்சு அஞ்சறப் பெட்டியில சேர்த்துவெக்க, அவனோ கொல்லுற குடிக்க நோகாம காச நீட்டிட்டு வர்ற பாதகத்தை பார்த்துப் பார்த்துப் பழகித்தான் போயிட்டா போக்கத்தவ. ஆனாலும், புள்ளைங்க பசியாத்த முடியாத வறுமையிலயும் புருஷன் குடியை விடாமக் கெடக்குறதைக் காணச் சகிக்காம, அந்த கொடூரத்தை வாழச் சகிக்காம ஊருக்கெணரு, ஒரு மொழம் கயிறுனு உசுரை மாய்ச்சுக்கிட்ட பொம்பளைக கதையையெல்லாம் கேட்டிருக்கோம்தானே? குடி, குடிக்கிறவன் ஒடம்ப மட்டுமா கெடுக்குது? அவன் வீட்டுப் பொம்பளைக மானம், நிம்மதி, சந்தோஷம், உயிருனு அம்புட்டையும் பறிச்சுப் போடுது. அவங்க செத்துச் செத்துப் பொழைக்கிறாங்க, இல்ல செத்தே போறாங்க.

கட்டிக்க நல்ல துணி இல்ல. நல்ல நாளு கிழமையில மத்த பொம்பளைங்களப் போல வீதியிட நடமாட முடியல. நல்லது கெட்டதுக்கு பக்கத்துல வாங்கின கடன அடைக்க முடியல. இப்படி திரும்பின பக்கம் எல்லாம் ஏச்சும், பேச்சும் அவள குனிக் குறுக வெச்சு, குமுறி அழகுறோமே?. இந்தப் பொழப்புக்கு தான் பொம்பளையா பொறந்தமான்னு ஒவ்வொரு நிமிஷமும் உசுற உலுக்குதே. எங்க வலி யாருக்கும் புரியலையா?

ஈரக்கொல செத்து, வயிறெல்லாம் புண்ணாகி, வாழ நாதியத்து அவன் படுக்கையில கெடக்குறப்போ தாலிய காப்பாத்த நாங்க படுற பாடு சொல்லிமாளுமா? பொம்பள உடம்பையும், மனசையும் கல்லா இறுக வெச்ச அவன காப்பாத்த எத்தனையோ இடத்துல கையேந்துறோம். ஆஸ்பத்திரி ஆஸ்பத்திரியா அலைஞ்சு தாலிய அடகு வச்சி வீட்டுக்கு கொண்டாறோம். எந்திரிச்சி நடக்க உடம்புல தெம்பு வந்ததும் நேரா ‘டாஸ்மாக்’ கடைக்குத் தானே போயித் தொலைக்கிறான். நாங்க பட்ட பாடெல்லாம் வீணாப் போகுதே! எம் புள்ளையும் குட்டியும் நடுத்தெருவுல நிக்குதே. எங்க கண்ணீர தொடக்கணும்னு யாருக்கும் தோணலையா?

பொம்பளையா பொறந்துட்ட பச்ச மண்ணு கூட இங்க வாழ முடியலையே. குடிச்சி தொலைக்கிறவன் தன்னோட வெறிய தீத்துக்க வீட்ட உடைச்சு சின்னப் புள்ளைங்கள சிதைச்சு சாவடிச்சி வேலியில எறியுரானே, சொல்லாத உறுப்புல தீ வைச்சுக் கொல்லுறானே. அந்த புள்ளைங்க என்ன பாவம் செஞ்சிச்சு. அந்த நேரத்தில எப்படித் துடிச்சிருக்கும், என்ன நெனச்சி கதறியிருக்கும். பொம்பளையா பொறந்தது அது செஞ்ச குத்தமா? இப்படி எத்தனை குழந்தைங்க, பொண்ணுங்க இந்த மண்ண விட்டுப்போச்சோ...அந்த கதறல் எதுவும் உங்க காதில் விழலையா?

எல்லாரும் ஓட்டுப் போட்டு உக்கார வெச்ச அரசாங்கம் தானே டாஸ்மாக் கடைய நடத்துது. படிப்படியா கடைகள மூடுறேன்னு கண்ணாமூச்சி காட்டுது. குடியிருக்குற வீட்டுக்குப் பக்கத்தில கடைய தெறந்தா பொம்பளைங்களும் குழந்தைங்களும் தெருவுல நடக்க முடியுமா? குடிக்கிறவன் வீட்டுல உலை கொதிக்குமா. குடிச்சிக் குடிச்சே எத்தனை குடும்பம் நாதியத்துப் போகுமோ? எத்தன குழந்தைங்க நடுத்தெருவுக்கு வருமோ?

எங்க குழந்தைங்க படிக்க வழியில்லாம வேலைக்கு போகுது. சின்ன வயசுலயே அப்பனப் பார்த்து அதுவும் குடியில அழியுது. போதையில சிக்கி அடுத்த தலைமுறையும் அழிஞ்சி போறது அரசாங்கத்துக்கு தெரியாதா? இந்தப் பணத்துலதான் எங்கள வாழ வைக்கிறதா அரசாங்கம் சொல்லுது. இப்படியொரு வாழ்க்க எங்களுக்கு எதுக்கு? பொறந்த பொறப்புக்கும், பெத்துப் போட்ட பிள்ளைக்குன்னும் அல்லாடுற பொழப்புன்னு கெடந்து சாவுறோம்.

தீபாவளி, பொங்கல், தேர்தலுன்னா கொட்டுற டாஸ்மாக்கு வருமானத்தை செய்தியாப் போடுறாங்க. டிவி பொட்டியில இருந்து ஆடு, மாடு வரை அரசாங்கம் கொடுக்குற இலவசமெல்லாம் இந்த வருமானத்துலதான்னு சொல்லிக்குறாங்க. இந்தக் குடிக்கு புருஷனை சாகக் கொடுத்த பொம்பளைங்க, தகப்பனைத் தூக்கிக்கொடுத்த புள்ளைங்க, புள்ளையை தூக்கிப்போட்ட பெத்தவங்கனு... இவங்களுக்கு எல்லாம் என்ன நியாயம் சொல்லும் இந்த அரசாங்கம்? அப்ப நீங்க போடுற திட்டங்க, அள்ளிக் கொடுக்குற இலவசங்க எல்லாத்துக்கும் மூலதனம் பொம்பளைங்க கண்ணீருதானா?

எல்லாத்தையும் சகிச்சிக்க நாங்க என்ன ஏமாளிப் பொம்பளைங்களா? அரசாங்கம் எங்களுக்கு வாழ்க்க தர வேணாம். எங்கள வாழ விட்டாப் போதும். இலவசமா எதுவும் தர வேணாம். அரைவயித்துக் கஞ்சியாவது நிம்மதியா குடிக்கனும். கசிங்கின சேலையக்கூட கவுரவமாக கட்டிக்கிட்டு நடக்கணும். இவன் பொண்டாட்டின்னு பெருமையா சொல்லிக்கனும். எம் புருஷன் குடியில செத்து அழியாமா என் குடும்பம் ஒவ்வொரு கவள சோத்தையும் சந்தோஷமா விழுங்கணும்.

எங்க வாழ்க்கைய அரசாங்கம் காப்பாத்தும்னு நம்பி இத்தன நாளா ஏமாந்தது போதும். இனியும் பார்த்துகிட்டு சும்மா இருக்க முடியாது. திருப்பூருல ஈஸ்வரி கன்னத்துல அடிவாங்கினப்போ அத்தனை பொம்பளைக்கும் அடி வயிறு எறிஞ்சது. இப்போ சாமளாபுரம் டாஸ்மாக் கடைய மூடிட்டதா கேள்விப்பட்டதும் அடி மனசு குளிறுது. குடிச்சிட்டு வர்ற கணவன் கிட்ட அடி வாங்கி தினம் தினம் சாவறத விட ரோட்டுல இறங்கி போராடி டாஸ்மாக்க மூடுறதுனு முடிவெடுத்துட்டோம். வறுமையிலும் கொடுமையிலும் இறுகின மனசுக்கு போராட்ட வலி ஒண்ணும் புதுசில்ல. பொம்பள வீதியில இறங்கின அப்புறம் வெற்றிய பாக்காம வீடு திரும்பினதில்லை. புலிய முறத்தால அடிச்ச தமிழச்சிங்க இப்போ டாஸ்மாக்க இழுத்து மூடுறதுக்காகவும் ஓங்கி அடிப்போங்க... உயிரையும் கொடுப்போங்க. எங்க பிள்ளைங்களாவது குடியில அழியாம கவுரவமா வாழட்டும்.

