Tuesday, June 7, 2016

டாக்டரின் உயிரை பறித்த 'வழுக்கை'..! வினையாகிப் போன விளம்பரம்


மனிதனை அழகாக காட்டுவதில் தலைமுடிக்கு முக்கிய பங்கு உள்ளது. ஆனால், இன்றைய சூழ்நிலையில் பல்வேறு காரணங்களால் இளம் வயதிலேயே தலைமுடி கொட்டி வழுக்கை தலையுடன் வலம் வருபவர்கள் பலர் இருக்கிறார்கள். இத்தகையவர்களை குறி வைக்கும் சில அழகு நிலையங்கள் கவர்ச்சிகரமான விளம்பரங்களை கொடுத்து வழுக்கை தலைக்கு சொந்தகாரர்களை கவருகின்றன. இதனால் ஏமாந்தவர்கள் பலர். அதை வெளியில் சொல்ல முடியாமல் தவிப்பவர்களும் உண்டு. பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் சேர்ந்த வேலூர் மாவட்டம், ஆரணியை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர் சந்தோஷ்குமார், முடி வளர ஆசைப்பட்டு உயிரையே விட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அரசு மருத்துவக் கல்லூரியில் படிப்பை முடித்த சந்தோஷ்குமார், பயிற்சி டாக்டராக பணியாற்றி வந்தார். இவருக்கு தலையில் வழுக்கை விழ, எல்லோரைப் போல அவரும் மனம் வருந்தினார். அப்போது நுங்கம்பாக்கத்தில் உள்ள அழகு நிலையத்தின் விளம்பரத்தை அவர் பார்த்துள்ளார். அங்கு சென்று தன்னுடைய வருத்தத்தை சொல்ல.. 'இதற்கெல்லாம் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு தலையில் முடியை நட்டி பழைய சந்தோஷ்குமாராக மாற்றி விடுகிறோம்' என்று அங்குள்ளவர்கள் உறுதி அளித்துள்ளனர். அதன்படி கடந்த மே மாதம் சந்தோஷ்குமார் அங்கு சென்றார்.

முடி நடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. தலையில் ஊசி மூலம் முடிகளை நடும் போது வலியை பொறுத்துக் கொள்ள டாக்டர் ஹரிபிரசாத், சந்தோஷ்குமாருக்கு மயக்க மருந்து கொடுத்துள்ளார். காலையிலிருந்து மாலை வரை முடி நடும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்த சிகிச்சையை டாக்டர் வினித் செய்துள்ளார். அப்போது, சந்தோஷ்குமாருக்கு தலைசுற்றல், மயக்கம் வந்துள்ளது. உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவர்கள் சந்தோஷ்குமாரை அழைத்துச் சென்றுள்ளனர். இதன்பிறகு நிலைமை மோசமானதும் வேலூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் சந்தோஷ்குமார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இதையடுத்து சந்தோஷ்குமாரின் பெற்றோர், மகனுக்கு இறுதி சடங்கு செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சந்தோஷ்குமாரின் குடும்பம் தரப்பில் யாரும் போலீசுக்கு புகார் கொடுக்கவில்லை. இதனால் அவரது உடல் பிரேத பரிசோதனையும் செய்யப்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவத்துறை சார்பில் மருத்துவ கவுன்சிலுக்கு புகார் செய்யப்பட்டது. உடனடியாக களமிறங்கியது மருத்துவ கவுன்சில். இதுகுறித்து தமிழக மருத்துவ கவுன்சில் தலைவர் டாக்டர் செந்தில் விசாரணை நடத்தி வருகிறார். சிகிச்சை அளித்த டாக்டர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

டாக்டர் செந்திலிடம் கேட்ட போது, "மயக்க மருந்து கொடுத்து விட்டு கடைசி வரை நோயாளியின் அருகில் இருக்காமல் சென்ற மயக்கவியல் டாக்டருக்கும், அறுவை சிகிச்சை தகுதி பெறும் முன்பே சிகிச்சை அளித்தது எப்படி? என்பது பற்றி டாக்டர் வினித்திடமும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பியூட்டி பார்லர் மற்றும் சலூன், முடிவெட்டவும், அழகு கலைக்காகவும் அனுமதி பெற்றுள்ளது. முடி நடும் சிகிச்சைக்கு அனுமதி பெறவில்லை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் அந்த பியூட்டி பார்லருக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது" என்றார்.

மருத்துவத்துறை வட்டாரங்கள் கூறுகையில், "பண சம்பாதிக்கும் ஆசையில் மக்களின் உயிரோடு விளையாடுவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக அழகு நிலையங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் முறைகேடாக நடக்கின்றன. முடி நடுவதற்காக 50 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சம் வரை கட்டணமாக வசூலிக்கிறார்கள். அதை நம்பி பலர் ஏமாந்து செல்கிறார்கள். 40 வயதை கடந்த பெண்கள் முகத்தில் விழும் சுருக்கத்தை பார்த்து துடித்து போகிறார்கள். அதை போக்குவதற்காக ‘போட்டாக்ஸ்’ என்ற ஊசியை போட்டுக் கொள்ளும் சம்பவங்களும் நிகழ்கின்றன. சரியான மருத்துவ உபகரணங்கள், டாக்டர்கள் வசதி இல்லாமல் இந்த மாதிரி சிகிச்சை அளிப்பது குற்றமாகும். உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும். எனவே மக்கள் விழிப்பு உணர்வாக இருக்க வேண்டும். அழகுக்கு ஆசைப்பட்டு உயிரை இழப்பதை தவிர்க்க வேண்டும். இதுபோன்ற அழகு நிலையங்கள் குறித்து மருத்துவ கவுன்சிலிடம் புகார் கொடுக்கலாம்" என்றனர்.

எஸ்.மகேஷ்

தன்னை உயர்த்த அடுத்தவரை தாழ்த்தலாமா?

