Thursday, February 12, 2015

கெளதம் மேனனை சிலிர்க்கவைத்த அஜித்தின் அணுகுமுறை

'என்னை அறிந்தால்' படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் கெளதம் மேனன் மற்றும் அஜித்

'என்னை அறிந்தால்' படம் வெளியான நாளில், தன்னிடம் நடிகர் அஜித் பேசிய விதத்தைக் கண்டு வியந்து போனாராம் இயக்குநர் கெளதம் மேனன்.

அஜித், அனுஷ்கா, த்ரிஷா, அருண் விஜய் நடிப்பில் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கியிருக்கும் 'என்னை அறிந்தால்' திரைப்படம் தற்போது திரையரங்கில் ஒடிக் கொண்டிருக்கிறது.

'துருவ நட்சத்திரம்', 'யோஹன் அத்தியாயம் ஒன்று' உள்ளிட்ட படங்கள் கைவிடப்பட்டதால் கடும் மன வேதனையில் இருந்தாராம் கெளதம் மேனன். அதனைத் தொடர்ந்து சிம்பு நடிக்கும் படத்தை இயக்கி தயாரித்துக் கொண்டிருந்தார்.

அந்த வேளையில், அஜித் முன்வந்து கெளதம் மேனனுக்கு தேதிகள் ஒதுக்கி கொடுத்தார். அப்படி உருவானதுதான் 'என்னை அறிந்தால்'.

'என்னை அறிந்தால்' வெளியான நாளில், இயக்குநர் கெளதம் மேனன் காலையில் சென்னை காசி திரையரங்கம், அதனைத் தொடர்ந்து சத்யம் திரையரங்கில் ரசிகர்களுடம் படத்தை கண்டு ரசித்தார். அன்று கெளதம் மேனனுக்கு போன் செய்து அஜித் பேசியிருக்கிறார்.

அப்போது படத்தின் ரிசல்ட்டில் திருப்தியா? எனும் விதமாக அஜித்திடம் கெளதம் மேனன் கேட்டிருக்கிறார். அதற்கு, "அதை விடுங்கள்... உங்களுக்கு இருந்த பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்துவிட்டதா? இப்போது சந்தோஷமாக இருக்கிறீர்களா?" என்று அஜித் கேட்டிருக்கிறார்.

மேலும் தொடர்ந்த அஜித், "படம் வெற்றி, தோல்வி என்பதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் சந்தோஷமாக குடும்பத்துடன் இருங்கள். எதற்கும் கவலை வேண்டாம்" என்று கூறிவிட்டு போனை வைத்துவிட்டாராம் அஜித்.

அஜித்தின் இந்த அணுகுமுறையை சற்றும் எதிர்பார்க்காத கெளதம் மேனன், 'இப்படியும் சில மனிதர்கள் இருக்கிறார்களா?' என்று நெருங்கியவர்களிடம் சிலிர்ப்புடன் கூறினாராம்.

தூக்கம் --- எவ்வளவு நேரம் கட்டாயம் தேவை ?

வயதும் , தூக்கமும்
'தூங்காதே தம்பி தூங்காதே' என்ற தமிழ் திரைப்பட பாட்டு, அளவுக்கு அதிகமாகத் தூங்கும் பழக்கத்தின் தீமையைப் பற்றியது. ஆனால் அளவான தூக்கம் உடல் நலத்துக்கு அவசியம். மனிதர்கள் தினமும் எவ்வளவு நேரம் தூங்கவேண்டும் என்பது பற்றி தூக்கம் குறித்த பரிந்துரைகள்.

சரியாகத் தூங்காவிட்டால் நம்மில் பெரும்பாலோருக்கு “ சரி நாம் போதிய அளவு தூங்கவில்லை” என்று தெரியும்.

ஆனால் எது “போதிய அளவு தூக்கம்” ?

இதற்கு விடை, "உங்கள் வயது என்ன என்பதில் தான் இருக்கிறது", என்கிறது வாஷிங்டனில் இருந்து இயங்கும் தேசிய தூக்க நிறுவனம் சமீபத்தில் நடத்திய ஒரு ஆய்வு.

குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட வேலையைச் செய்யும் பழக்கமின்மை, மது மற்றும் காபி அல்லது பிற உடனடி சக்தி தரும் பானங்களை அருந்துவது போன்றவையும், அலாரம் கடிகாரங்கள் மற்றும், சூரிய வெளிச்சம் போன்றவை உடலில் தூக்கத்தை குறிப்பிட்ட நேரத்தில் வரவழைக்கும் இயல்பான உணர்வுக்கு இடைஞ்சல் தரும் என்கிறது இந்த ஆய்வு.