"பொண்ணு ஆபரேஷனுக்கு சம்பாதிக்க சவூதி போனேன். ஆனா, அங்க....!" - ஒரு தந்தையின் கண்ணீர் கதை #MustRead..VIKATAN

ஜெ.அன்பரசன்

தே.அசோக்குமார்




'அவனுகென்னப்பா சவூதில வேலை பாக்குறான்' - இப்போதும் நமது ஊர்ப்புறங்களில் வளைகுடா நாடுகளில் வேலைசெய்பவரைப் பற்றி இப்படிக் கூறக் கேள்விபட்டிருப்போம். வளைகுடா நாடுகளில் வேலை செய்வது என்ன அவ்வளவு பெரிய கௌரவமா? ஒருவேளை, நன்றாகப் படித்து நல்ல வேலையில் சேர்ந்து லட்சம்லட்சமாச் சம்பளம் வாங்குபவருக்கு வேண்டுமானால் அது கௌரமாக இருக்கலாம். ஆனால், ஏழ்மையில் வாடும் குடும்பத்தைக் காப்பாற்ற, வேலை வேண்டி வளைகுடா நாடுகளுக்குப் பயணப்படும் கூலித் தொழிலாளிகளுக்கு என்றுமே அது ஒரு சாபம்தான்.

மற்ற நாடுகளுக்குச் செல்வதைக் காட்டிலும் வளைகுடா நாடுகளுக்குச் செல்வது செலவுக் குறைவு என்பதால், பெரும்பாலானோர் சவூதி அரேபியா, பஹ்ரைன், கத்தார், ஓமன் ஆகிய நாடுகளுக்குப் பிழைப்புத் தேடிச் செல்கின்றனர். வளைகுடா நாடுகள் அனைத்தும் கூலித் தொழிலுக்காக இந்தியர்களையே அதிலும் குறிப்பாகத் தமிழர்களையே குறிவைக்கின்றன. குறைவான சம்பளத்தில் அதிக வேலை வாங்கிக்கொள்வதற்கும், அவர்கள் சொல்லும் வேலையை அடிமை முறையில் செய்யவும் தொழிலாளி தேவைப்படுகிறான். அதற்காக ஏழ்மையில் வேலை தேடிச் செல்லும் நம் ஊர் நபர்களை அவர்கள் தேர்ந்தெடுத்துக்கொள்கின்றனர். வளைகுடா நாடுகளுக்கு, வேலைக்கு ஆள்பிடித்து அனுப்பும் ஏஜென்டுகளின் பித்தலாட்டம் பலரின் வாழ்க்கையையே தொலைத்துப்போகச் செய்கிறது. இவர்கள் நமது ஊர் ஆட்களிடம் நல்ல சம்பளம், எட்டுமணி நேரம் பணி என்று சொல்லி... எங்கோ ஒரு மூலையில் உயிரைக் கரைந்துபோகச் செய்யும் பாலைவனத்தின் நடுவில் ஒட்டகம் மேய்ப்பதற்கும், பணக்காரர்களின் வீடுகளில் அடிமையாக வேலை செய்வதற்குமான வேலையை ஏற்பாடு செய்துகொடுக்கின்றனர். அவர்களும் நம் ஊர் ஏஜென்ட்களின் சதி புரியாமல் வளைகுடா நாடுகளில் சென்று மாட்டிக்கொள்கிறார்கள்.



நினைத்துச் சென்ற வேலையில்லாமல் கஷ்டப்படுவது ஒருபுறம் என்றால்... மறுபுறம், உடல்ரீதியான பல கொடுமைகளுக்கும் உள்ளாக்கப்படுகிறார்கள். அப்படிக் கொடுக்கப்படும் வேலையை பல மணிநேரங்கள் செய்தாக வேண்டிய கட்டாயத்துக்கு நம்மூர் ஆட்கள் தள்ளப்படுகிறார்கள். தாம் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என அந்த நாட்டு உரிமையாளர்களிடம் கேட்கும்போது அவர்களின் மிரட்டலுக்கு ஆளாக்கப்படுகின்றனர். மேலும், சிலரோ நம் விதி இதுதான் என தம் வீட்டுக் கஷ்டங்களை நினைத்து அங்கேயே கிடந்து வாழ்வைத் தொலைக்கின்றனர். அப்படியான நிலைமைக்குத் தள்ளப்பட்டவர்தான் ராமநாதபுரம் களத்தாவூரைச் சேர்ந்த பழனிக்குமார் கருப்பையா. இவர், கடந்த 2014-ம் ஆண்டு சவூதி அரேபியாவுக்கு கொத்தனார் வேலைக்குச் சென்று... அங்கு நிறுவன உரிமையாளரால் கொடுமைப்படுத்தப்பட்டு 10 மாதங்கள் சிறைத் தண்டனை பெற்றிருக்கிறார். பலதடவை இந்தியத் தூதரகத்துக்குத் தன்னை மீட்கும்படி மனு அனுப்பியிருக்கிறார். ஆனால், இந்தியத் தூதரகம் அந்த மனுவைக்கூட வாங்கிக்கொள்ளவில்லை. கடைசியில், 'மக்கள் பாதை' இளைஞர்களுக்குத் தகவல் தெரிய, பல போராட்டங்களுக்குப் பிறகு... ஒருவழியாக அவர்கள் பழனிக்குமார் கருப்பையாவை சிறையில் இருந்து மீட்டு தமிழ்நாடு கொண்டுவந்து சேர்த்துள்ளனர். இன்று (20-04-2017) அதிகாலை சென்னை விமான நிலையத்துக்கு வந்த பழனிகுமார் கருப்பையா நம்மிடம் பேசியபோது...



"எனக்குச் சொந்த ஊரு ராமநாதபுரம் களத்தாவூர். கல்யாணமாகி மூணு பொம்பளை புள்ளைங்க இருக்குது. முதல் பிரசவத்துல ரெட்டை குழந்தைங்க பொறந்தாங்க. அதுல ஒரு புள்ளை மாற்றுத்திறனாளியா பொறந்திடுச்சி. 'ஆபரேஷன் பண்ணினா சரியாயிடும்; ஆனா, அதுக்குக் கொஞ்சம் பணம் அதிகமா செலாவாகும்'னு டாக்டர்ங்க சொன்னாங்க. அதனால வெளிநாட்டுக்குப் போயி ரெண்டு வருஷம் சம்பாதிச்சா, அதில் கிடைக்கும் பணத்துல பாப்பாவைக் குணப்படுத்தலாம்னு நினைச்சி சவூதிக்கு போகலாம்னு முடிவெடுத்தேன். 'எட்டு மணி நேரம் வேலை, நல்ல சம்பளம், நல்ல முதலாளி, ஒரு பிரச்னையும் இருக்காது'னு ஏஜென்ட் சொல்ல... நானும் 2014-ம் வருஷம் சவூதிக்குப் போனேன். ஆனா, அங்கே எனக்கு இங்கே சொன்ன மாதிரி வேலை தரல. 12 - 14 மணி நேரம் வேலை செய்யச் சொல்லிக் கட்டாயப்படுத்தினாங்க. களைப்புக்குக் கொஞ்சம் ஓய்வெடுத்தாலும் கேவலமாக திட்டுவாங்க. சொன்ன சம்பளமும் தரலை. எதிர்த்து கேள்வி கேட்டா அடிப்பாங்க. எம்பொண்ணுக்கு ஆபரேஷன் பண்ண வேணும். அதனால, எல்லாத்தையும் தாங்கிக்கிட்டேன். அதற்காக இன்னும் அதிகமா வேலை கொடுக்க ஆரம்பிச்சாங்க. ரொம்ப கஷ்டமா இருக்கும். நேரத்துக்குச் சாப்பிட முடியாது. பல்லைக் கடிச்சிக்கிட்டு 15 மாசம் ஓட்டினேன். இதுக்கு மேல இங்க இருந்தா செத்துருவோம்னு நெனச்சி ஊருக்குப் போலாம்னு முடிவு பண்ணேன். ஆனா, விடமாட்டேன்னு சொல்லிட்டாங்க. எனக்கு வொர்க் பர்மிட் முடியலை. ஆனாலும், எப்படியோ கஷ்டப்பட்டு பாஸ்போர்ட் வாங்கிட்டு ஊருக்குக் கெளம்பலாம்னு முடிவு செஞ்சப்போ போலீஸ்காரங்க, 'உனக்கு வொர்க் பர்மிட் எப்பவோ முடிஞ்சிருச்சி. ஆனா, நீ இன்னும் இங்கேயே சுத்திக்கிட்டு இருக்கியா'னு சொல்லி கைதுபண்ணிட்டாங்க. 'எனக்கு இன்னும் வொர்க் பர்மிட் முடியல; என்ன விட்ருங்க; என் ஊருக்கு போகணும்'னு எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். ஆனா, அவங்க யாருமே காதுல வாங்கலை.



