Tuesday, May 24, 2016

குறள் இனிது: மறுவார்த்தை இல்லாத பேச்சு...


தொலைக்காட்சிகளில் வரும் மில்க் பிக்கிஸ் விளம்பரத்தைப் பார்த்து ரசித்தீர்களா? சுமார் 4 வயது சிறுமியிடம் 5 வயது சிறுவன் தனக்கு அந்த பிஸ்கட்டை 10 மடங்கு பிடிக்குமெனச் சொல்ல, சிறுமி தனக்கு 20 மடங்கு பிடிக்குமென பதிலளிப்பாள்.

தொடர்ந்து இருவரும் ஆயிரம், லட்சம் மடங்கென ஏற்றிக்கொண்டே போவார்கள்.பின்னர் சிறுவன் அச்சிறுமிக்குப் புரியாத ஏதோ பெரிய எண்ணைச் சொல்வதைக் கேட்டு அச்சிறுமி, தனக்கு அதைவிடவும் மிக அதிகம் பிடிக்கும் என்று சொல்லி அப்பேச்சை முடித்தே விடுவாள்!

வாய்ப் பேச்சில் மற்றவர்களை மடக்குவது என்பது தனிக்கலை. வழக்கறிஞர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள், பட்டிமன்றப் பேச்சாளர்கள், விற்பனையாளர்கள், சமரசம் பேசுபவர்கள் ஆகியோருக்கு இது பெரும் சொத்து!

இதற்குத் தேவை, வாதங்களை எடுத்து வைத்து எதிரியைத் திணற வைக்கும் திறன்! அத்துடன் வார்த்தை ஜாலம்! சிலர் கம்பு சுற்றுவது போல வார்த்தைகளை வீசி சொற்சிலம்பாடுவர்! நாம் என்ன சொன்னாலும் டக்டக்கென்று பதில் வந்து விடும்.

அவர்கள் எடுக்கும் சொல்லாயுதங்களை எதிர்கொள்ள முடியாமல் நாம் விதிபூத்து நிற்போம்!அதிவேகத்தில் காய் நகர்த்தும் சதுரங்க வீரர் விஸ்வநாதன் ஆனந்தைப் போல செக் வைத்து சொல் ஆட்டம் ஆடினால் என்னாவது?

பேச்சில் வெல்ல வேண்டுமென்றால் அதை ஒரு போரைப் போலவே அணுக வேண்டுமென்கிறது குறள். யுத்தத்திற்கான ஆயத்தம் என்ன? எதிரி என்ன ஆயுதத்துடன் போரிடுவார் எனச் சிந்தித்து அதை எதிர் கொள்ளத்தக்க ஆயுதங்களை கையிலெடுப்பது தானே! அதைப் போலவே வாக்கு வாதங்களிலும் எதிராளி எடுத்தாளக்கூடிய கருத்துகளை முன் கூட்டியே சிந்தித்து அதற்கான பதில்களுடன் களம் இறங்க வேண்டும் என இக்குறளுக்குப் பொருள் கொள்வார் ராஜாஜி.

ஒரு சொத்தை விற்கச் செல்லும் பொழுது அங்கு சென்று சொத்து வாங்குபவன் போல் விசாரிக்கணும் என்பார் என் தந்தை!

நாம் ஒரு சொல்லைச் சொல்லுமுன் அதை வெல்லக்கூடிய வேறு ஓர் சொல் இருக்கிறதா என்று ஆராய்ந்த பின்னரே அச்சொல்லைச் சொல்ல வேண்டுமென்றும் இக்குறளுக்குப் பொருள் கொள்வார்கள்.

சொல்லும் வார்த்தை சொல்ல வந்ததை ஐயம் திரிபற சொல்லத்தக்கதாக இருக்க வேண்டுமில்லையா? எதுகை மோனை இருந்தால் இன்னும் சிறப்பு.

இதற்கான உதாரணங்களை நாம் வேறு எங்கும் தேட வேண்டாம். ஐயன் வள்ளுவரே தமது திருக்குறளில் அதற்கான செயல் விளக்கத்தைச் செய்து அதாவது சொல்லிச் சொல்லிக் காட்டியுள்ளாரே!