தனிப்பட்ட மனிதர்களின் சொந்த வாழ்க்கை முறைதான் இந்த தூக்கத்துக்கான தேவைகளை புரிந்துகொள்ள உதவ முக்கியமான அம்சம் என்று கூறும் அமெரிக்க தேசிய தூக்க நிறுவனம் (The US National Sleep Foundation) ஆனால் ஒருவரது வயது என்ன என்பதைப் பொறுத்து பொதுவான பரிந்துரைகளைத் தரலாம் என்கிறது.

பிறந்த குழந்தைகள் ( 0 முதல் மூன்று மாதங்கள் வரை) : புதிதாக பிறந்த குழந்தைகள் நாளொன்றுக்கு 14லிருந்து 17 மணிநேரம் வரை தூங்க வேண்டும் ஆனால் 11லிருந்து 13 மணிநேரம் தூங்கினால் கூட போதும். ஒரு நாளுக்கு 19 மணி நேரங்களுக்கு மேல் தூங்கவிடக்கூடாது .

குழந்தைகள் (4-முதல் 11 மாதம் வரை): தினசரி 12லிருந்து 15 மணி நேரங்கள் வரை தூங்கவேண்டும், குறைந்த்து 10 மணி நேரங்கள் தூங்கினால் கூட போதும். ஆனால் 18 மணி நேரங்களுக்கு மேல் தூங்கக் கூடாது.

தளிர்நடை பயிலும் குழந்தைகள் ( 1லிருந்து 2 வயது வரை): தினமும் 11லிருந்து 14 மணி நேரங்கள் வரை தூங்க வேண்டும் . ஆனால் 9லிருந்து 16 மணிநேரங்கள் வரை தூங்கலாம்.

பள்ளி செல்லும் முன் வயதுக் குழந்தைகள் ( 3லிருந்து 5 வயது வரை) : தினமும் 10லிருந்து 13 மணி நேரங்கள் தூங்கவேண்டும் என்பது வல்லுநர்கள் பரிந்துரை, ஆனால் 8 மணி நேரங்களுக்கு குறைவாகவோ அல்லது 14 மணி நேரங்களுக்கு மேலாகவோ தூங்குவது பொருத்தமற்றது என்று கூறப்படுகிறது.

பள்ளி செல்லும் வயது சிறார்கள் ( 6லிருந்து 13 வயது வரை): ஒன்பது மணிநேரத்திலிருந்து 11 மணிநேரம் வரை தினமும் தூங்கவேண்டும் என்கிறது இந்த நிறுவனம். தினமும் 7 மணிநேரத்துக்குக் குறைவான அல்லது 12 மணிநேரத்துக்கு மேலான தூக்கம் ஆரோக்கியமானதல்ல என்றும் அது கூறுகிறது.

பதின்பருவச் சிறார்கள் (14 முதல் 17 வயது வரை): பரிந்துரைக்கப்பட்ட தூக்க நேரம் என்பது 8லிருந்து 10 மணிநேரம் வரைதான். இந்த வயது சிறார்கள் தினமும் 11 மணி நேரங்களுக்கு மேலாகவோ அல்லது 7 மணிநேரங்களுக்கு குறைவாகத் தூங்குவது தவறு என்று எச்சரிக்கிறது இந்த நிறுவனம்.

வயது வந்த இளைஞர்கள் ( 18லிருந்து 25 வயது வரை): தினமும் 7லிருந்து 9 மணி நேரங்கள் வரை தூங்கலாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் தூக்கம் 6 மணிநேரத்துக்குக் குறைவானதாகவோ அல்லது 11 மணி நேரங்களுக்கு மேலோ போகக்கூடாது.

வயது வந்தவர்கள் ( 26லிருந்து 64 வயது வரை): மேலே குறிப்பிடப்பட்ட வயது வந்த இளைஞர்களுக்கான அதே பரிந்துரைதான் இவர்களுக்கும்.

மற்ற வயது வந்தவர்கள் ( 65 வயது, அதற்கு மேல்): ஆரோக்கியமான தூக்கம் என்பது தினசரி 7லிருந்து 8 மணிநேரம் வரை, ஆனால் ஐந்து மணி நேரத்துக்குக் குறைவாகவோ அல்லது 9 மணிநேரத்துக்கு மேலோ போகக்கூடாது.

தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த பல்வேறு பரிந்துரைகளையும் இந்த தேசிய தூக்க நிறுவன வல்லுநர்கள் வெளியிட்டிருக்கிறார்கள்.

முதலில் , முக்கியமாக, தூக்கத்துக்கு முன்னுரிமை தரப்படவேண்டும் என்று கூறும் அவர்கள், ஆனால் இந்த ஆலோசனைகளையும் முக்கியமாகக் கருதுகிறார்கள்.

அவை:

1)தூங்கும் நேரம் ஒரு குறிப்பிட்ட, அட்டவணைப்படுத்தப்பட்ட நேரத்தில் அமையவேண்டும், வார இறுதி நாட்களில் கூட.

2)படுக்கும் நேரத்தில் மனத்தை அமைதிப்படுத்தும் சில நடைமுறைகள்.

3)தினசரி உடற்பயிற்சி

4)படுக்கையறையில், சரியான வெப்பநிலை, ஒலி மற்றும் ஒளி அளவு

5)சௌகரியமான படுக்கை மற்றும் தலையணைகள்.

6)மது மற்றும் காபி போன்ற தூக்கத்தை “ஒளிந்திருந்து திருடும்” பொருட்கள்.

7)மின்னணுவியல் கருவிகள் ( கைத்தொலைபேசி , ஐ.பாட் போன்றவை) படுக்கப்போகுமுன் அணைக்கப்படவேண்டும்

சலுகைக் கட்டணத்தில் 4 லட்சம் டிக்கெட்: ஸ்பைஸ்ஜெட் விற்பனை



ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் சலுகை கட்டண பயண அறிவிப்பை நேற்று வெளியிட்டது.

ரூ. 599 முதல் ரூ. 3,499 என்கிற சலுகைக் கட்டணத்தில் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகள் வழங்குவதாக அறிவித்துள்ளது.

இதன்படி நான்கு லட்சம் டிக்கெட்டுகள் இந்த சலுகை கட்டணத்தில் ஒதுக்கியுள்ளதாக கூறியுள்ளது.

இந்த சலுகை கட்டண பயணத்தை ஜூலை 01 ம் தேதி முதல் அக்டோபர் மாதம் 24 தேதி காலகட்டத்தில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்த சலுகைக் கட்டண பயணத்தை பிப்ரவரி 13 வெள்ளிக்கிழமை வரை முன்பதிவு செய்யலாம்.

ரயில் கட்டணத்தை விட குறைவாக என்று சலுகை வெளியிட்டுள்ள ஸ்பைஸ்ஜெட் ரூ. 3,499 கட்டணத்தில் வெளி நாட்டு பயண சேவையை வழங்குகிறது.

ஓரியோ பிஸ்கெட்டின் வயது 103



நடிகர் கார்த்தி தோன்றும் ஓரியோ பிஸ்கெட் விளம்பரத்தை நீங்கள் அடிக்கடி தொலைக்காட்சிகளில் பார்த்திருப்பீர்கள். இரண்டு வட்ட வடிவச் சாக்லெட் பிஸ்கெட்கள், அவற்றுக்கு நடுவே கிரீம். கார்த்தியும் அவர் தங்கை(யாகத் தோன்றும் நடிகை)யும் வருவார்கள். கையில் ஓரியோ பிஸ்கெட்டை வைத்துக்கொண்டு கார்த்தி தங்கையைச் செல்லமாகச் சீண்டுவார். பிறகு பிஸ்கெட்டை இரண்டாக உடைப்பார். இருவரும் பாலில் முக்குவார்கள். சிரித்துக்கொண்டே சாப்பிடுவார்கள்.

அமெரிக்காவில் உருவானது

ஓரியோ பிஸ்கெட் இந்தியாவுக்கு வந்தது 2011- ம் ஆண்டு. ஆனால், ஓரியோ வயது என்ன தெரியுமா? 103! ஆமாம், 1912 இல் அமெரிக்காவில் நபிஸ்கோ (Nabisco) என்னும் நிறுவனம் ஓரியோவை அறிமுகம் செய்தார்கள். அன்றைய பெரும்பாலான கிரீம் பிஸ்கெட்கள் சதுர வடிவில் இருந்தன, சாதாரண பிஸ்கெட்டுகளுக்கு நடுவில் ஓரளவு கிரீம் இருந்தது.