ஊர்ல என் தம்பிக்கு போன் பண்ணிச் சொன்னேன். அவனும் யார்யாரையோ பார்த்துப் பேசினான். எவ்வளவோ முயற்சி செஞ்சான். ஆனா, ஒண்ணும் பண்ண முடியலை. சவூதில இருக்குற இந்தியத் தூதரகத்துக்கு, 'என்மேல எந்தத் தப்பும் இல்லை; என்னைக் காப்பாத்துங்க'னு பலமுறை மனுக் கொடுத்தேன். அவங்க அந்த மனுவைப் படிச்சாங்களா, இல்லையானுகூட எனக்குத் தெரியாது. இப்படியே சவூதி ஜெயில்ல பத்து மாசம் ஓடிருச்சி. நான் ஜெயில்ல இருந்தபோது என்னோட கவலை ஒண்ணேஒண்ணுதான். எம்பொண்ணுக்கு நான் எப்படி ஆபரேஷன் செய்யப்போறேன்? என்னை நம்புன குடும்பத்துக்குக் கொஞ்சமாவது சந்தோஷம் கொடுக்கத்தான் சவூதி வந்தேன். ஆனா, என் நிலைமையால என் குடும்பமே இப்ப நிலைகுலைஞ்சி போச்சுனு நினைக்கும்போதுதான்..." என்று அவர் கண்களில் பெருக்கெடுத்த கண்ணீரைத் துடைத்தபடி மீண்டும் பேச ஆரம்பித்தார். ''அப்புறம் ஜெயிலுக்கு வந்த ஒருத்தர்கிட்ட இருந்து போனை வாங்கி, 'என்னைக் காப்பாத்துங்க'னு பேசி வாட்ஸ்அப்ல போட்டேன். அதை, 'மக்கள் பாதை' இளைஞர்கள் கேட்டுட்டு என்னை வெளியில் கொண்டுவர சவூதில இருந்த யார்யாரையோ பிடிச்சி முயற்சி பண்ணாங்க. அவங்கமூலமா சமூக நல ஆர்வலரான வாசு சிதம்பரம் சார் என்னைவந்து பார்த்தாங்க. 'எப்படியாவது உன்னை வெளியில கொண்டு வர்றேன்'னு சொல்லி எனக்காக அந்த நாட்டு போலீஸ்கிட்ட பேசினார். 35,000 ரியால் பணம் ஃபைன் கட்டணும்னு போலீஸ்காரங்க சொல்லியிருக்காங்க. அப்புறம் போலீஸ், கோர்ட்டுன்னு அலைஞ்சி வாசு சிதம்பரம் சார் என்ன ஃபைன் கட்டாம வெளியில கொண்டுவந்துட்டாங்க. கையில சுத்தமா பணம் இல்லை. எப்படி ஊருக்குப் போறதுனு வழிதெரியாம தவிச்சப்பதான் மக்கள் பாதை இளைஞர்கள் எனக்கான எல்லாச் செலவையும் ஏத்துக்கிட்டு என்னை ஊருக்குக் கொண்டு வந்தாங்க. என்னை மீட்டு ஊருக்குக் கொண்டுவந்த அனைவரையும் நான் எப்பவும் மறக்கமாட்டேன்.



என்னை மாதிரி பலபேர் வெளியில தெரியாம அங்கே பல கொடுமைகளைச் சந்திச்சிக்கிட்டு எப்படா நம்ம ஊருக்குப் போவோம்னு தவம் கெடக்குறாங்க. இந்திய அரசாங்கம் அவங்களுக்கு நல்ல வேலை எல்லாம் வாங்கித் தர வேணாம். அங்கே சிக்கித் தவிக்கிற நம்ம ஆளுங்கள பத்திரமா மீட்டுக்கொண்டு வந்தாலே புண்ணியமா போகும்'' என்றவர், ''ஆசை ஆசையா சவூதி போனேன். இரண்டரை வருஷம் வீணா போச்சி; பணமும் சம்பாதிக்கலை மனசும் தளர்ந்துடுச்சி. எம்பொண்ணு ஆபரேஷன் எப்படிப் பண்றதுன்னு தெரியலை. ஒரு மாதிரி வலிக்குது" என்று சொல்லிமுடிக்கும் முன்பே கண்ணீர் மீண்டும் பெருக்கெடுத்தது.

பெற்ற மகளை குணமாக்க சவூதி அரேபியா சென்றவர், 10 மாதம் சிறையையும் சித்ரவதையையும் மட்டுமே அனுபவித்துவிட்டு திரும்பி உள்ளார். வெறும் கையோடு திரும்பியவரின் வேதனைக்கு தீர்வு, அவர் மகள் குணமடைவதில்தான் இருக்கிறது. அவர் மகள் குணமாவதற்கு பணம் மட்டுமே தடையாக இருக்கிறது... தடை தகருமா? தந்தையின் வேதனை தீருமா?
சவூதி அரேபியாவில் புதிய சட்டம் - வெளிநாட்டவர்களுக்கு சிக்கல்
கார்த்திக்.சி

சவூதி அரேபியாவில் உள்ள ஷாப்பிங் மால்களில் அந்நாட்டவர்களை மட்டும் வேலைக்கு நியமிக்க வேண்டும் என்று சவூதி அரேபிய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை சவூதி அரேபிய தொழிலாளர் அமைச்சகம் பிறப்பித்துள்ளது.




சவூதி அரேபியாவில் 2030-ம் ஆண்டுக்கான பொருளாதார சீர்திருத்த திட்டம் கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. அதில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, சவூதி அரேபியாவில் சிறு, குறு தொழில் நடைபெறும் இடங்களில் 15 லட்சம் பேர் வரை வேலை பார்த்து வருகின்றனர். அதில் 3 லட்சம் பேர் மட்டுமே சவூதி நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. சவூதி நாட்டில் சிறு தொழில்கள் நடைபெறும் துறைகளில் 5-ல் ஒருவர் மட்டுமே சவூதி நாட்டைச் சேர்ந்தவர் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.

அதில் 2020-ம் ஆண்டுக்குள் இந்தத் துறைகளில் சவூதி நாட்டைச் சேர்ந்த 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்தத் திட்டத்தை நிறைவேற்றும் நோக்கில் அந்நாட்டு அரசு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. சவூதி அரசின் இந்த நடவடிக்கையால் ஏராளமான இந்தியர்கள் வேலை வாய்ப்புகளை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பொறியியல் படிப்புக்கு எப்போது விண்ணப்பிக்கலாம்?
SAKTHIVEL MURUGAN G

பொறியியல் படிப்பு சேர்க்கைக்கான அனைத்துப் பணிகளையும் அண்ணா பல்கலைக்கழகம் மேற்கொண்டு வருகிறது. இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் சேர்வதற்காக விண்ணப்பம் மே 1 தேதி முதல் வழங்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருக்கிறது. மே 31-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.



மே-12ம் தேதி பன்னிரண்டாம் வகுப்புக்கான பொது தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அறிவித்து இருக்கிறார். பொதுத்தேர்வில் எவ்வளவு மதிப்பெண் பெற்றிருக்கிறீர்கள் என்ற விவரத்தை விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும். அதன்பின்பு இணையத்தில் விண்ணப்பித்த விவரங்களை நகலோடு அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பத்தை ஜூன் மாதம் 3-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். ஜூன் மாதம் 20-ம் தேதி ரேண்டாம் எண்ணும், 22-ம் தேதி ரேங்க் பட்டியலையும் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிடும். அதன் பின்பு, ஜூன் மாதம் 27-ம் தேதி கவுன்சிலிங் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு மே 7ம் தேதி நடைபெறுகிறது. நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு அதன் பின்பு மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங் நடைபெற வேண்டும். அதன் பின்பு பொறியியல் படிப்புக்கான கவுன்சிலிங் நடத்தத் திட்டமிட்டு இருப்பதால் கவுன்சிலிங் நடைபெறுவதற்கான தேதி மாற வாய்ப்பு உள்ளது.