DINAMANI

By இரா. சோமசுந்தரம்

பிகார் மாநிலத்தில் இன்டர்மீடியட் தேர்வு முடிவுகளில் மாநில அளவில் தரவரிசையில் இடம்பெற்ற முதல் 14 மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தி, உண்மையாகவே அந்த கேள்விகளுக்கு அவர்கள்தான் விடையளித்தார்களா என்பதைக் கண்டறிந்துள்ளது அம்மாநில கல்வித் துறை.
 இதற்குக் காரணம், அந்த மாணவ, மாணவிகளிடம் ஒரு தனியார் தொலைக்காட்சி பேட்டி கண்ட போது, அடிப்படையான கேள்விகளுக்கும்கூட அவர்கள் தப்பான பதில்களை அளித்ததாக ஒளிபரப்பாகி, பிகார் மாநிலத்தின் கல்வித்துறையை கேலிக்கு இடமாக்கியுள்ளது என்பதுதான். இருப்பினும், பிகார் மாநில கல்வித் துறை இவ்வளவு அவசர அவசரமாக, அவர்களுக்குத் தேர்வு நடத்தும் முடிவுக்கு வந்திருக்க வேண்டியதில்லை.
 தமிழ்நாட்டில் தரவரிசையில் இடம்பெற்ற மாணவர்களைக்கூட இவ்வாறு திடீரென கேமிரா முன்பாக நிறுத்திவைத்து, கேள்விகள் கேட்டால், அந்த மாணவ, மாணவியர் பதற்றமாகிவிடுவார்கள். அவர்களால் சரியாக பதில்சொல்ல முடியாது. 
 ஆங்கிலத்தில் 100 மதிப்பெண் வாங்கிய மாணவரிடம் ஒரு வடநாட்டு தொலைக்காட்சி நிறுவனம் நுனிநாக்கு ஆங்கிலத்தில் கேள்வி கேட்டால், அவரால் அந்தக் கேள்வியைப் புரிந்துகொள்வதே கடினமாக இருக்கும். 
 அந்தக் கேள்விக்கு ஆங்கிலத்திலேயே "பொளந்துகட்ட' வேண்டும் என்று அந்த தொலைக்காட்சி நிறுவனம் எதிர்பார்த்தால், அவ்வாறு நடக்கவில்லை என்பதற்காக அந்த மாணவரைத் தரம் தாழ்த்தினால், அதை நாம் அனுமதிப்போமா?
 தரவரிசையில் இடம்பெறும் மாணவர்கள் பலருக்கு விடையை மனப்பாடமாக எழுத மட்டுமே தெரியும். அவர்களிடம் பதிலைச் சொல்லும்படி சொன்னால் திணறிப் போவார்கள். கோர்வையாக எடுத்துவைக்கத் தெரியாது. 
 ஏனென்றால், அவர்களது பயிற்சி முழுதும், ஒவ்வொரு நாளும், ஒரே மாதிரியான கேள்விக்கு ஒரே மாதிரியான விடைகளை எழுதிக்கொண்டே இருப்பதுதான். கேள்வியை கண்கள் பார்க்கும், விடையை கைகள் எழுதும். மூளைக்கு அங்கே வேலையே இல்லை. மதிப்பெண் பெறுவதற்காக விடைகளை எழுத மட்டுமே பயிற்சி தரப்படுகிறது. 
 பெங்களூருவைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் சுதா மூர்த்தி (இன்போசிஸ் நாராயண மூர்த்தியின் மனைவி) ஒரு பள்ளியில் சிறுவர்களுக்காக தான் எழுதிய கதையை வாசித்தார். அப்போது ஒரு சிறுவன் எழுந்து, உங்களுக்குப் படிக்கத் தெரியவில்லை என்று கூறினான். ஆசிரியர்களின் மழுப்பல்களை மீறி, அந்தச் சிறுவனிடம் அவர், ஏன் அப்படிச் சொன்னாய்? என்று கேட்டார். 
 பேசியதில் அந்தச் சிறுவன் பள்ளி நாடகத்தில் ஏற்றஇறக்கத்துடன் பேசிப் பழகியிருந்ததை அறிந்துகொண்டு, "என் கதையைப் படிக்க முடியுமா?" என்று அந்தச் சிறுவனிடம் கேட்டார். சிறுவனும் கதையை வாசித்தான்; சுதா மூர்த்தியைவிட மிக அழகாக! "அப்போதுதான் எனக்குப் புரிந்தது. எழுத மட்டுமே எனக்குத் தெரியும்!' என்று கட்டுரையை முடிக்கிறார் சுதா மூர்த்தி.
