Wednesday, December 24, 2014

Bill in LS to merge PIO, OCI schemes Press Trust of India | New Delhi December 23, 2014

A bill to facilitate merger of the Person of Indian Origin (PIO) and Overseas Citizenship of India (OCI) schemes by amending the Citizenship Act was today introduced in Lok Sabha on the last day of the Winter Session.

The Citizenship (Amendment) Bill 2014, introduced by Minister of State for Home Haribhai P Chaudhary, seeks to remove certain lacunae noticed during implementation of the 1955 Act and review of provisions relating to overseas citizens of India.

The amendment also provides for registration of OCI cardholders, confirmation of rights of such cardholders, renunciation of OCI card and cancellation of registration of OCI card, the Statement of Objects and Reasons of the bill said.

During his recent visits to the US and Australia, Prime Minister Narendra Modi had announced a two-month deadline for the long-pending merger of OCI and PIO status to woo the Indian diaspora from whom he sought support for his ambitious Clean India campaign.

He had then said the Home Ministry was working on the new programme that will merge PIO and OCI schemes.

முடிவுக்கு வந்தது கே.பி. எனும் சகாப்தம்



ரஜினிகாந்த், கமல்ஹாசன், நாகேஷ், பிரகாஷ்ராஜ், விவேக் என இயக்குநர் கே.பாலசந்தர் அறிமுகப்படுத்தி உச்சத்தைத் தொட்ட நட்சத்திரங்கள் 66 பேர். பெண்ணுரிமை பேசும் நாயகிகளையும், உறவுகளின் விநோதங்களையும் காட்சிப்படுத்தியதன் மூலம் தனக்கென தனி முத்திரை பதித்தவர்.

எம்.ஜி.ஆர்., சிவாஜி உச்சத்திலிருந்த காலத்திலும், ரஜினி, கமல் உச்சத்தைத் தொட்ட பிறகும் அவர்களை நம்பாமல் கதைகளை நம்பி வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர் இவர்.

நாடகங்களை இயக்கியவர்: கைலாசம் பாலசந்தர் என்ற இயற்பெயர் கொண்ட பாலசந்தர், ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டம், நன்னிலம் வட்டத்துக்கு உள்பட்ட நல்லமாங்குடி கிராமத்தில் 1930-ஆம் ஆண்டு ஜூலை 9-ஆம் தேதி பிறந்தார்.

கே.பாலசந்தரின் கலையுலகப் பிரவேசம் அந்த கிராமத்தின் திண்ணை நாடகங்களில்தான் ஆரம்பமானது. கிராம நிர்வாக அதிகாரியாக இருந்த அவரது தந்தைக்கு பாலசந்தரை மாவட்ட ஆட்சியராக ஆக்க வேண்டும் என்பது ஆசை. ஆனால் இவரோ வீட்டுத் திண்ணையில் பள்ளிப் பருவத்திலேயே நாடகங்களை அரங்கேற்ற ஆரம்பித்தார்.

தந்தையின் வேண்டுகோளை ஏற்று பி.எஸ்.சி படிப்பை முடித்த பாலசந்தர் முத்துப்பேட்டையில் பள்ளி ஆசிரியராக ஓர் ஆண்டு பணியாற்றினார். அதன்பிறகு, சென்னை தேனாம்பேட்டையில் இருந்த ஏ.ஜி.எஸ். அலுவலகத்தில் கணக்கராகப் பணிக்குச் சேர்ந்தார். அலுவலகப் பணிபோக மீத நேரங்களில் நாடகங்கள் மீது கவனம் செலுத்தினார். பின்னர் "ராகினி ரிக்ரியேஷன்ஸ்' என்ற பெயரில் சென்னை, திருவல்லிக்கேணியில் நாடகக் குழுவைத் தொடங்கினார்.

அப்போது பாலசந்தரின் கதை, வசனம், இயக்கத்தில் அரங்கேறிய "மேஜர் சந்திரகாந்த்' நாடகம் மிகப் பிரபலமான நாடகமாக உருப்பெற்றது.

அதைத் தொடர்ந்து, அவர் அரங்கேற்றிய "எதிர்நீச்சல்', "நாணல்', "விநோத ஒப்பந்தம்' போன்ற நாடகங்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்றன. இந்த நாடகங்களின் மூலம் நாகேஷ், மேஜர் சுந்தர்ராஜன் உள்ளிட்ட நடிகர்கள் வெளியுலகுக்கு தெரிய ஆரம்பித்தனர்.

எம்.ஜி.ஆர். நடித்த "தெய்வத்தாய்' படத்தின் மூலம் மேடை நாடகத்திலிருந்து சினிமாவுக்கு வந்தார் பாலசந்தர். அப்படத்தின் கதை, வசனத்தை எழுதியதன் மூலம் சினிமாவில் நுழைந்தார். அதைத் தொடர்ந்து, "பூஜைக்கு வந்த மலரே' ஏவி.எம்.மின் "சர்வர் சுந்தரம்', சிவாஜிகணேசன் நடித்த "நீலவானம்' ஆகிய படங்களுக்குக் கதை, வசனம் எழுதினார்.

1965-ஆம் ஆண்டு வெளியான "நீர்க்குமிழி' இவரது இயக்கத்தில் வெளிவந்த முதல் திரைப்படம். இந்தப் படத்தில் நாகேஷ் கதாநாயகனாக நடித்தார். முத்துராமன், கே.ஆர்.விஜயா நடித்து வெளிவந்த "நாணல்', நாகேஷ், ஜெயலலிதா நடித்த "மேஜர் சந்திரகாந்த்' ஆகிய இரு படங்களும் பாலசந்தருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தன. "மேஜர் சந்திரகாந்த்' படத்தின் மூலம் வெகுவாக அறியப்பட்ட சுந்தர்ராஜன் அப்படத்துக்குப் பின் மேஜர் சுந்தர்ராஜன் என்றழைக்கப்பட்டார்.

