Thursday, November 6, 2014

காய்ச்சலுக்கு ஊசி போட வேண்டாம்: சுகாதாரத்துறை அறிவிப்பு



காய்ச்சல் விரைவாக குணமாவதற் காக தேவையில்லாத ஊசிகளை போடுவதால், பக்க விளைவுகள் ஏற்படுகிறது. எனவே ஊசி போட்டுக் கொள்ள வேண்டாம். டாக்டரின் ஆலோசனைப்படி மாத்திரை, மருந்துகளை மட்டும் வாங்கி உட்கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மழை பெய்து வருவதால் டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சலால் பலர் பாதிக் கப்பட்டுள்ளனர். காய்ச்சலுக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளுக்கு ஏராளமா னோர் சிகிச்சைக்கு செல்கின்றனர். ஆனால் சில டாக்டர்கள் தேவை யில்லாத ஊசிகளை போடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் காய்ச்சலால் பாதிக்கப் பட்டவர்கள், பக்க விளைவுகளால் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்படுகிறது.

இது தொடர்பாக பொது சுகா தாரத்துறை (டிபிஎச்) இயக்குநர் குழந்தைசாமி கூறியதாவது:

காய்ச்சல் சீக்கிரமாக குணமாக சில டாக்டர்கள் மற்றும் பெரும் பாலான போலி டாக்டர்கள் ஸ்டீராய்டு, டைக்லோபினாக் மற்றும் பாராசிட்டமால் ஊசிகளை போடுகின்றனர். ஸ்டீராய்டு ஊசி தற்காலிகமாக காய்ச்சலை குறைக்கும். காய்ச்சலுக்கான காரணத்தை சரிசெய்யாது. அதே நேரத்தில், உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்துவிடும்.

டைக்லோபினாக், காய்ச்சலுக் கான மருந்தே இல்லை. இது ஒரு வலி நிவாரணியாகும். இந்த ஊசிகளை காய்ச்சலுக்கு போடுவ தால், சிறு நீரகம் பாதிப்பு உள்ளிட்ட பக்க விளைவுகள் ஏற்படுவதற்கு அதிகம் வாய்ப்புள்ளது. அதனால் காய்ச்சலுக்கு ஸ்டீராய்டு, டைக்லோபினாக்கை ஊசி மூலம் போட்டுக் கொள்ளவோ, மாத்திரை, மருந்தாக உட்கொள்ளவோ வேண்டாம். பாராசிட்டமால் காய்ச்சலுக் கானதுதான். அதை மாத்திரை அல்லது மருந்துகளாக உட்கொள்ளலாம். மாறாக ஊசி மூலமாக செலுத்தினால் வலி அதிகமாக இருக்கும். இதனால் தேவையில்லாத பிரச்சினைகள் உடலில் ஏற்படும்.

மாத்திரை, மருந்து

எனவே காய்ச்சலுக்கு டாக்டர் களிடம் செல்பவர்கள் அவரின் ஆலோசனைப்படி மாத்திரை, மருந்துகளை மட்டும் வாங்கி உட்கொள்ள வேண்டும். அப்படியும் காய்ச்சல் குறையவில்லை என்றால், வீட்டிலேயே மிதமான சூடு உள்ள தண்ணீரில் துணியை நனைத்து நெற்றி, முகம், அக்குள், கை, கால்கள் என உடல் முழுக்க துடைத்துவிட வேண்டும். இப்படி செய்தால் விரைவாக காய்ச்சல் குறையும்.

பொதுமக்களுக்கு சேவை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள டாக்டர்களும் தங்களுடைய சமூக பொறுப்பை உணர்ந்து, காய்ச்சலுக்கு தேவையில்லாத ஊசிகளை போடுவதை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வாழ்க்கை முழுவதும் மாணவனாகவே இருக்கலாம்…



ஒருவன் பிறக்கும் போது துவங்கும் வாழ்க்கை அவனது மூச்சு நிற்கும் போது முடிந்து போகிறது. அதே சமயம், ஒருவன் எப்போது வாழ்க்கையில் கற்றலை நிறுத்துகிறானோ அப்போது அவன் வளர்ச்சியும் நின்று விடும் என்பது வாழ்க்கை கூறும் தத்துவம்.

கற்பது என்பது வெறும் பள்ளி, கல்லூரிகளில் அளிக்கப்படும் படிப்பு அல்ல.. அது வாழ்க்கையில் நாம் பல்வேறு விஷயங்களைத் தேடி நாடி அறிந்து கொள்வதை குறிப்பதாகும்.

கற்றல் என்பது ஒரு தேடலில் துவங்குகிறது. ஒரு விஷயத்தை பற்றி நமக்கு சந்தேகம் எழும்போது, அது பற்றி விளக்கம் பெற தேடி அலைந்து அதனை கற்றுக் கொள்ள வேண்டும். கற்று தெளிந்த பிறகு அதன் மீது ஏற்படும் ஆர்வம் மேற்கொண்டு அந்த துறையில் பல்வேறு விஷயங்களைக் கற்கத் தூண்டுகிறது.

கற்பது என்பது உங்களது சுய முன்னேற்றத்துக்கு உதவுவதோடு மட்டும் அல்லாமல் உங்களது அறிவினை வளர்ப்பதாகவும் இருக்கும்.

இனி படித்து நான் என்ன செய்யப் போகிறேன் என்று ஒரு போதும் சிந்தனையில் தோன்றக் கூடாது. படிக்க வேண்டும், நூல்களை தேடிச் சென்று படிக்க வேண்டும், ஒவ்வொரு நூலும் உங்களது சிந்தனையை ஒவ்வொரு விதத்தில் அசைத்துப் போகும். அப்போது எழும் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் விடை தேடி இன்னும் அதிகமாக நீங்கள் கற்க வேண்டியிருக்கும்.