 இன்றைய கல்விச் சூழலில் பல மாணவ, மாணவியருக்கு எழுத மட்டுமே தெரியும். அவர்களை குறுக்குக்கேள்வி கேட்டு, மடக்குவது எளிது. அதை புத்திசாலித்தனமான அராஜகம் அல்லது அறிவீனம் என்று எப்படியும் எடுத்துக்கொள்ளலாம். பிகாரில் குறை கூறப்பட்டுள்ள இந்த ஏழு மாணவ, மாணவியரும் ஒரே இடத்தில் தேர்வு எழுதியவர்கள் அல்லர். அவர்களும்கூட கேள்விக்கு, இயந்திரத்தனமாக, புரிதல் இல்லாமல் பதில் எழுதியவர்களாக இருக்கலாம்.
 ஒரு தொலைக்காட்சி நிறுவனம், ஒரு மாநிலத்தின் கல்வித் தரத்தை சோதிப்பதாக இருந்தால், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அந்த மாநிலத்திலும், மாவட்ட அளவிலும் முதலிடம் பெற்ற மாணவர்கள் பட்டியலை எடுத்து, அந்த மாணவர்கள் இப்போது என்னவானார்கள்? அவர்கள் உயர் கல்வியில் தேர்ச்சி பெற முடிந்ததா? 
 அதே அறிவுத்திறத்துடன் கல்லூரிகளைவிட்டு வெளியேறி, பேரும் புகழும் மிக்கவர்களாக அறிவுலகில் இயங்குகிறார்களா என்பதை தேடிச் சென்று, மதிப்பீடு செய்வதுதான் சரியாக இருக்க முடியும். அதுதான் கல்வித் துறையின் பலவீனங்களை அம்பலப்படுத்துவதாக அமையும். அதைவிடுத்து, மாணவ - மாணவியரை கேள்வி கேட்டு, அவர்களை அறிவு இல்லாதவர்களாக சித்திரிப்பது முறையற்ற செயல்.
 காப்பியடித்தல், வினாத்தாள் முன்கூட்டியே வெளியாதல், வேறுநபர் தேர்வு எழுதுதல் எல்லாவற்றுக்கும் சாத்தியம் இருக்கிறது என்றாலும், இத்தகைய பேட்டி வெளியானவுடன், பிகார் மாநில கல்வித் துறை அதிகாரிகள் அந்த மாணவ, மாணவியர் படித்த பள்ளியில் அவர்களது காலாண்டு, அரையாண்டு விடைத்தாள்களை எடுத்துப் பார்த்து ஒப்பீடு செய்திருக்கலாம். அப்பள்ளியின் மற்ற மாணவர்களிடம் அவர் உண்மையாகவே வகுப்பறையில் சிறந்து விளங்கினாரா என்று விசாரித்திருக்கலாம். அதைவிடுத்து, மறுதேர்வு நடத்தியது தவறான முன்னுதாரணம். 
 நாடு முழுவதும் கற்பித்தல் முறை, மதிப்பிடும் முறையில் மாற்றம் ஏற்பட வேண்டும்; ஒரு மாணவர் ஒரேயொரு தேர்வில் பெறும் மதிப்பெண் மட்டுமே அவருடைய கல்வித்திறனாக மதிக்கப்படும் நிலை மாற வேண்டும் என்பது உண்மை. 
 மேலும், ஒரு கல்வியாண்டில் இரு பருவம் அல்லது மூன்று பருவத் தேர்வுகளில் கிடைக்கும் மதிப்பெண்களின் சராசரியைக் கொண்டு மதிப்பிடவாகிலும் செய்யலாம். தற்போதைய கல்வி நடைமுறைகள் சரியில்லை என்பதற்காக, தரவரிசையில் இடம்பெறும் மாணவர்கள் புத்திசாலிகள் அல்ல என்பதை இப்படியெல்லாம் நிரூபிக்க வேண்டியதில்லை.
 கல்வித் தரம் தாழ்ந்திருக்கிறது என்பதை அம்பலப்படுத்துவது மட்டுமே ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தின் குறிக்கோளாக இருந்தால், பாராட்டலாம். டி.ஆர்.பி. ரேட்டிங்கை (தொலைக்காட்சி தரப் புள்ளியை) உயர்த்திக்கொள்வதற்காக இப்படியா?