இவருடைய பெரும்பாலான படங்களில், மனித உறவுகளுக்கு இடையிலான சிக்கல்கள், சமூக பிரச்னைகள் போன்றவை முக்கியக் கருப்பொருள்களாய் இருந்தன. நாகேஷ், முத்துராமன் நடிப்பில் வந்த "எதிர்நீச்சல்', ஜெமினி நடிப்பில் வெளிவந்த "இருகோடுகள்', முழுக்க முழுக்க நகைச்சுவையை மையமாகக் கொண்டு உருவான "பாமா விஜயம்', காந்தியக் கொள்கைகளின்படி வாழ முடியுமா என்பதைக் கருவாகக் கொண்டு உருவான "புன்னகை', கமல், ஷோபா, சரத்பாபு, சுமித்ரா நடிப்பில் வெளிவந்த "நிழல் நிஜமாகிறது', கமல், ஸ்ரீவித்யா, ஜெயசுதா நடித்த "அபூர்வ ராகங்கள்' என இவரின் தொடக்க கால படங்கள் சிறந்த கதை அம்சமுள்ள படங்களாகத் தமிழ் சினிமாவில் தனி பாதை அமைத்தன. 1975-ஆம் ஆண்டு வெளிவந்த "அபூர்வ ராகங்கள்' படத்தின் முலம் நடிகர் ரஜினிகாந்த் சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானார்.

சிவாஜியை வைத்து பாலசந்தர் இயக்கிய ஒரே படம் "எதிரொலி'. கமல், பிரமீளா நடிப்பில் வெளிவந்த "அரங்கேற்றம்' அந்தக் காலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

சுஜாதா கதாநாயகியாக அறிமுகமான "அவள் ஒரு தொடர்கதை', ரஜினிகாந்த், சரிதா நடித்த "தப்பு தாளங்கள்', மாதவி நடித்த "இவள் ஒரு கண்ணகி' உள்ளிட்ட படங்கள் சமூக பிரச்னைகளை மையமாகக் கொண்டு உருவாகின.

"அவள் ஒரு தொடர்கதை', "தில்லுமுல்லு', "நினைத்தாலே இனிக்கும்', "வறுமையின் நிறம் சிகப்பு', "உன்னால் முடியும் தம்பி', "சிந்து பைரவி', "புது புது அர்த்தங்கள்', "வானமே எல்லை' போன்ற ஏராளமான சிறந்த படங்களை இவர் இயக்கியுள்ளார்.

தெலுங்கில் கமல், சரிதா அறிமுகமான "மரோ சரித்ரா' திரைப்பட வரலாற்றில் கலைரீதியாகவும் வணிகரீதியாகவும் பெரும் சாதனை படைத்தது. பின்னர், இதே படம் கமல், ரதி நடிக்க கே.பி. இயக்கத்தில் "ஏக் தூஜே கேலியே' என்ற பெயரில் ஹிந்தியில் வெளியாகி மாபெரும் சரித்திரம் படைத்தது.

90-களுக்குப் பிறகு "கையளவு மனசு' போன்ற பெரும் வரவேற்பைப் பெற்ற தொலைக்காட்சித் தொடர்களையும் இயக்கினார். தமிழ் சின்னத்திரையில் மெகா தொடர்களுக்கு முன்னோடி என்ற பெருமையும் பாலசந்தரை சாரும்.

கவிதாலயா என்னும் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி, அதன் மூலமாக பிற இயக்குநர்களின் கைவண்ணத்தில் பல திரைப்படங்களை அளித்துள்ளார்.

மேஜர் சுந்தர்ராஜன், எஸ்.வி.சேகர், மௌலி, ஒய்.ஜி.மகேந்திரன், காத்தாடி ராமமூர்த்தி ஆகியோர் நாடக மேடையிலிருந்து இவரால் திரையுலகம் கண்டவர்கள்.

தமது இயக்கத்தில் பாலசந்தர் அதிகமாக பயன்படுத்திய நடிகர்கள் ஜெமினிகணேசன், நாகேஷ், மேஜர் சுந்தர்ராஜன், கமல்ஹாசன், முத்துராமன் நடிகையரில் சௌகார் ஜானகி, ஜெயந்தி, சுஜாதா, சரிதா ஆகியோரைக் குறிப்பிடலாம்.

வெற்றி, தோல்வி ஆகிய இரு துருவங்களையும் ஒரே நேரத்தில் தமது திரையுலக வாழ்வில் பாலசந்தர் அனுபவித்தது உண்டு. இவர் முதன் முதலில் இயக்கிய வண்ணப் படமான "நான்கு சுவர்கள்' தோல்வி அடைந்தது. அதே கால கட்டத்தில் அவரது "நூற்றுக்கு நூறு' வெளியாகி பெரும் பாராட்டையும் வெற்றியையும் பெற்றது.

"தண்ணீர் தண்ணீர்', "அச்சமில்லை அச்சமில்லை', ஆகிய படங்கள் அரசியல், சமூக நெருக்கடிகளைப் பேசிய படங்களாக அமைந்தன. "தண்ணீர் தண்ணீர்' கோமல் சுவாமிநாதனின் நாடகத்திலிருந்து உருவானது.