ஏச்சுப் பேச்சை கேட்டவர்கள் அதை எறும் மறக்க மாட்டார்கள் என்பதால் நாவினால் சுட்ட ‘வடு’ என்றார். நல்லவர் கெட்டவர் என்பது அவரவர் ‘எச்சத்தால்' காணப்படும் என்பதை வேறு வார்த்தைகளால் சொல்லமுடியுமா? ‘‘தன்னைவியந்தான்' எனும் வார்த்தைக்கு ஈடு இணை உண்டா?

அதாவது வாய்க்கு வந்ததை எல்லாம் பேசாமல், மனதில் வார்த்தைகளுக்கான தேர்வு நடத்திப் பேசணும் என்கிறார்! செந்தமிழும் நாபழக்கம் தானே!

சொல்லுக சொல்லை பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லும்சொல் இன்மை அறிந்து

(குறள் 645)

- somaiah.veerappan@gmail.com

Monday, May 23, 2016

தாலிக்கு 8 கிராம் இலவச தங்கம் - முதல் உத்தரவில் கையொப்பமிட்டார் ஜெயலலிதா

சென்னை:

தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக ஆறாவது முறையாக இன்று பதவி ஏற்றுக்கொண்ட அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, தமிழ்நாடு அரசின் தலைமைச்செயலகமான செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள தனது அலுவலகத்துக்கு சென்று, தாலிக்கு 8 கிராம் இலவச தங்கம், விவசாய பயிர்க்கடன் தள்ளுபடி, கைத்தறி நெசவாளர்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம், விசைத்தறி நெசவாளர்களுக்கு 750 யூனிட் இலவச மின்சாரம், வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம், டாஸ்மாக் மது கடைகளை இனி நண்பகல் 12 மணிக்கு மேல் திறக்கப்படும் ஆகிய ஐந்து முக்கிய உத்தரவுகளில் கையொப்பமிட்டார்.

தமிழக சட்டசபைக்கு நடந்த தேர்தலில் 134 தொகுதிகளில் வெற்றி பெற்று அ.தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது.

காமராஜர், எம்.ஜி.ஆரைத் தொடர்ந்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

புதிதாக தேர்வு செய்யப்பட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை சென்னையில் நடந்தது. அந்த கூட்டத்தில் சட்டசபை அ.தி.மு.க. தலைவராக ஜெயலலிதா ஒருமனதாக தேர்ந்து எடுக்கப்பட்டார்.

இதையடுத்து சனிக்கிழமை கவர்னர் ரோசய்யாவை சந்தித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அப்போது அவர் 28 அமைச்சர்கள் கொண்ட மந்திரிசபை பட்டியலையும் கொடுத்தார்.

அதை ஏற்றுக்கொண்ட கவர்னர் ரோசய்யா, ஆட்சி அமைக்க வருமாறு ஜெயலலிதாவுக்கு அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுத்தார். இதைத் தொடர்ந்து அ.தி.மு.க. அரசு பதவி ஏற்பு விழா ஏற்பாடுகள் சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் செய்யப்பட்டன.

தமிழக முதல்-அமைச்சராக ஜெயலலிதா 6-வது முறையாக பதவி ஏற்பதால், தமிழ்நாடு முழுவதிலும் இருந்து அ.தி.மு.க. தொண்டர்கள் சென்னை வந்துள்ளனர். அவர்கள் இன்று அதிகாலை முதலே பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கம் பகுதியிலும், கடற்கரை சாலையிலும் குவிந்தனர். இதனால் அந்த பகுதி விழாக்கோலம் பூண்டுள்ளது.

அதுபோல போயஸ் கார்டனில் இருந்து, விழா நடக்கும் இடம் வரை ஜெயலலிதா வரும் வழி நெடுக அவரை வரவேற்று பதாகைகளும், அ.தி.மு.க. கொடிகளும், தோரணங்களும் கட்டப்பட்டுள்ளன. ஆங்காங்கே அ.தி.மு.க. நிர்வாகிகள் மேள-தாளம் முழங்க ஜெயலலிதாவை வரவேற்க திரண்டு நின்றனர். எங்கு பார்த்தாலும் அ.தி.மு.க. கொடிகள் பறந்தன.

பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக ஜெயலலிதா 11.40 மணிக்குப் புறப்பட்டார். 11.50 மணிக்கு அவர் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்குக்கு வந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.

விழா மேடைக்கு அவர் வந்ததும் “புரட்சித்தலைவி வாழ்க”, “அம்மா வாழ்க” என்று அ.தி.மு.க.வினர் வாழ்த்தி கோஷமிட்டனர். அவர்களுக்கு ஜெயலலிதா கைக்கூப்பி வணக்கம் தெரிவித்தார். இதையடுத்து கவர்னர் ரோசய்யா வந்ததும் சுமார் 12 மணியளவில் பதவி ஏற்பு விழா தொடங்கியது.

சரியாக 12.07 மணிக்கு ஜெயலலிதாவுக்கு கவர்னர் ரோசைய்யா பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவைத் தொடர்ந்து அமைச்சர்கள் பதவி ஏற்றனர். ஓ.பன்னீர்செல்வம், திண்டுக்கல் சீனிவாசன், எடப்பாடி கே.பழனிச்சாமி, செல்லூர் கே.ராஜு, தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன், டாக்டர் சரோஜா, கருப்பண்ணன், எம்.சி.சம்பத், காமராஜ், ஓ.எஸ்.மணியன், உடுமலை ராதாகிருஷ்ணன், டாக்டர் சி.விஜயபாஸ்கர், எஸ். பி.சண்முகநாதன், துரைக்கண்ணு, கடம்பூர் ராஜூ, ஆர்.பி.உதயக்குமார், கே.டி. ராஜேந்திரபாலாஜி, கே.சி. வீரமணி, பெஞ்சமின், வெல்லமண்டி நடராஜன், எஸ்.வளர்மதி, ராஜலட்சுமி, டாக்டர் மணிகண்டன், கரூர் விஜயபாஸ்கர் ஆகிய 28 பேரும் குழு, குழுவாக பதவியேற்றனர்.

அவர்கள் அனைவருக்கும் கவர்னர் ரோசய்யா பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு உறுதிமொழியும் செய்து வைத்தார். சரியாக பதினைந்து நிமிடங்களில் பதவி ஏற்பு விழா நிறைவு பெற்றது.

புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ளும்படி ஏராளமான வி.வி.ஐ.பி.க்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்களுக்கு அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டிருந்தன. 1300-க்கும் மேற்பட்டவர்கள் விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்ததால் சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபம் நிரம்பி வழிந்தது.

மத்திய அரசின் சார்பில் வெங்கையா நாயுடு, பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர். பதவி ஏற்பு விழாவை பொதுமக்கள் காணும் வகையில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் அகன்றதிரை கொண்ட எல்.சி.டி. திரைகள் அமைத்து நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழாவை முன்னிட்டு பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் 1,500 போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இது தவிர முதல்-அமைச்சர் ஜெயலலிதா செல்லும் வழி நெடுக பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர்.

பதவி ஏற்பு விழா முடிந்ததும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, செயிண்ட் ஜாட்ஜ் கோட்டையில் உள்ள மாநில அரசின் தலைமைச் செயலகத்துக்கு புறப்பட்டுச் சென்றார். அங்கு அவருக்கு தலைமைச் செயலக ஊழியர்கள், பணியாளர்கள் வரவேற்பு அளித்தனர்.

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் ஞானதேசிகன், அரசின் தலைமை ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் போலீஸ் டிஜிபி அசோக் குமார், ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் பூங்கொத்து அளித்து வரவேற்றனர்.

பிறகு முதல்-அமைச்சர் ஜெயலலிதா தனது அறைக்கு சென்றார். இரண்டரை மாதங்களுக்குப் பிறகு அவர் மீண்டும் இன்று தனது முதல்வர் பணியைத் தொடர்ந்தார். பிற்பகல் 12.40 மணியளவில் ஐந்து முக்கிய கோப்புகளில் அவர் கையொப்பமிட்டார்.

