Tuesday, April 7, 2015

இ காமர்ஸை மிஞ்சும் எம் காமர்ஸ்?


தொழில்நுட்பம் மாறுவதற்கு ஏற்ப வியாபார சூழ்நிலைகளும் மாறி வருகின்றன. ஒரு காலத்தில் பொருட்களின் பட்டியலைக் கொடுத்து வாங்கினோம். அதன் பிறகு நாமாக டிராலியை தள்ளிக்கொண்டு சூப்பர் மார்க்கெட், துணிக்கடை என்று வாங்கி வந்தோம். இப்போது இணையதளம் (இ காமர்ஸ்) மூலம் பொருட்களை வாங்கி வருகிறோம்.

இந்த வர்த்தகம் உயர்ந்துவரும் சூழ்நிலையில், இன்னும் சில ஆண்டுகளில் இ காமர்ஸின் வர்த்தகத்தை எம் காமர்ஸ் வர்த்தகம் (மொபைல் மூலமான பொருட்களை வாங்குவது) மிஞ்சும் என கேபிஎம்ஜி நிறுவனம் தெரிவித்துள்ளதோடு அதற்கான காரணங்களையும் பட்டியலிட்டுள்ளது.

முதலாவதாக மொபைல் போன் மூலம் இணைய தளத்தைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை உயர்வது. 2014-ம் ஆண்டு இறுதியில் இந்தியாவில் 17.3 கோடி வாடிக்கையாளர்கள் மொபைல் மூலம் இணைய தளத்தைப் பயன்படுத்தினார்கள். இதனுடைய வளர்ச்சி நாளுக்கு நாள் தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருகிறது.

வரும் 2019-ம் ஆண்டு வரை ஆண்டுக்கு 21 சதவீத வளர்ச்சி இருக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. அப்படியானால் வரும் 2019-ம் ஆண்டு 45.7 கோடி நபர்கள் மொபைல் மூலம் இணையத்தைப் பயன்படுத்துவார்கள்.

தவிர செயலிகளை (ஆப்ஸ்) அதிகம் தரவிறக்கம் செய்வதில் நான்காவது இடத்தில் இந்தியர்கள் இருக்கிறார்கள். கூகுள் பிளே ஸ்டோரில் இருக்கும் செயலிகளில் 90 சதவீதம் செயலிகள் இலவசமாக தரவிறக்கம் செய்ய முடியும் என்பதால் அதிக தரவிறக்கம் நடக்கிறது. அமெரிக்கா, சீனா, இந்தோனேஷியா ஆகிய நாடுகளுக்கு அடுத்து அதிக செயலிகளை தரவிறக்கம் செய்வது இந்தியர்கள்தான். மொத்த சந்தையில் 7 சதவீதம் இந்தியர்கள் வசம் உள்ளது.

கால் டாக்ஸி நிறுவனங்கள் உள்ளிட்ட சில நிறுவனங்கள் செயலிகளைப் பயன்படுத்தும் போது இலவச பயணச் சலுகை அளிப்பதால், அது போன்ற செயலிகளை தரவிறக்கம் செய்துகொள்வது அதிகரித்துள்ளது. அதை தவிர மொபைல் போன் எப்போதும் கையில் இருப்பதால் தேவையானதை எப்போது வேண்டுமானலும் ஒரு சில கிளிக்குகளில் வாங்கிகொள்ள முடியும்.

இதற்கு உதாரணமாக ஸ்நாப்டீல் நிறுவனத்தின் விற்பனையை பார்க்கலாம். 18 மாதங்களுக்கு முன்பு வெறும் 5 சதவீதம் ஆர்டர்கள் மட்டுமே மொபைல் மூலமாக வந்தது. ஆனால் இப்போது 70 சதவீத வியாபாரம் மொபைல் மூலமாக வருகிறது என்று ஸ்நாப்டீல் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

இன்னும் ஒரு படி மேலேபோய் மிந்திரா நிறுவனத்துக்கு ஆர்டர் செய்பவர்களில் 90 சதவீதம் பேர் மொபைல் மூலமாகவே வருகிறார்கள் என மிந்திரா தெரிவித்திருக்கிறது. இதே போல ஜபாங் நிறுவனத்தின் வருமானத்திலும் 50 சதவீதம் மொபைலே ஆதிக்கம் செலுத்துகிறது. 2020ம் ஆண்டுக்கு பிறகு 70 சதவீத வர்த்தகத்தை மொபைல் பிடிக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.

கடைக்குப் போய் பொருட்களை வாங்கும் போது தேவையானதை மட்டுமே வாங்கினோம், இணையம் மூலம் பொருட்கள் வாங்கும் போது கொஞ்சமாவது யோசிக்க நேரம் இருக்கும். ஆனால் மொபைல் மூலம் எப்போது வேண்டுமானாலும் பொருட்கள் வாங்க முடியும் என்பதால் யோசிக்க நேரமிருக்காது.