எதிர்கால முதியவர்களுக்கு...


சுதந்திர இந்தியா சாதித்துள்ள எத்தனையோ விஷயங்களில் குறிப்பிடத்தக்க ஒன்று ஆயுள் நீட்டிப்பு ஆகும். 1960-களில் இந்தியரின் சராசரி ஆயுள்காலம் 42 ஆண்டுகளாக இருந்ததென்றும், அது கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி இப்போது சுமார் 66 ஆண்டுகளைத் தொட்டிருப்பதாகவும் மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அறிக்கை தெரிவிக்கிறது.
மருத்துவ வசதிகளின் பெருக்கம், மருத்துவமனைகளின் பரவல், தீவிரத் தொற்று நோய் ஒழிப்பு இயக்கங்கள், ஊட்டச்சத்து மிக்க உணவு ஆகிய பல காரணிகளால் ஓர் இந்தியக் குடிமகனின் சராசரி ஆயுள் இந்த அளவுக்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது.
எல்லாம் சரி! நீட்டிக்கப்பட்டிருக்கும் அந்த ஆயுள் நிம்மதியான வாழ்வுக்கு வழிவகை செய்திருக்கிறதா என்றால், இல்லை என்பதே அதற்கான விடையாக இருக்கும்.
இரண்டில் ஒரு முதியவர் ஆதரவின்றி இருப்பதாகவும், மூன்றில் ஒரு முதியவர் வசைச் சொற்களுக்கு ஆளாவதாகவும், நான்கில் ஒரு முதியவர் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாகவும், அறுபது சதவீதத்திற்கும் மேற்பட்ட முதியவர்கள் தங்கள் மகன்-மருமகள் உள்ளிட்ட நெருங்கிய உறவினர்களிடம் வசைச்சொல் கேட்பவர்களாகவும் இருப்பதாக இன்னோர் ஆய்வுத்தரவு எடுத்துக் கூறுகிறது.
கண்பார்வைக் கோளாறு, மூட்டுவலி இல்லாத முதியோரைப் பார்ப்பதே அரிது எனலாம். உழைக்கும் வலிமையின்றி, வருமானமும் வறண்டு போன நிலையில் இருக்கும் முதிய வயதினரை அவர்களது குடும்பத்தினர்களே சுமையாகக் கருதும் காலம் இது.
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு முதியோர் இல்லங்கள் பெருகியிருப்பது ஒன்றே இன்றைய இந்தியக் குடும்பங்களில் முதியோர் பெறும் முக்கியத்துவத்தை உணர்த்தும்.
தமிழ்நாட்டில் கோயமுத்தூர் மாவட்டத்தில் மட்டும் 33 முதியோர் இல்லங்கள் இருக்கின்றன என்றால், நாடு முழுவதும் எத்தனை முதியோர் இல்லங்கள் இருக்கக் கூடும் என்பதைச் சொல்லத் தேவையில்லை.
வருமானம் ஏதுமில்லாத முதியோர்கள் மட்டும்தான் புறக்கணிப்புக்கு ஆளாவதாகக் கூறிவிடவும் முடியாது. சொத்து சுகம், ஓய்வூதியம் போன்றவற்றைப் பெற்றிருக்கின்ற முதியோர்களும்கூட இத்தகைய புறக்கணிப்பிறகு ஆளாகின்றனர்.
ஓய்வூதியமும் சுமார் 30 சதவீதத்திற்கும் குறைவானவர்களுக்கே கிடைக்கிறது என்பது ஒருபுறமிருக்க, புதிய தலைமுறை மத்திய-மாநில அரசு ஊழியர்களுக்கு அந்தச் சலுகை நீட்டிக்கப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
பழைய ஓய்வூதியம் தொடர வேண்டுமென்ற கோரிக்கையே இப்போது அரசு ஊழியர்கள் முன்வைக்கும் முக்கியக் கோரிக்கையாகிவிட்டது. நிதிச்சுமையைக் காரணம் காட்டி ஓய்வூதியக் குறைப்பு அல்லது தவிர்ப்பு என்ற நிலைமையை நோக்கியே மத்திய அரசு மற்றும் பல மாநில அரசுகளும் பயணிக்கின்றன.
நான் நீண்ட காலமாக வழிபடச் செல்லும் ஒரு கோயிலின் வாசலில் சுமார் 70 வயதுள்ள, படிப்பு வாசனை உள்ளவர்போல் தோற்றமுள்ள ஒரு பெண்மணி பிச்சை எடுப்பது வழக்கம். ஒவ்வொரு மாதத்தின் முதல் ஓரிரண்டு நாள்கள் மட்டும் பிச்சை எடுக்க அந்தப் பெண்மணி வருவதில்லை. ஏன் என்று விசாரித்ததில், கிடைத்த தகவல் அதிர வைத்தது.
உண்மையில் அந்தப் பெண்மணி ஓர் ஓய்வு பெற்ற ஆரம்பப் பள்ளி ஆசிரியை. அவருடைய ஒரே அருமை மகன், மாதத்தின் முதலிரண்டு நாள்கள் மட்டும் அவரைத் தன் வீட்டுக்கு அழைத்துப்போய், சாப்பாடு போட்டு, அவரது ஓய்வூதியப் பணத்தை முழுவதுமாக வாங்கிக்கொண்டு, பிறகு அந்தக் கோயிலின் வாசலில் மறுபடியும் பிச்சை எடுக்கச் சொல்லிக் கொண்டு வந்து விட்டுவிடுகிறானாம்.
இன்னொரு காட்சி, கோயமுத்தூரைச் சேர்ந்த 77 வயது முதியவர். இவர் ஓர் ஓய்வூதியம் பெறும் அரசு ஊழியர். இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள். அனைவரும் திருமணமானவர்கள். பெற்றெடுத்த செல்வங்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை எல்லாம் செய்து முடித்துவிட்ட திருப்தியுடன் தம்முடைய மனைவியுடன் தனியே வசித்து வந்தார் அந்த முதியவர்.
சில மாதங்களுக்கு முன்பு மனைவியும் காலமாகி விட்டார். முதுமையின் காரணமாகத் தன்னைத் தானே கவனித்துக் கொள்ள முடியாத நிலையில், தம்முடைய இரண்டு மகன்கள் மற்றும் மகளை அழைத்து, தன்னை அவர்களுடன் வைத்துக் கொள்ளும்படிக் கேட்டிருக்கிறார். இத்தனைக்கும் அவரது பராமரிப்புக்கு வேண்டிய பணம் அவரது ஓய்வூதியம் மூலமாகவே கிடைத்துவிடும்.
ஆனாலும், அவரை ஏற்க மறுத்த அவருடைய வாரிசுகள், அவரை ஒரு முதியோர் இல்லத்தில் சேரும்படிக் கூறிவிட்டு அவரவர் வீடு திரும்பியிருக்கிறார்கள். மன உளைச்சலில் இருந்த அந்த முதியவர் சென்ற வாரம் தற்கொலை செய்து கொண்டார். ஓய்வூதியம் என்ற பாதுகாப்பு இருந்தும் மேற்படி பெண்மணிக்கும், முதியவருக்கும் உறவினரின் ஆதரவு கிடைக்கவில்லை என்பதே இங்கு அறிய வேண்டியது.
இவை எல்லாம் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெறுவதுதான் என்றாலும், ஒவ்வொரு வீட்டிலும் வயது முதிர்ந்தவர்களை வேண்டாத பாரமாகக் கருதும் போக்கு முன்னெப்போதையும்விட அதிகரித்து வருகிறது என்பதே உண்மை. இதைத்தவிர, இன்னொரு உண்மையையும் நினைத்துப் பார்க்க வேண்டியுள்ளது.
இன்றைய இளம் பிராயத்தினர் அனைவரும் முதுமையை அடைந்தே தீர வேண்டும். இன்றைய முதியவர்களுக்கு நேர்வதைத்தான், இன்றைய இளைஞர்கள் தங்களது முதுமைப் பிராயத்தில் சந்திக்கவேண்டி இருக்கும்.
தங்களது எதிர்கால நலத்துக்காக அதாவது சுயநலத்துக்காகவேனும் தங்களைப் பெற்றவர்களைக் கைவிடாமல் இருக்க முயற்சிக்க வேண்டும். ஏனெனில், நீங்கள் உங்கள் பெற்றோருக்குச் செய்யும் எல்லாவற்றையும் உங்கள் வாரிசுகள் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

எஸ். ஸ்ரீதுரை

வாழும் எண்ணம் பவித்திரமானது!

பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களிடம் நிருபர்கள் பொதுவாகக் கேட்கிற கேள்வி: நீங்கள் என்னவாக விரும்புகிறீர்கள்? நான் உயிரோடு, துடிப்பாக இருக்க விரும்புகிறேன்  என்று யாராவது சொல்லியிருப்பர்களா தெரியாது! சொன்னால், அது ஏனோதானோ பதிலாக இருக்க பெரும்பாலும் வாய்ப்பில்லை. காரணம், அதில் அவர்களது அடுத்த  30, 40 ஆண்டு வாழ்க்கைச் சுருக்கமே, அணுகுமுறையே அடங்கிவிட வாய்ப்பிருக்கிறது.
ஐம்பது வயதில் கைநிறைய சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கும்போதே பதவி உயர்வு உரிய நேரத்தில் வரவில்லை என்று காரணம் சொல்லி, வயதான பெற்றோரையும் குடும்பத்தையும் நிர்கதியில் விட்டுத் தற்கொலை செய்து கொள்ளும் ஆட்களைப் பார்க்கிறோம்.
ஆனால், இதற்கு முன்பு பெற்ற நான்கைந்து பதவி உயர்வால் எவ்வளவு மனநிறைவு, எவ்வளவு நாள் பெற்றோம், அது எத்தனை நாள் நீடித்தது என்று அவர்கள் ஒரு நொடி திரும்பிப் பார்ப்பதில்லை. அந்தப் பக்கம், பதவி உயர்வு பெற்று பழக்கப்படாத இடத்தில் விழிபிதுங்கி நொந்து நூலாகிக் கொண்டிருக்கும் தம் நண்பர்களையும் பார்ப்பதில்லை. சம்பளம் அதிகம், அதிகாரம் அதிகம், மற்றவர்களை உருட்ட, மிரட்ட வாய்ப்புகள் அதிகம்.. இதுதான் மனநிறைவுக்கும் முன்னால் நிற்கிறது.      
நவீன உலகில் மனஉளைச்சல், முறிவு ஆகியவை அதிகம் என்று சொல்லி நிறைய மருத்துவ, மனோதத்துவ மருந்து சொல்கிறார்கள். நானும் எனக்குத் தெரிந்த, ஆனால், கண்டிப்பாக வேலை செய்யும் ஒரு மருந்து சொல்கிறேன். இதற்கு ஆகும் செலவு வெறும் 10 ரூபாய் தான்.
உங்கள் வீட்டின் அருகில் உள்ள ரயில் நிலையத்திலிருந்து தாம்பரத்திற்கோ சென்னை கடற்கரைக்கோ "ரிடர்ன் பயணச்சீட்டு' ஒன்று எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு ஜன்னல் ஓரமாக உட்கார்ந்து, வெறுமனே வண்டிக்கு உள்ளேயும் வெளியேயும் கூர்ந்து கவனியுங்கள்.
 பல்வேறு உடல்குறைகளையும் பொருள்படுத்தாமல் பர்பியும் சீப்பும் பெல்ட்டும் விற்பவர்கள், கூவம், அடையாறு போன்ற ஆறு, ஏரிக்கரைகளில் குப்பையோடும் பன்றிக் குட்டிகளோடும் வாழும் ஆயிரக்கணக்கான குடிசைவாசிகள், பிச்சைக்காரர்கள், உடல், மனநிலை குன்றியவர்கள், இடுப்பில் கைக் குழந்தை, கையைப் பிடித்துக் கொண்டு இன்னொன்று, தலையில் ஒட்டடைக் குச்சியுடன் பிரதி தினம் காலை முதல் மதியம் வரை தெருக்களில் விற்பனைக்கு இறங்கும் சாதனைப் பெண்மணிகள், ரெண்டு கிலோ, மூன்று கிலோ பொருள்களையே கனக்குது, நீதூக்கி வா என்று சொல்கிற நாகரிகத்தில் ஒரு சாணை பிடிக்கும் எந்திரத்தை இயல்பாக தோளில் நாய்க்குட்டி மாதிரி தூக்கிக் கொண்டு தெருத் தெருவாக அலையும் இஸ்லாமிய நண்பர், பன்னாட்டு நிறுவனத்தின் 15-ஆவது மாடியைக் கட்ட கல், மண் தூக்கும் சித்தாள்கள், கொத்தனார்கள் போன்ற இவர்களையெல்லாம் ஒரு தடவை பார்த்துவிட்டுத் திரும்பி வாருங்கள்.
நீங்கள் தற்கொலை எண்ணத்தை இத்தனைநாள் சுமந்ததற்காக உங்கள் மேல் நீங்களே காறித்துப்பிக் கொள்ளவில்லை என்றால் என்னைக் கேளுங்கள்.
இன்னொரு சம்பவமும் இணையத்தில் பேசப்பட்டது. சில  மாதங்களாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கடுமையான வறட்சி. நகரத்தில் உள்ளவர்கள் பிழைத்துக் கொள்கிறார்கள். வழக்கம்போல் கிராமவாசிகள் 200 அடி, 300 அடி கிணறெல்லாம் வற்றிப்போய் இரண்டு பிளாஸ்டிக் குடங்களுடன் பல மைல்கல் நடந்துவந்து ரயில் நிலையங்களில் தவம் கிடக்கிறார்களாம்.
ஏதாவது ரயில் வந்ததோ இல்லையோ அத்தனை பேரும் ரயில் பெட்டிகளின் கழிவறைக்குள் புகுந்து கிடைக்கிற சுத்த, அசுத்த நீர் எதுவாக இருந்தாலும் ரயில் நிற்கிற நான்கைந்து நிமிடங்களுக்குள் பிடித்துக் கொள்கிறார்களாம். குடிப்பது முதல் கை-கால் கழுவுவது வரை அவர்களுக்கு அதுதான் அன்றைக்கு.
மரணம் பிடரியைப் பிடித்து அழுத்தத்தான் செய்கிறது. ஆனால், வாழ வேண்டும் என்கிற வெறி அவர்களை உயிருடன் விட்டுவைத்திருக்கிறது. ஆக, உயிர்த் துடிப்புள்ள விஷயங்களையே பாருங்கள், கேளுங்கள், யோசியுங்கள்.
நல்ல பல விஷயங்களை எல்லோருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். நான் தனிமனிதன். நான் வேண்டுமானால் நம்பிக்கையுடன் வாழ்வேன். மற்றவர்கள் தற்கொலை செய்துகொள்வதை நான் எப்படி தடுப்பது என்ற கேள்வி உங்களுக்குள் வரலாம்.
வாழ வேண்டும் என்ற எண்ணம் பவித்திரமானது என்ற நினைப்பை உங்களைச் சுற்றியுள்ளவர்களிடம் விதைத்தாலே போதுமானது.
விழுப்புரம் மாவட்டம் தனியார் சித்த மருத்துவக் கல்லூரி மாணவிகள் மூன்று பேர் அடிப்படை வசதி கல்லூரியில் இல்லை என்று சொல்லி கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்களே. அதன்பின், நாடு முழுதும் கல்லூரி வசதிகள் எவ்வளவு அதிகரிக்கப்பட்டன?
 மாற்றாக, ஒரு செயல் வீரரின் சாகசம் பாருங்கள். திருவாரூர் மாவட்ட காளாச்சேரி மேற்கு கிராம ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் ஆனந்த். நான்காண்டுகளுக்கு முன்பு வரை அவர் இருக்கிற 300 வீடுகளில் சிறுவர், முதியவர் என்று வயது வித்தியாசம் பாராமல் தற்கொலைகள் அதிகம். 10 ஆண்டில் 100-க்கும் மேற்பட்ட தற்கொலைகள்.
2009-இல் அவர் அந்த கிராமத்திற்கு அடியெடுத்த பிறகு நாடகம், விழிப்புணர்வு பிரசாரம், பேரணி, மக்கள் சந்திப்பு, குறைகேட்கும் நேரம் என்று செய்து நான்கு ஆண்டுகளில் ஒரு தற்கொலை இல்லாதது மட்டுமன்றி வாழ்க்கை, சிந்திக்கும் திறன் என்று கிராமத்தில் எல்லாவகையிலும் முன்னேற்றம்.
தனி மனிதர், வெறும் பள்ளி ஆசிரியரால் இது முடிந்தது என்பதை நினைத்துப் பார்க்க முடிகிறதா?
ஸ்ரீதர்சாமா

