Friday, December 4, 2015

மழை, வெள்ளத்தால் கடும் பாதிப்பு; தலைமைச்செயலக ஊழியர்கள் விடுப்பில் சென்றனர்

logo
சென்னை,

கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து சென்னையை புரட்டிப் போட்டுவிட்டது. சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. சென்னை மற்றும் புறநகரில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் இதனால் பாதிப்படைந்துள்ளனர்.

இந்தநிலையில் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு விடுப்போ அல்லது வீட்டில் இருந்து பணியாற்றுவதற்கான மாற்று ஏற்பாட்டையோ அந்த நிறுவனங்கள் அனுமதிக்கலாம் என்று அரசு பொது விடுமுறைக்கான அறிவுரையை நேற்று முன் தினம் வழங்கியிருந்தது.

இந்த நிலையில் தலைமைச் செயலகத்தில் நேற்று பெரும்பாலான ஊழியர்கள் பணிக்கு வரவில்லை. இதுகுறித்து அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘90 சதவீத ஊழியர்கள் பணிக்கு வரவில்லை என்று தெரிகிறது. அந்தத் துறையின் உயர் அதிகாரியிடம் விடுப்பு கேட்டு சென்றுள்ளனர்.

அரசு ஊழியர்களுக்கு பொது விடுப்பு அளிக்கப்படவில்லை என்றாலும், தேவைப்பட்டவர்கள் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்று அனுமதிக்கப்பட்டுள்ளது’’ என்றும் தெரிவித்தார்.

ஊழியர்கள் பலர் வரவில்லை என்பதால் தலைமைச்செயலகம் வெறிச்சோடி காணப்பட்டது.

Tuesday, December 1, 2015

கவனத்தின் உயிர்ச்சூழல்!

Published: December 1, 2015 08:58 ISTUpdated: December 1, 2015 08:58 IST

கவனத்தின் உயிர்ச்சூழல்!

வெ. ஸ்ரீராம்

மனதின் ஒரு பகுதி நமக்குள்ளிருந்து வெளியேறி, வேறொன்றில் லயித்துவிடுவதே கவனம்

சமூகவியல் பாடத்தில் கவனம் போதாது என்றது ஆறாவது வகுப்பு நோட்டுப் புத்தகத்தில் ஆசிரியரின் குறிப்பு. கடைக்குப் போகும்போது சட்டைப் பையில் இருக்கும் ரூபாய் நோட்டுகளின் மேல் கவனம், தெருவில் விளையாடும் போதும் சைக்கிள் ஓட்டும்போதும் கவனம் - இப்படி நம் வாழ்க்கைப் பாதையில் எத்தனை அன்றாட விஷயங்களில், எவ்வளவு விதங்களில் கவனம் நமக்குத் தேவையாக இருக்கிறது. ஆனால், இந்தக் ‘கவனம்’ என்பதை ஒரு ‘பொருளாக’, விலை கொடுத்து வாங்கப்படும் ‘பொருளாக’, நுகர்பொருளாகப் பார்க்க முடியுமா?

சற்றே நூதனமான அணுகுமுறையுடன் இந்தக் கருத்தை ஆராய்ந்து யீவ் சிதோன் என்ற பிரெஞ்சு எழுத்தாளர் எழுதிய ‘கவனத்தின் பொருளியல்’ என்ற புத்தகம் கடந்த ஆண்டு வெளிவந்தது. இவர் பிரான்ஸின் க்ரெநோபல் நகரத்தின் பல்கலைக்கழகத்தில் இலக்கியப் பேராசிரியரும்கூட. அதே ஆண்டு ‘கவனத்தின் உயிர்ச் சூழலுக்காக’ என்ற புத்தகத்தையும் எழுதி வெளியிட்டுள்ளார் சிதோன். ‘பொருளியல்’ என்பது ஒரு நாட்டின் அல்லது ஒரு சமூகத்தின் நிதிநிலை, அங்குள்ள நுகர்பொருட்கள், அவற்றின் வணிகம் அல்லது சந்தை இவற்றிடையேயான தொடர்பு பற்றிய துறை. ஆனால், மக்களின் ஒட்டுமொத்த கவனம் என்ற பொருளை ஒரு சிலருடைய சுயநலத்துக்காகச் சுரண்டல் செய்வதை ஆராய்கிறது இந்தப் புத்தகம். அதுவும் குறிப்பாக, தகவல் தொழில்நுட்பத்தின் மிக வேகமான வளர்ச்சியின் உதவியால் சமூகத்தில் ‘கவனம்’ நுகர்பொருளாக்கப்படுகிறது என்ற கருத்தாக்கத்தை இவர் முன்வைக்கிறார்.

கவனத்தின் நெருக்கடி

ஆனாலும், இந்தப் பிரச்சினை தகவல் தொழில்நுட்பத் துறை வளர்ச்சிக்குப் பிறகுதான் தோன்றியதென்று சொல்ல முடியாதென்கிறார் இந்த ஆசிரியர்.

1880-களிலேயே, மேலைநாடுகளில் தொழில் புரட்சியைத் தொடர்ந்து நிலவிய முதலாளித்துவச் சூழலிலேயே ‘கவன’த்துக்கு ஏற்பட்ட நெருக்கடியைப் பற்றி ஜோனாதன் க்ரேரி என்ற அமெரிக்க ஆய்வாளர் முன்வைத்த கருத்தை இவர் சுட்டிக்காட்டுகிறார். அன்றைய நவீன மயமாக்கப்பட்ட தொழிற்சாலைகளில், சீராக நகர்ந்துகொண்டிருக்கும் மேஜைகளின் முன்னால் வரிசையாக நின்றுகொண்டிருக்கும் தொழிலாளிகள் ஒரு இயந்திரத்தின் உதிரி பாகங்களை ஒன்றன்பின் ஒன்றாகப் பொருத்தும்போது, அவர்களுடைய கவனமும் அவர்களைக் கண்காணிக்கும் மேற்பார்வையாளரின் கவனமும் உற்பத்திப் பெருக்கத்திலேயே இருந்த நாட்களிலேயே ‘கவனம்’நெருக்கடியை எதிர்கொண்டது என்கிறார். உற்பத்தி பெருகப்பெருக, அவற்றைச் சேர்த்து வைப்பது, சேர்த்து வைத்ததை விற்றுத் தீர்ப்பது, விற்றுத் தீர்ந்த இடத்தில் மீண்டும் நிரப்புவது, இந்தச் சங்கிலி செயல்பாடுகளுக்கு உதவும் வகையில் விளம்பரங்கள் என எல்லாத் தளங்களிலும் கவனம் திரும்பியபோது ஏற்பட்ட நெருக்கடி.

மக்களின் கவனக் கண்காணிப்பின் நிர்ப்பந்தங்கள் ஊடகக் கண்டுபிடிப்புகளுக்கு வித்திட்டன. ஊடகங்களுடைய வளர்ச்சிக்கு விளம்பரதாரர்களுடைய உதவி தேவைப்பட ஆரம்பித்தவுடன், விளம்பரங்கள் ஆக்கிரமிக்கும் நேரமும் இடமும் விரிவடையத் தொடங்கின. நுகர்வோரின் கவனத்தைக் கவர்ந்து, கட்டுக்குள் வைத்து நிர்வகிப்பதில் போட்டி வளர்ந்தது. ‘‘மக்கள் கவனத்தை எப்போதும் தன் கட்டுக்குள் இருத்தும் நெருக்கடியின் வரலாறுதான் முதலாளித்துவத்தின் வரலாறு’’ என்று குறிப்பிடுகிறார் இவர்.

