Tuesday, January 6, 2015

எம்பிபிஎஸ் வினாத்தாள் முறையில் அதிரடி மாற்றம் : தரமான மருத்துவர்களை உருவாக்க மருத்துவ பல்கலை. நடவடிக்கை



தரமான மருத்துவர்களை உருவாக்கும் வகையில் எம்பிபிஎஸ் வினாத்தாள் முறையில் மருத்துவ பல்கலைக்கழகம் அதிரடி மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. அதன்படி மருத்துவ மாணவர்கள் அனைத்து பாடங்களையும் ஆழமாக படிக்கும் வகையில் புதிய கேள்வித்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிக்கும் மாணவர்கள் குறிப்பிட்ட மதிப்பெண்ணுக்கு "தியரி" தேர்வையும் குறிப்பிட்ட மதிப்பெண்ணுக்கு செய்முறைத்தேர்வு மற்றும் வாய்மொழித்தேர்வை எதிர் கொள்ள வேண்டும். தேர்ச்சி பெற வேண்டுமானால் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் எடுக்க வேண்டும்.

இதுவரை பின்பற்றப்பட்டு வந்த கேள்வித்தாள்முறை, மாணவர்கள் மேலோட்டமாக படித்தாலே தேர்ச்சி பெறும் வகையிலும், குறிப்பிட்ட பகுதிகளை படிக்காமல் விட்டுவிடுவதற்கு வாய்ப்பு ஏற்படுத்தி தருவதாக அமைந்திருந்தது.

மருத்துவப் படிப்பு என்பது மற்ற படிப்புகளைப் போலன்றி மனிதர்களின் உயிரோடு சம்பந்தப்பட்டது என்பதாலும், விடைத்தாள்களை திருத்தும்போது மதிப்பெண் வழங்குவதில் ஏற்பட்ட நடைமுறைச் சிக்கல்களை தீர்க்கும் வகையிலும் கேள்வித்தாள் முறையை மாற்றியமைக்க தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் முடிவு செய்தது. இதைத்தொடர்ந்து மூத்த பேராசிரியர்கள் 15 பேர் தலைமையில் பாடவாரியாக நிபுணர் குழுக்கள் அமைக்கப்பட்டு புதிய கேள்வித்தாள் முறை உருவாக்கப்பட்டது.

அதன்படி, முதல் ஆண்டு எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு கேள்வித்தாள்களில் கேள்விகளின் எண்ணிக்கை 22-லிருந்து 13 ஆக குறைக்கப்பட்டது. அத்துடன் முன்பிருந்த அரை மதிப்பெண் முறையும் நீக்கப்பட்டது. மேலோட்டமாக படித்தாலே விடையளிக்க வகைசெய்யும் ஒரு மார்க் கேள்விகள் நீக்கப்பட்டு அதற்குப் பதிலாக சிறு விளக்கம் அளிக்கும் 3 மார்க் கேள்விகள் சேர்க்கப்பட்டன.

இந்த புதிய கேள்விமுறை முதல்கட்டமாக முதல் ஆண்டு எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு கடந்த ஆகஸ்ட் தேர்வில் அறிமுகப்படுத்தப்பட்டது. அடுத்த கட்டமாக 2-ம் ஆண்டு எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு வரும் பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள தேர்வில் அறிமுகப்படுத்தப்படுகிறது. அதிலும் முதல் ஆண்டு கேள்வித்தாள் முறை போன்றே மாற்றம் செய்துள்ளனர். கேள்விகளின் எண்ணிக்கை 22-லிருந்து 10 ஆக குறைக்கப்பட்டு இருக்கிறது.

இதற்கிடையே, மாணவர்களில் ஒருசாரார் புதிய வினாத்தாள் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வினாத்தாள் முறை மாற்றம் தொடர்பாக தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக பதிவாளர் டாக்டர் ஜான்சி சார்லஸ், தேர்வு காட்டுப்பாட்டு அதிகாரி டாக்டர் சி.தர் ஆகியோர் கூறியதாவது:

எதிர்காலத்தில் நோயாளிகளை கவனிக்கக் கூடிய நாளைய மருத்துவர்களாகிய எம்பிபிஎஸ் மாணவர்கள் அனைத்து மருத்துவ பாடங்களிலும் ஆழமாக அறிவை பெற்றிருக்கிறார்களா? என்பதை சோதிக்கும் வகையில் புதிய வினாத்தாள் முறை வடிவமைக்கப்பட்டுள்ளது.

முந்தைய கேள்வித்தாளில் வினாக்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் அவர்களால் குறிப்பிட்ட நேரத்தில் விளக்கமாக பதில் அளிக்க முடியாமல் இருந்தது. அதை கருத்தில்கொண்டே கேள்விகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. மருத்துவம் படிக்கும் மாணவர்கள் மற்ற துறையினருடன் தங்களை ஒப்பிடக்கூடாது. அனைத்து பாடங்களிலும் ஆழமான அறிவு பெற்றால்தான் நாளை சிறந்த மருத்துவர்கள் ஆகி, நோயாளிகளுக்கு சிறப்பாக சிகிச்சை அளிக்க முடியும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

நல்ல பேச்சே நமது மூச்சு.......டாக்டர் வி.விஜய் ஆனந்த் ஸ்ரீராம்



அலுவலகம் என்பது தொழிற்சாலையோ பொது நிறுவனமோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அதில், நிதித் துறை, மனிதவளத் துறை, தொழில் துறை, எனப் பல துறைகள் இருக்கும். அவர்களுடன் நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் நம்மை மட்டும் பாதிக்கப்போவதில்லை. பலருடைய எதிர்காலமும் அதைச் சார்ந்திருக்கும்.

நம்முடன் பணிபுரியும் சகநண்பர்களுடனும் மேலதிகாரிகளுடனும், நமக்குக் கீழ் பணிபுரிபவர்களுடனும் நல்ல பெயர் எடுக்கவும், நல்ல உறவுகளை வைத்துக்கொள்ளவும் தொடர்புடைய பேச்சுத் திறன் மிகவும் முக்கியம்.

இதற்கு முக்கிய அடிப்படை நீங்கள் என்ன சொல்ல வேண்டும் என்பதைத் தெளிவாக நீங்களே புரிந்து கொள்ளுவதும், மற்றவர்களுக்கு அதைப் புரிய வைப்பதும்தான்.

மொழியின் முக்கியத்துவம்

பொதுவாகத் தொடர்புடைய பேச்சுக்கு மொழி ஒரு சாதனமாகிறது.