கோவை இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லூரியில் 100 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு அனுமதி



கோவை, இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லுாரியில், நடப்பு ஆண்டில், 100 எம்.பி.பி.எஸ்., இடங்களில் மாணவர் சேர்க்கை நடத்த, இந்திய மருத்துவக் கவுன்சிலான, எம்.சி.ஐ., அனுமதி அளித்துள்ளது. இதனால், அரசு மருத்துவக் கல்லுாரிகளின் எண்ணிக்கை, 21 ஆகவும்; எம்.பி.பி.எஸ்., இடங்களின் எண்ணிக்கை, 2,760 ஆகவும் உயர்ந்துள்ளன.கோவையில், 520 கோடி ரூபாய் செலவில், இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லுாரி அமைக்கப்பட்டது. இதை, ஜனவரியில் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லுாரிகளை நடத்த முடியாமல் திணறி வரும் மத்திய தொழிலாளர் நலத்துறை, கோவை மருத்துவக் கல்லுாரியை, தமிழக அரசிடம் ஒப்படைத்தது. இந்த கல்லுாரியில், மாணவர் சேர்க்கைக்கு அனுமதி கோரி, தமிழக அரசு முறையாக விண்ணப்பித்தது.

ஆய்வு செய்த, எம்.சி.ஐ., பல குறைபாடுகளை சுட்டிக்காட்டி, அனுமதி தர மறுத்தது. குறைபாடுகள் சரி செய்யப்பட்ட நிலையில், நடப்பு கல்வி ஆண்டில், 100 எம்.பி.பி.எஸ்., இடங்களில் மாணவர் சேர்க்கை நடத்த, எம்.சி.ஐ., அனுமதி அளித்துள்ளது.

இது குறித்து, மருத்துவக் கல்வி இயக்குனர் விமலா கூறியதாவது:கோவை மருத்துவக் கல்லுாரியில், எம்.பி.பி.எஸ்., படிப்பில், 100 மாணவர்களைச் சேர்க்க, எம்.சி.ஐ., அனுமதி அளித்து உள்ளது. இதில், 15 சதவீதம், அகில இந்திய ஒதுக்கீட்டிற்கும்; 65 இடங்கள் மாநில ஒதுக்கீட்டிற்கும்; 20 இடங்கள், இ.எஸ்.ஐ., தொழிலாளர் வாரிசுகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. முதற்கட்ட கலந்தாய்வில் இந்த இடங்கள் சேர்க்கப்பட்டு, மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

21வது அரசு கல்லுாரி:தமிழகத்தில், கடந்த கல்வி ஆண்டில் அனுமதி பெற்ற, ஓமந்துாரார் அரசு மருத்துவக் கல்லுாரி உட்பட, 20 அரசு மருத்துவக் கல்லுாரிகள் உள்ளன. கோவை, இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லுாரிக்கு அனுமதி கிடைத்துள்ளதால், அரசு மருத்துவக் கல்லுாரிகளின் எண்ணிக்கை, 21 ஆக உயர்கிறது.

ஏற்கனவே, 20 அரசு மருத்துவக் கல்லுாரிகளில், 2,665 எம்.பி.பி.எஸ்., இடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. மதுரை அரசு மருத்துவக் கல்லுாரியில், 155 இடங்களில், ஐந்து இடங்களை இந்த ஆண்டு, எம்.சி.ஐ., குறைத்ததால் மொத்தம், 2,660 இடங்கள் உள்ளன. கோவை கல்லுாரியின், 100 இடங்களையும் சேர்த்தால், அரசு கல்லுாரிகளில் எம்.பி.பி.எஸ்., இடங்கள் எண்ணிக்கை, 2,760 ஆக உயர்ந்துள்ளது.- நமது நிருபர் -

பள்ளிக்கு வந்தால் ரூ.1,000 பரிசு அசத்தும் தலைமையாசிரியர்!

சங்கராபுரம்: அரசு தொடக்கப் பள்ளிகளில், மாணவ, மாணவியர் சேர்க்கை குறைந்து வருகிறது. இந்த சூழ்நிலையில், பெற்றோர் தங்கள் குழந்தைகளை, அரசு பள்ளியில் சேர்ப்பதை ஊக்கப்படுத்தும் வகையில், தலைமையாசிரியர் ஒருவர், 1,000 ரூபாய் பரிசு வழங்கி அசத்தி வருகிறார்.
கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் திறந்தாச்சு. அருப்புக்கோட்டை உட்பட தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில், அரசு தொடக்கப் பள்ளிகளில், மாணவ, மாணவியர் சேர்க்கை கவலையளிக்கும் விதத்தில் உள்ளது. ஒரு மாணவிக்கு, இரு ஆசிரியர்கள் உள்ளனர். எல்லா வசதிகள் இருந்தும், அரசு பள்ளிகளை கண்டுகொள்வதில்லை என, ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
மாணவர் சேர்க்கைக்காக, ஆசிரியர்கள், கிராமம் கிராமமாக சென்று பரப்புரை செய்தும், பொதுமக்கள் மத்தியில் ஆதரவு இல்லை என்ற பரவலான குற்றச்சாட்டு உள்ளது.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் அடுத்த கொடியனுார் கிராமத்தில் உள்ள, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மீது, சுற்றுவட்டார மக்களின் பார்வை திரும்பி உள்ளது. இந்த பள்ளியில், 1ம் வகுப்பு முதல், 5ம் வகுப்பு வரை உள்ளது. இதன் தலைமை ஆசிரியராக சுரேஷ் பணிபுரிகிறார்.
கோடை விடுமுறையின்போது, கிராமம் முழுவதும் வீதி வீதியாகச் சென்று, 'கொடியனுார் பள்ளியில் புதிதாக மாணவர்களை சேர்த்தால், ஒரு மாணவருக்கு, தலா,1,000 ரூபாய் பரிசாக வழங்கப்படும்' என, கிராம மக்களிடம், தலைமை ஆசிரியர் சுரேஷ் தெரிவித்தார்.
தலைமை ஆசிரியர் கூறியதை ஏற்றுக் கொண்ட பெற்றோர், கடந்த, 1ம் தேதியன்று, பள்ளி திறக்கப்பட்டதும், தங்கள் பிள்ளைகளை வெளியூர் பள்ளிகளுக்கு அனுப்பாமல், கொடியனுார் அரசுதொடக்கப் பள்ளியில் சேர்த்து வருகின்றனர்.
பள்ளி திறந்த முதல், இரு நாட்களில் மட்டும், 10 மாணவர்கள் புதிதாக பள்ளியில் சேர்ந்துள்ளனர். ஒவ்வொரு மாணவருக்கும், தான் அறிவித்தது போல, தன் சொந்த பணத்தில், தலா, 1,000 ரூபாயை சுரேஷ் வழங்கினார்.
இதனால், இப்பள்ளியில் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை ஆர்வமுடன் சேர்க்கின்றனர். ஓட்டுக்காக, பணம் பட்டுவாடா செய்யும் அரசியல்வாதிகள் மத்தியில், எதிர்கால சமுதாயம் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செய்யப்படும், தலைமையாசிரியரின் இந்த முயற்சி பாராட்டுக்குரியது.