உள்ளுணர்வின் அங்கம்

தீவிரமான, ஒருமுகப்படுத்தப்பட்டது ‘நல்ல கவனம்’, பல திசைகளை நோக்கிச் சிதறும் ‘மோசமான கவனம்’ என்று மனிதர்களின் கவனத்தை மேம்போக்காகத் தரம் பிரிக்க முடியாது. மனித குலத்துக்கு இந்த இருவிதமான கவனங்களுமே அவசியமானவை என்று ‘கவனத்தின் உயிர்ச்சூழலுக்காக’ என்ற தன்னுடைய அடுத்த புத்தகத்தில் விளக்குகிறார் யீவ் சிதோன். ஒருமுகக் கவனத்தைவிட, பல திசைகளிலும் கவனம் கொள்வதென்பது மனித குலத்துக்கே அடிப்படையான ஒன்று. ஏனென்றால், அது உள்ளுணர்வைச் சார்ந்தது. பன்முகக் கவனச் சிதறலைக் குறித்து நரம்பியலாளர்களும் உளவியலாளர்களும் இன்னும் ஆராய்ந்துகொண்டிருக்கிறார்கள். நாம் ஒன்றின் மேல் கவனத்தைச் செலுத்திக்கொண்டிருக்கும்போதுகூட, வேறு பல திசைகளிலும் நம் கவனம் செயல்படுகிறது. உதாரணமாக, ஒரு சிறு கூட்டத்தில் ஒருவருடன் நாம் மும்முரமாகப் பேசிக்கொண்டிருக்கும்போது, நமக்குப் பின்னாலிருந்து யாராவது நம்மைப் பெயர் சொல்லி அழைத்தால், அதுவும் நமக்குக் கேட்கிறது; திரும்பியும் பார்க்கிறோம். உளவியலாளர்கள் இதை ‘காக்டெய்ல் பார்ட்டி விளைவு’ என்று சொல்கிறார்கள். நம்முடைய மனத்தின் ஒரு பகுதியில், தானியங்கிக் கவனம் ஒன்று எப்போதும் அனிச்சையாக 360 டிகிரி கோணத்தில் விழிப்புடன் செயல்படுகிறது, ஆதிமனிதனுக்கு இருந்ததைப் போல. ஆதி மனிதனுக்கு அது வாழ்வா, சாவா என்ற பிரச்சினை. ஒரு சிறிய சத்தம், வானிலையில் லேசான மாற்றம், கொடிய மிருகம் ஒன்றின் அன்மை, விநோதமான வாடை இவற்றையெல்லாம் இனம் கண்டுகொள்ள அவனுடைய ஐம்புலன்களும் விழிப்புடன் இருக்க வேண்டியதாயிற்று. இன்றைய ஊடக ஆக்கிரமிப்புச் சூழலில் ஸ்மார்ட் போன் போன்ற ‘செயற்கைப் புலன்’அந்த வேலையைச் செய்கிறது. இது ஒரு வசதி; ஆபத்தானதும்கூட. (செல்போனில் பேசிக்கொண்டே விபத்துக்குள்ளான சம்பவங்கள் நவீன உலகின் மறுபக்கம்.)

கடந்த 50 ஆண்டுகளில், பொருளாதார வளர்ச்சியில் மட்டும் கவனத்தை ஒருமுகப்படுத்தாமல் மற்ற தேவைகளிலும் ஓரளவாவது கவனத்தைச் ‘சிதற’ விட்டிருந்தோமானால், உயிர்ச்சூழல் சேதங்களைக் குறித்தும், இதே பொருளாதார வளர்ச்சி உருவாக்கிய சமூகப் பிரச்சினைகளைக் குறித்தும் ஒருவேளை நம்முடைய கவனம் பயனுள்ள வகையில் செயல் பட்டிருந்திருக்கும் என்கிறார் அவர்.

எப்படி வகைப்படுத்துவது?

‘தனக்குப் புறத்தேயிருக்கும் ஒன்றை நோக்கி மனத்தைச் செலுத்துவது’ என்பதுதான் ‘கவனம்’ என்கிறார் ஆசிரியர். (லத்தீன் மொழியிலிருந்து பிரெஞ்சு, ஆங்கிலத்துக்கு வந்திருக்கும் இந்தச் சொல்லுக்கு சொற்பிறப்பியல் வரையறையும் இதுதான்.) அதாவது, நம்முடைய மனதின் ஒரு பகுதி நமக்குள்ளேயிருந்து வெளியேறி, வேறொன்றில் லயித்துவிடுகிறது. ஒருவிதத்தில் இது ஒரு ‘அந்நியமாதல்’. ஆனாலும், அழகியல் ரீதியினாலான அனுபவங்களின் அற்புதமே அதுதான். ஒரு புத்தகம், இசை அல்லது திரைப்படத்தினால் ஈர்க்கப்பட்டு, தானாகவே ஒருவர் தன் அகவயத் தன்மையை விட்டுக்கொடுப்பது. இருந்தாலும், நமக்குள் சில மாறுதல்களை அது தோற்றுவித்து நம்மை வளப்படுத்துகிறது. வெளியுலகத்துடனான நம்முடைய உறவுகளுக்கு இந்தக் கவன ஈர்ப்பு தேவையாக இருப்பதால், இந்த அந்நியமாதலை மறுக்கும் வாழ்க்கை மனிதாபிமானமற்றதாக ஆகிவிடுகிறது என்ற கருத்தாக்கத்தை சிதோன் தன் புத்தகத்தில் முன்வைக்கிறார்.

க்ரெநோபல் நகர மேயர், நகரத்தின் பல பகுதிகளில், குறிப்பாக மக்கள் காத்துக்கொண்டிருக்கும் பொதுஇடங்களில், வித்தியாசமான தானியங்கி இயந்திரங்களை வைத்துள்ளார். ஒரு நாணயத்தை அதில் போட்டு, பித்தானை அமுக்கினால், பிஸ்கெட் பாக்கெட் அல்லது குளிர்பான டின்னைப் போல, அவற்றுக்குப் பதிலான இரண்டு அல்லது மூன்று தாள்கள் வரும். அவற்றில் ஒரு சிறுகதை இருக்கும். காத்திருக்கும்போது ‘ஸ்மார்ட் போனை’யே கவனித்துக்கொண்டு இருக்காமல் சிறுகதை ஒன்றைப் படிக்கலாம். தேர்வு மக்களுடையதே!

- வெ. ஸ்ரீராம், பிரெஞ்சு-தமிழ் மொழிபெயர்ப்பாளர், இருமுறை செவாலியே விருது பெற்றவர்.