எனவே, ஒரு தொழிலை செய்பவராயினும், பணியாற்றுபவராயினும் உங்கள் கற்றல் திறன் தொடர்ந்து உங்களுடனேயே இருந்து கொண்டிருந்தால் தான் அது உங்களுக்கு உயர்வினை அளிக்கும்.

தேங்கிய நீரில் தான் பாசிப் பிடிக்கும் என்பது போல, ஒரே இடத்தில் தேங்கும் மனிதனின் மனதில்தான் தீய குணங்களும், சேம்பேறித்தனமும் குடிகொள்ளும்.

தமிழகத்துக்கு கிறிஸ்துவ மதத்தைப் பரப்புவதற்காக வந்த ஜி.யு. போப், தமிழ் மொழியின் இனிமையை ருசித்தவராகையால் தனது கல்லறையில் தான் ஒரு தமிழ் மாணவன் என்று குறிக்கும்படி கேட்டுக் கொண்டார்.
திருக்குறள், திருவாசகம், திருவெண்பாமாலை உள்ளிட்ட பல்வேறு சிறந்த தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த ஜி.யு. போப், தான் ஒரு தமிழ் அறிஞன் என்று கூட பொறித்துக் கொள்ள விரும்பியிருக்கலாம். ஆனால், அவரது அறிவுத் தாகம்தான் அவரை மாணவன் என்று குறிப்பிட விரும்பிற்று.

எனவே, எப்போதும் நாம் மாணவனாகவே இருக்க வேண்டும். ஏதேனும் ஒன்றை தேடிச் சென்று பயில வேண்டும். முன்பெல்லாம் நூல்களைக் கற்க நூலகங்களை தேடிச் செல்ல வேண்டிய அவசியம் இருந்தது. ஆனால், இணையதளம் என்ற சக்தி வந்த பிறகு, உட்கார்ந்த இடத்திலேயே பல அரிய நூல்களை வாசிக்கும் வசதி வந்துவிட்டது.

இப்போதும் இணையதளத்தில் தேவையற்ற விஷயங்களை பேசுவதை விடுத்து, புதிய விஷயங்களை தேடிப் படிப்போம்… மாணவனாகவே இருப்போம்…

அவசரம்... அவசியம்!

எய்ம்ஸ் மருத்துவமனை (அனைத்து இந்திய மருத்துவ அறிவியல் கல்லூரி மருத்துவமனை) தமிழ்நாட்டில் அமையுமா என்ற கேள்விக்கு மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ வர்தன் தந்திருக்கும் மிகநீண்ட பதிலைப் பார்க்கும்போது - ஒரு வரியில் சொல்வதென்றால் - இப்போதைக்கு சாத்தியமில்லை என்பதுதான்.

மாநில அரசு தெரிவித்துள்ள இரண்டு இடங்கள் குறித்து பரிசீலித்து, அந்த இடத்தை மத்தியக் குழு பார்வையிட்டு, அங்கு மணல் கனிம ஆய்வுகளை நடத்தி, அந்த இடத்தை மத்திய அரசிடம் ஒப்படைத்து... இப்படியாக எல்லாவற்றையும் நடத்தி முடிக்க குறைந்தது 3 ஆண்டுகளாகும். ஆகவே இப்போதைக்கு சாத்தியமில்லை.

புதுதில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை 1956-இல் அமைக்கப்பட்டது. இதன் வளர்ச்சிக்கு ஏற்ப இதன் உறுப்புக் கல்லூரியாக எய்ம்ஸ்-2 தொடங்கும் முடிவு 2009-இல் எடுக்கப்பட்டு, இதற்கான நிலத்தை ஹரியாணா மாநிலத்தில் (ஜாஜ்ஜர்) கையகப்படுத்தி, 2012-இல்தான் அடிக்கல் நாட்டப்பட்டது. தற்போது அங்கே வெளிநோயாளிகள் பிரிவு மட்டுமே செயல்படுகிறது.

2012-ஆம் ஆண்டில்தான் எய்ம்ஸ் மருத்துவமனைகள் 6 மாநிலங்களில் தொடங்க அனுமதிக்கப்பட்டது. போபால் (மத்தியப் பிரதேசம்), புவனேசுவரம் (ஒடிசா), ஜோத்பூர் (ராஜஸ்தான்), பாட்னா (பிகார்), ராய்ப்பூர் (சத்தீஸ்கர்), ரிஷிகேஷ் (உத்தரகண்ட்) ஆகிய இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைந்தன. அதாவது, 56 ஆண்டுகளுக்குப் பிறகுதான் எய்ம்ஸ் மருத்துவமனை பல்வேறு மாநிலங்களில் உருவெடுத்தன. அதிலும்கூட பாரபட்சமாக, தென்னிந்தியாவை மத்தியஅரசு கருத்தில் கொள்ளவில்லை.

2014-ஆம் ஆண்டு மேலும் 4 மாநிலங்களில் (கோரக்பூர் - உத்தரப் பிரதேசம், கல்யாணி - மேற்கு வங்கம், மங்களகிரி -ஆந்திரம், நாகபுரி - மகாராஷ்டிரம்) எய்ம்ஸ் மருத்துவமனைகள் தொடங்க அனுமதி வழங்கப்பட்டது. இதில், மேற்கு வங்கம் தாங்கள் விரும்பும் இடத்தில்தான் எய்ம்ஸ் அமைய வேண்டும் என்று இன்னும் திட்டத்தை தொடங்காமல் இருக்கிறது. இம்முறையும்கூட தமிழ்நாட்டுக்கு அனுமதி கிடைக்கவில்லை. எய்ம்ஸ் மருத்துவமனையை சேலத்தில் அமைப்பதா, திருச்சியிலா என்று மாநில அரசு தீர்மானமாகத் தெரிவிக்காமல் இருப்பதும் இதற்கு ஒரு காரணம்.