ஆஸ்திரேலிய இயக்குநரின் பாராட்டு

எம்ஜிஆர் 100 | 80 - ஆஸ்திரேலிய இயக்குநரின் பாராட்டு

‘நான் ஏன் பிறந்தேன்’ படப்பிடிப்பின்போது எம்.ஜி.ஆரை ஆஸ்திரேலிய தயாரிப்பாளரும் இயக்குநருமான ஜான் மெக்கலம் (வலது) சந்தித்தபோது எடுக்கப்பட்ட படம். அருகில் மணியன் உள்ளார்.

M.G.R. தான் நடிக்கும் படங்களின் கதை அமைப்பை ஒட்டி பாத்திரத்துக்கேற்ப, அதன் தேவைக்கேற்ப நடிப்பார். பெரும்பாலும் ஆக் ஷன் படங்களில் நடித்ததால், அவருடைய அற்புதமான நடிப்புத் திறன் பெரிதும் கவனிக்கப்படாமல் போனது.
எம்.ஜி.ஆர். தனக்கென்று நடிப்பில் தனிப் பாணியை உருவாக்கி முத்திரை பதித்தவர். மு.க.முத்து உட்பட பல நடிகர்கள் அவரது பாணியைப் பின்பற்றி நடித்தார்களே தவிர, அவர் யாருடைய பாணியையும் பின்பற்றியதில்லை. ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தில் கோழையாகவும் வீரனாகவும் இரண்டு வேடங்களில் எம்.ஜி.ஆர். நடித்திருப்பார். அதில் ராமு என்ற பெயரில் கோழையாக வரும் பாத்திரத்தின் அறிமுகக் காட்சியில் இருந்து கடைசியில் அவருக்கு வீரம் வரும்வரை, முகத்தில் ஒருவித பயம் இருந்து கொண்டே இருக்கும். பயத்தின் வெளிப்பாடாக நெஞ்சுக்கு நேரே இரு கைகளையும் கோர்த்தபடி உடல் மொழியை வெளிப்படுத்தி இருப் பார்.
நம்பியாருக்கு பயந்து வீட்டைவிட்டு வெளியேறி ஓட்டலுக்கு எம்.ஜி.ஆர். சாப்பிட வருவார். இரண்டு இட்லி வாங்கி ஒரு விள்ளல் எடுத்து வாயில் போட்ட பின், சுற்றிலும் எல்லோரையும் பார்த்தபடி ஒரு அசட்டு சிரிப்பு சிரிப்பார் பாருங்கள். வெளி உலகில் பயமின்றி சுதந்திரமாக அவர் சாப்பிடும் முதல் இட்லி அது என்பதை அந்த சிரிப்பிலேயே உணர்த்தி இருப்பார்.
‘பெற்றால்தான் பிள்ளையா?’ படத்தில், தான் எடுத்து வளர்க்கும் குழந்தையிடம், ‘‘நீ வளர்ந்து பெரிய வனாகி விமானத்தில் வந்து இறங்கும் போது நான் கூட்டத்தில் நிற்பேன். என்னை கவனிக்காமல் போய்விடுவாய்’’ என்று எம்.ஜி.ஆர். பரிதாபமாக சொல்லும் காட்சி கண்கலங்க வைக்கும். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
நகைச்சுவைக் காட்சிகளிலும் எம்.ஜி.ஆர். பிய்த்து உதறுவார். நகைச் சுவைப் படமான ‘சபாஷ் மாப்பிளே’ படத்தை பேரறிஞர் அண்ணா பார்த்து விட்டு, ‘‘சபாஷ் எம்.ஜி.ஆர்!’’ என்று பாராட்டினார். சண்டை, நடனக் காட்சி களில் கேட்கவே வேண்டாம். உடன் நடிப்பவர்களை ‘ஓவர் டேக்’ செய்யும் முனைப்பு எம்.ஜி.ஆரிடம் இருக்காது. கதைக்கேற்ப, அந்தந்தப் பாத்திரத்தின் தன்மைக்கேற்ப அளவோடு, மென்மை யாக, இயல்பான நடிப்பை வெளிப் படுத்துவார்.
இப்போதெல்லாம் ‘இயற்கையான நடிப்பு’ என்று பரவலாக பேசப்படுகிறது. அதை அந்தக் காலத்திலேயே செய்தவர் எம்.ஜி.ஆர்.! அவரது இயற்கையான நடிப்பு வெளிநாட்டவர்களையும் கவர்ந் தது. அதனால்தான் ஆஸ்திரேலியாவின் பிரபல தயாரிப்பாளரும் இயக்குநருமான ஜான் மெக்கலம், ‘‘இயற்கையாக நடிக் கும் இந்திய நடிகர் எம்.ஜி.ஆர்.’’ என்று பாராட்டினார். சென்னை வந்தபோது எம்.ஜி.ஆரை சந்தித்துப் பேசிய மெக்கலம், பின்னர் அவருடன் சேர்ந்து கூட்டாக படம் தயாரிக்கப் போவதாகவும் அறிவித்தார். பிறகு, அதிமுகவை எம்.ஜி.ஆர். தொடங்கி அரசியலில் பிஸியானதால் அது நிறைவேறவில்லை.