தொடர்புக்கு: ramcamus@hotmail.com

எதிர்பார்க்கப்பட்ட ஊதிய உயர்வு

Published: November 24, 2015 09:09 ISTUpdated: November 24, 2015 09:09 IST


ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் வெளியாகிவிட்டன. இப்போது பதவியில் இருப்போருக்கும் ஓய்வு பெற்றவர்களுக்கும் பல நன்மைகளை இக்குழு பரிந்துரைத்திருக்கிறது. ஊதியம், படிகள், ஓய்வூதியம் ஆகியவற்றில் 23.55% உயர்வு பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. ஆறாவது ஊதியக்குழு 40% உயர்வைப் பரிந்துரைத்திருந்ததை ஒப்பிடும்போது இது குறைவு என்பதுடன் ஊழியர்களுக்கு ஏமாற்றத்தையும் அதிருப்தியையுமே தந்திருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. நாட்டின் இப்போதைய பொருளாதார நிலைமை வலுவற்று இருப்பதுடன் நிதி நிலையும் நெருக்கடியில் இருப்பதை அனைத்துத் தரப்பினருமே அறிவர். அடிப்படை ஊதியத்தில் 16%, படிகளில் 63%, ஓய்வூதியத்தில் 24% என்று உயர்வு பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. பணியில் இருப்போர் 47 லட்சம், ஓய்வு பெற்றோர் 52 லட்சம் என்பதால் இதற்காகும் செலவு மத்திய அரசுக்கு நிச்சயம் ஒரு சுமையாகத்தான் இருக்கும். இந்தப் பரிந்துரைகள் அப்படியே ஏற்கப்பட்டு அமல்படுத்தப்பட்டால் மொத்த உற்பத்தி மதிப்பில் 0.65% அளவுக்குச் செலவு அதிகரிக்கும். மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதியம் உயர்த்தப்பட்டால் அதை அப்படியே மாநில அரசு ஊழியர்களுக்கும் உயர்த்தி வழங்குவது சில மாநிலங்களில் மரபாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. மத்திய அரசுக்கு மட்டுமல்ல, மாநிலங்களுக்கும் இதனால் செலவு அதிகரிக்கும். பொதுவாக, இப்போது சரக்குகளின் விலை குறைவாக இருப்பதால் இந்த ஊதிய உயர்வால் விலைவாசியும் கடுமையாக உயரக்கூடிய ஆபத்து இல்லை. மத்திய அரசுக்கு இந்தப் பரிந்துரைகளால் சுமார் ரூ.1.02 லட்சம் கோடி கூடுதல் செலவாகும். ஆனால், இந்தச் செலவு நாட்டின் பொருளாதார வளர்ச்சியோடு தொடர்புடையது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இதனால் உற்பத்தி, விற்பனை, நுகர்வு என்ற மூன்றும் அதிகரிக்கும். வேலைவாய்ப்பையும் பெருக்கும். அதே சமயம், விலைவாசி சற்றே உயர்ந்தால் இந்திய ரிசர்வ் வங்கி கடந்த ஓராண்டாகக் கடைப்பிடித்த பணவீக்கக் கட்டுப்பாடு என்ற பத்தியம் அனைத்தும் பலனில்லாமல் போய்விடும். ஒவ்வொருமுறையும் ஊதியக்குழு பரிந்துரைகள் அமலாக்கப்பட்டபோதும், சில்லறை விற்பனை விலையில் அதிகரிப்பு ஏற்பட்டு பணவீக்கம் உயர்ந்ததே நம்முடைய அனுபவம். எனவே, அது மீண்டும் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது.

குறைந்தபட்ச ஊதியத்துக்கும் அதிகபட்ச ஊதியத்துக்கும் இடையிலான வேறுபாடுகளைக் குறைக்க வேண்டும். ஏகப்பட்ட ஊதிய நிலைகள் இருக்கக் கூடாது என்று ஊழியர்கள் கோரியிருந்தனர். கிரேடு பே, பே பேண்ட் ஆகியவை நீக்கப்பட வேண்டும் என்று ஊதியக்குழு பரிந்துரைத்துள்ளது. பழைய ஊதிய விகிதங்களிலிருந்து புதிய ஊதிய விகிதங்களுக்கு மாறுவதற்கு ஊதியத்தை எப்படி உயர்த்திக் கணக்கிட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. அதைச் சரியாகக் கணக்கிடாவிட்டால் இப்போதுள்ள ஊதிய விகித வேறுபாடுகள் அப்படியே தொடரும். பழைய ஓய்வூதியதாரர்களுக்கும் நடப்பு ஓய்வூதியதாரர்களுக்குமான ஓய்வூதியத்தைச் சீரமைக்க எத்தனை ஆண்டுகள் பணியில் இருந்தார், எத்தனை ஊதிய உயர்வுகளைப் பெற்றார் என்பதன் அடிப்படையில் தீர்மானிக்கக் கூறியிருக்கிறது. இதெல்லாமும் கவனத்தில் கொள்ள வேண்டியவை.

ஒவ்வொரு முறை அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வுப் பரிந்துரைகள் வரும்போதும் மக்கள் எழுப்பும் கேள்விகள் இப்போதும் தொடர்கின்றன. சமூகத்தின் ஏனைய தரப்பினருக்குமான ஊதிய உயர்விலும் அரசு எப்போது இப்படி அக்கறை காட்டத் தொடங்கும்?

சான்ஃபிரான்சிஸ்கோவுக்கு நேரடி விமான சேவை நாளை தொடக்கம்


By சென்னை,


First Published : 01 December 2015 02:41 AM IST


புதுதில்லியில் இருந்து அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள சான்ஃபிரான்சிஸ்கோ நகருக்கு நேரடி விமான சேவையை ஏர் இந்தியா நிறுவனம் புதன்கிழமை (டிசம்பர் 2) தொடங்கவுள்ளது.
புதன், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும். ஏஐ173 எனும் விமானம் புது தில்லி விமான நிலையத்திலிருந்து இந்திய நேரப்படி அதிகாலை 2.45 மணிக்கு புறப்பட்டு கலிஃபோர்னியா நேரப்படி காலை 6 மணிக்குச் சென்றடையும். 16 மணி நேரம் 45 நிமிஷங்கள் பயண நேரமாகும்.
சென்னையில் உள்ள பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக ஏஐ 043 என்ற விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விமானம் இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு, இரவு 11 மணிக்கு புதுதில்லி விமான நிலையத்தைச் சென்றடையும்.
புதிய சேவை தொடங்கப்பட்டதை முன்னிட்டு, இந்த விமானத்தில் பயணம் செய்வோருக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படவுள்ளதாக ஏர் இந்தியா நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

தென்றல் தவழட்டுமே....

logo

கிராமங்களில் ஒரு பழமொழி சொல்வார்கள். திருமணங்கள் பகையைமுறித்து, நல்லுறவுக்கு வழிவகுக்கும் என்பதுதான் அது. அதுபோல, ஒரு நிலைமைக்கான அடையாளம் இப்போது தெரிகிறது. பா.ஜ.க.வுக்கும், காங்கிரசுக்கும் நல்லுறவு இல்லாத நிலையில் இதுவரை பாராளுமன்ற கூட்டத்தொடர்களெல்லாம் அமளியிலேயே நடந்தது. அதுவும் ராஜ்யசபையில் பா.ஜ.க.வுக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில், காங்கிரஸ் ஆதரவு இல்லாமல், பல மசோதாக்கள் லோக்சபையில் பா.ஜ.க.வின் பெரும்பான்மையால் நிறைவேற்றப்பட்டு, ராஜ்யசபையில் நிறைவேற்றமுடியாமல் திரிசங்கு சொர்க்கம் நிலையில் இருக்கின்றன.