"அவர்கள்', "புன்னகை மன்னன்', "தில்லு முல்லு', "அவள் ஒரு தொடர்கதை', "அபூர்வ ராகங்கள்' உள்பட இதுவரை 100-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி சாதனை புரிந்துள்ளார். கடைசியாக இவரது இயக்கத்தில் வெளிவந்த படம் "பொய்'. கமல் நடிப்பில் ரமேஷ் அரவிந்த் இயக்கி வரும் "உத்தம வில்லன்' படத்தில் நடித்து வந்தார் பாலசந்தர். இந்தப் படத்தில் திரைப்பட இயக்குநராகவே அவருக்கு வேடமளித்தார் கமல்ஹாசன். இப்படத்தின் இறுதிக் கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இயக்குநர் சிகரம் கே.பி!



அனைவராலும் ‘கே.பி’ என்று அன்போடு அழைக்கப்பட்ட கே.பாலசந்தர், மறைந்துவிட்டார். அவர் மறைந்தாலும் தமிழ் சினிமா உள்ளவரை பேசக்கூடிய அளவுக்கு பல சாதனைகளைச் சேர்த்துவைத்துவிட்டுச் சென்றுள்ளார்!

அன்றைய ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் நன்னிலம் கிராமத்தில் பிறந்தவர் பாலசந்தர். சிறுவயதிலேயே மேடை நாடகங்கள் எழுதுவதில் ஆர்வமாக இருந்தார். தன் 15-ம் வயதில் சில நாடகங்களை எழுதியும் இருக்கிறார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் விலங்கியல் படிப்பில் சேர்ந்து படித்தவர், தொடர்ந்து மேடை நாடகக் கலையுடன் தொடர்பிலேயே இருந்தார்.



கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, திருவாரூர் அருகே உள்ள முத்துப்பேட்டையில் பள்ளி ஆசிரியராகப் பணிக்குச் சேர்ந்தார். பிறகு சென்னைக்கு வந்து, அக்கவுன்டன்ட் ஜெனரல் அலுவலகத்தில் எழுத்தராகப் பணிக்குச் சேர்ந்தார். அந்தச் சமயத்தில்தான் யுனைட்டெட் அமெச்சூர் ஆர்ட்டிஸ்ட் நாடகக்குழுவில் இணைந்தார். அதைத் தொடர்ந்து சொந்தமாக ஒரு நாடகக்குழுவை ஏற்படுத்தினார். மேஜர் சந்திரகாந்த், சர்வர் சுந்தரம், நீர்க்குமிழி, மெழுகுவர்த்தி, நவக்ரஹம் போன்ற நாடகங்களை அவரே தயாரித்து இயக்கினார்.

எம்.ஜி.ஆர் நடித்த 'தெய்வத்தாய்' படத்துக்கு வசனம் எழுதும் வாய்ப்பு வந்தது; எழுதினார். அந்தச் சமயத்தில், தான் பணியாற்றிய அலுவலகத்தில் கண்காணிப்பாளராகவும் பதவி உயர்வு வந்தது. இதற்கிடையே இவரின் 'சர்வர் சுந்தரம்' நாடகத்தைப் படமாக்கும் உரிமையைப் பெற்ற ஏ.வி.எம் செட்டியார், அதை கிருஷ்ணன் - பஞ்சு இரட்டை இயக்குநர்களைக்கொண்டு நாகேஷை ஹீரோவாக நடிக்கவைத்து தயாரித்தார். படம் மிகப் பெரிய வெற்றிபெற்றது. இவரின் இன்னொரு நாடகமான ‘மேஜர் சந்திரகாந்த்’ இந்தியில் படமாக எடுக்கப்பட்டு, தேசிய விருது பெற்றது.

1965-ல் 'நீர்க்குமிழி' மூலம் இயக்குநராக அறிமுகமானார் கே.பி. அதைத் தொடர்ந்து 'நாணல், மேஜர் சந்திரகாந்த், எதிர்நீச்சல்...' என தன் நாடகங்களையே படமாக எடுத்தார். தமிழ் மற்றும் தெலுங்கில் இவர் இயக்கிய ‘பாமா விஜயம்’ இவரை டிரெண்ட் செட்டர் இயக்குநர் ஆக்கியது. இவரின் ‘இருகோடுகள்’ சிறந்த தமிழ் படத்துக்கான தேசிய விருதை பெற்றது. ‘அரங்கேற்றம், சொல்லத்தான் நினைக்கிறேன், அவள் ஒரு தொடர்கதை, நான் அவன் இல்லை...' என இவர் இயக்கிய படங்கள் விமர்சனம், வியாபாரம், சர்ச்சை என ஏதோ ஒருவகையில் மக்களிடம் சென்றடைந்துகொண்டே இருந்தது. ‘ஏக் துஜே கே லியே’ இவர் எழுதி இயக்கிய இந்திப் படம், 1981-ல் வெளிவந்து காதல் சினிமாக்களின் டிரெண்ட் செட்டராக அமைந்தது.

இவரின் படங்கள் வெவ்வேறு வடிவங்களில் இருந்ததாலும், அவை பெரும்பாலும் சமூக அரசியல் விஷயங்களையே மையப்படுத்தியவையாக அமைந்தன. இந்தியப் பெண்களின் நிலை, அவர்களின் பரிதாப நிலைகளை இவரின் படங்கள் பேசின. ‘பார்த்தாலே பரவசம்’ இவரின் 100-வது படம். ‘பொய்’ கே.பி இயக்கிய 101-வது படம். அதோடு சினிமா இயக்குவதை நிறுத்திக்கொண்டாலும் சினிமா ரசிகராக இளைய தலைமுறைக் கலைஞர்களை ஏகத்துக்கும் உற்சாகப்படுத்தி வந்தார்!