பொறியியல் தொழில்நுட்பக் கல்வியைப் பொருத்த அளவில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு ஐ.ஐ.டி. தொடங்கப்பட்டதைப் போல, ஒவ்வொரு மாநிலத்திலும் என்.ஐ.டி. தொடங்கப்பட்டதைப் போல, மருத்துவக் கல்விக்காக ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு எய்ம்ஸ் மருத்துவமனையை மத்திய அரசு 1960-களிலேயே தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், மத்திய அரசும் செய்யவில்லை. மாநில அரசுகளும் வலியுறுத்தவில்லை.

கடந்த பத்து ஆண்டுகளில் மருத்துவ அறிவியல் மிகப்பெரும் வளர்ச்சியைக் கண்டுள்ளது. ஜீரண உறுப்புகளுக்கு சிறப்பு மருத்துவர் என்ற நிலை மாறி, கல்லீரல், மண்ணீரல், கணையம் என ஒவ்வொன்றுக்கும் சிறப்பு மருத்துவம் தரும் நிலையும், மாற்றுக் கல்லீரல், மாற்று இருதயம், மாற்றுச் சிறுநீரகம் என்று மருத்துவ அறுவைச் சிகிச்சையில் சாதனைகள் எல்லை கடந்து சென்று கொண்டிருப்பதும் கடந்த சில ஆண்டுகளாகத்தான் நடந்துகொண்டிருக்கிறது. ஆகவே, மிக அதிநுட்பமான அறுவைச் சிகிச்சைகளும், அதைப் பயில்வதற்கும், சிறப்பு மருத்துவ முதுநிலைப் பட்டம் வழங்குவதற்கும் எய்ம்ஸ் மருத்துவமனைகள் ஒவ்வொரு மாநிலத்திற்கும் அவசியம் தேவை.

அதுமட்டுமல்ல, அரசு மருத்துவமனைகளில் தரமும், செயல்பாடுகளும் தனியார் மருத்துவமனைகளுடன் ஒப்பிடும் வகையில் இல்லாத நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் சாமானியர்களுக்கு ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும். எய்ம்ஸ் மருத்துவ மனையை முன்மாதிரியாகக் கொண்டு அரசு மருத்துவமனைகளின் தரமும் செயல்பாடும் அதிகரிக்கக் கூடும்.

இன்று ஆண்டுக்கு 46,500 எம்.பி.பி.எஸ். மருத்துவர்கள் படித்து முடித்து வெளியேறுகின்றனர். முதுநிலை மருத்துவப் பட்டம் பெறுவோர் எண்ணிக்கை 16,000-ஆக இருக்கிறது. அதாவது, எம்.பி.பி.எஸ். படிப்பவர்களில் பாதிப்பேருக்குக்கூட முதுநிலை மருத்துவப் பட்டத்துக்கான வாய்ப்பு கிடைப்பதில்லை. இதனால் தனியார் கல்லூரிகளில் குறைந்தபட்சம் ரூ.1 கோடி நன்கொடை அளிக்க வேண்டியிருப்பதாக, முதுநிலை மருத்துவப் படிப்பு பயிலுவோர் குறைபட்டுக்கொள்கிறார்கள்.

இந்த நிலைமையை மாற்ற வேண்டுமானால், ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு எய்ம்ஸ் மருத்துவமனை அமைத்து, ஆண்டுதோறும் 300 பேருக்கு முதுநிலை மருத்துவப் பட்டம் வழங்குவதோடு, அந்த மாநிலத்தின் மக்களுக்கு சிறந்த, தரமான மருத்துவம் வழங்கும் வாய்ப்பையும் மத்திய அரசு உருவாக்க வேண்டும்.

மருத்துவ கல்லூரிகளில் 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிரான மனு: 14–ந் தேதிக்குள் தமிழக அரசு பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு



தமிழக மருத்துவ கல்லூரிகளில் 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிராக 2 மாணவர்கள் தாக்கல் செய்த மனுவின் மீது பதில் அளிக்க தமிழக அரசுக்கும், 2 மருத்துவ கல்லூரிகளுக்கும் நோட்டீசு அனுப்ப சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவி கே.சாகித்யா மற்றும் மாணவர் எல்.கணபதி நாராயணன் ஆகிய இருவரும் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:–

நிபந்தனைகளுடன் அனுமதி

சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே இந்தியா முழுவதும் அனுமதி வழங்கியதன் அடிப்படையில் திருச்சியில் உள்ள சென்னை மெடிக்கல் காலேஜ், சென்னையில் உள்ள தாகூர் மெடிக்கல் காலேஜ் ஆகிய 2 மருத்துவ கல்லூரிகளும் 2014–15–ம் ஆண்டில் சில நிபந்தனைகளோடு 50 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பொதுப்பிரிவில் 150 இடங்களை நிரப்பலாம் என்று அனுமதிக்கப்பட்டன.

இதன்படி மனுதாரர்கள் இருவரும் சென்னையில் உள்ள தாகூர் மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கு தகுதி பெற்றவர்கள் ஆகிறார்கள்.

மதிப்பெண் பெற்றிருந்தும்...

ஆனால் மேற்குறிப்பிட்ட 2 மருத்துவ கல்லூரிகளும் தமிழக அரசு அறிவித்தபடி 69 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தியதால் பொதுப்பிரிவை சேர்ந்த மாணவர்கள் 46 மட்டுமே இந்த கல்லூரிகளில் மருத்துவ படிப்புக்கு அனுமதிக்கப்பட்டனர்.