4 கிராமுக்கு பதிலாக தாலிக்கு 8 கிராம் இலவச தங்கம், விவசாய பயிர்க்கடன் தள்ளுபடி, கைத்தறி நெசவாளர்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம், விசைத்தறி நெசவாளர்களுக்கு 750 யூனிட் இலவச மின்சாரம், வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம், டாஸ்மாக் மதுக்கடைகள் காலை 10 மணிக்கு பதிலாக இனி நண்பகல் 12 மணிக்கு மேல் திறக்கப்படும் ஆகிய ஐந்து முக்கிய உத்தரவுகளில் அவர் கையொப்பமிட்டார்.

அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட தாலிக்கு தங்கம் திட்டங்களை செயல்படுத்துவதற்கான கோப்புகளில் அவர் முதல் கையெழுத்திட்டார்.

இதையடுத்து 28 அமைச்சர்களும் தங்களது அறைக்கு சென்று பொறுப்பேற்றனர். அவர்களும் இன்றே தங்களது பணிகளைத் தொடங்கினார்கள்.

பிற்பகல் 1.30 மணிக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் இருந்து கிண்டி கவர்னர் மாளிகைக்கு புறப்பட்டுச் சென்றார். அவருடன் 28 அமைச்சர்களும் கவர்னர் மாளிகைக்கு செல்கின்றனர்.

அங்கு சட்டசபை தற்காலிக சபாநாயகராக செம்மலை பதவி ஏற்கும் விழா நடக்கிறது. கவர்னர் ரோசய்யா, தற்காலிக சபாநாயகரான செம்மலைக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா அதில் கலந்து கொண்டு செம்மலைக்கு வாழ்த்து தெரிவிக்கிறார். அதன் பிறகு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கிண்டி கவர்னர் மாளிகையில் இருந்து போயஸ்கார்டனில் உள்ள தனது இல்லத்துக்கு புறப்பட்டுச் சென்றார்.

முன்னதாக, ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க தி.மு,க. பொருளாளரும், தமிழ்நாடு முன்னாள் துணை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின், சென்னை முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன், சென்னை வடக்கு மாவட்ட செயலாளரும் துறைமுகம் தொகுதி எம்,எல்.ஏ.வுமான பி.கே. சேகர் பாபு, முன்னாள் அமைச்சர் துரைமுருகன், பொன்முடி, நடிகரும் வேளச்சேரி எம்.எல்.ஏ.வுமான வாகை சந்திரசேகர் உள்ளிட்டோர் வி.ஐ.பி.க்களுக்கான இருக்கையில் அமர்ந்திருந்தனர்.

விவசாய கடன் தள்ளுபடி, டாஸ்மாக் நேரம் குறைப்பு: முதல்வர் ஜெயலலிதா முதல் கையெழுத்திட்ட 5 கோப்புகள்

500 டாஸ்மாக் சில்லறை மதுபானக் கடைகள் மூடல்;
மின் கட்டணச் சலுகைகள்

விவசாயக் கடன் தள்ளுபடி, டாஸ்மாக் நேரம் குறைப்பு, 500 சில்லறை மதுக்கடைகள் மூடல், மின் கட்டண சலுகைகள் உள்ளிட்ட உத்தரவுகள் அடங்கிய 5 கோப்புகளில் முதல்வர் ஜெயலலிதா கையெழுத்திட்டார்.

இது தொடர்பாக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக முதல்வராக ஆறாவது முறையாக இன்று (23.5.2016) பதவியேற்றுக்கொண்ட ஜெயலலிதா, சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ள தலைமைச்செயலகத்தில் உள்ள முதலமைச்சர் அறைக்கு வருகை தந்து தமது பணியைத் தொடங்கினார்.

முதல்வர் ஜெயலலிதா தனது முதல் பணியாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் முக்கியத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்து அதற்குரிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.

முதல்வர் ஜெ. ஜெயலலிதா ஆணை பிறப்பித்து முதல் கையொப்பமிட்ட கோப்புகள்:

பயிர்க்கடன் தள்ளுபடி

1) வேளாண் பெருமக்களின் நலன் காக்கும் வகையில், கூட்டுறவு வங்கிகளுக்கு சிறு, குறு விவசாயிகள் செலுத்தவேண்டிய பயிர்க்கடன், நடுத்தர காலக்கடன் மற்றும் நீண்ட காலக்கடன் ஆகிய அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என்னும் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், கூட்டுறவு வங்கிகளிடமிருந்து 31.3.2016 வரை சிறு, குறு விவசாயிகளால் பெறப்பட்ட பயிர்க்கடன், நடுத்தரகாலக் கடன் மற்றும் நீண்டகாலக் கடன் ஆகிய அனைத்தையும் தள்ளுபடி செய்து உத்தரவிடும் கோப்பில் முதல்வர் ஜெயலலிதா கையொப்பமிட்டார். இதன் காரணமாக அரசுக்கு 5780 கோடி ரூபாய் செலவு ஏற்படும்.