ஓரியோவில், இரண்டு வட்ட வடிவ சாக்லெட் பிஸ்கெட்களுக்கு நடுவில் கணிசமான வனிலா கிரீம் இருந்தது. சாக்லெட் கசப்பும், வனிலா இனிப்பும் தனிச் சுவை தந்தன. வித்தியாசத் தோற்றம், சுவை ஆகியவற்றால், ஓரியோ விரைவில் பிரபலமானது.

அதிலும், ஓரியோவைப் பாலில் தோய்த்துச் சாப்பிடுவதில் ஏனோ குழந்தைகளுக்குத் தனி த்ரில். இதனால், நபிஸ்கோ கம்பெனியும் குழந்தைகள் பாலில் தோய்த்துச் சாப்பிடுவதுபோல் ஓரியோவை விளம்பரம் செய்தார்கள். ஓரியோ அமெரிக்காவின் நம்பர் 1 பிஸ்கெட் ஆனது.

பிற நாடுகளுக்கு 1990 களில் வியாபாரம் உலகமயமாகத் தொடங்கியது. சீனா, இந்தியா போன்ற நாடுகள் தங்கள் கதவுகளைப் பன்னாட்டுக் கம்பெனிகளுக்குத் திறக்கத் தொடங்கின. மக்கள் தொகை, உயரும் பொருளாதார வளர்ச்சி ஆகிய காரணங்களால், பன்னாட்டு நிறுவனங்கள் இந்தப் புதிய சந்தைகளைத் தேடி வந்தார்கள்.

சீனாவில் படு தோல்வி

1996. சீனாவில் ஓரியோ விற்பனை தொடங்கியது. 14 பிஸ்கெட்கள் கொண்ட பாக்கெட் விலை 72 சென்ட்கள் (அன்றைய டாலர் மதிப்பில் இது சுமார் 25 ரூபாய்). அமெரிக்காவில் மாபெரும் வெற்றி கண்ட அதே வடிவம், அதே சுவை. நாளிதழ்கள், பத்திரிகைகள், தொலைக்காட்சி ஆகியவற்றில் ஏகப்பட்ட விளம்பரங்கள். அவை அனைத்திலும், குழந்தைகள் ஓரியோவைப் பாலில் தோய்த்துச் சாப்பிடும் காட்சி.

2005. ஒன்பது ஆண்டுகள் ஓடி விட்டன. ஏனோ, விற்பனை சூடு பிடிக்கவேயில்லை. ஏகப்பட்ட நஷ்டம். சீன நாட்டிலிருந்து வெளியேறிவிடலாம் என்னும் சோகமான முடிவை நபிஸ்கோ எடுத்தார்கள். ஒரே ஒரு விற்பனை மேனேஜருக்கு மனம் நிறையக் கேள்விகள்.

அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் வெற்றிக் கொடி நாட்டிய ஓரியோ சீனாவில் மண்ணைக் கவ்வியது ஏன்? சீனாவை விட்டு வெளியேறும் முன், கருத்துக் கணிப்பு நடத்தித் தோல்விக்கான காரணங்களைக் கண்டுபிடிக்க விரும்பினார். நபிஸ்கோவின் அமெரிக்கத் தலைமைச் செயலகம் பச்சை விளக்குக் காட்டியது.

கருத்துக் கணிப்பு முடிவால் பிரபலமானது

கருத்துக் கணிப்பு சொன்ன உண்மைகள் நபிஸ்கோவுக்கு ஞானோதயம் தந்தன. சாக்லெட் கசப்பும், கிரீம் இனிப்பும் கலந்த இரட்டைச் சுவைக் கலவை சீனர்களுக்கு மிகவும் பிடித்தது. ஆனால், ஒரு பிரச்சனை “இனிப்பு திகட்ட வைக்கிறது: கசப்பு வயிற்றைப் புரட்டுகிறது. இரண்டுமே அதிகமாக இருக்கின்றன. இனிப்பு, கசப்பு இரண்டையும் மிதமாக்கவேண்டும்.”

நபிஸ்கோ கம்பெனி கிரீம் இனிப்பையும், சாக்லெட் கசப்பையும் வெவ்வேறு அளவுகளில் குறைத்து, 20 வகையான சாம்பிள்கள் தயாரித்தார்கள். அவற்றை ஆயிரக் கணக்கான சீன ஆண், பெண்கள், பல்வேறு வயதுள்ள குழந்தைகள் ஆகியோரிடம் சாப்பிடச் சொல்லி, அவர் களுக்கு எந்த சாம்பிள் பிடிக்கிறது என்று அவர்கள் கருத்துகளைக் கேட்டார்கள். இந்த அடிப்படையில், 20 சாம்பிள் களிலிருந்து பெரும்பாலா னோருக்குப் பிடித்த ஒரு சாம் பிளைத் தேர்ந்தெடுத்தார்கள்.