இந்த நிலையில், இப்போது குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது. இது ஆக்கபூர்வமான கூட்டத்தொடராக நடக்கும் என்பதற்கான விதை ஒரு திருமண வீட்டில் விதைக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் அபிஷேக்சிங்வியின் மகன் திருமணம் டெல்லியில் நடந்தது. அந்த திருமணத்துக்கு நரேந்திர மோடியும் வந்திருந்தார். முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கும் வந்திருந்தார். திருமண வீட்டில் இருவரும் யதேச்சையாக சந்தித்தபோது, பிரதமர் சரக்கு சேவைவரி உள்பட முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற துணையாக இருக்க கேட்டுக்கொண்டார். மன்மோகன்சிங்கும் இதுபற்றி சோனியாகாந்தியிடமும் பேசலாமே என்று கருத்து தெரிவித்தார். இதேபோல, மற்றொரு தொடர்பும் நிதி மந்திரி அருண்ஜெட்லி தன் மகள் திருமணத்துக்காக ராகுல்காந்திக்கு அழைப்பு கொடுக்க சென்றபோது ஏற்பட்டது. இந்த இரு திருமணங்களும் தற்போது ஒரு புதியபாதைக்கான வாசலைத் திறந்துவிட்டன.

கடந்தவாரம் செவ்வாய்க்கிழமை பிரதமர் அலுவலகத்தில் இருந்து சோனியாகாந்திக்கும், மன்மோகன்சிங்குக்கும், பிரதமர் வீட்டுக்கு ஒரு தேநீர் விருந்துக்காக அழைப்பு விடுக்கப்பட்டது. டெல்லியில் பல அரசியல் மாற்றங்களுக்கு தேநீர் விருந்துகள்தான் காரணமாக இருந்தன. இந்த தேநீர் விருந்து அழைப்பை சோனியாகாந்தியும், மன்மோகன்சிங்கும் ஏற்றுக்கொண்டு, பிரதமர் வீட்டுக்கு சென்றனர். அங்கு மனம்திறந்து இருதரப்பும் பேசினர். சரக்கு சேவைவரி மசோதா, காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி கொண்டுவந்த மசோதா, அதில் சில மாற்றங்களை பா.ஜ.க. கொண்டு வந்துள்ளது. இந்த மசோதா நிறைவேற்றப்படாமல் இருக்கிறது. சரக்கு சேவைவரி 22 சதவீதம் விதிக்கப்படவேண்டும் என்று பா.ஜ.க. சொல்கிறது. இது 18 சதவீதம்தான் இருக்கவேண்டும் என்று காங்கிரஸ் கோருகிறது. உற்பத்தி செய்யப்படும் மாநிலங்கள் ஒரு சதவீதம் கூடுதல்வரி விதிக்கலாம் என்று பா.ஜ.க. சொல்கிறது. அது கூடாது என்று காங்கிரஸ் சொல்கிறது. சரக்கு சேவைவரி கவுன்சிலில் மூன்றில் ஒருபங்கு இடம் மத்திய அரசாங்கத்துக்கு வேண்டும் என்று பா.ஜ.க. சொல்கிறது. நான்கில் ஒருபங்கு போதும் என்று காங்கிரஸ் சொல்கிறது.

மது, புகையிலை பொருட்கள் விற்பனையை குறைந்தது 5 ஆண்டுகளுக்கு சரக்கு சேவைவரிக்குள் கொண்டுவரக்கூடாது என்று பா.ஜ.க.வும், 5 ஆண்டுகளுக்குள் கொண்டுவரவேண்டும் என்று காங்கிரசும் கூறுகிறது. இந்த தேநீர் விருந்தின்போது இருதரப்பும் பேசிய கருத்துகள் தொடர்பாக அவரவர் கட்சிகளுடன் கலந்து ஆலோசித்துவிட்டு, ஐ.நா. பருவநிலை மாற்ற உச்சிமாநாடு முடிந்து பாரீசில் இருந்து பிரதமர் வந்தவுடன், நாளை அல்லது நாளை மறுநாள் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடந்து இந்த பிரச்சினைக்கு ஒரு சுமூகமுடிவு காணப்படவேண்டும் என்பதுதான் நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாகும். இரு கட்சிகளுமே பொருளாதார வளர்ச்சியை நோக்கி செல்லும் சீர்திருத்த கட்சிகள் என்ற முறையில், இனி பாராளுமன்றத்தில் நல்லுறவு, நல்லிணக்கம் தழைக்கட்டும். மக்களுக்கு சேவை என்ற குறிக்கோளை நோக்கி இந்த குளிர்கால கூட்டத்தொடரில் வெப்பம் வேண்டாம், குளுமை நிலவட்டும் என்பதுதான் மக்களின் கோரிக்கை.

