Wednesday, May 11, 2016

மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த பிரிட்டன் மறுப்பு

இணையதள செய்திப் பிரிவு
Return to frontpage
பல்வேறு வங்கிகளில் ரூ.9000 கோடி கடன் பெற்று திருப்பிச் செலுத்தாத தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த (ஒப்படைக்க) பிரிட்டன் மறுத்துவிட்டது. தங்கள் நாட்டின் சட்ட நடைமுறைகளை மேற்கோள்காட்டி, இந்தியாவின் கோரிக்கையை நிராகரித்திருக்கிறது பிரிட்டன்.

பல்வேறு வங்கிகளில் ரூ.9000 கோடி கடன் பெற்று திருப்பிச் செலுத்தாத மல்லையா தற்போது பிரிட்டனில் வசித்து வருகிறார். அவரது பாஸ்போர்ட்டை இந்தியா முடக்கியுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ள விஜய் மல்லையாவை, நாடு கடத்தக் (தங்களிடம் ஒப்படைக்க) கோரி பிரிட்டன் அரசுக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கடிதம் எழுதியிருந்தது.

'விஜய் மல்லையாவுக்கு எதிராக, கிரேட்டர் மும்பையில் உள்ள நீதிமன்றம் ஜாமீனில் வெளியில் வர முடியாத கைது வாரன்ட் பிறப்பித்துள்ளதாக அமலாக்கத் துறை எங்கள் அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்துள்ளது. இதையடுத்து, மல்லையாவிடம் விசாரணை நடத்துவதற்காக அவரை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்பு ஆஜர்படுத்த வேண்டி உள்ளது. எனவே, அவரை நாடு கடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று பிரிட்டன் அரசுக்கு அனுப்பிய கடிதத்தில் இந்திய வெளியுறவுத் துறை விளக்கியிருந்தது.

இந்த நிலையில், தங்கள் நாட்டின் சட்ட நடைமுறைகளை மேற்கோள் காட்டி, விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த முடியாது என்று பிரிட்டன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் வெளியிட்ட தகவல்:

'குடியேற்றச் சட்டம் 1971-ன் படி, தங்கள் நாட்டில் ஒருவர் தங்குவதற்கு செல்லுபடியாகத்தக்க பாஸ்போர்ட் அவசியமில்லை. அதாவது, தங்கள் நாட்டுக்குள் நுழையும்போதும், அங்கிருந்து வெளிநாட்டுக்குச் செல்லும்போதும் காட்டப்படும் பாஸ்போர்ட்டில் உள்ள காலாவதியாகும் காலம் வரை பிரிட்டனில் ஒருவர் தங்கிக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், மல்லையா மீதான குற்றச்சாட்டுகளின் தன்மையை பிரிட்டன் அரசு புரிந்துகொள்கிறது. அதையொட்டி, சட்ட ரீதியிலான ஒத்துழைப்பு வழங்க பிரிட்டன் தயாராக இருக்கிறது. மேலும், நாடு கடத்தல் தொடர்பான இந்தியாவின் கோரிக்கை குறித்து சட்ட ரீதியிலாக பரிசீலித்து வருவதாகவும் பிரிட்டன் தெரிவித்துள்ளது' என்று அவர் தகவல் பகிர்ந்துள்ளார்.

முன்னதாக, விஜய் மல்லையாவுக்கு எதிராக வங்கிகள் பணத்தைத் திரும்பப் பெற தீவிர நடவடிக்கை எடுத்து வந்த நிலையில் கடந்த மார்ச் 2 ம் தேதி டெல்லியிலிருந்து பிரிட்டனுக்குச் சென்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

'போடுவோம் ஓட்டு.. வாங்கமாட்டோம் நோட்டு'- தமிழகம் முழுவதும் 1.60 கோடி பேர் உறுதிமொழி ஏற்பு

Return to frontpage

ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம் என தமிழகம் முழுவதும் 1.60 கோடி வாக்காளர்கள் உறுதிமொழி ஏற்றுள்ளனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் 16-ம் தேதி நடக்கிறது.முந்தைய தேர்தல்களில் ஓட்டுக்கு அதிக அளவில் பணம் கொடுக்கப்பட்டதாக ஏராளமான புகார்கள் வந்தன. இதையடுத்து இந்தத் தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரு கிறது. அதேநேரத்தில், பணம் வாங்கக் கூடாது என வாக்காளர்கள் மத்தியிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

இதற்காக இளைஞர் குழுக்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஓட்டுக்கு பணம் வாங்கக்கூடாது என பெற்றோரை வற்புறுத்துமாறு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, தமிழகம் முழுவதும் ஒரே நாளில் ஒரு கோடி வாக்காளர்கள் ‘ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம்’ என்ற உறுதிமொழி ஏற்கச் செய்ய தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்தது.