மின் கட்டணச் சலுகை

2) மின்சாரம் அனைவருக்கும் மிகவும் அத்தியாவசியமான ஒன்று என்பதால் தற்போதைய கணக்கீட்டு முறைப்படி 100 யூனிட் மின்சாரம் கட்டணம் ஏதுமில்லாமல் வீடுகளுக்கு வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், அதற்கான கோப்பில் முதல்வர் ஜெயலலிதா கையெழுத்திட்டார். இதன் காரணமாக அரசு ஆண்டு ஒன்றுக்கு கூடுதலாக 1607 கோடி ரூபாய் மின் வாரியத்திற்கு மானியமாக வழங்கும். இந்தச் சலுகை 23.5.2016 முதல் நடைமுறைப்படுத்தப்படும்.

திருமண உதவித் திட்டம்

3) 2011-ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியின்படி, இளநிலைப் பட்டம் அல்லது டிப்ளமோ பட்டயம் பெற்ற பெண்களுக்கு திருமண உதவித் தொகையாக 50000 ரூபாயும் திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்கமும் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. படித்த ஏழைப்பெண்களுக்கு திருமண நிதி உதவியாக 25000 ரூபாய் நிதி உதவியுடன் திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது.

தற்போதைய தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதியின்படி அனைத்து திருமண நிதி உதவி திட்டங்களின் கீழ் வழங்கப்படும் நிதி உதவியுடன் திருமாங்கல்யத்திற்கென வழங்கப்படும் தங்கம் 4 கிராம் என்பதிலிருந்து ஒரு சவரன் அதாவது 8 கிராம் என உயர்த்தி வழங்கும் கோப்பில் முதல்வர் ஜெயலலிதா கையொப்பமிட்டார்.

நெசவாளர்களுக்கு மின் கட்டண சலுகை

4) தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியின்படி கைத்தறி நெசவாளர்களுக்கு தற்போது கட்டணமில்லாமல் வழங்கப்படும் மின்சாரத்தை 200 யூனிட்கள் எனவும், விசைத்தறிக்கு வழங்கப்படும் கட்டணமில்லா மின்சாரத்தை 750 யூனிட்டுகளாக உயர்த்தியும் வழங்கும் கோப்பில் முதல்வர் ஜெயலலிதா கையொப்பமிட்டார்.

500 டாஸ்மாக் கடைகள் மூடல்

5) மதுவிலக்கு படிப்படியாக அமல் படுத்தப்பட்டு பூரண மதுவிலக்கு என்ற நிலை எய்தப்படும் என்றும், அதனை நிறைவேற்றும் வகையில் முதலில் சில்லறை மதுபானக் கடைகள் திறந்திருக்கும் நேரம் குறைக்கப்படும் என்றும், கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்றும், பின்னர் சில்லறை மதுபானக் கடைகளுடன் இணைந்த பார்கள் மூடப்படும் என்றும் குடிப்பழக்கத்திற்கு உள்ளாகி உள்ளோரை மீட்பதற்கான மீட்பு நிலையங்கள் ஏற்படுத்தப்படும் என்றும், இவை அனைத்தும் செயல்படுத்தப்பட்டு படிப்படியாக பூரண மதுவிலக்கு என்னும் இலட்சியம் அடையப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்திருந்தார்.

அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் டாஸ்மாக் சில்லறை விற்பனை மதுபானக் கடைகள் மற்றும் அவற்றுடன் இணைந்த பார்கள் இதுவரை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்கிவரும் நிலையில் 24.5.2016 முதல் சில்லறை விற்பனை மதுபானக் கடைகள் மற்றும் பார்கள் நண்பகல் 12 மணியிலிருந்து இரவு 10 மணி வரை இயங்கும் என்ற உத்தரவு, மற்றும் 500 டாஸ்மாக் சில்லறை மதுபானக் கடைகள் மூடப்படும் என்ற உத்தரவு, ஆகியவற்றுக்கான கோப்பில் முதல்வர் ஜெயலலிதா கையொப்பமிட்டார்.