சிலர் வெவ்வேறு மாநிலங்களில் பணியில் அமர்த்தப்படலாம். வெளிநாட்டு அதிகாரிகளோடு தொடர்புகொள்ள நேரிடலாம். நாம் பேசுகிற மொழி அவர்களுக்கோ, இல்லை அவர்கள் பேசுகிற மொழி நமக்கோ தெரிந்திருக்க நியாயமில்லை. அதற்கு ஒரே தீர்வு ஆங்கிலம்தான்.

பெரும்பாலான இளைஞர்கள் ஆங்கிலத்தில் பேசுவதில்லை. தெரிந்தாலும் மற்றவர்கள் முன்னால் பேசப் பயப்படுகிறார்கள். ஆங்கிலத்தில் பேசுவது என்றாலே நல்ல இலக்கணம் தேவை என்று நினைக்கிறார்கள்.

ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள். தாய் மொழியைத் தவறாகப் பேசுவதுதான் தவறு. ஆங்கிலத்தில், தொடக்கத்தில் தவறாகப் பேசித் தவறுகளைத் திருத்திக்கொண்டு பயிற்சி செய்து பின் ஆங்கிலத்தில் ஆளுமை வளர்த்துக் கொள்ளலாம். மொழி என்பது ஒரு சாதனமே. அதைப் பேச்சாக மாற்றி, தொடர்பு கொள்ளும்போது நல்ல உறவு உண்டாகும்.

நம் தாய்மொழி நமக்கு உயர்வானதுதான். ஆனாலும் பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்களைத் தெரிந்து கொள்வதில் தவறில்லை. நீங்கள் மொழிப்பற்று உடையவராக இருந்தால் உங்களுக்கு நான் யதார்த்தமாகச் சொல்வது “ஆங்கிலத்தைப் பேச்சில் வையுங்கள். தமிழை மூச்சில் வையுங்கள்.”

இப்போதிலிருந்தே சிறிது சிறிதாக ஆங்கிலத்தில் எழுதவும், பேசவும் தொடங்குங்கள். மற்றவர்களுடைய மொழியையும் கற்றுக்கொள்ளுங்கள். உடன் பணிபுரிபவரின் மொழியில் பேசினால் நெருங்கிய தொடர்பு ஏற்பட வாய்ப்புண்டு.

கூர்ந்து கவனித்தல்

அடுத்தவர்கள் பேசுவதைக் கூர்ந்து கவனித்தல் அவசியம். அந்தக் கவனம் நம் வேலையைத் திறம்படச் செய்ய உதவும். செய்யப்போகிற வேலையில் நல்ல தெளிவு கிடைக்கும். சந்தேகத்தில் செய்கிற வேலை பல பிரச்சினைகளை உண்டு பண்ணிவிடும். நமக்குப் புரிந்துவிட்டதுபோலத் தீர்மானம் செய்துகொண்டு செய்யும் வேலையில் தவறு ஏற்பட்டால், உறவுகள் முறிந்து நம் எதிர்காலம் பாதிக்கும்.

அலுவலகத்தில், கம்யூனிகேஷன் என்பது மேலதிகாரிகளிடமிருந்து கீழ் மட்டத்துக்கும், கீழ் மட்டத்திலிருந்து மேல் மட்டத்துக்கும் நடக்கும். நீங்கள் ஒருவேளை மேலதிகாரிகளிடமிருந்து உத்தரவுகளைப் பெறலாம். சில சமயத்தில் உங்களுக்குக் கீழுள்ளவர்களுக்கு உத்தரவுகளையோ அறிவுரைகளையோ சொல்லலாம். பொதுவாக, நீங்கள் எந்த நிலையிலிருந்தாலும் மனதில் கொள்ள வேண்டியவை:

உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துங்கள்

#அடுத்தவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்களோ என்ற நினைப்பில் பாதிப்பு ஏற்படுத்தாமல் பேச நினைப்பது.

#அடுத்தவர்களைக் கடிந்துவிடுவோமோ என்று நினைப்பது.

#அலுவலக நிர்ப்பந்தங்களோ , நம்முடைய கலாச்சாரப் பாதிப்போ நம்மைத் தாக்கி, அதனால் நினைத்ததைப் பேச முடியாமல் இருப்பது.

#எதைப் பேச நினைத்தாலும் நான் இதைச் சொல்லட்டுமா என்று பயத்துடன் பேசுவது.

இந்த உணர்ச்சிகளை எப்படிக் கட்டுக்குள் கொண்டுவருவது?

அலுவலகத்தில் உங்கள் உணர்வுகள் என்ன என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அலுவலகத்தில் உங்களை யாராவது புண்படுத்திவிட்டார்களா அல்லது ஏதாவது தர்மசங்கடமா அல்லது கோபமா?

#எதுவாக இருந்தாலும் இரண்டொரு வார்த்தைகளில் முடித்து விடுங்கள். குறிப்பிட்ட எண்ணத்தை மட்டும் வெளிப்படுத்துங்கள்.

#உணர்ச்சிகளின் அடிப்படையில் முடிவுகளை எடுக்காதீர்கள்.

#பேசுவதற்கான நல்ல இடத்தையும் நேரத்தையும் தேர்ந்தெடுங்கள்.

#நான்தான் தவறு செய்து விட்டேன், நான்தான் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்ற தொனியில் பேசுங்கள்.

பொதுவாகக் கவனத்தில் கொள்ள வேண்டியவை,

#ஒருவரிடம் பேசத் தொடங்கும் முன் நம்முடைய எண்ணம் என்ன என்பதைத் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும்.

#எதைப் பற்றிப் பேசப் போகிறோம். ஒரு திட்டத்தைப் பற்றியா அல்லது வெறும் சந்திப்பா அல்லது யாரிடமாவது தனியாகப் பேசப் போகிறோமா என்பது மனதில் தெளிவாக இருக்கட்டும்.

#நம்பிக்கையுடன் பேசுங்கள்.

#உங்களுடைய குரலும் தொனியும் ஏற்ற இறக்கங்களோடு, பேசுகின்ற பொருளுக்கு ஏற்றாற்போல இருக்கட்டும்.

#உண்மையைப் பேசுங்கள். உங்களுடைய பேச்சு நேர்மையானதாக இருக்கட்டும். எந்த உணர்ச்சியை வெளிப்படுத்த வேண்டுமோ அதை நேர்மையாக வெளிப்படுத்துங்கள்.