அதன்படி, தமிழகம் முழுவதும் நேற்று உறுதிமொழி ஏற்கப்பட்டது. சென்னை தலைமைச் செயலகத் தில், தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தலைமையில் தேர்தல் பிரிவு ஊழியர்கள் 100-க்கும் மேற்பட்டோர் உறுதி மொழி ஏற்றனர். தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் ஒவ்வொரு துறையின் செயலாளர் கள், துறை பணியாளர்கள் உறுதி மொழி ஏற்றனர். மாநிலம் முழு வதும் மத்திய, மாநில அரசு அலு வலகங்கள், தனியார் நிறுவனங் கள், கல்லூரிகள், ரயில் நிலையங் கள், பேருந்து நிலையங்களில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

தொகுதிகள்தோறும் வாக்குச் சாவடிகளில் வாக்குச்சாவடி நிலை அலுவலர் ஏற்பாட்டின் பேரில் குறைந்தபட்சம் 100 வாக்காளர்கள் உறுதிமொழி ஏற்றனர். இவை தொடர்பான புகைப்படங்கள் தேர்தல் துறை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இதுதவிர தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், ரோட்டரி, அரிமா சங்கங்களிலும் அவற்றின் உறுப் பினர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

இது தொடர்பாக, தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறும்போது, ‘‘தமிழகம் முழுவதும் 2.34 கோடி வாக்காளர்களை உறுதிமொழி ஏற்கச் செய்ய வேண்டும் என்பது எங்கள் இலக்கு. 1.60 கோடி பேர் உறுதிமொழி ஏற்றுள்ளனர்’’ என்றார்.

சென்னை மாநகராட்சி

சென்னை மாவட்டத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரியான மாநகராட்சி ஆணையர் பி.சந்தரமோகன் தலைமையில், ‘100 சதவீதம் வாக்களிப்போம்’, ‘போடுவோம் ஓட்டு.. வாங்க மாட்டோம் நோட்டு’ என்ற உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில், 1,560 மாநகராட்சி பணியாளர்கள் பங்கேற்றனர்.

இப்படி முடித்தார் கலைவாணர்..

இப்படி முடித்தார் கலைவாணர்..


இப்போதெல்லாம் தேர்தல் பிரச் சாரங்களில் கண்ணியக்குறைவான விமர்சனங்களும் தனிமனித தாக்குதல் களும் அதிகரித்துவிட்டன. திமுக தலை வர் கருணாநிதி பற்றி மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும், முதல்வர் ஜெய லலிதா பற்றி தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவனும் சமீபத்தில் தெரிவித்த கருத்துக்கள் பரவலான கண்டனத்தைப் பெற்றன. இதையெல்லாம் பார்க்கும்போது அந்தக்கால தேர்தல் பிரச்சாரங்களை நினைத்து ஏக்கப் பெருமூச்சு விடாமல் இருக்க முடியவில்லை.

1957-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல். அந்தத் தேர்தலில்தான் திமுக முதன் முறையாக போட்டியிட்டது. காஞ்சிபுரம் தொகுதியில் அண்ணா போட்டியிட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் டாக்டர் சீனிவாசன் நிறுத்தப்பட்டிருந்தார். இந்தத் தேர்தலில் இன்னொரு சுவாரஸ் யமும் நடந்தது. காங்கிரஸை ஆதரித்து பெரியார் பிரச்சாரம் செய்தார். டாக்டர் சீனிவாசன் பிராமண வகுப்பைச் சேர்ந்தவர் என்றாலும் காங்கிரஸுக்காக அவரையும் பெரியார் ஆதரித்தார்.

அண்ணாவை ஆதரித்து கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பிரச்சாரம் செய்தார். அவரது பேச்சைக் கேட்க காஞ்சிபுரமே திணறும் அளவுக்கு கூட்டம் கூடியிருந்தது. மைக்கை பிடித்த கலைவாணர், காங்கிரஸ் வேட்பாளர் சீனிவாசனை வானளாவப் புகழ்ந்தார். டாக்டர் தொழிலில் அவரது திறமை, கைராசி மற்றும் மக்களுக்கு அவர் செய்துவரும் சேவைகளை பாராட்டினார். இதைக் கேட்டதும் திமுகவினர் முகத்தில் ஈயாடவில்லை. ‘என்னடா இது? அண் ணாவுக்கு வாக்கு கேட்க வந்துவிட்டு, இப்படி காங்கிரஸ் வேட்பாளரை புகழ்ந்து பேசுகிறாரே?’ என்று அவர்கள் முகத்தில் கவலை ரேகைகள்.

சீனிவாசனை பாராட்டிக் கொண்டே சென்ற கலைவாணர் தனது பேச்சை இப்படி முடித்தார்...

‘‘அப்படிப்பட்ட திறமையும் கைராசியும் மிக்க, நல்லவரான டாக்டர் சீனிவாசனை சென்னைக்கு அனுப்பி அவரது வைத்திய திறமையை இழந்துவிடாதீர்கள். அவரை காஞ்சிபுரத்திலேயே வைத்துக் கொள் ளுங்கள். சமூகத்தில் ஏற்பட்டிருக்கும் நோய் களை தீர்க்க பேரறிஞர் அண்ணாவை எம்எல்ஏவாகத் தேர்ந்தெடுத்து சென்னைக்கு அனுப்புங்கள்’’

திமுகவினரின் ஆரவாரம் அப்போதே வெற்றி கோஷமானது. தேர்தலில் அண்ணா வென்றார். என்னதான் தீவிர பிரச்சாரம் என்றாலும் அதிலும் ஒரு கண்ணியம் இருந்தது.

