Thursday, February 12, 2015

அரசு பணியில் ஆர்வம் காட்டாத சிறப்பு பிரிவு டாக்டர்கள்: 1,737 இடங்களுக்கு 433 பேர் மட்டுமே தேர்வு

அரசு மருத்துவமனைகளுக்கு, 1,737 சிறப்பு பிரிவு டாக்டர்கள் இடங்களை நிரப்ப மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியமான எம்.ஆர்.பி., நேரடி ஆட்தேர்வு நடத்தியும் டாக்டர்கள் ஆர்வம் காட்டவில்லை. போதிய ஆட்கள் கிடைக்காததால் 433 பேரை மட்டுமே தேர்வு செய்ததாக வாரியம் அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் ஓரளவு இருந்தாலும் அறுவை சிகிச்சை நிபுணர்கள், உயர் மருத்துவம் படித்த (எம்.எஸ்., - எம்.டி.,) சிறப்பு டாக்டர்களுக்கு பற்றாக்குறை உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, '1,737 சிறப்பு டாக்டர்கள் தேர்வு செய்யப்படுவர்' என, அரசு அறிவித்தது. தேர்வு நடத்தாமல் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால், 'வாக் இன் இன்டர்வியூ' முறையில், ஆட்தேர்வு நடந்தது. அரசு பணியில் சேர சிறப்பு டாக்டர்கள் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. நீண்ட காலம் ஆட்தேர்வு நடத்தியும் 25 சதவீத டாக்டர்கள் கூட கிடைக்கவில்லை. தேர்வான டாக்டர்கள் பட்டியலை எம்.ஆர்.பி., வெளியிட்டுள்ளது. மகப்பேறு சிகிச்சை, மகளிர் நோய் பிரிவில் - 73; பொது அறுவை சிகிச்சை - 46; குழந்தைகள் சிகிச்சை - 43 பேர்; முடநீக்கியல் பிரிவில் - 27 பேர் உட்பட, மொத்தம், 433 பேர் மட்டுமே பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். பல்வேறு துறைகளுக்கு ஒருவர் கூட வரவில்லை. எம்.ஆர்.பி., அதிகாரி ஒருவர் கூறுகையில், 'சிறப்பு பிரிவு டாக்டர் இடங்களை நிரப்ப போதிய ஆட்கள் கிடைக்கவில்லை.

அரசுப் பணியில் அவர்கள் ஆர்வம் காட்டவில்லை என்பதையே காட்டுகிறது. வந்தவரை தேர்வு செய்தோம்' என்றார். இப்படி சிக்கலான நிலையில் அரசு எப்படி மற்ற இடங்களை நிரப்பப் போகிறது என்பது புரியாத புதிராக உள்ளது. சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்க பொதுச்செயலர் ரவீந்தரநாதன் கூறுகையில், ''சிறப்பு பிரிவு டாக்டர்களை தனியார் மருத்துவமனைகள் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கின்றன. அரசு மருத்துவமனைகளில் சம்பளம் குறைவு ஒரு பிரச்னை என்றாலும், போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், அவர்கள் வரத் தயங்குகின்றனர். மருத்துவமனைகளில் கட்டமைப்பு வசதிகளை அரசு மேம்படுத்தினால் இந்த சிக்கல்கள் தீரும்,'' என்றார்.

No comments:

Post a Comment

TAPS takes effect from Jan 1, 2026

TAPS takes effect from Jan 1, 2026  As per the G.O., TAPS will become operational after the notification of rules and completion of statutor...