மனுதாரர்கள் கே.சாகித்யா மற்றும் எல்.கணபதி நாராயணன் ஆகியோர் மருத்துவ கல்லூரி அனுமதிக்கு தகுதி பெறும் அளவில் 197.25 மதிப்பெண்கள் பெற்றிருந்தும் தாகூர் மருத்துவ கல்லூரியில் அனுமதி கிடைக்கவில்லை.

உத்தரவுக்கு எதிரானது

இது, ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு மருத்துவ கல்லூரி அனுமதிக்கு 69 சதவீதத்துக்கு பதில் 50 சதவீத இட ஒதுக்கீட்டை கடைப்பிடிக்குமாறு பிறப்பித்த உத்தரவுக்கு எதிரானது.

எனவே மனுதாரர்களுக்கு மேற்கண்ட மருத்துவ கல்லூரிகளில் அனுமதி வழங்குமாறு உத்தரவிடவேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

மனுதாரர்கள் சார்பில் வக்கீல் சிவபாலமுருகன் ஆஜராகி வாதாடினார்.

பதில் அளிக்க உத்தரவு

அவர், ‘‘ஏற்கனவே சாஹ்னி என்பவர் தொடுத்த வழக்கின் மீது வழங்கிய தீர்ப்பில் மருத்துவம், பொறியியல் போன்ற படிப்புகளுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கவேண்டும் என்னும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு 69 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தி உள்ளது. எனவே மனுதாரர்கள் இருவரையும் மருத்துவ படிப்பில் அனுமதி வழங்க தமிழக அரசுக்கும், சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கும் உத்தரவிட வேண்டும்’’ என்று வாதிட்டார்.

இதைத் தொடர்ந்து தமிழக அரசு மற்றும் சம்பந்தப்பட்ட மருத்துவ கல்லூரிகள் வருகிற 14–ந் தேதிக்குள் பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தனர்.

அண்ணாபல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: 1 லட்சத்து 85 ஆயிரம் மாணவ–மாணவிகளுக்கு பட்டம் கவர்னர் கே.ரோசய்யா வழங்கினார்



அண்ணாபல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் 1 லட்சத்து 85 ஆயிரத்து 153 மாணவ–மாணவிகளுக்கு கவர்னர் கே.ரோசய்யா பட்டம் வழங்கினார்.

பட்டமளிப்பு விழா

சென்னையில் உள்ள அண்ணாபல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் தமிழ்நாட்டில் அரசு என்ஜினீயரிங் கல்லூரிகள், அரசு உதவி பெறும் என்ஜினீயரிங் கல்லூரிகள், சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்பட மொத்தம் 703 கல்லூரிகள் உள்ளன. இத்தனை கல்லூரிகளும் அண்ணாபல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் தான் இயங்குகின்றன.அனைத்து கல்லூரிகளிலும் உள்ள தங்கப்பதக்கம் பெற்ற மாணவ–மாணவிகள், பிஎச்.டி. பட்டம் பெறும் மாணவர்கள் மட்டும் பட்டமளிப்பு விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

அண்ணாபல்கலைக்கழக 35–வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விவேகானந்தா கலைஅரங்கில் நேற்று நடைபெற்றது.

பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் மு.ராஜாராம் வரவேற்று பேசினார். விழாவில் பி.இ., எம்.இ., எம்.சி.ஏ., எம்.பி.ஏ., பி.ஆர்க்., எம்.பிளாண், எம்.எஸ் உள்ளிட்ட பல்வேறு படிப்புகளை படித்தவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

1 லட்சத்து 85ஆயிரம் பேருக்கு பட்டம்

மேரி வெரோனிகா அமிர்தா, கின்சன் பிரபு உள்பட 138 மாணவ–மாணவிகள் தங்கப்பதக்கங்கள் பெற்றனர். நேரடியாக நேற்று 1148 பேர் பட்டம் பெற்றனர். விழாவுக்கு வராமல் 1 லட்சத்து 84ஆயிரத்து 5 பேர் பெற்றனர்.

மொத்தத்தில் 1 லட்சத்து 85 ஆயிரத்து 153 மாணவ–மாணவிகள் பட்டம் பெற்றனர். கவர்னர் கே.ரோசய்யா கலந்துகொண்டு மாணவ–மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

பசுமை புரட்சிசெய்து வரும் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமி நாதன் கலந்துகொண்டு பட்டமளிப்பு விழா உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:–

சதுப்புநிலக்காடுகளை வளருங்கள்

இந்தியாவில் காசநோய் பாதித்தவர்களில் 55 சதவீதம் பேர்கள், உடலில் சத்து இல்லாத காரணத்தால் தான் அந்த நோய் தாக்கியது என்று தெரிய வருகிறது. நல்ல சத்தான உணவே நோய்களை தடுப்பதற்கு மூலக்காரணமாகும். அதற்கு உணவு உற்பத்தியில் நாம் தன்னிறைவு பெறவேண்டும். முதல் கட்டமாக அதற்கு சுற்றுச்சூழலை பாதுகாக்கவேண்டும்.

சுனாமி வந்தபோது, சதுப்புநிலக்காடுகள்(மாங்குரோவ் காடுகள்) இருந்த பகுதியில் சுனாமியின் தாக்கம் அதிகம் இல்லை. உதாரணமாக சிதம்பரம் பிச்சாவரத்தில் சதுப்புநிலக்காடுகள் உள்ளன. எனவே ஆறுகள் கடலில் கலக்கும் இடத்தில் சதுப்புநிலக்காடுகளை வளர்த்தால் சுனாமி போன்ற எந்த கடல் தாக்கமும் இருக்காது. பார்வை 2020 திட்டத்திற்கு பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஆராய்ச்சி உதவியாக இருக்கவேண்டும்.

இவ்வாறு எம்.எஸ்.சுவாமிநாதன் பேசினார்.

விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.தாண்டவன், தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி ஆணையர் பிரவீண்குமார், தொழிற்சாலைகள் துறை செயலாளர் சி.வி.சங்கர், தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் டி.கே.ராமச்சந்திரன், அண்ணாபல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்கள் பி.மன்னர் ஜவகர், காளிராஜ், டீன்கள் நாராயணசாமி, தாமரைச்செல்வி, சிவராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Wednesday, November 5, 2014

பகிர்ந்துகொள்ளுதல் எனும் பொறுப்பு...by என். சொக்கன்



யோசிக்காமல் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும் என்று ஃபேஸ்புக் நமக்குக் கற்பிக்கிறது.

சில வாரங்களுக்கு முன்னால், தமிழக முன்னாள் முதல்வர் கர்நாடகச் சிறையில் இருந்த நேரம். அவர் ஜாமீனில் வெளிவரும் வாய்ப்பும் இந்த ஊர் (பெங்களூரு) நீதிமன்றத்தால் மறுக்கப்பட்டிருந்தது. அப்போது என்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு புகைப்படத்தைப் பார்த்தேன். அதில் கர்நாடக மாநிலப் பதிவு எண் கொண்ட பேருந்து ஒன்று கண்ணாடி உடைந்து நின்றுகொண்டிருந்தது. அதனருகே, ‘தமிழகத்தினுள் வரும் கர்நாடக வாகனங்களின்மீது கல்வீச்சுத் தாக்குதல் ஆங்காங்கே நடைபெறுகிறது’ என்கிற செய்தி.

ஃபேஸ்புக்கில் அதனைப் பகிர்ந்துகொண்டிருந்தவர் என்னுடைய நெருங்கிய நண்பர்தான். அவர் மிகவும் அக்கறையாக அந்தப் புகைப்படத்தைத் தன் நண்பர்களுக்கு வழங்கி, ‘ஜாக்கிரதை’என்று குறிப்பும் எழுதியிருந்தார். அடுத்த சில மணி நேரங்களுக்குள் ஃபேஸ்புக்கில், ட்விட்டரில் அந்தப் புகைப்படத்தைப் பலமுறை பார்த்துவிட்டேன். வெவ்வேறு நண்பர்கள் அதே புகைப்படத்தை அதே அக்கறையுடன் பகிர்ந்து கொண்டிருந்தார்கள். அதனைத் திரும்பத் திரும்பப் பார்க்கப் பார்க்க, எனக்குப் பயம் அதிகரித்தது. காரணம், அன்று மாலை நான் ஒரு வாடகை வாகனத்தில் தமிழகம் செல்வதாக இருந்தேன். கண்டிப்பாக அது கர்நாடகப் பதிவு எண் கொண்ட வாகனமாகத்தான் இருக்கும். இப்போது, கல்வீச்சுக்குப் பயந்து பயணத்தைத் தள்ளிப்போடுவதும் சாத்தியப்படாத சூழ்நிலை. எந்தத் தைரியத்தில் கிளம்புவது?

கார், கர்நாடகத்தைச் சேர்ந்ததாக இருப்பினும், உள்ளே இருக்கிற நான் தமிழன்தான். ஆனால், அது கல் வீசுகிறவர்களுக்குத் தெரியுமா? கல்லுக்குத் தெரியுமா? வரும் கல்லை நிறுத்திவைத்துச் சிலப்பதிகாரம் சொல்லிக் காட்டியா நிரூபிக்க இயலும்?

வெறும் பூச்சாண்டி

நாள் முழுக்க அந்தக் கண்ணாடி உடைந்த பேருந்தின் புகைப்படம் என் ஞாபகத்தில் வந்து பயமுறுத்திக்கொண்டே இருந்தது. பெங்களூரு, சென்னை நெடுஞ்சாலையில் உள்ள சில நண்பர்களை அழைத்து அங்கே என்ன நிலவரம் என்று விசாரித்தேன். “ஒரு பிரச்சினையும் இல்லைங்க, தைரியமா வரலாம்” என்றார்கள்.

“நிஜமாவா? ஃபேஸ்புக்ல பயமுறுத்தறாங்களே!”

‘‘அதையெல்லாம் பார்க்காதீங்க, இத்தனை பெரிய தமிழ்நாட்ல எங்கயாவது ஒரு கர்நாடக பஸ் உடைக்கப்பட்டிருக்கும், அதையே திரும்பத் திரும்ப ஷேர் பண்ணினா, இங்கே எல்லாக் கர்நாடக வண்டிக்கும் ஆபத்துன்னு அர்த்தமாயிடுமா? கர்நாடக அரசாங்க பஸ்ஸே தைரியமா வருது, உங்களுக்கென்ன?”

அவர்கள் இந்த அளவு விளக்கிச் சொன்னபோதும், எனக்குச் சந்தேகம் தீரவில்லை. ஆனால், அவசியம் மேற்கொள்ள வேண்டிய பயணம் என்பதால், பயத்துடனே புறப்பட்டு வந்தேன்.

அடுத்த இரண்டு நாள் தமிழகத்தில் அந்த வண்டி யில்தான் சுற்றிக்கொண்டிருந்தேன். ஒரு சின்னப் பிரச்சினைகூட இல்லை. சொல்லப் போனால், ஓரிரு இடங்களில் எங்கள் வண்டியின் பதிவு எண்ணைப் பார்த்துவிட்டுக் கன்னடத்தில் பேசி வரவேற்றவர்களைப் பார்த்தோம். எந்தப் பிரச்சினையும் இல்லாமல் கர்நாடகம் திரும்பினோம்.