ஹூம்... என்னத்தைச் சொல்ல? ‘நல்ல தம்பி’ படத்தில் வரும் கலைவாணரின் பாடல் வரிகளிலேயே சொன்னால்... ‘அது அந்தக் காலம், அது அந்தக் காலம்’.

எம்ஜிஆர் 100 | 62: பொருளாதாரம் தெரியாதவர்!

உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண்மணியை முதல்வர் எம்.ஜி.ஆர். அக்கறையோடு விசாரிக்கிறார். அருகில் ஹண்டே.

எம்ஜிஆர் 100 | 62: பொருளாதாரம் தெரியாதவர்!

M.G.R. அதிமுகவை தொடங்கிய பின் சுதந்திரா கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் ஒருவரை விரும்பி அழைத்து கட்சியில் சேர்த்துக் கொண்டார். தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தபோதும் மருத்துவரான அவரது சேவை கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராகவும் ஆக்கினார். அவர்...டாக்டர் எச்வி.ஹண்டே.

‘‘எம்.ஜி.ராமச்சந்திரனை திமுகவில் இருந்து விலக்கியது மறைந்த அண்ணா அவர்களையே விலக்கியது போலாகும். தனித்துப் போராடுகிறார் எம்.ஜி.ஆர்.! மகாபாரத அர்ஜுனனைப் போல அவரை வெற்றி வீரர் ஆக்குங்கள்’’… திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர். நீக்கப்பட்டபோது மூதறிஞர் ராஜாஜி சொன்ன வாசகங்கள்தான் இவை. 1971-ம் ஆண்டு தேர்தலில் பெருந்தலைவர் காமராஜரின் ஸ்தாபன காங்கிரஸும் மூதறிஞர் ராஜாஜியின் சுதந்திரா கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிட்டு திமுகவிடம் கடும் தோல்வியை சந்தித்தன.

அதிமுகவையும் திமுகவையும் சமதூரத்தில் வைத்துப் பார்த்த காமராஜருக்கு, ராஜாஜியின் எம்.ஜி.ஆருக்கு ஆதரவான அறிவிப்பு ஏற்புடையதாக இல்லை. சுதந்திரா கட்சியில் இருந்த டாக்டர் எச்.வி. ஹண்டேயை அழைத்து தனது அதிருப்தியை ராஜாஜியிடம் தெரிவிக்குமாறு காமராஜர் கூறினார்.

அதற்கு ராஜாஜியின் பதில், ‘‘காமராஜரும் எம்.ஜி.ஆரை ஆதரிக்க வேண்டும்’’ என்பதே. அவரது பதிலோடு தன்னை சந்தித்த ஹண்டே யிடம், ராஜாஜியை அவரது பிறந்தநாளின்போது சந்தித்து பேசுவதாகக் கூறியிருக்கிறார் காமராஜர். ‘‘ஆனால், அதற்குள் ராஜாஜி உடல் நலம் பாதிக்கப்பட்டு மறைந்துவிட்டார்’’ என்கிறார் டாக்டர் ஹண்டே. ‘‘அடுத்த சில மாதங்களில் நடந்த திண்டுக்கல் இடைத்தேர்தலில் அதிமுக பெற்ற அமோக வெற்றி, ராஜாஜியின் கணிப்பை உறுதிப்படுத்தியது’’ என்றும் கூறுகிறார்.

சட்டப்பேரவையில் அப்போதைய திமுக அரசை எதிர்த்து சுதந்திரா கட்சியின் பேரவைத் தலைவராக இருந்த ஹண்டேயின் செயல்பாடுகளை பார்த்த எம்.ஜி.ஆர்., ‘‘ராஜாஜி என்னை ஆதரித்தார். அவரது விருப்பப்படி நீங்கள் அதிமுகவில் சேர வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டார். அதன்படி, 1973 ஜூன் 19-ம் தேதி அதிமுகவில் ஹண்டே சேர்ந்தார். அதிமுகவின் முதல் தலைமை நிலையச் செய லாளர் ஆக அவரை எம்.ஜி.ஆர். நியமித்தார். 1980-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னை அண்ணாநகர் தொகுதியில் திமுக தலைவர் கருணாநிதியை எதிர்த்து போட்டியிட்டு 699 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிவாய்ப்பை ஹண்டே இழந்தாலும், அவரை அமைச்சரவை யில் சேர்த்துக்கொண்டு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக்கினார் எம்.ஜி.ஆர்.!

எம்.ஜி.ஆருடன் சேர்ந்து பணியாற்றிய தனது அனுபவத்தில், அவர் தனது அரசியல் எதிரிகளைக்கூட கடுமையாகப் பேசி ஹண்டே பார்த்தது இல்லை. எதிர்க் கட்சியை சேர்ந்தவர்களின் தொகுதிகளுக்கும் பாரபட்ச மில்லாமல் அரசின் திட்டங்களை எம்.ஜி.ஆர். செயல்படுத்தியிருக்கிறார். அப்படி ஒரு அனுபவம் ஹண்டேவுக்கே உண்டு.

