Tuesday, March 10, 2015

அப்துல் கலாமையும் அசத்திய இந்திய வெற்றி



உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தொடர் வெற்றி பெற்று வரும் இந்திய அணிக்கு முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவ்வளவாக விளையாட்டு பக்கம் திரும்பி பார்க்காதவர். குடியரசுத் தலைவராக இருந்த போது அவ்வப்போது விளையாட்டு வீரர்களை ஏதாவது விருது நிகழ்ச்சியில் சந்தித்து பேசுவதோடு சரி. விளையாட்டை விட்டு ஒதுங்கியிருக்கும் அவரையும் இந்த உலகக் கோப்பையில் தொடர் வெற்றி பெற்று வரும் இந்திய கிரிக்கெட் அணி அசைத்து பார்த்து விட்டது.

இந்திய அணி தொடர்ச்சியாக உலகக் கோப்பை போட்டியில் 5 வெற்றிகளை பெற்றதையடுத்து, அப்துல் கலாம் இந்திய அணி வீரர்களுக்கு இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் தளத்தில், ''வெல்டன் இந்தியா.. இதுவரை நீங்கள் பெற்ற வெற்றிக்கு முழு மதிப்பெண் ''எனக் கூறியுள்ளார்.

இதேபோல் பிரதமர் மோடியும் தனது ட்விட்டர் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். "உங்களின் அனைத்து செயல்திறனும் சூப்பர். இந்திய அணிக்கு எனது வாழ்த்துக்கள். உங்களுடையே உத்வேகம் தொடரட்டும்" என்று கூறியுள்ளார்.

உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு தொடர்ச்சியாக வெற்றி



உலகக் கோப்பை போட்டியில் தொடர்ந்து 5 அணிகளை ஆல்அவுட் ஆக்கி இந்திய அணி புதிய சாதனையை படைத்துள்ளது.

உலகக் கோப்பை போட்டியில் ஹாமில்டன் நகரில் இந்திய அணி அயர்லாந்து அணியை எதிர்கொண்டு விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பேட் செய்தது. அயர்லாந்து அணியின் தொடக்க வீரர்கள் போர்ட்ஃபீல்ட் 67 ரன்களும் ஸடிர்லிங் 47 ரன்களும் எடுத்து சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தி தந்தனர்.

அடுத்து வந்த எட்ஜாய்ஸ் 2 ரன்களிலும் வெளியேறினாலும், ஓ பிரையன் அபாரமாக விளையாடி 75 ரன்களை எடுத்தார். மறுமுனையில் பல்பிரின் 24 ரன்கள் எடுத்தார். கடைசிக்கட்ட வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். இறுதியில் 49 ஓவர்களில் அயர்லாந்து அணி 259 ரன்களை எடுத்து ஆல்அவுட் ஆனது.

இந்த உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி தொடர்ந்து ஐந்தாவது முறையாக எதிர் அணியை ஆல்அவுட் ஆக்கி புதிய சாதனையை படைத்தது- இதற்கு முன் வேறு இதற்கு முன் எந்த அணியும் செய்திராத உலக சாதனை இது. முதலில் பாகிஸ்தான் அணியை 224 ரன்களில் இந்திய அணி முடித்தது.

அடுத்த ஆட்டததில் தென்ஆப்ரிக்க அணி 177 ரன்களில் ஆல்அவுட் ஆனது. பின்னர் யு.ஏ.இ அணி 102 ரன்களில் வீழ்ந்தது. அடுத்து மேற்கிந்திய தீவுகள் அணி 182 ரன்களில் ஆல்அவுட் ஆனது. அந்த வகையில் இந்தியாவை எதிர்த்து 250 ரன்களுக்கு மேல் அடித்து அசத்தியுள்ளது அயர்லாந்து அணி. உண்மையை சொல்லப்போனால் பந்துவீச்சுதான் இந்திய அணிக்கு பலவீனம் என்றார்கள். இப்போது பந்துவீச்சுதான் இந்திய அணிக்கு பெரும் பலமாக மாறியுள்ளது.

புதிய ஒரு ரூபாய் நோட்டு மத்திய அரசு வெளியிட்டது!


உதய்பூர்:  புதிய ஒரு ரூபாய் நோட்டினை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதனால் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு ரூபாய் நோட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
ஒரு ரூபாய் நாணயங்களுக்கு தட்டுப்பாடு அதிகமாக உள்ளதால், சில்லரை தட்டுப்பாட்டைப்  போக்க ஒரு ரூபாய் நோட்டுக்களை மீண்டும் அச்சிட மத்திய அரசு முடிவு செய்தது.  இதற்கான பணிகள் கடந்த சில மாதங்களாக நடந்து வந்தன.
இந்நிலையில், இந்த புதிய ஒரு ரூபாய் நோட்டை உதய்ப்பூர் அருகே நத்வாராவில் உள்ள ஸ்ரீநாத்ஜி கோயிலில் ராஜீவ் மெஹ்ரிஷி வெளியிட்டார். இதை முன்னிட்டு ஸ்ரீநாத்ஜி சுவாமியின் பாதத்தில் 100 நோட்டுகள் கொண்ட ஒரு ரூபாய் நோட்டு கட்டை வைத்து வழிபட்டார். அவருடன் மனைவி மீரா மெஹ்ரிஷியும் உடன் வந்திருந்தார்.