முன்வரிசையில் சரத்... பின்வரிசையில் ஸ்டாலின்: ஜெ. பதவியேற்பு விழாவில் அவமதித்தாக கருணாநிதி குற்றச்சாட்டு

Return to frontpage

முதல்வர் பதவியேற்பு விழாவில் ஸ்டாலினுக்கு கூட்டத்தோடு கூட்டமாக இடம் போடப்பட்டு அமரவைத்தது ஜெயலலிதா திருந்தவில்லை என்பதையே காட்டுவதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''இன்று சென்னைப் பல்கலைக் கழக நூற்றாண்டு மண்டபத்தில் நடைபெற்ற முதல்வர், மற்றும் அமைச்சர்கள் பதவியேற்ற அரசு விழா நடந்தது.

அண்மையில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில், 89 இடங்களைப் பெற்று பிரதான எதிர்க் கட்சி வரிசையிலே அமரும் தகுதியைப் பெற்ற ஸ்டாலினுக்கு கூட்டத்தோடு கூட்டமாக இடம் போடப்பட்டது.

அதே தேர்தலில் தோற்றுப் போன சரத்குமாருக்கு முதல் வரிசையில் இடம் போட்டு - அமர வைத்து வேண்டுமென்றே திமுகவை திட்டமிட்டு அவமானப்படுத்திய ஜெயலலிதாவைப் பார்க்கும்போது இன்னும் அவர் திருந்தவில்லை, திருந்தப் போவதுமில்லை என்று தான் தெளிவாகப் புரிகிறது! தமிழ் மக்கள் அல்லவா திருந்த வேண்டும்'' என்று கருணாநிதி கூறியுள்ளார்.

தமிழகத்தில் முதல்வராக மீண்டும் ஜெ., பதவிப்பிரமாணம் செய்தார் கவர்னர்

சென்னை: தமிழகத்தில் மீண்டும் தொடர்ந்து ஜெ., முதல்வராக பதவியேற்றார். அவருக்கு கவர்னர் ரோசய்யா பதவிபிரமாணம் செய்து வைத்தார்.

தி.மு.க.,பொருளாளர் ஸ்டாலின், திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் பொன்முடி, சென்னை முன்னாள் மேயரும்,எம்எல்.ஏ.,வுமான மா.சுப்பிரமணியம் , சேகர்பாபு, ஏ.வ வேலு, வாகை சந்திரசேகர், இந்திய கம்யூ., சார்பில் தா.பாண்டியன், பா.ஜ.,தரப்பில் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

பகல் 12 மணியளவில் சென்னை பல்கலை., நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடந்த விழா சென்னையில் எல்ஈடி மூலம் லைவ் வீடியோ காண்பிக்கப்பட்டது. பதவியேற்பு முன்னிட்டு 3 ஆயிரத்திற்கும் அதிமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். சென்னையில் கடற்கரை சாலை உள்ளிட்ட பல இடங்களில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டது.

குஜராத்தில் தகிக்கும் வெயில்: உருகும் தார்ச்சாலைகளில் சிக்கி மக்கள் அவதி

குஜராத் மாநிலத்தில் கொளுத்தும் வெயில் காரணமாக தார்ச் சாலைகள் உருகுகின்றன. உருகிய தார்களில் மக்களின் காலனிகள் சிக்கி அவர்கள் கீழே விழுகின்றனர். மேலும் வாகனங்களும் பிடிமானமின்றி வழுக்கிச் செல்கின்றன.

வல்சாத் பகுதியில் தார்ச்சாலைகள் உருகி, தார் குழம்பாக மாறி நிற்கிறது. சிலர் சாலையைக் கடக்காமல் வேறு பகுதிகளுக்குச் செல்கின்றனர். சிலர் துணிச்சலாகக் கடக்கின்றனர். அவ்வாறு சாலைகளைக் கடப்பவர்களின் செருப்பு, ஷூ போன்றவை தாரில் சிக்கிக் கொள்கின்றன. இதனால் மக்கள் அவதிப்படுகின்றனர். சிலர் காலணி மாட்டிக் கொள்வதால் தடுமாறி விழுகின்றனர்.