#ஒரு விஷயத்தைப் பிடிக்காமல் செய்வது, வேண்டாம் என்று சொல்வது எனக்கு உடன்பாடு இல்லை, என்று சொல்வதில் தவறில்லை. “நாம் கேட்டால், நமக்குத் தெரியவில்லை என்று நினைத்துவிடுவார்களோ அல்லது பிறர் கோபப்படுவார்களோ” என்று நினைத்து விடாதீர்கள்.

#மற்றவர்களின் கருத்துக்கும் மதிப்பளியுங்கள்.

#நான் என்ற ஈகோவை விட்டுத் தள்ளுங்கள்.

இதைக் கவனத்தில் கொண்டால் உங்களின் பணியிடத்தில் உங்களின் பேச்சு சிறப்பானதாக மதிக்கப்படும்.

டாக்டர் வி.விஜய் ஆனந்த் ஸ்ரீராம்

பிரிவோம், சந்திப்போம்!.....டாக்டர்.ஆர்.கார்த்திகேயன்



“என் மகள் பள்ளிக்குக் கிளம்புகையில் நான் தூங்கிக்கொண்டிருப்பேன். நான் வேலையை விட்டுத் திரும்புகையில் அவள் தூங்கிக்கொண்டிருப்பாள். வாரக் கடைசியில்தான் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்!” என்று கனமான வார்த்தைகள் சொல்லி விட்டு என்னை ஆழமாகப் பார்த்தார் அவர்.

“இந்த வேலையை விட முடியாது டாக்டர். அவ்வளவு கமிட்மெண்ட்ஸ் இருக்கு. எல்லாக் கடன்களையும் அடைத்து விட்டு இந்த வேலையை விடணும்னா குறைந்த பட்சம் இன்னும் 10 வருடங்கள் ஆகும். அப்போ என் மகள் படிக்கவோ வேலைக்கோ வெளியே போயிருக்கலாம். என்ன வாழ்க்கைன்னு தெரியலை சார் இது?” என்றார்.

பிரிவுகள்

இவர் பரவாயில்லை. குடும்பத்தைப் பிரிந்து வெளிநாடுகளில் பணி புரியும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை எண்ணிப் பாருங்கள். போனில் முத்தம் கொடுத்துக் கொண்டு மெயிலிலும் வாட்ஸ் அப் வீடியோவிலும் பிள்ளைகள் வளர்வதைக் கண்டு, “வரும் போது வாங்கிட்டு வர்றேன் இல்லன்னா யார் கிட்டயாவது கொடுத்து அனுப்பறேன்” என்று பொருட்களில் அன்பையும் பகிரத் துடிக்கும் துடிப்புகளை என்னவென்று சொல்ல?

வெளி நாட்டில் மட்டுமா? நம் நாட்டிலேயே பிழைக்க மாநிலம் விட்டு மாநிலம் வருபவர் கண்களில் உள்ள ஏக்கத்தைப் பார்த்திருக்கிறீர்களா? அடுத்த முறை பாருங்கள்.

கட்டிட வேலை செய்யும் பெண்கள், மேஜை துடைக்கும் பையன்கள், காவல் காக்கும் வயதான ஆட்கள் என எல்லாரும் தங்கள் சம்பளத்தில் கணிசமான தொகையைக் குடும்பத்துடன் பேசவே செலவழிக்கிறார்கள்.

வேலை நிர்ப்பந்தங்கள்

மாதத்திற்கு 20 நாட்கள் குடும்பத்தைப் பிரியும் மனிதர்களுக்கும் குடும்பத்துக்கும் உள்ள இடைவெளி எப்படி இருக்கும் தெரியுமா? பிள்ளை அடிபட்டதைக் கூடத் தாமதித்துத்தான் தெரிந்து கொள்ள முடியும். பள்ளியின் கூட்டங்களுக்கு போக முடியாது. என்றாவது வரும் பள்ளி விழாக்களில் பிள்ளை கலந்து கொள்வதைக் கூடப் பார்க்க முடியாது. முன்பு தந்தைகள் பட்ட அவஸ்தைகளை இப்பொழுது தாய்களும் படுகிறார்கள். அலுவலக வேலையில் இருந்துகொண்டு மகன் டியூஷனுக்குப் போனானா என்று விசாரிக்கும் அம்மாக்கள் எத்தனை பேர்?

“என் அப்பாவை எல்லாம் அவர் ரிடையர்ட் ஆனதுக்கு அப்புறம் தான் நிறைய தெரிஞ்சுக்கவே ஆரம்பிச்சேன்” என்று சொல்லும் பிள்ளைகள் நிறைய உண்டு.

முதலில் பிள்ளைகள் பெற்றோர்களைப் பிரிந்த வேதனையில் வாடுகின்றனர். பிறகு பெற்றோர்கள் பிள்ளைகளைப் பிரிந்து வாடுகின்றனர்.

வேலை நிர்ப்பந்தங்கள் பிரிவுகளை நிகழ்த்துகின்றன. இவை தவிர்க்க இயலாத நிதர்சனங்கள்.

தீபாவளிக்கும் கிறிஸ்மஸுக்கும் பொங்கலுக்கும் கூட வேலைக்குப் போகும் மக்கள் நிறைய இருக்கிறார்கள். பெற்றோர்களும் குழந்தைகளும் இல்லாத பண்டிகைகளில் என்ன விசேஷம்?

உறவின் அருமை

உள்ளூரில் தொழில் செய்து பதினெட்டு பட்டிக்குள் பெண்ணெடுத்து வாழ்ந்த கூட்டுக் குடும்பத்தில் பிரிவுகள் இந்த அளவுக்குப் பாதித்ததில்லை. படிப்புக்காகவும் வேலைக்காகவும் பயணம் செய்வது இன்றைய காலக் கட்டத்தின் இயல்பு. அதனால் இந்தப் பிரிவுகளை ஏற்றுக் கொள்ளுதல்தான் பக்குவம்.

“ஒ.கே. என்ன கருத்து சொல்றீங்க பாஸ்?” என்றால் என் விண்ணப்பம் ஒரு வரிதான். சேர்ந்து இருக்கும் அருமையை உணருங்கள்.

ஆரோக்கியத்தின் மதிப்பு நோயில் தெரியும். உறவின் அருமை பிரிவில் தான் தெரியும்.