சின்னத் திரையிலும் குறிப்பிடத்தக்க பல சாதனைகளை நிகழ்த்தினார். இவரின் முதல் தொலைக்காட்சி தொடர் 'ரயில் சிநேகம்.' 1990-ல் தூர்தர்ஷனுக்குகாக எடுத்தார். ‘கையளவு மனசு’ இவரின் டிரெண்ட் செட்டர் சீரியல். மெகா சீரியல் என்ற கான்செப்ட்டை ‘ரகுவம்சம்’ மூலம் துவக்கிவைத்தார். இவர் தமிழ் சினிமாவில் 65-க்கும் மேற்பட்ட நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்களை அறிமுகப்படுத்தி இருக்கிறார். கமலஹாசன், ரஜினிகாந்த், ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்டவர்கள் அதில் பிரபல ஆளுமைகள்!

கே.பியின் படைப்புகள் அவரின் நினைவை என்றும் நம்முடன் அழுத்தமாகப் பதித்திருக்கும்!

- ம.கா.செந்தில் குமார்

ரஜினிகாந்த், கமல்ஹாசன் புகழுக்கு காரணமானவர் கே.பாலசந்தர்

கே.பாலசந்தர் புரட்சிகரமான கருத்துகளை திரைப்படங்களில் துணிந்து கூறியவர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பட உலகிற்கு அறிமுகம் செய்தவர். கமல்ஹாசன், ஸ்ரீதேவி ஆகியோர் புகழின் சிகரத்தை அடைவதற்கு வழி வகுத்தவர். மாறுபட்ட திரைப்படங்களை வழங்கி ‘‘இயக்குனர் சிகரம்’’ என்ற பட்டத்தை பெற்றவர்.

அரசு வேலை

தஞ்சை மாவட்டம் நன்னிலத்திற்கு அருகில் உள்ள நல்லமாங்குடியில் கிராம முன்சீப்பாக இருந்த கைலாசம் அய்யர்-காமாட்சியம்மாள் தம்பதிகளின் மகனாக 9-7-1930-ல் பாலசந்தர் பிறந்தார். பள்ளிக்கூடத்தில் படிக்கும்போதே நாடகங்கள் நடத்துவதில் நாட்டம் கொண்டிருந்தார். பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து ‘பி.எஸ்.சி.’ பட்டம் பெற்றார்.

1950-ல் சென்னையில் ‘அக்கவுண்டன்ட் ஜெனரல்’ அலுவலகத்தில் வேலை கிடைத்தது. வேலை பார்க்கும்போது அவர் கதை-வசனம் எழுதி இயக்கிய ‘மெழுகுவர்த்தி’, ‘மேஜர் சந்திரகாந்த்’ முதலான நாடகங்கள் புகழ் பெற்றன.

எம்.ஜி.ஆர். பாராட்டு

ஒருமுறை ‘மெழுகுவர்த்தி’ நாடகத்திற்கு தலைமை தாங்கிய எம்.ஜி.ஆர்., பாலசந்தரின் திறமையை பாராட்டினார். அதைத்தொடர்ந்து ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவிஸ் தயாரிப்பான ‘தெய்வத்தாய்’ படத்திற்கு வசனம் எழுதும் வாய்ப்பு தேடி வந்தது. தொடர்ந்து, ‘சர்வர் சுந்தரம்’, ‘பூஜைக்கு வந்த மலர்’, ‘நீலவானம்’ ஆகிய படங்களுக்கு கதை-வசனம் எழுதினார்.

அடுத்து, மேஜர் சந்திரகாந்த், பாமா விஜயம், அனுபவி ராஜா அனுபவி, தாமரை நெஞ்சம், பூவா தலையா ஆகிய படங்களை இயக்கினார். 1969-ல் அவர் டைரக்ட் செய்த ‘‘இருகோடுகள்’’ மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. பின்னர், சிவாஜி கணேசன் நடித்த ‘‘எதிரொலி’’ படத்தை இயக்கினார். பிறகு காவியத்தலைவி, புன்னகை, வெள்ளிவிழா அரங்கேற்றம் உள்பட பல படங்களை டைரக்ட் செய்தார்.

ரஜினிகாந்த்

1975-ல் வெளிவந்த ‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் ரஜினிகாந்தை அறிமுகப்படுத்தினார். இதேபோல், குழந்தை நட்சத்திரமாக இருந்த ஸ்ரீதேவியை ‘‘மூன்று முடிச்சு’’ மூலம் கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார். ‘‘களத்தூர் கண்ணம்மா’’வில் அறிமுகமாகி பல படங்களில் சிறுவனாக நடித்து வந்த கமல்ஹாசன், வாலிப வயதை அடைந்ததும், ‘‘அரங்கேற்றம்’’, ‘அவள் ஒரு தொடர்கதை’’ ஆகிய படங்களில் முக்கிய வேடங்கள் அளித்து அவரை கதாநாயகனாக உயர வழி வகுத்தார்.

தொலைக்காட்சி தொடர்களையும் தயாரித்தார். ரெயில் சினேகம், கையளவு மனசு போன்ற தொடர்கள் பெரும் வரவேற்பை பெற்றன.

டைரக்டர் சங்கர் தயாரிப்பில் வெளிவந்த ‘‘ரெட்டைசுழி’’ படத்தில் நடித்து இருக்கிறார்.

பாலசந்தரின் ‘‘இருகோடுகள்’’, ‘அபூர்வ ராகங்கள்’, ‘தண்ணீர் தண்ணீர்’, ‘அச்சமில்லை அச்சமில்லை’ ஆகிய படங்கள் மத்திய அரசின் விருதுகளைப் பெற்றன. ‘சிந்து பைரவி’, ‘வறுமையின் நிறம் சிவப்பு’ ‘அவள் ஒரு தொடர்கதை’, ‘எதிர்நீச்சல்’, ‘அக்னிசாட்சி’, ‘தாமரை நெஞ்சம்’, ‘மரோசரித்ரா’, முதலான படங்கள் மாநில அரசு விருது, பிலிம்பேர் பரிசு முதலிய விருதுகளை வென்றுள்ளன.