Monday, November 30, 2015

தண்ணீரில் தத்தளிக்கும் தலைநகரம்..THE TAMIL HINDU

மனிதவளம், வேலைவாய்ப்பு, போக்குவரத்து வசதி, பெருகும் குடியிருப்புகள், விரியும் விஸ்தீரணம் என மாநிலத் தலைநகரத்துக்கான அத்தனை அம்சங்களும் நிறைந்தது நமது சென்னை மாநகரம். வெளியூர்கள், வெளிமாநிலங்கள் என எங்கிருந்து எத்தனை பேர் வந்தாலும் வந்தாரை வாழவைக்கும் தலைநகரமாக தனிச்சிறப்புடன், தனித்துவத்துடன் இன்றளவும் திகழ்கிறது சென்னை.
இவ்வளவு பெருமைகள் வாய்ந்த சென்னை மாநகரம் சமீபத்திய கன மழையைத் தாக்குப்பிடிக்க முடியா மல் மாநரகமாகிப்போனது. சாலை கள், சுரங்கப்பாதைகள், தெருக்கள் மட்டுமல்லாது வீடுகளிலும் புகுந்தது மழைநீர். திரும்பிய பக்கமெல்லாம் வெள்ளம். வாகனங்கள் சென்ற சாலைகளில் படகுகள் மிதந்த காட்சி. வெள்ளத்தின் நடுவே சிக்கிய மக்களை ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்கவேண்டிய சூழல்.
சமூகத்தின் கீழ்தட்டு மக்கள் மட்டு மின்றி, நடுத்தர மக்கள், பணக்கார வர்க்கம் என அனைத்து தரப்பினரை யும் தயவுதாட்சண்யமின்றி வெளியே துரத்தியது வீடுகளில் அடாவடியாகப் புகுந்த வெள்ளம். கட்டமைப்பு வசதி கள் மிகுந்த, மாநிலத் தலைநகரில் ஏன் இந்த நிலை? 375 ஆண்டுகள் பழமையான சென்னையின் இந்த நிலைக்கு காரணம் என்ன? இதை எப்படி மாற்றுவது?
பூகோள அமைப்பின்படி பார்த்தால், தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகள், கடல் மட்டத்தைவிட அதிக உயரத்தில் உள்ளன. கடலை ஒட்டிய சென்னை, நாகை, கடலூர் மாவட்டங்கள் கடல் மட்டத்தில் இருந்து குறைந்த உயரத்தில் உள்ளன. சென்னை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகள் சராசரியாக 2 முதல் 10 மீட்டர் உயரத்தில் உள்ளன. வெள்ளத்தால் அதிக பாதிப்பு ஏற்படுவதற்கு இதுவும் காரணம் என்று கூறப்படுகிறது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் 1,450 ஏரிகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு, சென்னையில் தி.நகர், வள்ளுவர் கோட்டம், நந்தனம் உள்ளிட்ட இடங்களில் 36 ஏரிகள் இருந்துள்ளன. நகரமயமாக்கல் அதிகரிப்பால், இவை அழிந்துவிட்டன. புறநகர் பகுதிகளில் உள்ள ஏரிகள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளன.
இதில் சோழவரம், செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஆகிய 4 ஏரிகள்தான் சென்னையின் குடிநீர் ஆதாரங்கள். இவை தவிர, கொரட்டூர், போரூர், வளசர வாக்கம், விருகம்பாக்கம், வேளச் சேரி, அயனம்பாக்கம், ஆதம்பாக்கம், பல்லாவரம், உள்ளகரம், கீழ் கட்டளை, ஜமீன் பல்லாவரம், செம் பாக்கம் ஏரிகள் அந்தந்த இடங் களின் நீர்ப்பிடிப்பு பகுதிகளாக உள்ளன. இவைதான் நீலத்தடி நீர் ஆதாரமாகவும் உள்ளன.
ஆனாலும், தொடர்ந்து நடக்கும் ஏரி ஆக்கிரமிப்புகளும், மழைநீர் வடிகால்கள் அழிக்கப்பட்டதும்தான் சென்னையின் வெள்ள பாதிப்புக்கு காரணம் என்கின்றனர் பொதுப்பணித் துறையினர்.
தாழ்வான பகுதிகளில் சேரும் மழைநீர், கால்வாய்கள் வழியாக குளத்தை அடையும். உபரிநீர் அங்கிருந்து கால்வாய் வழியாக கடலைச் சென்றடையும். பொது வாக நீர்நிலைகளில் பாசனத் துக்காக நீரை வெளியேற்றும் அமைப்புகளும், ஏரி நிரம்பினால் தானாக உபரிநீர் வெளியே றும் ‘கலங்கல்’ என்ற அமைப்பும் இருக்கும். தற்போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட் டங்களில் பெரும்பாலான ஏரிகளில் இந்த கலங்கல் இல்லை. மேலும், மழைநீர் வெளியேறும் கால்வாய்கள், கடலுக் குள் செல்லும் முகத்துவாரங்கள் குறுகிவிட்டதாலும் வெள்ளநீர் வடிய தாமதமாகிறது என்கின்றனர் பொதுப்பணித் துறையினர்.
இதுகுறித்து பொதுப்பணித் துறை பாசனப்பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஏரிகளில் நீர் நிரம்பினால், அதன் அருகே உள்ள நஞ்சை, புஞ்சை நிலங்கள் வழியாக உபரிநீர் வெளியேறும். அந்த நிலங்கள் தற்போது குடியிருப்புகள் ஆகிவிட்டன. சென்னையில் சிஐடி நகர், அண்ணா நகர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், முகப்பேர் போன்ற பகுதிகளில் உள்ள நிலங்களின் மூல ஆவணங்களை ஆய்வு செய்தால் அந்த நிலம் எத்தகையது என்று தெரியவரும்.
விவசாய நிலங்கள் அனைத்தும் படிப்படியாக கான்கிரீட் கட்டிடங்களாகவும், சிமென்ட், தார்ச் சாலைகளாகவும் மாறிவிட்டன. தொடர்ந்து நீர்நிலைகளும் அழிக்கப்படுவதால், மழைநீர் வெளியேற வழியில்லை. இதனால்தான், மழை வந்தால் சென்னை தத்தளிக்கிறது.
இதற்கு முன்பு 1943, 1976, 2005-ம் ஆண்டுகளில் ஏற்பட்ட வெள்ளத்தை கணக்கிட்டு, பெருநகர முழுமைத் திட்டம் தயாரிக்கப்பட்டது. அந்த திட்டத்தில், மழைநீர் வடிகால் குறித்தும் திட்டமிடப்பட்டது. அதில், வட சென்னைக்கு அளிக்கப்பட்ட திட்டம் கிடப்பில் உள்ளது. அம் பத்தூர், கொரட்டூர், மாதவரம், செம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் கால்வாய்கள் அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணிகள், நீதிமன்ற வழக்குகளால் நிற்கின்றன.
தாம்பரம் உள்ளிட்ட பகுதிக ளில் மழைநீர் வடிகால்கள் ஆக்கிரமிக் கப்பட்டதால், சாலைகளில் மழைநீர் தேங்குகிறது. மேலும், சென்னையில் அமைக்கப்படும் பல்வேறு மழை நீர் கால்வாய்கள் முறையாக இணைக் கப்படாமல் உள்ளன.
இப்போதுள்ள ஏரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் அடிப்படையில், 11 டிஎம்சி நீரை மட்டுமே சேமிக்க முடியும். உபரிநீர்கூட கால்வாய்கள் மூலமாக மட்டுமே கடலில் கலக்க வேண்டும். தற்போது கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. கால்வாய்கள் மூலம் கடலுக்குள் தண்ணீரை கொண்டு செல்லும் அடையாறு, கூவம், கொசஸ்தலை போன்ற ஆறுகளும் சுருங்கிவிட்டன. இவற்றை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவர, அதிக அளவில் நிலம் கையகப்படுத்த வேண்டியிருக்கும். அப்படி செய்தால் மட்டுமே குடியிருப்புகளில் தண்ணீர் தேங்குவதை தடுக்க முடியும்!
கால்வாய்கள் பராமரிப்பு அவசியம்
- வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன்
செயற்கைக்கோள் தகவல்களைக் கொண்டு சென்னையில் பாதாள சாக்கடைகள், சாலைகள், கட்டிடங்கள், மழைநீர் தேங்கும் பகுதிகள் குறித்து எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வு செய்து விரிவான அறிக்கையை 4 ஆண்டுகளுக்கு முன்பு அரசிடம் அளித்தது. கோடையில் தண்ணீர் பற்றாக்குறையும், மழைக்காலத்தில் வெள்ளமும் சென்னையில் வழக்கமாகிவிட்டது.
இதை தவிர்க்க மழைநீர், கழிவுநீர் கால்வாய்களை ஆண்டுதோறும் தூர்வாரி பராமரிக்க வேண்டும். அரசின் மழைநீர் சேமிப்பு திட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டும். மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து வரைபடம் தயாரிப்பது, எதிர்கால தடுப்பு நடவடிக்கைகளுக்கு உதவும்.
வேளச்சேரி பாதிக்கப்பட்டது ஏன்?
அண்ணா பல்கலைக்கழகத்தின் தொலை உணர்வு மைய இயக்குநர் பேராசிரியர் எஸ்.எஸ்.ராமகிருஷ்ணன்
சென்னை ஏற்றத்தாழ்வு இல்லாத சமதளப் பகுதி. எனவே, மழைநீர் மண்ணில் ஊறுவதற்கும், பூமிக்குள் இறங்கவும் போதிய நேரம் இருக்காது. மேலும், மழைநீர் சென்றடைய நகருக்குள் ஏரிகள் எதுவும் இல்லை. புறநகர் பகுதிகளிலும் நீர்நிலைப் பகுதிகள் அதிகம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