உங்களை நுகர்வு கலாசாரத்துக்கு இரையாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு உங்களிடம் மட்டுமே இருக்கிறது.

அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பார்ம் பட்டதாரிகளுக்கு விரிவுரையாளர் பணி: உயர் நீதிமன்றம் உத்தரவு

மருத்துவத் துறை மற்றும் மருத்துவ கல்வித் துறையில் பணிபுரிந்துவருவோரில் எம்.பார்ம் முடித்தவர்களுக்குத்தான், அரசு மருத்துவ கல்லூரிகளில் மருந்தாளுநர் விரிவுரையாளராக பதவி உயர்வு வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தர விட்டது.

மதுரையை சேர்ந்த எம்.முத்துராமலிங்கம், ஆர். ஜெயசு ரேஷ், ஆர். அன்பழகன், ஜி.சத்யபாலன், எஸ்.ஜஸ்டின் சுரேஷ், ஜி. மகுடேசுவரி, கே.நஞ்சப்பன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் மருத்துவத் துறை, மருத்துவ கல்வித் துறையில் மருந்தாளுநராக பணியாற்றி வருபவர்களில் பி.பார்ம் முடித்தவர்கள் பதவி உயர்வு மூலம் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருந்தாளுநர் விரிவுரையாளர்களாக நியமிக்க ப்படுகின்றனர்.

மருந்தாளுநர் விரிவுரையாளர்களாக பி.பார்ம் முடித்தவர்களை நியமனம் செய்வது சரியல்ல. அகில இந்திய மருத்துவக் கல்வி கவுன்சில் விதிப்படி எம்.பார்ம் படித்தவர்களைத்தான் மருந்தாளுநர் விரிவுரையாளர்களாக நியமனம் செய்ய வேண்டும்.

எனவே, தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள மருந்தாளுநர் விரிவுரையாளர் பணியிடங்களில் மருத்துவத் துறை மற்றும் மருத்துவ கல்வித் துறையில் பணியில் உள்ள எம்.பார்ம் முடித்தவர்களை நியமனம் செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுக்களை நீதிபதி கே.பி.கே.வாசுகி விசாரித்தார். மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் சு.விஸ்வலிங்கம் வாதிட்டார். விசாரணைக்குப்பின் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், விதிப்படி எம்.பார்ம் முடித்தவர் களைத்தான் மருந் தாளுநர் விரிவுரையாளர்களாக நியமனம் செய்ய வேண்டும். தமிழகத்தில் 28 மருந்தாளுநர் விரிவுரையாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காலிப் பணியிடங்களுக்கு எம்.பார்ம் முடி த்து மருத்துவத் துறை, மருத்துவக் கல்வித் துறையில் பணிபுரிந்து வருபவர்களை நியமிக்க, மாநில பணிமூப்பு பட்டியலை மருத்துவக் கல்வி இயக்குநர் தயார் செய்து, ஒரு மாதத்தில் தமிழக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலருக்கு அனுப்ப வேண்டும். அந்தப் பட்டியலுக்கு செயலர் ஒரு மாதத்தில் ஒப்புதல் வழங்கி, விரிவுரையாளர் பதவி உயர்வு வழங்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

28 மருந்தாளுநர் விரிவுரையாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

மனசு போல வாழ்க்கை- 3: நல்ல எண்ணங்களைப் பயிலலாமே!....by டாக்டர். ஆர். கார்த்திகேயன்



நல்ல சிந்தனை வேண்டும் என்பதைத் திரும்பத் திரும்ப சொல்ல வேண்டியிருக்கிறது. கெட்ட சிந்தனை எளிதில் வருகிறது.

ஒரு கண் பார்வையற்ற மனிதன் மலை ஏறி சிகரத்தைத் தொட்டான் என்று செய்தி வந்தால் கூடப் பெரிய ஊக்கம் தோன்றுவதில்லை. சாதிச் சண்டையில் சதக் சதக் என்று குத்தினான் என்றால் ஆர்வமாய்ப் படிக்கிறோம். டி.வி நிகழ்ச்சியில் ஒரு பொருளாதார நிபுணர் பேசினால் அலுப்பு வருகிறது. ஆனால், அதிலேயே ஒரு மாமியார் மருமகளைக் கொடுமைப்படுத்தினால் கண் இமைக்காமல் பார்க்கிறோம்.