திமுக ஆட்சியில் சட்டப்பேரவை சபாநாயகராக இருந்தவர் புலவர் கோவிந்தன். கருணாநிதிக்கு நெருக்கமானவர். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக ஹண்டே இருந்தபோது, அவரை புலவர் கோவிந்தன் சந்தித்தார். வட ஆற்காடு மாவட்டத்தில் உள்ள தனது செய்யாறு தொகுதியில் சுகாதாரத்துறை சார்பில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஒரு பட்டியலைக் கொடுத்தார்.

அந்தப் பட்டியலை எடுத்துக் கொண்டு முதல்வர் எம்.ஜி.ஆரை ஹண்டே சந்தித்து விஷயத்தைத் தெரிவித்தார். அதற்கு எம்.ஜி.ஆர்., ‘‘எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. அந்தப் பணிகளை உடனே நிறைவேற்றுங்கள். புலவர் கோவிந்தன் நல்ல மனிதர். அவர் திமுகவில் இருந்தாலும் நீங்கள் செய்யாறு தொகுதிக்கு நேரடியாகச் சென்று பணிகளை முடிக்க ஏற்பாடு செய்யுங்கள்’’ என்றார். இந்த பதிலால் ஹண்டேயின் மதிப்பிலும் மனதிலும் எம்.ஜி.ஆர். விஸ்வரூபம் எடுத்து நின்றார்.

தன் மீது வீசப்படும் கடுமையான விமர்சனங்களுக்குக் கூட எம்.ஜி.ஆர். கோபப்பட மாட்டார். அதே நேரம் அந்த விமர்சனங்களுக்கு அவர் அளிக்கும் பதில் மிகக் கூர்மையாக இருக்கும்.

எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது, பரமத்திவேலூர் என்ற இடத்தில் அதிமுக பொதுக்கூட்டம். அதில் கலந்து கொள்வதற்காக எம்.ஜி.ஆருடன் ஹண்டே சென்றார். ஹண்டேயின் கையில் அன்றைய மாலை நாளிதழ் இருந்தது. ‘‘என்ன நியூஸ்?’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டார். சொல்வதற்கு ஹண்டேக்கு தயக்கம். என்றாலும் தயங்கியபடியே சொல்லிவிட்டார். ‘‘திமுக தலைவர் கருணாநிதி உங்களுக்குப் பொருளாதாரம் தெரியாது என்று விமர்சித்திருக்கிறார்’’ என்றார் ஹண்டே.

அதைக் கேட்டு எம்.ஜி.ஆர். கோபமோ, வருத்தமோ அடையவில்லை. நிதானமாகச் சொன்னார்… ‘‘திமுக தலைவர் கூறுவது உண்மைதான். நான் பெரிய படிப்பு படித்தவன் அல்ல. பொருளாதாரம் பற்றி எனக்கு சொல்ல, அதுபற்றி நன்கு அறிந்த உயர் அதிகாரிகள் இருக்கிறார்கள். ஆனால், பல முதல் அமைச்சர்களுக்குத் தெரியாத விஷயம் எனக்குத் தெரியும். பசி என்றால் என்னவென்று எனக்குத் தெரியும். அந்தக் கஷ்டம் புரியும். மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய முதல் அமைச்சருக்கு இது தெரிந்தால் போதும்.’’

‘‘எம்.ஜி.ஆர். சொன்னது கரெக்ட்தானே’’ என்கிறார் டாக்டர் ஹண்டே!

- தொடரும்...

படங்கள் உதவி: ஞானம், செல்வகுமார்


மூதறிஞர் ராஜாஜி நகைச்சுவை உணர்வு உடையவர். எம்.ஜி.ஆரும் அப்படியே. அதிமுகவைத் தொடங்கிய புதிதில் ராஜாஜியின் ஆசியை பெறுவதற்காக அவரை எம்.ஜி.ஆர். சந்தித்தார். படப்பிடிப்பு இருந்ததால் அதை முடித்துவிட்டு ராஜாஜியை பார்க்கச் சென்றபோது தாமதமாகிவிட்டது. வருத்தம் தெரிவித்த எம்.ஜி.ஆர்., ‘‘ஷூட்டிங்கினால் தாமதமாகிவிட்டது’’ என்றார். அதற்கு, துப்பாக்கிச் சூடு சம்பவத்தை குறிப்பிடும் வகையில் ‘‘ஷூட்டிங்தான் ஏற்கெனவே முடிஞ்சுடுத்தே‘‘ என்று சிலேடையாக ராஜாஜி சொல்ல, ரசித்து சிரித்தார் எம்.ஜி.ஆர்.!

Tuesday, May 10, 2016

குறள்

குறள் இனிது: பேச்சு பேச்சாக இருக்கணும்!


பேச்சு பேச்சாக இருக்கணும்! எனது நண்பர் ஒருவர் வேலையில் சேர்வதற்கான தேர்வின் ஒரு பகுதியாக குழு விவாதத்தில் பங்கேற்கச் சென்றார். ‘நம் நாட்டில் மரணதண்டனை ஒழிக்கப்பட வேண்டுமா' எனும் தலைப்பு. 8 பேர் இருந்த அக்குழு 45 நிமிடத்துக்குள் விவாதித்து ஒருமித்த கருத்தைச் சொல்ல வேண்டும்.