பொறியியல் படிப்புக்கான விண்ணப்பத்தை ஆன்லைன் வழியாக விண்ணப்பித்தால் மட்டும் போதுமானது. இணையத்தில் விண்ணப்பிக்கும் போது கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு போன்றவற்றை பயன்படுத்தி விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தலாம். விண்ணப்பக்கட்டணம் குறித்த விவரங்கள் ஏப்ரல் 30 தேதி வெளியிடப்படும். கடந்த ஆண்டு பொதுப்பிரிவு, பிற்படுத்தப்பட்ட பிரிவினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு ரூ. 500 ரூபாயும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி பிரிவைச் சார்ந்தவர்களுக்கு ரூ. 250 கட்டணமாகப் பெற்றிருக்கிறது.

விண்ணப்பத்துடன் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழின் நகல், பன்னிரண்டாம் வகுப்பின் மதிப்பெண் நகல் - பொதுத்தேர்வு முடிவு வெளியானவுடன் இணையத்தில் மதிப்பெண் வெளியிடப்படும். அதனை பிரிண்ட் எடுத்து இணைக்கப்பட வேண்டும். இதனுடன் சாதி சான்றிதழ் நகல், பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வின் ஹால் டிக்கெட், முதல் பட்டதாரியாக இருந்தால் அதற்கான சான்றிதழையும் இணைத்து அனுப்ப வேண்டும்.

விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினர், உடல் ஊனமுற்றோர்களுக்கான பிரிவில் விண்ணப்பிப்பவர்கள் அதற்கான சான்றிதழை இணைக்க வேண்டும். கவுன்சிலிங் போது அனைத்துச் சான்றிதழ்களுடன் மதிப்பெண் சான்றிதழையும், பள்ளி இட மாற்றுச்சான்றிதழ் எடுத்துவர வேண்டும். இதுவரை முதல் பட்டதாரிக்கான சான்றிழையும், சாதி சான்றிதழ் போன்றவற்றைப் பெறாமல் இருந்தால் உடனே விண்ணப்பித்து சான்றிதழ்களைப் பெற்று பிரதிகளை விண்ணப்பத்துடன் இணைக்கவும்.

விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினர், உடல் ஊனமுற்றோருக்கான இடங்களுக்கு முன்னதாகவே கவுன்சிலிங் நடைபெறும். அதன் பின்பு பொது கவுன்சிலிங் தொடங்கப்படும். வெக்கேஷனல் பிரிவு படித்தவர்களுக்குத் தனியாகவும் கவுன்சிலிங் நடைபெறும் என்பதை எல்லாம் முன்னரே தெரிந்துகொண்டு விண்ணப்பிப்பது நல்லது.

தமிழ்நாட்டில் 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளும், பல்வேறு பாடப்பிரிவுகளில் 1,50,000-க்கும் மேற்பட்ட இடங்கள் இருக்கின்றன. இதில் இடம்பெறத் தவறாமல் விண்ணப்பிப்பது அவசியம். பொதுப்பிரிவை சார்ந்த மாணவராக இருந்தால் 50% மதிப்பெண்ணையும், பிற்படுத்தப்பட்ட பிரிவினைச் சார்ந்த மாணவர் 45% மதிப்பெண்ணையும், இதர பிரிவினர் 40% மதிப்பெண்ணையும் குறைந்தப்பட்ச மதிப்பெண்ணாக பெற்றிருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

விண்ணப்பப் படிவங்கள் பெறுவதற்கும், இதர விவரங்களை தெரிந்துகொள்ளவும் https://www.annauniv.edu/ என்ற இணையத்தளத்தில் உள்ளே சென்று TNEA 2017 என்ற இணைப்பினை கிளிக் செய்தால் அனைத்துத் தகவல்களையும் பெறலாம்.
Posted Date : 00:25 (21/04/2017)

தவறான தகவல்களை வாட்ஸ்-அப் குரூப்பில் பகிர்ந்தால், குரூப் அட்மினுக்கு ஜெயில்!
ர.பரத் ராஜ்




தவறான தகவல்கள், மோசமான வீடியோக்களை வாட்ஸ்-அப் அல்லது ஃபேஸ்புக் குரூப்பில் பகிர்ந்தால், குரூப் அட்மினுக்கு ஜெயில் தண்டனை வழங்கலாம் என்று வாரணாசியின் மாவட்ட நீதிபதி மற்றும் காவல்துறை கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இந்த விஷயம் குறித்து அந்த அறிக்கையில், 'பல வாட்ஸ்-அப் மற்றும் ஃபேஸ்புக் குரூப்களில் உண்மை இல்லாத பல செய்திகள் பரவவிடப்படுகின்றன. இந்த மாதிரி தகவல்கள் சரியாகத்தான் இருக்கிறதா என்று பார்க்கமாலேயே பகிரப்படுகின்றன. அப்படிப்பட்ட தகவல்களை பரவவிடும் குரூப்பில் இருக்கும் நபரை குரூப் அட்மின் நீக்க வேண்டும். அந்த குறிப்பிட்ட நபர் பற்றி அருகில் இருக்கும் காவல்துறையில் புகார் கொடுக்க வேண்டும். குரூப் அட்மின் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் அல்லது வாட்ஸ்-அப் குரூப்பில் பரவும் தவறான தகவல்கள் மற்றும் மோசமான வீடியோக்களால் பல பிரச்னைகள் வர வாய்ப்பு இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவில் மட்டும் 20 கோடிக்கும் அதிகமான வாட்ஸ்-அப் பயனர்கள் இருக்கின்றனர்.

People take photos as elderly man drowns in pond

He was inebriated when he went for a swim: Police

In yet another instance of public insensitivity, hundreds of people silently watched a 70-year-old man’s futile attempts to stay afloat in a pond while some reached out for mobile phones to record the incident. No one reportedly came to the rescue of the labourer, who after a few minutes of struggle, drowned in a temple pond (Pushkarani) in Kolar district on Thursday.
Nanjappa, a resident of Harohalli, was visiting the pond of Sri Venugopal Temple on the busy Tekal road in the vicinity of Harohalli locality around 1 p.m. According to eyewitnesses, he stepped into the pond for a swim, but soon started struggling in the water. People said he waved his hands seeking help. Though a large number of passers-by gathered, no one ventured to help him. Fire and Emergency Services and the police retrieved the body after a long search.
“Whether it would have been possible to save the drowning man or not is a different question. However, it is inhuman to take pictures and film such tragedies,” said Harohalli resident and activist Ravi.
The police claim that Nanjappa was inebriated when he went for a swim. “There was no time for the public to make any efforts to rescue the man as he drowned as soon as he entered the pond,” said Town Sub-Inspector of Police Pradeep. A case of unnatural death was registered.
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம் நாளை முடிவு

பதிவு செய்த நாள்  20ஏப்  2017   23:27

பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தம், நாளை முடிகிறது. ஏப்., 24 முதல் மதிப்பெண் தொகுப்பு பணி துவங்க உள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச், 31ல் முடிந்தது. விடைத்தாள் திருத்தம், ஏப்., 5ல் துவங்கியது. 9.33 லட்சம் மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தும் பணி, 75 மையங்களில் நடந்தது; 40 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபட்டனர். இந்த பணி, நாளை முடிகிறது. இதை தொடர்ந்து, ஏப்., 24 முதல் மாவட்ட வாரியாக, மதிப்பெண் தொகுப்பு பணி நடக்க உள்ளது. பின், மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்படும். அனைத்து பணிகளையும், மே, 5க்குள் முடிக்க, தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.
தலையங்கம்
பாராட்டுக்குரிய பிரதமர், முதல்–அமைச்சர்