வேளச்சேரி, தரமணி பகுதியில் பாதாள மழைநீர் வடிகால் வசதி அமைக்கும் வகையில் விஜயநகர் தொடங்கி பக்கிங்ஹாம் கால்வாய் வரை மேற்கொள்ளப் பட்ட பணிகள் முடிக்கப்படவில்லை. அதனால்தான் வேளச்சேரி பகுதியில் இந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மழைக்காலம் தொடங்கும் முன்பாகவே மழைநீர் வடிகால் வசதிகள் சிறப்பாக ஏற்படுத்தப்பட வேண்டும். மழைநீர் செல்லும் பகுதிகளை சுத்தப்படுத்தி, சரிசெய்ய வேண்டும். ஏரிகள், நீர்ப்பாதைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மும்பையில் இதுபோன்ற பணிகளை ஜூன் மாதமே தொடங்கிவிடுகின்றனர். மழைநீர் வடிகால்களை சரிசெய்தாலே சென்னையில் மழைவெள்ள பிரச்சினை சரியாகிவிடும்.
மக்கள் செய்யவேண்டியது என்ன?
- அண்ணா பல்கலைக்கழகத்தின் பேரிடர் தணிப்பு மற்றும் மேலாண்மை மைய இயக்குநர் பேராசிரியர் டி.திருமலைவாசன்
சென்னையில் 500 சதுர கி.மீ. சுற்றளவில் எந்தெந்த பகுதி எவ்வளவு உயரத்தில் இருக்கிறது என்று ஆகாய மார்க்கத்தில் லேசர் ஸ்கேனர் உதவியுடன் 2009-ல் தமிழக பொதுப்பணித் துறை, மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறைகளின் நிதி உதவியுடன் கணக்கு எடுத்தோம். மழைநீர் வடிகால் வசதி பணிக்காக அந்த கணக்கெடுப்பு தகவல் பொதுப்பணித் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. மழைநீர் வடிகால் வசதி திட்டத்துக்காக இந்த விவரங்களை மாநகராட்சியும் பயன்படுத்திக்கொண்டது.
சென்னையின் மழை வெள்ளப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் மக்களின் ஒத்துழைப்பு அவசியம். மழைநீர் வடிகால்களில் குப்பைகளை போடக்கூடாது. அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகளைச் சுற்றி சிறிதுகூட இடம் விடாமல் சிமென்ட் தளம் போடுவதை தவிர்க்க வேண்டும். பூமிக்குள் மழைநீர் இறங்க கொஞ்சமாவது மண் பரப்பை விட்டுவைக்க வேண்டும்.
காலி இடங்களில் நீர்த்தேக்கம்
- பொதுப்பணித் துறை முன்னாள் சிறப்பு தலைமை பொறியாளர் அ.வீரப்பன்
மழைநீர் தேங்காமல் ஓடும் வகையில் வாட்டத்துடன் வடிகால்கள் கட்டப்படாததும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்த 36 ஏரிகள், 100 குளங்களை ஆக்கிரமித்து தூர்த்ததும்தான் இப்போதைய பிரச்சினைக்கு முக்கிய காரணம்.
மழைநீர் வடிகால்களை குழாய்கள் மூலம் இணைத்து, அருகே உள்ள கால்வாய்கள் வழியாக கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய், ஓட்டேரி நல்லா ஆகியவற்றில் இணைத்து முறையாக பராமரிக்கலாம். திருவொற்றியூர், வில்லிவாக்கம், கொளத்தூர், திருநின்றவூர், தாம்பரம், முடிச்சூர், மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, பெருங்குடி, வேளச்சேரி போன்ற பகுதிகளில் காலியாக உள்ள நிலங்களில் 100 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சுரங்க நீர்த்தேக்கம் அமைக்கலாம்.
இதற்கு செலவு அதிகம் ஆகும் என்றாலும்கூட, மழை வெள்ளம், தண்ணீர் தட்டுப்பாடு என்ற இரண்டு பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வு கிடைக்கும்.
தொற்றுநோய் பரவும் அபாயம்
சென்னையில் கழிவுநீர் வெளியேறும் பாதாள சாக்கடையும், மழைநீர் வெளியேறும் வடிகால்களும் தனித்தனியே அமைக்கப்படுகின்றன. ஆனால், பெரும்பாலான இடங்களில் பாதாள சாக்கடைகளே மழைநீர் வடிகாலாக உள்ளன. இதனால் மழைநீருடன் பிளாஸ்டிக் பை, குப்பைகள் போன்ற திடக்கழிவுகளும் பாதாளச் சாக்கடையில் அடைத்துக் கொள்கின்றன.
கழிவுநீர் வெளியேற வழியின்றி, பொங்கி வெளியே ஆறாக பெருக்கெடுத்து, மழைநீருடன் கலந்து ஓடுகிறது. பல இடங்களில் 2 வாரங்களாக கழிவுநீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது. தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
திட்டமிடல் இல்லாமல் உருவான புறநகர் பகுதிகள்
சென்னையின் புறநகர் பகுதிகளாக உருவெடுத்துள்ள பல பகுதிகள் நீர்நிலைகளாக இருந்தவை. அவற்றை அழித்தே பல நகர்கள் உரு வாக்கப்பட்டிருக்கின்றன. இதில் வெகுவாக விதிமுறைகள் மீறப் பட்டுள்ளன. 1,189 சதுர கி.மீ. பரப்புள்ள சென்னை பெருநகரில் புதிய குடியிருப்பு பகுதிகளை உருவாக்க சிஎம்டிஏ (சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம்) அங்கீகாரம் அவசியம்.
வீட்டுமனைகள் உரு வாக்கும்போதே விரிவாக ஆய்வு செய்து கழிவுநீர், மழைநீர் வெளியேறும் வசதி, குடிநீர், சாலைகள், இணைப்பு சாலைகளை ஏற்படுத்த வேண்டும். பூங்கா, விளை யாட்டு மைதானம், பள்ளி, பொது பயன்பாட்டுக்கான இடங்கள் ஒதுக் கப்பட வேண்டும். ஆனால், இவை எதையும் செய்யாமல் மனைகளை விற்கின்றனர். எப்படியாவது இடம் வாங்கினால் போதும் என்ற எண் ணத்தில், மக்களும் அங்கு இடம் வாங்கி வீடுகளை கட்டிக்கொள்கின்றனர்.
கட்டமைப்பு வசதிகள் இல்லாத இடத்தில் உருவாகும் குடி யிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்துவிடுகிறது என்கிறார் ஓய்வு பெற்ற சிஎம்டிஏ அதிகாரி ஒருவர்.
மிகவும் திட்டமிட்டு 40 ஆண்டு களுக்கு முன்பு உருவாக்கப்பட்ட சென்னை அண்ணா நகர், அகலமான சாலைகளுடன் அமைக்கப்பட்டுள் ளது. ஆனால், கடந்த 20 ஆண்டுக ளில் உருவாக்கப்பட்ட புறநகர் பகுதிக ளில் எந்த திட்டமிடலும் இல்லை. இதனால், பல தெருக்கள் முட்டு சந்தாக முடிகின்றன. இதனால் பாதாள சாக்கடை, குடிநீர் குழாய்கள் அமைப்பது மாநகராட்சிக்கு பெரும் சவாலாக உள்ளது.
வட சென்னையில் தற்போது வெள்ளத்தில் மிதக்கும் கொளத்தூர், விநாயகபுரம் போன்ற பகுதிகளில் எந்த திட்டமிடலும் இல்லாமல் குறுகிய சாலைகளுடன் பிரம்மாண்டமான புதிய குடியிருப்புகள் உருவாக்கப் பட்டுள்ளன. உள்ளகரம், புழுதிவாக் கம், மடிப்பாக்கம், வேளச்சேரி, தரமணி, மேற்கு தாம்பரம் என தற்போது வெள்ளநீர் சூழ்ந்துள்ள பல பகுதிகளிலும் இதே நிலைதான் உள்ளது.
சிஎம்டிஏ பரிந்துரை
சிஎம்டிஏ வெளியிட்ட சென்னை பெருநகர பகுதிக்கான 2-ம் முழுமைத் திட்டம் 2026-ல் வெள்ள அபாயத்தை தடுப்பதற்கான பல்வேறு பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில..
# நிவாரணப் பணிகளில் மட்டுமின்றி, பாதிப்புகளை தடுப்பது, குறைப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்.
# பேரிடர் காலங்களில் அரசோடு மக்களும் இணைந்து செயல்படும் கலாச்சாரத்தை உருவாக்க விழிப்புணர்வு முகாம்கள் நடத்த வேண்டும்.
# ஊர்க்காவல் படை போல பேரிடர் மேலாண்மைக்காக பயிற்சி பெற்ற தன்னார்வ தொண்டர் படையை உருவாக்க வேண்டும்.
# உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்களுக்கு பேரிடர் குறித்து பயிற்சி அளிக்க வேண்டும்.
நிலத்தடி நீரை பாதுகாக்கும் முறைகள்
- சென்னையில் உள்ள மத்திய நிலத்தடி நீர் வாரியத் தலைவர் ஏ.சுப்புராஜ், விஞ்ஞானிகள் டாக்டர் பி.உமாபதி, கே.சிவசண்முகநாதன்
நகர்ப்புறங்களில் வீடு, அலுவலகம், சாலை ஓரம், பொது இடங்கள், மழைநீர் தேங்கும் இடங்களில் செறிவூட்டுக் குழி, செறிவூட்டும் வாய்க்கால், குழாய் கிணறுகள், நீரூட்டும் கிணறுகள் போன்றவற்றை அமைக்கலாம். இதன்மூலம், நிலத்தடி நீரை செயற்கை முறையில் செறிவூட்டலாம். கிராமப்புறங்களில் சிற்றோடை தடுப்பு, கரைகள் மற்றும் வரப்புகள், கூழாங்கற்கள் தடுப்பணை மற்றும் கல்லணைகள், கசிவுநீர் குட்டைகள், தடுப்பணைகள், நீரூட்டும் சுரங்கங்கள், நீரூட்டும் கிணறு, நிலத்தடி தடுப்புச் சுவர் ஆகியவை மூலம் மழைநீரை சேமிக்கலாம். ஆண்டுதோறும் இவற்றை முறையாக பராமரிப்பது மிகவும் முக்கியம்.