புதிய சுவைகளில் இன்னும் சில தனிப்பட்ட சுவைகளும் வந்தன. வனிலா கிரீம் மட்டுமே முதலில் இருந்தது. பல குழந்தைகளுக்கு வனிலாவைவிடச் சாக்லெட் கிரீம் இன்னும் அதிகமாகப் பிடித்தது. ஆகவே, ஓரியோ, சாக்லெட் கிரீம் அறிமுகம் செய்தார்கள். சீனர்கள் கிரீன் டீ என்னும் கொழுந்து வகைத் தேநீருக்கு அடிமைகள். அது புத்துணர்ச்சி தருவது என்னும் உறுதியான நம்பிக்கை கொண்ட வர்கள்.

நாள் முழுக்க கிரீன் டீ குடிப்பார்கள். ஆகவே, அடுத்து வந்தது இன்னொரு ஓரியோ . அதன் நடுவே கிரீன் டீ கிரீம். இதைப்போல் உள்ளூர் டேஸ்ட்டுக்கு ஏற்றபடி ஆரஞ்சு, மாம்பழம் இரண்டின் சுவையும் கலந்த புளிப்பும் இனிப்புமான கிரீம் அறிமுகம் செய்யப்பட்டது. .

ஓரியோ ஏன் வட்டவடிவமாக மட்டுமே இருக்கவேண்டும்? பல சீனர்கள் கேட்டார்கள். மக்கள் குரல் மகேசன் குரல் என்று கம்பெனி நிர்வாகிகள் முடிவு செய்தார்கள். கை விரல்கள் போன்ற வடிவம் பலருக்கும் பிடித்தமானதாக இருந்தது. வந்தது குச்சிபோல் நீளமான ஓரியோ. 14 பிஸ்கெட்கள் கொண்ட பாக்கெட் விலை 72 சென்ட்.

இத்தனை விலை கொடுத்துப் பிஸ்கெட் வாங்க சாமானியச் சீனக் குடும்பம் தயாராக இல்லை. இந்தத் தேவையைப் பூர்த்தி செய்ய, நபிஸ்கோ 5 ஓரியோக்கள் கொண்ட சின்ன பாக்கெட் 29 சென்ட் விலையில் அறிமுகம் செய்தார்கள். பெரிய பாக்கெட்களும் தொடர்ந்தன.

உத்தியில் மாற்றம்

அமெரிக்க அனுபவத்தின்படி, ஓரியோ பாலில் தோய்த்துச் சாப்பிடும் பிஸ்கெட் என்னும் பொசிஷனிங்கை நபிஸ்கோ மக்கள் மனங் களில் உருவாக்கிக் கொண்டிருந்தது.

இந்தப் பொசிஷனிங்கைச் சீனர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்தப் பழக்கம் அமெரிக்கத் தனமானது, சீனப் பழக்க வழக்கங்களுக்கு ஏற்றதல்ல என்று நினைத்தார்கள்.

ஓரியோ நிர்வாகிகளுக்கு ஒரே குழப்பம் பாலில் தோய்த்துச் சாப்பிடுவதுதான் ஓரியோவின் வித்தியாசமான தனித்துவம். இதை இழக்கக் கம்பெனி தயாராக இல்லை. என்ன செய்யலாம் என்று யோசித்தார்கள்.

சீனாவிலும் முதலிடம்

பால் ஆரோக்கியம் மிகுந்த பானமாகச் சீனாவில் கருதப்படுகிறது தினமும் குழந் தைகளைப் பால் குடிக்க வேண்டுமென்று சீனப் பெற்றோர்கள் வற்புறுத்துவார்கள். எல்லா ஊர்களையும்போல், சீனாவிலும் குழந்தைகள் பால் குடிக்க அடம் பிடிக்கும்.

நபிஸ்கோ ஓரியோ விளம்பரங்களில் சிறு மாற்றம் கொண்டுவந்தார்கள். குழந்தைகள் பால் குடிக்க ஓரியோ உதவும் என்னும் கருத்தை மையப்படுத்தினார்கள். சீனப் பெற்றோர்கள் மனம் மாறியது. ஒவ்வொரு வருடமும் ஓரியோ விற்பனை இரண்டு மடங்கானது. இன்று சீனாவில் நம்பர் 1 பிஸ்கெட் ஓரியோதான்!