ஒரு பெண் கீழே விழுந்து விட்டார். அவரைக் காப்பாற்ற யாரும் முன்வரவில்லை. அவர் விபத்துக்கு உள்ளாவதற்கு சில நொடிகளுக்கு முன்புதான் அதே இடத்தில் ஒரு லாரி, சாலையில் டயர்கள் பிடிமானமின்றி வழுக்கிச் சென்றது.

வல்சாத் பகுதியில் நேற்று முன்தினம் 36 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. ஆமதாபாத்தில் 45 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. வெயில் கொடுமைக்கு நாடு முழுவதும் ஏராளமானவர்கள் உயிரிழந்துள்ளனர். நேற்று முன்தினம் உத்தரப்பிரதேச மாநிலம் பல்லியா பகுதியில் 2 பேர் உயிரிழந்தனர்.

ராஜஸ்தானின் சுரு, ஸ்ரீகங்கா நகர் பகுதியில் 49.2 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. அதேசமயம் வங்காள விரிகுடா பகுதியில் புயல் காரணமாக கடலோர பகுதிகளில் குறிப்பிடத்தக்க மழைப்பொழிவு இருந்தது.

தலைமை தேர்தல் அதிகாரி மீது வழக்கு:விஜயகாந்த், வைகோ ஆலோசனைதமிழக தலைமை தேர்தல் அதிகாரி லக்கானி மீது வழக்கு தொடர, விஜயகாந்தும், வைகோவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அ.தி.மு.க., - தி.மு.க.,வுக்கு போட்டியாக, ம.ந.கூ., - தே.மு.தி.க., - த.மா.கா., இணைந்து உருவாக்கிய கூட்டணி படுதோல்வியை சந்தித்துள்ளது. குறிப்பாக, கூட்டணியின் முதல்வர் வேட்பாளரான விஜயகாந்த், உளுந்துார்பேட்டை தொகுதியில், 'டிபாசிட்' இழந்து படுதோல்வி அடைந்துள்ளார்.மேலும் தே.மு.தி.க., போட்டியிட்ட, 104 தொகுதிகளிலும் டிபாசிட் இழந்துள்ளது. தேர்தல் தோல்வியால் விஜயகாந்த், வைகோ, வாசன், திருமாவளவன், முத்தரசன் மற்றும் ராமகிருஷ்ணனும் சோகமடைந்தனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, சென்னை கோயம்பேடு தே.மு.தி.க., தலைமை அலுவலகத்தில், ஆறு பேரும் ஆலோசனை நடத்தினர். இரண்டு மணிநேரஆலோசனையில், தலைமை தேர்தல் அதிகாரி மீது வழக்கு தொடர திட்டமிட்டுள்ளனர்.இதுகுறித்து, தே.மு.தி.க., வட்டாரத்தில் கூறப்படுவதாவது:பணப்பட்டுவாடா காரணமாகவே, கூட்டணிக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை என, விஜயகாந்த் உட்பட, கூட்டணி கட்சி தலைவர்கள் கருதுகின்றனர். தேர்தல் நிறுத்தப்பட்டுள்ள தஞ்சாவூர், அரவக்குறிச்சி போன்ற தொகுதிகளிலும் பணப்பட்டுவாடா நடந்துள்ளது.இதை காரணமாக்கி, அனைத்து தொகுதிகளிலும் நடந்து முடிந்த தேர்தலை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடர உள்ளனர். பணப்பட்டு வாடாவை தடுக்க தவறியதாக, தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி மீதும் வழக்கு தொடர முடிவெடுத்து உள்ளனர். இவ்வாறு அக்கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.- நமது சிறப்பு நிருபர் -


ரகசியம் காப்போம்!

ரகசியம் காப்போம்! ரகசியங்களை பொது வெளியில் அல்லது மறைமுகமாக பிறருடன் பகிர்ந்து கொள்வது புதிதல்ல, புதிரல்ல. தினமணி செய்திச் சேவை Updated on: ...