சட்டம் படித்திருந்த அவர் கூட்டம் தொடங் கியதும் தனக்குத்தான் பல விஷயங்கள் தெரியுமென்றும் அதனால்தானே தலைவராக இருப்பேன் என்றும் அடம்பிடித்தார். மற்றவர்களுக்கோ ஏக எரிச்சல். ஏனெனில் விடாமல் பேசிக் கொண்டேயிருந்தார். மற்றவர் பேசினால் இடைமறிப்பார். அவர்கள் சொல்ல வந்ததைச் சொல்லி முடிக்க விடமாட்டார். இதனால் அக்குழுவால் தம் முடிவைத் தகுந்த காரணங்களுடன் தேர்வாளர்களிடம் சொல்ல முடியாமலேயே போயிற்று.

உண்மையில் நண்பருக்கு நிறைய விஷயங்கள் தெரிந்திருந்தது. ஆனால் அவரது அணுகுமுறையால் அவரது பேச்சைக் கேட்க யாரும் தயாராக இல்லை.

நாம் என்ன பேசுகிறோம் என்பதுடன் எப்படிப் பேசுகிறோம் என்பதும் முக்கியமில்லையா? அருமையான அறுசுவை உணவென்றாலும் அன்புடன் இடாததால் உண்பவர் மறுத்துவிட்டால் அவ்வுணவின் பயனென்ன? சொற்களின் வெற்றி கேட்பவரின் ஏற்பில் தானே உள்ளது?

உங்களது அன்றாட வாழ்க்கையிலும் இவ்வாறான மனிதர்களைச் சந்தித்து இருப்பீர்கள். அவர்கள் படித்திருக்கலாம்; அறிவாளியாக, அனுபவசாலியாக இருக்கலாம். ஆனாலும் அவர்கள் பேசினால் நமக்குக் கேட்கப் பிடிக்காது. பேச்சின் தொணி அப்படி!

வர்த்தக நிறுவனங்கள் நடத்தும் புதிய நிதி ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டங்களையே எடுத்துக் கொள்ளுங்கள். சில உயரதிகாரிகள் ‘25% இலக்கு என்பது சவால்தான். ஆனால் உங்களைப் போலத் திட்டமிட்டு வேலை செய்பவர்கள் சாதித்துக் காட்டுவீர்கள்’ என்கிற ரீதியில் பேசி பெரிய இலக்குகளை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ள வைத்து விடுவார்கள்.

எனது நண்பர் போன்றவர்கள் ‘என்ன இது கூட முடியாதா, இதுவரை தூங்கி வழிந்தது போதும். இனியாவது வேலை செய்யுங்கள்' என்று ஏற்கெனவே சிறப்பாய்ப் பணியாற்றிய சிலரைப்பழித்து, அதே 25% இலக்கை கசப்பாக்கி வந்தவர்களை வாதாடவும் மறுக்கவும் வைத்து விடுவார்கள்!

பேச்சைக் கேட்பவர்கள் கருத்தை ஏற்கும்படியாகவும், மாறுபட்ட கருத்துடையவர்களின் மனம் புண்படாதபடி இனிமையாகவும் பேசுவதே நாவன்மை என்கிறார் வள்ளுவர். கேட்பவர்கள் மயங்கும் படியும், கேளாதவர்கள் ஏங்கும் படியும் பேசுவதே சொல்வன்மை என்று இக்குறளுக்குப் பொருள் கொள்வோரும் உண்டு. கிருபானந்த வாரியார், குன்றக்குடி மூத்த அடிகளார், நானி பல்கிவாலா போன்றவர்களின் பேச்சைக் கேட்டவர்களைக் கேட்டுப் பாருங்கள் தெரியும்! கருத்தின் ஆழம், செய்திகளின் பரிமாணம், அள்ளி வீசும் புள்ளிவிபரங்கள், இழையோடும் நகைச்சுவை, சொல்லின் வீச்சு..அடாடா..ள

இன்றைய சூழலில், நீங்கள் தொலைக்காட்சியில் ஆன்மிக உரையோ இலக்கியச் சொற்பொழிவோ பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது கையில் ரிமோட் இருந்தாலும் அடுத்த சானலுக்கு மாறாமல், உடனே நண்பர்களிடம் அதைப் பார்க்கச் சொன்னால், அப்படிப் பேசுபவர் நாவன்மை உடையவர் எனலாமா?

கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்

வேட்ப மொழிவதாம் சொல் (குறள் 643)

somaiah.veerappan@gmail.com

மரண தண்டனையைத் தீர்மானிப்பது எது?

மரண தண்டனையைத் தீர்மானிப்பது எது?