மறுநாள், அலுவலகத்தில் நண்பர் ஒருவரிடம் பேசிய போது, அவருக்கும் இதே அனுபவம்தான் என்றார். அவரும் ஃபேஸ்புக் ‘எச்சரிக்கை’களுக்குப் பயந்து தன் வாகனத்தை யாருக்கும் தெரியாமல் கிட்டத்தட்ட கள்ளக்கடத்தல் செய்வதுபோல் சந்துபொந்துகளில் ரகசியமாக ஓட்டிவந்திருக்கிறார். அவருக்கும் ஒரு பிரச்சினையும் இல்லை.

இப்போது, அந்த ஃபேஸ்புக் புகைப்படம் ஒரு வேடிக்கையாக எங்களுக்குத் தெரிந்தது. ஆனால், தமிழக எல்லைக்குள் இருந்தவரை அதை எண்ணிப் பதற்றத்தில்தான் இருந்தோம்.

அந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்துகொண்டவர்கள் எங்கள் நண்பர்கள்தான். அவர்கள் மிகுந்த அக்கறை யோடுதான் அதைச் செய்திருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஒருவேளை பிரச்சினை உண்மையாகவே பெரிதாக இருந்திருந்தால், அது மிகவும் பயன்பட்டிருக்கும் என்பதிலும் சந்தேகமில்லை. ஆனால், ‘ஷேர்’ என்கிற அந்தப் பொத்தானை அழுத்தும்

முன் நமக்கு ஒரு பொறுப்பு உள்ளது, நாம் பகிர்ந்துகொள்வது உண்மைதானா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டிய அவசியம் உள்ளது என்பதை அவர்கள் யோசிக்கவில்லை; நாளைக்கே நாங்களும் யோசிக் காமல் இந்தப் பிழையைச் செய்வோம்.

இரண்டு நிலாக்கள்

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் செய்திகளுக்கு இணையாக, சொல்லப் போனால் அவற்றைவிட வேகமாக வதந்திகள் பரவுகின்றன. ஆகவே, இந்தப் பொறுப்புணர்ச்சி பல மடங்கு அதிகரிக்க வேண்டும். உதாரணமாக, நாளை மாலை வானத்தில் இரண்டு நிலாக்கள் தோன்றும் என்று ஒரு செய்தி(?). முன்பு அதை நாம் பரப்ப வேண்டுமென்றால், அதிகபட்சம் நமக்குத் தெரிந்த நான்கைந்து பேரிடம் சொல்வோம்.

ஓரிருவருக்குத் தொலைபேசியில் சொல்வோம். அது மெதுவாகத்தான் பரவும். ஆனால் இன்றைக்கு, வானத்தில் இரண்டு நிலாக்கள் தோன்றுவதுபோல் ஃபோட்டோஷாப்பில் ஒருவர் படத்தை உருவாக்குகிறார், நான்கைந்து வரிகள் எழுதி ஃபேஸ்புக்கில் வெளியிடு கிறார். அதைப் பார்க்கிறவர்கள் ‘அட!’ என்று வியந்து ‘ஷேர்’ பொத்தானை அழுத்துகிறார்கள். மறுகணம் அது சில நூறு, அல்லது சில ஆயிரம் பேருக்குச் சென்று சேர்ந்துவிடுகிறது. இவர்கள் ஒவ்வொருவரும் ‘ஷேர்’ செய்யச் செய்ய, அது சில நொடிகளில் லட்சக் கணக்கானோரைச் சென்றடைவது சாத்தியமே.

சமூக ஊடகங்களா, செய்தி ஊடகங்களா?

செய்திகளைப் பரப்புவதில் சமூக ஊடகங்களின் பங்கு மிக முக்கியமானது. இப்போதெல்லாம் தேர்தல் நிலவரத்தில் தொடங்கி வானிலை அறிக்கை வரை எல்லாவற்றையும் ஃபேஸ்புக் நண்பர்களிடமிருந்தே தெரிந்துகொள்ள இயலுகிறது. அது அவசியமான ஒன்று. ஆனால் அதேசமயம், நாமே நேரடியாகப் பார்க்காத, உறுதி செய்யாத ஒன்றைப் பேருண்மைபோல் பரப்பும் ‘ஷேர்’ பொத்தானின் வலிமையை நாம் புரிந்துகொள்வதே இல்லை. சற்றும் பொறுப்பில்லாமல் நாள் முழுக்க அதை அழுத்திக்கொண்டே இருக்கிறோம், நண்பர்களுக்கு நல்ல விஷயங்களைப் பரப்புகிறோம் என்று நினைத்துக்கொண்டு பல பொய்களையும் அனுமதித்துவிடுகிறோம்.

தலைகீழாகத் தந்தால்...

உதாரணமாக, ஏடிஎம் இயந்திரத்தில் யாராவது கழுத்தில் கத்தி வைத்து உங்களை மிரட்டினால், உங்களுடைய அடையாள எண்ணை (பின்-PIN) தலைகீழாகத் தாருங்கள், உடனே அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒரு மணி அடிக்கும், அவர்கள் விரைந்து வந்து உங்களைக் காப்பாற்றுவார்கள் என்று ஒரு பயனுள்ள செய்தி(?). இதுவரை பல்லாயிரக் கணக்கானோர் இதை ஃபேஸ்புக்கில் பகிர்ந்துகொண்டுள்ளார்கள்.

ஆனால், இது உண்மைதானா? ஒருவேளை என்னுடைய எண் 3443 என்று இருந்தால்? அதைத் தலைகீழாகத் தந்தாலும் 3443-தானே வரும்? அது எப்படிக் காவல் துறைக்குத் தெரியும்? இப்படி ஓர் ஏற்பாடு இருந்தால், அதை வங்கி எனக்கு அதிகாரபூர்வமாகச் சொல்லியிருக்காதா? இப்படி யோசித்தவர்கள் எத்தனை பேர்? உடனே ‘ஷேர்’ பொத் தானை அழுத்தியவர்கள் எத்தனை பேர்?