மலிவாகக் கிடைக்கும் எதன் மதிப்பும் நமக்கு விளங்காது. நுரையீரல் செயல்படாமல் செயற்கை உறுப்பிற்கு அலையும்போதுதான் வாழ் நாள் முழுதும் சரியாய் பணி செய்த நுரையீரலின் அருமையை உணர்கிறோம்.

வந்து போகும் நண்பர்களின் அருமை யாருமில்லாமல் தனிமையில் இருப்போருக்குத் தான் தெரியும். வீட்டில் இருக்கும் போது தெரியாத மதிப்பு அதை விற்ற பிறகுதான் உணர்கிறோம்.

அது போலத்தான் சேர்ந்து வாழும் குடும்பங்களின் நிலையும். பெற்றோர்களும் குழந்தைகளும் சேர்ந்து வாழும்போது ஒருவர் மதிப்பு மற்றொருவருக்குப் புரிவதில்லை.

சதா அலுவல் எரிச்சலில் உள்ள அம்மாவாலோ அப்பாவாலோ தங்கள் குழந்தைகள் மேல் நியாயமான அன்பை வெளிக்காட்ட முடிவதில்லை. அதே போலப் பெற்றோர்களின் மதிப்பையும் பிள்ளைகள் அவர்கள் மறைந்த பிறகுதான் உணர்கிறார்கள்.

ரசனையே ஆரோக்கியம்

அதனால் கிடைத்த பொழுதைக் குடும்பத்துடன் குதூகலமாகக் கொண்டாடக் கற்றுக்கொள்ளுங்கள். அலுவல் வேலை, வீட்டுப் பிரச்சினைகள், இயந்திர வாழ்வின் அவசரங்கள் என்றும் இருக்கும். ஒரு பரிபூரண நாள் வந்த பின்தான் வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்று காத்திருக்காதீர்கள். நீங்கள் வாழ்க்கையை அனுபவிக்கும் நாள் தான் பரிபூரணமான நாள்.

வாழ்க்கைத் துணை உயிருடன் இருப்பது, உடன் இருப்பது எல்லாம் கடவுள் கொடுப்பினை. இல்லாதவரைக் கேளுங்கள். புரியும்.

நீங்கள் விரும்பும் துணை உங்களுக்குக் கிடைக்காமல் இருந்திருக்கலாம். நீங்கள் நினைத்ததை உங்கள் பிள்ளைகள் செய்யாமல் இருக்கலாம். நீங்கள் விரும்பிய வேலையை நீங்கள் செய்யாமல் போகலாம். ஆனால் கிடைத்ததை ஏற்று ரசிக்கத் தெரிந்தவர்தான் ஆரோக்கியமாக வாழ்கிறார்.

வாழ்க்கையின் சின்னச் சின்னத் தருணங்கள்தான் பெரிய சந்தோஷங்களைக் கொடுக்கின்றன. அதைச் சேர்ந்து கொண்டாடுங்கள்.

பிரிவுகள் உறவுகளின் உறுதியைச் சோதித்துப் பார்க்க வைப்பவை. மனிதர்களின் மதிப்பைப் புரிய வைப்பவை.

சேர்ந்து வாழும் காலத்தில் சேமித்த அன்புதான் பிரிவு காலத்தில் நிலை குலையாமல் இருக்கச் செய்யும்.

வேலை மனிதர்களைப் பயணிக்க வைக்கிறது. வாழ்க்கையைப் படிக்க வைக்கிறது. நம் வாழ்வுக்குப் பொருள் உணர்த்தும் வேலையைக் காதலிப்போம். அதன் மூலம் வாழ்வையே காதலிப்போம்.

பிரிவோம்

வேலையையும் வாழ்க்கையும் ஆற அமர விவாதித்த நாம் பிரியும் காலம் வந்துவிட்டது. நேரிலும், தொலைபேசியிலும் தொடர்புகொண்டு கருத்து சொல்லி, கேள்வி கேட்டு, அன்பு காட்டி, ஆதரவு சொன்ன அத்தனை உள்ளங்களுக்கும் நன்றி.

பிரிவோம். சந்திப்போம்!

gemba.karthikeyan@gmail.com

என் பாதையில்: ரயில் மீதேறி வந்த தேவதை

Return to frontpage




சென்னை புறநகர் ரயிலில் பயணம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. உச்சி வெயிலில் ஒரு பெண் கூடை நிறைய பூக்களும் கை நிறைய பைகளுமாக ரயிலில் ஏறினாள். மேடிட்ட வயிறு அவள் சூலுற்றிருந்ததைச் சொன்னது. அந்தப் பெண்ணிடம் பேச்சுக் கொடுத்தேன். ரயிலில் 15 வருடங்களாக வியாபாரம் செய்துவருவதாகச் சொன்னாள். திருமணமாகி எட்டு மாதங்கள்தான் ஆகிறது என்று அவள் வெட்கத்துடன் சொன்ன பாங்கிலேயே அது காதல் மணம் என்று புரிந்தது. தன் சிறு வயதிலிருந்தே ரயிலில் பூ, பழங்கள், காய்கறிகள் விற்றுவரும் அந்தப் பெண், ஒவ்வொரு சீசனுக்கும் ஒவ்வொரு பொருளை விற்பதாகவும் சொன்னாள். விலை குறைவான பொருட்களை வாங்கி, குறைவான விலையில் விற்றால்தான் லாபம் கிடைக்கும் என்று சொன்ன அவளின் பேச்சில் தேர்ந்த பொருளாதார நிபுணத்துவம் வெளிப்பட்டது.

“மாதக் கடைசியில் லாபத்தை எதிர்பார்க்க முடியாது, மக்களுக்கு சம்பளம் இல்லாததால் மிச்சம் பிடிக்கத்தான் பார்ப்பார்கள். அந்த சமயத்தில் குறைவான பொருட்களையே வாங்கி விற்பேன்” என்று சொல்லி என் ஆச்சரியத்தை அதிகப்படுத்தினாள். இப்படி ரயில், ரயிலாக ஓடி ஏறி, போலீஸ்காரர்களுக்குப் பயந்து விற்பனை செய்வது கஷ்டமாக இல்லையா என்ற என் கேள்வியை அவள் புன்னகையுடன் எதிர்கொண்டாள்.