மரண தண்டனைக்கு எதிராக எழும் குரல்கள், அதன் பின்னே இருக்கும் குரூரத் தன்மை, நிரபராதிகள் தண்டிக்கப்படும் வாய்ப்புகளைப் பற்றித் தொடர்ந்து பேசிவருகின்றன.
இந்தச் சூழலில் டெல்லி தேசிய சட்டப் பல்கலைக்கழகம் வெளியிட்டிருக்கும் அறிக்கை, மரண தண்டனை விதிக்கப்படுவதில் சமூகக் காரணிகளும் பொருளாதார நிலையும் முக்கியப் பங்கு வகிப்பதைச் சுட்டிக்காட்டியிருக்கிறது.
வெள்ளிக்கிழமை வெளியான இந்த அறிக்கையில், மரண தண்டனை விதிக்கப்படுபவர்களில் பெரும்பாலானோர் ஏழைகள் என்றும் கல்வியறிவு இல்லாதவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மரண தண்டனை அளிக்கப்பட்டவர்களில் பலர் சிறுபான்மை இனத்தவர்கள். மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் 385 பேரில் 241 பேர் முதல் முறை குற்றவாளிகள். இவர்களில் பலர் குற்றம் நடந்த சமயத்தில் சிறாராக இருந்தவர்கள். எனினும், தங்கள் வயதை நிரூபிக்கப் போதுமான ஆவணங்கள் இல்லாததால், தூக்குக் கயிற்றை எதிர்பார்த்துச் சிறையில் கிடக்கிறார்கள்.
வயதில் இளையவர்களுக்கும், முதியவர்களுக்கும் மரண தண்டனையிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பது நியாயமாகப் பின்பற்றப்பட வேண்டிய விதி. ஆனால், மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பவர்களில் 54 பேர், 18 முதல் 21 வயதுள்ளவர்கள். 60 வயதைக் கடந்த ஏழு பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. பெரும்பாலும் சிறுபான்மையினத்தவர்கள், தலித்துகள், பிற்படுத்தப்பட்டவர்கள் அல்லது பொருளாதாரரீதியாகப் பின்தங்கியவர்கள், பத்தாம் வகுப்பைக் கூடத் தாண்டாதவர்கள் போன்றோருக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், தன் பதவிக் காலத்தில் கருணை மனு அளித்திருந்த மரண தண்டனைக் கைதிகள் தொடர்பாகத் தனது அலுவலகம் நடத்திய ஆய்வு ஒன்றைப் பற்றிப் பேசும்போது, மரண தண்டனைக் கைதிகளில் சமூகரீதியாகவும் பொருளாதாரரீதியாகவும் பின்தங்கியிருப் பவர்களே அதிகமாக இருப்பதாகக் கூறினார். நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, “ஏன் இத்தனை ஏழைகள் மரண தண்டனைக் கைதிகளாக இருக்கிறார்கள்?” என்று அவர் வருத்தத்துடன் கூறியது குறிப்பிடத் தக்கது. திட்டமிட்டே இவர்கள் மீது பாரபட்சம் காட்டப்படுகிறதா அல்லது நிறுவனமயமான முன்முடிவுகள் காரணமாக அமைகின்றனவா என்ற கேள்விகளை, தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் அறிக்கை எழுப்பியிருக்கிறது.
மூன்று மாணவிகள் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட தருமபுரி பஸ் எரிப்புச் சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட நான்கு குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை, ஆயுள் தண்டனையாகக் குறைத்து கடந்த மார்ச் மாதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கில் பேருந்தை அவர்கள் எரிக்கவில்லை என்றும், குழு வன்முறையின் தாக்கத்தில் இந்தச் செயலில் அவர்கள் ஈடுபட்டதாகவும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது. எந்தக் காரணத்துக்காகவும் மரண தண்டனையிலிருந்து தண்டனைக் குறைப்பு செய்யப்படுவது வரவேற்கத் தக்கதுதான். ஆனால், நீதியின் இறுதிப் படி வரை சென்று தண்டனைக் குறைப்பு பெறும் அளவுக்குப் பலருக்குப் போதுமான பொருளாதார வசதி இருப்பதில்லை என்பதுதான் நிதர்சனம்.
பொருளாதார வசதி கொண்டவர்களால் இறுதிக் கட்டம் வரை சென்று மரண தண்டனையிலிருந்து தப்பிக்க முடியும் என்பதும், அது சாத்தியமாகாததால் பலர் வேறு வழியின்றி மரண தண்டனையை எதிர்கொள்கிறார்கள் என்பதும் விரிவான விவாதத்துக்கு உட்படுத்தப்பட வேண்டிய விஷயங்கள். தண்டனை என்ற பெயரில் ஒருவருடைய உயிரை அரசே பறிக்க வேண்டுமா என்ற கேள்விக்கும் விரைவில் விடை தேட வேண்டிய தருணம் இது!

எம்ஜிஆர் 100 | 61 - முப்பிறவி எடுத்தவர்! தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்


கழுத்தில் கட்டுடன் மருத்துவமனையில் இருந்த எம்.ஜி.ஆரிடம் பரங்கிமலை தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவில் கையெழுத்து பெறப்பட்டபோது எடுக்கப்பட்ட படம். குனிந்தபடி எழுதுபவர் என்.வி.நடராசன்.