பால்கே விருது

1974-ல் தமிழக அரசின் ‘‘கலைமாமணி’’ விருதை பெற்ற இவருக்கு, 1987-ல் மத்திய அரசு ‘‘பத்மஸ்ரீ’’ விருதை வழங்கியது. 2011-ல் பாலசந்தருக்கு சினிமா உலகின் உயரிய விருதான ‘‘தாதா சாகேப் பால்கே’’ விருது வழங்கப்பட்டது.

பாலசந்தர், ஏ.ஜி.எஸ்.ஆபிஸ் குமாஸ்தாவாகப் பணியாற்றிய போதே 31-5-1956-ல் திருமணம் நடந்து விட்டது. மனைவி பெயர் ராஜம். இந்த தம்பதிகளுக்கு கைலாஷ், பிரசன்னா என்ற 2 மகன்களும், புஷ்பா என்ற மகளும் உள்ளனர். இவர்களில் கைலாஷ் சமீபத்தில் மரணம் அடைந்தார்.

மூச்சு அடக்கி முன்னேறு!

Return to frontpage

எங்கள் ஊரில் நண்பர்களுடன் குளத்தில் விளையாடுவேன். கரையில் ஒருவர் அமர்ந்துகொண்டு ஒன்று, இரண்டு என எண்ணுவார். மற்றவர்கள் தண்ணீருக்குள் மூழ்குவோம். அதிக நேரம் தம் கட்டி நீருக்குள்ளே இருப்பவர் யாரோ அவருக்கே மில்க் பிஸ்கெட் ஒரு பாக்கெட் பரிசு.

தண்ணீருக்குள் தம் கட்டி உள்ளே இருப்பது என்பது சாதாரணக் காரியமல்ல. தண்ணீருக்குள் ஒரு நிமிடம் இப்படி இருந்தாலே நாக்கு வெளியில் தள்ளுவதுபோல் ஆகிவிடும். வழியில்லை. எக்ஸ்ட்ரா தம் கட்டினால் மட்டும்தான் பரிசு கிடைக்கும். வாழ்க்கையும் இதே மாதிரிதான் இயங்குகிறது.

தம் கட்டும் வாழ்வு

எங்கள் கிராமத்தில் இருந்து ஐந்து நண்பர்கள் சென்னைக்கு வேலையைத் தேடிச் சென்றார்கள். ஏறக்குறைய ஐந்தாம் வகுப்புக்கும் கீழே தங்களது கல்வித் தகுதியை வைத்திருந்த அவர்களுக்கு வயிற்றுப் பிழைப்புக்கு ஒரு வேலையை வழங்கியது சென்னை.

உறைகிணறு எடுக்கும் இடத்தில் கயிறு இழுக்கும் வேலை அது. சக்திவேல்தான் ஒரு உறைகிணறு மேஸ்திரியிடம் தன்னுடன் வந்த மற்ற நான்கு நண்பர்களுக்கும் வேலை வாங்கிக் கொடுத்தான்.

சக்திவேலின் தலைமையில் சென்னை வந்த ஐந்து பேரும் ஒரு வாரம் வேலை செய்துவிட்டு வார இறுதியில் சம்பளம் வாங்கிக் கொண்டு கிராமத்துக்கு வந்தார்கள். இரண்டு நாள் விடுமுறைக்குப் பின் சக்திவேல் மட்டுமே மீண்டும் சென்னைக்குப் போனான். குமாருக்குக் கூலி போதவில்லையாம்.

பாலாஜிக்கு சென்னையின் கொசுக் கடியைத் தாங்க முடியவில்லையாம். சதீசுக்கு உடம்பு வலி. கடுப்பான வேலையாம் மாரிக்கு. இவர்கள் சொன்ன எல்லாப் பிரச்சினைகளோடும்தான் சக்திவேலும் மீண்டும் வேலைக்குச் சென்னை போயிருக்க வேண்டும்.

வியாபாரக் கடலில் மீனாக

பல வருடங்களாக எனக்குச் சக்திவேலோடு தொடர்பு இல்லை.இரண்டு மாதங்களுக்கு முன் ஒரு திருமண நிகழ்ச்சியில் அவனைச் சந்தித்தேன். சக்திவேலின் காரில்தான் அன்று ஊருக்குத் திரும்பி வந்தேன். உறைகிணறு எடுக்கும் வேலை பார்த்த சக்திவேல் இரவு உணவுக்குச் சாப்பிடச் செல்லும் இடத்திலேயே பகுதிநேர சர்வராக வேலைக்குச் சேர்ந்திருக்கிறார்.

அங்கே தினமும் மீன் சப்ளை செய்பவர் பரந்தாமன். சக்திவேல் கடின உழைப்பாளி என்பதைக் கண்டுபிடித்த பரந்தாமன் தன்னிடம் வந்து வேலைக்குச் சேர்ந்தால் உன் திறமைக்கு நிறைய சம்பாதிக்கலாம் என்று பேசியிருக்கிறார்.

சில வருடங்கள் கழித்து இதே தொழிலைச் சொந்தமாக ஆரம்பித்து இருக்கிறார் சக்திவேல். சென்னையின் பெரிய பெரிய ஹோட்டல்கள் எல்லாம் இன்று சக்திவேலின் வாடிக்கையாளர்கள். வெளி நாடுகளுக்கும் மீன், கருவாடு ஏற்றுமதி செய்தும் கமிஷனை அள்ளுகிறார் சக்திவேல். கடலில் தம் கட்டவும் கடல்நீரில் உள்ள காற்றையும் சுவாசித்து வாழும் திறமையும் படைத்த மீனாக வியாபாரக் கடலில் துள்ளித் திரியும் சக்தியை சக்திவேல் பெற்றுவிட்டார்.