“எல்லாமே கஷ்டம்தான். என்ன செய்யறது, குடும்ப நிலமை அப்படி. என் வீட்டுக்காரரும் வேலைக்குப் போறார். ஆனா விக்கற விலைவாசிக்கு ஒருத்தர் சம்பளம் எம்மாத்திரம்? இன்னும் கொஞ்ச நாள்ல குழந்தை பிறக்கப்போவுது. அதுக்கும் சேர்த்து வைக்கணுமே. அப்போதானே எங்க குழந்தையும் உங்களை மாதிரி பெரிய ஆளா வரமுடியும்?” என்று தன் வயிற்றின் மீது விரலால் வருடியபடியே சொன்னாள். அந்த வார்த்தைகளில் இருந்த தன்னம்பிக்கையும் மலர்ச்சியும் என்னைத் திக்குமுக்காட வைத்தன. சின்னச் சின்ன சங்கடங்களுக்கே சோர்ந்துபோகிற எனக்கு, அந்தப் பெண் ரயில் மீதேறி வந்த தன்னம்பிக்கை தேவதையாகவே தெரிந்தாள்.

- சிவரஞ்சனி, சென்னை.

விலை, எடை... நிறுவனங்களின் உத்தி!

கோப்புப் படம்

கிட்டத்தட்ட நமது கண்ணை மறைக்கும் சாதனையை செய்து வருகின்றன நுகர்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள். நுகர் வோராக நீங்கள் இந்த வித்தியா சத்தை உணர்ந்திருக்கக்கூடும். அதை உணராதவர்கள் இதை படித்த பிறகு இன்னும் எச்சரிக்கையாக இருக்கலாமே?

நாம் வழக்கமாகப் பயன்படுத்தும், சோப், பற்பசை, ஷாம்பு மற்றும் தினசரி பயன்படுத்தும் இதர பொருட்களின் விலையை ஏற்றிவிட்டால் என்ன செய்வோம். அந்தப் பொருளை பயன் படுத்துவதை விட்டுவிடுவோம். அல்லது அந்த பொருளுக்கு நிகரான தரத்தோடு குறைந்த விலையில் வேறு நிறுவனப் பொருளை பயன்படுத்த தொடங்குவோம். பிராண்டை மாற்ற முடியாத அளவுக்கு பழகிவிட்டோம் என்றால் மட்டுமே அந்த பொருளைத் தொடர்ந்து வாங்குவோம்.

பொருளுக்கான விலையை ஏற்றும் உத்தி என்பது நிறுவனங்கள் கடைபிடிக்கும் உத்திகளில் ஒன்று. இது அவர்களின் உரிமை. பொருளுக்கான தயாரிப்பு செலவுக்கு ஏற்ப விலையைத் தீர்மானிக்க சட்டம் அவர்களுக்கு இந்த உரிமையை கொடுத்துள்ளது. ஆனால் இந்த உத்தியால் வாடிக்கையாளர்களை இழக்கும் அபாயமும் நிறுவனங்களுக்கு இருக்கிறது. இந்த அபாயத்தைச் சந்திக்க தயாராக இல்லாத நிறுவனங்கள் குறுக்கு வழியில் கண்டுபிடித்த உத்திதான் விலையை ஏற்றாமல், அளவு அல்லது எடையைக் குறைக்கும் உத்தி.

இந்த எடைக்குறைப்பை அவ்வளவு எளிதில் கண்டுபிடித்துவிட முடியாது. பளிச்சென்று எந்த வித்தியாசமும் தெரியாது. நீங்கள் உன்னிப்பாகக் கவனித்தால் மட்டுமே இதைக் கண்டு பிடிக்க முடியும். எந்த அறிவிப்பும் இல்லாமல் இப்படிச் செய்வது வாடிக்கை யாளர்களை ஏமாற்றும் உத்தி ஆகிவிடாதா? இது குறித்து ஒரு நிறுவனத்தின் விற்பனை மேலதிகாரியிடம் கேட்டோம்.

``எடை குறைப்பு செய்வதால் வாடிக்கையாளரை நாங்கள் ஏமாற்று வதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. அந்த பொருளின் எடை, அளவு அதற் கான விலை போன்ற விவரங்களை வழக்கம் போல பொருளின் பேக்கிங்கில் தெளிவாக அச்சடித்துதான் தருகிறோம். வாடிக்கையாளர்கள் அதைப் பார்த்து விட்டுத்தான் வாங்குகின்றனர்.

பொருளும் தேவை, விலையும் வாங்குவதுபோல இருக்க வேண்டும் இதுதான் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விஷயம். எடை கொஞ்சம் குறைந்தாலும் பராவாயில்லை என்பதுதான் மக்கள் எண்ணம். அவர்களை ஏமாற்றும் எண்ணம் எங்களுக்கு அறவே இல்லை’’ என்றார். நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள் இந்த விஷயம் குறித்து என்ன நினைக்கின்றன என்பதற்காக அவர்களையும் தொடர்பு கொண்டோம்.

கலப்படப் பொருட்கள் மற்றும் தரமற்ற பொருட்களால் ஏமாறும் மக்களை முன்னணி நிறுவனங்களும் தங்கள் பங்குக்கு இதுபோன்று எடை குறைப்பு செய்து ஏமாற்றுகிறதோ என்று எண்ணத்தோன்றுகிறது. இது போன்ற எடை குறைப்பு சமாசாரங்களை மக்கள் கண்டுகொள்வதில்லை என்று நிறுவனங்கள் நம்புகின்றன. மூலப் பொருட்களின் விலை ஏறுவதும், போக்குவரத்து மற்றும் விநியோக செலவுகள் அதிகரிப்பதும் நிறுவனங்களுக்கு விலை ஏற்ற வேண்டிய கட்டாயத்தை உருவாக்குகிறது என்றால் அதை மக்களுக்கு விளக்க வேண்டிய கடமை நிறுவனங்களுக்கு இருக்கிறது.

தவிர முன் அறிவிப்பு இல்லாமல் எடை குறைப்பதற்கு சட்டமும் அனுமதிக்கிறது. முன்பு 25 கிராம் 50 கிராம் என்று ரவுண்டாகத்தான் எடை இருக்க வேண்டும் என்று இருந்த சட்ட விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன. 7 கிராம், 14கிராம், 48 கிராம் என பேக்கிங் செய்து கொள்வதற்கு ஏற்ப சட்டமும் சாதகமாக உள்ளது. இதை பேக்கிங்கில் அச்சடித்தால் போதும் என்பதுதான் நிலைமை. எனவே நுகர்வோர் கொஞ்சம் கவனமாகவே இருக்க வேண்டியிருக்கிறது என்கின்றனர்.