M.G.R. முப்பிறவி எடுத்தவர் என்று அவரது ரசிகர்கள் புகழ்வது வழக்கம். துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பிழைத்தது இரண்டாவது பிறவி என்றும் உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று திரும்பியது மூன்றாவது பிறவி என்றும் கூறுவார்கள். அப்படி இரண்டாவது பிறவி எடுப்பதற்கு முன் அவரது உயிருக்கு ஆபத்து வந்த நாள் 1967 ஜனவரி 12. அன்றுதான் எம்.ஜி.ஆரை நடிகவேள் எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்டார்.

நாடகத்துறையிலும் வயதிலும் எம்.ஜி.ஆரை விட மூத்தவர் எம்.ஆர்.ராதா. அவரை எம்.ஜி.ஆர். எப்போதும் அண்ணன் என்றுதான் மரியாதையுடன் அழைப்பார். எம்.ஜி.ஆர். மீது எம்.ஆர்.ராதாவும் மிகுந்த அன்பு வைத்திருந்தார். 1966-ம் ஆண்டில் எம்.ஆர்.ராதா அளித்த பேட்டியில், ‘‘படப்பிடிப்பு நடக்கும்போது மற்றவர்களையும் ‘ஜோர்’ படுத்தி வேலை வாங்குகிறவன் நான். இதே பழக்கம் எம்.ஜி.ஆரிடமும் இருந்ததைப் பார்த் தேன். இந்த ஒரு காரியத்திலேயே அவரை எனக்குப் பிடித்துவிட்டது. ‘நல்லவன் வாழ்வான்’ படத்தில் சண்டைக் காட்சிகள் படமானபோது அவரது திறமை மெச்சத்தக்கதாயிருந்தது. எம்.ஜி.ஆர். தன்னுடைய நடிப்பில் தனக்கென்று ஒரு பாணியை வைத்திருக்கிறார். அமெரிக்க, இந்தி நடிகர்களைப் பார்த்து காப்பி செய்கிற வழக்கம் அவரிடம் கிடையாது. ஆகையினாலே எம்.ஜி.ஆர். ஒரு ஒரிஜினல் நடிகர்’’ என்று புகழ்ந்துள்ளார்.

அண்ணன், தம்பியாக இருந்தவர் களிடையே அரசியல் புகுந்தது. அரசியல் மாறுபாடு இருந்தாலும் எம்.ஜி.ஆர். யாரையும் விரோதியாக கருதியதில்லை. 1967-ம் ஆண்டு தேர்தல் சமயம். ஜனவரி 1 மற்றும் 2-ம் தேதிகளில் சென்னை விருகம்பாக்கத்தில் திமுக சிறப்பு மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில்,‘‘தேர்தல் நிதியாக ஒரு லட்சம் ரூபாய் வழங்குகிறேன்’’ என்று எம்.ஜி.ஆர். அறிவித்தார். அதற்கு பதிலளித்த பேரறிஞர் அண்ணா, ‘‘எம்.ஜி.ஆரிடம் இருக்கும் பணம் என்னிடம் இருக்கும் பணம் போன்றது. எங்கும் போய்விடாது. ஒருமாதம் அவர் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்ய வேண்டும். அவர் முகத்தைக் காட்டினால் 30 ஆயிரம் வாக்குகள் கழகத்துக்குக் கிடைக்கும்’’ என்று பேசினார்.

அந்தத் தேர்தலில் பெருந்தலைவர் காமராஜரையும் காங்கிரஸையும் தந்தை பெரியார் ஆதரித்தார். ஜனவரி 8-ம் தேதி பெரியார் திடலில் நடந்த நிகழ்ச்சியில், ‘‘பச்சைத் தமிழர் ஆட்சியைக் கவிழ்க்க அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ராஜாஜி போன்றவர்கள் திட்டமிடுகிறார்கள்’’ என்று பெரியார் பேசியதாக திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆர்.எம்.வீரப்பன் பதிவு செய்துள்ளார். கூட்டத்தில் எம்.ஆர்.ராதா வின் பேச்சிலும் எம்.ஜி.ஆர். மீதான கோபம் வெளிப்பட்டதாக அவர் சுட்டிக் காட்டுகிறார்.

இந்த நிலையில், ஜனவரி 12-ம் தேதி மாலை எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டத்துக்கு புதுப்பட விஷயமாக பேச ‘பெற்றால்தான் பிள்ளையா?’ படத்தின் தயாரிப்பாளர் வாசுவும் எம்.ஆர்.ராதாவும் வருவதாக எம்.ஜி.ஆருக்கு தகவல் கிடைத்தது. பிரசாரத்துக்குப் புறப்பட வேண்டிய நிலையிலும், வீட்டுக்கு வந்த எம்.ஆர்.ராதாவை எம்.ஜி.ஆர். வரவேற் றார். வாசுவுடன் பேசிக் கொண்டிருக் கும்போது எம்.ஜி.ஆரை எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்டார். எம்.ஜி.ஆரின் தொண்டையில் குண்டு பாய்ந்தது. பின்னர், எம்.ஆர்.ராதா தன்னையும் சுட்டுக் கொண்டார். இருவரும் பிழைத்தது தெரிந்த கதை.