ஒருவரைப் பயமுறுத்துதல் எளிது. பெரிய அறிவு ஏதும் வேண்டியதில்லை. ஒரு பொய்த் தகவல் கூடப் போதும். ஆனால் ஒருவரை மகிழ்விப்பது பெரும் பணி. நிறையத் திறன் தேவைப்படுகிறது.

“உங்கள் அலுவலகத்தில் வெடிகுண்டு மிரட்டல் உள்ளது” என்று பதற்றமாக யாராவது சொன்னால், “எனக்கு ஏதும் மின்னஞ்சல் வரவில்லையே! வெடி குண்டு வைத்ததற்கு ஏதும் சாட்சி உண்டா? ” என்று எந்த அறிவுஜீவியும் கேட்கமாட்டார். முதல் வேலையாக வெளியே எழுந்து ஓடுவார்.

அதே போல, கோபப்படுத்துவதும் எளிது. ஒரு சிறு கொசு கூட அதைச் செய்ய முடியும். உங்களுக்கு வேண்டாதவர் பற்றிய சிறு எண்ணம் கூடப் போதும். அதனால்தான் மிகச்சிறிய தூண்டுதலில் கூடப் பெரும் வன்முறைகள் நடந்துவிடுகின்றன.

ஏன் இப்படி? நம் மூளை அப்படி உருவாகியுள்ளது. அதுதான் காரணம். அடிப்படையில் நம் மனித மூளை இன்னமும் பிரதானமாக ஒரு மிருக மூளை தான். முதுகுத் தண்டின் மேற்பகுதியில் இணைக்கப்பட்டுள்ள மூளையின் பின் பகுதிதான் புலனறிவுகளின் செயலகம்.

மிருகத்தின் முக்கியத் தேவைகள் தன் உயிர் காப்பதும், இரை தேடுவதும், இனப்பெருக்க உணர்வும்தான். அதற்குத் தேவையான செயல்பாடுகள் அடிப்படையான ஆதார உணர்வுகளைச் சார்ந்தவை. அச்சம்தான் நம் முதல் உணர்ச்சி. கோபம் கூட அடுத்த கட்டத்தில்தான் தோன்றுகிறது. அதனால்தான் அச்சத்தை நம் மூளை தேடிப் பிடித்து உள்வாங்கிக்கொள்கிறது.

“உங்கள் குழந்தையின் உணவில் போதிய போஷாக்கு இருக்குதா? உங்கள் டூத் பேஸ்ட்டில் உப்பு இருக்குதா? உங்களுக்குக் கொஞ்சமாவது துப்பு இருக்குதா?” என்றெல்லாம் கேட்கும் விளம்பரங்கள் அடிப்படையில் அச்சத்தை உருவாக்கி அதன் மூலம் விற்பனையை வளர்க்க நினைக்கின்றன. காரணம் அச்சம் நமக்குச் சுலபமாக வரும்.

மூளையின் முன்பகுதி நவீனமானது. பல ஆயிர வருடங்களின் பரிணாமத்தில் வந்த நிர்வாக மூளை அது. சிந்தனை, பகுத்தறிவு, திட்டமிடுதல், செயலாக்கம் என மனிதனின் முன்னேற்றத்துக்கு ஆதாரமான அனைத்தும் இங்குதான் செயல்படுத்தப்படுகின்றன.

அதனால் கூர்ந்து நோக்குவது, யோசிப்பது, புதிதாகப் படைப்பது, நகைச்சுவை, நம்பிக்கை எல்லாம் சற்று பக்குவமான மனநிலையில் மட்டுமே ஏற்படுபவை.

அடிப்படை உணர்ச்சிகள் எதிர்மறையான கெட்ட எண்ணங்களை வளர்க்கும். பக்குவப்பட்ட உணர்ச்சிகள் நேர்மறையான நல்ல எண்ணங்களை வளர்க்கும்.

இது இரு வழிப்பாதையும் கூட. எதிர்மறை எண்ணங்கள் அச்சம், கோபம் போன்ற அடிப்படை உணர்ச்சிகளை வளர்க்கும். நேர்மறை எண்ணங்கள் மகிழ்ச்சி, நம்பிக்கை போன்ற பக்குவப்பட்ட உணர்ச்சிகளை வளர்க்கும்!

இன்னொரு விஷயமும் உள்ளது. நெருக்கடியான நிலையில் பின் மூளை உடனடி யாகச் செயல்படும். முன் மூளை சற்று நேர மெடுக்கும்.

நீங்கள் உங்கள் மனைவியிடம் சின்ன வாக்குவாதம் செய்கிறீர்கள். அவர் சொன்ன ஒரு வார்த்தையில் சற்று நிதானமிழந்து நீங்கள் பதிலுக்கு அவர் குடும்பத்தையும் சேர்த்துத் திட்டிவிடுகிறீர்கள். பின் சில நொடிகளில் செய்த பாதகமும் அதன் பின் விளைவுகளும் புரிகின்றன.