சில பிராண்டு பொருட்களில் எடை குறைத்தது மட்டுமல்ல, விலையையும் அதிகரித்து விட்டனர். உதாரணமாக ஒரு முன்னணி பிராண்ட் சோப் முன்பு 100 கிராம் இருந்தது என்றால் இப்போது 90 கிராம்தான் உள்ளது. விலையையும் உயர்த்தி உள்ளனர். வழக்கமாக வாங்கும் பொருள், பழக்கப்பட்ட பிராண்ட் என்கிற நம்பிக்கையில்தான் அந்த பொருட்கள் நுகர்வோரை ஈர்க்கிறது.

சோப்பு, ஷாம்பு, எண்ணெய் போன்ற தினசரி பயன்படுத்தும் பொருட்களில் குறிப்பிட்ட பிராண்டுக்கு பழகிவிட்டால் மாறுவதற்கு மனசு இருப்பதில்லை. விலை ஏறினாலும் அதே பொருட்களைத்தான் விரும்புகின்றனர் நுகர்வோர்கள்.

அவர்களின் கேள்வி இதுதான். சலுகை என்றால் டமாரம் அடிப்பதும், எடை குறைப்பை வெளியில் சொல்லாமல் கமுக்கமாக செய்வதும் ஏன்? நுகர்வோர்கள் விழிப்போடு இருப்பது ஒன்றுதான் இதற்கு ஒரே வழி.

எப்படி கண்டுபிடிப்பது?

வழக்கமாக 100 கிராம் சோப் என்று நினைத்து வாங்குவோம். 90 கிராம்தான் இருக்கும். 50 கிராம் பேஸ்ட் என்று நம்பி வாங்கினால் 40 கிராம்தான் பேக் செய்யப்பட்டிருக்கும். அதற்குத்தான் விலை குறிப்பிட்டிருப்பார்கள். இதற்கு முன்பு 100 கிராமும், 50 கிராமும் என்ன விலையில் விற்பனை ஆனதோ அதே விலையில் தற்போது 40 கிராமும், 90 கிராமும் விற்பனை செய்யப்படுகிறது.

சோப்பு, பேஸ்ட், டீ தூள், பிஸ்கட் முதல் மசாலா பொருட்கள் வரை அனைத்திலும் இந்த வகையிலான எடை குறைப்பு வித்தை சத்தமில்லாமல் நடந்து வருகிறது. இதில் நிறுவன பேதமே கிடையாது. பெரும்பாலும் அனைத்து நிறுவனங்களுமே இந்த உத்தியைக் கடைபிடிக்கின்றன.

ஏமாற்றும் உத்தியா?

விலை ஏற்றினால் வாடிக்கையாளரை இழக்கலாம் என நினைக்கும் நிறுவனங்கள் இந்த உத்தியை நேரடியாக நுகர்வோரிடத்தில் சொல்லலாமே என்கிற கேள்வி எழுகிறது. 50 காசு விலை குறைத்தால் பல லட்சம் செலவு செய்து விளம்பரம் செய்யும் நிறுவனங்கள் இந்த விஷயத்தை மட்டும் ஏன் இருட்டடிப்பு செய்கின்றன.

இருக்கும்... ஆனா இருக்காது...

விலையும் ஏற்றக்கூடாது, லாபமும் குறையக்கூடாது, தரத்திலும் சறுக்கக் கூடாது, வாடிக்கையாளர்களையும் இழக்கக்கூடாது என்கிற பலமுனை யோசனைகளிலிருந்து நிறுவனங்கள் இந்த உத்தியை கடைப் பிடிக்கின்றன. பிஸ்கட்டின் வழக்கமான அளவை விட சற்று சிறிய சைஸ் ஆக இருக்கிறது என்று தோன்றுகிறதா... இதுதான் அந்த இருக்கும்... ஆனா இருக்காது...

நிறுவனங்கள் குறுக்கு வழியில் கண்டுபிடித்த உத்திதான் விலையை ஏற்றாமல், அளவு அல்லது எடையைக் குறைக்கும் உத்தி.

maheswaran.p@thehindutamil.co.in

சிருஷ்டியின் அடிப்படைக்கூறு

Return to frontpage


யானையின் கன்று யானை மாதிரியே பிறக்கிறது. பூனையின் குட்டி பூனை மாதிரியே பிறக்கிறது. ஆனாலும், கருத்தரித்த சில வாரங்களுக்குள் கருப்பையில் உருவாகியிருக்கிற கருவைப் பார்த்தால், மனிதன் முதல் மீன் வரை எல்லா உயிரினங்களிலும் அதன் வடிவம் ஒரே மாதிரியாக இருக்கிறது. நாளாக நாளாகத்தான் கரு, அதன் பெற்றோரின் வடிவத்தைப் படிப்படியாக அடைகிறது. இவ்வாறு பெற்றோரின் வடிவமைப்பு பிள்ளைகளுக்கும் அமைவதற்குப் பாரம்பரியம் என்ற பண்பு காரணமாகிறது.

பொதுவான அம்சங்களில் பெற்றோருக்கும் பிள்ளை

களுக்கும் இடையில் வடிவ ஒற்றுமை காணப்படுகிற போதிலும், சின்னச் சின்ன விஷயங்களில் வித்தியாசங் களும் இருக்கும். அதன் காரணமாகவே ஒரே ஈற்றில் ஒட்டிப் பிறக்கிற பிள்ளைகளைக்கூட நம்மால் அடை யாளம் காண முடிகிறது. இதற்குத் தனித்துவம் என்று பெயர்.

மரபணுக்களின் மாய உலகம்

பாரம்பரியத்துக்கும் தனித்துவத்துக்கும் காரணமாவது மரபணு (ஜீன்) எனப்படுகிற அடிப்படைக்கூறு. இயற்பி யலிலும் வேதியியலிலும் அணு என்பது அடிப்படைக் கூறாக இருப்பதைப் போல உயிரியலில் மரபணு ஓர் அடிப்படைக் கூறாக விளங்குகிறது. தலைமயிர் கருப்பா, சிவப்பா, பொன்னிறமா, சுருட்டையா, நீளமா, மூக்கு சப்பையா, கிளி மூக்கா என்பன போன்ற அம்சங்களை நிர்ணயிப்பது மரபணுதான்.

தலை வழுக்கை, பார்வைக் கோளாறுகள், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், மனநோய் போன்ற பல வேண்டாத விஷயங்களும் பெற்றோரிடமிருந்து பிதுரார்ஜிதமாகப் பிள்ளைகளுக்கு மரபணுக்கள் மூலமாகவே வந்து சேருகின்றன.