2009 இல் ஓரியோ பிஸ்கெட்டை நபிஸ்கோ கம்பெனியிடமிருந்து சாக்லெட் தயாரிக்கும் காட்பரீஸ் கம்பெனி வாங்கிவிட்டார்கள். 2010 இல் இந்தியாவில் ஓரியோவை அறிமுகம் செய்திருக்கும் காட்பரீஸ், சீனாவில் நபிஸ்கோ படித்த பாடத்தை இந்தியாவில் பின்பற்றி வருகிறார்கள்.

நம் நாட்டில் ஸ்ட்ராபெர்ரி, ஆரஞ்சு ஆகிய சுவைகள் ஏராளமான குழந்தை களுக்குப் பிடித்தவை. ஆகவே ஓரியோ வனிலா, ஸ்ட்ராபெர்ரி, ஆரஞ்சு ஆகிய கிரீம்களோடு வருகிறது.

இந்தியாவில் இந்தியப் பாக்கெட்களும், விலைகளும் அமெரிக்க பாணியில் அல்ல, சீனப் பாணியில்தான். 3 ஓரியோக்கள் கொண்ட பாக்கெட் 3 ரூபாய்: 7 ஓரியோக்கள் பாக்கெட் 10 ரூபாய்: 14 ஓரியோக்கள் பாக்கெட் 20 ரூபாய்.

சீன முறைப் பொசிஷனிங் இந்தியாவிலும் வெற்றிகண்டு வருவதாக ஆரம்ப தகவல்கள் சொல்கின்றன. இந்த வெற்றி தொடருமா? வருகின்ற நாட்கள் பதில் சொல்லும்.

slvmoorthy@gmail.com

நீங்கள் அவமானப்படுத்தியது யாரை?

Return to frontpage

நல்ல முன்னுதாரணங்களைத் தேடி எடுத்துக்கொள்வது முன்னேற்றப் பாதையில் செல்வோருக்கான அடையாளங்களில் ஒன்று. சென்னை மாநகராட்சியின் ‘புதிய வரிவசூல்’ முறையை என்னவென்று சொல்வது?

சொத்துவரி செலுத்தத் தவறிய நட்சத்திர விடுதியின் முன்பு திருநங்கையரை ஆட விட்டு வரி வசூல் செய்த சென்னை மாநகராட்சியின் செயல் அவமானகரமானது மட்டுமல்ல; மனித உரிமை மீறலும்கூட. பெங்களூரு, தெற்கு டெல்லி போன்ற மாநகராட்சிகள்தான் சென்னை மாநகராட்சிக்கு இந்த விஷயத்தில் ‘முன்னோடிகள்’! பிஹாரின் பாட்னா மாநகராட்சி இன்னும் ஒரு படி கீழிறங்கி, பொதுமக்களிடம் இருந்து வரி வசூலிக்கவும் திருநங்கைகளை ரசக் குறைவான விதத்தில் பயன்படுத்தியது. வசூலிக்கும் வரியில் 4%-ஐ பாட்னா மாநகராட்சி திருநங்கைகளுக்கு வழங்கியது. மனித உரிமை ஆர்வலர்களின் எதிர்ப்புக்குப் பிறகு அந்த மாநகராட்சி இந்த நடைமுறையைக் கைவிட்டது. அதேபோல், பெங்களூரு மாநகராட்சியின் நடவடிக்கையை ‘நாகரிகமற்ற செயல்’ என்று கர்நாடக உயர் நீதிமன்றம் கண்டித் திருந்ததும் இங்கே குறிப்பிடத் தக்கது.

இதை வெறும் சென்னை மாநகராட்சியின் தவறாக மட்டும் பார்க்க முடியாது. நம் மனோபாவத்தின் குறியீடுகளில் ஒன்று இது. இயக்குநர் ஷங்கரின் ‘ஐ’ திரைப்படத்தில் மூன்றாம் பாலினத் தோரை இழிவுபடுத்தியதும் இதே போன்ற செயல்தான். ‘ஐ’ படத்துக்கெதிராகத் திருநங்கைகள் போராடியும் அந்தப் படத்தின் இயக்குநரோ தயாரிப்பாளரோ கொஞ்சமும் அலட்டிக்கொள்ளவில்லை. திருநங்கைகளின் எதிர்ப்பு அந்தத் திரைப்படத் தரப்பிடம் மட்டுமல்ல; பொதுமக்களிடமும் எந்தச் சலனத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதும் ஒரு குறியீடுதான்.