‘எம்.ஜி.ஆரை எம்.ஆர்.ராதா சுட்டதற்கு அரசியல் கோபம் இருந்தது’ என்பது ஆர்.எம்.வீரப்பனின் உறுதியான கருத்து. ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்கு உள்ளே சிகிச்சைக்குச் செல்லும்போது, ஹெட் கான்ஸ்டபிள் லட்சுமணன் என்பவரிடம் எம்.ஆர்.ராதா தனது சட்டைப் பையில் இருந்து எடுத்து ஒரு கடிதத்தைக் கொடுத்தார்.

நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. விசாரணையில் ஹெட் கான்ஸ்டபிள் லட்சுமணன் சாட்சியம் அளித்தார். MSZ 1843 என்ற காரில் ரத்தகாயத்துடன் வந்த எம்.ஆர்.ராதாவை சப் இன்ஸ்பெக்டர் துரை என்பவரின் உத்தரவுப்படி ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்கு கூட்டிக் கொண்டு சென்றதாகவும் ஆஸ்பத் திரிக்கு உள்ளே செல்லும்போது, எம்.ஆர்.ராதா தன்னிடம் கடிதத்தை கொடுத்ததாகவும் லட்சுமணன் கூறினார். 4 பக்க கடிதத்தை அவர் நீதிமன்றத்தில் படித்தார். எம்.ஆர்.ராதா கைப்பட எழுதியிருந்த அந்த நீண்ட கடிதத்தின் ஒரு சில பகுதிகள் இவை:

‘ஜனவரி 8-ம் தேதி தந்தை பெரியார் தலைமையில் கூட்டம் நடந்து கொண் டிருந்தது. நம் தோழர்கள் உயிர்தானம் செய்ய வேண்டும் என்று நான் உரை யாற்றினேன். மகாநாடு முடிந்து நான் போகும்போது, ‘‘உயிர்தானம் செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டாரே எம்.ஆர்.ராதா அவர்கள், இவர் முதலில் செய்தால் பிறகு நாம் செய்வோம்’’ என்று கிண்டலாகவும் சிரித்துக் கொண்டும் சிலர் பேசினார்கள். உயிர்தானம் செய்வதற்கு ஒரு இயக்கம் இந்த எலெக் ஷனுக்குள் நம் நாட்டில் தேவை. அதற்கு நான் தலைமை தாங்கத் தயார். நல்ல ஆட்சியை, நல்லவர்களைக் கவிழ்ப்பதற்குரிய சதிகாரர்களின் உயிரை ஒன்றோ, இரண்டோ எடுத்துச் செல்ல வேண்டும். இதுதான் உயிர்தானம் செய்யும் இயக்கத்தின் கொள்கை. நான் செய்கிறேன். நீங்களும் இதுபோல் செய்ய வேண்டும். செய்வீர்களா?’

இதுதான் அந்தக் கடிதத்தின் சாரம். வழக்கு நடந்து எம்.ஜி.ஆரை எம்.ஆர்.ராதா தனது துப்பாக்கியால் சுட்டுவிட்டு தானும் சுட்டுக் கொண்டது உறுதிப்படுத்தப்பட்டு, அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது கழுத்தில் கட்டுப்போட்டபடி இருக்கும் எம்.ஜி.ஆரை புகைப்படம் எடுத்து தேர்தல் பிரச்சார சுவரொட்டியாக ஒட்டலாம் என்று ஆர்.எம்.வீரப்பன் யோசனை தெரிவித்தார். எம்.ஜி.ஆரின் அந்தப் படம் மட்டுமே இடம் பெற்ற சுவரொட்டிகள் திமுகவின் வெற்றியை உறுதிப்படுத்தின. பேரறிஞர் அண்ணா தலைமையில் திமுக ஆட்சி அமைத்தது.

‘தர்மம் தலை காக்கும்’ படத்தில் எம்.ஆர்.ராதாவின் மகள் சரோஜாதேவி. அவர்களது வீட்டுக்கு வரும் எம்.ஜி.ஆரின் தலைக்கு மேல் இருக்கும் அலங்கார விளக்கு விழும்போது அவரை சரோஜாதேவி காப்பாற்றுவார். அப்போது, எம்.ஜி.ஆரைப் பார்த்து எம்.ஆர். ராதா, ‘‘தர்மம் ஒருமுறைதான் தலை காக்கும்’’ என்று எச்சரிப்பார். புன்னகையை மட்டுமே பதிலாக அளித்து விட்டு, காரை ஓட்டியபடி எம்.ஜி.ஆர் திரும்பும்போது இந்தப் பாடல்…

‘தர்மம் தலை காக்கும்

தக்க சமயத்தில் உயிர் காக்கும்

கூட இருந்தே குழி பறித்தாலும்

கொடுத்தது காத்து நிற்கும்...’

- தொடரும்...

படங்கள் உதவி: ஞானம், செல்வகுமார்




1967 தேர்தலில் படுத்துக் கொண்டே பரங்கிமலைத் தொகுதியில் எம்.ஜி.ஆர். வெற்றி பெற்று சாதனை படைத்தார். 54,106 ஓட்டுக்கள் பெற்று காங்கிரஸ் வேட்பாளர் ரகுபதியை அவர் தோற்கடித்தார்.

NEWS TODAY 06.06.2026