மேற்சொன்ன ஒவ்வொரு குணாம்சத்துக்கும் ஒரு மரபணு பொறுப்பு வகிக்கிறது. இவ்வாறான 25 ஆயிரம் குணாம்சங்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன. அதாவது, 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரபணு வகைகள் உள்ளதாகப் பொருளாகிறது.

மரபணுக்கள் சரம்போல வரிசையாக அமைந்து ‘டியாக்சிரிபோ நியூக்ளிக் அமிலம்’ (டி.என்.ஏ.) என்ற அமைப்பாக அணிவகுத்திருக்கும். அந்த அமைப்பு ‘குரோமோசோம்’ எனப்படும் புரத உறைக்குள் பொதிந் திருக்கும். ஏராளமான குரோமோசோம்கள் செல் கரு என்ற உருண்டையாகத் திரண்டிருக்கும். அது செல் எனப்படும் நுண்ணறையில் குடியிருக்கும்.

செல்களில் எத்தனை ரகங்கள்

செல் என்பது ஓர் அதிசய, அற்புதப் படைப்பு. வைரஸ் எனப்படும் நுண்ணுயிரியைத் தவிர, மற்றெல்லா ஜீவராசிகளுக்கும் செல்தான் கட்டுமான அலகு. செல் அமைப்பு இல்லாத ஒரே உயிரி வைரஸ்தான்.

உயிர் உள்ளது என நிர்ணயிப்பதற்கு செல்களின் இனப்பெருக்கம்தான் சாட்சி. ஜெராக்ஸ் நகலெடுப்பதைப் போல ஒரு செல் இரண்டாகி, இரண்டு நாலாகி கணத்துக்குக் கணம் இரட்டித்துக்கொண்டே போகிற நிகழ்வுதான் உயிர். அது நின்றுபோவது மரணம்.

செல் மிக நுண்ணியது. அதன் உறையாக பிளாஸ்மா சவ்வு அமைந்துள்ளது. செல்களில் உடல் செல்கள், பாலின செல்கள் என இரு வகையுண்டு. பாலின செல்கள் ஆண்களின் விந்தகத்திலும் பெண்களின் முட்டையகத்திலும் மட்டுமே காணப்படும். உடல் செல்களில் 46 குரோமோசோம்களும் பாலின செல்களில் 23 குரோமோசோம்களும் இருக்கும்.

ஆண் பாலின செல், விந்து மூலம் பெண்ணின் கருப்பையில் நுழைந்து பெண் பாலின முட்டையைச் சந்திக்கிறபோது விந்து செல்லின் கரு முட்டைக்குள் நுழைந்து, அங்குள்ள கருவில் ஒட்டிக்கொள்ளும். தன் கருவுக்குள் 46 குரோமோசோம்கள் வந்துவிட்டன என்பதை உணர்ந்ததும் பெண் முட்டை வியப்பூட்டும் மாற்றங்களை அடைகிறது. அதனுள் பல பொருட்கள் உருவாகின்றன. அதன் பருமன் அதிகரிக்கிறது. ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் அது இரண்டிரண்டாகப் பிரிந்து, எல்லா வகையிலும் ஒத்த நகல் செல்களாகப் பெருகுகிறது.

சினையுற்ற கரு சிசுவாகப் பரிணமிக்கிறபோது உருவாகிற உடல், மயிர், எலும்புகள் போன்ற எல்லா உறுப்புகளுமே அந்த ஆதியாரம்ப முட்டையின் சந்ததி களால்தான் கட்டமைக்கப்படுகின்றன. ஆனாலும், ஒவ்வொரு செல்லும் தான் இருக்கும் இடத்துக்குத் தக்கபடி குறிப்பிட்ட பணியை மட்டுமே செய்கிறது. இதயத் திசுவிலுள்ள செல்கள் சுருங்கியும் விரிந்தும் இதயத்தைத் துடிக்கச் செய்கின்றன. எலும்பில் உள்ள செல்கள் அசைவின்றிப் பொருந்தியிருக்கின்றன. தசைகளில் உள்ள செல்கள் மூளையின் ஆணைகளுக்கு இணங்கி அசைவுகளை உண்டாக்குகின்றன. மூளையில் உள்ள செல்கள் மிகப்பெரும் சிக்கலமைப்பு கொண்ட மின் வேதியியல் சுற்றுக்களடங்கிய கணினியாகச் செயலாற்றுகின்றன.

கல்லீரல், மண்ணீரல், கணையம் போன்ற உறுப்பு

களிலுள்ள செல்கள் திறன் மிக்க வேதித் தொழிலகங் களாகச் செயல்பட்டு, விசேஷ வகை நொதிகளையும் இன்சுலின் போன்ற வேதிகளையும் உற்பத்தி செய்கின்றன.

குரோமோசோம்கள் பல தலைமுறைகளை இணைக் கிற பாலங்கள். அவற்றிலுள்ள டி.என்.ஏ-க்கள் பல நூற்றாண்டுகள் வரை மாறாமல் இருக்கின்றன. உதாரணமாக, மனித குலத்தில் இதுவரை சுமார் 2,500 தலைமுறைகள் கழிந்திருக்கும். எனினும், சில மேலோட்டமான மாற்றங்களைத் தவிர, மனித உடலின் அமைப்பில் பெரிதாக ஒன்றும் மாறிவிடவில்லை. குறிப்பாக, மனித மூளையின் பரிமாணம் கூடவோ குறையவோ இல்லை.

டி.என்.ஏ. சங்கிலி

டி.என்.ஏ. என்பது ஒரு சங்கிலி. நியூக்ளியோடைடு என்னும் மூலக்கூறு அதன் கண்ணிகள். அது பாஸ்பேட், ரிபோஸ் சர்க்கரை, நைட்ரஜன் காரம் ஆகிய பகுதிகளைக் கொண்டது. டி.என்.ஏ. ஒரு ஏணியை முறுக்கியது போன்ற வடிவத்தில் இருக்கும் என்று கண்டுபிடித்து வாட்சன், கிரிக் என்ற இரண்டு விஞ்ஞானிகள் நோபல் பரிசைப் பெற்றுவிட்டார்கள். அந்த ஏணியின் கால்களாக பாஸ்பேட் சர்க்கரை இழைகளும் படிகளாக நைட்ரஜன் காரங்களும் அமைந் துள்ளன.