காலம்காலமாகச் சமூகத்தால் புறந்தள்ளப்பட்டு ஒதுங்கி வாழ்பவர்கள் தான் மூன்றாம் பாலினத்தோர். ஒடுக்கப்பட்ட தரப்புகளிலேயே கடைநிலையில்தான் அவர்களை நாம் வைத்திருக்கிறோம். அவர்களில் சிலர் பிச்சை எடுத்துப் பிழைக்கிறார்கள்; குறிப்பாக, வலுக்கட்டாயமாகப் பிச்சை பெற்றுக்கொள்கிறார்கள்; இன்னும் சிலர் பாலியல் தொழிலில் ஈடுபடுகின்றனர் என்பது உண்மைதான். ஆனால், இதற்கான சூத்ரதாரிகள் நாம்தான் என்பதை மறந்துவிட முடியாது. அவர்கள் கண்ணியமாக வாழ நாம் என்ன வாய்ப்புகளை உருவாக்கி வைத்திருக்கிறோம்? சக மனிதர்களாகக் கூட அவர்களை மதிப்பதில்லையே? கடந்த சில ஆண்டுகளாகத்தான் அவர்களுடைய குரல் பொதுச் சமூகத்தின் காதுகளில் சற்றே விழ ஆரம்பித்திருக்கிறது. சில உரிமைகளும் சலுகைகளும் அவர்களுக்குக் கிடைத்திருக்கின்றன. அவர்களுடைய வாழ்நிலையில் மிகச் சிறிய அளவிலாவது முன்னேற்றம் ஏற்பட்டிருக்கும் இந்தக் காலத்தை மீண்டும் பின்னோக்கித் தள்ளுகின்றன இந்தச் சம்பவங்கள்.

ஒருவரை அவமானப்படுத்துவது தவறு என்றால் ஒருவர் மேல் சமூகம் தொடர்ந்து சுமத்திவந்திருக்கும் அவமானத்தைக் கருவியாகக் கொண்டு இன்னொருவரை அவமானப்படுத்துவது எவ்வளவு பெரிய தவறு? எவ்வளவு பெரிய மனித உரிமை மீறல்? மாநகராட்சியின் உயர் அதிகாரிகளுக்கு இந்தப் பிரக்ஞையெல்லாம் சற்றும் இல்லை என்பது அவர்கள் மற்ற விஷயங்களில் எப்படி நடந்துகொள்வார்கள் என்பதற்கான ஒரு சோறு பதம். உண்மையில், மாநகராட்சி அவமானப்படுத்தியது நட்சத்திர விடுதிக்காரர்களையோ திருநங்கைகளையோ அல்ல; தன்னையே அவமானப்படுத்திக்கொண்டிருக்கிறது.

ஒரு சமூகம் தனது சிறுபான்மையினரையும், விளிம்புநிலையி னரையும் நடத்தும் விதத்தைக் கொண்டுதான் அது எவ்வளவு நாகரிகம் அடைந்த சமூகம் என்று மதிப்பிடப்படும். எனில், நமது நாகரிகத்தின் முகமோ தற்போது கிழிந்து தொங்குகிறது!

பேருந்துகளை எளிதாக அடையாளம் காண வழித்தட எண்களில் மாற்றம்

பேருந்துகளை பயணிகள் எளிதாக அடையாளம் காணும் வகையில், பேருந்து வழித்தட எண்ணை ஒரே மாதிரியாக மாற்றியமைக்கும் பணியை சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் மேற்கொண்டு வருகிறது.

முதல் கட்டமாக 20 வழித்தடங்களில் இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகரப் போக்குவரத்துக் கழக உயர் அதிகாரி ஒருவர் கூறியது:

மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இப்போது 806 வழித் தடங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதில் ஒரு சில வழித் தடங்களில் பயணிகளின் தேவையை அடிப்படையாகக் கொண்டு அதிக எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் சில பேருந்துகள் மாறுபட்ட வழித்தட எண்களிலும் இப்போது இயக்கப்பட்டு வருகின்றன.

இது குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதால், குறிப்பிட்ட வழித் தடத்தில் ஒரே எண் கொண்ட பேருந்துகளை இயக்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதாவது பிராட்வேயிலிருந்து வெவ்வேறு வழிகளில் தாம்பரம் நோக்கி செல்லும் பேருந்துகள் அனைத்தும் 102 என்ற எண்ணில் தொடங்கும் வகையில் மாற்றப்பட்டுள்ளது.