ஏப்ரல் 21, 03:00 AM

ஆங்கிலேயர்கள் ஆட்சி முடிந்து ஆண்டுகள் பல உருண்டோடினாலும், இன்னமும் அவர்களது ஆதிக்கத்திலிருந்தபோது பின்பற்றப்பட்ட பல வி.ஐ.பி. கலாசாரங்கள் அமலில் இருக்கிறது. அதில் ஒன்றுதான் மிக முக்கிய பிரமுகர்கள். அதாவது, வி.ஐ.பி. என்ற அந்தஸ்தில் இருக்கும் தலைவர்கள் தங்கள் கார்களில் சுழலும் சிவப்பு விளக்குகளை சைரன்கள் அலற பொருத்திக்கொண்டு செல்வதாகும். மோட்டார் வாகன விதிப்படி, ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், துணைபிரதமர், பாராளுமன்ற, சட்டசபை சபாநாயகர்கள், மத்திய–மாநில அமைச்சர்கள், திட்டக்கமி‌ஷன் துணைத்தலைவர், மாநில கவர்னர்கள், நீதிபதிகள், முதல்–அமைச்சர்கள், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர்கள் உள்பட உயர் அதிகாரிகள் மற்றும் சிலர் மட்டுமே பொருத்திக்கொள்ளலாம். ஆனால், நடைமுறையில் இவர்கள் மட்டுமல்லாமல், சில எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் போன்ற அரசியல்வாதிகள், போலீஸ் டி.எஸ்.பி.க்கள், ஏன் பஞ்சாயத்து தலைவர்கள் வரை எல்லோருமே அந்தஸ்தின் அடையாளமாக சிவப்பு விளக்குகளை தங்கள் வாகனங்களில் பொருத்திக்கொள்கிறார்கள். பலநேரங்களில் இவ்வாறு தவறாக பயன்படுத்தப்படும் வாகனங்களை பார்த்தவுடன், யார் வருகிறார்கள்? என்று தெரியாமல், விரைப்பாக ‘சல்யூட்’ அடித்து மற்ற வாகனங்களை போலீசார் நிறுத்திவிடுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கிணங்க, பிரதமர் இதுதொடர்பாக தீவிர நடவடிக்கை எடுத்தார். நேற்று முன்தினம் நடந்த அமைச்சரவைக்கூட்டத்தில், ஜனாதிபதி முதல் பிரதமரிலிருந்து யாருமே இனி சுழலும் சிவப்பு விளக்குகளை கார்களில் பொருத்தக்கூடாது. இதற்கான அறிவிக்கைகள் விரைவில் வெளியிடப்படும் என முடிவெடுக்கப்பட்டது. இத்தகைய சுழலும் சிவப்பு விளக்குகள் பொருத்துவது என்பது வி.ஐ.பி. கலாசார அடையாளமாக கருதப்படுகிறது. ஜனநாயக பண்பை வளர்க்கும் வகையில், மத்திய அரசாங்கம் இந்த சரித்திரம் வாய்ந்த நடவடிக்கையை எடுத்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், அவசரகால மற்றும் நிவாரணப்பணிகளில் ஈடுபடும் அனைத்து வாகனங்கள், ஆம்புலன்ஸ், தீயணைக்கும்படை போன்ற வாகனங்கள் தங்கள் கார்களில் நீலநிற விளக்குகளையும், சைரனையும் பொருத்திக்கொள்ளலாம் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆக, இனி வி.ஐ.பி. கலாசாரம் அடியோடு நாட்டிலிருந்து ஒழிக்கப்படுகிறது. மத்திய மந்திரி வெங்கையா நாயுடு எப்போதுமே தன் காரில் சுழலும் சிவப்புவிளக்கை பொருத்துவதில்லை. அதேபோல, டெல்லியில் ஆம் ஆத்மி தலைமையிலான மாநில அரசிலும், அம்ரிந்தர் சிங் தலைமையிலான பஞ்சாப் மாநில அரசிலும், யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரபிரதேசத்திலும் முதல்–மந்திரிகளோ, மற்ற அமைச்சர்களோ தங்கள் கார்களில் சுழலும் சிவப்பு விளக்குகளை பொருத்துவதில்லை. அரசாங்கம் எடுத்த இந்த நடவடிக்கையை குறிப்பிட்ட பிரதமர் நரேந்திர மோடி, அனைவரிடத்திலிருந்தும் வி.ஐ.பி. என்று ஒரு தனிப்பிரிவு சுழலும் சிவப்புவிளக்கு கொண்ட மற்றும் சைரன்களை தங்கள் கார்களில் பொருத்திக்கொண்டு தனித்துவமாக இயங்குவது அமைச்சரவை முடிவின் மூலம் விலக்கப்படுகிறது. ஒவ்வொரு இந்தியரும் ஸ்பெ‌ஷல்தான், ஒவ்வொரு இந்தியரும் வி.ஐ.பி.தான் என்று குறிப்பிட்டிருப்பது, நிச்சயமாக ஒவ்வொரு இந்தியரையும் பெருமைகொள்ள வைக்கிறது.

பிரதமர் எடுத்தமுடிவு உத்தரவாகவோ, சுற்றறிக்கையாகவோ வரும்முன்பே, நேற்று தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன் காரிலிருந்து சுழலும் சிவப்புவிளக்கை அகற்றிவிட்டார். அமைச்சர்களும், அதிகாரிகளும் தங்கள் கார்களில் சிவப்புவிளக்கை பொருத்தமாட்டார்கள் என்று அறிவித்துவிட்டார். முதல்–அமைச்சர் தன் காரிலிருந்து அகற்றியவுடன், அடுத்த சிலநிமிடங்களிலேயே அமைச்சர்களும், உயர்அதிகாரிகளும் தங்கள் கார்களிலிருந்து சிவப்பு விளக்கை அகற்றிவிட்டனர். வரலாற்று சிறப்புமிகுந்த இந்த நடவடிக்கையை எடுத்த பிரதமரும், முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் நிச்சயமாக பாராட்டுதலுக்குரியவர்கள். இனி தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், இந்தியா முழுவதிலும் சுழலும் சிவப்புவிளக்கு கொண்ட கார்களை பார்க்கமுடியாது. இதற்கு முன்உதாரணம் தமிழகம்தான்.
கடலை மிட்டாய் விற்பவர் கற்றுக்கொடுத்த அனுபவப் பாடம்! #MorningMotivation

க. பாலாஜி





காலையிலிருந்து சென்னை மக்களை வேகாத வெயிலில் அலையவிட்டு விட்டு அத்தனை அமைதியாக மேற்கில் மறைந்து கொண்டிருந்தது சூரியன். வேலை முடித்து வீட்டுக்கு கிளம்புபவர்கள், கல்லூரி, பள்ளி மாணவர்கள் என அத்தனை கூட்டம் எழும்பூர் ரயில் நிலையத்தில். சுண்டல், வேர்க்கடலை, சமோசா விற்பனை ஜோராக நடந்து கொண்டிருந்தது. அத்துடன் புறநகர் மின்சார ரயில்களில் பயணம் செய்பவர்களின் பாட்டுச் சத்தமும் சேர்ந்து கொண்டு ரயில் நிலையமே திருவிழா திடல் போல காட்சியளித்தது. சென்னை பீச் ஸ்டேஷனிலிருந்து தாம்பரம் செல்லும் ரயிலில் ஏறி ஜன்னல் ஓரமாக இருக்கிறதா என நோட்டம் விட்டால் எல்லாவற்றிலும் ஆட்கள் அமர்ந்திருந்தார்கள். சரி, 'ஏதாச்சும் ஒரு இடத்துல உட்காருவோம்' என நினைத்துக்கொண்டு, நடக்கும் பாதையை ஒட்டிய ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டேன். ரயில் சேத்துப்பட்டை தாண்டியிருந்தது. ஓர் அக்கா கூடை நிறைய ஆரஞ்சு பழங்களை வைத்துக் கொண்டு "அஞ்சு பழம் அம்பது ரூவா, வாங்கிக்கோ வாங்கிக்கோ" என கூவிக்கூவி விற்றுக் கொண்டிருந்தார். இன்னோர் அண்ணன் "10 பிஸ்கட் 20 ரூபா சூடா இருக்கு வேணுமா சார்" என ஒவ்வொருவரிடமும் கேட்டுக் கொண்டிருந்தார். ஒரு குட்டி அலுமினிய வளையத்துக்குள் தன் உடலை நுழைத்து, அதிலிருந்து வெளியே வந்து உதவி கேட்டுக் கொண்டிருந்தாள் ஒரு சிறுமி. கதவு பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு பூ கட்டிக் கொண்டிருந்தார்கள் சில பெண்கள். செய்தித்தாள்களை கீழே மடித்து போட்டு அதில் அமர்ந்து தங்களது அன்றாட நிகழ்வுகள் குறித்து பேசி சிரித்துக் கொண்டு வந்தார்கள் சிலர். கல்லூரி இளைஞர்கள் சிலர் ஃபுட் போர்டில் தொங்கிக் கொண்டு வந்தார்கள்.

ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் மக்கள் கூட்டம் கூட்டமாக ஏறுவதும், இறங்குவதுமாக இருந்தாலும் கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. யாருக்கும் நிற்ககூட இடமில்லாத நிலைமை. ரயில் மாம்பலம் நிலையத்தில் நின்று புதிதாக நிறைய பயணிகளை ஏற்றிக் கொண்டு நகரும் பொழுதுதான் அந்த மனிதரை பார்த்தேன். கறுப்புக் கண்ணாடி அணிந்திருந்தார். ஒரு கையில் ஸ்டிக்குடன், வண்ண வண்ணமாக நீளமான பேனாக்களையும் வைத்திருந்தார். இன்னொரு கையில் நிறைய வேர்க்கடலை பர்ஃபி பாக்கெட்டுகளையும் வைத்திருந்தார். தோளில் ஒரு பை கிழிந்து தொங்கிக் கொண்டிருந்தது. சிகப்பு வண்ண உடையும் முகத்தில் மாஸ்க்கும் மாட்டியிருந்தால் அப்படியே சான்டாகிளாஸ் போலத்தான் இருந்திருப்பார். கூட்டத்தை விலக்கிக் கொண்டு "சுவீட்டான வேர்க்கடலை ரெண்டு பாக்கெட் பத்து சார் வாங்கிக்கங்க" எனச் சொல்லி ஒவ்வொரு அடியாக முன்னேறி வந்து கொண்டிருந்தார். முகத்தில் அத்தனை சந்தோஷம், வழக்கமாக அந்த ரயிலில் பயணிக்கும் சிலர் அவரிடம் "என்னய்யா இன்னிக்கு ரொம்ப சந்தோஷமா இருக்க போலையே.." என்று கேட்க "இன்னிக்குதான் என்னை நீ பாக்குறியா? புதுசா கேக்குற? நாம எப்பவுமே ஹாப்பி தான்யா!" - அந்த குரல் வந்த பக்கம் திரும்பி அவர் பதில் சொல்ல அந்த இடமே கலகலப்பாகியது. ஒரு கடலை பாக்கெட்கூட விற்கவில்லை.



என் பக்கத்தில் வந்ததும் கையிலிருந்த பேனாக்களையும், வேர்க்கடலை பாக்கெட்டுகளையும் மொத்தமாக என் கையில் கொடுத்தார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. நாம்தான் எதுவுமே கேட்கவில்லையே நம் கையில் அத்தனையையும் கொடுக்கிறாரே என குழம்பிக்கொண்டிருந்த நேரத்தில் தொண்டையை செருமிக் கொண்டு.

"சைலன்ஸ் ப்ளீஸ்" எனச் சொல்ல எல்லோரும் பேச்சை நிறுத்திவிட்டு அவரைப் பார்த்தார்கள். அவரிடம் பேசிக் கொண்டிருந்தவர்களோ இன்னும் உற்சாகமாகி "சைலன்ஸ் ப்ளீஸ்.. சைலன்ஸ் ப்ளீஸ்" எனச் சத்தம்போட மொத்தப் பெட்டியும் அமைதியான நொடியில்...

"ஆண்டவன் படைச்சான் என்கிட்டே கொடுத்தான் அனுபவி ராஜான்னு அனுப்பி வைச்சான். என்ன அனுபவி ராஜான்னு அனுப்பி வைச்சான்..." என சத்தம் போட்டு பாடி நிறுத்த அவர்கள் சிவாஜியோடு கோரஸ் பாடும் நண்பர்களைப் போல கோரஸ் போட்டார்கள்.

"உலகம் எந்தன் கைகளிலே.. உருளும் பணமும் பைகளிலே..." என்று பாடி தன் சட்டைப் பாக்கெட்டில் இருந்த சில்லறைகளை ஆட்டிக் காண்பித்தபோது எங்கும் சிரிப்பலை எழுந்தது.

"யோசிச்சுப் பார்த்தா நானே ராஜா..." எனப் பாடி கொஞ்சம் யோசித்துவிட்டு "இன்னிக்கு குரல் சரியில்லை மீதியை நாளைக்கு பாடுறேன்" எனச் சொல்லி என்னிடமிருந்த வேர்க்கடலை மிட்டாய் பாக்கெட்டுகளையும் வாங்கிக் கொண்டிருக்கையில் எல்லோரும் கை தட்ட ஆரம்பித்திருந்தோம். அவருடைய கையிலிருந்த வேர்க்கடலை மிட்டாய்கள் மளமளவென விற்க தொடங்கியிருந்தன. மீதமிருந்த பர்ஃபி பாக்கெட்டுகளை கையில் பிடித்துக் கொண்டு கதவருகில் நின்று கொண்டிருந்தவரிடம் நானும் இரண்டு பர்ஃபி பாக்கெட்டுகளை வாங்கிக் கொண்டு பேச்சு கொடுக்க ஆரம்பித்தேன். "ரொம்ப நல்லா பாடுனீங்க... உங்க குரல்ல அவ்ளோ சந்தோஷம். சூப்பர் சார்'னு சொல்ல.. அமைதியாக என் பக்கம் திரும்பி புன்னகைத்தவர் "மனசுல சந்தோஷம் இருந்தா, அது நம்ம வார்த்தைகள்லயும் வெளிப்படும் சார். அது மட்டுமில்லாம ஏற்கெனவே ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு யோசனையோட போய்கிட்டு இருப்பாங்க. நாமளும் சோகமா மூஞ்ச வைச்சுக்கிட்டு பர்ஃபி வாங்கிக்கங்கன்னு போய் நின்னா எப்படி வாங்குவாங்க. அதான் நீங்க சந்தோஷப்படுற மாதிரி ஒரு பாட்டை எடுத்துவிட்டேன். இதுவும் பிஸினஸ் ட்ரிக்ஸ்தான் சார்!" எனச் சொல்லிய பொழுது ரயில் குரோம்பேட்டையில் நின்றிருந்தது. வேகமாக ரயிலில் இருந்து இறங்கியவர் எதிரே பீச்சுக்கு போகும் ரயிலை பிடிக்க ஸ்டிக்கை கீழே தட்டி தட்டி நடந்து கொண்டிருந்தார்..!



நம்மைச் சுற்றியுள்ள ஒவ்வொரு மனிதரிடமும் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது என்பதை எப்போதாவது உணர்ந்து இருக்கிறீர்களா!? "யார் பேச்சையும் நின்று கவனிக்க நேரமே கிடைப்பதில்லை" எனப் புலம்பும் அதே நேரத்தில் வாட்ஸ்அப் குரூப்பில் வந்த பழைய மொக்கை மெசேஜை இன்னொரு குரூப்புக்கு ஃபார்வேர்ட் செய்து கொண்டிருப்போம். அல்லது, நம் நண்பர் "டிராவலிங் டூ ஊட்டி வித் மை ஃபேமிலி" என போட்ட ஸ்டேட்டஸுக்கு கமென்ட் போட்டுக் கொண்டிருப்போம். ஆனால், 'சூரியன்' படத்தில் கவுண்டமணி சொல்வது போல "நான் இங்கே ரொம்ப பிஸி" டையலாக்கைச் செல்லாதவர்கள் ரொம்பவே குறைவுதான். ஆயிரம் புத்தகங்களில் இருந்து கற்றுக் கொள்ளும் அறிவை ஒருவருடைய அனுபவத்திலிருந்து கற்றுக் கொள்ள முடியும் எனச் சொல்வார்கள். அதே போலத்தான் கடலை மிட்டாய் விற்பவரும் வருடக்கணக்கில் எம்.பி.ஏ மாணவர்கள் படிக்கும் பிசினஸ் சூட்சுமத்தை எளிதாக சொல்லிவிட்டார் தானே!?

Thursday, April 20, 2017

ஆங்கிலம் அறிவோமே - 156: பழமொழிகளை ‘மாற்ற’ முடியாது!

ஜி.எஸ்.எஸ்.




கேட்டாரே ஒரு கேள்வி

பிஞ்சிலே பழுத்தவன் என்பதை எப்படிக் குறிப்பிடலாம்?

இளம் வயதிலேயே தனித்துவமான அதீதத் திறமையோடு விளங்குபவரை prodigy என்று குறிப்பிடுவதுண்டு. He was a child prodigy in chess and he soon became the national chess champion.