பெண் எனும் பகடைக்காய்: எத்தனை யுகங்களுக்குக் கண்காணிப்பீர்கள்? பா.ஜீவசுந்தரி

Return to frontpage

சிறு வயதில் என் பாட்டி வீட்டில் வாழ்ந்தபோது கிராமம் சார்ந்த வாழ்க்கையைக் கண்ணாரக் கண்டவள். மிகப் பெரிய கூட்டுக் குடும்பம். வீட்டுக்குப் பின் நல்ல அருமையான கட்டுமானத்துடன் கூடிய மாட்டுத் தொழுவம். அதன் ஒரு புறத்தில் சிமென்ட்டால் கட்டப்பட்ட, ஒரு ஆள் படுத்துறங்கும் அளவுக்கு ஒரு சிறு திண்ணை. அதில் தாயக்கட்டம் வரையப்பட்டிருக்கும். அதுவும் கட்டுமானத்திலேயே உண்டு.

நாங்கள் அந்தத் திண்ணையில் உட்கார்ந்து தாயக்கட்டையை உருட்டி விளையாடியிருக்கிறோம். அப்போது அத்தையோ சித்தியோ யாராவது ஒருவர் வந்து எங்களை விரட்டிவிட்டுத் திண்ணையை ஆக்கிரமித்துக்கொள்வார். அதன் பின், மூன்று நாட்களுக்கு எங்களுக்கு அந்த இடம் கிடைக்காது. போர்வை, சாப்பிடும் தட்டு, தம்ளர் போன்றவற்றை அதில் ஒரு பக்கம் வைத்திருப்பார்.

ஒரு சராசரி மனுஷியாகக்கூட நடத்தப்படாமல், மாடுகளோடு, மாட்டு மூத்திர, சாண நெடிக்கு மிக மிக அருகில் பகல் பொழுதைக் கழிக்க வேண்டுமென்பது பற்றி எப்போதாவது நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா? சாப்பாட்டு நேரம் வரும்போது தட்டு, டம்ளரை எடுத்துக்கொண்டு, தோட்டத்து வராந்தாவில் உட்கார வேண்டும். வீட்டின் உள்ளேயிருந்து யாராவது வந்து தட்டு, தம்ளரைத் தொட்டுவிடாமல் சாப்பாடு போட்டுவிட்டுப் போவார்கள். தவறி யாராவது அவர்களைத் தொட்டுவிட்டால், குளிக்காமல் வீட்டுக்குள் நுழைய அனுமதி கிடையாது.

இரவில் பின்கட்டுக் கதவுக்கு முன் உள்ள வராந்தாவிலோ அல்லது அங்குள்ள உள் திண்ணையிலோ தூங்க வேண்டும். அதாவது அப்போதும் வீட்டுக்குள் அனுமதியில்லை. அந்தத் திண்ணையில் வேண்டாத கோணிகள், தட்டுக் கூடைகள், மர உரல், கல் உரல், திரிகைகள் என்று பலவும் இருக்கும். அதையெல்லாம் ஒரு ஓரமாக ஒழுங்கு செய்துவிட்டு, ஒரு உலக்கையைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு அந்த ஜடப் பொருள்களோடு ஜடமாக, அங்கேதான் இரவைக் கழிக்க வேண்டும். காற்று, வெளிச்சம் எதுவும் இல்லாத அந்த இடத்தில் மூன்று நாட்களும் அனுபவிக்க வேண்டிய இந்த நரக வேதனையை நானே அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன். அப்போதெல்லாம் சொல்ல முடியாத ஒரு அவமான உணர்ச்சி வந்து ஆட்கொள்ளும்.

அய்யா, அய்யனாரே காப்பாற்றுங்கள்

இப்போதும் மதுரை மாவட்டத்தின் டி.கல்லுப்பட்டி அருகில் உள்ள கூவளப்பட்டியிலும் மற்றும் சில கிராமங்களிலும் இப்படிக் கேவலமாக ஒதுக்கி வைப்பதற்காக என்றே, ஊருக்கே வெளியில் உள்ள இடத்தில் ஒரு சிறிய கட்டிடத்தைக் கட்டி வைத்திருக்கிறார்கள். முன்பெல்லாம் ஓலைக் குடிசையாக இருந்ததாம். தேள், பூரான் போன்ற விஷப் பூச்சிகளின் பிடியிலிருந்தாவது காப்பாற்றுங்கள் என்ற பெண்களின் வேண்டுகோளுக்கிணங்கி இப்போதுதான் கல் கட்டிடமாக மாற்றியிருக்கிறார்கள். கைக்குழந்தை உள்ள பெண்கள் என்றால் கைக்குழந்தையோடு அங்கு போய்த் தங்கிக்கொள்ள வேண்டும். மின் வசதியற்ற அந்த இடத்தில் குழந்தையோடு தங்குவதும் மாணவிகள் இரவு நேரங்களில் படிக்க முடியாமல் அவதிப்படுவதும் இங்கு வாடிக்கை.