இப்படி ‘யாருக்காவது பயன்படட்டும்’ என்கிற நம் அக்கறையைத்தான் இந்த வதந்தி பரப்பாளர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். செய்திகள், முதலீட்டு டிப்ஸ், உடல்நல டிப்ஸ், அழகுக் குறிப்புகள், அறிவியல் உண்மைகள், நிஜ(?) சம்பவங்கள், அறிஞர்களின் பொன்மொழிகள், வெற்றிக் கதைகள் என்று எதையெதையோ எழுதி அவர்கள் பரப்பிவிட, நாமும் கண்மூடித்தனமாக ‘ஷேர்’ பண்ணிக்கொண்டிருக்கிறோம்.

யோசித்துப் பாருங்கள்! பகிர்ந்துகொள்ளப்படும் விஷயங்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த எந்த வழியும் இல்லாத ஓர் ஊடகத்தைத் தங்கள் அறிவைப் பெருக்கும் ஒரு சாதனமாக ஒரு தலைமுறை ஏற்றுக்கொண்டுவிட்டது. இது எப்பேர்ப்பட்ட பின்விளைவுகளை ஏற்படுத்தும்!

இந்தியில் ‘ஷேர்’ என்றால் சிங்கம் என்று அர்த்தம். இனிமேல் அந்தப் பொத்தானின்மீது ஒரு நிஜ சிங்கத்தை உட்காரவைத்துப் பொய்யான செய்திகளை ஷேர் செய்கிறவர்களின் விரல்களை ஒவ்வொன்றாகக் கடிக்கச் செய்ய வேண்டும். அல்லது, நமக்கே அந்தப் பொறுப்பு வரவேண்டும். எது வசதி?

- என். சொக்கன்,

கூடலூர் பஸ் விபத்து: பயணிகளைக் காத்த டிரைவர்... பிரமிக்க வைத்த பிரேமா!



ன்னும் மிரட்சியில் இருந்து மீளவில்லை அவர்கள். அவர்கள் ....?  கடந்த திங்கட்கிழமை கேரள மாநிலத்தின் சுல்தான்பத்தேரிஎன்ற ஊரிலிருந்து தமிழக பகுதியான கூடலுருக்கு வந்த பேருந்தில் பயணம் செய்த பயணிகள்.
80 க்கும் மேற்பட்டோர் பயணம் செய்த அப்பேருந்து பெரும் விபத்திலிருந்து மீண்டாலும், அதில் பயணித்தவர்கள் இன்னமும் தங்களைத்தாங்களே கிள்ளி்ப்பார்த்துக்கொள்ளாத குறையாய் அதிசயித்துக்கிடக்கிறார்கள்.
மொத்த பயணிகளின் கரங்களும் ஒரு பயணியை நோக்கி கும்பிடுகிறது. அவர் பிரேமா. இன்று அத்தனை உயிர்களும் நிம்மதியில் கிடக்க அவரும் ஒரு முக்கிய காரணம்.

தமிழகத்தின் வடமேற்கு எல்லையாக அமைந்துள்ள நீலகிரி மாவட்டம், மூன்று மாநிலங்களின் எல்லைப் பகுதியாக விளங்குகிறது. நீலகிரி மாவட்டத்தின் கூடலூருக்கு மூன்று மாநில பேருந்துகளின் இயக்கமும் உண்டு.
கடந்த திங்கள்கிழமை (03.10.14) காலை, வழக்கம்போல  கேரளப்பகுதியான சுல்தான்பத்தேரி என்ற ஊரிலிருந்து  KL 15 7732 என்ற பதிவு எண்கொண்ட கேரள அரசுப்பேருந்து புறப்பட்டது. அதன் ஓட்டுநர்அப்துல் ரஹ்மான். காலை 7.30 மணிக்கு புறப்பட்ட அந்த பேருந்தில் நிற்க இடமில்லாத அளவுக்கு பயணிகள் நிறைந்திருந்தனர். இதில் பள்ளி, கல்லூரி மாணவர்களும் அடக்கம்.
தமிழக பகுதியான கூடலூர் தாலுகாவுக்குட்பட்ட நெலாக்கோட்டை எனும் இடத்தில், சில பயணிகளை இறக்கிவிட்டு திரும்ப புறப்பட்டபோது, பேருந்து ஓட்டுநர் அங்கு தண்ணீர் வாங்கி குடித்துள்ளார். மீண்டும் 8.25 மணிக்கு கூவச்சோலை என்ற இடத்தில் ஏழு பயணிகளை ஏற்றியபடி புறப்பட்டது.  பயணிகளின் பேச்சு சத்தமும், பேருந்தின் ஓட்டம் எழுப்பிய என்ஜின் சத்தமும் போட்டிப்போட்டு எதிரொலித்துக்கொண்டிருக்க, அப்போதுதான் அந்த எதிர்பாராத சம்பவம் நடந்தது.