எக்ஸ்ட்ரா தம் கட்டு

எல்லா வசதிகளும், சவுகரியங்களும் தம் கட்டினால்தான் பெறமுடியுமே தவிர... தம் கட்டுதல் என்பதே சவுகரியமாய் அமைய வாய்ப்பில்லை என்பதுதான் சக்திவேலின் வாழ்க்கை தரும் பாடம். சவுகரியமாக இருந்து கொண்டு ஜெயிக்கவும் முடியாது. ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு விலை இருக்கிறது. அது காலம், பொறுமை, விட்டுக் கொடுத்தல், சறுக்கல், வலி, பணம் அவமானம் என எதுவாகவும் இருக்கலாம்.

கடையைத் திறந்த முதல் நாளிலேயே கல்லா நிரம்பி வழிய வேண்டும். வாடிக்கையாளர்கள் கியூவில் நிற்க வேண்டும். சின்னச் சின்னச் சண்டை சச்சரவுகள் கூட இல்லாத குடும்பம் வேண்டும், பெரிய மனிதர்களைப் போல் சீரியஸாக நடந்து கொள்ளும் குழந்தைகள் வேண்டும். குற்றம் இல்லாத சுற்றம் வேண்டும் என்று விரும்புவது எதார்த்தத்தை மீறிய மன நிலை.

வேலையானாலும், வியாபாரம் ஆனாலும், குடும்பமானாலும், குழந்தை வளர்ப்பு என்றாலும், நட்பு என்றாலும், எடுத்த எடுப்பிலேயே சவுகரியமாய் அமைந்து விடாது. எக்ஸ்ட்ரா தம் கட்டுகிறவர்களுக்கு மட்டுமே இதெல்லாம் சவுகரியமாய் அமையச் சாத்தியம் உண்டு.

வாழ்வை ஆரம்பிக்கும் போது ஏற்பட்ட எந்தத் துன்பங்களுக்கும் மனம் தளராமல், இன்னும் கொஞ்சம்...இன்னும் கொஞ்சம் எனத் தன் நண்பர்களைக் காட்டிலும் எக்ஸ்ட்ரா தம் கட்டியிருக்கிறார் சக்திவேல். அதனால் அவரது வியர்வையின் வாடை, இன்று அவர் மேல் வெளி நாட்டு வாசனை திரவியமாய் மாறி இருக்கிறது.

ஒரு கட்டத்தில் தன் மீது பற்ற வைக்கும் தீயின் வலி தாங்காமல் பின்வாங்கி விடுபவர்கள் ஒரு ரகம். சக்திவேலைப் போல தன் மீது பற்ற வைக்கும் தீயையே பயன்படுத்திக்கொண்டு ராக்கெட்டாக அவதாரம் எடுத்துப் பல மைல்கள் சீறி முன்னேறுகிறவர்கள் ஒரு ரகம். நீங்கள் இதில் எந்த ரகம்?

- அ. ஜெயராஜ்
jayarajabo@gmail.com

Tuesday, December 23, 2014

கிரெடிட் கார்டு - கத்தி மேல் நடக்கும் வித்தை!



சர்க்கஸில் கயிறு மேல் நடப்பது, கண்ணைக் கட்டிக் கொண்டு கத்தி வீசுவது இவையெல்லாம் ஒரு காலத்தில் நம்மை வியப்பிலாழ்த்திய விஷயங்கள். ஆனால் இவையெல்லாம் இப்போது ஒன்றுமில்லை என்றாகிவிட்டது. ஏனென்றால் இதைவிட கடினமான விஷயமாக சிலருக்கு மாறிவிட்டது கிரெடிட் கார்டு எனும் கடனட்டை. ஆனால் சிலரோ இதை லாவகமாகக் கையாள்கின்றனர்.

முன்பெல்லாம் கிரெடிட் கார்டு வைத்திருப்பது அந்தஸ்தின் அடையாளம். இப்போது கிரெடிட் கார்டு வாங்க யாராவது அகப்பட மாட்டார்களா? என்கிற ரீதியில் வங்கிகளே கூவிக் கூவி கடன் அட்டையை வழங்கத் தயாராக இருக்கின்றன.

செல்போன் வைத்திருப்பவர்களுக்கு வாரத்துக்கு ஒரு நாளாவது ஒரு முறையாவது கிரெடிட் கார்டுக்கான வலை வீசப்படுவது நிச்சயம். கிரெடிட் கார்டு வாங்கலாமா வேண்டாமா என்பதில் பலருக்கும் குழப்பம் இருக்கிறது. இது அநாவசியம், தேவையை மீறியது, அது செலவுக்கே வழிவகுக்கும் என்போர் சிலர். கிரெடிட் கார்டை வாங்கிவிட்டு அதைக் கொண்டு கண்டதையும் வாங்கிக்குவித்து பின்னர் கடனைக் கட்ட முடியாமல் அவதிப்படும் கூட்டம் மறுபக்கம்.

எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு என்பது அத்துறை வல்லுநர்களின் அறிவுரையைக் கேட்ட பிறகு முடிவெடுப்பது சிறப்பாக இருக்கும் என்கிற ரீதியில் சில நிதி ஆலோசகர்களிடம் பேசியதிலிருந்து அவர்கள் தந்த ஆலோசனைகள்…

நவீன பொருளாதாரம் வழங்கும் எந்த வசதிகளையும் உடனடியாக புறக்கணிக்கவோ, அதைக் கொண்டாடவோ தேவையில்லை. கவனத்தோடு பயன்படுத்தலாம். தேவையில்லை என்றால் விட்டு விடலாம். அப்படித்தான் கிரெடிட் கார்டு பயன்படுத்துவதைப் பார்க்க வேண்டும்.