உங்கள் மனைவி ஒத்துழையாமை இயக்கம் நடத்தலாம். பதிலுக்கு நம் குடும்பத்தினரின் மொத்த வரலாறும் வரிசை மாறாமல் வரலாம். குறைந்த பட்சம் அன்றைய நிம்மதியும் தூக்கமும் போகலாம். இதெல்லாம் புரிந்து, “ நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை..!”என்றெல்லாம் சொல்லிச் சமாளிக்கிறீர்கள்.

ஆனால் உங்கள் பின் மூளை செயல்பாட்டின் தாக்குதல் உங்கள் மனைவியின் பின் மூளையைத் தாக்க, “ எல்லாம் சொல்லிட்டீங்க. உங்க புத்தி தெரியாதா?” என்று கோபத்தில் எழுந்து போகிறார். பின் அவரின் முன் மூளை சற்று பகுத்தறிவுடன் யோசித்து, “குழந்தைங்க முன்னாடி சண்டை போட்டா அது அவங்களை பாதிக்கும். ஹூம்.. அவர் எப்பவும் இப்படித்தான் புதுசா என்ன?” என்று சமாதானமாகிறார்.

ஒரு உறவில் ஏற்படும் உரசலின் அனாடமி இது.

அதனால்தான் சொன்னேன். அச்சம், கோபம், போன்ற நெகட்டிவ் எண்ணங்கள் எல்லாம் முந்திக் கொண்டு வருகின்றன. அமைதி, மகிழ்ச்சி, நம்பிக்கை, போன்ற பாஸிட்டிவ் எண்ணங்கள் அவ்வளவு இயல்பாக வருவதில்லை. அதற்கு நிறைய முயற்சியும் பயிற்சியும் தேவைப்படுகின்றன.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவிடம் தோற்றதும் என்னென்ன கருத்துகள் வந்தன? “கோஹ்லி சரியில்லை. எல்லாம் அனுஷ்கா ஷர்மா ராசி”. “தோனியே சொதப்பிட்டார்” இப்படி வந்தவைதான் அதிகம். “அன்று ஆஸ்திரேலியா நம்மை விட நன்றாக விளையாடியது” என்று சொல்லியவர்கள் எத்தனை பேர்?

வாழ்க்கையில் சிக்கல்கள் இல்லை. அதை நாம் பார்க்கும் கண்ணோட்டத்தில்தான் சிக்கல்கள் உள்ளன. நம் வாழ்க்கையில் நடப்பவை நம்மை துன்புறுத்துவதில்லை. அதைப் பற்றி நாம் எண்ணும் எண்ணங்கள்தான் நம்மை துன்புறுத்துகின்றன.

நம்மால் நம் எண்ணங்களையும் உணர்வுகளையும் மாற்ற முடியும். மூளையும் மனமும் இசைந்து அற்புதங்கள் நிகழ்த்தலாம்!

இதுதான் உலகின் அத்தனை மதங்களும் ஒரே குரலில் சொல்லும் மந்திரம்!

சிக்கல்களை தவிர்க்க‌ வங்கிகளில் ஆதார் எண்ணை பதிவு செய்வது அவசியம்: ஓய்வூதியதாரர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

ஓய்வூதியம் பெறுவதில் உள்ள சிக்கல்களைத் தவிர்க்க மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் அனைவரும் வங்கிகளில் தங்களின் ஆதார் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “அனைத்து ஓய்வூதியதாரர்களும் தங்கள் மற்றும் தங்கள் குடும்பத்தினரின் ஆதார் எண்களை ஓய்வூதியப் பட்டுவாடா ஆணையத்திடம் பதிவு செய்தல் வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

இதன் மூலம், 2015ம் ஆண்டு நவம்பர் மாதம் சமர்ப்பிக்க வேண்டிய ஓய்வூதியதாரர் உயிர் வாழ் சான்றிதழை, எந்தவித அசவுகரியங்களும் இல்லாமல் சமர்ப்பிக்க முடியும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

க‌டந்த ஆண்டு நவம்பர் மாதம், ஆதார் எண்ணை அடிப்படையாகக் கொண்ட இணையம் வழி சமர்ப்பிக்கும் `ஜீவன் பிரமான்' எனும் டிஜிட்டல் ஓய்வூதியதாரர் உயிர் வாழ் சான்றிதழை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்தினார்.