இந்தப் பெண்கள், பள்ளிக்கோ மருத்துவமனைக்கோ தெருக்களின் வழியாகச் செல்லவும் தடை. ஊரைச் சுற்றி வயல்களின் ஊடாக நீண்ட தொலைவு நடந்து செல்ல வேண்டும். இடைநிலைச் சாதியானாலும் ஒடுக்கப்பட்ட சாதியானா லும் இதில் மட்டும் எந்த வித்தியாசமும் இல்லை. அதிலும் பெரும் கொடுமை, இரண்டு பிரிவினருக்கும் தனித் தனிக் கொட்டடிகள். இந்த நவீன காலத்திலும் அய்யனார் என்ற எல்லைக் காவல் தெய்வத்தின் பெயரால் இந்தக் கொடுமைகள் இந்தக் கிராமங்களில் நிகழ்த்தப்படுகின்றன.

நகரங்களில் நவீன தீண்டாமை

பெண்ணின் வாழ்க்கை முறை சென்ற நூற்றாண்டிலிருந்து மாற்றம் கண்டிருப்பது உண்மை. முன்பு போல் பெண்கள் வீட்டுக் கோழிகளாக மட்டும் இப்போது இல்லை. கல்வி கற்கவும், வேலை வாய்ப்புகளுக்காகவும் வெளியுலகில் சஞ்சரித்துக்கொண்டிருக்கிறார்கள். பெண்கள் ராக்கெட்டில் விண்ணுலகுக்குப் பறக்கும் இக்காலத்திலும் பெண்ணின் மாதவிடாய் இழிவானதாகவே கொள்ளப்படுகிறது. வீட்டுக்கு உள்ளேயோ ஊருக்கு வெளியிலோ ஒதுக்கி உட்கார வைப்பதும், உலக்கை போட்டு அடையாளப்படுத்துவதும் நகரங்களில் வேண்டுமானால் இல்லாமல் இருக்கலாம்.

வீட்டில் பண்டிகைகள், திருமணங்கள், குடும்பத்துடன் கோயிலுக்குச் செல்ல நேரும் பொழுதுகள், பலர் சேர்ந்து செல்லும் சுற்றுலா இவை அனைத்துக்கும் இந்த பீரியட் என்பது மகா எதிரி. இதைக் காரணம் காட்டியே எல்லாவற்றிலும் ஒதுக்கி வைத்துவிடுவார்கள். இந்தத் தீண்டாமையைத் தவிர்ப்பதற்காகவே மாத்திரை போட்டு மாதவிடாய் சுழற்சியைத் தள்ளி வைக்கும் ஒரு விபரீதமான பழக்கத்தைப் பெண்கள் கைக்கொள்ள ஆரம்பித்தார்கள். விடாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். மருத்துவர்களின் எச்சரிக்கையையும் மீறித் தொடரும் இப்பழக்கம் மிக மிக ஆபத்தானது.

பத்தாண்டுகளுக்கு முன்பு பெண் படைப்பாளிகள் சந்தித்துக்கொண்டோம். அதன் பெயர் ‘பெண்கள் சந்திப்பு’. எழுத்தாளர் அம்பை உட்பட, பத்திரிகையாளர்கள், சமூகச் செயல்பாட்டாளர்கள், ஈழத்துப் பெண் கவிஞர்கள் சிலர் எனப் பலரும் அதில் கலந்துகொண்டோம். ஒரு பெண்ணாக, பெண் படைப்பாளியாக எங்கள் அனுபவங்களைப் பேசிக்கொள்வது என்பதுதான் அதன் நோக்கம். அதில் ஈழப் பெண் கவிஞர் ஒருவர் தனது அனுபவத்தைக் கூறினார். அவர்கள் ஊர் குடிநீர் குளத்தில் நீர் மொள்ளும் முன்பு காவல்காரர் மறித்து ‘நீ வீட்டுக்கு தூரமில்லியே’ என்று கேட்டு, இல்லை என்று சொன்ன பிறகுதான் அனுமதிப்பாராம். தொடர் கேள்விகளால் எரிச்சலைடைந்த இவர் மாதவிடாய் நேரமாக இருந்தாலும் ‘இவன் என்ன டெஸ்ட் பண்ணியா பாக்கப் போறான்’ என நினைத்து, இல்லை என்று பொய் சொல்லி விட்டு நீர் மொண்டு வந்ததாகச் சொன்னார். அதைக் கேட்டு எங்களுக்குள் வெடிச் சிரிப்பு எழுந்தது. ஆனால், இது சிரித்துவிட்டுப் போவதற்கான விஷயம் மட்டுமல்ல.

அறிவியல் முன்னேற்றமா?

பெண்களின் தூய்மையைக் கண்டறியும் இயந்திரங்கள் கோவில்களில் நிறுவப்பட்டு மாதவிடாய் உள்ள பெண்கள் கோயிலுக்குள் நுழையாமல் தடுத்து நிறுத்தும் காலம் வரும் என்று திருவாய் மலர்ந்தருளி இருக்கிறார் திருவாங்கூர் தேவஸ்தானத்தின் புதிய தலைவர் பரயாறு கோபாலகிருஷ்ணன். இந்தியா முழுமையும் பல்லாயிரக்கணக்கான பெண்களை இந்தச் செய்தி கொதிப்படைய வைத்திருக்கிறது.

இதைவிட மோசமாகப் பெண்களை எந்த விதத்திலும் இழிவுபடுத்திவிட முடியாது. அப்படியானால் ஆண்களின் தூய்மையைக் கண்டறியும் ஆராய்ச்சிகளையும் சேர்த்தே அவர் நிகழ்த்தினால் நன்றாயிருக்கும். இன்னும் எத்தனை யுகங்களுக்கு எங்களைக் கண்காணித்துக்கொண்டிருக்கப் போகிறீர்கள்?

கொசுறு

“ஒவ்வொரு மாதமும் எனக்கு ரத்தப் போக்கு ஏற்படுகிறது. அந்த நேரங்களிலும் நான் பிரார்த்தனை செய்வதைக் கடவுள் கோபப்படாமல் ஏற்றுக்கொள்கிறார். ஆனால், மாதவிடாய்க் காலங்களில் பெண்கள் தூய்மையற்றவர்கள் என்று மற்றவர்களும் சொல்லி வருகிறார்கள். ‘தூய்மையற்றதாக’ சொல்லப்படும் அந்தத் தாயின் கருவறைக்குள்தான் 9 மாதங்கள் நீங்கள் உயிர்த்திருந்தீர்கள் என்பதை யாரும் மறந்துவிட வேண்டாம்” என்று எதிர்க் குரல் எழுப்பியிருப்பவர் அதிதி குப்தா என்ற இளம்பெண்.

கட்டுரையாளர், எழுத்தாளர்.
தொடர்புக்கு: asixjeeko@gmail.com

NEWS TODAY 18.12.2025