ஆனால் பிஞ்சில் பழுத்தவன் என்பதைக் கொஞ்சம் எதிர்மறையான அர்த்தத்தில் தான் நாம் பயன்படுத்துகிறோம். அதாவது ‘தேவையில்லாததை எல்லாம் தெரிஞ்சக்கிட்டு இருக்கான்’ என்ற பொருளில். A precocious boy எனும்போது பிஞ்சிலே பழுத்தவன் என்பதை நாம் உணர்த்துகிறோம். அதாவது prematurely developed என்ற பொருளும் இந்த வார்த்தைக்கு உண்டு.

Differently என்பதற்கும், Indifferent என்பதற்கும் என்ன வித்தியாசம்?

Difference என்றால் வித்தியாசம். Different என்றால் வித்தியாசமான.

Indifferent என்பதன் பொருள் ஆர்வம் காட்டாத அல்லது கவலைப்படாத. Indifferent person, indifferent organization.

He was indifferent to the proposal since it did not affect him.

தரமற்ற என்ற அர்த்தத்திலும் indifferent பயன்படுத்தப்படுகிறது. Indifferent roads.



“ஆறிலும் சாவு, நூறிலும் சாவு” இந்தப் பழமொழியை ஆங்கிலப் பழமொழியாக எப்படி மாற்றுவது?

நண்பரே, பழமொழிகளை ‘மாற்ற’ முடியாது. அப்படி மாற்றினால் அது புது மொழிதான். “You can die at the age of six. Or you can die at the age of 100” என்று மொழிபெயர்த்தால் அது ‘ஆங்கிலப் பழமொழி’யாகிவிடாது.

நண்பர் குறிப்பிட்ட தமிழ்ப் பழமொழியை ‘Death is inevitable. No one is immortal, Death can come at anytime’ என்று மூன்று விதமாக மொழிபெயர்க்கலாம். ஆனால், ஈடான ஆங்கிலப் பழமொழி உண்டு. Death does not blow a trumpet (அதாவது இறப்பு முன்னறிவிப்பு செய்துவிட்டு வருவதில்லை).

இப்படித்தான் ஆங்கிலத்தில் சில பழமொழிகளும், தமிழில் சில பழமொழிகளும் உள்ளன. அவை இரண்டும் நேரடி மொழி பெயர்ப்புகளாக இருக்காது. ஆனால் அவற்றின் சாரம்சம் அப்படியே இரண்டிலும் இருக்கும். கீழே உள்ள ஆங்கிலப் பழமொழிகளின் அர்த்தத்தை அப்படியே அளிக்கும் தமிழ்ப் பழமொழிகளை எழுதி அனுப்புங்களேன். ஐந்து நாட்களுக்குள் அனுப்புங்கள். உங்கள் பெயர், ஊர் இரண்டையும் குறிப்பிடுங்கள். நீங்களாகவே ‘பழமொழிகளை’ உருவாக்கக் கூடாது.

1) When the cat is away, the mice will play.

2) A thousand pounds and a bottle of hay are just the same at doomsday.

3) The squeaky wheel gets the grease.

4) No man is an Island.

5) Heaven is the help of helpless.

6) As you sow, so shall you reap.


“So என்றால் எனவே. Because என்றால் ஏனென்றால். எனவே என்றாலும் ஏனென்றால் என்றாலும் ஒரே அர்த்தம்தான். அப்படியானால் She fell ill; so she went to the doctor என்றாலும் She fell ill because she went to the doctor என்றாலும் ஒரே அர்த்தமா?”

இப்படி ஒரு நண்பர் கேட்டிருக்கிறார். அதெப்படி? அந்த வாக்கியங்களுக்கு ஒரே அர்த்தம் அல்ல. நேரெதிர் அர்த்தம்! உடல் நலமில்லாததால் மருத்துவரிடம் போவதற்கும், மருத்துவரிடம் போனதனாலேயே உடல்நலம் குறைந்ததற்கும் வேறுபாடு இல்லையா?

நண்பரின் தர்க்கத்தில் தவறு இருக்கிறது. So, because ஆகிய வார்த்தைகள் எப்படிப் பயன்படுத்தப்படுகின்றன என்பதைப் பொறுத்ததுதான் அவற்றின் அர்த்தம்! அதாவது cause, effect ஆகிய இரு (முரணான) விதங்களிலும் அவை பயன்படுத்தப்படலாம்.

She fell ill; so she went to the doctor எனும் வாக்கியம் உணர்த்தும் அதே அர்த்தம் because என்பதைப் பயன்படுத்தும்போதும் வர வேண்டுமென்றால் Because she fell ill, she went to the doctor என்றுதான் கூற வேண்டியிருக்கும்!

போட்டியில் கேட்டுவிட்டால்?

Doing the job by hand is very __________ compared with doing it by machine. It wastes lot of time.

a) Efficient

b) Efficiency

c) Inefficient

d) Unefficient

e) Delicate

மேலோட்டமாகப் பார்த்தால் delicate சரியென்று தோன்றுகிறது. அதாவது ஒரு கருவியைக் கொண்டு குறிப்பிட்ட வேலையைச் செய்வதைவிட கையால் அதைச் செய்வது நுட்பமானது. ஆனால் கொடுக்கப்பட்டுள்ள இரண்டாவது வாக்கியம் முதல் வாக்கியத்திலுள்ள தகவலை இழிவுபடுத்துகிறது. எனவே மீதி வார்த்தைகளைப் பார்ப்போம்.

கையால் அந்தச் செயலைச் செய்வது திறமையானதாக இருந்தால், அதனால் நேரம் வீணாகாது. எனவே efficient என்பது சரியல்ல.

Doing the job என்று தொடங்கும் இந்த வாக்கியத்தில் கோடிட்ட இடத்தில் ஒரு noun இடம் பெறாது. எனவே efficiency என்ற சொல் பொருந்தாது.

Unefficient என்று ஒரு வார்த்தையே கிடையாது.

Inefficient என்ற வார்த்தை முழுமையாகப் பொருந்துகிறது. Doing the job by hand is so inefficient compared with doing it by machine. It wastes lot of time.

(தொடர்புக்கு - aruncharanya@gmail.com)
குறள் இனிது: பேச்சில் கவனம் வேணும்..!

சோம.வீரப்பன்

இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்

நடைதெரிந்த நன்மை யவர்

(குறள்: 712)

எனது நண்பர் ஒருவர் சென்னை வங்கி ஒன்றின் கிளை மேலாளர். வங்கியின் வளர்ச்சிக்காக ஓயாது உழைப்பவர். வைப்பு நிதி கேட்பதில், அவர் காலையில் நடைப் பயிற்சிக்கு வருபவர்களைக் கூட விட்டு வைப்பதில்லை!

ஆனால் அரசாங்கத்திலும் சரி, சமூக சேவை செய்யும் நிறுவனங்களிலும் சரி, உயரதிகாரிகளைப் பார்ப்பது அவருக்குக் கடினமாக இருந்தது. தன்னை அவர்கள் மதிப்பதில்லை, எனக் கவலைப்பட்ட அவர், தனது உயரதிகாரியான கோட்ட மேலாளரை அழைத்துச் சென்று வாடிக்கையாளர்களைப் பார்க்க முடிவு செய்தார்.

கோட்ட மேலாளரின் பெயரா? குமார் தான். இல்லைன்னா விட மாட்டீங்களே!

குமார் ஒரு நடமாடும் கலைக்களஞ்சியம்! வெள்ளை நிறமுடைய எந்த வெளி நாட்டவரைப் பார்த்தாலும் நம்மில் பலரும் அவரை ஆங்கிலேயர் என்றே நினைப்போம். ஆனால் குமாரோ இத்தாலியர், பிரெஞ்சுக்காரர், ஜெர்மானியர் என்று அவர்களைப் பார்த்த உடனேயே சொல்லி விடுவார்! ஆப்பிரிக்க ஐரோப்பிய வரலாறுகளைக் கூடக் கரைத்துக் குடித்தவர்!

நம்ம நண்பர் ஒரு பெரிய தொண்டு நிறுவனத்தின் மூத்த அதிகாரியைப் பார்க்க குமாருடன் சென்றார். குமார் வங்கியின் வளர்ச்சிக்கு அந்தத் தொண்டு நிறுவனங்கள் போன்றவர்களே காரணம் என்றார். நிறுவன அதிகாரி மகிழ்ந்து போனார். புதிதாய் 10 லட்சம் ரூபாய் போடுவதாகச் சொன்னார்.