இதன் காரணமாக, வயதான ஓய்வூதியதாரர்கள் தங்களின் உயிர் வாழ் சான்றிதழைச் சமர்ப்பிக்க நேரடியாக வங்கிக்கோ அல்லது ஓய்வூதிய பட்டுவாடா முகமைக்கோ செல்ல வேண்டிய அவசியம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

தங்கள் வீடுகள் அல்லது அருகில் உள்ள பொதுச் சேவை மையங்களில் இருந்து இணையம் வழியாகவே சான்றிதழைச் சமர்ப்பிக்கலாம்.

மேலும், வங்கிக் கணக்கு எண்ணுடன் ஆதார் எண் மற்றும் ஓய்வூதியக் கணக்கு எண் ஆகியவற்றை இணைக்கும் போது, ஆள்மாறாட்டத்தையும் தவிர்க்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

நாட்டில் தற்சமயம் 50 லட்சம் மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.

மணியார்டர் சேவை நிறுத்தமா?- தபால் துறையை வீழ்த்த தனியார் நிறுவனங்கள் அவதூறு பரப்புகின்றன- மத்திய தபால்துறை அதிகாரி சுற்றறிக்கை



சாமானிய மக்களும் அதிகளவில் பயன்படுத்தும் மணியார்டர் சேவை நிறுத்தப்படவில்லை. சில போட்டி தனியார் நிறுவனங்கள் இதுபோன்ற தவறான செய்தியை பரப்புகின்றன என்று தபால் துறை விளக்கமளித்துள்ளது.

நாட்டின் கடைக்கோடி பகுதியில் வசிக்கும் சாமானிய மக்களும் அவசர தேவைகளுக்காக எவ்வித சிரமமும் இன்றி பணம் அனுப்புவதற்கு தபால் துறையின் மணி ஆர்டர் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், “மணியார்டர் சேவை நிறுத்தப்பட்டுவிட்டது” என்று இந்தியா போஸ்ட்டின் துணை இயக்குநர் ஷிவ் மதுர்குமார் கூறியதாக தகவல்கள் வெளியாகின. இதனால், அச்சேவையை பயன்படுத்திவரும் ஏராளமானோர் அதிர்ச்சியடைந்தனர். அது பற்றி தெரிந்துகொள்வதற்காக அருகில் உள்ள தபால் நிலையங்களில் பொதுமக்கள் குவிந்தனர்.

இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் இந்தியா போஸ்ட் (தபால்கள்) பிரிவின் செயலாளர் அலுவலகத்தில் இருந்து நேற்று அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

மணி ஆர்டர் சேவை நிறுத்தப் படுவதாக தகவல்கள் பரவிவருகின் றன. தமது சிறப்பான செயல்பாட்டால், இதே துறையில் ஈடுபட்டுள்ள பல தனியார் நிறுவனங்களுக்குப் போட்டியாக தபால்துறை விளங்கிவருகிறது. அந்நிறுவனங்கள், சமீப காலமாக, செல்போன் மூலமாக பணம் அனுப்பும் சேவையிலும் ஈடுபட்டுள்ளன. அச்சேவைக்கு, தபால்துறையின் மணி ஆர்டர் சேவை போட்டியாக அமைந்துள்ளது. அதனால், பொய்யான தகவலை பரப்பிவருகின்றன.

இது தொடர்பாக அனைத்து அஞ்சலக வட்டாரத் தலைவர்களும், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மேலும், உடனுக்குடன் பணம் அனுப்பும் ‘இன்ஸ்டன்ட் மணி ஆர்டர்’, ‘மொபைல் மணி ஆர்டர்’, ‘சர்வதேச மணி ஆர்டர்’ போன்ற புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப் பட்டிருப்பதையும் மக்களிடம் எடுத்துக் கூற வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, சென்னையில் உள்ள தமிழ்நாடு வட்டார தலைமை அலுவலகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் நேற்று கூறியதாவது:

தபால் துறையின் மணி ஆர்டர் சேவை நிறுத்தப்பட்டதாக வெளியான தகவல்கள் தவறானவை. வழக்கமான மணி ஆர்டர், அதனையொத்த மின்னணு மணி ஆர்டர் (இ.எம்.ஓ.) ஆகியவை தொடர்ந்து பயன்பாட்டில் உள்ளன. மணி ஆர்டர் (அட்டை) படிவத்துக்கு பதிலாக, கம்ப்யூட்டர் மூலமாக தலைமை தபால் அலுவலகங்களுக்கு சில விநாடிகளில் மணி ஆர்டர் பற்றிய தகவல்களை அனுப்பும் இ.எம்.ஓ.வும் வெகு வேகமாக வளர்ந்து வருகிறது. இத்திட்டத்தின்படி, பணத்தை ஒரு கிளையில் செலுத்திவிட்டால், போய்ச் சேர வேண்டிய கிளைக்கு சில விநாடிகளில் தகவல் அனுப்பப்படும். அங்கிருந்து தபால்காரர்கள் மூலம் பணம் உரியவருக்கு உடனே போய் சேரும். தமிழகத்தில் கடந்த 2014-15 நிதியாண்டில் மட்டும் 3 கோடி மணி ஆர்டர்கள் அனுப்பப்பட்டுள்ளன. இதில், 11 லட்சம் மணி ஆர்டர்கள், தமிழக அரசின் சமூகநலத் திட்டங்களைச் சேர்ந்த பயனாளிகளுக்கு அனுப்பப்பட்டவையாகும்.