பேருந்து இயல்பை மீறி சாலையில் ஓடுவது பயணிகளுக்கு புரிந்தது. கொஞ்ச நேரத்தில் பேருந்து முழுவதுமாக கட்டுப்பாட்டை இழந்தது. பயணிகளின் அலறல் அந்தப் பகுதியை அதிரவைத்தது. இத்தனைக்கும் காரணம் டிரைவருக்கு ஏற்பட்ட திடீர் நெஞ்சுவலி. வலியில் துடித்தாலும் டிரைவர் அப்துல் ரஹ்மான், ஒரு டிரைவருக்கான கடமை உணர்ச்சியுடன் பேருந்தில் இருந்த பயணிகளின் உயிரைக் காக்கும் பொருட்டு, தன் உடல்நிலையையும் கருதாமல் தன் சக்திக்கும் மீறிய பிரயோகத்துடன் பேருந்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர போராடினார். சாலையின் வலதுபக்கமாக இருந்த குடியிருப்புகளில் மோதாமலும், அதேசமயம் அங்கிருந்த 40 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்துவிடாமல் தடுக்கவும், ஸ்டீயரிங்கை இடதுபக்கமாகத் திருப்பி அதற்கு மேல் முடியாமல் சரிந்து மயங்கினார்.
இந்த போராட்டத்தை கவனித்துவந்து பிரேமா என்ற பயணி, சட்டென மேற்கொண்டு பேருந்து முந்தி செல்வதை தடுக்கும் வகையில் பேருந்தின் பிரேக்கை அழுத்திப்பிடித்தார். இதனையடுத்து பேருந்து, சாலையோரமாக மண் மேட்டில் மோதி நின்றது. அத்தனை உயிர்களும் காப்பாற்றப்பட்டது. தன் உயிரையும் பொருட்படுத்தாது போராடிய டிரைவரின் செயலும், அதற்கு துணைநின்ற பிரேமாவின் துணிச்சலும் பயணிகளின் நெஞ்சை நெகிழவைத்துவிட்டது.

பிரேமாவிடம் பேசினோம். அந்த “திக் திக்“ அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.
''நான் கூடலூரிலுள்ள ஒரு வழக்கறிஞர் அலுவலகத்தில் பணிபுரிகிறேன். வழக்கமாக இந்த பஸ்ஸில்தான் கூடலூருக்குச் செல்வேன். சம்பவம் நடந்த அன்றும் எப்போதும்போல சரியாக 8:25 மணிக்கு பஸ் வந்தது. கேரளாவில் இருந்து வருவதால், பஸ்ஸில் கூட்டம் நிரம்பி வழியும்.
வழியில் ஏறுபவர்களுக்கு உட்கார இடம் கிடைக்காது. அதனால், நான் எப்போதும் டிரைவர் சீட் அருகே உள்ள பேனட்டில் அமர்ந்துகொள்வேன். ஆனால் அன்று, வழக்கத் தைவிட கூட்டம் கொஞ்சம் அதிகமாக இருந்தது. டிரைவர் என்னை அமரச் சொன்னபோது, 'இல்லை அண்ணா, நான் நின்றுகொள்கிறேன். கூட்டம் அதிகமாக இருக்கிறது' என்று சொல்லிவிட்டு நின்றபடியே பயணம் செய்தேன்.

பேருந்து கிளம்பிய சிறிது தூரம் சென்றதும், திடீரென நிலைதடுமாறியது. டிரைவர், நெஞ்சைப் பிடித்துக்கொண்டு துடித்தார். அவரால் பேருந்தின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அந்த நிலையிலும், தன் சக்தியெல்லாம் திரட்டி ஸ்டீயரிங்கை இடதுபக்கமாகத் திருப்பியபடி, சீட்டில் சரிந்துவிட்டார். நான் அந்தச் சூழ்நிலையை சட்டெனப் புரிந்துகொண்டுவிட்டேன்.
'டிரைவர் மயக்கம் போட்டு விழுந்துவிட்டார். உதவிக்கு வாங்க' எனக் கூச்சலிட்டபடியே, டிரைவர் சீட் பகுதிக்குள் புகுந்து பிரேக்கை மிதித்தேன். என் அருகில் இருந்த ஒருவர் ஸ்டீயரிங்கை இடதுபக்கமாக இழுத்துப் பிடித்தபடி இருக்க, பேருந்து சாலை ஓரத்தில் இருந்த மண் மேட்டில் மோதி நின்றதுவிட்டது. வலதுபக்கமாக பேருந்து சென்றிருந்தால், வீடுகளில் மோதி 40 அடி பள்ளத்தில் உருண்டிருக்கும். அந்த சம்பவத்தை நினைத்தாலே நெஞ்சம் பதறுகிறது'' என்ற பிரேமா, ரிலாக்ஸ் ஆக சிறிது நேரம் பிடித்தது.

"பஸ் நின்றதும் உள்ளே இருந்தவர்கள் அச்சத்தில் அலறியடித்து ஜன்னல் வழியே குதிக்க முற்பட்டனர். அவர்களை சமாதானம் செய்து ஆம்புலன்ஸுக்கு தகவல் சொன்னோம். நானும் இன்னொரு பயணியும் டிரைவர் அண்ணாவை பஸ்ஸில் இருந்து ஆம்புலன்ஸுக்கு இறக்கினோம்.
உயிருக்குப் போராடும் சமயத்திலும் எங்களை காப்பாற்ற முயற்சிசெய்த அவரது மனதை நினைத்து பேருந்தில் பயணித்த அனைவருக்கும் கண்ணீர் வந்துவிட்டது. நாங்கள் பிழைத்துக்கொண்டோம் என்ற மகிழ்ச்சி நீடிப்பதற்குள், மாரடைப்பால் மருத்துவமனைக்குக் கொண்டுபோகும் வழியிலேயே டிரைவர் அண்ணா உயிரிழந்து விட்டார் என்ற தகவல் வந்து வேதனையை ஏற்படுத்திவிட்டது'' என்று கண் கலங்கினார் பிரேமா.
மகத்தான மனித உயிர்களை சாதுர்யமாக காப்பாற்றிய பிரேமாவுக்கு நம் சார்பாக பாராட்டுக்களை தெரிவித்து கிளம்பினோம்.

- ஜெ.சசீதரன் (மாணவப் பத்திரிகையாளர்)

NEET PG: Rajasthan HC relief to doctor denied admission over permanent registration certificate Written By : Barsha Misra

NEET PG: Rajasthan HC relief to doctor denied admission over permanent registration certificate Written By : Barsha Misra Published On 4 Apr...