20 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ரூபாய் முதல் நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தன. நாணயங்களோடு ஒப்பிடுகையில் இவற்றின் வாழ்நாள் மிகவும் குறைவு. வாழ்நாளையும், அச்சிடும் செலவையும் கருத்தில் கொண்டு இவற்றை அச்சிடுவது நிறுத்தப்பட்டிருந்தது.
புதிய ஒரு ரூபாய் 9.7 செ.மீ, 6.3 செ.மீ நீள அகலம் கொண்ட இந்த நோட்டின் முன்புறத்தில் பாரத் சர்க்கார் என இந்தியிலும், அதன்கீழ் `கவர்மென்ட் ஆப் இந்தியா` என ஆங்கிலத்திலும் உள்ளது. நிதித்துறை செயலாளர் ராஜீவ் மெஹ்ரிஷி கையெழுத்து இடம்பெற்றுள்ளது.

ரூ.1,000-க்கு ஆண்டு முழுவதும் சினிமா: கோவில்பட்டி திரையரங்கின் புதிய முயற்சி



சினிமா வரலாற்றில் முதன்முறையாக ரூ.1000 சந்தா செலுத்தி ஆண்டு முழுவது சினிமா பார்க்கலாம் - கோவில்பட்டி சண்முக திரையரங்கம்" என்ற ஒரு விளம்பரம் அனைவரையும் கவர்ந்தது.

இது உண்மையா, எதற்காக ஆரம்பித்திருக்கிறார்கள் என திரையரங்க எண்ணைத் தொடர்புக் கொண்டு பேசினோம்.

"விளம்பரப்படுத்தும் பணிகள் எல்லாம் முடிந்து இன்று முதல் தான் அதற்கான வேலையை ஆரம்பிக்கிறோம். இப்போது திரையரங்கிற்கு மக்களின் வருகை என்பது பெருமளவு குறைந்து விட்டது. ஏதாவது வித்தியாசமாக பண்ண வேண்டிய சூழல் ஏற்பட்டு இருக்கிறது.

கடந்தாண்டு மட்டும் 37 படங்களை வெளியிட்டு இருக்கிறோம். அதில் ஒருவர் 20 படங்கள் பார்க்கிறார் என்று வைத்துக் கொண்டால் கூட, அதற்கான செலவு அவருக்கு ரூ.1000-த்தை தாண்டிவிடும். ஆகையால் இந்த புதிய முறையை அறிமுகப்படுத்துகிறோம். இம்முறைப்படி ரூ.1000 கட்டினால் கூப்பன் ஒன்றை கொடுத்துவிடுவோம்.

எங்கள் திரையரங்கில் வெளியாகும் படத்தை நீங்கள் இந்த கூப்பனைப் பயன்படுத்தி படத்தினைக் கண்டு மகிழலாம். கூப்பனில் ஒரு படத்தை ஒரு முறை தான் பார்க்க முடியும். ஒரு வேளை இந்த படத்தைப் பார்க்க உங்களுக்கு விருப்பமில்லை என்றால் உங்களது நண்பர்கள், குடும்ப உறுப்பினர் யாராவது உங்களது கூப்பனை எடுத்துக் கொண்டு வந்து படம் பார்க்கலாம். அதற்கும் அனுமதிக்கிறோம்." என்றார்கள்.

"ஆரம்பிக்க காரணம் என்ன?" என்று கேட்டதற்கு "முன்பு எல்லாம் ஒரு படம் திரையிட்டால் மக்கள் கூட்டம் என்பது அதிகமாக இருக்கும். எங்களுக்கு சந்தோஷமாக இருந்தது. தற்போது சினிமா தயாரிப்பு என்பது மிகப்பெரிய விஷயமாகி விட்டது. நடிகர்கள், நடிகைகள் என அனைவருமே சம்பளத்தை உயர்த்திவிட்டார்கள். அதுமட்டுமன்றி தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என எல்லாரையும் தாண்டி எங்களிடம் படம் வரும் போது அதன் விலை என்பது மிகவும் அதிகமாகிறது. அப்படி நாங்கள் கஷ்டப்பட்டு எடுத்து வெளியிட்டால் கூட மூன்று நாட்கள் தான் அதற்கு மதிப்பு. அதற்கு பிறகு கூட்டம் குறைந்துவிடும்.

இது ஒரு பிரச்சினை என்றால், அடுத்த பிரச்சினை திருட்டு டி.வி.டி. 80 ரூபாய் கொடுத்து படம் பார்ப்பதற்கு 30 ரூபாய் கொடுத்து டி.வி.டியில் வீட்டிலேயே படம் பார்க்கலாம் என்று மக்களும் எண்ண ஆரம்பித்துவிட்டார்கள். இதனால் ஒரு புதுமையாக விஷயம் பண்ணலாம் என்று ஆரம்பித்தோம். இதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது" என்று தெரிவித்தார்கள்.

NEWS TODAY 25.07.2026