உ.பி. ரயில்களில் டிக்கெட் இல்லாமல் பயணம்: திடீர் சோதனையில் சிக்கிய 326 அதிகாரிகள்

Return to frontpage

உ.பி. ரயில்களில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த போலீஸார் உட்பட 326 அதிகாரிகள் சிக்கினர். இங்குள்ள முராதாபாத் மற்றும் ஷாஜாஹாபூர் ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையே ஓடும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் நடந்த அதிரடி சோதனையில் சுமார் ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் வசூலானது.

டெல்லியில் இருந்து கிளம்பி உ.பி.யின் ஷாஜாஹாபாத் மற்றும் முராதாபாத் ரயில் நிலையங்களை கடந்து ரயில்கள் குவாஹாட்டி எக்ஸ்பிரஸ், கிசான் எக்ஸ்பிரஸ், முகல்சராய் எக்ஸ்பிரஸ் மற்றும் சியல்தா எக்ஸ்பிரஸ் ஆகியன பல்வேறு இடங்களுக்கு செல்லும்.

இந்த ரயில்களில் ஷாஜாஹாபாத் மற்றும் முராதாபாத் ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையே டெல்லி அதிகாரிகளின் சோதனைக் குழு திடீர் சோதனை நடத்தியது. இதில், டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த 14 உ.பி. போலீஸார், வங்கி மேலாளர்கள், வருவாய்த்துறை அதிகாரிகள், தாசில்தார்கள் உட்பட 326 பேர் சிக்கினர். இவர்களிடம் ரூபாய் ஒரு லட்சம் அபராதமாக வசூல் செய்யப்பட்டது.

இதில், சிக்கியவர்கள் தம் செய்த தவறை எண்ணி வருந்துவதை விடுத்து சோதனை செய்த அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்து மிரட்டி உள்ளனர். சிலர், தமக்கு நெருக்கமானவர்கள் மற்றும் உறவினர்கள் ரயில்வே துறை அதிகாரிகள் பணியில் இருப்பதாகக் கூறி தப்ப முயன்றுள்ளனர்.

இன்னும் சிலர் தமக்கு மத்திய அமைச்சர்களின் நெருக்கம் இருப்பதாகவும் கூறி மிரட்டியுள்ளனர். எனினும், அவர்கள் மிரட்டலுக்கு பயப்படாத சோதனை அதிகாரிகள் அனைவரும் உடனடியாக கைது செய்யப்படுவர் என மிரட்டியுள்ளனர். இதனால், வேறு வழியின்றி மன்னிப்பு கேட்டதுடன் மற்ற பயணிகள் முன்னிலையில் அவமானப்படாமல் இருக்க வேண்டி அபராதம் செலுத்தி உள்ளனர்.

டெல்லிக்கு மிக அருகாமையில் உள்ள உ.பி. ரயில் நிலையங்களில் இருந்து பணியின் நிமித்தமாக அன்றாடம் பயணம் செய்யும் பயணிகள் அதிகம். வழக்கமாக மாத சலுகைக்கான டிக்கெட்டுகள் பெற்று பயணம் செய்யும் பவர்களில் பலரும் அதைக் கூட வாங்காததுடன், எக்ஸ்பிரஸ் ரயில்களின் குளிர்சாதனப் பெட்டிகளிலும் பயணம் செய்து விடுவது உண்டு. இதற்காக, அப்பெட்டிகளின் டிக்கெட் பரிசோதகர்களை ‘கவனித்து’ விடுவதும் வாடிக்கையாக உள்ளது. இதுபோன்றவர்களிடம் தான், இன்று திடீர் சோதனை நடந்ததாகக் கூறப்படுகிறது.

இன்று அன்று | 1927 ஏப்ரல் 6: ரத்தக்கண்ணீர் படைப்பாளியின் பிறந்த தினம்....by சரித்திரன்

பெரியாருடன் தங்கராசு.