ஆனால் நமது வருமானத்தை முன்கூட்டியே செலவு செய்கிறோம் என்கிற எண்ணம் இருக்க வேண்டும். கிரெடிட் கார்டு மூலம் அதிக கடன் வாங்கிவிட்டு கட்ட முடியவில்லை என்றால் அதற்கு வட்டி, அபராதம், தாமதக் கட்டணம் என இன்னபிற வகைகளில் கூடுதல் பணத்தையும் இழக்க வேண்டும்.

எனவே நமது வருமானத்தை வழக்கம்போல திட்டமிட்டுகொண்டு, அதற்குள் கிரெடிட் கார்டு பயன்பாட்டையும் வைத்துக் கொண்டால் சிக்கல்கள் இல்லாமல் இருக்கலாம்.
கிரெடிட் கார்டை பயன்படுத்துவது எப்படி?

வட்டியில்லா கடன் காலம்

கிரெடிட் கார்டு கடனை திருப்பி செலுத்த ஒவ்வொரு நிறுவனமும் குறிப்பிட்ட கால அவகாசம் தருகிறது. இந்த காலத்துக்குள் வாங்கிய கடனை முழுமையாகச் செலுத்திவிட வேண்டும்.

மினிமம் தொகை

மொத்த நிலுவைத் தொகையில் குறைந்தபட்சத் தொகையைச் செலுத்தவும் வாய்ப்பு உண்டு. மீதமுள்ள தொகையைக் கடனாகக் கருதி அதற்கு வட்டி விதிக்கப்படும். ஆனால் கிரெடிட் கார்டு கடனுக்கு வட்டி வீதம் அதிகம் கணக்கிடப்படும்.

பணமாக எடுத்தல்

கிரெடிட் கார்டு மூலம் பணம் எடுத்துக் கொள்ளவும் முடியும். இதற்கு பரிமாற்றக் கட்டணம் மற்றும் வட்டியும் அதிகம். ரூ.1,000 பணம் எடுத்தால் அதற்கு ரூ. 250 ரூபாய் வரை பரிமாற்றக் கட்ட ணமாக இருக்கும். மேலும் பணம் எடுத்த நாளிலிருந்து திரும்ப கட்டும் தேதிவரை வட்டி கணக்கிடப்படும். வட்டி விகிதம் 35 % முதல் 40% என்கிற அளவில் இருக்கும்.

இஎம்ஐ வசதி

கிரெடிட் கார்டு மூலம் வாங்கிய கடனை மாத தவணையாக திருப்பி செலுத்தும் வசதியும் உள்ளது. ஆனால் இதற்கான வட்டியும் அதிகம். உங்கள் மாத வருமானத்திலிருந்து தனிநபர் கடன் செலுத்துவதுபோல செலுத்த வேண்டும்.

கடன் அளவு

நமது மாத வருமானத்தைப் போல குறைந்த பட்சம் மூன்று மடங்கிலிருந்து கடன் கிடைக்கலாம். நபர்களின் மதிப்பிற்கு ஏற்ப நிறுவனங்கள் இதை முடிவு செய்யும். ஆனால் கார்டை அதிகமாக பயன்படுத்துகிறோம், வருமானத்தின் எல்லை தாண்டி செலவு செய்கிறோம் என்று யோசித்தால் கிரெடிட் அளவைக் குறைக்கும்படி செய்து கொள்ளலாம். அல்லது திரும்ப அளித்து விடலாம்.

ஆஃபர்கள்

பண்டிகை காலங்களில் கிரெடிட் கார்டு மூலம் பொருட்கள் வாங்கினால் 5 % முதல் 10% வரை கேஷ் பேக் ஆஃபர் கொடுக்கப்படுகிறது. இந்த வாய்ப்புகளை பயன்படுத்துவதில் தெளிவு வேண்டும். பண்டிகை கால போனஸ் கிடைத்து அதை பில்லிங் தேதியில் கட்டிவிட முடியும் என்றால் துணிந்து வாங்கலாம். ஆனால் போனசை செலவு செய்துவிட்டு பண்டிகை ஆஃபர்களில் அள்ளினால் சிக்கல்தான்

கேஷ் பாயிண்ட்ஸ்

கிரெடிட் கார்டை பயன்படுத்தும் போது விருது புள்ளிகள் கிடைக்கும். இதற்கு சில சலுகைகள் உண்டு. ரூ. 100 ரூபாய்க்கு பயன்படுத்தினால் ஒரு புள்ளி என்கிற வீதத்தில் இது இருக்கலாம். அதிகப் புள்ளிகள் சேர்ந்தால், திரும்ப பொருள் வாங்கும் போது விலை குறைப்பு அல்லது சலுகை கிடைக்கும்.

சரியாகக் கையாண்டால் இந்த புள்ளிகள் மூலமும் பலன் பெறலாம். முந்தைய கடன் தொகையில் நிலுவை இருந்தால் மீண்டும் பொருள் வாங்கும் போது சலுகை கிடைக்காது. எனவே ஒரு கடனை முழுமையாக அடைத்துவிட்டு சலுகை பெறவும்.

அனுமதிகளில் கவனம்

தேவை என்ன என்பதைப் பொறுத்து கிரெடிட் கார்டு நிறுவனங்கள் வழங்கும் சலுகைகளுக்கு ஓகே சொல்லவும். கிரெடிட் கார்டு வாங்கும்போது கூடவே சில சலுகை கொடுக்கிறோம் என்று நிறுவனங்கள் சொல்லலாம்.

