Sunday, February 15, 2015

வாட்ஸ்ஆப் வறுவல்: விஜயகாந்த் ஒரு மாறுபட்ட பார்வை


‘கேப்டன் பிரபாகரன்’ படத்தில் விஜயகாந்த்.

கேப்டன் பிரபாகரன்’ படத்தில் விஜயகாந்த்.

வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக் போன்ற சமூக வலை தளங்களில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை இழிவுபடுத்தும் வகையில் செய்திகளையும், கிண்டல்களையும் வெளியிடுவதாக அக்கட்சியினர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்துள்ளனர். விஜயகாந்தை கிண்டல் செய்யும் அதே வாட்ஸ்ஆப்பில் அவரை போற்றும் பதிவுகளும் வெளியிடப்பட்டு வருகின்றன. விஜயகாந்தின் அட்டகாசமான பிளாஷ்பேக்கை சொல்லி புருவம் உயர்த்த வைக்கிறது இந்த வாட்ஸ்ஆப் பதிவு.

சினிமாவில் நடிக்கும் ஆசையில் எழுபதுகளின் இறுதியில் மதுரை மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு வந்த விஜயராஜ்தான் பின்னாளில் வெற்றிகரமான நடிகரான விஜயகாந்த்.

சிவப்பு நிறமில்லை. சிலிர்க்க வைக்கும் உடற்கட்டு இல்லை. சினிமா பின்னணி இல்லை. இத்தனைக்கும் அந்த நேரத்தில் ரஜினியும், கமலும் மசாலா படங்களின் மூலம் கோலோச்சிய காலம். நெடிய போராட்டத்துக்கு பின்பு ‘இனிக்கும் இளமை’ என்றொரு படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். இவரின் அடுத்த படமான ‘தூரத்து இடி முழக்கம்’ மாநில மொழி திரைப்படத்துக்கான தேசிய விருதினை பெற்றது.

எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் இவரின் வெற்றி நடை ஆரம்பமானது. திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கு வாய்ப்புகளை அளித்து ஊக்கம் அளித்தவர், இவர் மட்டுமே. ஆபாவாணன், ஆர்.கே.செல்வமணி, ஆர்.வி.உதயகுமார் என இந்த பட்டியல் நீளும்.

‘அம்மன் கோவில் கிழக்காலே’, ‘வைதேகி காத்திருந்தாள்’, ‘சின்னக் கவுண்டர்’, ‘கேப்டன் பிரபாகரன்’, ‘ஊமை விழிகள்’, ‘புலன் விசாரணை’ என சிறு தயாரிப்பாளர்களின் வசூல் சக்ரவர்த்தியாக இவர் திகழ்ந்தார்.

இயக்குநர்கள் மட்டும் அல்ல; இவர் மூலம் அறிமுகம் செய்யப்பட்ட, இவரால் வளர்ந்த இன்னும் பல சினிமா பிரபலங்கள் உண்டு. அ.செ.இப்ராகிம் ராவுத்தர், சரத்குமார், அருண் பாண்டியன், ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான், விஜய் என இந்த பட்டியலும் நீளும்.

இவ்வளவு ஏன்? கடந்த தேர்தலில் இவரை கடைந்தெடுத்த வடிவேலு கூட இவரால் வளர்ந்தவரே. அவருக்கு அறிமுகம் கொடுத்தது ராஜ்கிரணாக இருக்கலாம். ஆனால், தொடர்ச்சியாக வாய்ப்பளித்தது விஜயகாந்த் தான்.

இவரின் நிர்வாகத் திறமையை சிலர் குறைத்து மதிப்பிடுகின்றனர்.

திரைப்பட நடிகர் சங்கத்தின் தலைவராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டதும் அதன் கடனை முற்றிலும் அடைத்ததோடு மட்டுமின்றி கையிருப்பையும் அதிகப்படுத்தினார்.

அனைத்து நடிகர்களையும் மலேசியாவுக்கு அழைத்துச் சென்று கலை நிகழ்ச்சிகள் நடத்தியது இவர்தான். அந்த சமயத்தில் இவரது திறமை யான நிர்வாகம் அனைவராலும் பாராட்டப் பட்டது.

‘அரசியலுக்கு வருவேன்’ என பூச்சாண்டி காட்டிக் கொண்டிருக்காமல் அதிலும் காலூன்றி சாதித்தவர் விஜயகாந்த். கருணாநிதி, ஜெயலலிதா, போன்றவர்கள் மத்தியில் யாதொரு அனுபவமும் இன்றி தனி ஆளாக இவரின் ஆவர்த்தனம் ஆரம்பம் ஆனது. எவரு டனும் கூட்டணி இல்லாமல் இவர் வாங்கிய ஓட்டுக்கள் அரசியலில் ஜாம்பவானாக அறியப்பட்ட வைகோவையும் கலங்க வைத்தது.

இவரின் தேர்தல் வாக்குறுதியான ‘கறவை மாடுகள் வழங்கப்படும்’ என்கிற திட்டம் அதிமுகவால் இப்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. எங்கு துயர சம்பவங்கள் நடந்தாலும் முதலில் நிவாரண நிதி அறிவிப்பதும் அளிப்பதும் விஜயகாந்த்!

இயற்கையிலேயே சிவந்த கண்களுக்கு சொந்தக்காரரான இவருக்கு முன் கோபம் அதிகம். இதன் மூலம் மற்ற கட்சிக்காரர்களுக்கு கேலிச் சித்திரமானார். விஜயகாந்தின் பல திறமையான செயல்பாடுகளும், மக்கள் மனதில் இவர் பெற்ற இடமும் இதனால் இருட்டடிப்பு செய்யப்பட்டது என்பதே உண்மை..

விஜயகாந்தின் புகழை இருட்டடிப்பு செய்யவே, அவரை சிலர் காமெடியாக சித்தரித்து ஊடகங்களில் பரப்புகின்றனர். அவர்களை நாம் ஊக்குவிக்காமல் இருப்போம்.

No comments:

Post a Comment

Fake FB page conducts MU admissions

 Fake FB page conducts MU admissions  13.04.2025 Mumbai : The University of Mumbai has lodged an official complaint with the cyber crime dep...