அது ‘ரத்தக்கண்ணீர்’ திரைப்படத்தின் இறுதிக் காட்சிகளில் ஒன்று. தொழுநோய் பாதிப்பால் அடையாளமே தெரியாமல் உருக்குலைந்து போன உருவத்துடன் எதிர்ப்படும் எம்.ஆர். ராதாவைப் பார்த்துப் பரிதாபப்பட்டு, உணவு தருவதற்காக வீட்டுக்கு அழைத்துவருவார் எஸ்.எஸ்.ஆர். திண்ணையில் அமர்ந்திருக்கும் எம்.ஆர். ராதா அந்த நிலையிலும் படு நக்கலாகப் பேசுவார்.

ராதா: ஏம்ப்பா, சாப்பாடு போடுறதும் போடுற. கறிச்சோறா போடு தம்பி, சாப்பிட்டு ரொம்ப நாளாச்சி...

எஸ்.எஸ்.ஆர்: அடடே, நாங்க கறி சாப்பிடறதில்லையேப்பா…

ராதா: ஏன், வீட்ல பத்தியமா?

எஸ்.எஸ்.ஆர்: இல்ல, நாங்க ஜீவகாருண்ய கட்சில சேந்திருக்கிறோம்.

ராதா: அடிசக்க! திங்கறதுக்குக் கூட கட்சி வச்சிருக்காண்டா யப்பா… ஜீவகாருண்ய கட்சின்னா என்ன தம்பி அர்த்தம்?

எஸ்.எஸ்.ஆர்: அதாவது, உயிர்களைக் கொலை செய்யக் கூடாது.

ராதா: ஆஹாங்!? நீங்க உயிரக் கொல்ற தேயில்லையா?

எஸ்.எஸ்.ஆர்: இல்லையே.

ராதா: ராத்திரில மூட்டப்பூச்சி கடிச்சா என்னப்பா செய்வீங்க?

எஸ்.எஸ்.ஆர்: ஒனக்கு உண்மையிலேயே திமிருதாண்டா…

இந்த வசனங்கள் எம்.ஆர். ராதாவின் பாத்திரம் எத்தகையது என்பதை உணர்த்திவிடும். முழுக்க முழுக்க அரசியல், சமூக விமர்சனங்கள், மூட நம்பிக்கைகளைப் பரிகசிக்கும் வசனங்கள் நிரம்பிய அந்தப் படம் வெளியானபோது, திரை ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். எனினும், பெரியாரின் கடவுள் மறுப்பு இயக்கம், சமூக நீதிக்கான போராட்டங்களின் தாக்கம் தமிழகத்தில் வெகுவாகப் பரவியிருந்த அந்தக் காலகட்டத்தில் ரத்தக்கண்ணீர் திரைப்படம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றது. முக்கியப் பாத்திரத்தில் நடித்த எம்.ஆர். ராதா, அநாயாசமான தனது நகைச்சுவையாலும், தொழுநோயாளியின் பாதிப்பின் அவஸ்தையைத் தத்ரூபமாகச் சித்தரிக்கும் தனது நடிப்பாலும் படத்தைத் தாங்கியிருப்பார். படத்தில் பேசப்பட்ட புரட்சிகரமான அந்த வசனங்கள் எம்.ஆர். ராதாவுடையவை என்று இன்றும்கூடப் பலரும் நினைக்கக் கூடும். ஆனால், அந்த வசனங் களை எழுதியவர் திருவாரூர் கே. தங்கராசு. படத்தின் கதை, திரைக்கதையும் அவர்தான்.

1927 ஏப்ரல் 6-ல் நாகப்பட்டினத்தில் பிறந்தவர் திருவாரூர் கே. தங்கராசு. அரசு ஊழியராகப் பணிபுரிந்த அவரது தந்தை குழந்தைவேலு, திராவிட இயக்கக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர். ஆனால், தங்கராசு அதற்கு நேரெதிராக இருந்தார். நெற்றியில் பட்டையுடன்தான் காட்சியளிப்பார். கோயில்களுக்குச் செல்வார். திருவாரூரில் பன்னீர் கம்பெனியில் வேலை பார்த்தபோது, கடையில் மாட்டப்பட்டிருக்கும் கடவுள் படங்களுக்குத் தீபாராதனை காட்டியது முதல் கோயில்களின் ஸ்தல புராணங்களைப் பாராயணம் செய்ததுவரை பக்திமான்களுக்குரிய எல்லாச் செயல்களையும் செய்தவர். பின்னாட்களில் பெரி யாரின் கருத்துகளால் கவரப்பட்டு, திராவிடர் கழகப் பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு பேசியபோது, புராணங்களை விமர்சிக்க, மேற்சொன்ன தனது பக்திமான் பண்புகள் உதவிகரமாக இருந்ததாக தங்கராசுவே கூறியிருக்கிறார்.