அதாவது 21ஹெச் பேருந்து வழித்தடம் 102 எனவும், டி21 என்ற வழித்தடம் 102கே என்ற வகையில் மாற்றப்பட்டுள்ளன.

இதுபோல் டி51 வழித்தட பேருந்துக்கு 95 என்ற எண்ணும், டி51எஸ் என்ற வழித்தடத்துக்கு 95சி என ஒரே எண்ணில் தொடங்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுபோல் 20 வழித் தடங்களில் முதல் கட்டமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த மாற்றம் பொதுமக்களுக்குத் தெரியும் வகையில் அனைத்துப் பேருந்துகளிலும் பழைய எண், புதிய எண் அடங்கிய ஸ்டிக்கர்களும் ஒட்டப்பட்டுள்ளன. பேருந்து நிறுத்தங்களில் அறிவிப்புகள் அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அடுத்த மூன்று வார காலங்களில் பிற பேருந்துகளிலும் இந்த மாற்றம் கொண்டு வரப்படும் என்றார்.

அரசு பணியில் ஆர்வம் காட்டாத சிறப்பு பிரிவு டாக்டர்கள்: 1,737 இடங்களுக்கு 433 பேர் மட்டுமே தேர்வு

அரசு மருத்துவமனைகளுக்கு, 1,737 சிறப்பு பிரிவு டாக்டர்கள் இடங்களை நிரப்ப மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியமான எம்.ஆர்.பி., நேரடி ஆட்தேர்வு நடத்தியும் டாக்டர்கள் ஆர்வம் காட்டவில்லை. போதிய ஆட்கள் கிடைக்காததால் 433 பேரை மட்டுமே தேர்வு செய்ததாக வாரியம் அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் ஓரளவு இருந்தாலும் அறுவை சிகிச்சை நிபுணர்கள், உயர் மருத்துவம் படித்த (எம்.எஸ்., - எம்.டி.,) சிறப்பு டாக்டர்களுக்கு பற்றாக்குறை உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, '1,737 சிறப்பு டாக்டர்கள் தேர்வு செய்யப்படுவர்' என, அரசு அறிவித்தது. தேர்வு நடத்தாமல் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால், 'வாக் இன் இன்டர்வியூ' முறையில், ஆட்தேர்வு நடந்தது. அரசு பணியில் சேர சிறப்பு டாக்டர்கள் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. நீண்ட காலம் ஆட்தேர்வு நடத்தியும் 25 சதவீத டாக்டர்கள் கூட கிடைக்கவில்லை. தேர்வான டாக்டர்கள் பட்டியலை எம்.ஆர்.பி., வெளியிட்டுள்ளது. மகப்பேறு சிகிச்சை, மகளிர் நோய் பிரிவில் - 73; பொது அறுவை சிகிச்சை - 46; குழந்தைகள் சிகிச்சை - 43 பேர்; முடநீக்கியல் பிரிவில் - 27 பேர் உட்பட, மொத்தம், 433 பேர் மட்டுமே பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். பல்வேறு துறைகளுக்கு ஒருவர் கூட வரவில்லை. எம்.ஆர்.பி., அதிகாரி ஒருவர் கூறுகையில், 'சிறப்பு பிரிவு டாக்டர் இடங்களை நிரப்ப போதிய ஆட்கள் கிடைக்கவில்லை.

அரசுப் பணியில் அவர்கள் ஆர்வம் காட்டவில்லை என்பதையே காட்டுகிறது. வந்தவரை தேர்வு செய்தோம்' என்றார். இப்படி சிக்கலான நிலையில் அரசு எப்படி மற்ற இடங்களை நிரப்பப் போகிறது என்பது புரியாத புதிராக உள்ளது. சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்க பொதுச்செயலர் ரவீந்தரநாதன் கூறுகையில், ''சிறப்பு பிரிவு டாக்டர்களை தனியார் மருத்துவமனைகள் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கின்றன. அரசு மருத்துவமனைகளில் சம்பளம் குறைவு ஒரு பிரச்னை என்றாலும், போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், அவர்கள் வரத் தயங்குகின்றனர். மருத்துவமனைகளில் கட்டமைப்பு வசதிகளை அரசு மேம்படுத்தினால் இந்த சிக்கல்கள் தீரும்,'' என்றார்.

NEWS TODAY 11.06.2026