தேநீர் வர நேரமானதால் பேச்சு தொடர்ந்தது. மேஜை மேல் வைக்கப்பட்டிருந்த ஒரு சிறிய கொடியைக் கவனித்த குமார் அதைக் கையில் எடுத்தார்.

உடனே அந்த அதிகாரி தான் ஒரு ஆப்பிரிக்க நாட்டிற்கு கௌரவத் தூதர் என்றும் அந்த நாட்டின் கொடி இது என்றும் பெருமையாகக் கூறினார். குமார் உடனே இந்தக் கொடியின் வரலாறு தெரியுமா எனக் கேட்டார். அவர் தற்போதுள்ள அரசாங்கத்தில் உள்ளவர்கள் போராடிப் பெற்ற வெற்றியின் நினைவாகச் சில வர்ணங்கள் சேர்க்கப்பட்டதாகச் சொன்னார்.

ஆரம்பித்தது வினை! குமார் அந்தப் போராட்டமே நியாயமற்றது என்றார். அதற்கான பல விபரங்களையும் தேதி வாரியாகச் சொன்னார். அந்த அதிகாரியோ பாவம், தனக்குத் தெரிந்த சிலவற்றைச் சொல்லி அப்போதிருந்த அரசாங்கம் நல்லதே எனச் சொல்லி பேச்சை முடிக்கப் பார்த்தார். கிளை மேலாளர் தேநீர் வேண்டாம் ,நேரமாயிற்று கிளம்புவோம் எனச் சொல்லிப் பார்த்தார். ஆனால் குமாரோ தொடர்ந்து வாதாடினார்.

குமார் சொல்லிய விபரங்களும் கருத்தும் சரியானவையாகவே இருந்தாலும், போன வேலையை விட்டு விட்டு அவர் அந்தப் பஞ்சாயத்துக்குப் போனது சரியா? அவர்கள் திரும்பிய பின், முன்பிருந்த வைப்பு நிதிகளும் இல்லாமல் போனதுதான் பலன்!

அண்ணே, நமக்கு நிறைய விஷயங்கள் தெரிந்து இருந்தாலும், கேட்பவரின் மனப்பாங்கையும் நமது பேச்சின் குறிக்கோளையும் மனதில் கொண்டு பேச வேண்டும் இல்லையா?

சொல்லைப் பயன்படுத்துபவர், அதன் போக்கை அறிந்து, பேசும் பொழுதே கேட்போரின் நிலையைப் புரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு பேச வேண்டுமென்கிறது குறள்!

- somaiah.veerappan@gmail.com

KAPV medical college gets 48 more PG seats

With this, the number of PG seats at the college will go up to 65 from 17

The Medical Council of India (MCI) has permitted the K.A.P. Viswanatham Government Medical College to offer 48 more Post Graduate seats from 2017-18. With this, the number of PG seats at the college will go up to 65 from 17.
Speaking to reporters, Marry Lilly, Dean of the college, said that it had got communication from the MCI and the State government to increase PG seats. It had enabled the college to increase the MS (General Surgery) seats from 4 to 16. Similarly, MD (General Medicine) would go up to 14 from 4. MD (Anaesthesia) would be increased to 13 from 4. MD (Paediatric) seats would be increased to 9 from 2. The number of PG seats in Obstetrics and Gynaecology (MS O&G) would go up to 9 from 2. The college has one PG seat in psychiatry. It would be increased to 4.
Stating that increase in PG seats would be a boon to aspiring students, she said the college had set up all needed infrastructure for admitting additional PG students. The nod was given based on a proposal sent to MCI recently. She said one more proposal had been sent to MCI for starting new PG courses in MS (Orthopaedics), MS (Ophthalmology), M.D (Anatomy), M.D (Microbiology) and M.D. (Pathology). It had been asked to permit 26 PG seats in the new courses.
The new main building, which was sanctioned by former Chief Minister Jayalalithaa had been brought to optimum utilisation. Nine super speciality departments such as cardiology, neurology, neuro surgery, nephrology, urology, paediatrics, plastic surgery and oncology had been functioning in the main building. Except nephrology, oncology and neuro surgery, all other departments had been functioning with required with full staff (a professor and two assistant professors). Other departments had one specialist. Steps had been initiated to fill vacancies.
Dr. Lilly added that to provide treatment to cancer patients, out-patients section had been functioning on Monday, Wednesday and Friday. The medical college hospital had facility to treat cancer patients with chemotherapy. The X-ray section had been digitised to enable doctors to view the image of patients on monitor within a few seconds of taking X-ray. Similarly, it had acquired new endoscope and colonoscopy to treat patients with stomach diseases.

Medical officers attached to PHCs boycott outpatient services

Protest scrapping of 50 % quota in PG courses for doctors serving in rural areas

Boycotting outpatient services, Medical Officers attached to Primary Health Centres (PHCs) in the district thronged the Collectorate here on Wednesday and protested against the scrapping of 50 % reserved quota in postgraduate (PG) courses for doctors, who served in rural areas from this academic year.
Medical services in rural areas were hit as more than 50 medical officers, who were members of the Tamil Nadu Medical Officers’ Association staged the protest, stating that they were aggrieved by the Madras High Court order, scrapping the quota and urged the State government to file an appeal against the order.
Dr. B. Manikandan, district general secretary and Dr. V. Ebinezer, organising secretary of the association who led the protest said the medical officers were motivated to serve in rural areas to seek admission to PG courses under the 50 % quota and the scrapping of the same would demoralise doctors to serve in rural areas.
There were times when most of the 57 PHCs in the district had no doctors and only after the State government introduced the quota system, doctors came forward to serve in the PHCs, they said.
Presently, more than 130 medical officers, including women doctors, were serving in the PHCs in the district, they said.
The High Court order came as a rude shock for them, they said.
Even after it became clear that they should take the National Eligibility-cum- Entrance Test (NEET) to seek admission to postgraduate courses, the government maintained that they would be entitled for the 50% quota, but the court order dashed their hopes, they said.
The doctors urged Collector S. Natarajan to forward their representation to the government for necessary action.

Imposing MCI regulations for PG course admissions unfair’

TNGDA says it will also stage a State-wide protest today

Tamil Nadu Government Doctors’ Association (TNGDA) has registered its concern over Madras High Court’s ruling on Tuesday upholding Medical Council of India’s (MCI) regulation in awarding incentive marks to service doctors working in remote or difficult areas in admission to postgraduate (PG) courses.
The ruling had nullified regulations already in force in Tamil Nadu for the award of incentive marks.
The TNGDA said while existing TN rules for incentive marks gave justified advantage to doctors working in hilly/remote or difficult areas, the MCI regulations provided disproportionate advantage to them by awarding up to 30% of their National Eligibility-cum-Entrance Test (NEET) score as incentive in preparation of merit list.
Stating that it would appeal against the High Court’s ruling, the TNGDA said it would also stage a State-wide protest on Thursday by boycotting outpatient consultation from 7 a.m. to 9.30 a.m.
K. Senthil, State president, TNGDA, said the present TN regulations for PG admissions gave one mark for every year of service in rural areas, two marks for every year of service in hilly and difficult/remote areas, limited to a maximum of 10 marks.
“The merit list will be drawn for 100 marks, of which 90 marks will be based on the candidates NEET score,” he said.
“The MCI regulations, however, gave 10% of the NEET marks as incentive to service doctors for every year of service in hilly/remote or difficult areas, limited to a maximum of 30% of the marks,” he pointed out, adding that such a huge incentive would unfairly boost the ranking of such candidates.
‘Incentive unnecessary’
Arguing that the MCI regulation was brought in by having the disparities in the availability of doctors in remote areas in many North and North-eastern States, Dr. Senthil said such an incentive was unnecessary in Tamil Nadu.
A PG aspirant working in a primary health centre in Madurai, speaking on anonymity, said imposing MCI regulations in Tamil Nadu would lead to increased demand and consequently corruption for getting posted to the few hospitals, classified as remote or difficult in the State.
Madras High Court, in its ruling, had pointed out that Tamil Nadu’s regulations, which were mentioned for this year’s prospectus for PG admissions, could not be enforced since Tamil Nadu Admission to Postgraduate Courses in Medicine and Dentistry Act, 2017, brought in to avoid NEET, had not received President of India’s assent.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள...

DINAMANI வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்...