ஆசிரியர்களே வியக்கும் வகையில் ஆழ்ந்த கல்வியறிவு கொண்டிருந்த தங்கராசு, வறுமை காரணமாகப் பள்ளிப் படிப்பைப் பாதியில் விட நேர்ந்தது. திருவாரூரில் கணக்குப் பிள்ளையாக வேலைபார்த்தபோது, அவரது அறிவுத்திறன் அவரது பதவி உயர்வுக்கும் சம்பள உயர்வுக்கும் உதவியது. எனினும், அரசியல் நடவடிக்கையில் அவர் ஈடுபட்டது அவரது முதலாளிகளின் அதிருப்தியைச் சம்பாதித்துக் கொடுத்தது. இதனால், அவர் இரண்டு முறை வேலையை இழக்க நேரிட்டது. அப்போது அவர் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக மேடையில் பேசிவந்தார். பின்னாட்களில், திருவாரூர் நகர திராவிடர் கழகத்தின் தலைவர் சிங்கராயருடனான நட்பு, திராவிடர் கழகத்தின் பக்கம் தங்கராசுவை இழுத்துவந்தது. பெரியாரின் கூட்டங்களுக்குத் தவறாமல் செல்லத் தொடங்கினார்.

எம்.ஆர். ராதாவின் நாடகங்களில் கதை, வசனம் எழுதிவந்த கலைஞர் கருணாநிதி ஏதோ காரணத்துக்காக, அவரது குழுவிலிருந்து விலகிவிட, சிங்கராயர் மூலம் அந்த வாய்ப்பு தங்க ராசுவுக்கு வந்தது. ராசிபுரத்தில் உள்ள பேருந்து உரிமையாளரின் விருந்தினர் விடுதியில் ஒரு அறையில் தங்கியிருந்தபோது ‘ரத்தக்கண்ணீர்’ நாடகத்தை எழுதினார் தங்கராசு. 1949 ஜனவரி 14-ல் திருச்சியில் ‘ரத்தக்கண்ணீர்’ நாடகம் அரங்கேறியது. ஒவ்வொரு முறையும் நாடகத்தின் காட்சிகள் மற்றும் வசனங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டு, நாடகம் மெருகேற்றப்பட்டது.

சிவாஜி கணேசன் எனும் மாபெரும் கலைஞரை அறிமுகம் செய்த ‘பராசக்தி’ படத்தின் தயாரிப் பாளரான ‘நேஷனல் பிக்சர்ஸ்’-ன் பி.ஏ. பெருமாள், ‘ரத்தக் கண்ணீர்’ நாடகத்தைத் திரைப்படமாக எடுக்க முன் வந்தார். அந்தப் படத்துக்கு எம்.ஆர். ராதா வாங்கிய சம்பளம் ரூ. 1 லட்சம். தங்கராசுவுக்கும் கணிசமான தொகை சம்பளமாகக் கிடைத்தது.

அத்துடன், தனது வசனங்கள் மாற்றப்படக் கூடாது என்றும் உறுதியாக இருந்தார். இப்படிப் பல ஆச்சரியங்கள் இந்தப் படத்தின் பின்னணியில் உண்டு. ‘ரத்தக் கண்ணீர்’ படம் இன்று தொலைக் காட்சியில் ஒளிபரப்பப்பட்டாலும் சேனல் மாற்றாமல் பார்க்கும் ரசிகர்கள் உண்டு. பல முறை மேடையேற்றப்பட்ட நாடகம் இது.

‘பெற்ற மனம்’, ‘தங்கதுரை’ஆகிய படங்களுக்கும் கதை வசனம் எழுதியிருக்கிறார் தங்கராசு. எனினும், தன்னை ‘சினிமாக்காரன்’ என்று சொல்லிக்கொள்ள அவர் விரும்பவில்லை. தனது கருத்துகளைப் பரப்பக்கூடிய வாகனம்தான் சினிமா என்று உறுதியான நிலைப்பாட்டில் இருந்தவர். பெரியார் மீது பெரும் மதிப்பும், அவரது கொள்கைகளில் ஆழ்ந்த பற்றும் கொண்டவராகவே கடைசிவரை இருந்தார் தங்கராசு. அண்ணா, கருணாநிதி, எம்.ஆர். ராதா என்று பலருடன் நல்ல நட்பும், அதேசமயம் முரண்பட்ட கருத்துகளையும் கொண்டிருந்தார். தனது கருத்துகளை ஒளிவுமறைவில்லாமல் துணிச்சலாகப் பேசிய தங்கராசு, 2014 ஜனவரி 5-ல் தனது 87-வது வயதில் மறைந்தார்.

Medical PG student dies by suicide

Medical PG student dies by suicide  26.07.2026 Hyderabad: A 29-year-old postgraduate medical student died after allegedly jumping from the t...