‘ரிக் ஷாக்காரன்’ படத்தில் நடித்ததற் காக, 1971-ம் ஆண்டுக்கான நாட்டின் சிறந்த நடிகருக்கான ‘பாரத்’ விருதுக்கு எம்.ஜி.ஆர். தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த சமயத்தில் ‘இதய வீணை’ படப்பிடிப்புக்காக காஷ்மீர் சென் றிருந்தார். காஷ்மீர் வானொலி அவரிடம் பேட்டி கண்டது. ‘பாரத்’ விருது பற்றிய கேள்விக்கு தனது வழக்கமான அடக் கத்தோடு எம்.ஜி.ஆர். பதிலளித்தார். ‘‘நான் இதை எதிர்பார்த்தவன் இல்லை. செய்தியை மனதில் பதிய வைத்துக் கொள்ளவே எனக்கு கொஞ்ச நேரம் பிடித்தது. இப்படி ஒரு பட்டம் எனக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்க்காமல் இருந்த காரணத்தால், இதை நம்பு வதற்கே சிறிது நேரம் ஆனது’’ என்றார்.
காஷ்மீர் வானொலிக்கு பேட்டியளிக் கும்போது, உருது மொழியிலேயே பதிலளித்தார். அதற்காக, அந்த மொழி சொற்களின் உச்சரிப்பைக் கேட்டுப் பயின்று உருதுவில் பதிலளித்து காஷ்மீர் மக்களை வியப்பில் ஆழ்த்தினார்.
கொல்கத்தாவில் நடந்த விழாவில் எம்.ஜி.ஆருக்கு ‘பாரத்’ விருதை அப்போதைய மேற்கு வங்க முதல்வரும் ‘தேசபந்து’ சி.ஆர்.தாஸின் பேரனுமான சித்தார்த்த சங்கர் ரே வழங்கினார்.
‘வணிக ரீதியிலான ‘ரிக் ஷாக்காரன்’ படத்தில் நடித்ததற்காக எம்.ஜி.ஆருக்கு எப்படி ‘பாரத்’ விருது கொடுக்கலாம்?’ என்று சர்ச்சை எழுந்தது. விருது வழங்கப்பட்டதற்காக சென்னை உட்லண்ட்ஸ் ஓட்டலில் பத்திரிகையாளர் சங்கம் சார்பில் எம்.ஜி.ஆருக்கு பாராட்டு விழா நடந்தபோது அவர் இதற்கு பதிலளித்தார்.
‘‘இந்த விருதுக்கு நான் தகுதியில்லை என்று கூறுபவர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். ‘பாரத்’ விருது 1971-ம் ஆண்டுக்கு மட்டும்தான். என் வாழ்க்கை முழுவதும் நான் இந்தியத் துணைக் கண்டத்தின் சிறந்த நடிகன் என்ற பொருளில் அல்ல. கலைக்கு ஒரு வரையறையை யாருமே நிர்ணயித்துவிட முடியாது. இதைப் புரிந்துகொண்டால் பொறாமைக்கும் அதிர்ச்சிக்கும் ஏமாற்றத்துக்கும் இடமே கிடையாது’’ என்று எம்.ஜி.ஆர். பேசினார்.
1965-ம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டம் தீவிரமாக இருந்த நேரத்தில் துப்பாக்கிச் சூட்டில் மாணவர் பலியானதால் அப்போது தனக்கு மத்திய அரசு அளித்த ‘பத்ம  ’ விருதை ஏற்க மறுத்ததாகவும் இப்போது அந்த நிலை இல்லை என்றும் எம்.ஜி.ஆர். தெரி வித்தார். மேலும், ‘நாடோடி மன்னன்’ படத்தை எகிப்து நாட்டு படவிழாவுக்காக வெளியுறவு அமைச்சகம் கேட்டுக் கொண்டதன்பேரில் மத்திய அரசுக்கு அனுப்பியதாகவும் ஆனால், கடைசி நேரத்தில் படம் தேர்வு செய்யப்படவில்லை என் றும் ‘‘நான் என்ன தவறு செய்தேன்?’’ எனவும் அந் தக் கூட்டத்தில் எம்.ஜி.ஆர். உருக்கமாகக் கேள்வி எழுப்பினார்.
அந்தப் பேச்சு பின்னர், ‘எம்.ஜி.ஆரின் தீர்க்க தரிசனம்’ என்ற பெயரில் அவர் குத்துவிளக்கு ஏற்றுவது போன்ற முகப்பு படத்துடன் ஒருமணி நேரம் ஓடக்கூடிய ஒலிநாடாவாக வெளிவந்தது.
திமுக அரசின் பரிந்துரையின் பேரில்தான் எம்.ஜி.ஆருக்கு ‘பாரத்’ விருது வழங்கப்பட்டதாக அதிமுகவை எம்.ஜி.ஆர். தொடங்கிய பிறகு, அரசியல்ரீதியில் விமர்சனங்கள் எழுந்தன. சர்ச்சைகள் தொடர்வதை விரும்பாத எம்.ஜி.ஆர்., விருதை திருப்பி அனுப்பினார்.
‘பாரத்’ விருது பெற்ற முதல் தென்னிந்திய நடிகர் மட்டுமல்ல; அதைத் திருப்பிய முதல் நடிகரும் அவர்தான் என்று எம்.ஜி.ஆரின் பெயரை வரலாறு தன் பக்கங்களில் பொறித்துக் கொண்டது!
எம்.ஜி.ஆரின் இயற்கையான நடிப்பை பாராட்டி ஜான் மெக்கலம் கருத்து தெரிவித்த நாளிதழ் செய்தி.
நடித்த ‘ரிக்ஷாக்காரன்’ படம் வெளியானபோது, மக்களை கவரும் வகையில், அதுவரை இல்லாத புதுமையான விளம்பர உத்தி பயன்படுத்தப்பட்டது. படத்தின் விளம்பர நோட்டீஸ்கள் ஹெலிகாப்டரில் இருந்து வீசப்பட்டன.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள...

DINAMANI வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்...