பாட்டி, தாத்தா, அப்பா, அம்மா எல்லோரும் வெள்ளை நிறமுள்ளவர்களாக இருக்கிறபோது, குழந்தை கருப்பாகப் பிறந்திருக்குமானால், அதற்கு டி.என்.ஏ-வில் ஏற்பட்ட திடீர் மாற்றம் ஏதாவது காரணமாயிருக்கலாம். மயில், புலி போன்றவற்றில் வெள்ளை உடல் கொண்டவை தோன்றவும் இதுவே காரணம். மரபணு மாற்றத்தால் ஏற்படுவதுதான் புற்றுநோய். செல்லில் உள்ள குரோமோசோம்களின் அமைப்பு அல்லது எண்ணிக்கை செல் இரட்டிப்பின்போது மாறிவிடுவது, மரபணு மூலக்கூறில் வேறுபாடுகள் ஏற்படுவது போன்றவை மரபணு மாற்றங்களுக்கு உதாரணங்கள். டி.என்.ஏ-வில் ஒரே ஒரு நியூக்ளியோடைடு இடம் மாறி அமர்ந்தாலும் வெளிப்படையான மாற்றங்கள் தென்படும். அணுக்கதிர் வீச்சு, வெப்பம், வேதிகள் போன்ற காரணிகள் டி.என்.ஏ-வின் கட்டமைப்பை மாற்றி மரபணு மாற்றங்களை ஏற்படுத்தும்.

மரபணுக் கலப்பு

மரபணுவில் மாற்றங்களைச் செயற்கையாகவும் உண்டாக்கி கலப்பின உயிரினங்களை உருவாக்க முடியும். மாடுகள் முதல் நெல், கோதுமை வரை யான உயிரினங்களில் மரபணுக் கலப்புசெய்து சிறப்பான பண்புகளைக் கொண்ட கலப்பினங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. கத்தரி, பருத்தி போன்ற செடிகளில் கிருமிகளின் மரபணுக்களைப் புகுத்தி அதிக விளைச்சல் தரும் ரகங்களை உருவாக்கியுள்ளனர். மரபணுத் திருத்தங்களின் மூலம் சில குறிப்பிட்ட நோய்களைக் குணப்படுத்த முடிந்திருக்கிறது.

மனிதர்களின் 46 குரோமோசோம்களையும் சோதித்து ஒவ்வொரு குரோமோசோமிலுள்ள குறைகளால் இன்னன்ன உடல் நலக்கோளாறுகள் வர முடியுமென்று பட்டியலிடப்பட்டுள்ளது. புதிதாகப் பிறந்த சிசுவின் குரோமோசோம்களைப் பரிசோதித்து எதிர்காலத்தில் அதற்கு எந்தவிதமான உடல்நலப் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை ஊகித்துக்கொள்வதன் மூலம், ஏற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து எதிர்காலப் பாதிப்புகளைத் தடுக்க இயலும்.

மரபணுக்களை இஷ்டப்படி மாற்றியமைத்து மன்மதனைப் போன்ற அழகுள்ள ஆண்களையும் ரதியைப் போன்ற பெண்களையும் கொண்ட ஒரு மனித சமூகத்தை உருவாக்கிவிடலாம் என்று அறிவியல் புனைகதை ஆசிரியர்கள் கற்பனைக் கதைகளை எழுதியிருக்கிறார்கள். ஆனால், மரபணுக்களைத் திருத்தியமைப்பதன் மூலமாகச் சமூகத்தில் பெரிதாக எதையும் மாற்றிவிட முடியாது. இதுவரை மனித உடல் செல்களில் மட்டுமே மரபணுத் திருத்தம் செய்ய முடிந்திருக்கிறது. அதன் மூலம் தனிநபர்களின் சில குறைகளை நிவர்த்தி செய்தாலும் பாலின செல்களிலுள்ள மரபணுக்களைச் சரிப்படுத்தாதவரை அவர்களுடைய சந்ததிகளுக்கு மரபுப்பிழை மூலமான கோளாறுகள் வந்துகொண்டேதான் இருக்கும். பாலின செல்களில் உள்ள கோளாறுகளைச் சரிப்படுத்தாமல், உடல் செல்களை மட்டும் சரி செய்தால் ஓர் ஆபத்து வர வாய்ப்பு உண்டு. உதாரணமாக, ஒருவரது வலிப்பு நோயை மரபணுத் திருத்தம் செய்து குணப்படுத்தி விட்டால், அவர் ஊக்கமும் வலுவும் பெற்றுத் திருமணம் செய்துகொண்டு அதே மரபணுக் கோளாறுள்ள பிள்ளைகளைப் பெற்றுத்தள்ளி விடலாம். அவர்களில் பலருக்கு வலிப்பு நோய் வரும்.

ஆணும் பெண்ணும் மணம் செய்துகொள்ளும் முன் தமது மரபணுக்களைப் பரிசோதிப்பதன் மூலம் மரபுக் கோளாறுள்ள சந்ததிகளைப் பெறுவதைத் தவிர்க்க முடியும்.

- கே.என். ராமசந்திரன், பேராசிரியர் (ஓய்வு).

Monday, January 5, 2015

Make all arrangements on assets filing by January: PM to secretaries

New Delhi: In order to ensure timely compliance of April-end deadline for filing of assets details by babus, Prime Minister Narendra Modi has asked the authorities concerned to take preparatory steps in this regard by January. The Department of Personnel and Training (DoPT) has written to all chief secretaries of states and secretaries of central government ministries and departments informing them about the Prime Minister’s directive. As per the Public Servants (Furnishing of Information and Annual Return of Assets and Liabilities and the Limits for Exemption of Assets in Filing Returns) Second Amendment Rules, 2014, a public servant shall file the returns of his assets and liabilities, including that of his spouse and dependent family members. As per the rules, all Group A, B and C employees need to declare such details as on 31 March every year on or before 31 July of that year. For the current year, the last date for filing these returns was 15 September, which was later extended to December-end and now till April next year, for the current fiscal by 30 April 2015. “The Prime Minister has further directed that all preparatory steps be put in place for this purpose by 31 January 2015,” reads the DoPT letter sent to the state governments on Monday. In a communique to all central government secretaries, it has sought compliance of the rules by all officers and staff in ministries, and in departments or PSUs under their administrative control. The DoPT has notified a new form for the employees to declare details of their assets and liabilities, along with that of their spouse and dependent children, which is mandatory under the Lokpal Act. The declarations under the Lokpal Act are in addition to similar ones filed by the employees under various services rules. There are about 26,29,913 employees in Group A ,B and C, as per the government’s latest data.

NEWS TODAY 25.05.2026