ஆனால் அவசியமிருந்தால் மட்டுமே உடன்படவும். ஒரு வருட மருத்துவக் காப்பீடுக்கு அனுமதி கொடுத்திருப்போம். ஆனால் அடுத்த ஆண்டும் உங்களுக்கு அறிவிக்காமலேயே பணத்தை பிடித்திருப்பார்கள். இந்த இடைப்பட்ட காலத்தில் உங்கள் பொருளாதார நிலைமை குறித்து கணக்கில் எடுத்து கொள்ள மாட்டார்கள். எனவே ஆஃப்ஷன்களில் தெளிவு வேண்டும்.

திரும்ப ஒப்படைப்பது

கிரெடிட் கார்டை இனி பயன்படுத்த வேண்டாம் என முடிவு செய்து விட்டால் முறையாக ஒப்படைத்து நோ டியூ சான்றிதழ் வாங்க வேண்டும். கார்டை ஒப்படைக்காமல், நான் பயன்படுத்தவே இல்லையே என்று சொல்ல முடியாது. பராமரிப்பு கட்டணம், ஆண்டுக்கட்டணம் கணக்கிடுவார்கள். அதைக் கட்டவில்லை என்றால் அதற்கும் வட்டி கணக்கிடப்படும்.

சிபில் எச்சரிக்கை

நவீன வசதிகள் நமது வாழ்க்கைத் தரத்தை மாற்றலாம், ஆனால் அதை கையாளுவதில் சாமர்த்தியமும் புத்திசாலித்தனமும் வேண்டும். கடனைக் கட்டாமல் சிக்கல் ஏற்படுத்தினால் நமது பெயரை சிபிலில் சேர்த்து விடுவார்கள். அது பிற வகையில் நமது கடன் வாங்கும் மதிப்பைக் குறைத்து விடும். தனிநபர் கடன், வீட்டுக்கடன் வாங்கத் திட்டமிடும்போது சிக்கலாகிவிடும்.

வருமானத்தையே செலவு செய்கிறோம்

கிரெடிட் கார்டு பயன்படுத்து பவர்கள் நமது வருமானத்தை முன்கூட்டியே செலவு செய்து கொண்டிருக்கிறோம் என்பதை உணர வேண்டும் வருமானத்தை முன்கூட்டியே செலவு செய்வதா அல்லது கையில் வைத்துக் கொண்டு செலவு செய்வதா என்பதை முடிவு செய்து கொண்டால் கிரெடிட் கார்டு நல்லதா கெட்டதா என்பது விளங்கிவிடும்.
கிரெடிட் கார்டு - 10 டிப்ஸ்கள்

1.பில்லிங் காலத்துக்குள் வாங்கிய கடனை முழுமையாகச் செலுத்திவிட வேண்டும்.

2.ஆன்லைனில் பொருள்கள் வாங்கினால் விர்ச்சுவல் கீபோர்டு மூலம் பாஸ்வேர்டு கொடுப்பது பாதுகாப்பு.

3.கிரெடிட் கார்டிலிருந்து பணம் எடுப்பதை தவிர்க்கவும்.

4.கேஷ் ஆஃபர்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

5.ஒன்றுக்கும் மேற்பட்ட கார்டு இருந்தால், ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு என பரிமாற்றத்தை தவிர்க்கவும்.

6.கிரெடிட் கார்டு கடனை அடைக்க வெளியில் கடன் வாங்க வேண்டும் என்றால் நிதி நிர்வாகத்தில் நீங்கள் வீக்.

7.பில்லிங் தேதியை தவற விட்டால் கிரெடிட் கார்டு பயன்படுத்துவது சறுக்கலில் முடியலாம்.

8.குறிப்பிட்ட தேதிக்கு அடுத்த நாள் பணத்தைக் கட்டினாலும் அபராதக் கட்டணம், தாமதக் கட்டணம், அதற்கு வட்டி என கூடுதலாக கட்ட வேண்டும்.

9.கிரெடிட் கார்டு கடனை கட்டவில்லை எனில் தனிநபர் கடன், வீட்டுக்கடன், தொழில்கடன் வாங்குவது சிக்கலாகும்.

10.கிரெடிட் கார்டு தொலைந்துவிட்டால் கிரெடிட்கார்டு வழங்கிய நிறுவனத்துக்கு போன் செய்து அதன் செயல்பாடுகளை முடக்கிவிடவும்.

courtesy: The Hindu..Tamil  நீரை. மகேந்திரன்

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை?....தினமலர்

புதுடில்லி: அடுத்த மாதம், வெளிநாடு வாழ் இந்தியர்கள் தினம் (பிரவசி பாரதிய திவாஸ்) கொண்டாடப்படுவதை ஒட்டி, அவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான, இந்தியா வராமல் ஓட்டளிக்கும் திட்டத்திற்கு விரைவில் தீர்வு காணப்படும் என, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நம்பிக்கை தெரிவித்தார்.

இதுகுறித்து, அவர் மேலும் கூறியதாவது: வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்.ஆர்.ஐ.,), இந்தியா வராமல், தாங்கள் வசிக்கும் நாடுகளிலிருந்தே ஓட்டளிக்கும் வசதியை ஏற்படுத்தி தர மத்திய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது. இதுகுறித்து, தேர்தல் ஆணையம் தீவிரமாக பரிசீலித்து வருகிறது. தூதரகங்களில், ஓட்டு இயந்திரங்களை வைப்பது மற்றும் என்.ஆர்.ஐ.,க்களால் அங்கீகரிக்கப்பட்ட நபர், அவர்களுக்கு பதிலாக ஓட்டளிப்பது போன்ற ஆலோசனைகள் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளன. என்.ஆர்.ஐ.,க்கள் இந்தியா வந்து ஓட்டளிப்பதில் உள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு, விரைவில் இதற்கான தீர்வு காணப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

NEWS TODAY 25.05.2026